ஞாயிறு, நவம்பர் 24, 2013

'செஸ்'- 'இருவரும் பேசாம விளையாடனும்'

 ஒரு நேரடி ரிப்போட்! 

சதுரங்க பலகையில் எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ். 
இதன் மூலமே விளையாட்டில் காய் நகர்த்தலை நாம் காண முடியும். துள்ளியமாக கணிக்க முடியும் Pix. Karthik.



சென்னையில் நடைபெற்ற 'உலக செஸ் சாம்பியன்' போட்டியைக் காண கடந்த 20ம் தேதிதான் செல்லமுடிந்தது. சர்வதேச  சதுரங்க  போட்டி சென்னையில் நடைபெறும் போது, அதை பார்க்கவில்லை என்றால் இந்த உலகம் நம்மை மன்னிக்காது என்று கிளம்பி விட்டேன். அதுவும் நமது எக்ஸ்பிரஸ் நாளிதழ்தான் மீடியா பார்ட்னர் என்பதால், அனுமதி சீட்டோடு உள்ளே செல்வது எளிதாக  இருந்தது. 


பின்னணியில் கண்ணாடி தடுப்பு
இணையத்தில் நேரடி ஒளிபரப்பு
அன்று  ஒன்பதாவது சுற்று நடைபெற்றுக் கொண்டு  இருந்தது. அன்றைய தினம் இந்திய ராஜாவுக்கு அதாவது ஆனந்துக்கு வாழ்வா சாவா போட்டி. அதுவரையில் நடைபெற்ற போட்டிகளில் கார்ல்ஸென்னே முன்னிலை வகித்திருந்ததால், ஆனந்த் கடும் நெருக்கடியில்  விளையாடிக் கொண்டு இருந்தார். இன்று ஜெயித்தால் மட்டுமே ஆனந்த் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் நார்வேயின் கார்ல்ஸென். மிக எளிதாக வெற்றியை முத்தமிட்டுவிடுவார். அதனால் போட்டி நடைபெற்ற ஹையாட் ஹோட்டல் முழுவதும் பதட்டம் நிலவியது.
ஹோட்டல் லாபியில் போட்டி திரையிடப்பட்டது
பார்வையாளர்களை கடும் சேதனைக்கு பிறகே போட்டி நடைபெறும் அரங்கத்திற்கு அனுப்பிக் கொண்டு இருந்தனர்.  மொபையில் போன்,  பை  போன்றவை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதில்லை.  அதனால் அனைத்தையும் அரங்கிற்கு வெளியே வாங்கி வைத்துக் கொண்டனர். அரங்கின்  மேடை போன்ற பகுதியில் நீண்ட கண்ணாடி தடுப்புக்கு அப்பால் இருவரும் விளையாடிக் கொண்டு இருந்தனர். பார்வையாளர்கள் பல அடுக்குகளாக உட்காரவைக்கப்பட்டிருந்தனர். பார்வையாளர்கள் பகுதியில் இருந்து பேசுவது எதுவும் வீரர்களுக்கு கேட்காது. 

போட்டியில் கடுமையான சர்வேதேச விதிகள் கடைபிடிக்கப்பட்டது.

  • இதில் ஒரு ஆச்சரியமான தகவல், போட்டி நடைபெறும் போது இரு வீரர்களும் பேசக் கூடாது. அதே போல் இருவரும் ஒரே நேரத்தில் தேனீர் அருந்த செல்லக் கூடாது.
    குழந்தைகள் விளையாட பெரிய சைஸ் காய்கள்.
  • இருவருமே போட்டி நடைபெறும் ஹையாத் ஹோட்டலில்தான் தங்கி இருந்தனர். இருவருமே தனித்தனி  'லிப்ட்டுகளைத்தான்' பயன்படுத்தினர்.
  • தரைத்தளத்தில் போட்டி நடைபெற, முதல் தளத்தில் சர்வதேச பத்திரிகையாளர்களும் இந்திய பத்திரிகையாளர்களும் சுறு சுறுப்பாய் செய்திகளை அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
    நேரடி ஒளிபரப்பு
  • கடந்த 2011 ஆம் ஆண்டு உலக சதுரங்க கூட்டமைப்பின் தலைவர்   கிர்சன் இல்யும்சிநோவ் ஜெயலலிதாவை  தலைமைச் செயலகத்தில் சந்தித்து 2012 ஆம் ஆண்டுக்கான உலக சதுரங்க சாம்பியன் போட்டியினை சென்னையில் நடத்துமாறு  கேட்டார். தமிழக அரசும் ரூபாய் 20 கோடி இதற்கென ஒதுக்கீடு செய்தாது. .  பின்னர் ரஷ்யா அதிக அளவில் ஏலம் கேட்டதால், 2012ம் ஆண்டு சதுரங்க சாம்பியன் போட்டி ரஷ்யாவில் நடைபெற்றது..
  • 2012 ஆம் ஆண்டுக்கான உலக சதுரங்க வாகையர் போட்டியினை நடத்த தமிழ்நாடு முன் வந்ததைக் கருத்தில் கொண்டு, இந்த (2013) ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் போட்டியினை ஏல முறையின்றி சென்னையில் நடத்த உலக சதுரங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது.
  • உலக சதுரங்க கூட்டமைப்பின் வேண்டுகோளினை ஏற்று, 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக சதுரங்க சாம்பியன்  போட்டியினை சென்னையில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.  
  • இப்போட்டிக்கென ரூபாய் 29 கோடி நிதியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது.  
  • சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நார்வேயின் கார்ல்சனுக்கு வரும் திங்கட்கிழமை அன்று பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
ஹோட்டலில் குழுமியிருந்த சிறுவர்கள் .
  • போட்டி நடந்த தேனாம்பேட்டை ஹயாட் நட்சத்திர ஹோட்டலில் இருந்து 20 நிமிட பயணத்தில் வீட்டுக்குச் சென்று விடலாம் என்றாலும், ஹோட்டலிலேயே தங்கினார் ஆனந்த். தேவையில்லாத நெருக்கடிகளைத் தவிர்க்க ஆனந்த் இந்த வழியைத் தேர்ந்தெடுத்தார்.
மெகா சைஸ் போர்டில் குதூகல ஆட்டம்!.
  • இந்தத் தொடர் தொடங்கும் முன் ஆனந்த்-கார்ல்ஸென் மோதலை, தலைமுறைகளுக்கு இடையிலான மோதல் என்றும், 1972ல் நடந்த பாபி ஃபிஷர்- ஸ்பாஸ்கிக்கு இடையிலான மோதலுடனும் ஒப்பிட்டுப் பேசப்பட்டது. 
  •  "நூற்றாண்டின் போட்டி' என வர்ணிக்கப்பட்ட ஃபிஷர்- ஸ்பாஸ்கி மோதலில் வெற்றிபெற்று, செஸ் உலகில் ரஷியர்கள் மட்டுமே செலுத்தி வந்த ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அமெரிக்காவின் ஃபிஷர். 
சென்னை மெரினா பீச்சில் வைத்திருந்த மெகா சைஸ் சதுரங்க போர்ட்
  •  சமீபத்திய தொடரில் ஆனந்தின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கார்ல்ஸென்.
  •  இந்தியர்களும் செஸ்ஸில் ஆதிக்கம் செலுத்த முடியும் என உலகுக்குப் புரிய வைத்தவர் ஆனந்த். 
  •  ரஷியர்களின் பிடியில் இருந்த செஸ் கோட்டையைத் தகர்த்த முதல் ஆசிய நாட்டுக்காரர்; குறிப்பாக தமிழர் என்பது பெருமைக்குரியது. 
ஹோட்டலின்  அழகிய காட்சிகள் !
ராஜா-ராணி
  •   அன்னிய மண்ணில் சச்சினுக்கு ஆஸ்திரேலியாவில் ரசிகர்கள் அதிகம் என்றால், ஆனந்துக்கு ரஷியாவில் ரசிகர்கள் ஏராளம்.
  • மூளைக்கான விளையாட்டு என்பதால், ஒரு மவுனப் படம் பார்ப்பது போன்றே போட்டி நடைபெறும்.
  •   சென்னையில் நடந்த தொடரில் ஆனந்த் சாதிக்கத் தவறியதை கேரி காஸ்பரோவின் வார்த்தைகளில் சொல்வதானால் "ஆனந்த் தோல்வியடைந்தார்; வீழ்ந்துவிடவில்லை'
  •   திங்கள் கிழமை பகல் 12.15 மணிக்கு நடைபெறும் விழாவில், கார்ல்சனுக்கு செஸ் சாம்பியன் பரிசும், ரூ.8 கோடியே 40 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்படும். 
  • உலக செஸ் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு ரூ.5 கோடியே 60 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
  •  
புகைப்படம் மற்றும் கட்டுரை:  தோழன் மபா. 
தகவல் உதவி : கூகுள், தினமணி.

வெள்ளி, நவம்பர் 22, 2013

தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் !

 புதிய வார்ப்புகள்!


தினமணி தீபாவளி மலர் வேலை தெடங்கியபோதே, இம் முறை வலைப்பதிவர்கள் பற்றி எழுத சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  

தீபாவளி மலர் தயாரிப்புத் தொடர்பாக, மீட்டிங் நடைபெறும். இதில் தினமணி ஆசிரியர், மலர் குழுவினர், விளம்பர பிரிவு, பத்திரிகை விற்பனை பிரிவு, அச்சகப்  பிரிவு போன்ற பிரிவுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு, மலரின் பக்கங்கள் தொடங்கி, எத்தனை பிரதி அச்சிடவேண்டும்,எப்போது சந்தைப்படுத்த வேண்டும், எந்த வகையான அச்சு, பேப்பர் தரம், எத்தனை பக்கம்  விளம்பரம், எடிட் ரேஷியோ போன்றவை விவாதிக்கப்படும்.

இரண்டாம் பக்கம்

இந்த மீட்டிங்கில்தான் வலைப்பதிவர்கள் பற்றி நான் சொல்லபோக, அடுத்து நடக்க இருந்த ஆசிரியர் குழு மீட்டிங்களிலும் நீங்களும் இருங்கள் என்று ஆசிரியர் சொல்லிவிட்டார். வலைப்பதிவர்கள் பற்றிய கட்டுரையையும் நீங்களே எழுதுங்கள் என்று சொல்லிவிட்டார்.  

முதல் பக்கம்
முதல் கட்டமாக எனக்கு தெரிந்த மற்றும் பிரபல 20 வலைப்பதிவர்களின் வலைத்தள  முகவரியை ஆசிரியர் குழுவினருக்கு அனுப்பினேன். (இதில்  கலை, இலக்கியம், சமையல், மகளீர், சினிமா என்று கலந்து வருமாறு பார்த்துக் கொண்டேன்.)   அதிலிருந்து 12 வலைப்பதிவர்களை தேர்ந்தெடுத்து எழுதச் சொன்னார்கள். 

கிட்டத்தட்ட 15 நாள் அவர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டி, புகைப்படங்களைப் பெற்று கட்டுரையை முழுமைப்படுத்தி அளித்துவிட்டேன்.

  தினமணி தீபாவளி மலரில் வரும் என்று எதிர்பார்த்தால், வழக்கம்போல் நமக்கு சனியன் சகடை வேலை செய்தது. இடப்பற்றாக் குறையால் திபாவளி மலரில் அக் கட்டுரை வெளிவரவில்லை.  

எல்லோருக்கும்  போனை போட்டு சிரமத்திற்கு வருந்துகிறோம் என்ற ரீதியில் சொல்லபோக, எல்லோரும் ஓகே என்றார்கள்.

பிறகு வலைப் பதிவர்கள் கட்டுரையை தினமணி கதிரில் வெளியிடுவது என்று எடிட்டோரியலில் முடிவு செய்து,  தயார் நிலையில் இருக்க, மீண்டும் ஒரு ட்விஸ்ட் 4 பக்கத்திற்குப் பதிலாக இரண்டு பக்கம்தான் கிடைத்தது . இரண்டு பக்கம் என்பதால் 12 வலைப்பதிவர்களிலிருந்து 6 வலைப்பதிவர்கள் என்றானது.

மீண்டும் போன்... மீண்டும் எஸ்கியூஸ்....!

அந்தா  இந்தா  என்று கடந்த வாரம் ஞாயிறு (17/11/2013) அன்று தினமணி கதிரில் 'புதிய வார்ப்புகள்' என்ற வலைப்பதிவர்கள் பற்றிய எனது கட்டுரை வெளியானது.  இதில் 'யாழிசை' வலைத்தளம் மட்டும் 'தினமணி ஞாயிறு கொண்டாடத்தில்' முதல் பக்கத்தில் வெளிவந்தது.


இணையத்தில் படிக்க கீழே உள்ள சுட்டியை பயன்படுத்தவும்....
http://epaper.dinamani.com/185393/Kadir/17112013#dual/6/1
http://epaper.dinamani.com/185381/Kondattam/17112013#page/1/1


இக் கட்டுரையின் முக்கிய நோக்கமே  இணைய எழுத்தாளர்களை, அச்சு ஊடகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான். வலைப் பதிவில் வாகை சூடிய அவர்களை அச்சு ஊடகத்தில் அறிமுகம் படுத்தவே இந்த முயற்சி!. 
மிக நேர்த்தியான முறையில் பிரபல எழுத்தாளர்களுக்கு சவால் விடும் வகையில் எழதும் இவர்களது எழுத்துகளே, வருங்காலத்தை ஆள போகிறது.  என்னாலான  சிறு முயற்சி இது. விடுபட்ட வலைபதிவர்கள் பற்றிய கட்டுரை, இனி வரும் வாரங்களில்  ஞாயிறு கொண்டாடத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இம் முயற்சி தொடரும்!.  நிறைய வலைப்பதிவர்களை அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது!.



அன்புடன் 
-தோழன் மபா.

சனி, நவம்பர் 16, 2013

"எதுக்கு சரிபட்டு வரமாட்டேன்னு வடிவேலுக்கு இப்ப புரிஞ்சி இருக்கும்...?”


                 “நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டே” என்ற வடிவேலின் காமெடி நினைவிருக்கலாம். படத்தில் அவரது தந்தை முதற்கொண்டு அவரது தாயார்வரை அவரை “நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டே”, “நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டே” என்று சொல்லி  சொல்லியே தட்டி கழிப்பார்கள். கடைசிவரையில்  எதற்கு சரிபட்டு வரமாட்டார் என்பதையும் சொல்ல மாட்டார்கள்.  ‘எதற்கு சரிபட்டு வரமாட்டேன்’ என்று  தெரியாமல் குழம்பியே,  ஊரைவிட்டு வடிவேல் செல்வது போல் அந்த திரைப்படத்தில் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஒரு உண்மை புலப்படும்.

அரசியல்தான் வடிவேலுக்கு சரிபட்டு வராது.  அது நாள் வரையில் உச்சத்தில் இருந்த ஒரு வடிவேல்  திடிரெண்டு அரசியலில் ஈடுபட்டு, தனது இருப்பை இழந்து இருக்கிறார் என்றால், அரசியல்தானே வடிவேலுக்கு சரிபட்டு வராது!.

மிக தன்னிச்சையான ஒரு காட்சி, உண்மையாகிவிட்டதே என்று வருத்தமாக இருக்கிறது.

எதுக்கு சரிபட்டு வரமாட்டேன்னு வடிவேலுக்கு இப்ப புரிஞ்சி இருக்கும்.

சனி, நவம்பர் 02, 2013

திணிக்கப்பட்ட தீபாவளியும், புறம் தள்ளப்பட்ட பொங்கலும்.

 

                          ஒரு இனம் இருக்க, அந்த இனத்தின் கலாச்சாரம் அழிக்கப்படுவதென்பது, உடல் இருக்க உயிர் பறிக்கப்படுவது போல். அந்த இனத்தின் பழக்க வழக்கங்களும், பண்டிகைகளும் அந்நிய இனத்தின் வருகையால் முற்றிலும் புறம் தள்ளப்பட்டு,  அந்த அந்நிய இனத்தின் பழக்க வழக்கங்களை சுவிகரீத்துக் கொள்வது உலகில் நடவாத ஒன்று.  அப்படியே நடந்தாலும் அது முற்றிலும் மாறிவிடுவதில்லை.
  
'கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி' என்று வாய் கிழிய பேசும் நாம், நமது கலாச்சாரத்தை காவு கொடுத்தது ஏன்?  கட்டுக்கதைகளும், பொய் புரட்டல்களும் நமது மேன்மையை மறைத்து விட முடியுமா...?  யாரோ ஒருவரின் பண்டிகையை நம் பண்டிகையாக நாம் கொண்டாடத்தான் வேண்டுமா....? அதுவும் நமது பண்டிகையை புறம்தள்ளிவிட்டு....?  

அது, இங்குதான் தமிழகத்தில்தான் நடந்துக் கொண்டு இருக்கிறது.


பொங்கலைத் தின்ற தீபாவளி.

தீபாவளி கொண்டாடப்படுவதற்கு முன் தமிழ்நாட்டில், தமிழர் பண்டிகையான பொங்கல் மட்டுமே பிரதான பண்டிகையாக இருந்து  வந்துள்ளது. அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மூன்று நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.  

பழையன கழித்து, அல்லாதவற்றை ஒழித்து, வீடு துடைத்து, வர்ணம் பூசி,  மார்கழி தொடங்கி தை வரை வாசலில்    மாக்கோலம் இட்டு, அதில் பறங்கிப் பூ வைத்து,   அப்போதுதான் அறுவடை செய்த தானியங்களை பொங்கி (சமைத்து), உலகின் முதற்கடவுளான சூரியனுக்குப் படைத்து,  உழுவதற்கு உதவி செய்த அந்த வாயில்லா ஜீவன்களுக்கு (ஆடு மாடு), நன்றி தெரிவிக்கும் விழாவாகத்தான் தமிழன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினான். தமிழர்கள் தங்களது பண்டிகைகளை இயற்கை சார்ந்தே கொண்டாடிவந்தனர் என்பது இயற்கை!.

ஆனால், இடைக்காலத்தில் ஆரியர்களின் வருகைக்குப் பின்னர்தான் எல்லாமே மாறிப்போனது. ஜோதிடம், வானசாஸ்த்திரம், யாகம், பூஜை என்று மன்னர்களிடம் அண்டிப் பிழைத்த  ஆரியர்கள், பிற்பாடு மன்னனை வளைத்து,  மண்னையும் வளைத்தார்கள்.  அவர்களது கலாச்சாரத்தை நம்முல் விதைத்தார்கள்.

அதுநாள் வரை சுமூகமாக போய்கொண்டிருந்த தமிழர்கள் வாழ்வியலில்,  பெரும் மாற்றம் காணத் தொடங்கியது. கலச்சாரா மாறுபாடும் அப்போதுதான் தோன்றியது.  வடபுலத்தார் தங்களுக்குள் கொண்டாடிக் கொண்டிருந்த பண்டிகைகளில், மன்னனை சிறுப்பு அழைப்பாளர்களாக அழைத்தனர்.   பிற்பாடு மன்னனிடம் கூறி  இந்தப் பண்டிகையை எல்லோரும் கொண்டாட வேண்டும், அதற்கு நீங்கள்தான் உத்திரவிட வேண்டும்  என்று ஓதி மண் ஆளும் மன்னன் மூலமாக மக்கள் மனதை மாற்றியிருப்பார்கள்.

பின்னர் சிறுக சிறுக மாற்றம் ஏற்பட்டு தமிழர் பண்டிகையின் முக்கியத்துவம் குறைந்து 'தீபாவளி' முக்கிய பண்டிகையாக மாறியிருக்கும்.


கட்டுக் கதை  தீபாவளி !

'கிருஷ்ண பக்ஷம், அமாவசை திதிக்கு முன்தினம்  சதுர்த்தசி திதி அன்று நடுநிசி காலம் கழிந்து, பிரம்ம மூகூர்த்த காலத்திற்கு முன்பாக நரகாசுரனை, ஸ்ரீ கிருஷ்ண பகவானும் ராதையும் வதம் செய்ததாகவும், இந்த நாளை அனைத்து மக்களும் புத்தாடை அணிந்து குதுகலத்துடன் கொண்டாடி மகிழ வேண்டும் என்று நரகாசுரன் கிருஷ்ணரை வேண்டிக் கொண்டதாக  சொல்லப்படுகிறது.   அதன் விளைவாக தோன்றியதுதான் தீபாவளி என்கிறார்கள். 

ஒரு திருவிழா என்றால் அதில் ஒரு பொருள் இருக்கவேண்டும். ஒரு கருத்து இருக்க வேண்டும் இது எதுவும் இன்றி,  கற்பனையின் உச்சமாகத்தான் தீபாவளி இருக்கிறது.  தின்பண்டம், புத்தாடை, பரிசுப் பொருள், வானவேடிக்கை இதுதான் இத் திருவிழாவை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
போகட்டும்.

அதோடு தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் (எண்ணை குளியல்) , 'கோதார கவுரி விரதம்' போன்றவை கடைபிடிக்கப்  படுகிறது. இதில் எங்கேயாவது தமிழர் பண்பாடு,  கலாச்சாரம் இருக்கிறதா?.  அப்படி இருந்திருந்தால் 'காவேரி, தாமிரபரணி,பவானி,பெரியாறு குளியல்' என்றுதானே இருக்கவேண்டும்.  தீபாவளி பண்டிகை என்பது முழுக்க முழுக்க வடபுலத்தாரின் பண்டிகை. அதற்கும் நமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதுதான் உண்மை.  

நம்மீதும் குற்றம் உண்டு.


'மாற்றான் வீட்டு மல்லிகைக்கும் வாசம் உண்டு' என்றார் அறிஞர் அண்ணா, 

யார் எது சொன்னாலும் அல்லது காட்டினாலும், சிந்திப்பதில்லை.  'ஆவென்று' வாய் பிளக்கும் கூட்டமாக மாறிவருகிறோம்.  ஏன் என்று கேள்வி கேட்பதில்லை, அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், என்று நினைப்பது.  சாதி பாகுபாடுப் பார்த்து பிரிந்தே இருப்பது.

இன்னோரு சக தமிழன் பாதிக்கப்பட்டாலும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. நமக்கு வராமல் இருந்தால் சரி என்று ஒதுங்கி விடுவது. அல்லது ஒதுங்கி வாழ்வது. என்று தமிழனிடம் பட்டியல் போட நிறையவே மைனஸ்  இருக்கிறது. 

என்னதான் பிறர் நம் மீது எதையாவது திணித்தாலும், " உன் சுய புத்தி எங்கேயா போச்சி...?" என்று எவனாவது கேள்வி கேட்டால், மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வைப்பது.  பிறரை குற்றம் சொல்லும் அதே நேரத்தில்,   அதில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை நாம் ஒத்துக் கொள்ளதான் வேண்டும்.


தமிழர் திருவிழாவிற்கும் முக்கியத்துவம் கொடுங்கள்:

ஒரே ஒரு நாள் தீபாவளி பண்டிகைக்கு எத்தனை கோடி பணம் செலவழிக்கப்படுகிறது தெரியுமா. தீபாவளி பண்டிகையில் எங்கேயாவது உண்மைத் தன்மை இருக்கிறதா?. ஒரு கட்டுக் கதைக்கு இத்தனை பெரிய ஆர்பாட்டாமா?. அதைவிட உயிரோட்டமான பொங்கல் பண்டிகைக்கு இந்த முக்கியத்துவம் உண்டா?

தீபாவளிக்கு மாஞ்சி மாஞ்சி புது துணி எடுக்கும் தமிழன், தனது  பொங்கல் பண்டிகைக்கு புதுத் துணி எடுக்கிறானா?. அதைப் பற்றிய சுய சிந்தனைக் கூட  பழந்தமிழன் முதற்கொண்டு சமகால தமிழன் வரைக்கும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அருகில் இருக்கும் மலையாளிகள் தீபாவளி கொண்டாடுவதில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.  ஓணம்தானே அவர்கள பிரதான பண்டிகை. இங்கு மட்டும் ஏன் மாறிபோனது?.

தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை.  பொங்கல் பண்டிகைக்கும் முக்கியத்துவம் கொடுங்கள் என்பதுதான் எனது கேள்வி. தமிழை தாய் மொழியாகக் கொண்ட வியாபாரிகளில் எத்தனை பேர் பொங்கல் பண்டிகைக்கு தள்ளுபடி வழங்குகிறார்கள். அதைப் பற்றிய சிந்தனை வியாபாரிகளிடத்தில் இருக்கிறதா?. அவர்களுக்கு அவர்களது கல்லாப்பெட்டியும் பானை வயிறும் நிறைந்தால் போதும். இதில் இன உணர்வாவது மண்ணங்கட்டியாவது. 'போப்பா, போயி வேலெய பாப்பியா, இக்கிட்டு நின்னுக்கிட்டு பினாத்துகிட்டு இருக்க?' என்று ஒதுங்கி விடுவார்கள்.


காலத்தின் கோலம்

காலம் எப்போதும் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த பூமி எத்தனை யுகங்களைக் கடந்திருக்கும் என்பது நமக்குத் தெரியாமா? ஒரு அறுவடை முடிந்து அடுத்த அறுவடை போன்றதுதான்,   பூமி அழிந்து புத்துயிர் பெறுவது.  நாம் எத்தனையாவது ஈடில் இருக்கிறோம் என்று யாருக்காவது தெரியுமா...!?

இப்படி பதில் தெரியா கேள்விகளுக்கிடையேதான்  மனிதன், தமது கலாச்சாரத்தையும் மொழியையும் காக்க பல காலமாக போராடி வருகிறான்.  போராடும் அதே வேளையில் பிறர் கலாச்சாரத்தையும் அவர்தம் மொழியையும் அந்த இனத்தையும் சிதைக்கவும் தயங்குவதில்லை.  இதில் 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்பதுபோல் யார் கை ஓங்கி இருக்கிறதோ அவனது இனமும் மொழியும் காப்பாற்றப்படுகிறது.

தடுமாறி, தயங்கி, தூங்கிக் கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்ந்துவரும்  ஒரு இனத்தின்  இயல்பு என்பது, நம்மை போலவே  இருக்குமானால், அதுதான் அந்த இன அழிவின் ஆரம்பம்.   அதன் தொடக்கம் வெளியில் தெரியாமல் தொடங்கி, நாம் விழித்துப் பார்க்கும்போது முடிந்து இருக்கும்.


         'உலகில் எதுவும் தானாக  மாறாது 'என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்'. 
                                                                                                                      -தோழன் மபா.
                                                                                                                          மீள் பதிவு!.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...