வெள்ளி, ஜூன் 29, 2012

'என் விகடனில் என் வலைப்பதிவு!



                   அப்படி இப்படி என்று அது நிகழ்ந்து விட்டது.  விகடனில் நம் எழுத்து வெளிவராதா என்று விட்டத்தைப் பார்த்து கனவு கண்டது பலித்துவிட்டது.

கிட்டத்தட்ட 15 வருடத்திற்கு மேலாக விகடனின் வாசிப்பாளனாக இருக்கிறேன்.   அதன் அத்தனை பக்கங்களிலும் எனது பார்வை பதிந்து மீண்டு இருக்கிறது.   விகடன் சிறப்பிதழாக 'என் விகடன்' தொடங்கி வலைப்பதிவர்களுக்கா  'வலையோசை' பகுதியை தொடங்கியதும்,  நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்.

பாத்ரூம்ல பாடுறவனுக்கு, ஆயிரம் பேருக்கு மத்தியில மேடையில பாட வாய்ப்பு தந்தது போல, வலைப் பதிவர்களுக்கான புதிய பாதையை அமைத்துத் தந்துள்ளது விகடன். 7-8 ,மாதங்களுக்கு முன்னர் விகடனுக்கு எனது வலைத் பதிவைப் பற்றி எழுதியிருந்தேன். அதற்கு போன வாரத்தில்தான் விகடனிடமிருந்து போன் வந்தது.

விகடன் தலைமை நிருபர் ம.கா. செந்தில் குமார் பேசினார்.   விகடனிடமிருந்து போன் என்றதுமே ஒரு பரவசம் தொற்றிக் கொண்டது. அதுவும் உங்கள் வலைத் தளத்தை தேர்ந்தெடுத்துள்ளோம் என்றதும்  பரவசம் பல மடங்காகியது.

பத்திரிகையில் பணி புரியும் எனக்கே இந்த  சந்தோஷம் என்றால், சாமா னியனைப் பற்றி கேட்கவே வேண்டாம். That's Vikatan!.

விகடனுக்கும், ம.கா. செந்தில் குமாருக்கும்,  எனக்கு வாழ்த்து சொல்லிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

சனி, ஜூன் 23, 2012

இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே! தபால் தலை வெளியீட்ட சிங்கள அரசு.


தமிழர்களின் பூர்வீகத் தீவான இலங்கையில், சிங்களவர்கள் குடியேறுவதை காட்டும் இலங்கை அரசின் தபால் தலை. 




          1956-இல் 'விஜயனின் வருகை' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை அன்றைய சிங்கள இனவாத அரசு வெளியீட்டது. தமிழ் அரசி கரையில் வீற்றிருக்க, விஜயனின் தலைமையிலான சிங்களவர்கள் தங்களது 'சிங்க உருவம்' பொறித்த கொடியுடன் கப்பலில்  கரை ஒதுங்க வருகின்றனர்.

சிங்களர்கள் வந்தேறிகளாக இலங்கை கரையில் ஒதுங்கும்  உண்மையை உலகிற்கு சொல்லும் பொருட்டு அந்த தபால் தலை இருந்தது.  இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிங்கள தலைவர்கள் இத் தபால் தலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப் பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகி விடும். எனவே, இந்தத் தபால் தலையை வாபஸ் பெற வேண்டும்" என்று கூறினார்கள்

அதுகாறும் நாங்கள்தான் இத் தீவின் பூர்வ குடிகள் என்று முழங்கிவந்த சிங்கள பேரினவாத அரசு, சுதாரித்துக் கொண்டு இத் தபால் தலையை திரும்ப பெற்றுக் கொண்டது. அதற்குள் இத் தபால் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது. 

இத் தபால் தலையை இலங்கை அரசு தனது 500வது வருட  கொண்டாட்டத்தின் போது வெளியீட்டதா என்று தெரியவில்லை?

தினத்தந்தியில் வந்ததை நானும் ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டேன்.  இதை எனது முக நூலில்   சமீபத்தில் வெளியிட சுமார் 356 பேர் இப் புகைப்படத்தை share செய்துக் கொண்டார்கள். 

                                   காலங்கள் மாறி காட்சிகள் மாறினாலும்,
                       வரலாற்றை திருத்தி வாழ்க்கையை அழித்தாலும்
                                                உண்மைக்கு அழிவில்லை.
                                     தனி ஈழம் வெகு தூரத்தில் இல்லை. 






வெள்ளி, ஜூன் 22, 2012

"எது தேடுவதாக இருந்தாலும் உன்னிடமிருந்தே தொடங்கு !"










 ண்பர் பை நிறைய மல்லிகை மொட்டுகளை எடுத்துவந்திருந்தார்.  அவரின் தோட்டத்தில் விளைந்த மல்லிகை  பார்க்க அழகாக குண்டுக் குண்டாக இருந்தது.  மல்லிகையின்  மனம் மனதை அள்ளியது.  

எல்லோருக்கும் பிரித்துக் கொடுக்க அவரவர் ஒரு பிளாஸ்டிக் பையில் வாங்கிக் கொண்டனர். எனக்கு கொடுக்க வரும்போது, பிளாஸ்டிக் பை இல்லை. நானும் தேடு தேடு என்று தேடினேன் பை கிடைக்கவில்லை. பிறகென்ன இன்னொரு நாள் வாங்கிக் கொள்கிறேன் என்று விட்டுவிட்டேன்.


வீட்டிற்கு வந்ததும் எதேச்சையாக பாண்ட் பாக்கெட்டில் கை விட, அங்கே ஒரு பிளாஸ்டிக் பை கையேடு வந்தது. காலையில் கலர் ஜெராக்ஸ் எடுத்தபோது கொடுத்த அந்த மெல்லிய பிளாஸ்டிக் பை என்னிடம்தான் இருந்திருக்கிறது. 



நாம் தேடுவது எதுவாக இருந்தாலும் அதை பிரிதொரு இடத்தில்தான் தேடுகிறேம். அது நம்மிடம் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்யாமலேயே.....?





-ஜல்லியடிப்போம் .

செவ்வாய், ஜூன் 19, 2012

கன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.



      குத்தாலம்:-   நாகை மாவட்டம்  குத்தாலம் தாலுகாவில் உள்ள (மயிலாடுதுறை - கும்பகோணம் மார்க்கம் ) திருவாலங்காட்டில்  எழுந்தருளியுள்ள   "  ஸ்ரீ கன்னியம்மன்' ஆலைய கும்பாபிஷேகம் கடந்த வியாழன் (07 /06 / 2012 ) அன்று நடைபெற்றது. 250 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்ரீ கன்னியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை திருவாவடுதுறை ஆதினம் இளைய சந்நிதானம் நடத்திவைத்தார்.    


கடந்த 2000 மாவது ஆண்டில் ஒரு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்
தொடர்ந்து 12  வருடங்களுக்குப் பிறகு கடந்த ஜூன் 7ம் தேதி   கும்பாபிஷேகம் நடைபெற்றது.    காவிரி நதியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விக்னேஷ்வர பூஜை, சோமகும்ப பூஜை, பூர்ணாஹூதி, ஸ்பர்சாகுதி, கடஸ்தாபனம், சுதைகளுக்கு கண் திறத்தல் உள்பட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோபுர விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோ பூஜை, மகா தீபாராதனை உள்பட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.    நாற்வீதியும் சுற்றிவந்த கன்னியம்மன்,  விடியற் காலையில்தான் நிலையை அடைந்தது.  அதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.  இரவில் கண்ணைக் கவரும் வாண வேடிக்கை நடத்தப்பட்டது.


விழாவில் திருவாலங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் சீதா பாலசுந்தரம்,
மாதிரிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வம், அதிமுக மாவட்ட கவுன்சிலர் விஜய பாலாஜி, ஒன்றிய கவுன்சிலர் ஜகபர் அலி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கொண்டார்கள்.  விழா ஏற்பாட்டினை  கிராம நாட்டாண்மை த.பாலு சிறப்பாக செய்திருந்தார்.  

சனி, ஜூன் 16, 2012

தமிழ் நாட்டில் லாட்டரியை தடை செய்து 10 ஆண்டாகிவிட்டது!

அதிஷ்டம் இல்லாத லாட்டரி?



         

             இன்றைய டாஸ்மாக் போல் அன்று திரும்பிய பக்கமெல்லாம் லாட்டரி கடைதான். தெருவுக்கு நாலு டீ கடை இருக்கிறதோ இல்லையோ பத்து லாட்டரி சீட்டு கடை இருக்கும்.  லாட்டரியின் பிடியில் தமிழகம் இருந்தது என்றுகூட சொல்லலாம்.   வயது வரம்பு இல்லாமல் எல்லோரும் லாட்டரியை சுரண்ட, லாட்டரி இவர்களை சுரண்டியது.


 லாட்டரியை தமிழ் நாட்டில் தடை செய்து 10 வருடமாகிவிட்டது.  அண்ணா காலத்தில் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு லாட்டரி பல வருடங்களாக தமிழகத்தில் மூலைமுடுக்கெல்லாம் பறந்திருந்தது.   2002ம் வருடத்தில் அன்றைய ஜெயலலிதா அரசால் தடைவிதிக்கப்பட்ட லாட்டரி,    அன்றிலிருந்து இன்று வரை  தமிழ்நாட்டில் மீண்டும் எழ வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.



அண்ணா ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாடு அரசு பரிசுச்சீட்டுத் திட்டம் என்ற பெயரில் லாட்டரி சீட்டுத் திட்டத்தை  அறிமுகப்படுத்தியிருந்தார்.  தமிழ்நாடு, சிக்கிம், பூட்டான், பஞ்சாப், மேகாலயா, கேரளா, அருணாச்சலபிரதேசம் என்று பல மாநிலங்கள்  தங்கள் பெயரிலேயே லாட்டரி சீட்டை நடத்திவந்தன.  அன்றைய காலகட்டத்தில் தீபாவளி, பொங்கல், ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ் வருடப் பிறப்பு, ரம்ஜான், கிருஸ்துமஸ் என்று அனைத்து பண்டிகைகளுக்கும் மத பாகுபாடு இல்லாமல் லாட்டரி சீட்டு வெளியிடப்படும்.

 

கடைகளில் லாட்டரி சீட்டு விற்பனை போதாதென்று, தனி நபர் மூலமும் விற்பனை சக்கைபோடு போடும்.   பேருந்து நிலையத்தில், மக்கள் கூடும் இடத்தில், பேருந்தில் என்று  அனைத்து இடத்திலும் விற்பனை கன ஜோரா நடக்கும்.   "சார், ஒரு கோடி பம்பர், தமிழ் நாடு லாட்டரியின் ஒரு கோடி. நீங்களும் லட்சாதிபதியாகலாம். வாங்க சார் வாங்க" என்று கூவி கூவி கோடிகளை விற்பார்கள்.

லாட்டரி குலுக்கலில் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களே ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இதில் 25 ஆயிரம் கோடி ரூபாய் புழங்குகிறது. இதன் மூலம் மாநில அரசுகளுக்கு பெரும் வருவாய் கிடைப்பதாலும், ஏராளமானோருக்கு மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைத்து இருப்பதாலும், லாட்டரிக்கு தடை விதிப்பதை இவை எதிர்த்து வருகின்றன. ஆனால், ஏழை மக்களை அடிமையாக்கும் சூதாட்டம் என்பதால், மற்ற மாநில அரசுகள் லாட்டரி திட்டத்தை எதிர்த்து வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

()()()()()()()()

                      1995ம் வருடம் அப்போதுதான் நான் சென்னை வந்து 'தினபூமி' நாளிதழில் விளம்பரப் பிரிவில் சேர்ந்திருந்தேன்.  கல்லூரி முடிந்து 20 நாட்கள்தான் ஆகியிருந்தது.  சென்னையும் புதிது, பத்திரிகை வேலையும் புதிது.  தினபூமி அலுவலகம் சென்னையில் எல்ஐசி பின்புறம் பார்டர் தோட்டத்தில் இருந்தது.  தினபூமி என்று பெயர் பலகை இருந்தாலும், 'அதிஷ்டம்' லாட்டரி நாளிதழ்தான் இதன் பின்புலம் என்று சேர்ந்த உடனே தெரிந்துக் கொண்டேன். அந்தளவிற்கு 'அதிஷ்டம்' அங்கு கோலோச்சியது!.

'அதிஷ்டம்தான் தமிழ் நாட்டில் லாட்டரிக்காக வெளிவந்த முதல் நாளிதழ்.  அனைத்து  லாட்டரி சீட்டின் முடிவுகளும் அதிஷ்டத்தில் வெளிவரும். இதுமட்டுமல்லாமல் லாட்டரி விளம்பரம், லாட்டரி கடைகளின் விளம்பரம், பரிசு பெற்றவர்களின் விபரம் என்று அனைத்து விபரங்களும் அடங்கி வெளிவரும்.

அதுவும் விளம்பரத்திற்கு கேட்கவே வேண்டாம்.   பக்கம் கொள்ளாமல்  விளம்பரம் வந்து  பிதுங்கித் தள்ளும். , " அதிஷ்டம் பேப்பரை எடுத்து சும்மா.... ஒரு உதறு உதறினால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்" என்று நான்  விளையாட்டாக சொல்வதுண்டு. அந்தளவிற்கு விளம்பர வருவாய் இருக்கும்.

லாட்டரி சீட்டின் தலைநகரம் என்றால் 'சிக்கிம் கேங்டாக்தான்'.   பெரும்பாலான லாட்டரிகள் அங்கிருந்துதான் வெளிவரும்.  `குலுக்கலும் அங்குதான் நடைபெறும்.   காலம் சென்ற நண்பர் சுப்ரமணியன் (தொப்பி) சிக்கிமில் இருந்து செய்திகளையும் குலுக்கல் விபரங்களையும் அனுப்புவார்.  சிக்கிம் மாநில அரசோடு மிக நெருக்கமான பிணைப்பை வைத்திருந்தனர் தமிழகத்தில் இருந்த லாட்டரி உரிமையாளர்கள்.

அதிஷ்டம் நாளிதழில்  பணிபுரிந்தவர்களுக்குகெல்லாம் நல்ல கவனிப்பு நடைபெறும். தினபூமியில் இருக்கும் என்னை போன்ற புது முகங்கள்,   அந்த பக்கம் எட்டிக் கூட பார்க்க முடியாது.  அப்படி ஒரு கட்டுப்பாடு.


சிக்கிமிலிருந்து வரும் குலுக்கல் முடிவுகளை, அச்சில் ஏற்றுவதற்கு முன்னர் சரிபார்ப்பார்கள். ஒருவர் கடகடவென்று மின்னல் வேகத்தில் எண்களை வாசிக்க, ஒருவர் அதே வேகத்தில் சரிபார்ப்பார்.    பார்க்கவே பிரமிப்பாக இருக்கும்!.

()()()()()()()()

          மதுரை கே.ஏ.எஸ். சேகர்,  திருச்சி கே.ஏ.எஸ். ராமதாஸ், மார்ட்டின் லாட்டரி, உஸ்மான் ஃபயாஸ்,  ஆரூண் பாய் போன்றவர்கள் அந்நாளில் லாட்டரி பிசினஸில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.  அவர்கள் பிடியில்தான் தமிழ்நாடு லாட்டரி வர்த்தகம் இருந்தது. 

Add caption
 லாட்டரியை இழுத்து மூடுவதற்கு சில வருடங்களுக்கு முன்னர்தான், அப்போதைய தினகரன் நாளிதழ் 'யோகலட்சுமி' என்ற நாளிதழை லாட்டரிக்காகத்  தொடங்கியது.  அதுநாள் வரையில்  மோனாப்புலியாக இருந்த 'அதிஷ்டம்' நாளிதழுக்கு அதிர்ச்சி!.

தொடங்கிய கொஞ்சம் நாளையிலேயே 'யோகலட்சுமி' சூடு பிடிக்கத் தொடங்கியது.  இருந்தாலும் 'அதிஷ்டம்தான் ஒரு நிலையான நம்பிக்கையான லாட்டரி நாளிதழ் என்ற பெயரில் இருந்து வந்தது. தமிழ்  மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று நான்கு மொழிகளில் வெளிவந்தது. 

பின்னர்தான் எல்லாமே மாறிப் போனது, சடாரென்று ஒரு நாள் தமிழக அரசு லாட்டரியைத் 2002ல்  தடை செய்தது. அதற்குப் பிறகு என்னன்னவோ.... பிரம்மபிரயத்தனம் செய்துப் பார்த்தார்கள் லாட்டரி உரிமையாளர்கள். ஒன்றும் வேலைக்காகவில்லை. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்,  லாட்டரிக்கான அதிஷ்டம் நாளிதழின் குழுமத்திலிருந்து வெளிவரும் 'தினபூமி',  ஜெயலலிதா அரசை கண்மூடித்தனமாக ஆதரித்ததுதான்!.  தினபூமி மற்றும் அதிஷ்டம் நாளிதழ்  நிறுவனரான மணிமாறனின் மூத்த சகோதரர்தான் லாட்டரி உலகின் முடிசூடா மன்னன் மதுரை கே.எஸ். சேகர் என்பது இங்கு குறிப்பிடித்தக்கது.

ஜெயா அரசு போய், வேறு அரசு ஆட்சிக்கு வந்தால் காட்சி மாறும் என்று நினைத்தார்கள் லாட்டரி உரிமையாளர்கள்.   ஆனால், நடந்ததோ வேறு!.  பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசும் அதே நிலைப்பாட்டை தொடர்ந்தது ஆச்சரியமான ஒன்று.  லாட்டரியை நம்பி பிழைப்பு நடத்துபவர்களுக்கு வேதனையான ஒன்று.

()()()()()()()

          ன்னிலையில் நாடு முழுவதும் லாட்டரிக்கு ஒட்டுமொத்த தடை விதிக்கப்பட உள்ளது.  1998ம் ஆண்டு இது தொடர்பாக மசோதா உருவாக்கப்பட்டது. அனைத்து மாநில உள்துறை அமைச்சகங்களின் ஒருமித்த கருத்தோடு, இது தொடர்பான மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பல்வேறு மாநில அரசுகள் லாட்டரியை எதிர்த்தாலும், சில மாநிலங்களில் அவை அனுமதிக்கப்பட்டுள்ளன. சிக்கிம், நாகாலாந்து, மிசோரம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி அனுமதிக்கப்பட்டுள்ளது.

 பழைய நடைமுறைப்படி விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுகள் மீது மோகம் குறைந்து, ஆன்-லைன் லாட்டரி குலுக்கல் முறை பெரிதும் அதிகரித்துள்ளது வேதனையான ஒன்று.

தற்போது பத்து வயதாகும் இளம் சிறாருக்கு 'லாட்டரி சீட்டு' என்றால் என்னவென்றே தெரியாது.....! அதேபோல் 'டாஸ்மாக்கும்' இருந்தால் எப்படி இருக்கும்.....?!



திங்கள், ஜூன் 04, 2012

'நீ நக்கித்தான் ஆகவேண்டும் !?'



எந்தவித திட்டமிடலுமின்றி வாழ்க்கை நகர்ந்துக் கொண்டுஇருக்கிறது.

சம்பளம் வாங்குவதும், அதை செலவு செய்வதும், மீண்டும் அடுத்த சம்பளத் தேதிக்காக காத்திருப்பதும்,
என்று வாழ்க்கை ஒரு வட்டத்திற்குள்ளே சுழன்றுக் கொண்டு இருக்கிறது.

இதுதான் சரியான பாதையா...? என்ற கேள்வி ஒரு அலைபோல மனதிற்குள் மோதியபடியே இருக்கிறது.

எப்போதும், என்னேரமும் பிறருக்காக உழைக்க வேண்டி இருக்கிறது. நாமாக சுமந்தது கொஞ்சம் என்றாலும், பிறரால் சுமத்தப் பட்டதுதான் அதிகமாக இருக்கிறது.

"செய் ஏதேனும் செய்!" என்ற மனதின் கூக்குரலுக்கு இந்த சாமானிய சம்சாரியிடம் பதில் இல்லை!.

இந்த வாழ்க்கை நம்மை முழுமையாக தின்று தீர்க்கிறது. நமது ஆசைகளை, கனவுகளை, கடந்த கால நினைவுகளை என்று நமது வாழ்வின் பாதையில் உள்ள அனைத்தயும் அது தின்று தீர்க்கிறது. வாழ்க்கை தின்று தீர்த்த 'மிச்சங்கள்' பெரும் பாறையாக உருவெடுத்து நம் கால்கள் மீது பிணைக்கப் படுகிறது.

எப்போதும், என்னேரமும் யாரோ ஒருவருடைய வெற்றிக்காக கை தட்ட வேண்டியிருக்கிறது. வேறொருவரின் வெற்றியின் ருசி வலுக்கட்டாயமாக நமது புரங்கையின் மீது தடவப் படுகிறது. நீ வேண்டாம் என்று முகம் திருப்பினாலும் நீ நக்கித்தான் ஆகவேண்டும் என்று போதிக்கப்படுகிறது.

'இலக்கு டார்கெட்' அப்ரைசில்,  பிளான் ஆப் ஆக் க்ஷ ன்  , என்று பலவாறு, பல்வேறு பெயர்களில் கூறப்பட்டாலும், அவை உன் கழுத்தை அழுத்தும் 'நுகத்தடி' என்பதை மறந்துவிடவேண்டாம். அதை தூக்கி உன் கழுத்தில் வைத்து கட்டிவிட்டு, உன் பின்பக்கத்தில் நெருப்பையும் வைத்து விடுவார்கள்.

நீ நின்று திரும்பிப் பார்ப்பியா....?
இல்லை தலைதெறிக்க ஓடிவியா....?

-பிதற்றல்கள் தொடரும்.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...