செவ்வாய், அக்டோபர் 25, 2011

'திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும்'


கங்கைக் கரையில் தீபாவளிக் கொண்டாட்டம்
 
         ஒரு இனம் இருக்க, அந்த இனத்தின் கலாச்சாரம் அழிக்கப்படுவதென்பது, உடல் இருக்க உயிர் பறிக்கப்படுவது போல். அந்த இனத்தின் பழக்க வழக்கங்களும், பண்டிகைகளும் ஒரு அந்நிய இனத்தின் வருகையால் முற்றிலும் புறம் தள்ளப்பட்டு,  அந்த அந்நிய இனத்தின் பழக்க வழக்கங்களை சுவிகரீத்துக் கொள்வது உலகில் நடவாத ஒன்று.  அப்படியே நடந்தாலும் அது முற்றிலும் தன் நிலை மாறிவிடுவதில்லை.
   
'கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி' என்று வாய் கிழிய பேசும் நாம், நமது கலாச்சாரத்தை காவு கொடுத்தது ஏன்?  கட்டுக்கதைகளும், பொய் புரட்டல்களும் நமது மேன்மையை மறைத்து விட முடியுமா...?  யாரோ ஒருவரின் பண்டிகையை நம் பண்டிகையாக நாம் கொண்டாடத்தான் வேண்டுமா....? அதுவும் நமது பண்டிகையை புறம்தள்ளிவிட்டு....? 


பொங்கலைத் தின்ற தீபாவளி.

தீபாவளி கொண்டாடப்படுவதற்கு முன் தமிழ்நாட்டில், தமிழர் பண்டிகையான பொங்கல் மட்டுமே பிரதான பண்டிகையாக இருந்து  வந்துள்ளது. அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மூன்று நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.   

பழையன கழித்து, அல்லாதவற்றை ஒழித்து, வீடு துடைத்து, வர்ணம் பூசி,  மார்கழி தொடங்கி தை வரை வாசலில்    மாக்கோலம் இட்டு, அதில் பறங்கிப் பூ வைத்து,   அப்போதுதான் அறுவடை செய்த தானியங்களை பொங்கி (சமைத்து), உலகின் முதற்கடவுளான சூரியனுக்குப் படைத்து,  உழுவதற்கு உதவி செய்த அந்த வாயில்லா ஜீவன்களுக்கு (ஆடு மாடு), நன்றி தெரிவிக்கும் விழாவாகத்தான் தமிழன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினான். தமிழர்கள் தங்களது பண்டிகைகளை இயற்கை சார்ந்தே கொண்டாடிவந்தனர் என்பது இயற்கை!.

ஆனால், இடைக்காலத்தில் ஆரியர்களின் வருகைக்குப் பின்னர்தான் எல்லாமே மாறிப்போனது. ஜோதிடம், வானசாஸ்த்திரம், யாகம், பூஜை என்று மன்னர்களிடம் அண்டிப் பிழைத்த  ஆரியர்கள், பிற்பாடு மன்னனை வளைத்து,  மண்னையும் வளைத்தார்கள்.  அவர்களது கலாச்சாரத்தை நம்முள் விதைத்தார்கள்.

அதுநாள் வரை சுமூகமாக போய்கொண்டிருந்த தமிழர்கள் வாழ்வியலில்,  பெரும் மாற்றம் காணத் தொடங்கியது. கலாச்சார மாறுபாடும் அப்போதுதான் தோன்றியது.  வடபுலத்தார் தங்களுக்குள் கொண்டாடிக் கொண்டிருந்த பண்டிகைகளில், மன்னனையும் சிறுப்பு அழைப்பாளர்களாக அழைத்தனர்.   பிற்பாடு மன்னனிடம், இந்தப் பண்டிகையை எல்லோரும் கொண்டாட வேண்டும், அதற்கு நீங்கள்தான் உத்திரவிடவேண்டும்  என்று கூறி மண் ஆளும் மன்னன் மூலமாக மக்கள் மனதை மாற்றியிருப்பார்கள். 

பின்னர் சிறுக சிறுக மாற்றம் ஏற்பட்டு தமிழர் பண்டிகையின் முக்கியத்துவம் குறைந்து 'தீபாவளி' முக்கிய பண்டிகையாக மாறியிருக்கும். 



 
கங்கைக் கரையில் தீபாவளிக் கொண்டாட்டம்
கட்டுக் கதை தீபாவளி.

'கிருஷ்ண பக்ஷம், அமாவசை திதிக்கு முன்தினம்  சதுர்த்தசி திதி அன்று நடுநிசி காலம் கழிந்து, பிரம்ம மூகூர்த்த காலத்திற்கு முன்பாக நரகாசுரனை, ஸ்ரீ கிருஷ்ண பகவானும் ராதையும் வதம் செய்ததாகவும், இந்த நாளை அனைத்து மக்களும் புத்தாடை அணிந்து குதுகலத்துடன் கொண்டாடி மகிழ வேண்டும் என்று நரகாசுரன் கிருஷ்ணரை வேண்டிக்கொண்டதாக  சொல்லப்படுகிறது.   அதன் விளைவாக தோன்றியதுதான் தீபாவளி என்கிறார்கள். போகட்டும்.


அதோடு தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் (எண்ணை குளியல்) , 'கோதார கவுரி விரதம்' போன்றவை கடைபிடிக்கப்  படுகிறது. இதில் எங்கேயாவது தமிழர் பண்பாடு,  கலாச்சாரம் இருக்கிறதா? அப்படி இருந்திருந்தால் 'காவேரி குளியல்' என்றுதானே இருக்கவேண்டும். நமது இலக்கியங்களிலும் தீபாவளி குறிப்பிடப்படவில்லை.   

தீபாவளி பண்டிகை என்பது முழுக்க முழுக்க வடபுலத்தாரின் பண்டிகை. அதற்கும் நமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதுதான் உண்மை. 

கங்கைக் கரை இரு மருங்கிலும் தீபாவளி தொன்றுதொட்டு பாரம்பரியமாகக் கொண்டாடப்படுகிறது.  இன்றும் வட இந்தியர்கள் தீபாவளி அன்றுதான் தங்களது வியாபாரத்திற்கு புதுக் கணக்கு தொடங்குகின்றனர்.  நாம் தீபாவளி அன்று புதுக்கணக்கு தொடங்குவதில்லை. இப்படி எல்லாவற்றிலும்  வேறுபாடு இருக்க,  அவர்களது பண்டிகையை நாம் ஏன் வரிந்துக் கட்டிக் கொண்டு கொண்டாடவேண்டும்.



நம்மீதும் குற்றம் உண்டு.


'மாற்றான் வீட்டு மல்லிகைக்கும் வாசம் உண்டு' என்றார் அறிஞர் அண்ணா,  

யார் எது சொன்னாலும் அல்லது காட்டினாலும், சிந்திப்பதில்லை.  'ஆவென்று' வாய் பிளக்கும் கூட்டமாக மாறிவருகிறோம்.  ஏன் என்று கேள்வி கேட்பதில்லை, அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், என்று நினைப்பது.  சாதி பாகுபாடுப் பார்த்து பிரிந்தே இருப்பது.

இன்னோரு சக தமிழன் பாதிக்கப்பட்டாலும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. நமக்கு வராமல் இருந்தால் சரி என்று ஒதுங்கி விடுவது. அல்லது ஒதுங்கி வாழ்வது. என்று தமிழனிடம் பட்டியல் போட நிறையவே மைனஸ்  இருக்கிறது.  

என்னதான் பிறர் நம் மீது எதையாவது திணித்தாலும், " உன் சுய புத்தி எங்கேயா போச்சி...?" என்று எவனாவது கேள்வி கேட்டால், மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வைப்பது.  பிறரை குற்றம் சொல்லும் அதே நேரத்தில்,   அதில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது.

மலையாளிகள் தீபாவளி கொண்டாடுவதில்லை.

திராவிட  மொழி குடும்பத்திலிருந்து பிறந்த மலையாள தேசத்தினர், தங்களது மாநிலத்தில் தீபாவளி கொண்டாடுவதில்லை. அங்கு அவர்களது பண்டிகையான 'திரு ஓணம்' தான்  பிரதானம்.  அவர்கள் ஓணத்தைதான் விமர்சையாக கொண்டாடுகின்றனர்.  அவர்கள் தீபாவளியை திரும்பிக் கூட பார்ப்பதில்லை


அங்கு உள்ள வியாபார நிறுவனங்களும் ஓணத்தை ஒட்டிதான் சலுகைகள் வழங்குகின்றன. அங்கு உள்ள நாளிதழ்கள் 'ஓணம் சிறப்பு மலரை'தான் வெளியிடுகின்றன.  இப்படி பொதுமக்களோடு சேர்ந்து வியாபார நிறுவனங்கள் தங்களது பங்குக்கு ஓணத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன.

ஆனால், இங்கு....?


காலத்தின் கோலம்.

காலம் எப்போதும் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த பூமி எத்தனை யுகங்களைக் கடந்திருக்கும் என்பது நமக்குத் தெரியாமா? ஒரு அறுவடை முடிந்து அடுத்த அறுவடை போன்றதுதான்,   பூமி அழிந்து புத்துயிர் பெறுவது.  நாம் எத்தனையாவது ஈடில் இருக்கிறோம் என்று தெரியுமா...!?

இப்படி பதில் தெரியா கேள்விகளுக்கிடையேதான்  மனிதன், தமது கலாச்சாரத்தையும் மொழியையும் காக்க பல காலமாக போராடி வருகிறான்.  போராடும் அதே வேளையில் பிறர் கலாச்சாரத்தையும் அவர்தம் மொழியையும் அந்த இனத்தையும் சிதைக்கவும் தயங்குவதில்லை.  இதில் 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்பதுபோல் யார் கை ஓங்கி இருக்கிறதோ அவனது இனம்,  மொழி காப்பாற்றப்படுகிறது.


தடுமாறி, தயங்கி, தூங்கிக் கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்ந்துவரும்  ஒரு இனத்தின்  இயல்பு என்பது,  நம்மைப்போல் இருக்குமானால், அதுதான்  இன அழிவின் ஆரம்பம்.   அதன் தொடக்கம் வெளியில் தெரியாமல் தொடங்கி,அதன் அழிவு பகிரங்கமாக முடிந்துபோகும்.

நமது இன்றைய நிலை மேலே சொன்னதுபோல்தான்.   நாம் எதையும்  காது கொடுத்துக் கேட்க தயாரில்லை எனும்போதும், இது என்ன பத்தாம் பசலித்தனம் என்று புருவம் உயர்த்தும்போதும் , நம்மை அரியாமலேயே நாம்  எதையும் 'காவு' கொடுக்கத் தயாராகிவிடுகிறோம்.   நம்மையும் சேர்த்து....?!

 'உலகில் எதுவும் தானாக  மாறாது 'என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்'.

ஞாயிறு, அக்டோபர் 23, 2011

வாழ்த்துகளா.... இல்லை வாழ்த்துக்களா, எது சரி....? ' விவாதம் தொடர்கிறது.



இன்னுமா 'கள்' மயக்கம் தெளியவில்லை....?





கடந்த வாரம் தினமணி தமிழ் மணியில் ப.குருநாதன் எழுதிய   'கள்' மயக்கம் தெளியுமா...?' என்ற கட்டுரையை  ' வாழ்த்துகளா.... இல்லை வாழ்த்துக்களா,  எது சரி....? ' என்ற தலைப்பில் தமிழன் வீதியில்   மறுபிரசுருத்திருந்தேன்.   இந்த வாரம்  தினமணி தமிழ்மணியில் அதற்கு மறுப்பு தெரிவித்து 'முகில் தமிழ்செல்வன் 'கள் மயக்கம். மரபு வழி நின்றலே மாண்பு' என்ற தனது கட்டுரையை  சமர்பித்துள்ளார். 

இதில் ப.குருநாதன் எழுதிய கட்டுரை தவறு என்று பல வழிகளில் நிருபித்துள்ளார்.  அவர் மேற்கோள் காட்டிய உதாரணங்கள் நம்மை அசர வைக்கின்றன.

விவாதத்தின் மீது 'கிளிக்' செய்து பெரிதுப்படுத்திப் படிக்கவும்.






'பாவம்... இதில் சரியான முடிவுத் தெரியாமல் முழிப்பது நாம்தான்!'

   
நன்றி: தினமணி.

ஞாயிறு, அக்டோபர் 16, 2011

வாழ்த்துகளா.... இல்லை வாழ்த்துக்களா....? எது சரி....?






 
வாழ்த்துகளா....? இல்லை வாழ்த்துக்களா....? எப்படி எழுதுவது என்று ஒரு சந்தேகம் இருந்துவந்து.    இன்று காலை தினமணி  'தமிழ்மணியில் ' வந்த  கட்டுரை என் சந்தேகத்தை நிவர்த்திச் செய்தது.

இதோ, உங்களுக்காக.....!


 ()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
 நன்றி:தினமணி.

சனி, அக்டோபர் 15, 2011

ஊருக்கு உழைக்கக் கூடியவர்களுக்கு வாக்களியுங்கள்.


"ஊருக்கு உழைக்கக் கூடியவர்கள் உங்கள் ஊரிலும் இருப்பார்கள்,  அவர்களுக்கு வாக்களியுங்கள்.  அவர்களை  தேர்ந்தெடுங்கள். !"     


இதோ நெருங்கிவிட்டது உள்ளாட்சி தேர்தல்.  கடந்த  சட்டமன்ற தேர்தலின் போது இருந்த கெடுபிடி அவ்வளவாக இந்த தேர்தலில் இல்லை.   திரும்பிய திசையெல்லாம் விழாக்கோலம் பூண்டு, மைக், ஸ்பீக்கர் கட்டி, வித விதமான பிளக்ஸ் அடித்து, சுவரெங்கும் போஸ்டர் ஒட்டி   ஊரையே உண்டு இல்லை என்று ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள் வேட்பாளர்கள்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் 17ஆ‌ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 19ஆ‌ம் தேதியும் நடைபெறுகிறது.
 
என்றும் இல்லாத புதுமையாய், இன்று எல்லா அரசியல் கட்சிகளும் 'தண்ணிரில் நனைந்த நாய், உடலை உதறிக் கொள்ளுமே' அப்படி உதறிக் கொண்டு இந்தத் தேர்தலைச் சந்திக்கின்றன.  இனி யாரொடும் யாருக்கும் கூட்டு இல்லை, 'தனித்தே நிற்போம். தனித்தன்மை காப்போம்'   என்று வெற்று சவடால் விட்டு மூலைக்கு ஒருவராய் ஆட்டோவிலும், குட்டி யனையிலும் புழுதிப்பறக்க அலைந்துக் கொண்டு இருக்கின்றனர்.

பாராளுமன்ற சட்டமன்ற தேர்தலுக்கு  இணையாக பரப்பரப்போடு இருக்கிறது இந்த தேர்தல்.  தடுக்கி விழுந்தால் வேட்பாளர்கள் மீதுதான் விழவேண்டும்.  அந்த அளவிற்கு இருக்கிறது வேட்பாளர்கள் எண்ணிக்கை.  சுமார் 4.11 லட்சம் பேர் களத்தில் இருக்கின்றனர்.  இதில் இன்னோரு  கூத்து... சில இடங்களில் மாமியார் மருமகள் போட்டி, மாப்பிள்ளை மச்சான் போட்டி, மாமனார் மருமகன் போட்டி என்று தேர்தல் களம் நன்றாகவே கிறுக்குப் பிடித்துக் கிடக்கிறது.

இதனால்  யாருக்கு வாக்களிப்பது, எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது. எந்த கூட்டணிக்கு (?) வாக்களிப்பது என வாக்காள பெருமக்கள் மிகவும் குழம்பிப் போய் கிடக்கின்றனர்.     
     


இந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்று  குழம்ப வேண்டாம். இது முழுக்க முழுக்க நகர நிர்மானம், வார்டு, கிராமம்  மற்றும் பஞ்சாயத்துகள்  பராமரிப்பு என்பதால்,  இங்கு நாம் ஓட்டளிக்கவேண்டியது கட்சியைப் பார்த்தல்ல, பணபலத்தை பார்த்தல்ல.   நாம் பார்க்கவேண்டியது தனிமனிதனை மட்டுமே.

ஊருக்கு உழைக்கக் கூடியவன் உங்கள் ஊரிலும் இருப்பான்.  அவனுக்கு வாக்களியுங்கள் அவனை தேர்ந்தெடுங்கள். 
 
பணம், சாதி, வசதிபடைத்தவன், ஆளுங்கட்சி, எதிர்கட்சி, உறவுக்காரன், பிடித்தவன் பிடிக்காதவன் என்று வழக்கம்போல் மனதை அலையவிடாமல் சுய சிந்தனை உள்ள, பொது நலனில் அக்கரைக் கொண்டு ஊருக்கு உழைக்கக்  கூடிய  மனிதனைதான் நாம் தேடவேண்டும்.   பணபலமின்றி கால் செருப்பு தேயத் தேய எல்லா ஊரிலும் ஒருவன் ஊருக்காக உழைத்துக் கொண்டு இருப்பான்.

யாருக்கேனும் எதாவது என்றால், எங்கோ ஒரு குக்கிராமத்திலிருந்து அவன் எழுதும் கடிதம் அந்த மாவட்ட ஆட்சியரையே
அந்த ஊருக்கு வரவழைத்துவிடும்.  தாலுகா ஆபிஸ், வட்டார அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் , காவல்துறை என்று சகல இடத்திற்கும் புகுந்து புறப்பட்டு வரக்கூடிய ஆளாக அந்த ஆள் இருப்பார்.

அடிப்படை சட்ட அறிவும் அத்தகைய மனிதர்களுக்கு இயல்பாகவே  இருக்கும். அவர்களைத்தான் நாம் அடையாளம் காணவேண்டும்.  அவர்களுக்குத்தான் தமது ஊரைப் பற்றிய முழு விபரமும் தெரிந்திருக்கும். எங்கே என்ன உதவி தேவைப்படும் என்று அனுபவ ரீதியாக உணர்ந்து இருப்பார்கள்.

பணபலமின்றி ஆள்பலமின்றி ஊருக்காக இயங்கும் அவர்களுக்கு அதிகாரபலம் கிடைத்தால் நிச்சயம் இன்னும் ஊக்கமாக செயல்படுவார்கள்.  எனவே, இந்த உள்ளாட்சி தேர்தலில் அத்தகைய மனிதர்களுக்கு நாம் வாய்ப்புத் தருவோம்.

 வெட்டி பெருமைக்கு நின்று... தான் தேடிய செத்துகளை காக்கவும், மேலும் சொத்து சேர்க்கவும் நினைக்கும் நிஜ அரசியல்வாதிகளை இத் தேர்தலில் புறந்தள்ளுவோம்.

வெள்ளி, அக்டோபர் 14, 2011

மாமல்லன்: தேவமலர் - ஸெல்மா லாகர்லெவ் (க.நா.சு) தட்டச்சிய வடிவம்

மாமல்லன்: தேவமலர் - ஸெல்மா லாகர்லெவ் (க.நா.சு) தட்டச்சிய வடிவம்




இது காதல் கதையல்ல. ஆனால் சுவாரசியத்தில் காதல் கதைகளுக்குச் சற்றும் தாழ்ந்ததல்ல. ஸ்காண்டிநேவிய இலக்கிய மேன்மைக்கு மிகச் சிறந்த உதாரணம் இக்கதை.

கற்பனையின் உச்சம் இந்த கதை. படிக்க படிக்க பிரமிப்பை வழங்கி நம்மை மாய உலகிற்கு அழைத்துக் கொள்கிறது.




இதை கதையை அவர்கள் அனுமதியின்றி இங்கே லிங்க் செய்திருக்கிறேன்.




நன்றி: விமலாதித்த மாமல்லன்!


செவ்வாய், அக்டோபர் 11, 2011

'தமிழ்த் திரைப்படங்கள் உலகத் தரம் வாய்ந்தவை' -ஷாருக்கான்.




              தமிழ்த் திரைப்படங்கள் உலகத் தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன. பல திறமையான தொழிற் நுட்பக் கலைஞர்கள் தமிழ் சினிமா உலகில் உள்ளனர்.

 பாலிவுட்டின் முன்னணி நச்சத்திரமான ஷாருக் கான் நடித்துள்ள ரா ஒன் ஹிந்திப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  மொழிமாற்றத்துடன் தமிழிலும், தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.


'ரா ஒன்' பாடல் வெளியீட்டு விழா

ரா ஒன் ஒரு புதிய முயற்சி. இந்தப் படத்தை தென்னிந்திய மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழிலும், தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறோம். தமிழ் தெரியாமல், தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பது சிரமம். எனினும், மணிரத்னம் போன்ற இயக்குநர்கள் கேட்டால் தமிழில் நடிப்பேன். உலகின் தலைசிறந்த சினிமா நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தமிழகத்தில் உள்ளனர். தமிழ்த் திரைப்படங்கள் உலகத் தரம் வாய்ந்தவையாக உள்ளன.

இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவருடன் நடித்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். எனது சிறு வயதில், மும்பையில் ரஜினி படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது ஒரு ரசிகனாக தூரத்தில் நின்று பார்த்திருக்கிறேன். அப்போது அவருடன் நடிப்பேன் என நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

ரஜினி மாதிரி இன்னொருவர் நடிக்க முடியாது. அவரைப் போன்ற மனிதநேயம் மிக்க ஒரு பண்பாளரைப் பார்ப்பது அரிது.

கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் திறமையானவர்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன. ரஜினியின் உடல்நிலை இப்போது நன்றாக இருக்கிறது. ராணா படப்பிடிப்பை விரைவில் தொடங்க வேண்டும் என்ற துடிப்பில் ரஜினி இருக்கிறார். விரைவில் அவர் நடிப்பார். அந்த நாளுக்காக மற்றவர்களைப் போல நானும் காத்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.

ரஜினியுடன் சந்திப்பு
                                     
    

பாடல் சி.டி. வெளியீட்டு விழா முடிந்தவுடன் திங்கள்கிழமை மதியம் 12.40 மணியளவில் கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்துக்குச் ஷாருக் கான் சென்றார்.

அங்கு ரஜினியிடம் வாழ்த்துப் பெற்ற ஷாருக் கான், சுமார் 40 நிமிஷங்கள் அவருடன் பேசினார். அதன் பிறகு பிற்பகல் விமானம் மூலம் மும்பை சென்றார்.

சனி, அக்டோபர் 08, 2011

'ஜெ', -ஆட்சியில் பச்சைக்கு மாறும் பேருந்துகள்!

பச்சைக்கு மாறிய பேருந்து

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் போதும், அரசு அலுவலகங்களிலும், பேருந்துகளிலும் உடனடியாக ஒரு மாற்றத்தை காணமுடியும்.  அது பெயர் மாற்றம் மற்றும் கலர் மாற்றம். 

அரசு அலுவலகங்கள் என்றால், முந்தைய ஆட்சியாளர்களின் புகைப்படத்தை அகற்றுவதும், புதிய ஆட்சியாளரின் புகைப்படத்தை வம்படியாக மாட்டுவதும்  நாம் காணும் காட்சிதான்.

இதற்கு அடுத்தப்படிதான், ஆட்சியாளர்களுக்கு பிடித்த வர்ணத்தை (?) பேருந்துகளில் பூசுவது.  இதை ஆட்சியாளர்களே சொல்லிச் செய்கிறார்களா... இல்லை இவர்களே... அவர்களை 'காக்கா' பிடிக்க அப்படி செய்கிறார்களா என்றால்..... தெரியவில்லை...?!.
பச்சைக்கு மாறிய பெயர் பலகை
     

சமீபத்தில் சென்னையில்,  பேருந்துகள் படிப்படியாக பச்சை நிறத்துக்கு  மாற்றும் வேலையை, சத்தம் இல்லாமல் செய்துவருகிறது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்.  ஜெயலலிதாவிற்கு பிடித்த 'பச்சை' நிறத்தை பேருந்துகளின் பக்கவாட்டிலும், பெயர் பலகையிலும் பூசி வருகின்றனர்.   இதனால் நிறத்துகு ஒன்றாய் பேருந்துகள் சென்னையில் வலம் வருகின்றன.

பேருந்தின் பக்கவாட்டு டிசைன், பெயர் பலகை, பேருந்தின் உள்புற டிசைன் என்று கானும் இடத்தில் எல்லாம் பச்சையை வாரியிறைத்திருக்கின்றனர்.அதோடு இல்லாமல், இதுநாள் வரையில் ஜெ.ஜெ நகராக இருந்ததை, ஜெ.ஜெயலலிதா நகர் என்று மாற்றியிருக்கின்ற்னர்.   இப்படி ஆளும் கட்சிக்கு முதுகு சொறியும் இத்தகைய அரசு ஊழியர்களை என்னவென்று சொல்லுவது.

  ஒரு நாளைக்கு 167 லட்சம் மக்கள் சென்னை மாநகர பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். 1984லில் தொடங்கப்பட்ட இந்தப் போக்குவரத்துக் கழகம், தனது பாரம்பரியம் மறந்து,  இப்படி கலர் மாறுவது கண்டிக்கத்தக்கது.

இந்தச் செயலை போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள், ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும்  மிக கனகச்சிதமாக செய்துவருகின்றனர்.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
::::::::::::::::::::::::::::::::::
::::::::::::::::::
::::::::::
:::::



செவ்வாய், அக்டோபர் 04, 2011

"நைட்டியை கழற்றவே மாட்டாங்களா...?"




பெண்களுக்கு இரவு உடையாக  இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்ததுதான் இந்த 'நைட்டி'. ஆனால்,  இன்று அது படும்பாடு சொல்லிமாளாது.  என்னமோ... நைட்டிதான் நமது பெண்களின் தேசிய உடை என்று,  நமது பெண்கள் நினைத்துவிட்டார்களோ என்னவோ...?  அந்த அளவிற்கு இந்த நைட்டி அவர்கள் உடலிலிருந்து இறங்குவதே இல்லை.


வூட்ல இருந்தாலும் நைட்டிதான், தெருவில் நடந்தாலும் நைட்டிதான், கடைக்கு போனாலும் நைட்டிதான், பக்கத்தில இருக்கிற பள்ளிக்கூடத்துக்கு போனலும் நைட்டிதான் என்று நைட்டியை தமது ஒரு அங்கமாகவே பெண்கள் நினைத்துவிட்டார்கள்.

வீட்ல ஆம்பிளைங்க  என்னதான் காட்டு கத்தலா கத்தினாலும், அது 'செவிடன் கதில ஊதுன சங்குதான்'. வீட்டில் இருக்கும்போது நைட்டியை விட்டு பெண்கள் வேறு உடைக்கு  மாறுவதில்லை.


உடலை பெறுக்க வைக்கும் நைட்டி!


தொடர்ந்து நைட்டியை அணிவதால், அது பெண்களின் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதில்லை. இடுப்பு, பின்பக்கம், அடிவயிறு  போன்ற இடங்களில் எந்தவித இறுக்கமும் இல்லாததால் சதை அதன் போக்கில் பெறுக்கத் தொடங்கிவிடுகிறது.  இதனால் சிறிய வயதினிலேயே பெண்கள் அதிக வயதானவர்கள் போல் தெரியத்தொடங்கிவிட்டனர்.

மார்பு  தொங்கிவிடாமல் இருக்குக்கவும்,  பார்க்க (?) எடுப்பாக இருக்கவும், பழங்காலங்களில் பெண்கள் துணியை (கச்சை) வைத்து தங்கள் மார்பை இருக்கமாக கட்டிக் கொள்வார்கள். 

"கச்சை அணிந்த கொங்கை மாந்தர்
கண்கள் வீசு போதிலும் அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே"  என்றார் பாரதி.

உடலில் தேவையான இடங்களில் எப்போதும்  இறுக்கம் இருக்கவேண்டும். அப்போதுதான் அதனதன் அளவில்'அது' இருக்கும்.  இல்லையென்றால் பெறுக்கவும் வழியுண்டு, சிறுக்கவும் வழியுண்டு.


நைட்டி இரவு உடைதானே...?


நைட்டி இரவு உடைதான் என்பதை  மறந்து பல நாள் ஆயிற்று. பகல் முழுவதும் உழைத்து களைத்துப் போகும் பெண்கள் இரவிலாவது தங்களைச் சுற்றி பின்னிப் பிணைத்திருக்கும் ஆடைகளுக்கு விடை கொடுத்து,   கொஞ்சம் சுதந்திரமாக இருக்கவேண்டும்,  என்ற என்னத்தில்தான் இந்த நைட்டி வந்திருக்கும் என்பது எனது என்னம்.

"ஆமா,   வீட்டுக்கார ஐயா, நடுக்கூடத்தில் மேலாடை அணியாமல் உக்காந்து டிவி பாப்பாரு. ஆனா,  அந்த வீட்டுக்கார அம்மா மாட்டும் சமையல் கூடத்தில்,  எட்டு முழம் சேலையை சுத்திக்கொண்டு  புழுங்கிச் சாகவேண்டுமா?  நல்லா இருக்குங்க உங்க டீலிங்கு"


ஆனால், எது சொளகரியமாக இருந்ததோ.... அதுவே  இன்று நமது கலாச்சாரத்தை பதம் பார்த்துக் கொண்டு இருக்கிறது.  பேருந்து செல்லாத சிறு சிறு மலை  கிராமங்களில் கூட,  நமது பெண்கள் நைட்டி அணிகிறார்கள்.  குச்சி ஊன்றி நடக்கும் ஆயாக்கள் கூட நைட்டி அணிந்திருப்பதை பார்த்திருக்கிறேன்.

நைட்டியை பகலில் கூட கழற்ற மறுக்கிறார்கள்.

ஐரோப்பியர்கள்தான்  சூழ் நிலைக்கேற்ப ஆடை அணியும் பழக்கத்தை கொண்டுவந்தனர்.  பகலில் ஒரு ஆடை, இரவினில் ஒன்று, வாரயிறுதிக்கு ஒன்று, அலுவலகத்திற்கு ஒன்று  என்று ஒரு நாளில் இரண்டு மூன்று செட் ஆடைகளை அணிகின்றனர். 

பல வழிகளில் அவர்களை காப்பி அடிக்கும் நாம்,  இனியாவாது அந்தந்த ஆடைகளை  அந்தந்த  சீதோஷன நிலைகளில் அணியவேண்டும்.

அதனால், இனியாவது இல்லத்தரசிகள் தங்கள் இரவு உடையான 'நைட்டியை' இரவில் மட்டுமே,  அணிய வேண்டுமாய் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். 

படங்கள் உதவி: கூகுல்.

திங்கள், அக்டோபர் 03, 2011

குமுதத்திலிருந்து வரதராஜன் நீக்கம்: பதிலடித் தந்த ஜவஹர் பழனியப்பன்.

வரதராஜன் வெளியீட்ட அறிக்கை


 குமுதம் விவகாரம்: பதிவு 2

எனது முந்தைய பதிவின் கடைசி பாராவில் ஜவஹர் பழனியப்பனிடமிருந்து பதில் அறிக்கை வரப்போகிறது என்று தெரிவித்திருந்தேன். அது நடந்து விட்டது.   முந்தைய பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.


குமுதம் பதிப்பாளர் வரதராஜன்  வெளியிட்ட விளம்பரத்திற்கு, பதிலடித் தந்து   'காஷன் நோட்டிசை' (எச்சரிக்கை அறிக்கை) வெளியீட்டார் ஜவஹர் பழனியப்பன்.

நேற்று அதாவது ஞாயிறு அன்று காலை வந்த ஆங்கில தினசரிகளில்குமுதம் பதிப்பாளர் வரதராஜன்,  குமுதம் நிர்வாக இயக்குனர் ஜவஹர் பழனியப்பனை நீக்கி ஒரு 'காஷன் நோட்டீஸ்' வெளியீட்டிருந்தார். இது தி ஹிண்டு நீங்களாக இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் மற்றும் டெக்கான் கிரானிககளில் வெளிவந்தது.

அதற்கு பதிலடித் தந்து இன்று காலை அதாவது 03/10/2011 திங்கள் அன்று அந்த விளம்பரம் வந்த அதே நாளிதழ்களுக்கு அதே அளவு விளம்பரம் ஒன்றை ஜவஹர் பழனியப்பன் தனது தாயின் பெயரில் எஸ்.ஏ.பி.கோதை ஆட்சி (நிறுவனர் எஸ்.ஏ.பி அண்ணாமலை அவர்களின் துனைவியார்) என்ற பெயரில் வெளியீட்டிருக்கிறார்.

ஜவஹர் பழனியப்பன் வெளியீட்ட அறிக்கை
இதில் பி.வரதராஜன் குமுதம் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திலிருந்து, சென்னையில் 26/09/2011 அன்று நடந்த கம்பெனி போர்ட் மீட்டிங்கின் மூலம், சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவியிலிருந்து ஒரு மனதான தீர்மானத்துடன் நீக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனத்தில் பெயரில் வாங்கிய கடனுக்கும் நிறுவனத்தின் சொத்துக்களுக்கும்   தமது தாயாருமான திருமதி கோதை ஆட்சிதான் உரிமையாளர்    என்று அந்த அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுளளது.

அதோடு, இனி வரதராஜனை யாரும் தொடர்பு கொள்ளவேண்டாம் என்றும், ஒரு படி மேலே போய்,  அவர் நியமனம் செய்த ஊழியர்களோடு  யாரும் தொடர்பு வேண்டாம் என்றும்  ஜவஹர் பழனியப்பன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

இப்படி போட்டி போட்டுக் கொண்டு வரும்  அறிக்கைகளால்,  குமுதம்  ஊழியர்கள் சற்று கலக்கத்துடனே இருக்கின்றனர்.  இனி யார் பின் செல்வது. இனி நிர்வாகம் கை மாறுமா, அல்லது இப்படியே நீடிக்குமா...? என்பது தெரியாமல் முழி பிதுங்கி நிற்கின்றனர்.

இந்த அறிக்கைக்குப் பின்னர் வரதராஜனுக்கு ஆளும்கட்சி  ஆதரவு இருப்பதாகவும், அதனால்தான் அவர் தைரியமாக  ஜவஹர் பழனியப்பனுக்கு முன்பாக முந்திக்கொண்டு அறிக்கை வெளியீட்டார் என்றும் கூறப்படுகிறது.

ஜவஹர் பழனியப்பனுக்கு, மத்தியில் ஆளும் கட்சி ஆதரவு  இருப்பதாவும் நம்பப்படுகிறது. 

 .  இரு தரப்பும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லாததால், இனி மோதல் கடுமையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 அதுவரை குமுதத்தின் நிலை......?                                                                                         

 

ஞாயிறு, அக்டோபர் 02, 2011

குமுதத்தில் நடக்கும் குடிமிபிடிச் சண்டை?!







இன்றைய (02/10/2011) ஆங்கில நாளிதழ்களில் ஒரு 'காஷன் நோட்டிஸ்' விளம்பரம்,  குமுதம் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டு உள்ளது.  அதில்... இனி குமுதம் நிறுவனத்திற்கும்,  குமுதம் நிறுவன ஆசிரியர் மற்றும் இயக்குநரான டாக்டர் எஸ்ஏபி ஜவஹர் பழனியப்பனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும்,   அவரது பங்குகள் அனைத்தும் உடனடியாக எந்தவித அறிவிப்பும் இன்றி ரத்துசெய்யப்படுகிறது. இனி குமுதம் நிறுவனம் தொடர்பாகவும் அதன் சஞ்சீகைகளோடும் அதன்  ஆசிரியர் கூழுவோடும்  அவருக்கு எந்தவித சம்மதமும் இல்லை. 

இனி குமுதம் நிறுவனம் தொடர்பாக அவரை யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் அப்படி மீறி தொடர்பு கொண்டால் அதற்கு அவர்களே முழு பொறுப்பு என்ற ரீதியில் அந்த விளம்பரம் உள்ளது.  அதோடு, ஜவகர் பழனியப்பன் ஒரு வெளிநாட்டு பிரஜை என்றும்,  அவர் NRI என்றும்  விளம்பரத்தில் இரு முறை குறிப்பிடப்பட்டுள்ளது, குறிபிடத்தக்கது.

விளம்பரத்தை  குமுதம் பப்ளிகேஷன்சின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி வரதராஜன் தந்திருக்கிறார்.

பல வருடங்களாக புகைந்த ஒரு விஷயம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குமுதத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவர போட்டி?

குமுதம் நிறுவன ஆசிரியர் மற்றும் இயக்குநரான டாக்டர் எஸ்ஏபி ஜவஹர் பழனியப்பனுக்கும் குமுதம் பப்ளிகேஷன்சின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி வரதராஜனுக்கும் குமுதம் நிறுவனத்தை யார் கட்டுபாட்டில் எடுத்துக் கொள்வது என்று  பெரும் போரட்டமே நடந்துவருகிறது.  அதன் விளைவாகவே இந்த விளம்பரம்   கொடுக்கப்பட்டுள்ளது,

குமுதத்தை நிறுவிய ஆசிரியர் எஸ்ஏபி அண்ணாமலையின் மகன்தான் டாக்டர் ஜவஹர் பழனியப்பன்.  இவர்தான் குமுதம் உள்ளிட்ட அதன் குழும இதழ்களின் நிறுவன நிர்வாக ஆசிரியர்.   குமுதம் குழும இயக்குநராகவும் உள்ளார்

குமுதம் நிறுவனத்தின் பதிப்பாளராக இருந்த மறைந்த பிவி பார்த்தசாரதியின் மகன்தான் வரதராஜன். குமுதத்தின் மேலாளராக இருந்து, பார்த்தசாரதி மறைவுக்குப் பின்னர் பதிப்பாளரானார்.

அமெரிக்காவில் பிரபல இதய நோய் நிபுனரான டாக்டர் ஜவஹர் பழனியப்பன்,   ஒங்கியோ மாகானத்தில் மவுண்ட் வெர்னாவில் வசித்து வருகிறார்.  அமெரிக்காவில் வசித்து வருவதால், குமுதம் மற்றும் ரிப்போர்டர் இதழ்கள் தயாரானதும் அவரது ஒப்புதலுக்காக அமெரிக்கா அனுப்பப்பட்டு அனுமதிபெறப்பட்டு வந்தது.


குமுதம் நிர்வாகம் மற்றும் ஆசிரியர் குழு அனைத்தையும் நிர்வாக இயக்குனர் வரதராஜனே கவனித்து வந்தார்.

இன்னிலையில் குமுதத்தில் அவரது பிடி அதிகமாக  அதிகமாக, கொஞ்சம் கொஞ்சமாக டாக்டர் ஜவஹர் பழனியப்பன் ஒரங்கட்டப்பட்டார்.  குமுததிற்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்று விளம்பரம் கொடுக்கும் அளவிற்கு விஷயம் விபரீதமாக முடிந்திருக்கிறது.



நிதி மோசடி:  வரதராஜன் கைது!



இன்னிலையில்தான் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி நிதி மோசடி, நிர்வாக முறைகேடுகள் போன்ற குற்றங்களின் அடிப்படையில், ஜவஹர் பழனியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வரதராஜன் கைது செய்யப்பட்டார்.

.

குமுதத்தை முழுக்க தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வரதராஜன் முயற்சித்ததாகவும், அதற்காக ஆசிரியர் குழு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் தலையிட்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் நிதியை தனது சொந்த காரணங்களுக்காக தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று குமுதம் நிறுவன உரிமையாளர் என்ற வகையில் குற்றச்சாட்டை அளித்திருந்தார் ஜவஹர் பழனியப்பன்.

அன்று  இரவு கைது செய்யப்பட்ட வரதராஜன், காரில் வைத்து பலமணி நேரம் அலைகழிக்கப்பட்டர். சில மணி நேர விசாரணைக்குப் பிறகு ஜாமீனில் விடப்பட்டார்.

அவர் மீது  நிதி மோசடி, நிர்வாக முறைகேடுகள்  போன்ற குற்றங்களின் அடிப்படையில், 323, 341, 342, 344, 365, 307, 25 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.


விசாரிக்க குழு  அமைத்த கலைஞர்.

குமுதம் விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு ஒன்றை தமிழக அரசு நியமிக்கும் என அன்றைய முதலமைச்சர்  கருணாநிதி சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.  இது தொடர்பாக அவர் சட்டமன்றத்தில் கூறியதாவது....



குமுதம் பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர் ஜவஹர் பழனியப்பனின் புகாரின் பேரில்தான் வரதராஜன் கைது செய்யப்பட்டார் என்று கூறிய முதல்வர்  கருணாநிதி, தமது அரசு பத்திரிகை சுதந்திரத்தை மதித்தே நடக்கும் என்றும், தமிழ்நாட்டின் முன்னணி வார இதழான குமுதம் நிர்வாகிகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்குத்  சுமுக தீர்வு காணும் நோக்கில் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.


நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆறு லட்ச ரூபாய் சம்பளத்தை 10 லட்சம் ரூபாயாக திருத்தி, பல கோடி ரூபாய் அளவுக்கு அவர் மோசடி செய்தார் என்று வரதராஜன் மீது பழனியப்பன் புகார் கூறியிருந்தார்.

ஆனால் வரதராஜனோ, தன்னிடமுள்ள பங்குகள் அனைத்தையும் தன்னிடம் விற்றுவிடுமாறு பழனியப்பன் தன்னை வற்புறுத்தினாரென்றும் அதற்கு தான் மசியாததால் தன் மீது வீண்பழி சுமத்துவதாகவும் அப்போது அவர் கூறினார்.



ஆட்சி மாற்றம் காரணமா....?


கடந்த திமுக ஆட்சியின் போது டாக்டர் ஜவஹர் பழனியப்பனின் 'கை' ஓங்கியிருந்தது. குமுதம் விவகாரத்தில் அன்றைய திமுக அரசு,  ஜவஹர் பழனியப்பன் பக்கம் இருந்து செயல்பட்டதாக  பதிப்பாளர் வரதராஜன் நினைத்தார்.  அதுவுமில்லாமல்,  அப்போதைய காவல் துறை, வரதராஜனை கைது செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தாமல் அங்கும் இங்கும் அலைகழித்தது. அவர் எங்கு இருக்கிறார் என்பதையும் கூட சொல்ல மறுத்தது போலீஸ்.

இதனால் கடுப்பான வரதராஜன்,  ரிப்போர்ட்டரில் திமுக அரசை கடுமையாகச் சாடி எழுத... ஆசிரியர் குழுவை முடிக்குவிட்டார்.   நடந்த  சட்டமன்றத்  தேர்தலில் திமுகவிற்கு எதிராகத்தான் இருந்தது குமுதம் நிர்வாகம்.

அதோடு... ஜவஹர் பழனியப்பனை குமுதத்திலிருந்து வெளியேற்ற நல்ல நாள் பார்த்த வரதராஜனுக்கு, வசமாக வாய்த்தது ஜெயலலிதா தலைமையிலான புதிய  அரசு.  அதனால் நிர்வாகக் குழு(?)வை கூட்டி ஜவஹர் பழனியப்பனை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதுவே இப்போது விளம்பரமாக வெடித்திருக்கிறது.


 மனமாற்றம் வேண்டும்.
  • ஜவஹர் பழனியப்பன் மருத்துவத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால், குமுதம் நிர்வாகத்தில் அவர் அவ்வளவாக தலையிடுவதில்லை. அதுவே அவருக்கு எதிராக போய்விட்டது என்கிறார் விஷயம் தெரிந்த ஒருவர்.
உட்கார்ந்திருப்பது எஸ்.ஏ.பி. நிற்பது பி.வி.பி.


  • குமுதம் இந்தளவிற்கு வளரக் காரணம் எஸ்.ஏ.பியும் அவரது நண்பர் (பி.வி.பி) பார்த்தசாரதியும்தான்.  இருவரது நட்பும்  அயராத உழைப்பும்தான் குமுதத்தை உயரத்தில் ஏற்றிவைத்தது.  இருவரும் விட்டுக் கொடுத்து வழிநடத்தி சென்றனர். 9 லட்சம் பிரதிவரை விற்பனையாகி குமுதம் உச்சம் தொட்டு நின்றபோது, இருவரது நட்பும் உலக பிரச்சித்தமானது. 
  • ஆனால் இப்படி இருவரது வாரிசுகள்,  மோதிக் கொள்வது குமுதம் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்கிறார் குமுதத்தின் நீண்ட வருட வாசகர் ஒருவர். 

இன்னிலையில் ஜவஹர் பழனியப்பனும் தனது  தரப்பு நியாயத்தை  சொல்ல.... விரைவில் ஒரு விளம்பரத்தைத் வெளியீடுவார் என்கிறது விஷயம் அறிந்த ஒரு பட்சி!?


வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...