வியாழன், மே 14, 2015

கூட்டுத் தொகையில் கோட்டைவிட்ட குமாரசாமி!.

           
            எந்த ஒரு நீதி மன்றத் தீர்ப்பும் இந்த அளவிற்கு கேலிக்கும் விமர்சனத்திற்கும் ஆளாகியதில்லை. இரண்டு நாளுக்கு முன்னர் நீதிபதி குமாரசாமியால் அதிரடியாக வழங்கப்பட்ட தீர்ப்பு சமூக வலைத்தளங்களிலும், இணையத் தளங்களிலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கடந்த 19 வருடங்களாக நடைபெற்ற வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் (இந்த வார்த்தையை ஏனோ...நிறைய ஊடகங்கள் தவிர்த்து வருகின்றன) 919 பக்கத்தில் கடைசி இரண்டு பக்கங்கள் மட்டும் படித்து, 19 நிமிடத்தில் சிறை தண்டனை மற்றும் 100 கோடி அபராதத்திலிருந்து ஜெயலலிதாவை விடுவித்துள்ளார் குமாரசாமி.

இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்த ஊழலுக்கு நிச்சயம் தண்டனை உண்டு என்ற மனப்பான்மையில்தான் பெருவாரியன மக்கள் இருந்தனர். இப்படி ஒரே அடியாக விடுதலை செய்வார்கள் என்று அவர்கள் ஒரு போதும் நினைத்துப் பார்க்கவில்லை..
கடந்த செப்டம்பர் மாதம் நீதிபதி குன்ஹா மாய்ந்து மாய்ந்து தீர்ப்பு சொல்லியதை ஒரே அடியில் வீழ்த்தி இருக்கிறார் குமாரசாமி.

வருமானத்திற்கு அதிகமாக 20 சதவீதம் வரை கூடுதலாக சொத்து சேர்க்கலாம் என்ற முந்தைய தீர்ப்புகளின் (CASE LAW) படி 10 சதவீதம்தான் சொத்து சேர்த்து இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு ஜெயலலிதா உட்பட நால்வரையும் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்திருக்கிறார் குமாரசாமி!.
இவர் கூறிய அந்த 10 சதவீதம்தான் தற்போது பிரச்சனைகளுக்கு   வித்திட்டிருக்கிறது.

கூட்டுத் தொகையில் கோட்டை விட்ட குமாரசாமி 76.76 சதவீதம் உள்ள அதிகப்படியான சொத்து குவிப்பை வெறும் 8.12 சதவீதம்தான் என்று கூறி மொத்த பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். இதுதான் இன்று பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. சகுனம் சொன்ன பல்லி கழனி பானையில துள்ளி விழுந்த கதையாக மாறிவிட்டது குமாரசாமியின் தீர்ப்பு.
'நீதியை நிதி வென்று விட்டது', 'வழங்கப்பட்ட தீர்ப்பா? இல்லை வாங்கப்பட்ட தீர்ப்பா?' போன்ற விமர்சனங்கள் தற்போது பகிரங்கமாக எழுந்துள்ள நிலையில், தீர்ப்பை விமர்சிக்கும் ஹோஸ்டோக்குகள் முக நூலிலும், கட் செவியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பொதுவாக நீதி மன்ற தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என்று மரபு இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் அவையும் விமர்சனத்திற்கு ஆட்பட்டே இருக்கிறது!. அதுவும் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக தீர்ப்பு கூறிய குமாரசாமியே வெட்கப்பட்டு தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு தறிக் கெட்டு ஓடுவது போல் ஆகிவிட்டது?. இன் நிலையில் தீர்ப்பில் திருத்தம் செய்ய குமாரசாமி முயலுவதாக செய்தி வந்துள்ளது, கவனிக்கதக்கது.

முந்தைய குன்ஹா தீர்ப்பின் போது, மக்களின் அனுதாபத்தை அள்ளிய ஜெயலலிதாவிற்கு, இந்த முறை குமாரசாமியின் தீர்ப்பால் அது மிஸ்ஸிங் என்பதுதான் சோகத்திலும் பெரிய சோகம்.

சனி, மே 09, 2015

ஜெயகாந்தன் குறித்த புகைப்படக் கண்காட்சி!.



இந்திய-ரஷ்ய கலாச்சார நட்புறவு மையம் சார்பில் எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்த புகைப்படக் கண்காட்சி ஆழ்வார்ப்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில்  அண்மையில் நடைபெற்றது.  இதில் 50க்கும் மேற்பட்ட அறிய புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டது.

ஜெயகாந்தன் கம்யூனிச மேடைகளில் களமாடிய பொழுதுகளை மிக அழகாக, மிக சொற்பமான புகைப்படங்களைக் கொண்டு பதிவு செய்திருக்கின்றனர். ஒரு எழுத்தாளராகவே மட்டும் அறியப்பட்ட நமக்கு, அவர் பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர் போலவே காட்சிப்படுத்தப்படுகிறார். அதுவும் சில புகைப்படங்களை பார்க்கும் போது, அது ஜெயகாந்தன் தனா? என்ற பிரமிப்பும் நமக்குள் ஓடுகிறது. 

விளிம்பு நிலை மனிதர்களுக்கான முன்னெடுப்புகளில் சிங்கம் போன்ற அவரது ஆளுமையை அவரது படங்களில் காண முடிந்தது சிறப்பு!.

ஜெயகாந்தனின் 50 ஆண்டுகளான நண்பரான இசைஞானி இளையராஜாவும், ஜெயகாந்தனை நிறைய புகைப்படங்கள் எடுத்திருக்கிறார், அதையும் இப்படி கண்காட்சிப்  படுத்தினால், வாசகனும் ரசிகனும் ஒரு சேர மகிழ்வான், 

 எனது மொபைல் காமிராவால் எடுக்கப்பட்டது,  அந்தளவிற்கு துல்லியமாக இருக்காது. பொறுத்தருள்க!.







போராட்ட களத்தில்


கண்ணதாசன் பக்கத்தில் அது ஜெயகாந்தன் தானே ...?!



வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...