சனி, ஜனவரி 21, 2017

மறுதாம்பு கவிதை நூல் வெளியீடு

சமகால பிரச்னைகளை கவிதைகள் பிரதிபலிக்க வேண்டும்: 

கவிக்கோ அப்துல் ரகுமான்.

 
மறுதாம்பு வெளியீட்டின் போது ... 
இடமிருந்து கவிஞர் வேல் கண்ணன்,   நூல் ஆசிரியர் தோழன் மபா, ஊடகவியலாளர் நாச்சியாள் சுகந்தி, தோழன் மபா வின் தந்தை பத்மநாபன், கவிக்கோ அப்துல் ரகுமான், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், கல்கி வார இதழ் தலைமை துணை ஆசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா. 

      மகால பிரச்னைகளை பிரதிபலிப்பதாக கவிதைகள் இருக்க வேண்டும் என கவிக்கோ அப்துல் ரகுமான் வலியுறுத்தினார்.


கவிஞர் தோழன் மபா எழுதிய "மறுதாம்பு' கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை (02/01/2017) நடைபெற்றது. விழாவுக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்து நூலை வெளியிட, கவிக்கோ அப்துல் ரகுமான் பெற்றுக் கொண்டார்.



பின்னர் விழாவில் கவிஞர் அப்துல் ரகுமான் பேசியது: இந்தக் காலத்தில் சமுதாயத்தில் நடக்கும் அவலம், உண்மைகளைப் பேச யாரும் தயாராக இல்லை என்ற ஆதங்கம் பலரிடையே இருக்கிறது. எது உண்மை என்று தெரியாத நிலையிலேயே பலர் இருக்கிறார்கள். இது பற்றிப் பேசுகையில் "பெரியவங்க பொய் சொன்னா பேப்பரில போடுறான். சின்னவங்க உண்மை சொன்னா ஜெயிலுக்குள்ள போடுறான்' என்று கொத்தமங்கலம் சுப்பு எழுதிய வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.


தான் எழுதிய நூலுக்கு "மறுதாம்பூ' என்ற அற்புதமான பெயரை வைத்த தோழன் மபா தனது மனைவி, தந்தை ஆகியோரையும் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்து கௌரவித்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில், இதுபோன்ற நிகழ்வுகள் இன்று அரிதாகி வருகின்றன. மபா எழுதிய கவிதைகள் எதுவுமே மனைவியை வைத்துக் கொண்டு சொல்வதற்கு தயங்கும் கவிதைகள் இல்லை. ஒரு படைப்பு அப்படித்தான் இருக்க வேண்டும்.


சமுதாய நோக்கம் அவசியம்: கவிதைகளில் நவீனத்துவம் எப்போதோ வந்து விட்டது. சிலர் அறியாமையின் காரணமாக "வசனத்தை ஒடித்துப் போட்டால் புதுக்கவிதை' என்கிறார்கள். அது தவறு. "ஒடித்துப் போடப்பட்ட மனிதர்களைப் பற்றி எழுதுவதுதான் புதுக்கவிதை'. பொதுவாக கவிதைகளில் தற்போதைய பிரச்னைகளைப் பற்றி சொல்வது அவசியம். சமகாலப் பிரச்னைகளை பிரதிபலிக்கும் கவிதைகள்தான் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.


வீழாதததற்கு விருது வழங்க வேண்டும்: புயலில் கீழே விழுந்து கிடக்கும் மரங்களைப் பார்க்கும்போது எனக்கு அழ வேண்டும்போல் தோன்றியது. அதனால் இந்த விழாவுக்கு வருவதற்கு முன்பு "வெறித்தனமாக வீசிய புயலோடு வீராவேசமாக போராடி நின்று கொண்டிருக்கும் மரங்களுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும்' என்று ஒரு கவிதையை எழுதிவிட்டுத்தான் வந்தேன். இன்றைய சூழலில் தென்றலைக் காட்டிலும் புயலைப் பற்றிக் கூறுவதே சரியாக இருக்கும். சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தாத கருத்துகள் இல்லாவிட்டால் கவிதை எழுத வேண்டிய அவசியமே இல்லை.
அந்தக் காலத்தில் தீபாவளி மலரில் மட்டும்தான் கவிதைகள் வெளியாகும். இப்போது கவிதைகள் வெளியாகாத செய்தித்தாள்களே இல்லை. கவிஞர்கள் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதட்டும். அவற்றில் ஒரு கவிதையாவது சமூகத்துக்குப் பயன்பட்டாலே போதுமானது. அன்றாடம் நிகழும் வீட்டுப் பிரச்னைகள், சமூக அவலங்கள் குறித்து ஒருவர் எழுதினால் அவரையும் அவர் கவிதையையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அதுதான் நாம் எழுத்துக்கு கொடுக்கும் மிகப்பெரிய கௌரவம் என்றார் அவர்.


முன்னதாக கல்கி வார இதழ் தலைமை உதவி ஆசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா, கவிஞர் நாச்சியாள் சுகந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அப்போது மறுதாம்பு கவிதை நூலில் இடம்பெற்றுள்ள சமுதாய சிந்தனைகள் கொண்ட கவிதைகளை மேற்கோள் காட்டி விளக்கினர்.


விழாவில் ரஹமத் பதிப்பக உரிமையாளர் முஸ்தபா, கவிஞர் வேல்கண்ணன், மபாவின் தந்தை கே.பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் 

 தினமணி ஆசிரியர் கி.வைத்திய நாதன் உரை:

https://www.youtube.com/watch?v=fbs4ToqQARo

கல்கி வார இதழ் துணை ஆசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா உரை:

 https://www.youtube.com/watch?v=CYBLRKvnd-8&t=21s

கவிஞர் சுகந்தி நாச்சியாள் உரை

https://www.youtube.com/watch?v=ZeHCHHKlIdY 

மனைவியிடம் எதையும் மறைக்ககூடாது - கவிக்கோ அப்துல் ரகுமான் நகைச்சுவை பேச்சு | Kaviko Abdul Rahman

https://www.youtube.com/watch?v=3lgUvNoTZCc


வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...