சனி, நவம்பர் 29, 2008

வாத்து மடையர்களின் இலக்கியம்.


ஏனோ... இப்போவெல்லாம் கவனம் இலக்கியம் மேல் திரும்புவதில்லை.

கல்லூரி காலங்களில் எங்களுக்கு நல்ல இலக்கியங்களை அறிமுகப்படுத்திய பெருமை கோமல் சுவாமிநாதனின் " சுபமங்களா" வுக்கு உண்டு. தேடி நின்று நித்தம் படித்த காலங்களில் எங்களுக்கு நல்ல இலக்கிய அறிவை தந்தது சுபமங்களா. நவீன இலக்கியம், தலித் இலக்கியம், முற்போக்கு இலக்கியம், ஹை-கூ கவிதைகள் என்று இலக்கியத்தின் பல பரிமாணங்களையும், கற்று தந்தது சுபமங்களா. மாயவரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடையில் சுபமங்களா வந்ததும் எடுத்து வைத்துவிடுவார்கள். அந்தளவிற்கு அதன் தாக்கம் எங்கள் மீது இருந்தது.

அப்படியெல்லாம் இலக்கியம் பார்த்த எங்களுக்கு, தற்போது உள்ளதெல்லாம் நல்ல இலக்கியமாக தெரியவில்லை.

வாத்து மடையர்களின் இலக்கியம்.

இலக்கியம் என்று சொல்லிக்கொண்டு, எழுதுபவனுக்கும்புரியாத, படிப்பவனுக்கும் புரியாத பாஷையில் பேசி ஓவராய் மப்பு அடித்து பிதற்றும் குடிகாரனை போல் உளரும் இந்த காலத்து வாத்து மடையர்களின் இலக்கியம் எனக்கு சுத்தமாய் பிடிப்பதில்லை.

அதை விட கொடுமை, பெண்களின் ஜனன உறுப்புகளை கொண்டு உதாரணங்கள் சொல்வதும், பால் மாறி உறவு கொள்வதை ஏற்று கொள்ளும் கொடிய மூளை மழுங்கியவர்களின் கூட்டம். இந்த கூட்டங்களின் பெருவாரியான மனிதர்களை (?) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள அவர்கள் எழுதும் எழுத்துகளைப் பார்த்தாலே தெரியும். படித்தோமானால் மூளைதான் நசிந்து போகும்.

அதுவும் இந்த வலை பதிவாளர்களின் வலைகளை பார்த்தால் வாந்திதான் வருகிறது. வலை பதிவாளர்கள் தான் பதிவில் , எத்தனையோ நல்ல விழயங்களை தங்களது. பதிவில் யோனியும், ஆண்குறியும் உரசுவதை சொல்வது நாகரிகம் யன்றும் இலக்கியம் என்றும் நினைக்கிறார்கள்.


இதில் நாராசமாய் வார்த்தை வேறு, ரோட்டில் போகும்போது பார்ப்போமே... துணியை தூக்கிக்கொண்டு எவனாவது ஒன்னுக்கு இருப்பான்அது போல் ங்கோத்தா...ங்க்ம்மா... என்று அருவருப்பான வார்த்தை வேறு. இந்த அருவருப்பான வார்த்தைகள் தான் நவீன இலக்கியம் என்று நினைக்கிறார்கள்.


அதோட... குடிப்பதை பற்றிய விலாவாரியான விரிவாக்கம் வேறு. ஜெயகாந்தன் கூட பாண்டிசேரியில் பீர் அடித்ததை, மிக அழகியலோட விவரித்து இருப்பார்.

ஆனால் இவர்கள் விவரிக்கும் முறையே வேறு. சிலரின் எழுத்தில் குடிப்பதை பற்றித்தான் அதிகமாக இருக்கும். அதன் பல் வேறு பரிமானங்களையும் எடுத்துரை ப்பதையே தங்களது முக்கிய பணியாக வைத்துள்ளனர்.

குடிப்பது, படுப்பது இதுதான் வாத்து மடையர்களின் நவீன இலக்கியம்.

வாழ்க இவர்களது இலக்கியப் பணி.


-தோழன் பா





வெள்ளி, நவம்பர் 28, 2008

வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு ஆற்றிய மாவீரர் நாள் உரை:

"நாம் உலகின் எந்த நாட்டினதும் தேசிய நலன்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும் எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம் என்றும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்".

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வியாழக்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2008.


இன்று மாவீரர் நாள்.

தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள்.

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.

எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.

சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும்

எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.

மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.

மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.

எனது அன்பான மக்களே!

என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது.

சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.

தனித்து நின்று போராடுகிறோம்

இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது.

சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணம்

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.

பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.

இந்த மண் எங்களின் சொந்த மண்

சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.

இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.

ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.

அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.

சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.

சமாதானத்துக்கு எப்போதும் நாம் தயார்

தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்.

அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம்.

எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.

அனைத்துலகத்தை ஏமாற்றவே பேச்சுவார்த்தை நாடகம்

பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம்.

போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.

இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில் கலந்துகொண்டோம்.

உலக அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை.

புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது.

பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.

பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.

சமாதான முயற்சிகளுக்கு ஊறுவிளைவித்த உலக நாடுகளின் தடை

இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது.

எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.

தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.

இந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.

அனைத்துலக நாடுகளின் பாராமுகம்

சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலை கூடத் தெரிவிக்கவில்லை.

மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.

இன்று சிங்கள தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது.

தமிழினத்துக்கு எதிரான போர்

தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது.

இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.

இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.

பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது.

சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது.

வரலாறு காணாத கொடூர அடக்குமுறை

எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.

உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.

சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.

கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது.

எமது மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியாது

இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது.

எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.

பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.

எமது விடுதலைப் போராட்டம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல

உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.


உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம்

எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.

இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இந்தியாவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம்

இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன.

எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.

அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.

இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.

இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.

எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.


தமிழக உறவுகளுக்கு நன்றி


காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

எனது அன்பான மக்களே!

சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது.

போருக்கு குரல் கொடுக்கும் சிங்கள தேசம்

அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது.

போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல் கொடுக்கிறார்கள்.

தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.

எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான்.

சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.

வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

கடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.

மாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய வைத்திருக்கிறது.

சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப் போகிறது?

தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது.

புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?

தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது.

சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.

ஆக்கிரமிப்புக்கு என்றுமே இடமளிக்கப்போவதில்லை

பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்.

இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை

தொடர்ந்து போராடுவோம்

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

புலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

புதன், நவம்பர் 26, 2008

நீக்ரோ !


ஒரு வரலாற்று மற்றம் நிகழந்து இருக்கிறது அமெரிகாவில். ஒபாமா வை அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுத்து உள்ளனர் அந்நாட்டு மக்கள். இது ஒருநாளில் நிகழ்ந்தது அல்ல. அப்ரகம் லிங்கன் முதல் மால்கம் எக்ஸ் வரை தங்களது உயிரை தந்து கறுப்பர்கள் சுய மரியாதை யுடன் வாழ ஒரு புதிய பாதையை போட்டு சென்றுள்ளனர். அந்த பாதை இன்று கருப்பர்களை அமெரிக்க அதிபராக வரும் அளவிற்கு உயர்திவுள்ளது.
அமெரிகாவில் கறுப்பர்கள் மீதான தாக்குதல் என்பது உலகம் அறிந்த ஒன்று. அதையெல்லாம் சகித்தஅவர்கள் அமெரிகாவிற்கு பல துறைகளில் வெற்றியை பெற்று தந்துள்ளனர். தேச பற்று மிகுந்த அவர்கள் மீது வெள்ளையர்களின் வான்கொடுமை பல வழிகளிலும் அவர்கள் வாழ்வை நசுக்கியது. விளையாட்டு துறையில் அமெரிக்க பெரும் பல தங்க பதக் கத்திற்கு கறுப்பர்களின் அந்த போராட்ட குணம் தன் காரணம் என்றல் மிகையல்ல.

நான் கல்லூரியில் படித்து கொண்டு இர்ருந்த போது, கறுப்பர்கள் மீதான் தாக்குதல் உட்சத்தில் இருந்தது. அந்த நேரத்தில் நான் எழுதிய கவிதை, பலரின் பாராட்டையும் பெற்றது.

நான் எழுதிய கவிதை....

நீக்ரோ !

என்
சகோதரனே-நீ
புறக்கநிக்கப்படுகிறாய்
அதுவே !
உன்னில் எனகொரு
நேசிப்பை ஏற்படுத்தியது.

உன் அடிமைத்தனமும்
என் அடிமைத்தனமும்
பிரிடிஷ் சாம்ராஜ்ஜியத்தில்
பேர் போனது,
நீயும் - ஏன்
என்று கேட்க மாட்டாய்
நானும் - எதற்கு
என்று - வினவ மாட்டேன்.

என் நேசிப்பும்
அப்படியே....

உன் கருப்பு தசைகளில்
திசை எதுவாய் இருந்தால் - என்ன?

நீ
பெரும்
பதக்கமும் - புகழும்
அமெரிக்கர்களுக்கு
வேண்டும்.

பின்னர்
சன்பிரன்சி ஸ்கோவில்
அவ்வபோது
கொளுதப்படுவாய்
முதுகில் குத்தப்படுவாய்.

மண்ணில் மாண்புகளை
ஏற்படுத்திய-நீ
மனதில் மரணித்துபோவாய்,
நீயும் மனிதன்தானே....!

உலகஅரங்கில் -உன்
இடத்திற்கு - நீ
போராடும்போது - நான்
தவித்திருக்கிறேன்,
என்னால்
உதவமுடியவில்லையே...என்று.

ஆமாம் சகோதரனே !

கறுப்புத் தோல்
எங்களுக்கோர் அங்கி
உனக்கு அதுவே
போர்க்கொடி.

உன்னை
நேசிக்கின்றேன் - என்
ஆப்ரிக்க சகோதரனே
நான்
இந்தியன் என்பதால்.
- தோழன் மபா



வியாழன், நவம்பர் 20, 2008

கனிமொழி சொன்ன கதை

இலங்கையில் நடப்பது என்ன? என்று மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வேன் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தை திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கறுப்புக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக மாணவர் கூட்டமைப்பின் சார்பில், இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு ஆதரவு திரட்டியும், இலங்கையில் நடப்பது என்ன? என்று மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகவும் மாணவர்கள் வேன் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.


இதன் தொடக்க விழா சென்னை ராயப்பேட்டை வி.எம்.தெருவில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு நடைபெற்றது.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கலந்து கொண்டு கறுப்புக் கொடி அசைத்து சுற்றுப்பயணத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அவர் தனது உரையில் தெரிவித்துள்ளதாவது:

நம் நாடு நிலவுக்கு செயற்கைகோள் அனுப்பியதைப் பெருமையாகப் பேசுகிறோம். அதே நேரத்தில் ஈழத்தின் உண்மை நிலை என்ன? என்று நம்மால் முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியவில்லை.

இலங்கையில் உள்ள பத்திரிகைகள், ஊடகங்கள் அந்த நாட்டு அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் வெளியிடுகின்றன.

இலங்கையில் பள்ளிக்குப் போக வேண்டிய குழந்தைகள் பதுங்கு குழியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

போர் அறிவிப்பு செய்த பிறகு, பாதிரியார் ஒருவரை அவர் தங்கியிருக்கும் இடத்தை விட்டு செல்லுமாறு அரசு ஆணையிட்டது. அதையடுத்து அந்தப் பாதிரியாரும் மூட்டை, முடிச்சுகளை கட்டிக் கொண்டு போக புறப்பட்டார். அப்போது இரண்டு குழந்தைகள் அங்கு வந்தனர். அவர்களிடம் எனது நினைவாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி பாதிரியார் 2 பேனாக்களைக் கொடுத்தார்.

அந்தப் பேனாவை பெற்றுக்கொண்ட அந்தக் குழந்தைகள் பாதிரியாரிடமே அவற்றைத் திருப்பிக் கொடுத்தன. நாங்கள் உயிருடன் இருப்போமா அல்லது இருக்கமாட்டோமா என்று தெரியவில்லை. எனவே, வேறு ஊரில் உள்ள குழந்தைகளுக்கு இந்தப் பேனாவைக் கொண்டு போய் கொடுங்கள் என்று அந்தக் குழந்தைகள் கூறியுள்ளனர்.

எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான குழந்தைகளின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை. இப்படியொரு நிலையை ஏற்படுத்தியிருக்கும் நாடு ஒரு நாடா?

தன் மக்களையே அழிக்கும் அநாகரீகத்தை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு குரல் கொடுக்க வேண்டும். தமிழ் பேசும் பாவத்திற்காக அவர்களை அழிக்கிறார்கள். தமிழர்கள் என்பதற்காக இல்லாவிட்டாலும் அவர்களும் மனிதர்கள் என்பதற்காகவாவது குரல் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன், பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் சுற்றுப்பயணம் செல்லும் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பினர்.

சுற்றுப்பயண வேனின் இருபுறங்களிலும் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைச் சித்தரிக்கும் படங்கள் காண்போரின் கண்களை குளமாக்கும் வகையில் அமைந்துள்ளன.
நன்றி
புதினம்.காம்

நேபாள மாவோயிஸ்டுகளும் ஈழப் புலிகளும்...

அனைத்துலக மார்க்சிய-லெனிய-மாவோயிஸ் அரங்கங்களிலும் தேசிய இன விடுதலை தொடர்பான சிந்தனையாளர்கள் மத்தியிலும் ஏன் வலதுசாரி சிந்தனையாளர்களிடத்திலும் "நேபாள மாவோயிச"த்தின் பாதையானது தீவிர விவாதங்களை உருவாக்கியிருக்கின்றது.

நேபாள மாவோயிஸ்டுகளை ஈழத்துப் புலிகளும் பின்பற்ற வேண்டும் என்றும்கூட அந்த விவாதங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்மையில் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மானத்தின் மீது தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி,

"ஒரு குழுவாக அவர்கள் (ஈழத் தமிழர்கள்) இருந்து போராடியிருந்தால் நேபாளம் போல வெற்றி பெற்று இருப்பார்கள். வேறு பல நாடுகளைப் போன்று விடுதலை பெற்றிருப்பார்கள். போராளிக் குழுக்களுக்குள்ளேயே நடந்த மோதல் காரணமாகத்தான் இந்த போராட்டம் பலவீனமாகி விட்டது. இன்று அவர்களுக்குப் பரிந்துரை செய்து பேச வேண்டி இருக்கின்றது.

இலங்கையில் விடுதலை பெற சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்று போராளிகளுக்கு வேண்டுகோள் விடும் நிலைமை ஏற்பட்டது" என்று கூறியிருக்கின்றார்.

அதேபோன்று அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஆனந்த விகடன் ஏட்டுக்கு அளித்த நேர்காணலில் புதுச்சேரியைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரும் நேபாள அரசியல் நிர்ணய சபை தேர்தல் பார்வையாளராகச் சென்று திரும்பியவருமான கோ.சுகுமாரன் என்பவரும் "நேபாளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளும் பின்பற்ற வேண்டும்" என்று "அறிவுரை" கூறியிருக்கின்றார்.

ஏறத்தாழ 60 ஆண்டு காலத்துக்கும் மேலாக பாரிய இன ஒடுக்குமுறைகளுக்குள்ளாகியிருந்த தமிழீழத் தேசிய இனத்தினது அவலத்தை தமிழீழ மக்களின் இராணுவ அமைப்பாகவும் தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகவும் இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணி வெற்றிகளே இந்த அனைத்துலக அரங்கத்துக்கு வெளிப்படுத்தி நிற்கின்றது. இன்று அவலத்தை துடைக்கும் சாதகமான ஒரு சூழலை நோக்கியும் பயணிக்கின்றது.

இலங்கைத் தீவின் நிலைமைகளும் நேபாளத்தின் நிலைமைகளும் எந்த வகையிலுமே தொடர்பற்ற முற்றிலும் முரணானவை

நேபாளம்


நேபாளத்தில் நடைபெற்று வந்த இந்து உயர் சாதிய மன்னர் ஆட்சியை மார்க்சிய-லெனினிய-மாவோயிச வழிப்பட்டதான ஆயுதப் போராட்டத்தின் ஊடே அகற்ற நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) போராடியது.

மன்னர் ஆட்சியை புரட்சியின் மூலம் அது அகற்றிவிடாத நிலையிலும் அனைத்துலக அரசியல் நிலைமைகளுக்கு ஒத்திசைந்து அரசாங்க அதிகாரத்தை அக்கட்சி இப்போது கைப்பற்றியுள்ளது.

இது சரியான பாதைதானா? என்று அனைத்துலக கொம்யூனிச அரங்கங்களும் இது கம்யூனிசத்தை அடைவதற்கு "நேபாளம் பின்பற்றும்" ஒரு தந்திரோபாயமே (மார்க்சிய மொழியில் செயல் உத்தி) என்று நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியும் கூறி வருகின்றன.

பல் தேசிய இனப் பண்பாடு கொண்ட நேபாளத்தில் ஆள்வது மன்னரா? மக்களா? என்ற நெடிய போராட்டத்தின் இறுதியில் "மக்களாட்சி" மலர்கின்றது.

"நேபாளத்தின் புதிய அரசியல் சாசனம் நேபாளத்தை ஒரு குடியரசு நாடாக நிலை நிறுத்தும்" என்றுதான் நேபாள மாவோயிச கட்சியின் தலைவர் பிரசந்தா பிரகடனப்படுத்தியிருக்கின்றார்.

இலங்கை

இலங்கைத் தீவிலோ வரலாற்றுக் காலம் தொட்டே தமிழர்களுக்கு என்று தனியரசு இருந்து கோலோச்சியிருந்தனர்.

பிரித்தானியர்களும் போர்த்துக்கேயர்களும் ஒல்லாந்தர்களும் என அந்நியர் உள்நுழைந்த காலத்தே தமிழர்களின் இறைமை பெற்ற தனியரசுகள் அழித்தொழிக்கப்பட்டு தென்னிலங்கைச் சிங்களத்தோடு இணைந்ததொரு ஒரு நிர்வாக முறைமை உருவாக்கப்பட்டது.

காலனியாதிக்க முடிவில் தமது இறைமை கொண்ட தமிழ்த் தனியரசை மீட்பதில் போதுமான முனைப்பை நமது முன்னைய தலைமுறை வெளிப்படுத்தாதால் பிரித்தானியர்கள்- சிங்களவர்களோடு இணைந்த நிர்வாக முறையை அப்படியே விட்டுவிட்டு வெளியேறிவிட்டனர்.

வெறிபிடித்த சிங்களமோ வரலாற்று வன்மத்தை வெளிப்படுத்தி இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனத்தை பூண்டோடு கருவறுக்க முனைந்தது.

அகிம்சைப் போராட்டங்கள் பயனற்றுப் போய் தனிநாட்டுக் கோரிக்களுக்கு செவி சாய்ப்பார் ஏதுமில்லாமல் போய் ஆயுதமேந்த வேண்டிய நிலைக்கு தமிழ்த் தேசிய இனம் தள்ளப்பட்டது.

விரிவாதிக்க கோட்பாட்டுடன் உள்நுழைந்த வல்லாதிக்க இந்தியாவோ, "தமிழீழ தாயக" கோட்பாட்டையே சிதைக்க முனைந்தது.

அதனைச் சிதைக்க விடாது வல்லாதிக்க இந்தியாவுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் போரிட்ட நிலையில் புலிகளை முற்றாக இல்லாதொழிக்க சகோதர யுத்தத்தை உருவாக்கியது இந்தியாதான் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியே சுட்டிக்காட்டியும் இருக்கின்றார்.

தேசத்தின் விடுதலையை நேசித்து திட்டமிட்ட உண்மையும் அர்ப்பணிப்பும் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், பலம்பெற அவர்களே ஏகப் பிரதிநிதிகளாக இன்று தமிழீழத் தனியரசைக் கட்டியெழுப்பி வருகின்றனர்.

தமிழீழத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் "அறிவிக்கப்படாத ஒரு தனியரசு நிர்வாகத்தை" நடத்திக் கொண்டு அனைத்துலக நாடுகளின் அங்கீகாரத்துக்காக காத்திருக்கின்றனர்.

நடந்தது என்ன?

நேபாளத்தில் நேபாள மாவோயிஸ்ட் அமைப்பு 1996 பெப்ரவரி 13-இல் தான் உதயமானது. திடீர் உதயமும் அல்ல அது.

ஏலவே இருந்த நேபாள கொம்யூனிச இயக்கத்தினரை வலதுசாரிகள் என்றும் திரிபுவாதிகள் என்றும் விமர்சனம் செய்துவிட்டுத்தான் ஆயுதப் பாதைக்குத் திரும்பினார்கள்

அங்கும் 10 ஆண்டுகாலமாக "சகோதர கட்சிக"ளுடன் "கருத்து" மோதல்களை மாவோயிஸ்ட் கட்சி மேற்கொள்ளாமல் இல்லை.

ஈழத்திலும் இந்திய றோ தலையிடாத வரை-

இந்தியப் பேரரசு தனது வல்லாதிக்க விரிவாதிக்க கனவை நடைமுறைப்படுத்த முனையாத வரை

எத்தனையோ குழுக்கள் சுதந்திரமாக நடமாடிய வரலாறும்-

புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் ஒரு கட்டத்தில் ஐக்கியமாக நிற்க முயன்ற வரலாறும்

இந்த மண்ணிலும் நிகழாமல் இல்லை.

இதே தமிழ்நாடு முதல்வர் கலைஞர்தான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இப்படிக் கூறியதாக இந்தியாவின் ஜெயின் ஆணையம் தனது அறிக்கையில் கூறியும் உள்ளது.

"Faced with such strident criticism in the State Assembly, Sri
Karunanidhi, on 8th May 1990 , on the floor of the Assembly is
reported to have accused the Research and Analysis wing (RAW)
of trying to create a rift between the Centre and the State
appealed to the Prime Minister to take appropriate action. He alleged
that the RAW which was responsible in the past for creating
divisions among various Tamil groups of Sri Lanka was doing
the same between the Centre and the State." (நன்றி: ஈழப் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி" நூல், விடுதலை க. இராசேந்திரன், தமிழ்நாடு)


"இலங்கையில் உள்ள தமிழ்க் குழுக்களிடையே பிளவை ஏற்படுத்தியமைக்கும் அதேபோல் இந்திய மத்திய மற்றும் இந்திய மாநில அரசுகளிடையே பிணக்கை உருவாக்கியதற்கும் இந்திய றோ தான் காரணம்" என்று அன்று குற்றம் சாட்டியவர் இதே முதல்வர் கலைஞர் அவர்கள்தான்.

ஆனால் தான் தெரிவித்த கருத்துக்கு மாறாக- உண்மைக்கு மாறான செய்தியை அதே தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கின்றார். கலைஞர் போன்ற மதிப்பிற்குரிய ஒரு முதுபெரும் அரசியல்வாதியானவர்கள் இந்த வரலாற்றை மறத்தல் அல்லது மறைத்தல் சரிதானா?

அதேபோல்

சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்துத்தான் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்துகிறார்கள்-

ஆனால் சிறிலங்காவின் மகிந்த அரசாங்கத்தை தூக்கியெறிந்து விட்டு சிறிலங்காவில் "புலிகள்" அரசாங்கத்தை உருவாக்க அல்ல அந்த ஆயுதம் தரிப்பு!

ஒரு பேரினவாதத்தின் ஈவிரக்கமற்ற இனப்படுகொலையிலிருந்து ஒரு இனம் தன்னைத் தற்காத்துக் கொள்ள-

இழந்து போன இறைமை கொண்ட தேச அரசுரிமையையை ஒரு இனம் மீட்டுத் தக்க வைத்து வருங்கால தலைமுறைகளின் வாழ்வுரிமைகளைத் தற்காத்துக் கொள்ளவே அந்த ஆயுதத் தரிப்பு!

இலங்கைத் தீவில் கடந்த கால் நூற்றாண்டுகாலமாக நடைபெற்று வரும் விடுதலைப் போராட்டத்தில் எத்தனையோ அமைதிப் பேச்சுக்கள் நடந்துவிட்டன.

அந்த அமைதிப் பேச்சுக்களில் புலிகள் ஒன்றும் பங்கேற்காமலும் இல்லை.

இன்னமும் சொல்லப் போனால் அண்மையில் சிறிலங்காப் பேரினவாத அரசாங்கத்தால் முறித்துக் கொள்ளப்பட்ட "யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை" உருவாக்க அடிப்படையாக அமைந்ததே தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருதலைபட்ச போர் நிறுத்தப் பிரகடனமும் அமைதிப் பேச்சுக்கான அழைப்பும்தான்!

அண்மைய அமைதிப் பேச்சுக்களிலிருந்து புலிகள் தானாக இன்னமும் வெளியேறிவிடவும் இல்லை.

போரினால் பாதிக்கப்பட்ட

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட

தமிழ் மக்களுக்குரிய மனிதாபிமான உதவிகளைக் கூட செய்யாமல்-

இருதரப்பும் ஏற்றுக் கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் எந்த ஒரு சரத்தையுமே ஏற்றுக் கொள்ளாமல்-

யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் 5 இலட்சம் தமிழ் மக்களை பட்டினி போட்டு படுகொலை செய்ய ஏ-9 பாதையை மூடிவைத்ததை மறுபரிசீலனை செய்யாமல்- இருந்ததால்தான், பேச்சு மேசைகளிலிருந்து மட்டுமே புலிகள் வெளியேறினார்கள்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிவிட்டதாக சிங்களம் பிரகடனம் செய்தபோதும் கூட தங்கள் கண்முன்னே சொந்த மக்கள் அநீதியாக படுகொலை செய்யப்பட்ட நிலையிலும் கூட அமைதிப் பேச்சுக்கான கதவுகளை இப்போதும் இன்னமும் திறந்தே வைத்திருப்பதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தானே!

யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையிலேயே நில வல்வளைப்புக்களையும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளும் எத்தனை, எத்தனை யதார்த்தமான உண்மைகள் இதுவே!

தனியரசு நடத்தி அங்கீகாரத்துக்குக் காத்திருக்கும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தையும் அரசு நிர்வாக மாற்றத்துக்கான ஒரு ஆயுதப் போராட்டத்தையும் இணையாக ஒப்பிடுவதும் அப்படியான பிழையான கருதுதல்களுடன் கருத்துகளை வெளியிடுவதும் பொறுப்புகளில் உள்ளோருக்கு பொறுப்பாகாது அல்லவா?.

-செ.விசுவநாதன்.
www.puthinam.com
நன்றி
விசுவநாதன்.

செவ்வாய், நவம்பர் 04, 2008








எனக்கும் பத்திரிகைக்கும் உள்ள தொடர்பு அலாதியானது. அந்த தொடர்பு சிறு வயதிலேயே தொடங்கிவிட்டது. எங்கள் வீட்டில் சாண்டில்யன், கல்கி என்று ஈகப்பட் நாவல்கள், அதுபோக நூலகங்களிலிருந்து எடுத்துவந்த நாவல்கள் என்று அப்போதல்லாம் அந்நாளைய நிறைய இருந்தன.


பள்ளி நாட்களில் குமுதத்தை மறைத்து , மறைத்து படிப்பேன். நான தமிழை எழுத்துகூட்டி வாசிக்கதொடங்கியதே குமுதத்தில்தான். அபோழுதெல்லாம் குமுதம் வெள்ளி தோறும் வந்துவிடும். என்அப்பா ஆபீஸ் விட்டு வந்த உடனேயே குமுதத்திற்காக எனக்கும் எனது அம்மாவிற்கும் ஒரு அடிதடியீ நடக்கும். இந்த சண்டை பத்தாதென்று பக்கத்துவீட்டு அக்கா குணசுந்தரி வேறு குமுதம் வாங்க வந்துவிடும். (கடுப்பு!)


நான் சிறுவன் என்பதால் குமுதத்தை எடுத்து கொண்டு பின் புறத்தில் உள்ள எங்கள் வீட்டு புளிய மரத்தில் ஏறிவிடுவேன். அப்புறம் என்ன குரங்கு கதை தன், முழுவது படித்து விடு தான் இறங்குவேன்!!!!. புளியமரம் பற்றி வேறு ஒரு சந்தர்பத்தில் கூறுகிறேன்.....


பிர்ர்பாடு கல்லூரி முடிந்து சென்னை வந்து, குமுதம் அலுவலகத்தை தேடி அலைந்தது தனி கதை. 151 புரசை வாக்கம் நெடுஞ்சாலை, இது தான் குமுதம் அட்ரஸ். நமக்கு மெட்ராஸ் புதுசு என்பதால் தட்டு தடுமாறித்தான் பத்திரிகைகள் கண்டுபிடிக்க அவங்க. கையில் காசும் இல்லை. எல்லாம் நடராஜ சர்வீஸ் தான். வந்து பார்த்தால் பழைய தாலுகா ஆபீஸ் போல் இருந்தது. ஒரு பழய கால கட்டிடம். எனது கற்பனயில் இருந்த குமுதம் வேறு, நிஜத்தில் குமுதம் வேறு.

அப்போதெல்லாம் குமுதத்தில் சாண்டில்யனின் சரித்திர கதைகள் தொடராக வெளிவரும், கடல்புறா, சீன மோகினி, யவன ராணி என்று ஏகப்பட்ட கதைகள் தொடராக வந்தவண்ணம் இருக்கும். அப்பப்பா... அந்த நீண்ட நெடிய வர்ணனைகள், காலத்தால் அழியாத காவியங்கள். மனதை கட்டிபோடும் அந்த கதைகள் இன்றும் படித்தவரின் மனதில் நீங்காத நினைவுகளாக இருக்கும்.
அப்புறம் ரா. கீ. ரங்கராஜனின் தமிழாக்கம் சையப்பட்ட கதைகள், அது தனி ருசி!!
புகழ் பெற்ற ஆங்கில நாவல்கள் தமிழனுக்குகிடைத்ததில் ரா. கி. ர. இக்கு தனி பங்கு உண்டு. மயிர்கூசொரியும் அந்த கதைகள் தமிழாக்கம் செயப்படதுபோலவே இருக்காது. அதுதான் ரா. கி. ரங்கராஜன்.
-தோழன் ம பா

















வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...