புதன், ஏப்ரல் 08, 2015

குருபீடம் நோக்கி... வா மணிகண்டன்?



இணைய எழுத்தாளர் வா.மணிகண்டனின் 'லிண்ட்சே லோகன் w/o மாரியப்பன்' மற்றும் 'மசால் தோசை-38 ரூபாய்' ஆகிய இரண்டு நூலுக்கான விமர்சனம் மற்றும் கலந்துரையாடல் யாவரும்.காம் சார்பாக கடந்த ஞாயிறு அன்று டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது. ஒரு அடிப்படை சம்சாரியின் ஞாயிற்றுக் கிழமை சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு கூட்டத்திற்கு சென்று இருந்தேன். அரங்கு நிறைந்திருந்தது.

இப்பொழுதெல்லாம் புத்தக விமர்சனக் கூட்டங்களில் பேச வருபவர்கள் எல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஏடாக் கூடாமா பேசி எதற்கு எழுத்தாளனை இம்சிக்க வேண்டும், என்ற ரீதியில் பொத்தாம் பொதுவாய் பாராட்டி, நாலு வார்த்தை பேசி இறங்கி விடுகின்றனர்.  இந்த கூட்டத்திலேயும் அதுதான் நடந்தது.

ஒரு மனிதனை மேடையில் வைத்துக் கொண்டு அவனை வாய்க்கு வந்தபடி புகழ்வது என்பது, அவனுக்கு அனஸ்தீஸிய கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்வது போன்றது.   அப்படி ஒரு அவஸ்தைக்கு ஆட்பட்டு நாற்காலியில் துவண்டுக் கிடக்கத்தான் முடிந்தது வா.மணிகண்டனால். வந்தவர்கள் எல்லாம் பாராட்டித் தள்ள முகத்தை எப்படி வைத்துக் கொள்வது என்று, இன்னும் வா.மணிகண்டனுக்கு கை கூடவில்லை போலும்?.

இந்த காலமான காலத்தில படிக்க நேரம் இருக்காது என்பதை மிக நன்றாக உணர்ந்து இருக்குகிறார் மணிகண்டன். 'பாஸ்ட் ஃபுட்' வகையை சார்ந்த இவரது எழுத்துகள், மிக எளிதாக ஒரு வாசகனை உள்ளிழுக்கும் சக்தி கொண்டது. பெரிய தரவுகளையோ, சரித்திர ஆதாரங்களையோ, மண்டயை குழுப்பும் வார்த்தை பம்மாத்துகளோ எதுவுமின்றி, 'இந்தா, இதை வாங்கி அந்தப் பக்கம் வை' என்பதுபோல் எளிமையாக கட்டுரை கம் கதை சொல்வதில் இருக்கிறது இவரது வெற்றி!.

அதே நேரத்தில் வா. மணிண்டன் எழுத்தை  விமர்சனம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு?. சொல்லுங்க....?. 

நோயாளர்களை பற்றியோ, அல்லது படிக்க பணம் இல்லாமல் தவிப்பவர்களை பற்றியோ வா.மணிகண்டன் தனது 'நிசப்தம்' வலைத்தளத்தில் எழுதும் போது, அது பொது கவனத்திற்கு வந்துவிடுகிறது.  அதற்கு உதவி செய்ய நிறைய ஆதரவு கரங்கள் நீண்டு விடுகிறது.  அப்படி கிடைக்கப்பெறும் தொகையை சரியான முறையில் பயனாளர்களுக்கு கொண்டு செல்ல ஒரு அறக்கட்டளையையும் ஏற்படுத்தி இருக்கிறார். அதில் தற்போது 10 லட்சம் வரை சேர்ந்திருக்கிறது. வா.மணிகண்டனின் எழுத்து வீச்சிற்கு இந்த பத்து லட்சம் பதம்!.  20 நிமிடத்தில்  ஒரு பதிவை எழுதிவிடுகிறார் என்றால் பார்த்துக்  கொள்ளுங்களேன்!.

விழாவில் இயக்குனர் கவிதா பாரதி, கார்டூனிஸ்ட் பாலா, தம்பி சோழன் கூத்துப் பட்டறை, நாகேஸ்வரன்,சைதை புகழேந்தி, கிருஷ்ண பிரபு ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர். வா.மணிகண்டன் நன்றியுரை நிகழ்த்த, நிகழ்ச்சிகளை ஜீவ.கரிகாலன் தொகுத்து வழங்கினார்.

மற்ற பிரபல எழுத்தாளர்கள் போன்று நீங்களும்  'குரு பீடத்தை' நோக்கி போகிறீர்களா...? என்றொரு முக்கியமான கேள்வியை விழாவிற்கு வந்த ஒருவர் திரும்ப திரும்ப கேட்டார்.  "நான் அப்படி எல்லாம் போகலைங்க. அதிலெல்லாம் விருப்பமும் இல்லைங்க. நான் எழுதுவது 'நிசப்தம்' வாசகர்களுக்காகத்தான்" என்றார் மீண்டும் மீண்டும். ஏதோ "விதை விதைச்சேங்க.....வெள்ளாமை நல்லா வந்தது!" என்று எளிமையான விவசாயி சொல்வது போல் இருந்தது அவரது பேச்சு!.

அதிகம் கவனிக்கப் பெறும் எழுத்தாளனுக்கு 'குருபீடம்' என்பது தவிற்கமுடியாத ஒன்று. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தன்னிச்சையாக அது நிகழ்ந்துவிடும். பாடாவதி சினிமா நடிகனுக்கு கூட அவனது ரசிகர்கள் குருபீடத்தை அமைத்து விடுகிறார்கள். எழுத்தாளனுக்கு அமைத்தால் என்ன பெரிய குடியா மூழ்கிவிடப் போகிறது?. தன்னியில்பாக நிகழ்ந்துவிடும் குருபீடத்தால் எழுத்தாளன் தன்நிலை மறந்தால், அது 'பலிபீடமாக' மாறும் என்பதையும் எழுத்தாளன் உணர்ந்திருக்க வேண்டும்.





வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...