புதன், அக்டோபர் 26, 2022

பாஸ்கர பட்டேலரும் தொம்மியின் ஜீவிதமும் (விதேயன்)

                      அது கர்நாடகத்தின் தென் கோடி கிராமம். அங்கு ஒரு மிலேக்சன் இருக்கிறான். அவன் அந்த ஊரின் பரம்பரை பணக்காரன், முரடன். என்னேரமும் அடியாட்களோடு வலம் வரும் அவன், கடைத்தெருவில் இருக்கும் அவனது கள்ளுக்கடையில் அமர்ந்து கொண்டு குடித்துக் கொண்டு போகிற வருகிறவர்களை சண்டைக்கு இழுத்து சண்டியர்தனம் செய்வது, பெண்களை சீண்டித் தொல்லை கொடுப்பதுதான் அவனது வேலை. அவனது பெயர் பாஸ்கர பட்டேலர். 
 
அப்படியான அந்தக் கடைத்தெருவிற்கு பஞ்சைப்பராரியான, மாற்றுத் துணிக்கு வழி யில்லாத ஒருவன், அவனது அழகான மனைவியோடு கேரளத்தின் வயநாட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க வருகிறான். அவனது பெயர் தொம்மி.
 
பாஸ்கர பட்டேலரும் தொம்மியும்தான் கதையின் பிரதான பாத்திரங்கள். கதை எப்படி போகும் என்பதை, நீங்கள் ஒருவாறு ஊகித்திருப்பீர்கள்?
 
மலையாள எழுத்துலகின் தனித்த அடையாளம் கொண்ட பால் சக்காரியா எழுதிய 'பாஸ்கர பட்டேலரும் தொம்மியின் ஜீவிதமும்' என்ற நாவல்தான் அது! இக்கதை பிற்பாடு 1993 ல் 'விதேயன்' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்து, தேசிய விருதுகள் உள்பட பல விருதுகளை தட்டிச் சென்றது. 
 
பால் சக்காரியா எழுதிய கதையை செல்லூலாயிட்டில் அப்படியே ஒரு காவியமாக படைத்திருப்பார் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். மம்முட்டியின் மிகையற்ற நடிப்பில் 'விதேயன்' சகாவரம் பெற்றது எனலாம்.
 
படத்தின் தொடக்கமே உங்களை அந்த கிராமத்திற்கு அழைத்து சென்றுவிடும். கள்ளுக்கடையின் வாசலில்.... ஒரு பக்கம் கைப்பிடி இல்லாத நாற்காலி போடப்பட்டிருக்கும். நாற்காலியின் ஒரு பக்கத்தில் ஒரு நீண்ட நாட்டுத் துப்பாக்கி சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். உடைந்த நாற்காலியின் கைப்பிடி ஓரத்தில் வெடி மருந்துகள் அடங்கிய சின்னஞ்சிறிய பை தொங்கிக் கொண்டிருக்கும். 
 
வாழ வழித்தெரியாத நோஞ்சானான 'தொம்மி' ஒரு கடையின் வாசலில் இரு கால்களையும் கட்டிக் கொண்டு சோகத்தில் உட்கார்ந்து இருக்கிறான். கடைத்தெருவில் போகிற வருகிறவர்களை எடவுட்டு பண்ணும் பாஸ்கர பட்டேலருக்கு இப்படியான ஒரு அப்பிராணி கண்ணில்பட்டால் சும்மா விடுவானா...?
 
அவனை வம்படியாக 'இவ்விட வாடா நாயிண்ட மகனே' என்று கூப்பிட்டு அவனை உதைத்து முகத்தில் வெற்றிலை எச்சிலை காறி உமிழ்ந்து விரட்டிவிடுகிறான் பட்டேலர். 
 
பஞ்சம் பிழைக்க வந்த தொம்மிக்கு அழகான மனைவி இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டு, அவனது குடிசைக்குள் புகுந்து அவளை நாசம் செய்கிறான் பட்டேலர். கடைத்தெருவில் அடிவாங்கியதில் அவமானம் தாங்காது எங்கோ திரிந்துவிட்டு இரவில் வீடு சேரும் தொம்மிக்கு, அவனது மனைவி ஓமனாவின் அழு குரல் வரவேற்கிறது. நடந்ததை ஊகித்துக் கொண்ட தொம்மி, மனதளவில் குமைந்து போகிறான்.
 
பிற்பாடு பட்டேலரின் ஆட்கள் "உன்னை பட்டேலர் அழைத்து வரச் சொன்னார்" என்று தொம்மியை அழைக்க..."வரமுடியாது" என்று முரண்டு பிடிக்கிறான் தொம்மி. "பட்டேலரைப் பகைத்துக் கொண்டு இந்த ஊரில் நீ வாழ முடியாது, வா" என்று பட்டேலரின் ஆட்கள் தொம்மியை மிரட்ட...பயந்த சுபாவம் கொண்ட தொம்மி பட்டேலரைப் பார்க்க வருகிறான். 
 
அங்கு தொம்மிக்கும், தொம்மியின் மனைவி ஓமனாவுக்கும் ஆடைகளைத் எடுத்துத் தந்து தொம்மியை தனது கள்ளுக்கடையில் வேலைக்கு சேர்த்து தன்னுடனே வைத்துக் கொள்கிறான் பட்டேலர். அன்றிலிருந்து பட்டேலரின் நிழல் போலவே மாறிவிடுகிறான் தொம்மி. 
 
அடிக்கடி தொம்மியின் குடிசைக்கு பட்டேலர் வருவதும் போவதுமாக இருக்கிறான்.  "உன் மேல் எண்ட எஜமானரின் வாசம் அடிச்சாலும், நீ எனது ஸ்திரி" என்று தனது மனைவிடம் தனது உரிமையை விட்டுக் கொடுக்காது கட்டிப்பிடித்து கொள்கிறான் தொம்மி. 
 
கதை இதற்குப் பிறகுதான் புது ரூட் பிடித்து பயணிக்கிறது. 
 
பட்டேலரின் மனைவி அழகு மற்றும் பொறுமையின் சிகரமா இருக்கிறார். அவரை சரோஜா அக்கா என்று வாய் நிறைய அழைக்கிறான் தொம்மி. பட்டேலரின் அடாவடி நாளைக்கு நாள் அதிகமாகிறது. இதனால் தொடர்ந்து பட்டேலருக்கும் சரோஜாவிற்கும் சண்டை நடக்கிறது. சரோஜாவை தனது இஷ்ட வாழ்விற்கு இடைஞ்சலாக நினைக்கும் பட்டேலர், அவளை ஒரு நாள் கொலை செய்து விடுகிறான். 
 
பட்டேலர் தனது மனைவியை கொலை செய்த செய்தி காட்டுத்தீயாய்ப் பரவ...சரோஜா வின் சகோதரர்கள் ஊர் மக்களோடு சேர்ந்து பட்டேலரின் ஜீப்பைக் கொளுத்தி அவனைத் தாக்குகிறார்கள். போலீஸ் பட்டாளம் குவிக்கப்படுகிறது. அங்கிருந்து தப்பிக்கும் பட்டேலர், தொம்மியின் குடிசைக்குள் வெற்று உடம்போடு மாற்றுத் துணியில்லாமல் தஞ்சமடைகிறான். பசியோடு இருக்கும் பட்லர் தொம்மி குடித்துவிட்டு வைத்தக் கஞ்சியைக் குடிக்கிறான். ஆஜானுபாகுவான பாஸ்கர பட்டேலர் பரிதாபத்திற்குரிய ஒரு மனிதனாக தொம்மியின் முன்னால் நிற்கிறான். 
 
பாஸ்கர பட்டேலராக மம்முட்டியும், தொம்மியாக கோபக்குமாரும் நடித்திருக்கிறார்கள். 
 
ஒட்ட வெட்டிய தலைமுடி, முறுக்கி விடப்பட்ட மீசை என்று மிரட்டலான ஒரு சண்டியராக நடித்திருக்கிறார் மம்முட்டி. அந்த எகத்தாளமான நடிப்பு ஆஸம்! இந்தப் படத்தில் நடித்ததற்காக மம்முட்டிக்கு 1994 ல் தேசிய விருது கிடைத்தது. 
 
அதேபோல் தொம்மியாக நடித்திருக்கும் கோபக்குமாரின் நடிப்பு.... "எஜமானரே" என்று பட்டேலரை அழைப்பதாகட்டும், தனது மனைவியை பட்டேலர் நாசம் செய்துவிட்டான் என்று தெரிந்தும் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று மறுகுவதாகட்டும், பிற்பாடு யுசுப் பாய் பட்டேலரை கொலை செய்ய வெடி குண்டு வீசும் போது அதற்கு துணை நிற்பதும், அதிலிருந்து தப்பித்து காயமுற்று விழும் பட்டேலருக்காக அழுவதாகட்டும் என்று ஒரு எஜமானருக்கு விசுவாசத்துடன் இருக்கும் நம்பிக்கையான வேலைக்காரனாக மம்முட்டிக்கு இணையான ஒரு நடிப்பை வழங்கியிருப்பார் கோபக்குமார்.  படத்தில் மம்முட்டிக்கு மனைவியாக நடித்திருக்கிறார் தன்வீ ஆஸ்மி,  என்னவொரு அழது !!
 
படத்தின் பிரதான கதாபாத்திரமாக 'இருட்டும்' நடித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான காட்சிகள் இருட்டின் துணை கொண்டு நகர்கிறது. அந்த இருட்டிலிருந்து கதை மாந்தர்கள் மெல்ல ஒளிப்பெற்று உயிர் பெறுகிறார்கள். அந்த வித்தையை படம் நெடுக நிகழ்த்தியிருக்கிறார்கள் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனும் காமிராமேன் ரெவி வர்மாவும்.
சில காட்சிகளை புளி போட்டு விலக்காமல், பார்வையாளனின் முடிவுக்கு விட்டுவிடுவது இயக்குநரின் தனி சாமர்த்தியம். 
 
இருட்டையும் தெளிவான வண்ணத்தையும் பூசிக் கொண்டு படம் வெளிவந்து 28 ஆண்டுகள் கடந்தும் 'விதேயன்' திரைப்படம் அழகாக மிளிர்கிறது. 
 
-மபா 
 

சனி, அக்டோபர் 08, 2022

இளையத் தலைமுறைக்கு தமிழர் பெருமை போதிக்கும் பொன்னியின் செல்வன்.


திரும்பிய இடமெல்லாம் பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. மக்கள் சாரி சாரியாக பொன்னியின் செல்வனைப் பார்க்க போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வனை சினிமாவாகப் பார்ப்பது எளிதானது. ஆனால் அதையே புத்தகமாகப் படிப்பது என்பது எளிதானது அல்ல.
மொத்தம் 5 தொகுதிகள். ஒவ்வொரு தொகுதியும் குறைந்தது 450 பக்கங்களுக்கு மேல் இருக்கிறது. இதில் 5 ஆவது தொகுதி மட்டுமே ஏறக்குறைய 900 பக்கங்களுக்கு மேல் வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் அதை ஏக் தம்மில் படிப்பது எல்லாம் முடியாத காரியம். எடுத்தோம் படித்தோம் என்ற பாட்சாவெல்லாம் பொன்னியின் செல்வனிடம் பலிக்காது.
அவ்வளவு நீ.......ளமானது !
நானெல்லாம் பொ. செ. கதையை இரண்டு தொகுதிகளுக்கு மேல் தாண்டவில்லை.
கல்லூரியில் படிக்கும் காலத்தில், எங்கள் பாட்டி பைண்ட் செய்து வைத்திருந்த புத்தகம்தான் கிடைத்தது. அதையும் ஏக கண்டிஷனில் கொடுத்தார்கள். கொஞ்சம் அழுத்திப்பிடித்தால் போதும், அப்படியே அப்பளம் போல் நொறுங்கிவிடும்.
சிறுவயதில் குமுதத்தில் சாண்டில்யனின் கடல்புறா, யவன ராணி, மஞ்சள் ஆறு, மன்னன் மகள் என்று படித்து வளர்ந்தவன் நான். பக்கம் பக்கமாக நீளும் சாண்டில்யனின் அந்த வர்ணனைகள், வார்த்தை பிரயோகம் இருக்கிறதே... அது கற்பனையின் உச்சம் எனலாம் !
சாண்டில்யனின் எழுத்துக்களோடு ஒப்பிடும் போது, கல்கியின் எழுத்து நடை சாதாரணமாகத்தான் தெரிகிறது. அன்றைய நாட்களில் கல்கியின் எழுத்து நடையை விமர்சித்தவர்களும் இருக்கிறார்கள். பெரிய கவித்துமான மரபார்ந்த தமிழ் கொஞ்சி விளையாடும் எழுத்தெல்லாம் கல்கியிடம் இல்லை. கல்கியின் எழுத்து நடை எளிமையானது, எளியவர்களுக்கும் புரியும் படி இருக்கிறது. ஒரு வகையில் அதுதான் அதன் வெற்றியோ.... என்னவோ ?!
"தூய தமிழ்ச் சொற்களைத் துருவித் தேடுவதுமில்லை. வடமொழிச் சொற்களென்று தூர விலகியோடுவதுமில்லை. மிகத் தெளிவான நடை, உணர்ச்சி ததும்பும் நடை. வாசகர்களை உடன் கொண்டு செல்லும் நடை. சந்தர்ப்பத்திற்கும் பாத்திரங்களுக்கும் தக்க நடை. இக்காலத்துள்ள வசனகர்த்தர்களுள் முன்னணியில் நிற்பவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி என்கிறார் பேராசிரியர் வையாபுரி பிள்ளை அவர்கள்.
ஆனந்த விகடனில் பணிபுரிந்த கல்கி பிற்பாடு அதிலிருந்து வெளியேறி, கல்கி என்ற இதழைத் தொடங்கினார். கல்கி இதழை மக்கள் மத்தியில் பிரபலமாக்கவே அவர் 'பொன்னியின் செல்வன்' என்ற வரலாற்று நெடுந்தொடரை எழுதினார் என்பார்கள். அவர் கணித்தது பொய்யாக்கவில்லை !
1950 லிருந்து 1954 வரை கல்கியில் வெளிவந்த பொன்னியின் செல்வன் மக்களிடையே மகத்தான வரவேற்பை பெற்றது.
****************************************
ன்றளவும் என்னை பிரமிக்க செய்வது 'பொன்னியின் செல்வன்' என்ற அந்தக் காரணப் பெயர்தான். பொதுவாக வரலாற்று கதைகளுக்கு வீரம் செறிந்த பெயர்களையே வைப்பார்கள். தமிழகத்தில் ஓடும் மற்ற எந்த நதிகளைவிடவும், தமிழகத்தின் 'ஜீவ நதி' என்றால் அது காவிரியைத்தான் குறிக்கும். அப்படிபட்ட தமிழகத்தின் ஜீன் (மரபு) நதியான காவிரியின் இன்னொரு பெயர்தான் பொன்னி நதி.
"வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசைத் திரிந்து தெற்கேகினும்
தற்பாடிய களி உணவின் புள்தேம்பப் பயன்மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத்தலைஇய கடற்காவிரி "
என்று பட்டினப்பாலை காவிரியின் தொன்மையைப் போற்றிப் புகழ்ந்ததும்...
'கோள் நிலைத் திரிந்து கோடை நீடினும்
தான் நிலைத் திரியா தண்டமிழ்ப் பாவை'
என்று பிற்பாடு மணிமேகலை காவிரியின் மேன்மையை மேற்கண்டவாறு பதிவு செய்ததையும்...
இற்றைய நூற்றாண்டில்....
"தென்னகமாம் இன்பத்திரு நாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனி வயிற்றில்
கருவாகி தலைக்காவிரி என்னும் தாதியிடம்
உருவாகி வண்ணம் பாடி ஒரு வளர்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணை கடந்து நலம் பாடி
ஏர் வீழ்ச்சி காணாமல் இருக்க
சிவசமுத்திர நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்...
வீடு தாண்டாக் கற்பு விளங்கும் தமிழ்மகள் போல்
ஆடு தாண்டும் காவிரியாய் அடங்கி நடந்து
அகண்ட காவிரியாய்ப் பின் தவழ்ந்து
கரிகாலன் பேர் வாழும் கல்லணையில்.. கொள்ளிடத்தில்..
காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து
தஞ்சை வள நாட்டைத் தாயாகி காப்பவளாம் தனிக் கருணைக் காவிரி போல்..."
என்று செம்மாந்து புலவர் புலமைப்பித்தன் இருமாந்து பாடி மெய்சிலிர்த்தை நாம் எப்படி மறக்க முடியும் ?!
காவிரியின் வளம் கொழிக்கும் வண்டல் போல... தமிழகத்தின் பெருமைமிகு 'சோழ சாம்ராஜ்யம்' தோன்றி வளர்ந்ததும், தமிழ் பெருநிலத்தின் பேரரசன், ராஜராஜ சோழன்
உலகை வென்றதும் இந்த காவிரியின் கரையில்தான். இதனாலேயே.... வரலாற்று தொன்மையாலும், வளத்தாலும் பீடு நடை போடும் பொன்னியின் பெயரையே, தனது புதினத்திற்கு வைத்திருக்கிறார் கல்கி.
***************
ஆடித் திருநாள் என்ற முதல் அத்தியாயம் தொடங்கி, இக் கதையின் கடைசி அத்தியாயமான மாயமோகினி வரை மொத்தம் 57 அத்தியாயங்கள் வருகிறது.
கிட்டத்தட்ட 70 வருடங்களுக்குப் பிறகு இப் புதினம் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது. பொ செ திரைப்படம் தயாரிப்பில் இருக்கும் போது எந்த பரப்பரப்பும் தெரியவில்லை. ஆனால் படம் வெளி வந்தப்பிறகு தீ பற்றிக்கொண்டு விட்டது.
படத்தைப் பார்த்துவிட்டு சோழர்களின் சுவடுகளைப் பார்க்க ஆவலாக சுற்றுகின்றனர். பழையரை என்ற ஊர் எங்கு இருக்கிறது என்று இணையத்தில் தேடிதுலாவுகின்றனர்.
என்ஜோட்டு வயதில் பொன்னியின் செல்வன் வாசிக்கும் போது, பழையாறை எங்கிருக்கிறது என்று தீவிரமாக தேடியிருக்கிறேன். சீர்காழிக்கு அருகில் இருக்கும் பழையாரா ? இல்லை இன்றைய முசுரியா? என்றெல்லாம் தேடியிருக்கிறேன். கும்பகோணத்திற்கு தெற்கு மேற்கில் இருக்கும் புறநகர் பகுதிகளான , பட்டீஸ்வரம், தாராசுரம் போன்ற ஊர்களின் தொகுப்புதான் பழையாறை என்கிறது விக்கிப்பீடியா.
இன்றைய இளம் தலைமுறை தமிழர்கள் தங்களின் இனப்பெருமை இன்னதென்று அறிந்து கொள்வது அவர்களின் வாழ்வியல் கடமையாகும். அதை அறியத்தருவதில், தமிழரின் காதலையும் வீரத்தையும், வாழ்தலையும் வாழ்வித்தலையும் சுவைப்படக் கூறுவதில் பொன்னியின் செல்வன் புதினம் தனித்துவமான இடம் பிடித்திருக்கிறது. திரைப்படம் அதை இன்னும் உயரே கொண்டு போய் இருக்கிறது.
-மபா
08.10.2022

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...