செவ்வாய், பிப்ரவரி 28, 2023

வெட்பாலை

     

 


வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! செடியாக கிடைக்கவில்லை, விதையாகக் கிடைத்தது.  ஊரில் வீட்டில் வைப்பதற்காக,  சென்னையிலிருந்து ஆர்டர் செய்தேன், இரண்டே நாளில் டெலிவரி செய்துவிட்டார்கள்.

வெட்பாலை இலைகள் சருமத்திற்கும்  கேசத்திற்கும் நல்லது. சுத்தமான  தேங்காய் எண்ணையில் வெட்பாலை இலைளைப் போட்டு  ஏழு நாட்களுக்கு ஊரவைத்து....வெயிலில் காயவைத்துப் பயன்படுத்த வேண்டும். அடுப்பில் வைத்து சூடு  பண்ணக் கூடாது.  வெட்பாலையில் ஊர வைத்த தேங்காய் எண்ணெய்... பார்க்கப் அடர் பிங்க் நிறத்தில், ஒயின் போல மாறிவிடும்.   தலையில் தொடர்ந்து தடவி வர, தலை முடி கருகருவென இருக்கும். பொடுகைப் போக்கும்.

இந்த வெட்பாலை எண்ணை  காளாஞ்சுப்படை எனப்படும் சொரியாசிஸ் நேய்க்கு மிகச் சிறந்த மருந்தாகும்.  சொரியாசிஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல்  வெட்பாலைக்கு உண்டு.  வறண்ட சருமத்திற்கு இயற்கையின் கொடை வெட்பாலை.  நாட்டு மருந்துக் கடைகளில் வெட்பாலை எண்ணெய் கிடைக்கும்.

வெப்பாலை என்பது ஒருவகை மரமாகும். இதற்கு வெட்பாலை, நிலப்பாலை, பாலை, நிலமாலை, வற்சம், குடசம் ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இது பழந்தமிழகத்தில் பலை என அழைக்கப்பட்டது.

அமேசானில் வெட்பாலை மட்டும் ஆர்டர் செய்யாமல், கூடவே  எலுமிச்சை மற்றும் மனோரஞ்சிதம் செடிகளையும் ஆர்டர் செய்திருந்தேன்.   மனோரஞ்சிதம் செடிகளைப் பார்க்க கத்திரிக்காய் செடி போன்று இருந்தது.  வளர்ந்தபின்தான் தெரியும் இது வாசம் தரும் மனோரஞ்சிதமா இல்லை அரிப்புத் தரும் கத்திரிக்காய் செடியா என்று ?!

பி.கு:

ஐந்திணைகளில் ஒன்றான பாலை நிலத்துக்குப் பெயர் தந்தது  வெட்பாலை மரம்  என்கிறார்கள். இதிலிருந்தே இந்த மரத்தின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.  கடும் கோடையிலும் தளிரும், மலருமாக இந்த மரம் காட்சி தரும்.  பாலை நில தாவரத்தை மருத நிலத்தில் வளர்க்க முயற்சி செய்கிறேன், பார்ப்போம். 

படம்: எலுமிச்சை மற்றும் மனோரஞ்சிதம் செடிகள். 

#வெட்பாலை
#Wrightiatinctoria
#சொரியாசிஸ்

புதன், அக்டோபர் 26, 2022

பாஸ்கர பட்டேலரும் தொம்மியின் ஜீவிதமும் (விதேயன்)

                      அது கர்நாடகத்தின் தென் கோடி கிராமம். அங்கு ஒரு மிலேக்சன் இருக்கிறான். அவன் அந்த ஊரின் பரம்பரை பணக்காரன், முரடன். என்னேரமும் அடியாட்களோடு வலம் வரும் அவன், கடைத்தெருவில் இருக்கும் அவனது கள்ளுக்கடையில் அமர்ந்து கொண்டு குடித்துக் கொண்டு போகிற வருகிறவர்களை சண்டைக்கு இழுத்து சண்டியர்தனம் செய்வது, பெண்களை சீண்டித் தொல்லை கொடுப்பதுதான் அவனது வேலை. அவனது பெயர் பாஸ்கர பட்டேலர். 
 
அப்படியான அந்தக் கடைத்தெருவிற்கு பஞ்சைப்பராரியான, மாற்றுத் துணிக்கு வழி யில்லாத ஒருவன், அவனது அழகான மனைவியோடு கேரளத்தின் வயநாட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க வருகிறான். அவனது பெயர் தொம்மி.
 
பாஸ்கர பட்டேலரும் தொம்மியும்தான் கதையின் பிரதான பாத்திரங்கள். கதை எப்படி போகும் என்பதை, நீங்கள் ஒருவாறு ஊகித்திருப்பீர்கள்?
 
மலையாள எழுத்துலகின் தனித்த அடையாளம் கொண்ட பால் சக்காரியா எழுதிய 'பாஸ்கர பட்டேலரும் தொம்மியின் ஜீவிதமும்' என்ற நாவல்தான் அது! இக்கதை பிற்பாடு 1993 ல் 'விதேயன்' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்து, தேசிய விருதுகள் உள்பட பல விருதுகளை தட்டிச் சென்றது. 
 
பால் சக்காரியா எழுதிய கதையை செல்லூலாயிட்டில் அப்படியே ஒரு காவியமாக படைத்திருப்பார் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். மம்முட்டியின் மிகையற்ற நடிப்பில் 'விதேயன்' சகாவரம் பெற்றது எனலாம்.
 
படத்தின் தொடக்கமே உங்களை அந்த கிராமத்திற்கு அழைத்து சென்றுவிடும். கள்ளுக்கடையின் வாசலில்.... ஒரு பக்கம் கைப்பிடி இல்லாத நாற்காலி போடப்பட்டிருக்கும். நாற்காலியின் ஒரு பக்கத்தில் ஒரு நீண்ட நாட்டுத் துப்பாக்கி சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். உடைந்த நாற்காலியின் கைப்பிடி ஓரத்தில் வெடி மருந்துகள் அடங்கிய சின்னஞ்சிறிய பை தொங்கிக் கொண்டிருக்கும். 
 
வாழ வழித்தெரியாத நோஞ்சானான 'தொம்மி' ஒரு கடையின் வாசலில் இரு கால்களையும் கட்டிக் கொண்டு சோகத்தில் உட்கார்ந்து இருக்கிறான். கடைத்தெருவில் போகிற வருகிறவர்களை எடவுட்டு பண்ணும் பாஸ்கர பட்டேலருக்கு இப்படியான ஒரு அப்பிராணி கண்ணில்பட்டால் சும்மா விடுவானா...?
 
அவனை வம்படியாக 'இவ்விட வாடா நாயிண்ட மகனே' என்று கூப்பிட்டு அவனை உதைத்து முகத்தில் வெற்றிலை எச்சிலை காறி உமிழ்ந்து விரட்டிவிடுகிறான் பட்டேலர். 
 
பஞ்சம் பிழைக்க வந்த தொம்மிக்கு அழகான மனைவி இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டு, அவனது குடிசைக்குள் புகுந்து அவளை நாசம் செய்கிறான் பட்டேலர். கடைத்தெருவில் அடிவாங்கியதில் அவமானம் தாங்காது எங்கோ திரிந்துவிட்டு இரவில் வீடு சேரும் தொம்மிக்கு, அவனது மனைவி ஓமனாவின் அழு குரல் வரவேற்கிறது. நடந்ததை ஊகித்துக் கொண்ட தொம்மி, மனதளவில் குமைந்து போகிறான்.
 
பிற்பாடு பட்டேலரின் ஆட்கள் "உன்னை பட்டேலர் அழைத்து வரச் சொன்னார்" என்று தொம்மியை அழைக்க..."வரமுடியாது" என்று முரண்டு பிடிக்கிறான் தொம்மி. "பட்டேலரைப் பகைத்துக் கொண்டு இந்த ஊரில் நீ வாழ முடியாது, வா" என்று பட்டேலரின் ஆட்கள் தொம்மியை மிரட்ட...பயந்த சுபாவம் கொண்ட தொம்மி பட்டேலரைப் பார்க்க வருகிறான். 
 
அங்கு தொம்மிக்கும், தொம்மியின் மனைவி ஓமனாவுக்கும் ஆடைகளைத் எடுத்துத் தந்து தொம்மியை தனது கள்ளுக்கடையில் வேலைக்கு சேர்த்து தன்னுடனே வைத்துக் கொள்கிறான் பட்டேலர். அன்றிலிருந்து பட்டேலரின் நிழல் போலவே மாறிவிடுகிறான் தொம்மி. 
 
அடிக்கடி தொம்மியின் குடிசைக்கு பட்டேலர் வருவதும் போவதுமாக இருக்கிறான்.  "உன் மேல் எண்ட எஜமானரின் வாசம் அடிச்சாலும், நீ எனது ஸ்திரி" என்று தனது மனைவிடம் தனது உரிமையை விட்டுக் கொடுக்காது கட்டிப்பிடித்து கொள்கிறான் தொம்மி. 
 
கதை இதற்குப் பிறகுதான் புது ரூட் பிடித்து பயணிக்கிறது. 
 
பட்டேலரின் மனைவி அழகு மற்றும் பொறுமையின் சிகரமா இருக்கிறார். அவரை சரோஜா அக்கா என்று வாய் நிறைய அழைக்கிறான் தொம்மி. பட்டேலரின் அடாவடி நாளைக்கு நாள் அதிகமாகிறது. இதனால் தொடர்ந்து பட்டேலருக்கும் சரோஜாவிற்கும் சண்டை நடக்கிறது. சரோஜாவை தனது இஷ்ட வாழ்விற்கு இடைஞ்சலாக நினைக்கும் பட்டேலர், அவளை ஒரு நாள் கொலை செய்து விடுகிறான். 
 
பட்டேலர் தனது மனைவியை கொலை செய்த செய்தி காட்டுத்தீயாய்ப் பரவ...சரோஜா வின் சகோதரர்கள் ஊர் மக்களோடு சேர்ந்து பட்டேலரின் ஜீப்பைக் கொளுத்தி அவனைத் தாக்குகிறார்கள். போலீஸ் பட்டாளம் குவிக்கப்படுகிறது. அங்கிருந்து தப்பிக்கும் பட்டேலர், தொம்மியின் குடிசைக்குள் வெற்று உடம்போடு மாற்றுத் துணியில்லாமல் தஞ்சமடைகிறான். பசியோடு இருக்கும் பட்லர் தொம்மி குடித்துவிட்டு வைத்தக் கஞ்சியைக் குடிக்கிறான். ஆஜானுபாகுவான பாஸ்கர பட்டேலர் பரிதாபத்திற்குரிய ஒரு மனிதனாக தொம்மியின் முன்னால் நிற்கிறான். 
 
பாஸ்கர பட்டேலராக மம்முட்டியும், தொம்மியாக கோபக்குமாரும் நடித்திருக்கிறார்கள். 
 
ஒட்ட வெட்டிய தலைமுடி, முறுக்கி விடப்பட்ட மீசை என்று மிரட்டலான ஒரு சண்டியராக நடித்திருக்கிறார் மம்முட்டி. அந்த எகத்தாளமான நடிப்பு ஆஸம்! இந்தப் படத்தில் நடித்ததற்காக மம்முட்டிக்கு 1994 ல் தேசிய விருது கிடைத்தது. 
 
அதேபோல் தொம்மியாக நடித்திருக்கும் கோபக்குமாரின் நடிப்பு.... "எஜமானரே" என்று பட்டேலரை அழைப்பதாகட்டும், தனது மனைவியை பட்டேலர் நாசம் செய்துவிட்டான் என்று தெரிந்தும் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று மறுகுவதாகட்டும், பிற்பாடு யுசுப் பாய் பட்டேலரை கொலை செய்ய வெடி குண்டு வீசும் போது அதற்கு துணை நிற்பதும், அதிலிருந்து தப்பித்து காயமுற்று விழும் பட்டேலருக்காக அழுவதாகட்டும் என்று ஒரு எஜமானருக்கு விசுவாசத்துடன் இருக்கும் நம்பிக்கையான வேலைக்காரனாக மம்முட்டிக்கு இணையான ஒரு நடிப்பை வழங்கியிருப்பார் கோபக்குமார்.  படத்தில் மம்முட்டிக்கு மனைவியாக நடித்திருக்கிறார் தன்வீ ஆஸ்மி,  என்னவொரு அழது !!
 
படத்தின் பிரதான கதாபாத்திரமாக 'இருட்டும்' நடித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான காட்சிகள் இருட்டின் துணை கொண்டு நகர்கிறது. அந்த இருட்டிலிருந்து கதை மாந்தர்கள் மெல்ல ஒளிப்பெற்று உயிர் பெறுகிறார்கள். அந்த வித்தையை படம் நெடுக நிகழ்த்தியிருக்கிறார்கள் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனும் காமிராமேன் ரெவி வர்மாவும்.
சில காட்சிகளை புளி போட்டு விலக்காமல், பார்வையாளனின் முடிவுக்கு விட்டுவிடுவது இயக்குநரின் தனி சாமர்த்தியம். 
 
இருட்டையும் தெளிவான வண்ணத்தையும் பூசிக் கொண்டு படம் வெளிவந்து 28 ஆண்டுகள் கடந்தும் 'விதேயன்' திரைப்படம் அழகாக மிளிர்கிறது. 
 
-மபா 
 

சனி, அக்டோபர் 08, 2022

இளையத் தலைமுறைக்கு தமிழர் பெருமை போதிக்கும் பொன்னியின் செல்வன்.


திரும்பிய இடமெல்லாம் பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. மக்கள் சாரி சாரியாக பொன்னியின் செல்வனைப் பார்க்க போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வனை சினிமாவாகப் பார்ப்பது எளிதானது. ஆனால் அதையே புத்தகமாகப் படிப்பது என்பது எளிதானது அல்ல.
மொத்தம் 5 தொகுதிகள். ஒவ்வொரு தொகுதியும் குறைந்தது 450 பக்கங்களுக்கு மேல் இருக்கிறது. இதில் 5 ஆவது தொகுதி மட்டுமே ஏறக்குறைய 900 பக்கங்களுக்கு மேல் வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் அதை ஏக் தம்மில் படிப்பது எல்லாம் முடியாத காரியம். எடுத்தோம் படித்தோம் என்ற பாட்சாவெல்லாம் பொன்னியின் செல்வனிடம் பலிக்காது.
அவ்வளவு நீ.......ளமானது !
நானெல்லாம் பொ. செ. கதையை இரண்டு தொகுதிகளுக்கு மேல் தாண்டவில்லை.
கல்லூரியில் படிக்கும் காலத்தில், எங்கள் பாட்டி பைண்ட் செய்து வைத்திருந்த புத்தகம்தான் கிடைத்தது. அதையும் ஏக கண்டிஷனில் கொடுத்தார்கள். கொஞ்சம் அழுத்திப்பிடித்தால் போதும், அப்படியே அப்பளம் போல் நொறுங்கிவிடும்.
சிறுவயதில் குமுதத்தில் சாண்டில்யனின் கடல்புறா, யவன ராணி, மஞ்சள் ஆறு, மன்னன் மகள் என்று படித்து வளர்ந்தவன் நான். பக்கம் பக்கமாக நீளும் சாண்டில்யனின் அந்த வர்ணனைகள், வார்த்தை பிரயோகம் இருக்கிறதே... அது கற்பனையின் உச்சம் எனலாம் !
சாண்டில்யனின் எழுத்துக்களோடு ஒப்பிடும் போது, கல்கியின் எழுத்து நடை சாதாரணமாகத்தான் தெரிகிறது. அன்றைய நாட்களில் கல்கியின் எழுத்து நடையை விமர்சித்தவர்களும் இருக்கிறார்கள். பெரிய கவித்துமான மரபார்ந்த தமிழ் கொஞ்சி விளையாடும் எழுத்தெல்லாம் கல்கியிடம் இல்லை. கல்கியின் எழுத்து நடை எளிமையானது, எளியவர்களுக்கும் புரியும் படி இருக்கிறது. ஒரு வகையில் அதுதான் அதன் வெற்றியோ.... என்னவோ ?!
"தூய தமிழ்ச் சொற்களைத் துருவித் தேடுவதுமில்லை. வடமொழிச் சொற்களென்று தூர விலகியோடுவதுமில்லை. மிகத் தெளிவான நடை, உணர்ச்சி ததும்பும் நடை. வாசகர்களை உடன் கொண்டு செல்லும் நடை. சந்தர்ப்பத்திற்கும் பாத்திரங்களுக்கும் தக்க நடை. இக்காலத்துள்ள வசனகர்த்தர்களுள் முன்னணியில் நிற்பவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி என்கிறார் பேராசிரியர் வையாபுரி பிள்ளை அவர்கள்.
ஆனந்த விகடனில் பணிபுரிந்த கல்கி பிற்பாடு அதிலிருந்து வெளியேறி, கல்கி என்ற இதழைத் தொடங்கினார். கல்கி இதழை மக்கள் மத்தியில் பிரபலமாக்கவே அவர் 'பொன்னியின் செல்வன்' என்ற வரலாற்று நெடுந்தொடரை எழுதினார் என்பார்கள். அவர் கணித்தது பொய்யாக்கவில்லை !
1950 லிருந்து 1954 வரை கல்கியில் வெளிவந்த பொன்னியின் செல்வன் மக்களிடையே மகத்தான வரவேற்பை பெற்றது.
****************************************
ன்றளவும் என்னை பிரமிக்க செய்வது 'பொன்னியின் செல்வன்' என்ற அந்தக் காரணப் பெயர்தான். பொதுவாக வரலாற்று கதைகளுக்கு வீரம் செறிந்த பெயர்களையே வைப்பார்கள். தமிழகத்தில் ஓடும் மற்ற எந்த நதிகளைவிடவும், தமிழகத்தின் 'ஜீவ நதி' என்றால் அது காவிரியைத்தான் குறிக்கும். அப்படிபட்ட தமிழகத்தின் ஜீன் (மரபு) நதியான காவிரியின் இன்னொரு பெயர்தான் பொன்னி நதி.
"வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசைத் திரிந்து தெற்கேகினும்
தற்பாடிய களி உணவின் புள்தேம்பப் பயன்மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத்தலைஇய கடற்காவிரி "
என்று பட்டினப்பாலை காவிரியின் தொன்மையைப் போற்றிப் புகழ்ந்ததும்...
'கோள் நிலைத் திரிந்து கோடை நீடினும்
தான் நிலைத் திரியா தண்டமிழ்ப் பாவை'
என்று பிற்பாடு மணிமேகலை காவிரியின் மேன்மையை மேற்கண்டவாறு பதிவு செய்ததையும்...
இற்றைய நூற்றாண்டில்....
"தென்னகமாம் இன்பத்திரு நாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனி வயிற்றில்
கருவாகி தலைக்காவிரி என்னும் தாதியிடம்
உருவாகி வண்ணம் பாடி ஒரு வளர்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணை கடந்து நலம் பாடி
ஏர் வீழ்ச்சி காணாமல் இருக்க
சிவசமுத்திர நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்...
வீடு தாண்டாக் கற்பு விளங்கும் தமிழ்மகள் போல்
ஆடு தாண்டும் காவிரியாய் அடங்கி நடந்து
அகண்ட காவிரியாய்ப் பின் தவழ்ந்து
கரிகாலன் பேர் வாழும் கல்லணையில்.. கொள்ளிடத்தில்..
காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து
தஞ்சை வள நாட்டைத் தாயாகி காப்பவளாம் தனிக் கருணைக் காவிரி போல்..."
என்று செம்மாந்து புலவர் புலமைப்பித்தன் இருமாந்து பாடி மெய்சிலிர்த்தை நாம் எப்படி மறக்க முடியும் ?!
காவிரியின் வளம் கொழிக்கும் வண்டல் போல... தமிழகத்தின் பெருமைமிகு 'சோழ சாம்ராஜ்யம்' தோன்றி வளர்ந்ததும், தமிழ் பெருநிலத்தின் பேரரசன், ராஜராஜ சோழன்
உலகை வென்றதும் இந்த காவிரியின் கரையில்தான். இதனாலேயே.... வரலாற்று தொன்மையாலும், வளத்தாலும் பீடு நடை போடும் பொன்னியின் பெயரையே, தனது புதினத்திற்கு வைத்திருக்கிறார் கல்கி.
***************
ஆடித் திருநாள் என்ற முதல் அத்தியாயம் தொடங்கி, இக் கதையின் கடைசி அத்தியாயமான மாயமோகினி வரை மொத்தம் 57 அத்தியாயங்கள் வருகிறது.
கிட்டத்தட்ட 70 வருடங்களுக்குப் பிறகு இப் புதினம் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது. பொ செ திரைப்படம் தயாரிப்பில் இருக்கும் போது எந்த பரப்பரப்பும் தெரியவில்லை. ஆனால் படம் வெளி வந்தப்பிறகு தீ பற்றிக்கொண்டு விட்டது.
படத்தைப் பார்த்துவிட்டு சோழர்களின் சுவடுகளைப் பார்க்க ஆவலாக சுற்றுகின்றனர். பழையரை என்ற ஊர் எங்கு இருக்கிறது என்று இணையத்தில் தேடிதுலாவுகின்றனர்.
என்ஜோட்டு வயதில் பொன்னியின் செல்வன் வாசிக்கும் போது, பழையாறை எங்கிருக்கிறது என்று தீவிரமாக தேடியிருக்கிறேன். சீர்காழிக்கு அருகில் இருக்கும் பழையாரா ? இல்லை இன்றைய முசுரியா? என்றெல்லாம் தேடியிருக்கிறேன். கும்பகோணத்திற்கு தெற்கு மேற்கில் இருக்கும் புறநகர் பகுதிகளான , பட்டீஸ்வரம், தாராசுரம் போன்ற ஊர்களின் தொகுப்புதான் பழையாறை என்கிறது விக்கிப்பீடியா.
இன்றைய இளம் தலைமுறை தமிழர்கள் தங்களின் இனப்பெருமை இன்னதென்று அறிந்து கொள்வது அவர்களின் வாழ்வியல் கடமையாகும். அதை அறியத்தருவதில், தமிழரின் காதலையும் வீரத்தையும், வாழ்தலையும் வாழ்வித்தலையும் சுவைப்படக் கூறுவதில் பொன்னியின் செல்வன் புதினம் தனித்துவமான இடம் பிடித்திருக்கிறது. திரைப்படம் அதை இன்னும் உயரே கொண்டு போய் இருக்கிறது.
-மபா
08.10.2022

வெள்ளி, ஆகஸ்ட் 26, 2022

பார்சி சமூகத்தின் குறைந்து வரும் மக்கள்தொகையை இந்தியா எவ்வாறு திருப்ப முடியும்?

ன்லைன் டேட்டிங் மூலம் பார்சி மேட்ச்மேக்கிங்கை எளிதாக்க இந்திய அரசாங்கம் விரும்புகிறது. ஆனால் சில பார்சிகள் மக்கள்தொகை பிரச்சனை பெண்களை விலக்கும் பார்சி அடையாளத்தின் பாரம்பரிய வரையறைகளில் வேரூன்றியுள்ளது என்று கூறுகிறார்கள்.


பார்சி ஆண்களும் பெண்களும் சந்திக்கவும், திருமணம் செய்யவும் மற்றும் குழந்தைகளைப் பெறவும் உதவுவதன் மூலம் பார்சி சமூகத்தின் "குறைந்து வரும் மக்கள்தொகையை மீட்டெடுக்க" உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஆன்லைன் டேட்டிங் தளத்தை இந்திய அரசாங்கம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

டேட்டிங் சேவை என்பது தகுதியான பார்சிகளை ஒன்றிணைக்கும் முதல் முயற்சி அல்ல. 2013 ஆம் ஆண்டில், இந்தியா "ஜியோ பார்சி" (பார்சிகள் வாழ்க) திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கில் தொடர்ச்சியான பார்சி கலாச்சார முயற்சிகளை தொகுக்கிறது.

பார்சி இளைஞர்களுக்கான விடுமுறை நிகழ்ச்சிகள் மற்றும் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான கலாச்சார நிகழ்வுகள் சமூகம் மற்றும் ஒன்றுகூடல் ஆகியவை இதில் அடங்கும்.

2011 இல் எடுக்கப்பட்ட சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1941 இல் சுமார் 114,000 ஆக இருந்த இந்தியாவின் பார்சி மக்கள் தொகை சுமார் 50,000 ஆகக் குறைந்துள்ளது.

பார்சிகள் இந்திய துணைக் கண்டத்தில் உள்ள ஒரு இனமதக் குழுவாகும், அவர்கள் ஜோராஸ்ட்ரியனிசத்திற்கு குழுசேர்ந்துள்ளனர்.

தகுதியுள்ள பார்சிகளில் சுமார் 30% தனிமையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன, மேலும் கருவுறுதல் விகிதம் ஒரு ஜோடிக்கு 0.8 குழந்தைகள் மட்டுமே. 300 பிறப்புகளுடன் ஒப்பிடும்போது ஆண்டுதோறும் சராசரியாக 800 பார்சிகள் இறக்கின்றனர் என்று இந்தியாவின் PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"செலவுகள் அதிகரிப்பதாலும், உங்கள் எல்லா வளங்களையும் ஒற்றைக் குழந்தை மீது செலுத்த விரும்புவதாலும், ஒரு தம்பதியினர் ஒரே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்யலாம்" என்று மும்பையைச் சேர்ந்த ஒரு குழந்தையைப் பெற்ற பார்சி இனத்தைச் சேர்ந்த சைரஸ் தபார் DW இடம் கூறினார். "ஆனால் எப்போதும் சில உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள், நீங்கள் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளைப் பெற வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்."

இந்தியாவின் பார்சிகள் யார்?

தற்கால இந்திய பார்சிகள் சசானிட் ஈரானில் இருந்து பாரசீகர்களின் வழித்தோன்றல்கள் ஆவர், அவர்கள் 7 ஆம் நூற்றாண்டில் அரேபிய முஸ்லீம்களால் பெர்சியாவைக் கைப்பற்றிய பின்னர் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர். பார்சி மதம், ஜோராஸ்ட்ரியனிசம், உலகின் பழமையான ஒழுங்கமைக்கப்பட்ட மதங்களில் ஒன்றாகும், அதன் வேர்கள் பண்டைய பெர்சியாவில் உள்ளன. 

 

மும்பையில் உள்ள பார்சி மதப் பள்ளி மாணவர்கள்
பார்சிகள் பொதுவாக மேற்கு இந்திய மாநிலங்களான குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் குடியேறினர், ஆனால் சில சமூகங்கள் நாட்டின் பிற பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றன.

சில பார்சிகள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுக்கும் சென்றனர். பார்சிகள் ஒரு நெருக்கமான சமூகம், மேலும் சில சமூக உறுப்பினர்கள் தொண்டு அறக்கட்டளைகள் மற்றும் நன்கொடைகள் மூலம் நவீன இந்தியாவைக் கட்டியெழுப்ப உதவிய பெருமைக்குரியவர்கள்.

தொழிலதிபர் ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர்; மற்றும் ஆதார் பூனவல்லா, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி. சர்வதேச அளவில், ஒருவேளை நன்கு அறியப்பட்ட பார்சி பிரித்தானிய இசைக்குழு குயின் பாடகராக இருந்த ஃப்ரெடி மெர்குரியாக இருக்கலாம்.

பார்சி ஆணாதிக்கம் தான் பிரச்சனையா?

பெற்றோர் இருவரும் பார்சிகளாக இருக்கும்போது ஒருவர் பொதுவாக பார்சியாகக் கருதப்படுகிறார்.

ஜியோ பார்சி தம்பதிகளுக்கு குழந்தை பராமரிப்பு உதவி மற்றும் இன்-விட்ரோ கருத்தரித்தல் போன்ற இனப்பெருக்க சிகிச்சைகள் உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது.

மதத்திற்கு வெளியே திருமணம் செய்து கொள்ளும் பார்சி பெண்கள் சமூகத்தின் 
ஒரு பகுதியாக பார்க்கப்படுவதில்லை


இருப்பினும், சமூகத்திற்கு வெளியே திருமணம் செய்து கொண்ட பார்சி பெண்களுக்கு கருவுறுதல் சிகிச்சைகள் கிடைக்காது. பல பார்சிகள் தங்கள் சமூகத்தை உள்ளடக்கியதாக வரும்போது ஆழ்ந்த ஆணாதிக்க சமூகம் என்று விமர்சிக்கின்றனர்.

"ஆண்கள் தாங்கள் விரும்பும் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம், இன்னும் பார்சியாகவே கருதப்படுவார்கள். ஆனால் ஒரு பெண் சமூகத்திற்கு வெளியே திருமணம் செய்து கொண்டால், அவள் வெளியேற்றப்படுகிறாள்" என்று ஒரு இந்து ஆணை மணந்த பார்சி பெண்ணான கெர்மின் போட் DW யிடம் தெரிவித்தார்.

"பெண்கள் நம்பிக்கைக்குள் இருந்துகொண்டு, தன் குழந்தையை ஜோராஸ்ட்ரியனாக வளர்க்க விரும்பினாலும், அவளால் முடியாது. ஏனென்றால், சமூகம் உங்களை 'பர்ஜாத்' அல்லது வெளியாள் என்று ஆணையிட்டுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

பார்சியாகக் கருதப்படுபவர்களில் அந்த விறைப்பு வருங்கால சந்ததியினருக்கும் பரவுகிறது.

ரிஷி கிஷ்னானி ஒரு இந்து தந்தை மற்றும் பார்சி தாய்க்கு பிறந்தவர், எனவே பார்சியாக கருதப்படுவதில்லை. அவரும் அவரது பார்சி மனைவியும் தங்கள் மகனை ஜோராஸ்ட்ரிய நம்பிக்கையின்படி வளர்க்க முடிவு செய்தனர்.

"என் குழந்தை தனது நண்பர்கள் அனைவரும் விளையாடும் பார்சி விளையாட்டு மைதானத்திற்கு வரவிடாமல் தடுக்கப்பட்டது, ஏனெனில் அவரது தாய் சமூகத்திற்கு வெளியே திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்து பெண்ணை மணந்த எனது [ஆண் பார்சி] நண்பரின் குழந்தை அங்கு அனுமதிக்கப்படுகிறது. இது சமூகத்தில் நடக்கும் இனவெறி மற்றும் பாலியல் வெறி," என்று அவர் DW இடம் கூறினார்.

கலப்புத் திருமணங்களுக்குப் பிறகு பார்சி பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் எதிர்கொள்ளும் பாகுபாடு குறித்து கிஷ்னானியின் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார். இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.


1908 ஆம் ஆண்டு பம்பாய் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யுமாறும் அந்த புகார் உச்ச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது, இது கலப்புத் திருமணமான பார்சி ஜோராஸ்ட்ரிய ஆண்களின் குழந்தைகளை பார்சிகளாகக் கருதலாம் என்றும், அதே சமயம் கலப்புத் திருமணங்களில் பார்சி ஜோராஸ்ட்ரியன் பெண்களின் குழந்தைகளுக்கு அதே அந்தஸ்தை மறுப்பது என்றும் தீர்ப்பளித்தது. .

மும்பையில், பல பார்சி காலனிகள் உள்ளன, அவை "பாக்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன, அங்கு பார்சிகள் மலிவு விலையில் வீடுகளை வாங்கவும் வாடகைக்கு எடுக்கவும் முடியும்.

நம்பிக்கைக்கு புறம்பாக திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் இந்த வீடுகளில் வாழும் உரிமையை இழக்கின்றனர். சமூகத்தின் சில பகுதிகளில், கலப்புத் திருமணங்களில் இருக்கும் பார்சிப் பெண்கள், அன்புக்குரியவர்களின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வது போன்ற அடிப்படை உரிமைகளையும் இழக்கிறார்கள்.

"சமூகத் தலைவர்கள் பார்சி தந்தையின் குழந்தைகளை அங்கீகரிக்கிறார்கள், ஆனால் தாய்மார்கள் பார்சிகளாக இருப்பவர்களை அடையாளம் காண மாட்டார்கள். இந்த ஏற்றத்தாழ்வை நீங்கள் அகற்றினால், மக்கள் தொகை தானாகவே அதிகரிக்கும்" என்று கிஷ்னானி கூறினார்.


ஆக்கம்: தனிகா காட்போல் (புது டெல்லி)
தொகுத்தவர்: வெஸ்லி ரஹ்ன்.

தமிழில் தொகுப்பு: மபா.

Thanks: DW.com 

திங்கள், ஜூலை 25, 2022

'வெண்ணிற ஆடை' இருட்டிலிருந்து சில உண்மைக் கதைகள்.



எனது புத்தக அலமாரியிலிருந்து மெலிதான ஒரு புத்தகத்தை உருவினேன்; அது சரவணன் சந்திரன் எழுதிய 'வெண்ணிற ஆடை'.
புத்தகம்தான் மெலிதாக இருந்ததே தவிர, உள்ளே உள்ள கதைகள் மெலிதாக இருக்கவில்லை, அவை கணத்துக் கிடக்கின்றன.
 
அக வாழ்வின் இருண்ட பக்கங்களில் வாழும் நிழல் மனிதர்களை இக் கதைகள் படம் பிடித்திருக்கிறது. அவர்கள் சக மனிதர்கள் போன்று நம்மிடையே உலவினாலும், அவர்கள் சக மனிதர்கள் இல்லை. இந்த நிழல் மனிதர்கள் பெரும்பாலும் தங்களது உறவுகள், தங்களுக்கு நெருக்கமானவர்கள் என்று, இவர்கள் மீதே அவர்கள் அறியாமலயே படிந்துக் கிடக்கிறார்கள். சிலர் சுதாரித்து… பதறி உதறி விலகுகிறார்கள். சிலர் அதிர்ச்சியில் செய்வதறியாது சிதைந்துப் போகிறார்கள். 
 
ஒரு கதையை முடித்துவிட்டு அவ்வளவு எளிதாக மற்றொரு கதைக்குள் நீங்கள் சென்றுவிட முடியாது. “இப்படியும் நடக்குமா ….?” என்று நீங்கள் புருவம் உயர்த்திப் பர்க்க, உங்களுக்கு நீண்ட அமைதி தேவைப்படும். அந்த அமைதியே உங்களை ஆசுவசப்படுத்தும். 
 
‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சி சின்னத் திரையில் வெளிவந்தது….. இன் நிகழ்ச்சி கடும் விமர்சனங்களையும், பராட்டுதலையும் ஒருசேர பெற்றது எனலாம். அன் நிகழ்ச்சியின் இயக்குனர்தான் இந் நூலின் ஆசிரியர். “இது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் எழுத்து வடிவமல்ல. தொலைக்காட்சி திரையில் சொல்ல முடியாத பல உண்மைகள் இந்தக் கதைகளில் சொல்லப்படுகின்றன. இதுவும்தான் தமிழ் வாழ்க்கை. இந்த வாழ்க்கையின் விசித்திரங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நம்மிடையே பதில் இல்லை” என்கிறார் இன் நூலின் பதிப்பாளர் மனுஷ்ய புத்திரன். 
 
கதைகள் பெரும்பாலும் மூன்று நான்கு பக்கங்களிலேயே முடிந்து விடுகிறது. கதையாசிரியர், காட்சிப் பட இயக்குநர் என்பதால், எந்த வித நீட்டலுமின்றி உள்ளதை உள்ளப்படிக்கு சொல்கிறார். ஒரு டீ குடிக்கும் நேரத்தில் ஒரு கதையை சொல்லி முடித்துவிடுகிறார். சட் சட்டென்று காட்சிகள் மாறி, நமக்குள் கடத்த வேண்டிய கதையின் வாதையை ஒரு ஷாக் போன்று நமக்குள் பாய்ச்சிவிடுகிறார். 
 
இத் தொகுப்பில் இருபது கதைகள் இருக்கிறது. எந்தக் கதைக்கும் தலைப்பு இல்லை. நீங்களாக ஒரு தலைப்பை கொடுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் கதையில்தான் கதையாசிரியர் எதையும் மூடி வைக்க வில்லையே…..? அப்புறம் எதற்கு தலைப்பு ? மற்றவர் பார்வைக்கு....தலைப்பின்றி கதை திறந்தேக் கிடக்கட்டுமே. 
 
-மபா
 
‘வெண்ணிற ஆடை’
உயிர்மை பதிப்பகம்
பக்கம் 120
விலை ரூ.110/-

புதன், ஜூலை 13, 2022

'காகமும் குடையும் சில கவிதைகளும்' - கவிதைப் போட்டி

 

எங்கள் கல்லூரி  வாட்ஸ்ஸப் குரூப்பில்... இந்தப் படத்திற்கு  கவிதை எழுதச் சொல்லி  எனது கல்லூரி கால நண்பர்கள்  கேட்டார்கள்.  நான் நான்கு  கவிதைகள்  எழுதியிருக்கிறேன்.  
இப் படத்திற்கு  கவிதை எழுத சொல்லி நமது முகநூல் கவி நட்புக்களையும் உரிமையோடு அழைத்திருந்தேன். அவர்கள் எழுதிய கவிதைகள் இதோ.....




**********************
 மபா

1) காற்றறியுமோ...
குடை பிடித்தது
காகமென்று  ?!
**********************
2) மழை நாளில்
காக்கைக்கும் தேவை
குவார்ட்டர்  வாங்க
குடை !
***********************
3) உறவின்றி
தனித்து வாழ்தல்
அந்தோ
காக்கைக்கும்
குடை சாயும்.
******************
4) இரண்டுமே
கறுப்பு
ஒன்று கரையும்
மற்றொன்று
நனையும் !

----------------------------

வரதன் 


மரம் வளர் மனிதா!
குடையே வேண்டாம்.
நானமரக் கிளையாகும்
நீ அமர நிழலாகும்


---------------------------------------------
இன்னாசி பாண்டியன் (Innasi Pandiyan)

படர்ந்திருந்த மரமொன்று
காணாமல் போனதால்
நடு சாலையில் கவிழ்ந்த குடையில் ந
நின்றுகரைந்து கரைந்து தேடுகின்றேன்!!!
எனக்கு நிழல் கொடுக்கும்
அந்த மரத்தைப் போல் மாந்தருக்கு
நிழல் கொடுக்கும் இக்குடை
ஏனோ எனக்கு தர மறுக்கிறது!!!
மரம் வளர்ப்போம்
நிழல் கொடுப்போம்!!!

--------------------------------------------------
ரூபன் ஜாய் (Ruben Jay)

மயிலுக்கு போர்வை தந்தவனே,
இதோ,
காக்கைக்கு குடை கொடுத்தவனைப் பார்,
இவனல்லவா கொடை வள்ளல்.

------------------------------------------------------
விசுவநாதன் கணேசன்  (Viswanathan Ganeshan)

தாத்தாவின் குடை தடுமாறுகையில்
காக்காவுக்கு வைத்த சாதம் செய்த கைமாறு..

-------------------------------------------------------------
-வெங்கட் ராமானுஜன்.

சரிந்த  குடை இங்கே ..
குடைக்கு சொந்தகாரன்  எங்கே ..
வீழ்த்தபட்ட ஜனநாயகம் இங்கே..
காக்க போராடியவன் எங்கே..
தலைகவிழ்ந்த தன்மானம்  இங்கே..
தடியடித்த கொலை செய்த படுபாவிகள் எங்கே..
கரைகிரனே காகம் நான்
கேக்கவில்லையா அதிகாரம் புசிக்கும் பூதர்க்கு ..
குற்றம் செய்கிலா கோவலனுக்கு
நீதிகோரி எரித்தனளே கண்ணகி மதுரையை
குற்றமற்றவர்களின்  மர்ம உறுப்புகள்
சிதைக்கபட கதறிய  
வலிகளின் நடுநிசி ஓலங்களில்  
எரியாமல் ஏன் இருண்டது #சாத்தான்குளம்  ..
கா கா கா கா
எனறால் நான் வருவேன்
வா வா வா வா
எனறாலும் வர ஏன் நீ மறுக்கிறாய் ...
உன் சரிந்த  குடை இங்கே ..
குடைக்கு சொந்தகாரன் நீ எங்கே ..?

பி.கு1 :   

முகநூல் தமிழ் சொத்து  Mahesh Babu Padmanabhan அவர்கள் படம் பார்த்து கவிதை சொல்லும் கேள்விக்காக ..


பி.கு2 :   இறந்த நம் சகோதரர்களுக்கு #JusticeForJayarajAndFenix 🙏🙏


----------------------------
ஷண்முகம் எம்.பி (Shanmukham Mb)

Kuudu kata maram indri thavitha kagathirkaga kudaiyayi kudutha kudaivallal vazhga endru kagam karaithadhu
கூடு கட்ட மரம் இன்றி தவித்த காகத்திற்காக குடையையே கொடுத்த குடை வள்ளல் வாழ்க என்று காகம் கரைந்தது
()()
Shanmukham Mb
Mullaiku theyer kuduthaan paarivalar endha kakaiku kudai kudutan andha koudaivalar
--------------------------------------------
சாண்டியல்யன் (S Sandilyan)

உட்கார்ந்த இடம்
குடையின்
கொடை
()()
--------
காக்கை உட்கார
குடை சாய்ந்தது!!
()()

காக்"கை(யில்)"
குடை
----------------------
பாதையில்
குடை
காகம் உட்கார
எது தடை????
--------------------------
வேடியப்பன்  எம் முனுசாமி (Vediyappan M Munusamy)
..
தாத்தாவின் குடைமீது காக்கா
உட்காந்திருக்கிறது என்றேன்.
தளுதளுத்த குரலில் சொன்னார் பாட்டி..
இல்லை.., தாத்தாவேதான் உட்காந்திருக்கிறார்.
----------------------------------------------------------------------------------
மனோஜ் கிருஷ்ணா (Manoj Krishna)

அர்த்த ராத்திரி
அற்பர்கள் மத்தியில்.....
குடை பிடிக்கத்
தெரியாத காகம்.!
---------------------------------------------
தேவ தேவா (Deva Deva)

மனிதனால்
தூக்கி வீசப்பட்ட
கைக்குடை
அந்த கைக் குடையின்
முதுகெலும்பின் உச்சியில்
ஒரு கருநிறக் காகம்
பார்ப்பதற்கு என்னவோ
விளையாடுவதற்கு
உட்கார்ந்தது போல்
தெரியவில்லை
எல்லாமே தற்காலத்தில்
வினையாகி விட்டது
என்பதை உணர்த்துவதற்காக
உட்கார்ந்து போல் தெரிகிறது !!!
நம்மை விட
சில அறிவு குறைவான
ஆகாயத்துப் பறவைதானே
என்றெண்ணுவதா
அல்லது
புத்தி கெட்ட மனிதனுக்கு
இறைவனால் அனுப்பப்படும் இறுதித் தூதனென்று
எண்ணுவதா
இயற்கையின்
மொழியறிந்தால்
இப்பறவையின்
கூக்குரலை நிச்சயமாய்
நானறிவேன்
தன் இனமே
அழிந்து போகிறதென்கிற
இறுதி செய்தியைச் அறைக்கூவல் செய்கிறதோ
அல்லது
தன் வாழிடங்களை
அழித்துப் போட்ட மானுடனத்தை பார்த்து
உங்களுடன் எப்பொழுதும் வேண்டுமானாலும்
போர் செய்வேன்
என்ற எச்சரிக்கை
தொனியை
உயர்த்துகிறதோ
இப் பூமியில் நடக்கும்
அநீதிகளை கண்டு
இதற்கெல்லாம் காரணம்
இப்பாழாய்ப் போன
மனிதன் தானென்று
கடவுளை நோக்கி
அபயமிடுகிறதோ
மனிதமே...
உன்னால் தலைகீழான இயற்கையின் விதிகளை
என்னால்
நிலைநிறுத்த இயலும்
என்று
சவால் விட்டு அழைக்கிறதோ...
இயற்கையின்
மொழியறிந்தால்
இப்பறவையின்
பாடுகளை நானறிவேன்

---------------------------------------------
கதிரவன் திருநாவுக்கரசு (Kadhiravan Thirunavukkarasu)

குடைக்குள் காகம்..
கரு மேகம்..
மழைக்கு காகமோ , குடையோ..

----------------------------------------------
பாலசுப்ரமணியன் சுதாகர் (Balasubramanian Sudhakar)

லாக்டவுன் நேரத்தில்
யாரும் வெளியில் வராதீர்கள்ன்னு
எச்சரிக்கை செய்கிறதோ,
தனித்திருக்கும் காகம்!!
---------------------------------
ஜான் தம்பிதுரை (John Thambidurai George)

நான் காகம் தானே...
கரைய மட்டும் தான் இயலும்!
குடை சாய்ந்து போனதே இந்த பூமி...
என் செய்வேன்?
---------------------------------------------------
பரமானந்தம் யோகானந்தம் (Paramanandam Yoganandam)

மழை வரும் என்று
நம்பாத மனிதன்
சாலையில் வீசிய குடையை,
நம்பிக்கையுடன்
பிடித்திருக்கும் காகம்.

-------------------------------------------
வித்யா சுரேஷ் (Vidhya Suresh)


தருவில்லா தெரு
குடைக்குள்
கூடடைவோம்
-------------------------------------
பன்னீர் செல்வம் (Panneer Selvam)

மரங்களை
அழித்த மாபாதக செயலில்...கூடே,
எனது குடையாகும்...
உங்களின் குடையோ..கொடையோ...
எமக்கு.கூடாகுமோ..!?!
---------------------------------------------

அகிலா பரணி (Akila Bharani)

குடை இருக்கு...
மழை இருக்கு....
மனுஷன காணோமே...
----------------------------------------------
பிரான்சிஸ் (P.J. Francis)

குடிமகன் விட்டுசென்ற குடைகூட போதையில்
கவிழ்ந்து காக்கை குடித்தனம்
செய்யும் இடமானது
----------------------------------------

எ.ராஜமாணிக்கம்  வழக்கறிஞர்.

மழையின் கரங்கள்
பூமியை அறைந்து கொண்டிருக்க...
வானத்தின் கண்ணீரில்
நிலை தடுமாறிய குடை....
நீதிகேட்டு வானத்தை
நோக்கி
வழக்காடும்
காகம்......
------------------------------------

எனது வேண்டுகோளை ஏற்று கவிதைப் படைத்த நண்பர்கள் அனைவருக்கும் இனிய நன்றியும் பேரன்பும்!

அன்புடன்
தோழன் மபா.

வெள்ளி, ஜூலை 08, 2022

இசைஞானி இளையாராஜாவோடு ஒரு மஹா சந்திப்பு !

           

'எனது  வாழ்நாளில் இருவரிடம் புகைப்படம்  எடுத்துக் கொள்ள வேண்டும்  என்று  நினைத்திருந்தேன், ஒன்று  தலைவர் கலைஞர்,மற்றொருவர்  இசைஞானி இளையராஜா'

படத்தில் இளையராஜாவோடு நான்
முகநூல் மீள் பதிவு !
 
        மார்க்கெட்டிங்  வேலையில் இலக்குகளை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கும்  நமக்கு, மிக அரிதாக ஆசிர்வதிக்கப்பட்ட நாளொன்று அமையும்!   

அப்படியான நாளாக நேற்றைய  முன் தினம் இசை மாமேதை, இசைஞானி  இளையராஜா  அவர்களை  அலுவல் நிமித்தமாக  சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. 

ஊடகத்தில் பணி புரிபவர்கள் பிரபலங்களை கண்டால் பெரிதும்  அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.  ஏன் பிரஸ் மீட்டில் கூட கை தட்ட மாட்டார்கள்.  அப்படியான  மரபு இங்கு  கடைபிடிக்கப்படுகிறது. 

இதெல்லாம் செய்தியாளர்களுக்கு மட்டும் என்றில்லை,  என்னை போன்ற மார்க்கெட்டிங் மனிதர்களுக்கும் இது பால பாடம். 

நிற்க. 

எனது  வாழ் நாளில் இருவரிடம் புகைப்படம்  எடுத்துக் கொள்ள வேண்டும்  என்று  நினைத்திருந்தேன்.  ஒன்று  தலைவர் கலைஞர்,
மற்றொருவர்  இசைஞானி இளையராஜா. 

தலைவர்  கலைஞரோடு அப்படியான  வாய்ப்பு  அமையவில்லை.  முயற்சி செய்திருந்தால் புகைப்படம்  எடுத்திருக்கலாமோ என்று இப்போது நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.   
காலம் கடந்து விட்டது.

இசைஞானி அவர்களை சந்திக்க வேண்டும்  என்ற எனது கனவில்... காலம் என்னை கை விடவில்லை.  கையை பிடித்து  அவரிடமே அழைத்து  போய் விட்டது. 

அப்போதுதான்  தியானம் முடித்து  வந்து அமர்ந்திருந்தார். அன்றலர்ந்த மலர் போன்றும், கரு நீல கண்ணன் போன்றும், மயக்கும் இசையால் எம்மை உட்கொண்ட மாயக்காரன் போன்றும் அமர்ந்திருந்தார்.

 
எத்தனை எத்தனை  ராகங்கள், எத்தனை எத்தனை  வசீகரப் பாடல்கள்,  எத்தகைய இடரிலும், ஒற்றை நொடியில் நம்மை அக் காலகட்டத்திலிருந்து மீட்டெடுக்கும்  வல்லாதிக்க இசையல்லவா ராக தேவனின்  இசை!

அவ்விசை; நம்மை உயிர்ப்புடன்  இயக்கும் விசை !  

சந்திப்பு முடிந்த தருணத்தில்,  அவரோடு புகைப்படம்  எடுத்துக் கொண்டோம். அன்று உலக புத்தக  தினம் என்பதால் எனது #மறுதாம்பு  கவிதை தொகுப்பை கொடுத்தேன். வாங்கிக் கொண்டார். 

முடிவில்லா  இரவுகளிலும், நெடுந்தூரப் பயணங்களிலும் நம்மோடுதானே  இம் மனிதர் இசையாய்  இணைந்து பயணித்திருப்பார்?! 

பிரமிப்பும்  ஆச்சரியமும் கட்டித் தழுவ, அப்படியே  சொக்கிப் போய்.... பிரசாத் ஸ்டுடியோவுக்கு வெளியே  இருந்த டீ கடையில் லைட்ஸ் ஒன்றை வாங்கி மிதப்பாய் உள்ளிழுக்க... அருகிலிருந்த  மரத்திலிருந்து மிளகு சைஸ் மஞ்சள்  பூக்கள்  என் மீது ஆசிர்வாதமாய் பூச் சொறிந்தன. 
 
-

#இளையராஜா

செவ்வாய், ஜூலை 05, 2022

தருணம் ! கவிதை

ருணம்

முற்றிலும் வேறாயிருந்த ஸ்பரிசத்தை 

கண்டுணரும் தருணத்தில்... 

காதலும் காமமும்

 நம்முன் படையலிடப்படுகிறது! 

அன்னப் பறவையென உருமாறும்-

அத் தருணத்தில் இருக்கிறது

 நமக்கான வாய்ப்பு !

 -மபா

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...