வெள்ளி, மார்ச் 21, 2014

எலிகண்ட் கமலநாதன் சார்!

 
கமலநாதன்


                        ன்னை போன்ற ஊடகத் துறையில் விளம்பர பிரிவில் பணியாற்றும் எவருக்கும், எலிகண்ட் பப்ளிசிட்டீஸ் கமலநாதன் சாரை நன்றாகத் தெரியும். இரண்டு பாக்கெட் வைத்த பளீர் வெள்ளை சட்டை, தும்பைப் பூ நிற வேஷ்டி, நெற்றியில் திருநிறு குங்குமம் இதுதான் சாரின் அடையாளம். அமைதி கனிவான பேச்சு என்று ஏகத்துக்கும் நம்மை வசிகரீக்கக் கூடியவர்.

தமிழகத்தில் முன்னணி விளம்பர நிறுவனமான 'எலிகண்ட்' முந்தையை கருப்பு வெள்ளை காலகட்டங்களிலிருந்து சினிமா விளம்பரங்களை வெளியீடுவதில் பெரும் புகழ் பெற்ற நிறுவனம்.
சினிமா பட ஸ்லைடுகளில் 'விளம்பரம் எலிகண்ட்' என்று வரும்; நீங்கள் கூட பார்த்திருக்கலாம்.

அந்தக் கால சினிமா பிரபலங்கள் பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். பேச பேச சினிமா பிரபலங்களைப் பற்றி வெளிவராத பல தகவல்கள் மிக அனாயசமாக வந்து விழும். இருவரும் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டு இருப்போம். சினிமா மற்றும் அரசியல் உலகம் பற்றி அவர் கூறும் விபரங்கள் நம்மை மலைக்கச் செய்யும். எம்ஜிஆர், சிவாஜி, கருணாநிதி என்று சினிமா கம் அரசியல் பிரபலங்களோடு நெருங்கி பழகியவர்.

அவரது மேஜையில் எம்ஜிஆர், சிவாஜி, சாண்டோ சின்னப்பா தேவர் இவர்களது புகைப்படம் ஒரே பிரேமில் வைக்கப்பட்டிருக்கும். அதில் சிவாஜி ஆற்றில் நின்றுக் கொண்டு சூரியனை கும்பிடிவது போல இருக்கும் படம் மிக அழகாக இருக்கும்.


பத்திரிகைக்காரர்களை மிகவும் மதிக்கக் தெரிந்த உயர்ந்த மனிதர். நேரம் காலம் இல்லாமல் உழைக்கத் தெரிந்தவர். இன்று (19/03/2014) மதியம் 12 மணி வரையில் அலுவலகத்தில் இருந்துவிட்டு, வீட்டுக்கு சென்றவர், சாப்பிட்டுவிட்டு சிறிது ஓய்வுக்குப் பின்னர் பாத்ரூம் சென்றவருக்கு மராடைப்பு வந்திருக்கிறது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

60 வருடங்களை கடந்து இன்றும் எலிகண்ட் முன்னணி விளம்பர நிறுவனமாகத் திகழ்வதற்கு இவரது அயராத உழைப்பும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஞாயிற்றுக் கிழமைகளில் கூட அலுவலகத்திற்கு வந்துவிடக் கூடியவர். நேர்மை, நேரம் தவறாமை, தொழில் பக்தி போன்றவை இவரடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.

தனது 76 வயது வரைக்கும் ஓய்வறியாது உழைத்த மனிதர் இன்று ஓய்வடைந்துவிட்டார். கமல்நாதன் சார் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், எலிகண்ட் நிறுவன ஊழியர்களுக்கும் எனது ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

 ****

எலிகண்டின்  வெற்றி எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு சம்பவத்தை இங்கு  கூறுகிறேன்.

எம்ஜிஆர்  முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார். "நாளை அனைத்து பத்திரிகைகளிலும் முழு பக்கம் விளம்பரம் வரவேண்டும்" என்று  எலிகண்ட் நிறுவனத்தை அழைத்து  எம்ஜிஆர் கூறிவிட்டார். அவர் கூறும் போது மணி மாலை 4. இப்போது போல் அப்போது மோடம், இ மெயில் போன்ற வசதிகள் இல்லை. எந்த விளம்பர மெட்ரியல் அனுப்ப வேண்டும் என்றாலும், நேரிடையாக அல்லது ஆட்கள் மூலம்தான் அனுப்ப முடியும்.  அதுவும் தமிழ் நாடு முழுவதும் அனைத்து பதிப்பிலும் அனைத்து பத்திரிகைகளிலும் வரவேண்டும் என்றால் மந்திர சக்தி இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

இன்றைய காலம் என்றால், தொலை தொடர்பு சாதனங்களை கொண்டு உலகம் முழுவதும் ஒரு நொடியில் அனுப்பிவிடலாம்.  அன்றைக்கு அதெல்லாம் சாத்தியம் இல்லாதது. திருச்சிக்கு விளம்பர மெட்ரியல் அனுப்ப வேண்டும் என்றால் ஒரு நாளுக்கு முன்பாகவே பேருந்து அல்லது ரயில் மூலம் பத்திரிகைகளின் பெயரை  போட்டு அனுப்பிவிடுவார்கள். சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் அங்கு அதை சேகரித்துக் கொள்வார்கள்.

எம்ஜிஆர் சொல்லும் போது மணி மாலை 4 மணி. அதற்கு பிறகு விளம்பரத்தை எழுத்து பிளாக் மூலம் கம்போஸ்  செய்து, அதை எம்ஜிஆரிடம் காண்பித்து அனுமதி வாங்கி தமிழகம் முழுவதும் அனுப்ப வேண்டும் என்றால் மிகவும் கடினமான ஒன்று. பத்திரிகைகள் இயங்குவேதே நேரத்தின் அடிப்படையில்தான் என்பது நாம் அறிந்த ஒன்று! . நிர்ணயக்கப்பட்ட நேரத்தில் அந்தந்த வேலை முடிந்தால்தான் உங்களுக்கு  6 மணிக்கு படிக்க பேப்பர் கிடைக்கும்.

எம்ஜிஆரிடம் அனுமதி பெற்ற விளம்பரத்தை விமானம் மூலம் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி என்று அனுப்பி அடுத்த நாள் தமிழகத்தின் அனைத்து பத்திரிகைளிலும், பதிப்புகளிலும் விளம்பரத்தை வர செய்தார்கள். இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் சாதாரண நிகழ்வுதான். அன்றைக்கு அது சாதனை.
****


வெள்ளி, மார்ச் 14, 2014

காணாமல் போகட்டும் "காணவில்லை' சுவரொட்டிகள்!


(தினமணியில் தஞ்சாவூர்க் கவிராயர் எழுதிய கட்டுரை, பிடித்திருந்ததால் இங்கு  பிரசுரம் செய்கிறேன்)

                         பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் ஒட்டப்பட்டிருக்கும் "காணவில்லை' சுவரொட்டிகளைப் பார்க்கும்போதெல்லாம் நெஞ்சம் துணுக்குறுகிறது. இவர்கள் எல்லாம் எப்படி காணாமல் போக முடியும்? மனிதர்கள், காட்டில் காணாமல் போகலாம், நாட்டில் காணாமல் போகலாமோ? இவர்கள் காணாமல் போக எது காரணமாக இருந்திருக்கும்? "தேடுவதற்கு யாருமற்றவர்கள் காணாமல் போவதில்லை' - எங்கோ படித்தவரி, எட்டிப்பார்க்கிறது.

காணாமல் போனவர்கள் காணாமல் போன அன்றைக்கு, பெரும்பாலும் கட்டம் போட்ட சட்டை அணிந்திருக்கிறார்கள். "மனநிலை சரியில்லாதவர்' என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

அண்மையில், தென்மாவட்டத்திலுள்ள ஒரு நகரப்பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர், நல்ல மனநிலையுடையவராகவும் ஒழுங்கான முறையில் உடை அணிந்தவராகவும் காணப்பட்டாலும், எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் கைநீட்டி கெஞ்சிக் கொண்டிருந்தார். அவர் முகம் பரிச்சயமானதாக இருந்தது. அவரை நெருங்கினேன். அவரும் என்னை கவனித்து விட்டார். சட்டென்று பேருந்து நிலையக் கூட்டத்தில் கரைந்து காணாமல் போனார்.

சென்னையில் யார் வீட்டிலோ இவரைப்பார்த்திருக்கிறேன். யார் வீடாக இருக்கும் நினைவின் அடுக்குகளில் துழாவினேன். மனம் பதைத்தது. வழி தவறி வந்துவிட்டாரோ? என்னை கண்டதும் ஏன் ஒளிய வேண்டும்? அந்த பேருந்து நிலையத்தில் எவ்வளவு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வெயில் - கூட்டம் - பேருந்துகளின் ஹாரன் சப்தம். நான் விரைவிலேயே களைத்துப் போய்விட்டேன்.

சற்று நின்றேன். கையில் பை கனத்தது. அதைவிட மனசு கனத்தது. வீட்டைவிட வெளியிடத்தை பாதுகாப்பாக உணர்வது எவ்வளவு துர்பாக்கியமானது? சுயமான சம்பாத்தியமோ, பென்ஷன் போன்ற வருவாயோ இல்லாத முதியவர்கள், வீட்டில் உள்ளோரின் கடுஞ்சொல் தாங்காது சில நேரங்களில் வெளியேறி விடுகின்றனர்.

இந்த முதியவரும் அப்படிப்பட்டவர்களில் ஒருவாராக இருப்பாரோ? பெரும்பாலான "காணவில்லை' சுவரொட்டிகளில், சில குறிப்பிட்ட வாசகங்களே அடிக்கடி காணப்படும்.

ஒருமுறை நான் பார்த்த "காணவில்லை' சுவரொட்டி ஒன்றில், மீசை அரும்பத் தொடங்கும் ஒரு பையனின் பால் வடியும் முகமும், அதன் கீழே, "அசோக்! எங்கிருந்தாலும் வரவும். அம்மா உன் நினைவாக படுத்த படுக்கை ஆகிவிட்டாள். உன் விருப்பப்படி இனி எல்லாரும் நடந்து கொள்கிறோம், உடனே வரவும்' என்ற வாசகங்களும் காணப்பட்டன.

இந்த சுவரொட்டியை அந்த பையன் பார்த்திருப்பானா? அம்மாவின் மேல் உள்ள பாசம் அவனை வீட்டுக்கு அழைத்துப் போயிருக்குமா? சூதும் வாதும் நிரம்பிய இந்த உலகத்தில் கெட்டவர்கள் கையில் அவன் கிடைத்திருந்தால், அவன் நிலைமை என்னவாகியிருக்கும்? கடவுளே, அப்படி ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது.

அந்த பையன் திரும்ப வந்திருப்பானா என்று தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்குள் மூண்டது. அந்த சுவரொட்டி ஆறு மாதங்கள் முன்னால் ஒட்டப்பட்டதாக இருந்தது. அதிலிருந்த தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டேன். மறு முனையில் ஒரு பெண் குரல் கிறீச்சிட்டது.

"ஐயா, நீங்க யாருங்க? அசோக் கிடைச்சுட்டானா? அவனைப் பார்த்தீங்களா?' என் கைகள் நடுங்கின. நான் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தேன். ஆனாலும் "ஐயா'... "ஐயா'.. அந்தத் தாயின் தீனக்குரல் என்னைப் பல இரவுகள் தூங்கவிடாமல் செய்தது.

வீட்டை விட்டு ஓடிப்போன ஒரு சிறுவனைப் பற்றிய ருஷ்யக்கதை உருக்கமானது: தாத்தா, பேரன் } இரண்டே பேர். தாத்தா பேரனை கண்டிப்பாக வளர்க்கிறார். சின்னஞ்சிறுவனான பேரனுக்கு தாத்தாவின் கண்டிப்பு பிடிக்கவில்லை. ரயில் ஏறி தொலைதூர நகரத்துக்கு போகிறான். அங்கே ஒரு ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலையில் சேர்ந்து பல கஷ்டங்களை அனுபவிக்கிறான். ஒருநாள் காகிதமும், கவரும் சேகரித்து தாத்தாவுக்கு கடிதம் எழுதுகிறான்.

அன்புள்ள தாத்தா,

இங்கே நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன். உடம்பெல்லாம் கரியும் அழுக்குமாக இருக்கிறேன். அடிக்கிறார்கள். என்னை வந்து அழைத்துப் போங்கள். இனிமேல் உங்கள் பேச்சை கேட்கிறேன். உடனே வரவும். இப்படிக்கு - உங்கள் பேரன்.
கவரை ஒட்டி எடுத்துக் கொண்டு ஓடுகிறான். தபால் பெட்டியில் சேர்க்கும் முன்னதாக ஞாபகம் வந்தவனாய் முகவரியை எழுதுகிறான் தாத்தா, கிராமம். அவ்வளவுதான். 

நாம் நாளும் காணும் "காணவில்லை' சுவரொட்டிகளுக்குப் பின்னால் இது போன்ற கண்ணீர்க் கதைகள் எத்தனையோ? இனி ஒரு விதி செய்வோம். முதியோருக்குப் பரிவு காட்டுவோம்; பெண்களையும் சிறுவர்களையும் புரிந்து கொண்டு அன்பு செலுத்துவோம்; மனநலம் குன்றியவர்களைப் பாதுகாப்போம். காணாமல் போகட்டும் "காணவில்லை' சுவரொட்டிகள்!.



நன்றி தினமணி.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...