புதன், டிசம்பர் 02, 2015

சென்னை வரலாற்றில் முதன் முறையாக பத்திரிகைகள் முடக்கம்!.



கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்த பெரு மழை சென்னையை வெள்ளக்காடாக மாற்றியிருக்கிறது. 

துண்டிக்கப்பட்ட சாலைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சென்னை மாநகரமே முடங்கியுள்ளது. இதனால் பத்திரிகைகள் வெளி வெருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தி இந்து நாளிதழின் அச்சகம் சென்னை புற நகரான மறைமலை நகரில் இயங்கி வருகிறது. அச்சகத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் பத்திரிகைகள் அச்சிடுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதோடு இ இந்து நாளிதழின் அச்சக ஊழியர்கள் அண்ணா சாலை அலுவலகத்திலிருந்து மறைமலை நகருக்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள். நேற்று நகரமே ஸ்தப்பித்ததால் இந்து நாளிதழின் பேருந்துகள் குறித்த நேரத்தில் மறைமலை நகருக்கு செல்ல முடியவில்லை. அதனால் பத்திரிகையை பிரிண்டு செய்ய முடியாத் இக்கட்டான நிலை ஏற்பட்டது. "நாளை தி இந்து ஆங்கிலம மற்றும் இந்து தமிழ இரண்டும் வெளிவராது" என்று நேற்று இரவே அறிவித்துவிட்டார்கள். தி இந்துவின் வரலாற்றில் இது முக்கியமான செய்தியாகும்!.

சென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கள் பகுதியில் இயங்கி வரும் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில பத்திரிகையும் வெளி வரவில்லை. அதன் அச்சுக் கூடத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் பத்திரிகை வெளிவரவில்லை.

அதேபோல் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழும் இன்று நிறைய இடங்களில் வெளிவரவில்லை. பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் இன் நாளிதழின் அச்சுக் கூடத்திலிருந்து பிரிண்ட் செய்யப்பட்ட நாளிதழ்களை நகரின் பல பகுதிக்கு எடுத்துச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி, தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமலர் நாளிதழ்கள் விநியோகம் சீராக நடைபெற்று இருக்கிறது. அம்பத்தூர் அண்ணா நகர், மத்திய சென்னை, வட சென்னை போன்ற பகுதிகளில் சீரான விநியோம் நடைபெற்றது. அம்பத்தூர் வாசிகள் தினமணி அலுவலகத்திற்கு நேரிடையாக வந்து பத்திரிகைகளை வாங்கி சென்றனர்.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் பத்திரிகைகள் வெளிவெருவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தினந்தந்தி, தினகரன் நாளிகழ்களில் விநியோகத்திலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எத்தகைய இயற்கை இடற்பாடுகள் ஏற்பட்டாலும் பத்திரிகைள் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டதில்லை. ஆனால் இந்த பெரு மழை அதை தவிடுபொடியாக்கி வரலாறு படைத்துவிட்டது.

இது 02/12/2015 புதன் கிழமை கள நிலவரம்.

‪#‎chennaiRains‬ ‪#‎Dinamani‬ ‪#‎Thenewindianexpress‬ ‪#‎TOI‬ ‪#‎dailythanthi‬ ‪#‎thehindu‬ ‪#‎dinakaran‬ ‪#‎DC‬ ‪#‎chennaimemories‬
‪#‎சென்னைபெருமழை‬

திங்கள், நவம்பர் 16, 2015

இது லா.ச.ரா நூற்றாண்டு!.


                ந்த நூற்றாண்டின் சொல்லாடல் மிக்க எழுத்தாளர் லா.ச.ராவின் நூற்றாண்டு இது.

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் 1916 - அக்டோபர் 30ம் தேதி தமிழ் நாட்டில், லால்குடியில் பிறந்தார்.  200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்து எழுத்தாளர்.  

தினமணி கதிரில் நான் எழுதிய  கட்டுரை!.
தனது 17வது வயதில் இருந்து எழுத தொடங்கிவிட்ட லா.ச.ரா தமிழின் தவிற்க முடியாத தனித்துவமிக்க எழுத்தாளர். தனது கவித்துவமான எழுத்து நடையில், புரிதலுக்கு அப்பாற்பட்ட அனுபவ தரிசனங்களை தனது எழுத்தில் வாரி இறைத்தார். புரிந்தவன் புத்திசாலி, புரியாதவன் அபாயக்கசாலி என்ற பேதத்தின் அடிப்படையில் அவரது எழுத்துகள் துலாக்கோலில் அளவிட முடியாதவையாக இருந்தன.

1989ல் 'சிந்தா நதி' கட்டுரை தொகுப்பிற்காக லா.ச.ராவிற்கு சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பட்டது.  தினமணி கதிரில் வாரம் இரண்டு பக்கங்கள் எழுத சொன்ன போது முதலில் மறுத்த லா.ச.ரா பின்னர் ஒப்புக்கொண்டு எழுத தொடங்கினார். சிந்தா நதி 48 வாரங்கள்  தினமணி கதிரில் அலைகடலென புரண்டு மோதியது.  அதன் பிரவாகத்தில் காடுகள், மலைகள், நகரங்கள், மனிதர்கள், உணர்வுகள்,  என்று  பூமிக்கு மேல் உள்ள அனைத்தையும் இழுத்து சென்றது. இன்றளவும் இணையதள எழுத்துகளுக்கு 'சிந்தா நதி'யே முன் நதி, மூத்த நதி!.  கட்டுரையை கதை போலவும், கதையை கட்டுரை போலவும் சொல்லும் உத்தியை அவர் சிந்தா நதி முழுவதும் படரவிட்டிருந்தார். அதன் படிமங்களே இன்றும் ஆழமாய் படிந்துக் கிடக்கிறது. எல்லாம் அவரிடத்தில் இருந்து பெறப்பட்ட ஒன்ற!. லா.ச.ராவின் எழுத்துகள் புரிதலுக்கு அப்பாற்பட்ட அனுபவ தரிசனங்களை தரவல்லவை!

சிந்தா நதியில் 'சொல்' என்ற கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறார்:

'பிற வாயிலாகப் பிறந்த வார்த்தைகளின் தனித் தன்மையை அதனதன் ஓசையினின்று தவிர்த்து? அதனதன் மோனத்தில் நிறுத்தி, த்வனியை அடையாளம் கண்டு கொண்டதும், த்வனி தீட்டும் மறு ஓவியங்கள் பயக்கும் மயக்கும். புலன் மாறாட்டத்தில் செவி பார்க்கும், கண் கேட்கும், உணர்வு மணக்கும்.

பாதங்களடியில் மணியாங்கற்களின் சரக் சரக்...

தருக்களின் இலைகளினூடே, காற்றின் உஸ்!...

அந்தி வேளையில் விண்மீன்கள் ஜரிகை கட்டிய இருள் படுதாவின் படபடப்பு.

நட்சத்திரங்கள் போன்று மின்னும் எழுத்துகள் நம்மை விட்டு விலகியே இருக்க விரும்புகின்றன. அவை கைகளுக்குள் தட்டுப்படாதவரைக்கும்தானே அவை நட்சத்திரங்கள்?!.

ரசிக்கத்தக்க அளவீடுகளில் அவரது பாணி எழுத்துகள் பிரிதொருவர் தொடராவண்ணமே இருக்கின்றன.

"என் எழுத்துகள் புரியவில்லை என்கிறார்கள். 'புரிந்தது புரியாதது இவை இரண்டுமே தற்காலிக நிலைகள். இன்றைக்கு புரியாவிட்டால் நாளைக்கு புரிகிறது. இல்லாவிட்டால் நாளைமறுநாள். அட, கடைசிவரை புரியாவிட்டால்தான் என்ன ? இருந்து விட்டுப் போகட்டுமே எழுதுபவனுக்கே எல்லாம் புரிந்து விடுகிறதா என்ன?' புரிவதைக்காட்டிலும் வாசகன் உணரக்கூடியது, உணர வேண்டியது விஷயத்தில் தாக்குதல் அந்த முதல் பாதிப்பு Impression, Impact ரத்தத்துடன் கலந்து உள்ளத்தில் ரஸாயணம் நிகழ்வது.

நான் ஜனரஞ்சகமான எழுத்தளன் இல்லை. புரியாத எழுத்தாளர் என்ற பெயரை சம்பாதித்துக் கொண்டு அப்படியே, அதனாலயே பிரபலமாகிவிட்டவன். ஏதாவது புரியும் படி எழுதினால், எனக்கு இப்போது ஆபத்துதான். தரம் குறைந்துவிட்டது என்று என்னை வேறு ஒரு பிரிவில் சேர்த்துவிடுவார்கள். இரண்டு மூன்று பேர் சொல்லிவிட்டார்கள் எனக்கு மாற்றேக் கிடையாதாம்; முன்னாடியும் கிடையாதாம், பின்னாடியும் கிடையாதாம். என்னோடு நான் முடிந்தது. இப்படி இருப்பதில் எனக்கு ஒன்றும் அவ்வளவாக உடன்பாடில்லை. ஆனால், நான் என்ன செய்ய முடியும்?".

லா.ச.ராவின் எழுத்துகள் ஆத்ம சுத்திகரிப்பை செய்யக் கூடிய மந்திரத்தை பெற்று இருக்கிறது. கதைகளின் தோதான இடங்களில் அதை அவர் படைத்துவிடுகிறார். தனது முதல் கதையான ஜனனியில் இவ்வாறு எழுதுகிறார் "தேவி, நீ இதை அறிய வேண்டும். பொறியுள் எலி அகப்பட்ட பிறகு. கதவைத் திறந்து வைத்தாலும், அது பொறிக்குள்ளேயேதான் சுற்றிக்கொண்டிருக்கும். அகப்பட்டுக் கொண்ட பிறகு, அது விடுதலைக்குக்கூட பயப்படுகிறது."

மானுடத்தின் மீதான விடுதலையை இதைவிட எளிதான புரிதலில் யாரும் சொல்லிவிட முடியாது. அகப்பட்டுக்கொண்ட எலி போன்ற அவஸ்த்தையை பெற்ற பிறகே விடுதலைக்கான வாசலை அடைகிறோம். ஆனால் அந்த கதவு ஏற்கனவே திருந்துதான் இருக்கிறது என்பதை உணராமலேயே காலம் நம்மை கடத்திவிடுகிறது.

லா.ச.ரா முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதத் தொடங்கினார். பாபுஜி (Babuji) என்ற கதை Short Story என்ற பத்திரிகையில்  1934ல் வெளிவந்தது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் யானைக்கு மதம் பிடிப்பது பற்றிய கதை அது!. அதைத் தொடர்ந்து அவரை தமிழ் முழுவதுமாய் சுவிகரித்துக் கொண்டது.  அவரை பொறுத்த வரையில் அயராத உழைப்பாளி. தான் தேடும் நயம் கிடைக்கும்வரை மீண்டும் மீண்டும் எழுதியதையே பலமுறை எழுத அவர் தயங்கியதே இல்லை. அலுத்துக் கொள்வதுமில்லை. பல சிறுகதைகள் அவரது அடிவாரத்தில் வருடக்கணக்கில் ஊறிக்கிடந்தவை. எந்த சமயமும் விட்ட இடத்திலிருந்து அந்த ஸ்ருதி கலையாமல் மீண்டும் தொட்டுக் கொள்ள தன் நினைவை பழக்கிக்கொண்டவர் . அவர் கதை எழுத உட்கார்ந்ததில்லை. கதை மனதில் உட்கார ஆரம்பிக்கும்போது எழுத ஆரம்பிப்பார். கதை தன்னை நடத்திக் கொள்ளும் போது அதன் உருவத்தை எழுத்தாக்கினார் என்று நினைவு கூறுகிறார் லா.ச.ராவின் புதல்வர் லா.ச.ரா.சப்தரிஷி.

நன்றி தினமணி கதிர். 
15.11.2015.

 ()()()()()

இனி லா.ச.ரா நூற்றாண்டு விழா தொகுப்பு...

விழாவில் எழுத்தாளர் சாரு நிவேதிதா உரையாற்றுகிறார்.
அருகில் இடமிருந்து: லா.ச.ராவின் துணைவியார் ஹைமவதி, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், லா.ச.ராவின் புதல்வர் லா.ச.ரா.சப்தரிஷி, கணையாழி ஆசிரியர் ம.ராஜேந்திரன், விமர்சகர் முருகேச பாண்டியன்.  (Pix courtesy: Charuonline.com)


        ழுத்தாளர் லா.ச.ராவின் நூற்றாண்டு விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில், அண்மையில்  நடைபெற்றது.  டிஸ்கவரி புத்தக நிலையம் இன் நூற்றாண்டு விழாவினை முன்னெடுத்து நடத்தியது. பத்திரிகைகள் அல்லது பெரிய அமைப்புகள் செய்ய பணியை டிஸ்கவரி வேடியப்பன் செய்திருப்பது பாராட்டுக்குறியது. 


நூற்றாண்டு விழாவில் லா.ச.ராவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை லா.சா.ராவின் புதல்வர் சப்தரிஷி வெளியீட லா.ச.ராவின் துணைவியார் ஹைமவதி லா.ச.ரா  பெற்றுக் கொண்டார்.  383 பக்கங்களை கொண்ட நேர்த்தியான இத் தொகுப்பு புதிய வாசகர்களை தன் பக்கம் இழுக்கும் சக்தி கொண்டது.  டிஸ்கவரி தனக்கான புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

"லா.ச.ராவை வாசிக்குபோதெல்லாம் புத்தகத்தின் பக்கங்களில் அடிக் கோடிட்டு குறித்துக் வைத்துக் கொள்ளவேண்டும். அந்தளவிற்கு வாசகனின்று விட்டு விலகாத எழுத்து அவருடையது' என்றார் எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது சிறப்புரையில்.

கணையாழி ஆசிரியர் ம.ராஜேந்திரன் தலைமை உரையாற்றினார்.  அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், விமர்சகர் முருகேச பாண்டியன் மற்றும் பேராசிரியர் ராமகுருநாதன் ஆகியோர் லா.ச.ராவைப் பற்றி  நினைவு கூர்ந்தனர்.

நிகழ்ச்சிகளை கவிஞர் அகரமுதல்வன் தொகுத்து வழங்கினார். லா.ச.ராவின் நூற்றாண்டு விழாவினை கணையாழி, டிஸ்கவரி புக் பேலஸ், ஆம்பல், யாவரும் டாட் காம் ஆகியன ஒருங்கிணைந்து நடத்தின.

புதன், அக்டோபர் 21, 2015

வலைப்பதிவர்கள் கவனத்திற்கு.....

        

          தினமணி இளைஞர் மணியில் வலைத் தளங்கள் (Blogs) பற்றி அறிமுகம் செய்கிறோம்!. இது செவ்வாய் தோறும் இளைஞர் மணியில் 'இணைய வெளினியிலே!" என்ற பெயரில் வெளிவருகிறது.

இதில் சிறந்த வலைத்தளங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். வலைப்பதிவர்கள் தங்களது வலைத்தள முகவரி மற்றும் மொபைல் எண் விபரத்தை  எனது மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Email : greatmaba@gmail.com

தேர்ந்தெடுக்கப்படும் வலைத்தளங்கள் தினமணி இளைஞர் மணியில் பிரசுரிக்கப்படும்.
நன்றி!.

அன்புடன்
தோழன் மபா.


வெள்ளி, செப்டம்பர் 18, 2015

சென்னையில் 'ஆரோக்கியம்' மருத்துவ கண்காட்சி!.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் அப்பலோ மருத்துவமனை இணைந்து வழங்கும் 'ஆரோக்கியம்' மருத்துவ கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் நாளை தொடங்குகிறது. சனி மற்றும் ஞாயிறு நடைபெறுகிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் வருடம் தோறும் பல்வேறு கண்காட்சிகளை இந்தியா முழுவதும் நடத்திவருகிறது.

கடந்த ஆண்டை தொடர்ந்து இந்த ஆண்டும் அப்பலோ குழுமத்துடன் இணைந்து இரண்டு நாள் மருத்துவ கண்காட்சியை நடத்துகிறது. சென்னை வர்த்தக மையத்தில் (CTC) நடைபெறும் இக்கண்காட்சியில் முன்னணி மருத்துவ நிறுவனங்கள் கலந்துக் கொள்கின்றன.

இக் கண்காட்சியில் சர்க்கரை நோய், கண் பரிசோதனை, செவித்திறன் பரிசோதனை, உடல் எடை மற்றும் BMI பரிசோதனை, அக்குபஞ்சர் பரிசோதனை, பாரம்பரிய மருத்துவ பரிசோதனைகள், BMD பரிசோதனை, இரப்பை மற்றும் கல்லீரல் நோய் ஆலோசனைகள், சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறை ஆலோசனைகள் போன்ற பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.

இரண்டு நாள் கண்காட்சியில் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் சிறப்புரைகள் வழங்குகின்றனர்.

19.9.2015 சனிக் கிழமை மாலை 4.30 மணிக்கு - 'உடல் பருமன்' - Dr. ராஜ்குமார் பழனியப்பன், Bariatric Surgeon, Apollo Hospitals Chennai.

19.9.2015 சனிக் கிழமை மாலை 5 மணிக்கு - 'உணவும் வாழ்வும்' சிந்தனை சித்தர் எம்.ஜி.எல். வேலாயுதம், C&MD, Alma Groups.

19.9.2015 சனிக் கிழமை மாலை 5.30 மணிக்கு - நலம் தரும் நாட்டு மருத்துவம்' சன் டிவி புகழ் டாக்டர் சக்தி சுப்ரமணி.

'ZUMBA FITNESS SESSION'

உடலை ட்ரிம்மாக வைத்துக் கொள்ள சர்வதேச புகழ்பெற்ற 'சும்பா நடனம்' 19.9.15 அன்று மாலை 6 மணிக்கும், 20.9.15 அன்று மாலை 5.30க்கும் நடத்தப்படுகிறது.

ஆரோக்கியம் காண அனைவரும் வாங்க!.
For Free Health Check-Up Call 9282438117/9962901299 தொடர்புகொள்ளவும்!.

சனி, செப்டம்பர் 12, 2015

புரட்சியின் நிறம் - சே குவேரா!


எதார்த்தம் பேசும் நுழைவு வாயில்!
         ழக்கமாக ஓவிக் கண்காட்சி என்றால் பளபள பளிங்கு தரையும், ஓவியத்தின் மீது மட்டும் ஒளி உமிழும் விளக்குகள் போர்த்தப்பட்ட அரங்குகளில்தான் நடைபெறும். காலடி சத்தம் கூட காதில் விழாத ஒரு அந்தகாரத்தின் அமைதியில் அந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். மொளன நகர்வுகளில் பார்வையாளனுக்கும் ஓவியத்திற்குமான புரிதல் காலடியின் இடைவெளியில் கரைந்து போகும்.

ஆனால் புரட்சியாளன் சே குவேராவின் ஓவியக் கண்காட்சி அப்படி அல்லவே....?!.

ஒரு மேல் நிலைப்பள்ளியின் வகுப்பறையில்,  மாணவர்களின் கூக்குரலிக்கிடையே இவ் ஓவியக்காட்சி நடத்தப்படுவதே புரட்சிக்கான பிரத்யேக அழகுதான். 

இந்த நூற்றாண்டின் சின்னம் என்று போற்றப்பட்ட சே குவேராவை விதவிதமாக வரைந்து காட்சிப்படுத்தியிருக்கிறார் ஓவியர் புகழேந்தி!. 'சே குவேரா புரட்சியின் நிறம் ஓவியக் காட்சி' என்ற தலைப்பில் ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

.இனம் மொழி கடந்து உலக விடுதலைக்காக போராடிய அந்த மனிதனை இன்றைய இளைஞர்கள் தங்களது தலைவனாக வரித்துள்ளனர்.

காங்கோ காடுகளில் ஜீப்பின் பாணட்டில் துப்பாக்கியுடன் அமர்ந்து செல்லும் சே குவேரா..... போர் முனையில் வீர நடை போடும் சே குவேரா, துப்பாக்கியை கையில் பிடித்தபடி கடைவாயில் கனன்றுக் கொண்டு இருக்கும் சுருட்டுடன் சே குவேரா என்று ஓவியங்களின் பின்னணியில் ஒரு நீர் கோடாய் விரவி இருக்கிறார் சே. அதுவே நம்மை அவரது படையில் சேர்க்க வைத்து வெற்றி கூச்சலிடவைக்கிறது. இத்தகைய புரிதல்கள் ஒரு கலைஞனின் வெற்றியாகவும் அமைந்துவிடுவது சிறப்பு!.

முன்னதாக இவ் ஓவியக் காண்காட்சிப் பற்றி தனது முக நூலில் பதிவிட்டிருந்தார் நண்பர் வேடியப்பன். அதனாலயே அங்கு செல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது, அவருக்கு நன்றி!..

சென்னை வெங்கட் நாராயணா சாலையில், திருப்பதி தேவஸ்தானம் எதிரில் இருக்கும் சி.தெ. நாயகம் மேல் நிலைப் பள்ளியில் .இவ் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது. வரும் ஞாயிறு (13ம் தேதி) வரை இக் கண்காட்சி நடைபெறுகிறது. 

அவசியம் பார்க்கவும்!.

திங்கள், ஆகஸ்ட் 24, 2015

புத்துயிர் பெறுமா கபடி...?


  சடுகுடு ஆடி வந்த முந்தைய தலைமுறை குடுகுடு கிழங்களாக                     
மாற...மாற.. சடுகுடுவும் கிடுகிடுவென ஆடிப்போய் கிடக்கிறது.                       
 

          
 (கடந்த சனிக்கிழமையன்று தினமணியில் வந்த எனது கட்டுரை )
          றுதிக் கட்டத்தை எட்டிவிட்டது புரோ கபடி லீக் போட்டி. கடந்த மாதம் தொடங்கிய புரோ கபடி லீக், கபடி விளையாட்டில் புதிய மின்னலைப் பாய்ச்சியிருக்கிறது. கிரிக்கெட்டை தொடர்ந்து கபடி விளையாட்டிலும் லீக் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புரோ கபடி லீக் போட்டிகள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இது கபடி ஆர்வலர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திருக்கிறது.

 இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 8 அணிகள் இப் போட்டிகளில் மோதுகின்றன. ஆனால், கபடியின் தாயகமான தமிழ்நாட்டிலிருந்து எந்த ஓர் அணியும் கலந்துக் கொள்ளவில்லை என்பதுதான் வேதனையான ஒன்று.

 சடுகுடு ஆடி வந்த முந்தைய தலைமுறை குடுகுடு கிழங்களாக மாற...மாற.. சடுகுடுவும் கிடுகிடுவென ஆடிப்போய் கிடக்கிறது. தொன்மை இனமான தமிழினத்தின் வீர விளையாட்டான சடுகுடு என்ற கபடி இன்று கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் அழிந்துக் கொண்டு வருகிறது.

 காசு செலவு இல்லாத விளையாட்டு இது. உடல் வலு, மூச்சுப் பயிற்சி என்று கூடுதல் பலனும் நமக்கு கிட்டும். 

 உத்தி பிரித்து கபடி...கபடி... என்று தொடையைத் தட்டிக் கொண்டு அடங்கா ஆவேசத்துடன் எதிர் அணிக்குள் புகுந்து களமாடினால் சுற்றி வேடிக்கை பார்க்கும் கூட்டம் ஹோவேன்று ஆர்ப்பரிக்கும். அப்படி ஓர் உணர்ச்சிமிக்க விளையாட்டு கபடி.

 அன்றைய நாள்களில் தமிழகத்தில் திரும்பிய இடமெல்லாம் கபடி போட்டிகள் நடைபெறும். தெருவுக்குத் தெரு ஒரு கபடி அணி இருக்கும். பகல், இரவு ஆட்டமாக போட்டியை இரண்டு நாள் நடத்தும்போது, ஊரே திருவிழாக் கோலம் பூண்டு இருக்கும். 

 ஆனால் இன்றோ, தமிழர்களின் வீர விளையாட்டான கபடியின் நிலை... நினைத்தாலே நெஞ்சம் வெடித்துவிடும் போல் இருக்கிறது. மனிதனின் நேரத்தை விழுங்கும் கிரிக்கெட்டின் வருகைக்குப் பின்னர்தான் கபடி களையிழந்து போய்விட்டது.

 தமிழகத்தில்தான் கபடி விளையாடுவது குறைவாக உள்ளதே தவிர, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், பஞ்சாப், பிகார், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் போற்றப்படக் கூடியதாக கபடி வாழ்கிறது. வங்கதேசத்தில் கபடி தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

 இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், ஈரான், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தேர்ச்சி பெற்ற கபடி அணிகள் இருக்கின்றன. 13 உலக நாடுகளில் கபடி விளையாடப்படுகிறது என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
 இந்தியாவுக்குத் தொடர்ந்து தங்கப் பதக்கம் பெற்றுத் தரும் விளையாட்டுகளில் கபடியும் ஒன்று. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் கபடி அணி தொடர்ந்து ஏழு முறை தங்கப் பதக்கம் வென்று வருகிறது. 

 1985-இல் டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி முதல் முறையாக உலக அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 1990-இல் நடைபெற்ற 11}ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் கபடி களம் இறக்கப்பட்டது.

 ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய உள்விளையாட்டு அரங்கப் போட்டி, ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி என்று மூன்று பிரதான விளையாட்டுப் போட்டிகளில் கபடி சேர்க்கப்பட்டது. இம் மூன்றிலும் சேர்க்கப்பட்ட ஒரே விளையாட்டு கபடி மட்டுமே. இதுவரை கபடிக்காக நடைபெற்ற அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலும் கோப்பையை இந்தியாவே வென்றிருக்கிறது. 

 இந்த ஆண்டு புரோ கபடி லீக் போட்டியில் பல்வேறு தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இது கபடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
 தற்போது நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டியில் பல்வேறு அணிகளுக்காக புகழ்பெற்ற தமிழக வீரர்கள் விளையாடி வருகின்றனர். கடந்த முறை புரோ கபடி போட்டியில் பட்டம் வென்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் பயிற்சியாளர் தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பது குறிப்பிடத்தக்கது. நட்சத்திர வீரர்கள் இல்லாத ஜெய்ப்பூர் அணியை அவர் புரோ கபடி லீக் போட்டியின் முதல் சாம்பியனாக மாற்றினார்.

 இந்தியாவின் சிறந்த தடுப்பாட்டக்காரரான சேரலாதன் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகின்றார். தற்போதைய போட்டியில் முன்னணியில் இருக்கும் யூ மும்பா அணியில், தேர்ச்சி பெற்ற தமிழக வீரர்கள் விளையாடுகின்றனர். தமிழக வீரர்களின் ஆட்ட பாணி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துவிடுகிறது.

 வளமையான கபடி பாரம்பரியம் கொண்ட தமிழகத்திலிருந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் புரோ லீக் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்திலிருந்து ஓர் அணியும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பது நெருடலான ஒன்று. ஐபிஎல் போன்றே இதிலும் அணிகள் ஏலம் விடப்பட்டிருக்கின்றன.

 அப்படி இருக்க தமிழகத்திலிருந்து ஒருவர் கூடவா தமிழகத்தின் பெயரில் அணியை வாங்க முடியவில்லை? ஏலத் தொகை அப்படி ஒன்றும் கோடிகளில் இருக்கவில்லை. லட்சங்களில்தான் இருக்கின்றன. தமிழக நலன் சார்ந்த எந்த ஒரு நிறுவனத்துக்கும் இந்த நிகழ்வு கவனத்தில் வராதது மிகவும் கொடுமை.

அமெச்சூர் கபடி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (ஏ.கே.எஃப்.ஐ.) இணையதளங்களிலும், கபடிக்கான விக்கிபீடியாவிலும் கபடி இந்தியாவின் பழைமையான விளையாட்டு என்றே குறிப்பிடப்படுகிறது. இந்திய அளவிலோ அல்லது உலக அளவிலோ கபடி தமிழர்களின் விளையாட்டு என்பதைப் பதிவு செய்ய நாம் தவறிவிட்டோம்.

 கைப் பிடி, கைப் பிடி என்று சொல்லே கபடியாக மாறியது என்று இங்கு எத்தனை பேருக்குத் தெரியும். காலத்தே பதிவு செய்யாத நமது பிறவிக் குணத்தால் நமது பாரம்பரியமான கபடி விளையாட்டை தாரைவார்த்து இருக்கிறோம். 

 நமது வரலாற்றை நாம் மறந்தால் வரலாறு நம்மை மறந்துவிடும். எதிர்வரும் ஆண்டுகளிலாவது புரோ கபடி லீக் போட்டியில் தமிழகத்திலிருந்து கபடி அணிகள் இடம்பெற வேண்டும் என்பதே சாமானிய தமிழர்களின் எதிர்ப்பார்ப்பு.

திங்கள், ஆகஸ்ட் 17, 2015

சரித்திரம் படைத்த சாமானிய மனிதன் லியோ முத்து!.




              இந்தியாவின் தென் கிழக்கு மூலையில் உள்ள, அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டியில் எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர், பின்னாளில் பிரசித்திப்பெற்ற கல்வி நிலையங்களை தொடங்குவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 

கனவுகளின் கதவுகளை நோக்கி தீரமுடன் நடக்கத் தொடங்கிய அந்த எளிய மனிதர், தனக்கான பெரும் சாம்ராஜியத்தை நிறுவிவிட்டு சென்றிருக்கிறார்.
நமக்கெல்லாம் அரசாங்க வேலைக் கிடைத்தால் என்ன செய்திருப்போம்....?. ஓய்வு பெரும் நாள் வரையில் ஓய்வாக வேலை செய்துவிட்டு, ஓய்வு பெற்றதும் வீட்டில் அமர்ந்து ஓய்வாக பென்ஷனை வாங்கி காலத்தை கடந்திருப்போம். ஆனால் பொதுப்பணித்துறையில் வேலை செய்த ஒருவர் தனக்கு கிடைத்த சொற்ப நேரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி, அதன் நெளிவு சுளிவுகளை கற்று நல்லதொரு நிறுவனத்தை தொடங்கினார். அதுவே அவரை சிங்கமென இத் தொழில் உலகில் கர்ஜிக்கவைத்து அவருக்கான நெல்லதொரு பெயரை பெற்றுத் தந்தது. 

அவர் லியோ முத்து!. 
 ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் தலைவர். 

கடந்த சில மாதமாக உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த மாதம் ஜூலை 10ம் தேதி, தனது 63வது வயதில் இயற்கை எய்தினார். இவரது இயர்பெயர் எம்.ஜோதிபிரகாசம். 

அப்துல் கலாம் மீது மிகுந்த மரியாதை கொண்ட லியோ முத்து, தனது கல்வி நிறுவனங்களை ஒரு முன் மாதிரி கல்வி நிலையமாக மாற்றி இருக்கிறார், கடந்த சில வருடங்களாக அண்ணா பல்கலைக்கழத்தின் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டு வருகிறது ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி. 

அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் எந்த ஒரு பின்புலமும் இல்லாத ஒரு கல்லூரி, தொடர்ந்து தரவரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் வருவது என்பது பாராட்டப் படவேண்டிய ஒன்று!. 

மாணவர்கள் விரும்பும் பொறியியல் கல்லூரி, பெற்றோர்கள் விரும்பும் பொறியியல் கல்லூரி என்று இரண்டு விதமான பொறியியல் கல்லூரிகளை நாம் பார்க்க முடியும். இன்றைய கால கட்டத்தில் படித்து முடிக்கும் முன்பே பிளேஸ்மெண்ட் மூலம் வேலை வாய்ப்பினை பெருவதையே மாணவர் சமுதாயமும் பெற்றோர்களும் விரும்புகின்றனர். தரமான கல்வி, கட்டுப்பாடு, ஒழுக்கம் இவற்றில் அவர்கள் எந்தவித சமரசமும் செய்துக்கொள்வதில்லை. இரு தரப்பும் விரும்பும் ஒரு கல்லூரியாக தன்னை தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொள்வது என்பது மிகவும் சவாலான ஒன்று!. அந்த சவாலை மிக அனாயசமாக செய்து முடிக்கிறது ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமங்கள்.

அதனாலயே தமிழகத்தில் இருக்கும் 552 பொறியியல் கல்லூரிகளில் தொடர்ந்து முதல் 10 இடங்களைப் பிடித்துவிடுகிறது. 

லியோ ஹவுஸிங்கை தொடங்கி நடத்திவந்த லியோ முத்து, 1989 வாக்கில் சென்னை மடிப்பாக்கத்தில் சாய் மெட்ரிக்குலேஷன் பள்ளியை 137 மாணவர்களைக் கொண்டு தொடங்கினார். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக 100 சதவீத தேர்ச்சியை தக்கவைத்து வருகிறது இப் பள்ளி!. ஒரு கல்விச்சாலையை தொடங்கி இக் சமூதாயத்திற்கு உருப்படியாக எதாவது செய்ய வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. அதுவே பின்னாளில் அவர் சாய்ராம் பொறியியல் கல்லூரி தொடங்க வழிவகுத்தது. தொழிநுட்பக் கல்லூரிகள் மட்டுமல்லாமல் சித்தா, ஆயூர்வேதா, யூனானி, ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளையும், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளையும், பாலிடெக்னிக்குகளையும் நடத்திவருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் கல்லூரிகளை நடத்திவருகிறது சாய்ராம் கல்வி குழுமம்.

லியோ முத்து அவர்கள் விட்டுச் சென்ற பெரும் பணியை, அவரது புதல்வர் சாய் பிரகாஷ் ஏற்று செயல்பட தொடங்கிவிட்டார். கல்வி நிறுவனங்களை நடத்துவது என்பது பெரும் சவாலன ஒன்று. சவாலான அந்த பணியை மிக துணிவுடனும் வெற்றிகரமாகவும் செய்துவருகிறார் சாய்பிரகாஷ். 

()()()() 

இரண்டு வருடங்களுக்கு முன்னர், அவரது நிறுவனத்தைப் பற்றிய செய்தி ஒன்றை அவரது ஒப்புதல் இல்லாமல் எழுதிவிட்டோம். அது எங்களுக்கும் அவருக்கும் மனக் கசப்பை ஏற்படுத்திவிட்டது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் காரம்சாரமாய் ஓடிய அந்த பிரச்சனையை எப்படியோ சமாளித்து முடிவுக்கு கொண்டுவந்தோம். பத்திரிகையாளர்கள் மீது பெரும் அன்பு கொண்டவர். திடீரெண்டு அவரிடத்திலிருந்து போன் வரும் "சார்...... சேர்மன் சார் பேசுறாங்க" என்று அவரது உதவியாளர்கள் யாராவது பேசி போனைத் தருவார்கள். அவர் தொடங்கப் போகும் கல்வி நிலையங்களைப் பற்றி கூறுவார். அவருக்கான கனவுகள் என்பது மிகவும் பெரியதாகவே இருந்திருக்கிறது. என்னை சில நேரங்களில் மாயவரத்துக்காரரே என்றுதான் அழைப்பார். அவரோடு ஒரு நாள் அவரது இல்லத்தில் உணவறுந்தும் பாக்கியமும் கிடைத்தது. 

தாம்பரத்தில் சர்வ வல்லமைப் படைத்த அரசியல் பிரமுகர் ஒருவர் அவரோடு மோதி வந்தார். சாலையில் செல்லும் கல்லூரி பேருந்துகள் மீது இடையூறு ஏற்படுத்திவருவது, மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது, என்று பல வழிகளில் தொந்திரவு கொடுத்து வந்தார். இவர் பல முறை எச்சரித்தும் அந்த அரசியல்வாதி இவரை விடுவதாக இல்லை. முடிவில் இவர் செய்த ஒரு விஷயம் அந்த அரசியல்வாதியை தலையெடுக்க முடியாமல் செய்துவிட்டது.
சாய்ராம் கல்லூரிக்கு அந்த அரசியல்வாதி, என்னென்ன வழிகளில் இடையூறு செய்கிறார். அவரது அரசியல் ரீதியான தில்லுமுல்லுகள், சட்டத்திற்கு புறம்பான அவரது நடவடிக்கைகள், மக்கள் விரோத செயல்கள் என்று பெரும் பட்டியலை தயார் செய்து, அதை ஒரு மாலை பத்திரிகை ஒன்றில் ஒரு பக்கம் விளம்பரமாக கொடுத்துவிட்டார். முதலில் அந்த விளம்பரத்தை வெளியீட மறுத்த நிர்வாகம், இவர் வழங்கிய ஆதாரத்தை அடிப்படையாகவைத்து அந்த விளம்பரத்தை வெளியீட்டது. விளம்பரத்தை வெளியிட்டதோடு மட்டும் நில்லாமல், 50 ஆயிரம் பிரதிகளை காசு கொடுத்து வாங்கி தாம்பரத்தில் வீடு தோறும் விநியோகம் செய்துவிட்டார். அந்த விளம்பரத்தை அந்த அரசியல் பிரமுகர் எதிர்பார்க்கவில்லை. அந்த அரசியல்வாதியின் பொய் முகம் கிழிக்கப்பட்டு அவரது அரசியல் அஸ்திவாரத்தையே தகர்த்தெரிந்துவிட்டார். அத்தகைய போர்குணம்  கொண்டவர் லியோ முத்து. 

இத்தகைய போர் குணம் கொண்டவர்களே தங்களுக்கன வெற்றிகளை அடைகின்றனர். தங்களுக்கான கனவுகளை அடைய... அவர்கள் அயராது உழைக்கின்றனர். அது இச் சமூகம் மேம்படவும், மாணவர் சமுதாயம் நல்லதொரு உலகை படைக்க வழிகாட்டியாகவும் அமைந்துவிடுகிறது.  அத்தகைய மனிதர்களையே நாளைய விருச்சத்தின் விதையாக பார்க்கிறது இவ் உலகம்!. 

 அண்மையில் ( 9.8.2015) லியோ முத்து அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் திராவிடர்க்கழக் தலைவர் வீரமணி கலந்துக் கொண்டு படத்தை திறந்துவைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் தி.ஆர்.பாலு கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார், கம்யூனிஸ்ட் கட்சி நல்லக்கண்ணு, சன் டிவி  வீர பாண்டியன், ஜெயா கல்விக் குழுமத்தின் தலைவர் கனகராஜ், ஆரம்கே மற்றும் ஆரம்டி கல்விக் குழுமத்தின் தலைவர் முனிரத்தினம் போன்றோர் கலந்துக்கொண்டனர்.

விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு லியோ முத்துவின் மருமகனும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டி .ஆர்.பி ராஜா நன்றி கூறினர்.

.
-தோழன் மபா 

வெள்ளி, ஜூலை 31, 2015

போதும் சாவு செய்தி?



டந்த சில நாட்களாகவே இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சாவு செய்தி தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர்தான் இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன் காலமானர். தமிழக சினிமா ரசிகர்களின் ஒட்டு மொத்த இதயத்தையும் கொள்ளைக் கொண்ட அவரை சில நாட்களுக்கு முன்னர்தான் பெஸண்ட் நகர் மயானத்தில் எரித்துவிட்டு வந்தோம்.

அது முடிந்த அடுத்த கையோடு...இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காலமானார். நாட்டையே உலுக்கிய அந்த திடீர் மரணம், இந்தியாவை துக்க வீடாக மாற்றியது. பிரதமர் முதல் சாமானியன் வரை, குடிசை வீடு முதல் மாளிகை வரை தெருவுக்கு தெரு துக்கம் அனுஷ்டித்தனர். மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், முப்படை தளபதிகள் என்று இந்தியாவின் அதிகார வர்க்கமே இராமேஸ்வரத்தில் சங்கமித்தது.    அவரை அடக்கம் செய்வதற்கு, முந்தைய இரவு, ஒரு உயிர் நாக்பூர் சிறையில் ஊசலாடிக் கொண்டு இருந்தது.

மும்பை குண்டு வெடிப்பிற்காக சரணடைந்த யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் வியாழன் விடியற்காலை தூக்கில் போடப்பட்டார்.    'விடிய விடிய விசாரணை விடிந்தப்பின் பிரேத பரிசோதனை' என்ற உயர்ந்தபட்ச கொள்கையின் அடிப்படையில் மிக மிக துரிதமாக செயல்பட்டு தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருக்கிறது மஹாராஷ்டிரா பாஜக அரசு. அரசு இயந்திரத்தை நினைத்தால் அதிர்ச்சியும் வேதனையுமே எழுகிறது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த செய்தி: . மதுக்கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் திடீரென இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதையடுத்து மதுவுக்கு எதிரான பேராட்டக்குழுவை அமைத்தனர். அவர்களுக்கு ஆதரவாக 200 அடி செல் போன் கோபரத்தில் ஏறி 4 மணி நேரமாக போராட்டம் நடத்திய சசி பெருமாள் திடிரென்று ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துவிட்டார். சசி பெருமால் உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் டாஸ்மாக் எதிரான போராட்டம் மேலும் வலுவடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

பிறந்தவர்கள் இறக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி என்றாலும், இப்படி தொடர் சாவு என்பது மனிதனை அழக் கூட முடியாதவனாக்கிவிடுகிறது. அன்பும் கருனையும் கொண்ட உலகத்தில்தான் யாம் ஜீவிக்கவே விரும்புகிறோம். போதும்.... "இத்தகைய நிகழ்வுகளை நிறுத்து" என்று யாரிடம் விண்ணப்பம் வைப்பது....
இறைவா....!.
 

புதன், ஜூலை 29, 2015

'அணையா விளக்கு - அப்துல் கலாம்'




நதி போகும் கூழாங்கள்
பயணம் தடையமில்லை
வலிதாங்கும் சுமைதாங்கி
மண்ணில் பாரமில்லை
ஒவ்வொரு அலையின் பின்
இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே.....

மனதை வருடும் வீடியோ பதிவு.....

காலத்தை வென்ற கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி!. 

 





புதன், ஜூலை 22, 2015

சன் டிவியை கை மாற்றத் துடிக்கும் பாஜக அரசு?

               ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பார்கள், ஊடக குரல்வளையை நெரிப்பது  என்றால் ஆளும் கட்சிகளுக்கு எப்போதும் அல்வா சாப்பிடுவது போல்தான். அதுவும் தனக்கு எதிரான ஊடகம் என்றால் கேட்கவே வேண்டாம், அதை ஒழித்துக் கட்டிவிட்டுதான் மறு வேலை பார்ப்பார்கள். இதில் காங்கிரஸும் ஒன்றுதான் பாரதிய ஜனதாவும் ஒன்றுதான். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பில் ஏறியதுமே சன் டிவி மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  நமது எதிர்பார்ப்பின்படியே சன் குழுமத்தின் மீது தனது கோர பார்வையை திருப்பியுள்ளது பாஜக அரசு.

சன் டிவியின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஊடகங்கள் மீதான ஆளும் பாஜக அரசின் மறுபக்கத்தை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. சன் தொலைகாட்சிக்கு செக்யூரிட்டி கிளியரன்ஸ் கொடுக்கும் விஷயத்தில் மத்திய உள் துறையும், தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறையும் மறுத்துள்ளது. இது ஊடகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன் டிவி வருகைக்கு முன்னர், சன் டிவி வருகைக்கு பின்னர்  (சமு சபி) என்று தமிழக தொலைகாட்சி வரலாற்றை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். சன் டிவியின் வருகைக்கும் முன்னர், அரசு தொலைகாட்சியான தூர்தர்ஷன் வைத்ததுதான் சட்டம். மத்திய அரசின் விருப்பத்திற்கு இனங்க செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் தயாரித்து வந்தனர். ஆளும் கட்சியின் குரலாகவே தூர்தர்ஷன் செயல்படும். ஒளியும் ஒலியும் வயலும் வாழ்வும் என்று நிகழ்ச்சி தயாரித்து மக்களை பதம் பார்த்துவந்த தூர்தர்ஷனின் சக்தி (?) எப்படிப்பட்டது என்று இன்றைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஞாயிறுகளின் மதியத்தில் ராஜேஷ் கண்ணாவும் டிம்பிள் கபாடியாவும் 'கியா பியா' என்று ஹிந்தியில் ஆடி பாடி நடித்ததை நம் மக்கள் ஒன்றும் புரியாமல் கை தட்டி ரசித்துக் கொண்டு இருந்தனர். சினிமா பாடல்கள் பார்க்க வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை 'சித்திரகார்' வரை காத்திருக்க வேண்டும்.

அதுவும் நாடகம் என்று ஒன்று போடுவார்கள், பார்க்கவேண்டுமே....?!. காத்தாடி ராமமூர்த்தி வகையறா டிராமாவை மொத்த குத்தகை எடுத்ததுபோல், சென்னை தூர்தர்ஷனில் வீட்டு தயாரிப்பு டிராமாக்களே ஆக்கிரமித்து இருக்கும். செட்டுக்குள்ளேயே மொத்த  நாடகத்தையும்  நடத்தி காட்டிவிடுவார்கள். வந்த விமர்சனத்தை படிப்பதற்கென்று ஒரு நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியை திட்டி கழுவி கழுவி ஊத்தியதை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு, பாராட்டி எழுதிய கடிதத்தை மட்டுமே இரெண்டு பேர் மெனக்கெட்டு படிப்பார்கள். இந்தக் கன்றாவியெல்லாம் இந்த தலைமுறை பார்க்காமல் போனது அவர்களது அதிஷ்டம். நமது துரதிஷ்டம்.

சன் டிவியின் வருகைக்கு பின்னர்தான் இந்திய தொலைகாட்சி வரலாற்றில் ஒரு மாற்றம் ஏற்பட்டது எனலாம். கலாநிதி மாறன் தொடக்கத்தில் தனது நண்பர்களுடன் 'தமிழ் மாலை' என்ற வீடியோ பத்திரிகையை நடத்திவந்தார். வாரம் தோறும் புதிய புதிய நிகழ்ச்சிகளை தயாரித்து அதை கேஸட்டில் பதிவு செய்து ஒரு வீடியோ மேகஸினாக நடத்திவந்தார். ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சிகள்  மாற்றப்பட்டு வெளிவரும். இந்த வீடியோ கேசட்டுகளே வார இதழ்கள் போல் விற்கப்படும். முந்தின வார காஸட்டை பெற்றுக் கொண்டு புதிய காஸட்டை தருவார்கள். அப்போதெல்லாம் தூர்தர்ஷன் டிவி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருந்தது. அதனாலயே கலாநிதி மாறனின்  வீடியோ மேகஸினுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வாரம் தோறும் புதிய புதிய நிகழ்ச்சிகளையும் உலக நிகழ்ச்சிகளையும் தயாரித்து வெளியீட்டு வந்தார். அதுவே பின்னர் தனியாக தொலைக் காட்சி தொடங்கும் எண்ணத்தை தோற்றுவித்தது எனலாம்.

எப்படி செட்டுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை பாரதிராஜா அவுட்டோருக்கு கொண்டுவந்தாரோ.....அப்படி ஸ்டூடியோவிற்குள் முடங்கிக் கிடந்த டிவி நாடகங்களை வெளியுலத்திற்கு கொண்டுவந்தது சன் டிவிதான். இதன் மூலம் 'சின்னத்திரை' என்ற உலகமே தோன்றியது. இதனால் நிறைய நடிகர் நடிகைகள் வாழ்வு பெற்றனர். பொருளாதார ரீதியாக சின்னத்திரை நடிகர்களை உயத்தியது சன் டிவி. மக்களின் பொழுது போக்கு ரசனையிலும் மாற்றம் ஏற்பட்டது.

()()()

பொதுவாக இந்திய அளவில் ஒரு நிறுவனம் பிரபலமாக இருக்க வேண்டும் என்றால் அது வட இந்தியாவை சேர்ந்த நிறுவனமாகத்தான் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி.  டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ், பஜாஜ் என்று வட நாட்டு கம்பெனிகளின் பெயரை சொல்லித்தான் நாம் வளர்க்கப்பட்டு இருக்கிறோம். இதில் தமிழகத்திலிருந்து ஒரு நிறுவனம் இந்திய அளவில் பெயர் எடுப்பதிலோ....அல்லது தென் இந்தியாவை  தனது ஊடக கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையோ வட நாட்டு அரசியல்வாதிகளும் தொழில் அதிபர்களும் விடுவார்களா என்ன....?. அந்த நெருக்கடிதான் இப்போது மத்திய அரசு மூலம் சன் குழுமத்திற்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

ஏதோ.... அரசியல் பின் புலம் இருந்ததால் சன் டிவி இத்தனை நாள் தப்பித்து வந்திருக்கிறது. அரசியல் பின்புலம் மட்டும் இல்லையென்றால் இன்னேரம் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.

சன் டிவி அதிபர்கள் மீது வழக்குகள் இருக்கிறது என்பதற்காக அந்த குழுமத்தின் டிவி சேனல்களுக்கு வழங்கப்பட்ட செக்கியூரிட்டி கிளியரன்சை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்ய முயற்சிப்பது அபத்தமான செயலாகும். தனிப்பட்டவர் மீது இருக்கும் வழக்குகளை அவர் சார்ந்த நிறுவனத்தின் மீது திணிப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை?. சன் டிவியை கை மாற்ற வேண்டும் என்பதற்காகவே அரசு தரப்பில் பல் வேறு நெருக்கடிகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. பாஜக அரசுக்கு சகலவிதத்திலும் படியளக்கும் இந்தியாவின் ஆகச்சிறந்த மிகப் பெரிய நிறுவனம் சன் டிவியை விலை பேசுவதாக தகவல் கசிகிறது. .

அரசின் மற்றுமொரு நெருக்கடியாக சன் கூட்டுக் குழுமத்தின் 45 RED FM வானொலிகளுக்கு பாதுகாப்பு அனுமதி புதுப்பிப்பதற்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தற்போது எப்எம் ரேடியோ ஏலத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட விவகாரமும் சேர்ந்துள்ளது. மத்திய உள்துறையின் இந்த நடவடிக்கைக்கு அட்டர்னி ஜெனரல் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும் சன் குழுமத்திற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி மற்றும் எப்எம் இரண்டும் சன் குழுமத்தின் அங்கம் என்றாலும் அனுமதி மறுப்பு விஷயத்தை பொறுத்தவரை மத்திய உள்துறை தனித்தனியாகவே மேற்கொண்டுள்ளது.  இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள்  வேலை பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

சன் தொலைகாட்சி மற்றும் எப்எம் ரேடியோக்களால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டு மத்திய அரசு பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்கிறது.

()()()

தமிழகத்தில் எத்தனையோ தொலைக்காட்சிகள் இருந்தாலும் சன் டிவி மட்டுமே முதன்மையான தொலைக்காட்சியாக இன்றும் திகழ்கிறது.  கிராமத்தில் கேபிள் டிவி கனெக்சன் கொடுப்பதை கூட,  மக்கள் சன் டிவி கனெக்சன் குடுங்கள் என்றுதான் கூறுவார்கள். அந்த அளவிற்கு சன் டிவியின் தாக்கம் கடை கோடி கிராமம் வரை பரவியிருக்கிறது. கிராமத்து வெள்ளாந்தி மக்களுக்கு டிவின்னா அது சன் டிவிதான்!. கிராமம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சன் டிவி ஒளிபரப்பாகிவருகிறது.

சன் டிவியை புறக்கணித்துவிட்டு எந்த ஒரு பொருளும் தமிழகத்தில் சந்தைப்படுத்த முடியாது என்பது விளம்பர உலகம் கண்ட  உண்மை. ஒரு விளம்பர பட்ஜெட்டில் முக்கால்வாசி பட்ஜெட்டையும் சன் டிவி இழுத்துக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. ஆனால் அதன் உலகம் தழுவிய வெற்றியே அபரிமிதமான கோடிகளை கரன்ஸியாக கொட்டச் செய்கிறது. இதுவே பிரச்சனைகளையும் இழுத்து வருகிறது. சன் டிவியின் ஆதிக்கத்தாலேயே வட இந்திய தொலைக்காட்சி ஜாம்பவான்களால் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திற்குள் நுழைய முடிவதில்லை.  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று நான்கு  திராவிட மொழிகளில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகிறது சன் குழுமம். 25 வருடங்களுக்கு மேலாக தென் இந்தியாவில் 33 சேனல்களுடன் கோலோச்சி வரும் சன் டிவி, இந்தியாவின் முதல் தனியார் தொலைக்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

சன் டிவியை தமிழகத்தில் இருட்டடிப்பு செய்யும்பட்சத்தில் வரும் தேர்தலில் அதிமுகவுக்கு அது சாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது.   இதனால் ஜெயலலிதா மீது பாஜக காட்டி வரும் நெருக்கம், உள்துறை மீது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவோடு கூட்டணி அமைத்தால் தமிழகத்தில் பாஜகவை கால் ஊன்றச் செய்யலாம் என்று பாஜக தலைமை கணக்கு போடுகிறது. அதன் விளைவே சன் டிவியை கை மாற்றத் துடிக்கிறது பாஜக அரசு.  சன் டிவி நிறுவனர்கள் மீது வழக்கு இருக்கிறது என்பதற்காக அவர்கள் நடத்தும் சேனல்களால்  நாட்டுக்கு எந்த வகையில் ஆபத்து இருக்கிறது என்பதை ஆளும் பாஜக அரசு விளக்கத் தவறிவிட்டது.
 
அரசியல் பின்புலத்திலிருந்து சன் டிவி தோன்றினாலும், அரசியல் மாட்சரியங்களை கடந்து தமிழகத்தின் பொதுவான டிவி என்ற பெயரை அது என்றோ பெற்றுவிட்டது. மக்கள் மன்றத்தில் சன் டிவிதான் தமிழகத்தின் டிவி என்பதையும் அது நிலை நிறுத்தியுள்ளது. வீட்டிற்கு வந்ததும்  இரவு ஏழரை மணிக்கு சன் டிவியில் தவறாமல் செய்தி பார்க்கும் குடும்பத் தலைவர்களே அதிகம் என்பது நிதர்சனமான ஒன்று. உண்மை இப்படி இருக்க... சன் குழுமத்தை முடக்குவது என்ற முடிவு பாஜக அரசுக்கு பெரும் பின்னடவைத்தான் ஏற்படுத்தும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் பேராதரவை பெற்றிருக்கும் சன் டிவி மீதான அடக்குமுறையை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை ஆளூம் பாஜக அரசு உணர்ந்துக் கொள்ளவேண்டும். இத்தகைய அதிகாரதுஷ்பிரயோகங்கள் ஆளும் கட்சிக்கு என்றும் ஆபத்தைத்தான் ஏற்படுத்தி இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனி!.
தோழன் மபா.
சென்னை.

வியாழன், ஜூலை 16, 2015

தினமணியின் 'ஈகை பெருநாள் சிறப்பு மலர்'.



இந்த வருடம் ரமலானை முன்னிட்டு "ஈகை பெருநாள் மலரை வெளியீட்டு அசத்தி இருக்கிறது தினமணி நாளிதழ்.

பொதுவாக தீபாவளி பொங்கலுக்குதான் சிறப்பு மலர் வெளிவரும். ரமலான் மற்றும் கிருஸ்துமஸ் சிறப்பு மலர் எப்போதாவது அத்தி பூத்தாற்போல்தான் வெளிவரும். பத்திரிகைகளும் அதில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் விட்டுவிடும்.

அதுவும் ஈகை பெருநாள் மலரென்றால் மார்க்கம் சார்ந்த கட்டுரைகளே அதிகம் இடம் பெற்று இருக்கும். மாற்று மதத்தினரும் விரும்பி படிக்கும் அளவிற்கு ஜனரஞ்சகமாக இல்லாமல் போய்விடுவது இத்தகைய மலர்களின் பொதுத்தன்மை. ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனித்துவமிக்க ஒரு ஈகை பெருநாள் சிறப்பு மலரை வெளியீட்டு பெருமை தேடிக் கொண்டுள்ளது தினமணி நாளிதழ்.

இத்தகைய பெருநாள் மலர்களை கலாச்சாரத்தின் காலத்தே பதிவாகத்தான் நாம் பார்க்கவேண்டும். பத்திரிகைகளே இப் பணியை செய்ய முடியும். அதை செய்திருக்கிறது தினமணி!. இம் மலருக்கென்று தனி வழிகாட்டுதல் குழு அமைத்து இம் மலரை தயாரித்துள்ளனர். மதம் சார்ந்த சென்ஸிட்டிவ் விஷயங்களை கையாலும் போது தனி கவனம் எடுத்துக் கொள்ளுவது எப்போதுமே நன்மைத்தரும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரையே முதன்மை கட்டுரையாக இம் மலரில் இடம்பெற்றிருக்கிறது. அதோடு உலக வரலாற்றில் முதலிடத்தில் முஹம்மது நபி, தமிழகத்தில் இஸ்லாமியர்கள், நபிவழியில் வெற்றி நிச்சயம், பேரா முனைவர் எம்.எச்,ஜவாஹிருல்லா எழுதிய விடுதலை போரின் முன்னோடிகள் முஸ்லீம் மார்க்க அறிஞர்கள், டாக்டர் கே.வி.,எஸ்,ஹபீப் முஹம்மத் எழுதிய சமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள், நோன்பு ஒரு கேடயம், பள்ளிவாசலும் தொழுகையின் அற்புதமும், கவனம் தரும் லைலத்துல் கத்ர் இரவு, யார் பயங்கரவாதிகள்?, பழ.கருப்பையா எழுதிய அழகியவற்றுளெல்லாம் அழகியது, முனைவர்  ஆர்.ராதிகா தேவி எழுதிய 'பெண்களுக்கான மார்க்கம் இஸ்லாம்', முனைவர் சொ.சேதுபதி எழுதிய பாரதியார் பேசிய இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை, பக்கீர்கள் என்னும் இஸ்லாமியப் பாணர்கள் போன்ற கட்டுரைகளோடு இன்னும் பல கட்டுரைகள் இம் மலரில் இடம்பெற்றுள்ளன.

தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய 'ஆழம் தெரியாக் கடல்', ஜே.எம் சாலி எழுதிய 'சம்மதம்', சிராஜூல் ஹசன் எழுதிய 'முத்தலாக்', எஸ்.பர்வீன் பானு எழுதிய 'முதல் பாடம்', மு.அ அபுல் அமீன் எழுதிய 'ஈமானில் சீமான்' போன்ற முத்தான சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 'முனைவர் ஜெ.ஹாஜாகனி 'புரட்டிப் பாருங்கள் உங்களை புரட்டிவிடும்' என்ற மூன்று பக்க கவிதையை எழுதியிருக்கிறார்.

தமிழகத்தில் பிரபலமான 8 தர்காக்கள் பற்றிய கட்டுரைகள் இம் மலரில் இடம்பெற்றுள்ளன. தர்காக்கள் பற்றிய விமர்சனங்களை இக் கட்டுரைகள் தவிடுபொடியாக்கியிருக்கின்றன.

மலரெங்கும் மார்க்க துணுக்குகள் விரவிக் கிடக்கின்றன. வழுவழுத் தாளில் மாற்று மதத்தினரும் விரும்பி படிக்கும் வகையில் இம் மலரை தயாரித்துள்ளனர். இச் சிறப்பு மலர் பாரதியாரின் கவிதையை அட்டையில் தாங்கி வெளிவந்திருப்பது சிறப்பு!.

பக்கம் 160
விலை ரூ.50/-

ஞாயிறு, ஜூன் 21, 2015

காக்கா முட்டை இயக்குனரின் வீடியோ பேச்சு!

               



      
      காலத்தின் முட்டை! 

           காக்கா முட்டை இயக்குனரின் உடனடி நேர்காணலாகவே அமைந்துவிட்டது,  கடந்த வாரம் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி. கா.மு இயக்குனர் மனிகண்டன் பேச பேச நமக்குள் பல்ப் எரிந்தது!. மனிதர் மிக இயல்பாக தனது வாழ்க்கையைப் பற்றி கூறினார். எந்த பம்மாத்தும் இல்லாத அவரது பேச்சு நிச்சையம் சாதிக்க துடிப்பவர்களுக்கு உற்சாக டானிக்குதான்.

வாழ்க்கையில் வலி என்பது காசு பணத்தால் அளவிட முடியாதது.  வெற்றியோ விருதோ தொடாத மனிதனின் வலி என்பது உணர்வு ரீதியானது. சதா அவனை அது அரித்துக் கொண்டே இருக்கும். அவனது இலக்கை அடையும் வரை அந்த வலியை அவன் அடைகாத்துதான் ஆக வேண்டும். தான் அடைகாத்த அந்த வலியை அன்று மணிகண்டன் நமக்காக இறக்கிவைத்திருக்கிறார்.

இனி அவர் பேசிய வீடியோ தொகுப்பு....






புதன், ஜூன் 03, 2015

நஞ்சுண்ட நா! தமிழுண்ட நா!





நெஞ்சுக்கு நீதியாய் நின்று
எரிதழல் தன்னில் ஏந்தி
திருக்குவளை ஈன்றெடுத்த
தங்கமென தமிழுக்கு - நீ வந்தாய்.

நீ வந்ததிந்த நேரமோ...?
சூது மதியார் சூழ் நம் நிலத்தை
ஏதுமறியார் நம் தமிழர்
தலை நிமிறா நிலைகண்டு,

தமிழனை தடுத்தாட்கொண்டு
போர்களத்தில் - நீ முன்னின்றாய்.

கரகரத்த குரல் தமிழனின்  குறளாக..
முன்னின்று வழி நடத்த முக உன் பிறப்பு
காலத்தின் கொடையென்றோ...!
மழைக் காலத்தின் குடையன்றோ...!

அகவை தொன்னுற்றிரண்டாயினும்
முக'வை முன்னின்று வழி நடத்தும் முத்தமிழுக்கோர்
வயது மூவாயிரமாண்டுகள் மேலே
நனிதமிழுக்காற்றுவாய் நல் தொண்டினை அதற்குமேலே...!

நஞ்சுண்டநா வசை பாடும் -உன் மேல்
தமிழுண்டநா என்றும் இசைகொள்ளும் உன் பால்
பகுத்தாராய்ந்தால் நாங்கள் உன் பக்கம்
பகுத்தறிவற்றோர் என்றென்றும் நம் எதிர்பக்கம்!.

நீ இல்லாதுபோனால் அன்றுணருவார் -உன் பெருமை
இருக்கின்ற நாளெல்லாம் எய்துவார் உன் மேல் அம்பை
இதை நான் சொல்லாது போனால்
உன் காலத்தில் வாழ்ந்த எனக்கென்ன பெருமை!.

எம் தலைவனே!
நீவீர் வாழ்க பல்லாண்டு!.

-மகேஷ் பத்மனாபன்!.
3/06/2015


வியாழன், மே 14, 2015

கூட்டுத் தொகையில் கோட்டைவிட்ட குமாரசாமி!.

           
            எந்த ஒரு நீதி மன்றத் தீர்ப்பும் இந்த அளவிற்கு கேலிக்கும் விமர்சனத்திற்கும் ஆளாகியதில்லை. இரண்டு நாளுக்கு முன்னர் நீதிபதி குமாரசாமியால் அதிரடியாக வழங்கப்பட்ட தீர்ப்பு சமூக வலைத்தளங்களிலும், இணையத் தளங்களிலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கடந்த 19 வருடங்களாக நடைபெற்ற வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் (இந்த வார்த்தையை ஏனோ...நிறைய ஊடகங்கள் தவிர்த்து வருகின்றன) 919 பக்கத்தில் கடைசி இரண்டு பக்கங்கள் மட்டும் படித்து, 19 நிமிடத்தில் சிறை தண்டனை மற்றும் 100 கோடி அபராதத்திலிருந்து ஜெயலலிதாவை விடுவித்துள்ளார் குமாரசாமி.

இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்த ஊழலுக்கு நிச்சயம் தண்டனை உண்டு என்ற மனப்பான்மையில்தான் பெருவாரியன மக்கள் இருந்தனர். இப்படி ஒரே அடியாக விடுதலை செய்வார்கள் என்று அவர்கள் ஒரு போதும் நினைத்துப் பார்க்கவில்லை..
கடந்த செப்டம்பர் மாதம் நீதிபதி குன்ஹா மாய்ந்து மாய்ந்து தீர்ப்பு சொல்லியதை ஒரே அடியில் வீழ்த்தி இருக்கிறார் குமாரசாமி.

வருமானத்திற்கு அதிகமாக 20 சதவீதம் வரை கூடுதலாக சொத்து சேர்க்கலாம் என்ற முந்தைய தீர்ப்புகளின் (CASE LAW) படி 10 சதவீதம்தான் சொத்து சேர்த்து இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு ஜெயலலிதா உட்பட நால்வரையும் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்திருக்கிறார் குமாரசாமி!.
இவர் கூறிய அந்த 10 சதவீதம்தான் தற்போது பிரச்சனைகளுக்கு   வித்திட்டிருக்கிறது.

கூட்டுத் தொகையில் கோட்டை விட்ட குமாரசாமி 76.76 சதவீதம் உள்ள அதிகப்படியான சொத்து குவிப்பை வெறும் 8.12 சதவீதம்தான் என்று கூறி மொத்த பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். இதுதான் இன்று பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. சகுனம் சொன்ன பல்லி கழனி பானையில துள்ளி விழுந்த கதையாக மாறிவிட்டது குமாரசாமியின் தீர்ப்பு.
'நீதியை நிதி வென்று விட்டது', 'வழங்கப்பட்ட தீர்ப்பா? இல்லை வாங்கப்பட்ட தீர்ப்பா?' போன்ற விமர்சனங்கள் தற்போது பகிரங்கமாக எழுந்துள்ள நிலையில், தீர்ப்பை விமர்சிக்கும் ஹோஸ்டோக்குகள் முக நூலிலும், கட் செவியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பொதுவாக நீதி மன்ற தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என்று மரபு இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் அவையும் விமர்சனத்திற்கு ஆட்பட்டே இருக்கிறது!. அதுவும் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக தீர்ப்பு கூறிய குமாரசாமியே வெட்கப்பட்டு தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு தறிக் கெட்டு ஓடுவது போல் ஆகிவிட்டது?. இன் நிலையில் தீர்ப்பில் திருத்தம் செய்ய குமாரசாமி முயலுவதாக செய்தி வந்துள்ளது, கவனிக்கதக்கது.

முந்தைய குன்ஹா தீர்ப்பின் போது, மக்களின் அனுதாபத்தை அள்ளிய ஜெயலலிதாவிற்கு, இந்த முறை குமாரசாமியின் தீர்ப்பால் அது மிஸ்ஸிங் என்பதுதான் சோகத்திலும் பெரிய சோகம்.

சனி, மே 09, 2015

ஜெயகாந்தன் குறித்த புகைப்படக் கண்காட்சி!.



இந்திய-ரஷ்ய கலாச்சார நட்புறவு மையம் சார்பில் எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்த புகைப்படக் கண்காட்சி ஆழ்வார்ப்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில்  அண்மையில் நடைபெற்றது.  இதில் 50க்கும் மேற்பட்ட அறிய புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டது.

ஜெயகாந்தன் கம்யூனிச மேடைகளில் களமாடிய பொழுதுகளை மிக அழகாக, மிக சொற்பமான புகைப்படங்களைக் கொண்டு பதிவு செய்திருக்கின்றனர். ஒரு எழுத்தாளராகவே மட்டும் அறியப்பட்ட நமக்கு, அவர் பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர் போலவே காட்சிப்படுத்தப்படுகிறார். அதுவும் சில புகைப்படங்களை பார்க்கும் போது, அது ஜெயகாந்தன் தனா? என்ற பிரமிப்பும் நமக்குள் ஓடுகிறது. 

விளிம்பு நிலை மனிதர்களுக்கான முன்னெடுப்புகளில் சிங்கம் போன்ற அவரது ஆளுமையை அவரது படங்களில் காண முடிந்தது சிறப்பு!.

ஜெயகாந்தனின் 50 ஆண்டுகளான நண்பரான இசைஞானி இளையராஜாவும், ஜெயகாந்தனை நிறைய புகைப்படங்கள் எடுத்திருக்கிறார், அதையும் இப்படி கண்காட்சிப்  படுத்தினால், வாசகனும் ரசிகனும் ஒரு சேர மகிழ்வான், 

 எனது மொபைல் காமிராவால் எடுக்கப்பட்டது,  அந்தளவிற்கு துல்லியமாக இருக்காது. பொறுத்தருள்க!.







போராட்ட களத்தில்


கண்ணதாசன் பக்கத்தில் அது ஜெயகாந்தன் தானே ...?!



புதன், ஏப்ரல் 08, 2015

குருபீடம் நோக்கி... வா மணிகண்டன்?



இணைய எழுத்தாளர் வா.மணிகண்டனின் 'லிண்ட்சே லோகன் w/o மாரியப்பன்' மற்றும் 'மசால் தோசை-38 ரூபாய்' ஆகிய இரண்டு நூலுக்கான விமர்சனம் மற்றும் கலந்துரையாடல் யாவரும்.காம் சார்பாக கடந்த ஞாயிறு அன்று டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது. ஒரு அடிப்படை சம்சாரியின் ஞாயிற்றுக் கிழமை சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு கூட்டத்திற்கு சென்று இருந்தேன். அரங்கு நிறைந்திருந்தது.

இப்பொழுதெல்லாம் புத்தக விமர்சனக் கூட்டங்களில் பேச வருபவர்கள் எல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஏடாக் கூடாமா பேசி எதற்கு எழுத்தாளனை இம்சிக்க வேண்டும், என்ற ரீதியில் பொத்தாம் பொதுவாய் பாராட்டி, நாலு வார்த்தை பேசி இறங்கி விடுகின்றனர்.  இந்த கூட்டத்திலேயும் அதுதான் நடந்தது.

ஒரு மனிதனை மேடையில் வைத்துக் கொண்டு அவனை வாய்க்கு வந்தபடி புகழ்வது என்பது, அவனுக்கு அனஸ்தீஸிய கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்வது போன்றது.   அப்படி ஒரு அவஸ்தைக்கு ஆட்பட்டு நாற்காலியில் துவண்டுக் கிடக்கத்தான் முடிந்தது வா.மணிகண்டனால். வந்தவர்கள் எல்லாம் பாராட்டித் தள்ள முகத்தை எப்படி வைத்துக் கொள்வது என்று, இன்னும் வா.மணிகண்டனுக்கு கை கூடவில்லை போலும்?.

இந்த காலமான காலத்தில படிக்க நேரம் இருக்காது என்பதை மிக நன்றாக உணர்ந்து இருக்குகிறார் மணிகண்டன். 'பாஸ்ட் ஃபுட்' வகையை சார்ந்த இவரது எழுத்துகள், மிக எளிதாக ஒரு வாசகனை உள்ளிழுக்கும் சக்தி கொண்டது. பெரிய தரவுகளையோ, சரித்திர ஆதாரங்களையோ, மண்டயை குழுப்பும் வார்த்தை பம்மாத்துகளோ எதுவுமின்றி, 'இந்தா, இதை வாங்கி அந்தப் பக்கம் வை' என்பதுபோல் எளிமையாக கட்டுரை கம் கதை சொல்வதில் இருக்கிறது இவரது வெற்றி!.

அதே நேரத்தில் வா. மணிண்டன் எழுத்தை  விமர்சனம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு?. சொல்லுங்க....?. 

நோயாளர்களை பற்றியோ, அல்லது படிக்க பணம் இல்லாமல் தவிப்பவர்களை பற்றியோ வா.மணிகண்டன் தனது 'நிசப்தம்' வலைத்தளத்தில் எழுதும் போது, அது பொது கவனத்திற்கு வந்துவிடுகிறது.  அதற்கு உதவி செய்ய நிறைய ஆதரவு கரங்கள் நீண்டு விடுகிறது.  அப்படி கிடைக்கப்பெறும் தொகையை சரியான முறையில் பயனாளர்களுக்கு கொண்டு செல்ல ஒரு அறக்கட்டளையையும் ஏற்படுத்தி இருக்கிறார். அதில் தற்போது 10 லட்சம் வரை சேர்ந்திருக்கிறது. வா.மணிகண்டனின் எழுத்து வீச்சிற்கு இந்த பத்து லட்சம் பதம்!.  20 நிமிடத்தில்  ஒரு பதிவை எழுதிவிடுகிறார் என்றால் பார்த்துக்  கொள்ளுங்களேன்!.

விழாவில் இயக்குனர் கவிதா பாரதி, கார்டூனிஸ்ட் பாலா, தம்பி சோழன் கூத்துப் பட்டறை, நாகேஸ்வரன்,சைதை புகழேந்தி, கிருஷ்ண பிரபு ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர். வா.மணிகண்டன் நன்றியுரை நிகழ்த்த, நிகழ்ச்சிகளை ஜீவ.கரிகாலன் தொகுத்து வழங்கினார்.

மற்ற பிரபல எழுத்தாளர்கள் போன்று நீங்களும்  'குரு பீடத்தை' நோக்கி போகிறீர்களா...? என்றொரு முக்கியமான கேள்வியை விழாவிற்கு வந்த ஒருவர் திரும்ப திரும்ப கேட்டார்.  "நான் அப்படி எல்லாம் போகலைங்க. அதிலெல்லாம் விருப்பமும் இல்லைங்க. நான் எழுதுவது 'நிசப்தம்' வாசகர்களுக்காகத்தான்" என்றார் மீண்டும் மீண்டும். ஏதோ "விதை விதைச்சேங்க.....வெள்ளாமை நல்லா வந்தது!" என்று எளிமையான விவசாயி சொல்வது போல் இருந்தது அவரது பேச்சு!.

அதிகம் கவனிக்கப் பெறும் எழுத்தாளனுக்கு 'குருபீடம்' என்பது தவிற்கமுடியாத ஒன்று. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தன்னிச்சையாக அது நிகழ்ந்துவிடும். பாடாவதி சினிமா நடிகனுக்கு கூட அவனது ரசிகர்கள் குருபீடத்தை அமைத்து விடுகிறார்கள். எழுத்தாளனுக்கு அமைத்தால் என்ன பெரிய குடியா மூழ்கிவிடப் போகிறது?. தன்னியில்பாக நிகழ்ந்துவிடும் குருபீடத்தால் எழுத்தாளன் தன்நிலை மறந்தால், அது 'பலிபீடமாக' மாறும் என்பதையும் எழுத்தாளன் உணர்ந்திருக்க வேண்டும்.





வியாழன், மார்ச் 26, 2015

வர்த்தமானன் பதிப்பகத்தின் 'துளசி இராமாயணம்' வெளியீடு!



இடமிருந்து : பதிப்பாளர் வர்த்தமானன், வேலுர் கம்பன் கழக செயலாளர் இலக்குமிபதி, நூலின் உரையாசிரியர் எம்.கோவிந்தராஜன், பதிப்பக நிறுவனர் ஜெ.ஸ்ரீசந்திரன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர்,பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரகந்தின் தலைவர் இல.கணேசன், கலைமகள் இதழ் ஆசிரியர் சங்கர சுப்பிரமனியன் & பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் ஆகியோர் உள்ளனர்.


             டந்த ஞாயிறு அன்று வர்த்தமானன் பதிப்பகத்தின் 'துளசி இராமாயணம்' நூல் வெளியீட்டு விழா சென்னை கிருஷ்ண கான சபாவில் நடைபெற்றது!. 

இரண்டு நாளுக்கு முன்னரே வர்த்தமானன் சார் கூப்பிட்டு, நீங்கள் அவசியம் விழாவிற்கு வரவேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார். ஞாயிறுகளில் காலை 8 மணி என்பது எத்தனை அற்புதமானது என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று!. சென்னை போன்ற பெருநகர வீடுகளில் விடியாத(?) அந்த காலை 8 மணி என்பது, மற்ற நாட்களை போல் இல்லாமல், எந்த வித பரப்பரப்பும்மின்றி சோம்பிக் கிடக்கும். அந்த சோம்பலை உதறி தள்ளி வெளிவருவதே பெரும்பாடுதான். அந்தகாரத்தில் அலங்கோலமாகிப்போன பொழுதைப் போலவே ஞாயிறுகளின் காலைப் பொழுது இருப்பதாக எனக்குப்படும்.

விழா தொடங்குவதோ காலை 9 மணி. "பிரேக்பாஸ்ட் இருக்கு மகேஷ்" என்று வர்த்தமானன் சார் சொல்லிவிட்டார். சரி, அங்கு போய் காலை உணவை முடித்துக் கொள்ளலாம் என்று கிளம்பப் போகும்போது, அலுவலகத்திலிருந்து போன் வந்தது. அதற்கு பதிலளித்துக் கிளம்பவே அரைமணி நேரமாகிவிட்டது. அடித்துப்பிடித்து விழாவிற்கு வந்து சேர்வதற்கும், விழா தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. பசியை மறந்து அரங்கில் அமர்ந்து விட்டேன். விழா முடியும் போது மதியம் மணி ஒன்று!. 'செவிக்கு உணவில்லாத போதுதானே.. வயிற்றுக்கு  ஈயப்படும். இங்குதான் செவிக்கு உணவு கிடைத்துக் கொண்டு இருக்கிறது. அப்புறம் எதற்கு வயிற்றுக்கு?' அதனால் பசிக்கவேயில்லை போலும்?!. 

துளசி இராமாயணம் புத்தகத்தை பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் வெளியீட, தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் பெற்றுக் கொண்டார். காலை 9 மணிக்கு விழா அரங்கு நிறைந்திருந்தது வியப்பை ஏற்படுத்தியது. இதையேதான் இல.கணேசனும் தனது பேச்சில் தெரிவித்தார். அவரது பேச்சை அப்போதுதான் முதன் முதலாக கேட்கிறேன். சும்மா சொல்லக் கூடாது பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பின் தலைவர் என்பதால் இலக்கியத்திலும் இராமாயணத்திலும் கொஞ்சம் விஸ்தாரமாகவே பேசினார். அதிலும் இராமாயணத்தை பற்றி கூறும் போது 'முடி'யை வைத்து அவர் பேசியது ரசிக்கும்படியாக இருந்தது.

வால்மீகி இராமாயணம் சம்ஸ்கிருதத்தில் இருந்ததால் சாமான்ய மக்களால் அதைப் படித்து புரிந்துக் கொள்ள முடியவில்லை.

அயோத்தி வாழ் மக்களின் அடிப்படை மொழியான 'அவதி' மொழியில் வெளிவந்து, சாமான்ய மக்களின் அறிவுப் பசியையும் ஆன்மீக பசியையும் ஒரு சேர போக்கிய துளசி இராமாயணம்தான் தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. துளசிதாஸர் அருளிய 'இராம சரித்திர மனஸ்' என்ற இராமாயணமே பின்னர் எழுதியவரின் பெயரோடு 'துளசி இராமாயணம்' என்று அழைக்கப்படலாயிற்று. இத் துளசி இராமாயணத்தை தமிழில் மூன்று தொகுதிகளில் வெளியீட்டுள்ளது வர்த்தமானன் பதிப்பகம் இம் மொழிபெயர்ப்பினை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். முனைவர் எம்.கோவிந்தராஜன்.

இந்த இடத்தில் நூல் ஆசிரியர் பற்றி கூறியே ஆகவேண்டும். அடிப்படையில் இந்தி ஆசிரியரான முனைவர் எம்.கோவிந்தராஜன் தமிழில் அசாத்திய திறமை படைத்தவர். இவ் விழாவில் தனது ஏற்புரையையும் நன்றியுரையையும் செய்யுள் பாணி கவிதை நடையில் சிறு புத்தகமாக அச்சிட்டு வழங்கி இருந்தார்!. அனைத்தும் 'ஏ' கிளாஸ் ரகம்!. 

அறிமுக உரையாற்றிய வர்த்தமானன் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ஸ்ரீ சந்திரன், கம்ப இராமாயணத்திற்கும் துளசி இராமாயணத்திற்கும் உள்ள   வித்தியாசத்தை மிக அழகாக எடுத்துரைத்தார். கம்பரின் இராமாயணத்தில்..... தனது அண்ணான இராவணனுக்காக பரிந்து வரும் கும்பகர்ணன், போரின் இறுதியில் தலை வெட்டப்பட்டு ஆழ் கடலில் விழுவது போல் எழுதி இருப்பார். துளசி இராமயணத்தில் கும்பகர்ணனின் தலை வெட்டப்பட்டு அத்தலை இராவணின் மடியில் விழுவது போல் எழுதப்பட்டு இருக்கும். இப்படி இரு கதைகளிலும் ஆங்காங்கே காணப்படும்  சிறு சிறு வித்தியாசங்களை அழகாக பட்டியலிட்டார். 

இப் பதிப்பகத்தின் வெற்றிக்கு வர்த்தமானன் அவர்களின் திட்டமிடலும், தொலை நோக்கு பார்வையுமே காரணம். புத்தகங்கள் விற்பனையில் மற்ற பதிப்பகங்களை காட்டிலும் வேறுபட்ட வியாபார உத்தியை கொண்டது வர்த்தமானன் பதிப்பகம். வர்த்தமானன் பதிப்பக நூல்களை நீங்கள் இவர்களிடம் மட்டுமே வாங்க முடியும். தங்களது தயாரிப்புகளை வாசகர்களிடம் நேரிடையாக கொண்டு சேர்க்கிறார்கள். விளம்பரங்கள் மூலம் தங்களது வெற்றியை சாத்தியப்படுத்தி உள்ள வர்த்தமானன் பதிப்பகத்திற்கு இது ஐம்பதாவது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது!.

வெள்ளி, மார்ச் 20, 2015

மாட்டிறைச்சி கவுச்சியும் விபச்சார புனிதமும்!

.

           செய்ய வேண்டிய  வேலைகள் எத்தனையோ இருக்க....அதை விடுத்து வெட்டி வேலை பார்ப்பவனை ..."செய்யிற வேலையை விட்டுவிட்டு, ஏண்டா செனப்பு சொறியிற என்று கேட்டு" கிராமத்தில் ஏகடியம் செய்வார்கள்.  அதை போல ஏகடியத்திற்கு ஆளாகியிருக்கிறது மகாராஷ்ட்டிரா பாஜக அரசு.

  மகாராஷ்டராவில்  மாட்டுக் கறி விற்பனைக்கு தடை விதித்து பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது, ஆளும் பாஜக அரசு!.. இந்தியாவில எந்த ஒரு மாநில அரசும் முக்கியத்துவம் கொடுக்காத விஷயத்திற்காக ஒரு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருக்கிறது. இச் சட்டத்தின் மூலம் நீங்கள் என்ன சாப்பிடவேண்டும் என்பதை மதவாத பாஜக அரசு தீர்மானித்திருக்கிறது. இது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு முன்மாதிரி சட்டமாகும். மக்களின் அன்றாட உணவு முறைகளில் இத்தகைய கெடுபிடிகள் வீண் பிரச்சனைகளையே ஏற்படுத்தும். 

 மகாராஷ்டிராவின் அப்போதைய  பாஜக சிவசேனா கூட்டனி அரசு விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர எண்ணி 1995 ம் ஆண்டு ஒரு மசோதாவை தாக்கல் செய்திருந்ததது. 19 ஆண்டு காலம் நிலுவையில் இருந்து வந்த அந்த மசோதாவை, தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் தூசித் தட்டி எடுத்து நிறைவேற்றியுள்ளனர்.  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் அங்கீகாரத்தால் இச் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த சட்டப்படி மாட்டுக் கறியை விற்றாலோ, அல்லது வைத்திருந்தாலோ அவர்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.  பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ கோட்பாடுகளையும் கொள்கைளையும் மீளூருவாக்கம் செய்வதில் சங்பரிவார்கள் அதிக முணைப்புக் காட்டி வருகிறது என்பதற்கு மகாராஷ்டிரா ஒரு உதாரணம்.

ஆப்கானிஸ்தானில் இஸ்லாம் பழமைவாதிகள்  விதிக்கும் சட்டங்களுக்கும், செயல்களுக்கும் இத்துத்துவ பழமைவாதிகளின் சட்டங்களுக்கும் செயல்களுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை என்றுதான் தோன்றுகிறது?.
-----------------

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் மாட்டுக் கறி தொடர்பான ஒரு கட்டுரையை படித்திராவிட்டால், மாட்டுக் கறி மீதான எனது அபிப்ராயம் அப்படியேதான் இருந்திருக்கும். மனிதன் சாப்பிடக் கூடிய மாமிசங்களில் மாட்டுக் கறியும், இன்ன பிற இறைச்சிகளோடு ஒன்றே என்றும், அதை நிராகரிக்க தேவையில்லை என்றும், உலக நாடுகளில் மாட்டுக் கறியின் நிலையை அவதானித்து ஒரு நீண்ட கட்டுரையை தனது வலைத்தளத்தில் எழுதியிருந்தார். அது படிக்கவேண்டிய ஒன்று!. இல்லையென்றால் நானும் மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன் என்பதை பெருமையாக சொல்லிக் கொண்டு திரிந்திருப்பேன். மாட்டுக் இறைச்சி சாப்பிடுவது கேவலம், என்ற பொதுமை மனோ நிலையை பன்னெடுங்காலத்திற்கு முன்னரே இங்கு ஏற்படுத்திவிட்டனர். அதனாலயே இங்கு தமிழகத்தில் மாட்டுக் கறிக்கு பெரிய வரவேற்பு இல்லாமல் போய்விட்டது. மாட்டு இறைச்சி தொடர்பான.... ஆதவனின் அக் கட்டுரை எல்லோருக்குமே ஒரு 'ஐ ஓப்பனர்தான்'!.

இந்தியா முழுவதும் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருக்கும் நிலையில், அதிக புரத சத்துள்ள மாட்டுக் கறி போன்ற உணவுகள் அவர்களின் உயிரை காக்க உதவும். ஆனால் இந்த இந்துத்துவ பழமைவாதிகள் சிறுபான்மை மக்களை ஒடுக்கவும், பெரும்பான்மை இந்து மக்களை அவர்களுக்கு எதிராக திருப்பவும் “பசுவின் புனிதம்” எனும் இந்த தந்திரப் பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். வட இந்தியாவில் புனிதப்  பசு என்ற போர்வையில் பெரும் கலவரங்களும் உயிர் பலிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் பரிணாமம்தான் இந்த தடை உத்திரவு!.
-------------------------


புனித பசு!

இந்தியாவில் எந்த ஒரு விவசாயியும் பசு மாட்டை கொல்ல மாட்டான். பசு மாடு என்பது அவனைப் பொறுத்தவரையில், அவனது வாழ்வியலில் ஒரு அங்கம்,. அவனது குடும்ப உறுப்பினர்களில் அதுவும் ஒன்று!. நகரங்களில் காரை துடைத்து பள பளவென்று வைத்திருப்பது போல.... கிராமங்களில் மாட்டை குளுப்பாட்டி நெற்றி, வயிறு வாலின் மேல்புறம் என்று பொட்டுவைத்து கொம்பிற்கு வண்ணம் பூசி சும்மா பள பளவென்று வைத்திருப்பார்கள்!.. மாடு மேய்த்தலின் போது, மாட்டின் வயிறு புடைப்பாக இருந்தால் மட்டுமே மாட்டை வீட்டிற்கு ஓட்டி வருவார்கள். மாட்டுக் கொட்டகையில் மாட்டிற்கு கொசு கடிக்கும் என்பதற்காகவே மூட்டம் போட்டு கொசுவை விரட்டக் கூடியவ ஜீவ காருண்யம் மிக்கவர்கள் நமது விவசாயிகள். அந்த விளிம்பு நிலை மனிதர்கள் என்றுமே ஜீவ காருண்யத்தை விட்டு விலகி தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொளவ்தில்லை.





ஆனால், இங்கு சட்டம் போடுபவர்களின் அதிகபட்ச ஜீவ காருண்யம் என்ன?, அதன் வாலை தொட்டு தடவி தங்கள் தலையில் தேய்த்துக் கொண்டால் போதும் என்று நினைக்கக் கூடியவர்கள்.  அதுவே தங்களது உயர்ந்தபட்ச ஜீவகாருண்யம் என்று செம்மாந்து திரியக் கூடியவர்கள். இத்தகையை அற்ப பேர்வழிகளே இந்திய கலாச்சாரத்தை போற்றி பாதுகாப்பதாக பம்மாத்து பண்ணிக் கொண்டு திரிகிறார்கள். இன்றைய நவீன இந்தியாவில் மாடுகள்  குப்பைத் தொட்டியில் நாயோடு நாயாக நின்று,  தங்களது உணவுகளை தேடக் கூடிய இழி நிலையில் இருக்கின்றது என்பதை, இந்த ஜீவகாருண்ய பாஜக புலிகள் மறந்துவிட்டார்கள். இப்போதெல்லாம் மாடுகள் சாணம் போடுவதை விடுத்து,  மனித மலத்தை ஒத்த கழிசல்களை சாலை முழுவதும் தொர...தொரவென்று ஒழுக விட்டப்படி சென்றுக் கொண்டு இருக்கிறது. மாடுகளின் உணவு முறைகளில் ஏற்பட்ட மாற்றம், அதன் கழிவுகளை நாற்றம் பிடித்தாக மாற்றிவிட்டது. கொடுக்கின்ற பாலையும் நஞ்சாக மாற்றிவிட்டது?.

பொதுவாகவே இறைச்சிகளில் கிடா கறியைதான் அதிகம் பேர் விரும்புவார்கள். "கிடா ஆடா?" என்று கேட்டுவிட்டுதான் ஆட்டுக் கறியே எடுப்பார்கள். அது ஆடாக இருந்தாலும் சரி கோழியாக  இருந்தாலும் சரி, மாடாக இருந்தாலும் சரி. இங்கு பெண் என்பது முதலீடுக்கான வழி.  குட்டிகளை ஈணுவது அதன் வேலை. அதனாலேயே 'பொட்ட ஆடு' என்றல் யாரும் கறி வாங்க மாட்டார்கள்.  அதையும் அடித்து தின்றுவிட்டு ஒன்றுமில்லாமல் உட்கார்ந்து இருக்க....விவசாயி என்ன முட்டாளா.....?.

பசுவை ஒரு மாபெரும் வாக்கு வங்கியாகவே தொன்றுதொட்டு பயன்படுத்திக் கொண்டு வருகிறது பாஜகவும் இந்துத்துவ அமைப்புகளும்!. 
.
புனித பசு மீதான மாயையை மதத்தின் பெயரால் தக்கவைத்திருக்கும் இந்துத்துவாவின் முகத்திறை கிழிக்கிறது “The Myth of Holy Cow” என்ற புத்தகம், இன் நூலை வரலாற்று ஆய்வாளரான த்விஜேந்திர நாராயண் ஜா (டி.என்.ஜா)  எழுதியிருக்கிறார். புகழ் பெற்ற பண்டைய இந்திய வரலாற்று நிபுணரான டி.என்.ஜா தனது 25 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி வாழ்க்கையில் இந்துத்துவாவின் பல கட்டுக் கதைகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். பண்டைய இந்திய இலக்கியங்களையும் தொல்லியல் ஆதாரங்களையும் பயன்படுத்தி, இந்துத்துவா பிரச்சாரங்கள் பெரும்பாலும் பொய்யான,கற்பனைகளின் அடிப்படைகளில் உருவாக்கப்பட்டவை என்று அவர் நிரூபித்திருக்கிறார். “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” என்ற அவரது புத்தகம் மாட்டிறைச்சி இந்தியர்களின் உணவு பழக்கங்களின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை காட்டுகிறது. அவர் பண்டைய இந்தியாவின் பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் பற்றி விரிவான ஆய்வுகளை செய்திருக்கிறார்.

இந்திய அரசியலில் ‘புனித’ பசு எனும் கட்டுக்கதையைப் பற்றியும் சங்க பரிவார் அதனைப் பயன்படுத்தி நாட்டை மத ரீதியில் பிளவு படுத்துவதைப் பற்றியும் ஜா விளக்குகிறார்

‘இந்திய துணைக்கண்டத்தில் மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கத்தை முஸ்லீம்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள்’ என்ற கருத்தாக்கத்தை இப் புத்தகம் உடைத்தெரிகிறது.
கடந்து நூறு ஆண்டுகளாக பசுவின் புனிதம் என்பது இந்தியாவில் ஆய்வுக்கான விவாதமாக மட்டும் இல்லாமல் சமூகத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்து மதவாதிகளும் அடிப்படைவாத நிறுவனங்களும் ‘பசுவைக் கொல்வதும் அதன் இறைச்சியை சாப்பிடுவதும் இஸ்லாமை பின்பற்றுபவர்களால்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் முஸ்லீம்களை மாட்டிறைச்சி தின்பவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். இந்திய சமய இலக்கியங்களிலிருந்து உணவுப் பழக்கங்கள் குறித்த தரவுகளை திரட்டி தருவதுதான் இந்த கட்டுக்கதையை உடைப்பதற்கான மிகச் சிறந்த வழி. அதன்படி,  இந்து மத, புத்த மத மற்றும் ஜைன மத நூல்களிலிருந்து பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் ‘இஸ்லாம் இந்தியாவுக்கு வருவதற்கு வெகு காலம் முன்பிருந்தே இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்தார்கள்’ என்பதை இப் புத்தகம் நிரூபித்திருக்கிறது!..

வேத காலத்தில் விலங்குகளை பலி கொடுப்பது பொதுவான பழக்கமாக இருந்தது. ‘எந்த பொது யாகத்துக்கும் முன்பு நடத்தப்படும் அக்னதேயா என்ற சடங்கில் ஒரு பசு கொல்லப்பட வேண்டும்’ என்பது விதிமுறையாக இருந்ததுள்ளது. மிக முக்கியமான பொது யாகமான அஸ்வமேதாவில் 600க்கும் மேற்பட்ட விலங்குகளும் பறவைகளும் கொல்லப்பட்டன. அதன் நிறைவு 21 பசுக்களின் பலியால் குறிக்கப்பட்டது. ராஜசூயா, வாஜ்பேயா போன்ற யாகங்களின் முக்கிய பகுதியான கொசாவாவில் மாருதுகளுக்கு ஒரு பசு பலி கொடுக்கப்பட்டது. கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளை கொல்வது இன்னும் பல யாகங்களின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது என்பதையும் இப்புதகம் ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறது.  புத்தகத்தை பாரதி புத்தகாலயம் “பசுவின் புனிதம்” என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது.

மாட்டுக் கறி வைத்திருந்தால் பாலியல் கொடுமைகளை விட அதிகத் தண்டனை!.

அபத்தத்தின் உச்சம் என்றால் இச் சட்டத்தைதான் சொல்லவேண்டும். இந்தியாவில் தற்போது உச்சத்தில் இருக்கும்  பாலியல் கொடுமைகளுக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை வழங்கப்படுக்கிறுது. அதே நேரத்தில் மாட்டுக் கறி வைத்திருந்தால் 5 வருடம் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் கொடுமையை விட மாட்டுக் கறி அப்படி என்ன புனிதம் என்று தெரியவில்லை? தனக்கான வாக்கு வங்கியை இந்துக்களிடம் தக்கவைக்கவே மதவாத பாஜக அரசு பலவகையிலும் முயற்சித்து வருகிறது. அதன் வெளிப்பாடே இத்தகைய சட்டங்கள்.

மாட்டிறைச்சிக்கு தடை என்ற சட்டம் நிறைவேறியதும் "இன்றுதான் எனது கனவுகள் நிறைவேறியிருக்கிறது" என்று தனது டூவிட்டர் பக்கத்தில் ஒரு சுட்டுறையை பதிவு செய்திருந்தார்  மாஹாராஷ்டிர முதல்வர் தேவந்திர ஃபட்னாவீஸ்!. ஆர்எஸ்எஸ் உருவான நாக்பூரில் பிறந்தவரான ஃபட்னாவீஸ், இந்துத்துவ கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் முகுந்த ஆர்வம் காட்டக் கூடியவர். சமீபத்தில் இஸ்லாமியர்களுக்கு  இடஒதுக்கீடு கூடாது என்று பிடிவாதமாக இருந்து அதை சட்டரீயாக  தடை செய்திருக்கிறார். .

மகாராஷ்டிராவில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் வரிசைக் கட்டி நிற்க, அதிலிருந்து வழி மாறி சென்றுக் கொண்டு இருக்கிறார் ஃப்ட்னாவீஸ்  தலைநகர் மும்பைக்கு பல பெருமைகள் உண்டு. மும்பை என்றதும் ஞாபகம் வரக் கூடிய மேற்படி சங்கதிகளில் ஒன்று அம்மாநிலத்தில் தங்குத்தடையின்றி நடைபெறும் விபச்சாரத் தொழில்தான். ஆசியாவிலேயே மிகப் பெரிதான, இந்தியாவில் குறிப்பிடத்தக்க விபச்சார சந்தையான 'காமாத்திபுரா' மும்பையில்தான்  இருக்கின்றது. பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட காமாத்திபுரா விபச்சார விடுதிகள்,  இன்றும் படு சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது. இங்கு 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண் செக்ஸ் தொழிலாளர்கள் தங்களது சேவைகளை ஆண்களுக்காக வழங்கி வருகிறார்கள்.  பெண்களை தெய்வமாக போற்றப்படக் கூடிய இந்தியாவில், ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களது வாழ்வை தொலைத்து இங்கு தங்களது உடலை பாலியல் விற்பனைக்கு ஆட்படுத்தி வருகிறார்கள்.

இந்த விபச்சார விடுதிகளுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெண்கள் கடத்தி வரப்படுகிறார்கள். மிகவும் கொடூரமான சித்திரவதைகள் கூடாரங்கள் மூலம் அவர்கள் சம்மதிக்க வைக்கப்படுகிறார்கள். அடிப்படை மனித உரிமைமீறல்கள் என்பது இத்தகைய விபச்சார விடுதிகளில் சர்வசாதாரணம். அடி உதை, வெட்டு, மார்புகளை வெட்டி எறிவது, சூடு போடுவது போன்ற சித்திரவதைகள் இங்கு கடத்தி வரப்படும் பெண்களுக்கு இழைக்கப்படுகிறது.  மிகப் பெரிய நெட்வொர்க்கை கொண்டு இந்தியா முழுவதுலுமிருந்து இளம் பெண்கள் இங்கு கடத்தி வரப்படுகிறார்கள். கோடிகளில் பணம் புழங்கும் இந்த விபச்சார தொழில் பற்றி ஆளும் அரசுக்கு தெரியாமல் இருக்குமா... என்ன?.


"மாட்டு கறியை தடை செய்தது எனது வாழ் நாள் கனவு" என்று கூறிய மாநில முதல்வர் தேவந்திர ஃப்ட்னாவீஸ், ஏன் விபச்சாரத்தை தடை செய்யவில்லை?. விபச்சாரத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி, அதை தடை செய்திருக்கலாமே.....?. விபச்சாரம் என்ற படு குழியில் தள்ளப்படும் பெண்களை காப்பாற்றி இருக்கலாமே......? ஏன் செய்யவில்லை.....?. ஓட்டுக் வங்கிக்காக மாடுகளின் மீது காட்டப்படும் அக்கரை, மகளிர் மீது காட்டப்படவில்லையே ஏன்?.

பசுவின் கறி புனிதம் என்றால்? பெண்கள் தங்களது சதையை விற்பது வியாபாரமா....?   சொல்லுங்கள் மிஸ்டர் தேவேந்திர ஃப்ட்னாவீஸ்???.


கட்டுரை / புகைப்படம்
-தோழன் மபா.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...