திங்கள், ஜூலை 03, 2017

விபத்து தரும் பாடம் - தோழன் மபா


தினமணியில் வந்த கட்டுரை

By தோழன் மபா  |   Published  in Dinamani on : 29th June 2017 01:46 AM  |

   புனித ரமலான் மாதத்தில் பெரும் தேசிய சோகத்தை சந்தித்திருக்கிறது பாகிஸ்தான். கடந்த ஞாயிற்றுக் கிழமை பெட்ரோல் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து, வெடித்துச் சிதறியதில் ஏறத்தாழ 153 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அது வெறும் சாலை விபத்தாக மட்டும் இருந்திருந்தால், இத்தகைய உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது. அதையும் தாண்டி மனித மனதின் இலவச அல்ப ஆசை ஒரு மாபெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணம் லாகூர் நகரை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றுக் கொண்டு இருந்த பெட்ரோல் லாரி விடியற்காலை 6.30 மணிக்கு டயர் வெடித்ததன் காரணமாக நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.

லாகூருக்கு 400 கீ.மீ. தொலைவிலுள்ள பஹவல்பூர் மாவட்டம், அகமதுபூர் ஷார்கியா பகுதியில் நேரிட்ட இந்த விபத்தில், லாரியிலிருந்த பெட்ரோல் வெளியேறி கிட்டத்தட்ட 25 ஆயிரம் (5500 கேலன்ஸ்) லிட்டர் சாலையின் அருகில் இருந்த வயல்களில் ஆறாக ஓடியது.


கோர விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி
சுற்றி வளைத்த தீ










சுவடுகள்
அருகில் இருந்த கிராம மக்கள் இதைக் கேள்விப்பட்டதும் பெரும் திறளாக, கைகளில் கேன்களுடனும் பெரிய பெரிய டின்களுடனும் வந்து ஆறாக ஓடிய பெட்ரோலை கேன்களில் பிடித்து நிரப்பிக் கொண்டனர்.
இந்த விபத்தைப் பற்றியும் பெட்ரோல் ஆறாக ஓடுவதும் பற்றியும் அருகிலிருந்த மசூதியின் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தகவலும் எச்சரிக்கையும் விடப்பட்டது. மக்கள் பெரும் கூட்டமாக பைக்குகளிலும் வண்டிகளிலும் வந்து பெட்ரோலை பிடிக்க ஆரம்பித்தனர்.

அப்போது பெட்ரோல் லாரி திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த யாரோ ஒருவர் புகைப்பிடிப்பதற்காக தீ குச்சியைப் பற்ற வைத்ததில், காற்றில் ஆவியாக பரவி இருந்த பெட்ரோல் தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த பகுதியில் காற்றில் பரவி இருந்த பெட்ரோல் தீ பற்றி ஒரு நெருப்புக் கோளம் போல் ஆகிவிட்டது.

உடனே ஆவியாகக் கூடிய பெட்ரோல் தனது அடர்த்தியின் காரணமாக காற்றில் அப்படியே பரவி இருக்கும். இத்தகைய விபத்துகளில் கசிந்து ஓடும் பெட்ரோல் அவ்வளவு எளிதில் கரைந்துவிடாது.

இந்த சம்பவத்தில் 25 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் என்பதால் அடர்த்தியும் எளிதில் தீப்பற்றக் கூடிய தன்மையும் அதிகம். அதனால் ஒரு சிறு தீப் பொறி கூட பெரும் சேதத்தை விளைவித்துவிடும். அதுவே நிகழ்ந்திருக்கிறது.
பெட்ரோலை சேகரித்துக் கொண்டு இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தீயில் எரிந்து கரிக்கட்டையாக மாறிவிட்டனர். 130 பேர் 80 சதவீதம் தீக்காயத்தால் முல்தானில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தில் பலர் இந்த விபத்தில் மாண்டிருக்கின்றனர். அங்கிருந்த லாரி, பைக், கார் என்று நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாயின. 

எப்போதும் துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு என்று நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு இது ஆறாத ரணம்.

சுல்கா பீபீ என்பவர் தனது இரண்டு மகன்களை தேடிக் கொண்டு இருக்கிறார். உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கரிக்கட்டையாகக் கிடக்கும் மனித உடல்களில் தனது மகன்களை தேடிக் கொண்டு இருக்கிறார். உடல்களை அடையாளம் காண மரபணு சோதனைக்கு உத்தரவு இட்டிருக்கிறது பஞ்சாப் மாகாண அரசு.
புனித ரமலான் மாதத்தின் கடைசி நாளான ஈதுல் பித்தர் அன்று இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சவூதி அரேபியா போன்ற நாடுகள் ஞாயிற்றுக்கிழமையே ரமலான் பண்டிகையை கொண்டாடிவிட, பாகிஸ்தான் மட்டும் திங்கள்கிழமை கொண்டாட இருந்தது. அதற்குள் இப்படிப்பட்ட துயரம் நிகழ்ந்துவிட்டது.

மக்களின் ஆசையே, மாபெரும் துயரத்தையும், மனித இழப்பையும் கொண்டு வந்திருக்கிறது. பெட்ரோல் இலவசமாக பெறுவதற்காக தங்களது உன்னதமான உயிரை இழந்திருக்கின்றனர். எத்தகைய கொடூரம் இது?
காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து செயலாற்றியிருந்திருந்தால், இத்தகைய உயிரிழுப்பு ஏற்பட்டு இருந்திருக்காது. விபத்து நடந்த சாலையில் போக்குவரத்தை தடை செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் போக்குவரத்தை அனுமதித்திருந்தனர். அதோடு மக்களை விபத்து நடந்த இடம் அருகில் வரவிடாமல் செய்திருக்க வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் செய்திருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாததால், மக்கள் அதிக அளவில் வந்துவிட்டனர்.

போலீஸாரின் அலட்சியத்தால்தான் இப்படிப்பட்ட பெரும் விபத்துகள் நடக்கின்றன. எததெற்கோ கடுமைக் காட்டும் காவல் துறை, இத்தகைய ஆபத்தான விஷயங்களில் மெத்தனமாக இருப்பது வேதனை அளிக்கிறது. அந்த மெத்தனமே மக்களை விபத்து நடந்த இடத்திற்கு அருகில் வரச் செய்திருக்கிறது.

போலீஸாரை குறை சொல்லும் அதே நேரத்தில், மக்களையும் நாம் கண்டிக்க வேண்டும். கசிந்து ஓடுவது பெட்ரோல் என்று தெரிந்தும், இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக பேரல்களை எடுத்துக் கொண்டு வந்தவர்களை என்னவென்று சொல்வது?

நமது நாட்டிலும் இலவச வேட்டி, சேலை வழங்கும்போதும், கோயில்களில் அன்னதானம் வழங்கும்போதும் ஏற்படும் கூட்ட
நெரிசல்களில் பலர் உயிரை இழந்திருக்கின்றனர்.

ஒரு பக்கம் அரசு தரும் இலவசங்களால் மக்கள் சோம்பேறிகளாக மாறிக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் இப்படியான இலவச மனோபாவங்களால் தங்களது விலை மதிக்கமுடியாத உயிரை இழப்பது வேதனையிலும் வேதனை.

இத்தகைய விபத்துகளில் நமக்கான படிப்பினையும் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

-நன்றி தினமணி

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...