Sunday, February 12, 2012

சென்னையில் கவர்ந்து இழுக்கும் யுத்த கல்லறைகள். (படங்கள் இணைப்பு)

  



           சென்னையில் கிண்டியிலிருந்து போரூர் செல்லும் வழியில், மவுண்ட் பூந்தமல்லி சாலையில்  வலது புறம் இருக்கிறது போர் வீரர்கள் நினைவு கல்லறைகள்.  பிரமாண்டமான புல் தரையில் அழகியலோடு வரிசையாக நடப்பட்டு  காலத்தை வென்று நிற்கும் இந்தக் கல்லறைகள் பார்ப்பவர்களை என்றுமே கவர்ந்து இழுத்துவிடும்?!.

'என்ன கல்லறை கவர்ந்து இழுத்துவிடுமா...?'  என்று பயத்தோடு வினா எழுப்ப வேண்டாம்.  அவை கல்லறையானலும் காவியங்கள். 



        அந்த வழியில் செல்லும் போதெல்லாம், அங்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தாலும் 'அனுமதி கிடைக்காது' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு இருந்தேன்.  ஒரு மதியம் வேளையில் 'பைக்கை' நிறுத்தி தூரத்தில் புல் தரையை பராமரித்துக் கொண்டு இருந்தவரைப் பார்த்து "உள்ளே வரலாமா..?" என்றேன். 

'இங்கு உயிரோடு வரக் கூடாது...!'  என்று சொல்லி விடுவாரோ என்ற பயம் வேறு எனக்கு!.  'கேட்டை திறந்துக் கொண்டு வா'  என்று சைகையில் காண்பித்தார். நுழைவு வாயிலில் இருந்த அந்த சின்ன கேட்டை திறக்க முடியவில்லை. ஏதோ பாரின் கதவு போல இருக்கு...நம்ம கை வைத்தியத்திறகு அது போடா என்றது!.  நான் நோண்டிக் கொண்டு இருந்ததைப் பார்த்து அவரே வந்து திறந்துவிட்டார்.  கொஞ்சம் வித்தியாசமான தாழ்பாள்தான் அது.
   
'சாம்ராஜ்ஜிய யுத்த கல்லறைகள்' 

'மெட்ராஸ் வார் சிமிண்ட்ரி'  என்று அழைக்கப்படும் 'சாம்ராஜ்ஜிய யுத்த கல்லறைகள்' 1952ம் வருடம் கட்டப்பட்டது.   இரண்டாம் உலக போரின் போது, இந்தியாவில் பல்வேறு இடங்களில்  உயிர் நீத்த வீரர்களின் நினைவாக அவர்களது பெயர் பொரிக்கப்பட்ட கல்லறைகள் இங்கு புதைக்கப்பட்டுள்ளன. 
   
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்த காலனி நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த் அமைப்பு தனது  Commonwealth War Graves Commission (CWGC)  மூலமாக இந்திய அரசின் துணைக் கொண்டு இதை பராமரித்து வருகிறது.  1939 லிருந்து 1945 வரை இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்டு வீரமுடன் போரிட்டு மடிந்த அந்த வீரர்களின் நினைவுகளைத் தாங்கி நிற்கிறது இந்த சாம்ராஜ்ஜிய யுத்த கல்லறைகள்.
கொடிப் பந்தல்

    



இங்கு 857 கல்லறைகள் உள்ளன. இதில் இங்கிலாந்து மட்டுமல்லாமல் கனடா, மேற்கு ஆப்ரிக்கா, பிரிவினைக்கு முந்தைய இந்தியா, நியுஸ்லாந்து, பர்மா, ஆஸ்திரேலியா, போலந்து,  ரூடேஷ்யா மற்றும் மலாயா நாட்டை சார்ந்த வீரர்களின் கல்லறைகள் இங்கு புதைக்கப்பட்டுள்ளன.

கல்லறைகள் வரிசைக்கிரமமாக  ஒரு அழகியலோடு  நேர்த்தியாக நடப்பட்டுள்ளன. எங்கிருந்து பார்த்தாலும் எல்லா கல்லறைகளும் ஒரு நேர் கோட்டில் வருவது போல் அமைத்துள்ளனர். அழகிய புல் வெளிகள், மலர் வளைய வலைவுகள், நிழல் தரும் மரங்கள், ஆங்காங்கே பூத்துக் குலுங்கும் மலர்ச் செடிகள் என்று பார்க்கும் இடமெல்லாம் அழகு நிறைந்திருக்கிறது. ஏதோ வெளி நாட்டில் இருப்பது போன்ற ஒரு பிரமையை அந்த இடம் ஏற்படுத்திவிடுகிறது.
   

படம் எடுத்துக் கொண்டு இருந்தபோது...தூரத்தில் மர நிழலில் மூன்று பெண்கள் அமர்ந்து ஹாயாக பேசிக் கொண்டு இருந்தார்கள். "கல்லுரி பெண்களா என்று கேட்டதற்கு, அருகில் இருந்த நிறுவனத்தைக் காட்டி கம்பெனி ஸ்டாப் என்றார்கள்.  நல்லதுதான். பெண்களுக்கு பயம் விட்டுபோச்சு!. 


முதலாம் உலக போர்.

முதலாம் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களின் பெயர்கள் செதுக்கப்பட்ட  சுவர்.
அதோடு இங்கு இன்னோரு குறிப்பிடத்தக்க  ஒரு விஷயமும் உண்டு.  முதலாம் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கும் நினைவிடம் இருப்பதுதான். இந்த நினைவிடத்தின்  கடைசியில் மிகப் பெரிய ஒரு சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது, அதில் 1914லிருந்து 1918 வரை முதலாம் உலகம் போரில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் உயிர் நீத்த சுமார் 1000 இராணுவத்தினர் மற்றும் சிவில் வீரர்களின் பெயர்கள் இச் சுவற்றில் பொரிக்கப்பட்டுள்ளன.  அந்த நினைவுச் சுவர் வீரர்களின் பெயர்களைத் தாங்கி கம்பீரமாக நிற்கிறது.
   

21  வயது வீரரின் கல்லறை


அரேபிய மொழியில் எழுதப்பட்ட கல்லறை

19 வயது சொஹெனின்  கல்லறை
ஒவ்வொரு வருடமும் உலக சமாதான  (Armistice Day)  நாளான நவம்பர் 11ம் தேதி உலக ஒற்றுமைக்காக சண்டையிட்டு மடிந்த அந்த வீரர்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அவர்களது ஆன்மா சாந்தியடைய  பிரார்த்தனை செய்யப்படுகிறது.   இங்கு பார்வையாளர்கள் அனுமதி என்பது  திங்கள் முதல் சனி வரை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை (பொது அல்லது உள்ளுர் விடுமுறை நீங்களாக) அனுமதிக்கப்படுகிறது.



நினைவிடத்தை விட்டு வெளியே வந்தால் ஹோவென பெரும் இரைச்சளுடன் மவுண்ட் பூந்தமல்லி சாலையில் வாகனங்கள்  நகர்ந்துக் கொண்டு இருக்கிறது. ஒரு 8  பத்து வருடங்களுக்கு முன்னெல்லாம் இந்த சாலையில் ஆல் நட மாட்டமும் வாகன போக்குவரத்தும் அவ்வளவாக இருக்காது. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்கள் இந்த சாலை முழுவதும் ஆக்ரமித்துள்ளன. அதனால் எப்போதும் போக்குவரத்து நிறைந்தே காணப்படுகிறது.




அன்று சென்னை நகரத்தின் வெளியே என்று நினைத்து  இந்த நினைவிடத்தை கட்டிவிட்டார்கள், ஆனால் இன்று நகரத்தின் முக்கியமான வளர்ந்து வரும் இடத்தில் இக் கல்லறைகள் மாட்டிக் கொண்டுள்ளன.   நகரமயமாக்களின் விளைவாக நகரத்தின் பாரம்பரிய அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்படுகிறது. மனிதனின் இடத் தேவை என்ற அகோரப் பசிக்கு இயற்கையே ஆங்காங்கே பலியாகிக் கொண்டுதான்  இருக்கிறது. உயிர் வாழ மனிதன் பரப்பரப்பாக ஒடிக்கொண்டு இருக்க... இறந்தவர்களின் இக் கல்லறைகள் இன்னும் எவ்வளவு நாட்கள்  இங்கு உயிருடன் இருக்கும் என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

- தோழன் மபா.
புகைப்படங்கள்: எனது காமிரா மொபைல் Nokia N8.



Share/Bookmark

Friday, January 27, 2012

உற்சாகமாகத் தொடங்கியது திருப்பூர் புத்தகத் திருவிழா!







அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்




                திருப்பூர் மாநகரின் பண்பாட்டுத் திருவிழாவாக 9வது திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012 புதனன்று உற்சாகமாகத் தொடங்கியது. மாநில இந்து சமய அறநிலை துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

திருப்பூர் மங்கலம் பாதை கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் பிப்ரவரி 5ம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு வரவேற்புக் குழுத் தலைவர் எம்.ஜீவானந்தம் தலைமை வகித்தார். செயலாளர் செ.முத்துக்கண்ணன் வரவேற்றார். இதில் மாவட்ட ஆட்சியர் மா.மதிவாணன், சைமா பொதுச் செயலாளர் எம்பரர் வீ.பொன்னுசாமி, கபாடி அறக்கட்டளை சக்தி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   


புத்தகக் கண்காட்சி வளாகத்தில் கானுயிர் காப்போம் என்ற கண்காட்சியை மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி திறந்து வைத்தார். ஏஇபிசி அமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல் முதல் புத்தக விற்பனையைத் தொடங்கி வைக்க, துணை மேயர் சு.குணசேகரன் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் மகிழ்ச்சிப் பெருக்கோடு ஏராளமானோர் பங்கேற்றனர். மேடை நிகழ்ச்சிக்கு முன்னதாக திருப்பூர் சிறுவர் கலைக்குழுவின் தப்பாட்டம் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

இக்கண்காட்சியில் மொத்தம் 105 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் முன்னணி புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். சென்னை புத்தகக் கண்காட்சியைத் தொடர்ந்து நடைபெறும் இக்கண்காட்சியில் அங்கு புதிதாக வெளியிடப்பட்ட புதிய புத்தகங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வழக்கம் போல் திருப்பூர் நகர மக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பெருமளவு இக்கண்காட்சியைக் காண வருவார்கள் என எதிர்பார்ப்பதாக புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



-----------------------------------------

முதல் படம் கண்காட்சியை அமைச்சர் திறந்து வைப்பது

இரண்டாவது படம் புத்தக விற்பனையைத் தொடங்கி வைப்பது






Share/Bookmark

Saturday, January 14, 2012

'குத்தகை' (சிறுகதை) - இரத்தின புகழேந்தி.



பொங்கல் தின சிறப்பு சிறுகதை.


 'களம் புதிது'  தனிச்சுற்று    இதழில் 1996- ஏப்ரல் மாதத்தில் வந்த சிறு கதை. வாசிக்க வாசிக்க கதை கனமாக நமது நெஞ்சில் படிந்து விடுகிறது.  உழைத்த மனிதர்கள் எப்படியெல்லாம் வஞ்சிக்கப் பட்டனர் என்பதை மிக மிக எதார்த்தமாக மண் மனத்துடன் சொல்லி உள்ளார் இரெத்தின புகழேந்தி.  களம் புதிது  ஆசிரியர் குழுவின் தலைமை பொறுப்பும் இவர்தான்.  இக் கதை விருத்தாசலம் பகுதியில் நடைப்பெறுவதாக இருந்தாலும், இதில் கையாண்ட வட்டார வழக்கு சொற்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் மாயவரம் பகுதிகளில்  பேசப்படுபவைதான். 

வட்டார வழக்குச் சொல்லில் வளைந்து நெளிந்து  செல்லும் கதாசிரியர், கதையின் முடிவில் சாதி பெயரை கொண்டு திட்டுவது   ஏனோ...மனதை  நெருடுகிறது....!     







நன்றி!
புகைப்படங்கள்: வைலெட் ஐஸ்.


                  "ஏ... முத்தம்மா சனி மூலையில போயி அற, மொதல்ல மலப்பில்லாத மளமளன்னு ஆவும் அறப்பு"

சர்ரக்...கெழக்கத்தி அருவா நாலு மொதல ஒரே அறப்பா அறுத்தது.

சர்ரக்...சர்ரக்...சர்ரக்...சர்ரக்...
சர்ரக்...சர்ரக்...சர்ரக்...சர்ரக்...

"என்னடா மாப்ள, இம்மாங் கஷ்டப்பட்டு கடசீல பொகையான் அடிக்க உட்டுட்ட"

"ஏன்யா அந்த வவுத்தரிச்சல கெளப்புற.  பயிறுதான் வெளுத்து போயி இருக்கேன்னு ஒரு மூட்ட ஊரியாவ கொண்டாந்து போட்டு புட்டான். நல்லா பச்ச பசேர்னு வந்தது. திட்டு திட்டா அடிச்சி கெடாவிட்டது"

ரெண்டாவது வாட்டி போடும்போது, ஊரியா கொஞ்சனா காட்டனும்"

"புதுசா  புட்டமுட்டானாம் அவன் பூ....செல்லரிச்சுதாம்..." முணுமுணுத்தாள் முத்தம்மா.   இதைக் கேட்டதும் உம் என்று ஆனது குள்ளனின் முகம்.

"பொகையான் அடிச்சாலே ஒப்புடி ஆவாது. இதுல கொல்ல வாரம், தண்ணிவாரம் குடுத்து ஒனக்கு என்னா மீற போவுது."

"இதெல்லாம்  கணக்கு பண்ணி பாத்துட்டுதான் அவாளு குத்தவைக்கு உட்டது. சும்மாகிம்மா உடுல."

"குள்ள பய பெரியாண்ட நெலத்த கெரையம் வாங்குனவனாட்டம் பள்ளம் மேடு திருத்தறது என்ன, எருவு அடிக்கறது என்னா..."

ஆளுக்கு ஒன்றை சொல்லி குள்ளனின் வயிற்றெரிச்சலை கிளப்பினார்கள்.

0000


"நன்னானே நானே னன்னே
நானனன்னே நன்னா னனே...
கோத்தா கொடி பவழம்
கோருவைக்கே நப்பவழம்
கோப்பாரு இல்லாமலே- நான்
கொடி பழம் சிந்துறனே (நன்னானே....)"

    முத்தம்ம பாட நடவு சனங்கள் பின் பாட்டுப் பாட வடக்கு வேளி முழுக்க எதிரொலித்தது. பாட்டுக்குத் தாளம் போடுவது போல ச்சளக்...ச்சளக்...ச்சளக்... பயிரை சேற்றில் நட்டனர். சொந்த நடவு என்பதால் நெருக்கி நட்டனர். தார்க்குச்சியை குத்தியது போல குத்திட்டு நின்றது பயிர்.

     " நீங்கள்ளாம் இம்மாம் கத்திருக்கிங்க புள்ள....ம்...எங்க கொல்லன்னா சாச்சி போட்டு  எட்ட  எட்ட  நடுறது.   சொந்த நடுவுன்னதும் அஞ்சி வெரலும் சேத்துல போவுத!"    சத்தம் போட்டான் அந்த வழியா வந்த கொடுமனூராங்க மகன்.

"ஒங்களுக்கு மட்டும் என்னா வேற கையாலயா நட்டோம். பாக்கிறதுக்குதான் அதேமேரி தெரியும். கடசீல ஒங்களுக்குதான் நெல்லா வெளையும்."

"ஆமாம்...ஆமாம்...கவுடு வச்சி வேல செஞ்சிங்கன்னா எல்லாங் கட்டாந்தரையாத்தான் போவும்..."

"இங்க ரெண்டு முடி நாத்து எடுத்துகிட்டு வா மாமோய்...." 

"கையால ஆவாத கலவட....என்னாடி இன்னும் பின்னாலயே கெடக்குற?" கிண்டலடித்தப்படி நாற்று முடிகளைக் கொண்டு போனான் குள்ளன். அவனை உள்ளே வைத்து வெளியில் நடவு நட்டுவிட்டனர். இப்படி நட்டுவிட்டால் காசு கொடுத்து விட்டுத்தான் வெளியில் வரவேண்டும்.  கையில் காசு இல்லையென்றாலும் எது அவனிடம் இருக்கிறதோ அதை  பிடிங்கிக் கொள்வார்கள்.  பிறகு காசு கொடுத்துவிட்டு பொருளை வாங்கிக் கொள்ள வேண்டும்.

  "என்னா சொன்ன...கலவடையாமில்ல...." சிரித்துக் கொண்டே குள்ளனின் பின் பக்கக் கோவணத்தை அவிழ்த்து விட்டாள் கருப்பாயி.

   பொத்துக் கொண்டு பீரிட்டு அடித்தது சிரிப்பொலி, தொங்கிய கோவணத்தை முன் பக்கம் கெட்டியாக அழுத்தி பிடித்துக் கொண்டு "ச்சீ...கையில காசு இல்ல ...ஊட்ட வந்து தரன் உடுங்களன் மானங்கெட்ட கழுதை வோள..." முண்டாசை அவிழ்த்துக் கொடுத்தான்  ஏசியபடி.

  "ஊட்ட வந்து ஏமாத்தி புட்ட அங்க சுத்தமா அவுத்து உட்டுடுவன்"

இவர்களின் சேட்டைகளுக்கு எரிச்சலடைபவன் போல காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் குள்ளனுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சி. ஆண்டைகளுக்கு கிடைத்த அனுபவம் முதன் முதலாக அவனுக்குக் கிடைத்திருக்கிறது.

  நிலம் குத்தகைக்கு விடுவது தெரிந்து பெரியாண்டை வீட்டின் முன் கூனி குறுகி நின்றான் குள்ளன்.

  "தெக்குத் தெருவானுவோளுக்கு வேலைக்கு போறவன்,  குத்துவைக்கு உடுறாங்கன்னதும் கொழஞ்சிகிட்டு வந்து நிக்கிறதப்பாரு. சும்மாவா சொன்னாங்க கள்ளன நம்புனாலும் குள்ளன நம்பக் கூடாதுன்னு..."  பெரியாண்டையின் பேச்சு ஊசியாய் தைத்தது குள்ளனுக்கு. 

  "இல்லிங்க... " தயங்கி, பயந்து, நடுங்கி, பவ்யமாய், வாய்பொத்தி, தலை சொரிந்து, கூனியபடி சொன்னான். 

இந்த ஒணக்க ஓட்டு போடும் போது மட்டும் இருக்கட்டும். மாத்தி கீத்தி போட்டிங்கன்னு தெரிஞ்சிது...." கர்ச்சித்தார்.

   "எம் மூனு புள்ள மேல சத்தியமா நம்பள தவற மாத்தமில்லிங்க...உண்ட ஊட்டுக்கு ரெண்டகம் பண்ண மாட்டாங்க இந்த குள்ளன். "

  நல்ல பேச கத்துகிட்டிங்கடா ...சரி...சரி...அந்த மோட்டு ஓரத்து கொல்லையை நட்டுக்க. "

   "ஏரு...கெராக்கியா இருக்குங்க....நம்ப வண்டி..."

   "வண்டியா...ரேட் தெரியுமில்ல...? நானூத்தி இருவத்தஞ்சி " 

     ஆண்ட  நீங்க பார்த்து சொன்னா சரிதான்...."

0000


        "அடியோட அறங்கப்பா... வைக்கலாவுது நாலு தெர ஆவுட்டும்"

"வைக்க மட்டும் எங்கேருந்து ஆவும்ங்குற...கூளாந்தான் ஆவும்".

"வீசும் ஒன்ரை மூட்டையாவது தேறுமா...அநியாயமா இருக்க...." முத்தம்மாவின் வாயை கிண்டினாள் மூக்காயி.

" இந்த குள்ள பயதாண்டி பயிறுக்கு தீம்பா இருந்துட்டான். கொண்டாடி குட்டிச் சாத்தின்னு தாலிய வாங்கிகிட்டு போயி வச்சில்ல ஊரியா வாங்கிகிட்டு வந்து போடுறான். ஆனமுட்டும் சொல்லி பாத்தண்டி ஆயி....கேக்க மாட்டன்னுட்டானே.  ஒரே முட்டா அடிச்சி கொட்டிக்கலாம்னு ஆச....அதான்  ஒன்னுமில்லாம பூடுச்சி..."

  இந்த ஊரியா வாங்க பட்டபாடு குள்ளனுக்குத்தான் தெரியும்.  குறுக்கு ரோட்டுல ஒரு கடையிலியும் இல்லன்னுட்டானுவோ  விருத்தாலத்து ஒடயான் கடையில கேட்டா செட்டியாரு கடையில் இருக்குங்குறான், செட்டிய கேட்டா ஒடையார் கடையில இருக்குங்குறான்.

  "அஞ்சாறு பேரு சேந்துகிட்டு கடகாரங்கிட்ட சண்டைக்கு போயிட்டாங்க.  வேற வழி இல்லாம டோக்கன குடுத்து ஊரியா வாங்க வந்தவங்கள வரிசையில நிக்க வச்சிட்டான். உள்ள போறவங்கள்ட்ட பொட்டாஷ் வாங்குனாதான் ஊரியா தருவேங்குறான்.  அதுவும் மூட்ட எரனூத்தி இருவத்தஞ்சி ரூவாயாம். பில் சீட்டும் குடுக்கல".

 " நூத்தி எழுவது ருவா வித்தப்பயே ரெண்டு மூட்ட வாங்கியிருக்கலாம்.  என்னா பண்றது....கையிலியா வச்சிருக்கோம்....பிச்ச எடுக்குமாம் பெருமாளு அத புடிங்கி திங்குமாம் அனுமாருன்னு.... நூறு அம்பதுன்னு பொருக்கி பொணச்சில்ல வாங்குறதா இருக்கு".

...ம்.... இந்த பயிர கண்ணால பாக்க எம்மாஞ் சிருப்பா சிரிச்சேன்.

 அண்ட வெட்டும்போது கால வெட்டிக்கிட்டு காயத்தோடயே தழ கழிச்சி தூக்க முடியாம தூக்கிகிட்டுவந்து காலாலயே மிரிச்சி காயத்துல சேரு பூந்து பொட சச்சி லோக்கல்ல போயி கெடந்து காயத்த ஆத்திகிட்டு வந்தா கள மண்டிபோயி அத அரிச்சன்.

அடிச்ச பூச்சி மருந்து கொஞ்சமா நஞ்சமா,,,மருந்து அடிக்கும் போது சோல கிழிச்சி ரெத்தம் கசயும் அதுல மருந்து பட்டா எ

  அடிச்ச பூச்சி மருந்து கொஞ்சமா நஞ்சமா....மருந்து அடிக்கும் போது சோல கிழிச்சி ரெத்தம் கசயும் அதுல மருந்து பட்டா நெருப்ப வச்சாபல எரியும்.  நாத்தம் வேற கொடல புடுங்கும். ரெண்டு நாள் சென்னு போய் பாத்தா சுருட்டிக்கிட்டு இருக்குற சோலையில புழுவு நெளியுது.  என்னாய்யா மருந்து குடுத்தன்னு கடகாரன கேட்டா முழுங்கி (மூங்கிள்)  மெலாரால சேலைய கிழிச்சிட்டு அடிக்குனுங்குறான்.   இனிமே....புழுவ புடிச்சி மருத்துல போட்டாதான் சாவும்னு சொன்னாலும் சொல்லுவான்.

0000



   கட்டு தூக்கும்போது காத்தாட்டம் லெக்காதான் இருந்தது. செத்த நாழியில களத்துக்கு போயி சேந்தது.  கெடாவடி ஒதரும் போதே கூளான் பறந்தது.

தாளு அடிக்க பெரியாண்ட டிரக்கு வந்தது டயர் வண்டியோட. பின்னாலயே தலையில துண்ட போட்டுகிட்டு பெரியாண்டயும் வந்துட்டாரு.

புளிய மரத்தடியில் நின்னுகிட்டு

"ஓரம் பாரம் கெடக்குற தாள அள்ளி உள்ள போடுங்கடா"
...    ...   ...   ...   ...

"வண்டிய நிறுத்திட்டு, நடுல  முட்டா கெடக்கு பாரு...நெறவி உடு"
...   ...     ...   ...  

"ம்....போதும் நிறுத்து.  ஒதறிட்டு அப்புறம் அடிக்கலாம்."
...  ....  ...  ...  ... 

"நெல்லா அடிகாண ஒதறு"

"என்னடா குள்ள பயல வைக்கலாம் கூழ் கூழா பொயிட்டது...?"
....      ....        .....    ....

சும்மா ரெண்டு சுத்து சுத்து போதும்"
....      ....        .....    ....

நெல்லா வைக்கல நெல்லு இல்லாம சிலுக்க ஒதறு"
....      ....        .....    ....

போர கெழக்கால போடு காத்த மறைக்காம, ஒருத்தம் போருல நில்லு"
...      ....        .....    ....

"நெல்ல ரெண்டு முட்டாக்கிக்க"
....      ....        .....    ....
 
"பாதி நெல்ல தெக்க தள்ளு, பாதிய வடக்க முட்டாக்கு. பிரி வச்சி தள்ளு"

....      ....        .....    ....
....      ....        .....    ....

"வெளக்க மாத்த எடுத்து கூட்டம்புள்ள.  வேடிக்க பாத்துகிட்டு நிக்குற....?"
....      ....        .....    ....

இன்னமுட்டும் அடி அடின்னு அடிச்சது.  இப்ப காத்தயே காணும்"

....      ....        .....    ....

"மூட்டம் போடுங்க....ஏய் கருக்கால அள்ளி போடுறா...ம் ....இப்ப அள்ளிபோடு கூளான. பத்தவையி"

....      ....        .....    ....

"போரையான உட சொல்லு, அவந்தான் வாட்டபிலி நெல்லா உடுவான் மேல காத்துதான் அடிக்குது.....உடு..."

....      ....        .....    ....


மொறத்தால விசுறு, நெல்லா...கூளான் போறாபல விசுறு"

....      ....        .....    ....

"இந்தா குள்ளம்  பொண்டாட்டி...சாக்க எடுத்து தலையில போட்டுகிட்டு கட்டிய தள்ளு"

....      ....        .....    ....

"உடு....உடு....உடு...கிடுகிடுன்னு அள்ளி உடு...."

....      ....        .....    ....
"மிம்மாரிய கழிச்சி உடு"
....      ....        .....    ....
"நெல்லா ஒட்ட கழி...."
....      ....        .....    ....

"ம்...கருன வையி"

....      ....        .....    ....
"அந்த அரவா, காவா நெல்ல அள்ளி தனியா கொட்டு"
....      ....        .....    ....

"காத்து அடிக்குது பாரு வாரி உடு...வாரி உடு...."

....      ....        .....    ....
என்னடா....குள்ளா...இருவது மூட்டையாவது தேறுமா....?"

"பொகையான் அடிச்சிட்டுதுங்க பெரியாண்ட...."
"யூரியாவ திட்ட மட்டமா போடுனும்...மின்னபின்ன செத்திருந்தால்ல சுடுகாட்டுக்கு வழி தெரியும்"

....      ....        .....    ....

"இன்னும் ஒரு தரம் மிம்மாரிய கழிங்கடா...."
....      ....        .....    ....
"சுருண வச்சதோட கழிச்சிங்கள...?"
....      ....        .....    ....
"தா...சாணி கெடக்கு பாரு புள்ளியாரு புடிச்சி ஒரு அருவம் பில்ல சொருவு....சனி மூலையில வையி"
....      ....        .....    ....

"பரைய எடுத்து அள"

"குள்ளன் அளக்க அளக்க ஒவ்வொரு பரைக்கும் ஒரு குத்து நெல்லை அள்ளி எண்ணிக்கைக்காக வைத்தாள் முத்தம்மா.

சாக்குகள் நிரம்ப நிரம்ப பட்டரை காலியானது.  குள்ளனின் நெஞ்சில் உலக்கை போட்டு இடித்தது.

நெற்குவியல்களை எண்ணிப் பார்த்துவிட்டு "கொல்ல வாரம் எட்டு மூட்டை, தண்ணிவாரம் பத்து மூட்ட, வண்டி வாடக ரெண்டு மூட்ட சரிதான...?" என்றார்.

"ரெண்டு மூட்டயாவது உட்டு குடுங்க பெரியாண்ட. அடுத்த போவத்துல சேத்து குடுத்துடுறன்"

"என்னா மசுருக்குடா... ஒனக்கு குத்துவைக்கு உட்டதுக்கு தெண்டம....?"

"பொகையான் அடிச்சிட்டுதுங்க ....எனக்கு ஒன்னும் மீறலன்னாலும்....கூலி நெல்லாவது உட்டுகுடுங்க சாமி"

"அன்னிக்கே பேசிதாண்ட உட்டன்.  நீ கூலிதாங் குடு எதாவது செய்யி. நான் என்னமோ ஒன்ன ஏமாத்தி வாங்கிகிட்டு  போறாபல பேசுகிறிய...ஒன்னுகிட்ட குத்துவைக்கி உட்டம் பாரு ஏம் புத்திய செருப்பால அடிக்கனும்டா"

"அய்யய்யோ....ஏங்கசாமி பெரிய வாத்தையெல்லாம் பேசுறிங்க...நீங்க நெல்லா இருப்பிங்க, நீங்களே கொண்டுகிட்டு போயி சாப்புடுங்க...."

"அடி....செருப்பால...பற  தேவடியா...."

"என்ன ஏன் அடிக்கனும்....கையால ஆவாதவன்லாம் எதுக்குடா பயிறு வைக்கனும் அவன அடிங்க..."

"இந்த பறக் கழுதைகிட்ட என்னாடா பேச்சு....நெல்ல ஏத்திகிட்டு வாங்கடா"
துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினார் பெரியாண்டை.

"குள்ள சாடு மாறி...வெக்குனவ(ம்) வெளாம்பழத்த  தின்னமேரி நிக்குறாம் பாரு"

....நஞ்ச தின்னவன...பொறம்போக்கு மரத்தபாத்து  நாணுக்கியண்டா....த்தூ....!

                                                                               0000











Share/Bookmark

மதம் மாறினால் பொங்கல் கொண்டாடக் கூடாதா....?




  ' மதம் மாறினால் மனமுமா மாறவேண்டும்...?'




     கிருஸ்த்துவாக மதம் மாறிய எனது நன்பர்  வீட்டிற்கு சென்றிருந்தேன். பொங்கல் பற்றி பேச்சு வந்தபோது, 'நாங்களெல்லாம் பொங்கல் கொண்டாடுவதில்லை' என்றார்.  கேட்டால் கிருத்துவ மதத்தில் பொங்கல் கொண்டாடுவது பற்றி இல்லை' என்றார்.

மூளையை மதத்திற்கு அடகு வைத்தவரை ஒரு அரை விடலாம் போல் இருந்தது. அன்னிய மதமான கிருத்துவத்தில் தமிழரின் பொங்கல் பண்டிகை எப்படி இருக்கும்....? என்று கூட அவர் சிந்திக்கவில்லை!.

கேரளாவில் மலையாள மொழி பேசும் அனைத்து  மதத்தினரும் அனைத்து சாதியினரும் 'ஓணம்'  பண்டிகையை கொண்டாடுகின்றனர்.   அங்கு மத பாகுபாட்டை யாரும் பாரம்பரிய பெருவிழாவில் காட்டுவதில்லை. கிருத்தவர்களும், முகமதியர்களும் அவரவர் முறைப்படி 'ஓணம்' கொண்டாடுகின்றனர்.  ஆனால் இங்கு....? 

ஏற்கனவே சாதியால் மதத்தால் நெல்லிக் கனியாக சிதறிக் கிடக்கும் தமிழர்கள், தங்களது பாரம்பரியமான மரபு சார்ந்த 'தமிழர் திருநாளை' மதத்தின் அடிப்படையில் ஏன் பிரித்துப் பார்க்கவேண்டும்?. 

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த 'ஆதி தமிழன்' தன்னை பலவகையிலும் காத்து வாழவைத்த  இயற்கைக்கு நன்றி தெரிவிக்கிறான். மனிதருடன் மனிதர் தொடர்பாடலை மேற்கொள்ளுவதற்கும் இயற்கையுடன் தொடர்பாடலை நீடிப்பதற்கும், தமிழர் பயிர்வளப் பண்பாட்டிலே 'பொங்கல்' என்ற குறீயிடு தோற்றம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

சூரியன் இன்றி இவ் உலகம் இயங்காது என்பதை புரிந்துவைத்த தமிழன், முதல் நாளில் (பெரும் பொங்கல்)  அதற்கு நன்றி சொல்கிறான். தனக்காக உழைத்து தன்னையும் குடும்பதினரையும் வாழவைக்கும் 'ஆவினங்களுக்கு' ஒரு நாள்  (மாட்டு பொங்கல்),  தங்களது குலத் தெய்வத்தையும், மறைந்த முன்னோர்களுக்கும் நன்றி தெரிவிக்கவே மூன்றாம் நாள் (கன்னிப் பொங்கல் அல்லது காணும் பொங்கல்) கொண்டாடுகிறான்.

தமிழர்களின் பூர்வீகத் தொழிற்நுட்ப வளர்ச்சியின் ஒரு சிறப்பார்ந்த நிலையிலே பொங்கல் தோற்றம் பெற்றது என்று கூடச் சொல்லாம். உழும் கலப்பையின் உருவாக்கம், சில்லின் சுழற்சியைப் பயன்படுத்தி  மண் பாண்டங்களை உருவாக்குதல், எருதின் பலத்தை ஆற்றலாகப் பயன்படுத்தி உற்பத்தியை பெறுக்குதல் என்று 'பொங்கல்' தமிழனின் தொழிற் நுட்பத்தோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.  அதனாலயே பொங்கல் ஒரு 'Thanks Giving'  பண்டிகையாகவும் பார்க்கப்படவேண்டும்.

இப்படி இயற்கைக்கு  நன்றி தெரிவிக்கும் விழாவாகவே 'பொங்கல்' கொண்டாடப்பட... இதில் எங்கிருந்து வந்தது மதமும் சாதியும்?  தமிழை தாய் மொழியாக கொண்ட எவரும் அவரவர் மதத்தின வழக்கப்படி பொங்கல் கொண்டாலாமே....? இதில் ஏன் தயக்கமும் வெட்கமும்?! 

அனைத்து மதத்தினரும் சாதியினரும் தமிழராய் இணைந்து கொண்டாடும் பொங்கல் பெரு நாளே  தமிழர் திருநாள்  என்பதை ஏன் இந்த மதம் மாறிய தமிழர்கள் மறந்துவிட்டார்கள்....?



















Share/Bookmark