வியாழன், மார்ச் 26, 2015

வர்த்தமானன் பதிப்பகத்தின் 'துளசி இராமாயணம்' வெளியீடு!



இடமிருந்து : பதிப்பாளர் வர்த்தமானன், வேலுர் கம்பன் கழக செயலாளர் இலக்குமிபதி, நூலின் உரையாசிரியர் எம்.கோவிந்தராஜன், பதிப்பக நிறுவனர் ஜெ.ஸ்ரீசந்திரன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர்,பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரகந்தின் தலைவர் இல.கணேசன், கலைமகள் இதழ் ஆசிரியர் சங்கர சுப்பிரமனியன் & பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் ஆகியோர் உள்ளனர்.


             டந்த ஞாயிறு அன்று வர்த்தமானன் பதிப்பகத்தின் 'துளசி இராமாயணம்' நூல் வெளியீட்டு விழா சென்னை கிருஷ்ண கான சபாவில் நடைபெற்றது!. 

இரண்டு நாளுக்கு முன்னரே வர்த்தமானன் சார் கூப்பிட்டு, நீங்கள் அவசியம் விழாவிற்கு வரவேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார். ஞாயிறுகளில் காலை 8 மணி என்பது எத்தனை அற்புதமானது என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று!. சென்னை போன்ற பெருநகர வீடுகளில் விடியாத(?) அந்த காலை 8 மணி என்பது, மற்ற நாட்களை போல் இல்லாமல், எந்த வித பரப்பரப்பும்மின்றி சோம்பிக் கிடக்கும். அந்த சோம்பலை உதறி தள்ளி வெளிவருவதே பெரும்பாடுதான். அந்தகாரத்தில் அலங்கோலமாகிப்போன பொழுதைப் போலவே ஞாயிறுகளின் காலைப் பொழுது இருப்பதாக எனக்குப்படும்.

விழா தொடங்குவதோ காலை 9 மணி. "பிரேக்பாஸ்ட் இருக்கு மகேஷ்" என்று வர்த்தமானன் சார் சொல்லிவிட்டார். சரி, அங்கு போய் காலை உணவை முடித்துக் கொள்ளலாம் என்று கிளம்பப் போகும்போது, அலுவலகத்திலிருந்து போன் வந்தது. அதற்கு பதிலளித்துக் கிளம்பவே அரைமணி நேரமாகிவிட்டது. அடித்துப்பிடித்து விழாவிற்கு வந்து சேர்வதற்கும், விழா தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. பசியை மறந்து அரங்கில் அமர்ந்து விட்டேன். விழா முடியும் போது மதியம் மணி ஒன்று!. 'செவிக்கு உணவில்லாத போதுதானே.. வயிற்றுக்கு  ஈயப்படும். இங்குதான் செவிக்கு உணவு கிடைத்துக் கொண்டு இருக்கிறது. அப்புறம் எதற்கு வயிற்றுக்கு?' அதனால் பசிக்கவேயில்லை போலும்?!. 

துளசி இராமாயணம் புத்தகத்தை பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் வெளியீட, தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் பெற்றுக் கொண்டார். காலை 9 மணிக்கு விழா அரங்கு நிறைந்திருந்தது வியப்பை ஏற்படுத்தியது. இதையேதான் இல.கணேசனும் தனது பேச்சில் தெரிவித்தார். அவரது பேச்சை அப்போதுதான் முதன் முதலாக கேட்கிறேன். சும்மா சொல்லக் கூடாது பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பின் தலைவர் என்பதால் இலக்கியத்திலும் இராமாயணத்திலும் கொஞ்சம் விஸ்தாரமாகவே பேசினார். அதிலும் இராமாயணத்தை பற்றி கூறும் போது 'முடி'யை வைத்து அவர் பேசியது ரசிக்கும்படியாக இருந்தது.

வால்மீகி இராமாயணம் சம்ஸ்கிருதத்தில் இருந்ததால் சாமான்ய மக்களால் அதைப் படித்து புரிந்துக் கொள்ள முடியவில்லை.

அயோத்தி வாழ் மக்களின் அடிப்படை மொழியான 'அவதி' மொழியில் வெளிவந்து, சாமான்ய மக்களின் அறிவுப் பசியையும் ஆன்மீக பசியையும் ஒரு சேர போக்கிய துளசி இராமாயணம்தான் தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. துளசிதாஸர் அருளிய 'இராம சரித்திர மனஸ்' என்ற இராமாயணமே பின்னர் எழுதியவரின் பெயரோடு 'துளசி இராமாயணம்' என்று அழைக்கப்படலாயிற்று. இத் துளசி இராமாயணத்தை தமிழில் மூன்று தொகுதிகளில் வெளியீட்டுள்ளது வர்த்தமானன் பதிப்பகம் இம் மொழிபெயர்ப்பினை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். முனைவர் எம்.கோவிந்தராஜன்.

இந்த இடத்தில் நூல் ஆசிரியர் பற்றி கூறியே ஆகவேண்டும். அடிப்படையில் இந்தி ஆசிரியரான முனைவர் எம்.கோவிந்தராஜன் தமிழில் அசாத்திய திறமை படைத்தவர். இவ் விழாவில் தனது ஏற்புரையையும் நன்றியுரையையும் செய்யுள் பாணி கவிதை நடையில் சிறு புத்தகமாக அச்சிட்டு வழங்கி இருந்தார்!. அனைத்தும் 'ஏ' கிளாஸ் ரகம்!. 

அறிமுக உரையாற்றிய வர்த்தமானன் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ஸ்ரீ சந்திரன், கம்ப இராமாயணத்திற்கும் துளசி இராமாயணத்திற்கும் உள்ள   வித்தியாசத்தை மிக அழகாக எடுத்துரைத்தார். கம்பரின் இராமாயணத்தில்..... தனது அண்ணான இராவணனுக்காக பரிந்து வரும் கும்பகர்ணன், போரின் இறுதியில் தலை வெட்டப்பட்டு ஆழ் கடலில் விழுவது போல் எழுதி இருப்பார். துளசி இராமயணத்தில் கும்பகர்ணனின் தலை வெட்டப்பட்டு அத்தலை இராவணின் மடியில் விழுவது போல் எழுதப்பட்டு இருக்கும். இப்படி இரு கதைகளிலும் ஆங்காங்கே காணப்படும்  சிறு சிறு வித்தியாசங்களை அழகாக பட்டியலிட்டார். 

இப் பதிப்பகத்தின் வெற்றிக்கு வர்த்தமானன் அவர்களின் திட்டமிடலும், தொலை நோக்கு பார்வையுமே காரணம். புத்தகங்கள் விற்பனையில் மற்ற பதிப்பகங்களை காட்டிலும் வேறுபட்ட வியாபார உத்தியை கொண்டது வர்த்தமானன் பதிப்பகம். வர்த்தமானன் பதிப்பக நூல்களை நீங்கள் இவர்களிடம் மட்டுமே வாங்க முடியும். தங்களது தயாரிப்புகளை வாசகர்களிடம் நேரிடையாக கொண்டு சேர்க்கிறார்கள். விளம்பரங்கள் மூலம் தங்களது வெற்றியை சாத்தியப்படுத்தி உள்ள வர்த்தமானன் பதிப்பகத்திற்கு இது ஐம்பதாவது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது!.

வெள்ளி, மார்ச் 20, 2015

மாட்டிறைச்சி கவுச்சியும் விபச்சார புனிதமும்!

.

           செய்ய வேண்டிய  வேலைகள் எத்தனையோ இருக்க....அதை விடுத்து வெட்டி வேலை பார்ப்பவனை ..."செய்யிற வேலையை விட்டுவிட்டு, ஏண்டா செனப்பு சொறியிற என்று கேட்டு" கிராமத்தில் ஏகடியம் செய்வார்கள்.  அதை போல ஏகடியத்திற்கு ஆளாகியிருக்கிறது மகாராஷ்ட்டிரா பாஜக அரசு.

  மகாராஷ்டராவில்  மாட்டுக் கறி விற்பனைக்கு தடை விதித்து பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது, ஆளும் பாஜக அரசு!.. இந்தியாவில எந்த ஒரு மாநில அரசும் முக்கியத்துவம் கொடுக்காத விஷயத்திற்காக ஒரு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருக்கிறது. இச் சட்டத்தின் மூலம் நீங்கள் என்ன சாப்பிடவேண்டும் என்பதை மதவாத பாஜக அரசு தீர்மானித்திருக்கிறது. இது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு முன்மாதிரி சட்டமாகும். மக்களின் அன்றாட உணவு முறைகளில் இத்தகைய கெடுபிடிகள் வீண் பிரச்சனைகளையே ஏற்படுத்தும். 

 மகாராஷ்டிராவின் அப்போதைய  பாஜக சிவசேனா கூட்டனி அரசு விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர எண்ணி 1995 ம் ஆண்டு ஒரு மசோதாவை தாக்கல் செய்திருந்ததது. 19 ஆண்டு காலம் நிலுவையில் இருந்து வந்த அந்த மசோதாவை, தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் தூசித் தட்டி எடுத்து நிறைவேற்றியுள்ளனர்.  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் அங்கீகாரத்தால் இச் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த சட்டப்படி மாட்டுக் கறியை விற்றாலோ, அல்லது வைத்திருந்தாலோ அவர்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.  பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ கோட்பாடுகளையும் கொள்கைளையும் மீளூருவாக்கம் செய்வதில் சங்பரிவார்கள் அதிக முணைப்புக் காட்டி வருகிறது என்பதற்கு மகாராஷ்டிரா ஒரு உதாரணம்.

ஆப்கானிஸ்தானில் இஸ்லாம் பழமைவாதிகள்  விதிக்கும் சட்டங்களுக்கும், செயல்களுக்கும் இத்துத்துவ பழமைவாதிகளின் சட்டங்களுக்கும் செயல்களுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை என்றுதான் தோன்றுகிறது?.
-----------------

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் மாட்டுக் கறி தொடர்பான ஒரு கட்டுரையை படித்திராவிட்டால், மாட்டுக் கறி மீதான எனது அபிப்ராயம் அப்படியேதான் இருந்திருக்கும். மனிதன் சாப்பிடக் கூடிய மாமிசங்களில் மாட்டுக் கறியும், இன்ன பிற இறைச்சிகளோடு ஒன்றே என்றும், அதை நிராகரிக்க தேவையில்லை என்றும், உலக நாடுகளில் மாட்டுக் கறியின் நிலையை அவதானித்து ஒரு நீண்ட கட்டுரையை தனது வலைத்தளத்தில் எழுதியிருந்தார். அது படிக்கவேண்டிய ஒன்று!. இல்லையென்றால் நானும் மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன் என்பதை பெருமையாக சொல்லிக் கொண்டு திரிந்திருப்பேன். மாட்டுக் இறைச்சி சாப்பிடுவது கேவலம், என்ற பொதுமை மனோ நிலையை பன்னெடுங்காலத்திற்கு முன்னரே இங்கு ஏற்படுத்திவிட்டனர். அதனாலயே இங்கு தமிழகத்தில் மாட்டுக் கறிக்கு பெரிய வரவேற்பு இல்லாமல் போய்விட்டது. மாட்டு இறைச்சி தொடர்பான.... ஆதவனின் அக் கட்டுரை எல்லோருக்குமே ஒரு 'ஐ ஓப்பனர்தான்'!.

இந்தியா முழுவதும் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருக்கும் நிலையில், அதிக புரத சத்துள்ள மாட்டுக் கறி போன்ற உணவுகள் அவர்களின் உயிரை காக்க உதவும். ஆனால் இந்த இந்துத்துவ பழமைவாதிகள் சிறுபான்மை மக்களை ஒடுக்கவும், பெரும்பான்மை இந்து மக்களை அவர்களுக்கு எதிராக திருப்பவும் “பசுவின் புனிதம்” எனும் இந்த தந்திரப் பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். வட இந்தியாவில் புனிதப்  பசு என்ற போர்வையில் பெரும் கலவரங்களும் உயிர் பலிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் பரிணாமம்தான் இந்த தடை உத்திரவு!.
-------------------------


புனித பசு!

இந்தியாவில் எந்த ஒரு விவசாயியும் பசு மாட்டை கொல்ல மாட்டான். பசு மாடு என்பது அவனைப் பொறுத்தவரையில், அவனது வாழ்வியலில் ஒரு அங்கம்,. அவனது குடும்ப உறுப்பினர்களில் அதுவும் ஒன்று!. நகரங்களில் காரை துடைத்து பள பளவென்று வைத்திருப்பது போல.... கிராமங்களில் மாட்டை குளுப்பாட்டி நெற்றி, வயிறு வாலின் மேல்புறம் என்று பொட்டுவைத்து கொம்பிற்கு வண்ணம் பூசி சும்மா பள பளவென்று வைத்திருப்பார்கள்!.. மாடு மேய்த்தலின் போது, மாட்டின் வயிறு புடைப்பாக இருந்தால் மட்டுமே மாட்டை வீட்டிற்கு ஓட்டி வருவார்கள். மாட்டுக் கொட்டகையில் மாட்டிற்கு கொசு கடிக்கும் என்பதற்காகவே மூட்டம் போட்டு கொசுவை விரட்டக் கூடியவ ஜீவ காருண்யம் மிக்கவர்கள் நமது விவசாயிகள். அந்த விளிம்பு நிலை மனிதர்கள் என்றுமே ஜீவ காருண்யத்தை விட்டு விலகி தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொளவ்தில்லை.





ஆனால், இங்கு சட்டம் போடுபவர்களின் அதிகபட்ச ஜீவ காருண்யம் என்ன?, அதன் வாலை தொட்டு தடவி தங்கள் தலையில் தேய்த்துக் கொண்டால் போதும் என்று நினைக்கக் கூடியவர்கள்.  அதுவே தங்களது உயர்ந்தபட்ச ஜீவகாருண்யம் என்று செம்மாந்து திரியக் கூடியவர்கள். இத்தகையை அற்ப பேர்வழிகளே இந்திய கலாச்சாரத்தை போற்றி பாதுகாப்பதாக பம்மாத்து பண்ணிக் கொண்டு திரிகிறார்கள். இன்றைய நவீன இந்தியாவில் மாடுகள்  குப்பைத் தொட்டியில் நாயோடு நாயாக நின்று,  தங்களது உணவுகளை தேடக் கூடிய இழி நிலையில் இருக்கின்றது என்பதை, இந்த ஜீவகாருண்ய பாஜக புலிகள் மறந்துவிட்டார்கள். இப்போதெல்லாம் மாடுகள் சாணம் போடுவதை விடுத்து,  மனித மலத்தை ஒத்த கழிசல்களை சாலை முழுவதும் தொர...தொரவென்று ஒழுக விட்டப்படி சென்றுக் கொண்டு இருக்கிறது. மாடுகளின் உணவு முறைகளில் ஏற்பட்ட மாற்றம், அதன் கழிவுகளை நாற்றம் பிடித்தாக மாற்றிவிட்டது. கொடுக்கின்ற பாலையும் நஞ்சாக மாற்றிவிட்டது?.

பொதுவாகவே இறைச்சிகளில் கிடா கறியைதான் அதிகம் பேர் விரும்புவார்கள். "கிடா ஆடா?" என்று கேட்டுவிட்டுதான் ஆட்டுக் கறியே எடுப்பார்கள். அது ஆடாக இருந்தாலும் சரி கோழியாக  இருந்தாலும் சரி, மாடாக இருந்தாலும் சரி. இங்கு பெண் என்பது முதலீடுக்கான வழி.  குட்டிகளை ஈணுவது அதன் வேலை. அதனாலேயே 'பொட்ட ஆடு' என்றல் யாரும் கறி வாங்க மாட்டார்கள்.  அதையும் அடித்து தின்றுவிட்டு ஒன்றுமில்லாமல் உட்கார்ந்து இருக்க....விவசாயி என்ன முட்டாளா.....?.

பசுவை ஒரு மாபெரும் வாக்கு வங்கியாகவே தொன்றுதொட்டு பயன்படுத்திக் கொண்டு வருகிறது பாஜகவும் இந்துத்துவ அமைப்புகளும்!. 
.
புனித பசு மீதான மாயையை மதத்தின் பெயரால் தக்கவைத்திருக்கும் இந்துத்துவாவின் முகத்திறை கிழிக்கிறது “The Myth of Holy Cow” என்ற புத்தகம், இன் நூலை வரலாற்று ஆய்வாளரான த்விஜேந்திர நாராயண் ஜா (டி.என்.ஜா)  எழுதியிருக்கிறார். புகழ் பெற்ற பண்டைய இந்திய வரலாற்று நிபுணரான டி.என்.ஜா தனது 25 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி வாழ்க்கையில் இந்துத்துவாவின் பல கட்டுக் கதைகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். பண்டைய இந்திய இலக்கியங்களையும் தொல்லியல் ஆதாரங்களையும் பயன்படுத்தி, இந்துத்துவா பிரச்சாரங்கள் பெரும்பாலும் பொய்யான,கற்பனைகளின் அடிப்படைகளில் உருவாக்கப்பட்டவை என்று அவர் நிரூபித்திருக்கிறார். “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” என்ற அவரது புத்தகம் மாட்டிறைச்சி இந்தியர்களின் உணவு பழக்கங்களின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை காட்டுகிறது. அவர் பண்டைய இந்தியாவின் பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் பற்றி விரிவான ஆய்வுகளை செய்திருக்கிறார்.

இந்திய அரசியலில் ‘புனித’ பசு எனும் கட்டுக்கதையைப் பற்றியும் சங்க பரிவார் அதனைப் பயன்படுத்தி நாட்டை மத ரீதியில் பிளவு படுத்துவதைப் பற்றியும் ஜா விளக்குகிறார்

‘இந்திய துணைக்கண்டத்தில் மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கத்தை முஸ்லீம்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள்’ என்ற கருத்தாக்கத்தை இப் புத்தகம் உடைத்தெரிகிறது.
கடந்து நூறு ஆண்டுகளாக பசுவின் புனிதம் என்பது இந்தியாவில் ஆய்வுக்கான விவாதமாக மட்டும் இல்லாமல் சமூகத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்து மதவாதிகளும் அடிப்படைவாத நிறுவனங்களும் ‘பசுவைக் கொல்வதும் அதன் இறைச்சியை சாப்பிடுவதும் இஸ்லாமை பின்பற்றுபவர்களால்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் முஸ்லீம்களை மாட்டிறைச்சி தின்பவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். இந்திய சமய இலக்கியங்களிலிருந்து உணவுப் பழக்கங்கள் குறித்த தரவுகளை திரட்டி தருவதுதான் இந்த கட்டுக்கதையை உடைப்பதற்கான மிகச் சிறந்த வழி. அதன்படி,  இந்து மத, புத்த மத மற்றும் ஜைன மத நூல்களிலிருந்து பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் ‘இஸ்லாம் இந்தியாவுக்கு வருவதற்கு வெகு காலம் முன்பிருந்தே இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்தார்கள்’ என்பதை இப் புத்தகம் நிரூபித்திருக்கிறது!..

வேத காலத்தில் விலங்குகளை பலி கொடுப்பது பொதுவான பழக்கமாக இருந்தது. ‘எந்த பொது யாகத்துக்கும் முன்பு நடத்தப்படும் அக்னதேயா என்ற சடங்கில் ஒரு பசு கொல்லப்பட வேண்டும்’ என்பது விதிமுறையாக இருந்ததுள்ளது. மிக முக்கியமான பொது யாகமான அஸ்வமேதாவில் 600க்கும் மேற்பட்ட விலங்குகளும் பறவைகளும் கொல்லப்பட்டன. அதன் நிறைவு 21 பசுக்களின் பலியால் குறிக்கப்பட்டது. ராஜசூயா, வாஜ்பேயா போன்ற யாகங்களின் முக்கிய பகுதியான கொசாவாவில் மாருதுகளுக்கு ஒரு பசு பலி கொடுக்கப்பட்டது. கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளை கொல்வது இன்னும் பல யாகங்களின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது என்பதையும் இப்புதகம் ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறது.  புத்தகத்தை பாரதி புத்தகாலயம் “பசுவின் புனிதம்” என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது.

மாட்டுக் கறி வைத்திருந்தால் பாலியல் கொடுமைகளை விட அதிகத் தண்டனை!.

அபத்தத்தின் உச்சம் என்றால் இச் சட்டத்தைதான் சொல்லவேண்டும். இந்தியாவில் தற்போது உச்சத்தில் இருக்கும்  பாலியல் கொடுமைகளுக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை வழங்கப்படுக்கிறுது. அதே நேரத்தில் மாட்டுக் கறி வைத்திருந்தால் 5 வருடம் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் கொடுமையை விட மாட்டுக் கறி அப்படி என்ன புனிதம் என்று தெரியவில்லை? தனக்கான வாக்கு வங்கியை இந்துக்களிடம் தக்கவைக்கவே மதவாத பாஜக அரசு பலவகையிலும் முயற்சித்து வருகிறது. அதன் வெளிப்பாடே இத்தகைய சட்டங்கள்.

மாட்டிறைச்சிக்கு தடை என்ற சட்டம் நிறைவேறியதும் "இன்றுதான் எனது கனவுகள் நிறைவேறியிருக்கிறது" என்று தனது டூவிட்டர் பக்கத்தில் ஒரு சுட்டுறையை பதிவு செய்திருந்தார்  மாஹாராஷ்டிர முதல்வர் தேவந்திர ஃபட்னாவீஸ்!. ஆர்எஸ்எஸ் உருவான நாக்பூரில் பிறந்தவரான ஃபட்னாவீஸ், இந்துத்துவ கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் முகுந்த ஆர்வம் காட்டக் கூடியவர். சமீபத்தில் இஸ்லாமியர்களுக்கு  இடஒதுக்கீடு கூடாது என்று பிடிவாதமாக இருந்து அதை சட்டரீயாக  தடை செய்திருக்கிறார். .

மகாராஷ்டிராவில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் வரிசைக் கட்டி நிற்க, அதிலிருந்து வழி மாறி சென்றுக் கொண்டு இருக்கிறார் ஃப்ட்னாவீஸ்  தலைநகர் மும்பைக்கு பல பெருமைகள் உண்டு. மும்பை என்றதும் ஞாபகம் வரக் கூடிய மேற்படி சங்கதிகளில் ஒன்று அம்மாநிலத்தில் தங்குத்தடையின்றி நடைபெறும் விபச்சாரத் தொழில்தான். ஆசியாவிலேயே மிகப் பெரிதான, இந்தியாவில் குறிப்பிடத்தக்க விபச்சார சந்தையான 'காமாத்திபுரா' மும்பையில்தான்  இருக்கின்றது. பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட காமாத்திபுரா விபச்சார விடுதிகள்,  இன்றும் படு சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது. இங்கு 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண் செக்ஸ் தொழிலாளர்கள் தங்களது சேவைகளை ஆண்களுக்காக வழங்கி வருகிறார்கள்.  பெண்களை தெய்வமாக போற்றப்படக் கூடிய இந்தியாவில், ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களது வாழ்வை தொலைத்து இங்கு தங்களது உடலை பாலியல் விற்பனைக்கு ஆட்படுத்தி வருகிறார்கள்.

இந்த விபச்சார விடுதிகளுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெண்கள் கடத்தி வரப்படுகிறார்கள். மிகவும் கொடூரமான சித்திரவதைகள் கூடாரங்கள் மூலம் அவர்கள் சம்மதிக்க வைக்கப்படுகிறார்கள். அடிப்படை மனித உரிமைமீறல்கள் என்பது இத்தகைய விபச்சார விடுதிகளில் சர்வசாதாரணம். அடி உதை, வெட்டு, மார்புகளை வெட்டி எறிவது, சூடு போடுவது போன்ற சித்திரவதைகள் இங்கு கடத்தி வரப்படும் பெண்களுக்கு இழைக்கப்படுகிறது.  மிகப் பெரிய நெட்வொர்க்கை கொண்டு இந்தியா முழுவதுலுமிருந்து இளம் பெண்கள் இங்கு கடத்தி வரப்படுகிறார்கள். கோடிகளில் பணம் புழங்கும் இந்த விபச்சார தொழில் பற்றி ஆளும் அரசுக்கு தெரியாமல் இருக்குமா... என்ன?.


"மாட்டு கறியை தடை செய்தது எனது வாழ் நாள் கனவு" என்று கூறிய மாநில முதல்வர் தேவந்திர ஃப்ட்னாவீஸ், ஏன் விபச்சாரத்தை தடை செய்யவில்லை?. விபச்சாரத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி, அதை தடை செய்திருக்கலாமே.....?. விபச்சாரம் என்ற படு குழியில் தள்ளப்படும் பெண்களை காப்பாற்றி இருக்கலாமே......? ஏன் செய்யவில்லை.....?. ஓட்டுக் வங்கிக்காக மாடுகளின் மீது காட்டப்படும் அக்கரை, மகளிர் மீது காட்டப்படவில்லையே ஏன்?.

பசுவின் கறி புனிதம் என்றால்? பெண்கள் தங்களது சதையை விற்பது வியாபாரமா....?   சொல்லுங்கள் மிஸ்டர் தேவேந்திர ஃப்ட்னாவீஸ்???.


கட்டுரை / புகைப்படம்
-தோழன் மபா.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...