திங்கள், ஆகஸ்ட் 31, 2009

பா. ஜ.க., வின் ஜின்னா புத்தி...!







'கடந்த பாரளுமன்றத் தேர்தலில் பா. ஜ.க.வை நான் பெரிதும் நம்பியிருந்தேன் '

இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலையில், இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சி சிங்கள இனவாத அரசுக்கு பல்வேறு ராணுவ உதவிகளை செய்துவந்தது. இலங்கையில் தமிழர்கள் அழித்தொழிப்பு நடவடிக்கையில் சிங்கள அரசுடன் இனைந்து காங்கிரஸ் அரசு பகிரங்கமாக ஈடுப்பட்டு வந்தது. இந்தியாவை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று உலக நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கியே இருந்தன.





இந்த நயவஞ்சக காங்கிரஸ் அரசை வீழ்த்த பா.ஜ.க., வினால்தான் முடியும் என்று நினைத்து இருத்தேன். காங்கிரஸ் பிரச்சாரம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு இருக்க, பா.ஜ.க.,வினர் டப்பா தட்டிக்கொண்டு இருந்தனர்.





மொக்க பிரச்சார உத்திகள்.



மொக்க பிரச்சார உத்திகள், பிரதமர் யார் என்று அறிவிக்காதது, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்காதது, பலம் இல்லா கூட்டணி, வியுகம் அமைத்து பிரச்சாரம் செய்யாத்து என்று இவர்கள் தோற்க ஆயிரம் காரணம்.
மற்ற கட்சியினர் காசை தண்ணிராய் செலவு செய்ய... இவர்கள் இறுக்கி கட்டிய முடிச்சை அவிழ்க்காதது. எப்படி தெரியுமென்று கேட்கலாம்? தேர்தல் விளம்பரம் தொடர்பாக தென் சென்னையில் போட்டியிட்ட இல. கணேசன் அவர்களிடம் பேச சென்றேன், அவரது அண்ணன்தான் பேசினார். பிசாத்து ருபாய்க்கு பேரம் பேசி, கடைசி வரை விளம்பரம் தரவேயில்லை. நாங்கள் புலம்பிக்கொண்டு வந்ததுதான் மிச்சம்.





காங்கிரசை தாலையில் தட்டி மூலையில் குந்தவைப்பார்கள் என்று எதிர்ப்பார்த்த என் போன்றவர்களுக்கு, காங்கிரசின் அரிதிப் பெரும்பாண்மை அதிர்ச்சியை அளித்தது. கார்கில் போர், பொக்கரான் அணுகுண்டு வெடிப்பு என்று 5 வருடம் இந்தியாவை வழி நடத்திச் சென்றவர்கள், தடுமாறிப்போனார்கள். தமிழர்களின் வாழ்வில் விடிவு காலம் பிறக்கும் என்று எதிர்ப்பார்த்த எங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

" நான் முதலில் இந்தியன். பிறகுதான் இஸ்லாமியன்" - ஜின்னா.



இந்திய,பாகிஸ்தான் பிரிவினை குறித்தும் பாகிஸ்தானின் தந்தையான முகம்மது அலி ஜின்னா குறித்தும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம் பெரிய அரசியல் புயலைக் கிளப்பியிருக்கிறது. அதன் முதல் சுற்றில் ஜஸ்வந்த் சிங் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இப்போது புயலின் மையம் அத்வனியை நோக்கித் திரும்பியிருக்கிறது.
ஜின்னா இந்தியாவிடமிருந்து பாகிஸ்தானை பிரித்தது நல்லதா, கெட்டதா என்று இப்பொது நாம் ஆராயத் தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால், முஸ்லிம்களுக்கு என்று தனி நாடு அமைவதை ஜின்னா எதிர்த்துதான் வந்துள்ளார்.





ஒரு வலுவான தேசியவாதியாக, உண்மையான காங்கிரஸ்காரராகத் தான் தனது அரசியல் வாழ்வை தொடங்கினார் ஜின்னா. காங்கிரசின் மூத்த தலைவர்களிள் ஒருவராக உருவெடுத்தார் அவர். " நான் முதலில் இந்தியன். அதன் பிறகுதான் இஸ்லாமியன்" எனக் கருதினார்.
கோகலேயின் ஆலொசனைப்படிதான் ஜின்னா முஸ்லீம் லீகில் சேர்ந்தார். அடிப்படை மதவாதிகளிடமிருந்தும், ஆங்கிலேயர்களின் அரவணைப்பிலிருந்தும், முஸ்லீம் லீகைக் காப்பாற்றி காங்கிரஸோடு நல்லுரவை வளர்க்க வேண்டும் என்பதுதான் ஜின்னாவின் நோக்கம்.
ரஹமத் அலியின் பாகிஸ்தான் பிரிவினைத் திட்டத்தை அவர் ஏளனம் செய்தார்.




இந்தியாவை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அப்துல்லா ஹரூன் 1938-ல் முஸ்லீம் லீக் மாநாட்டில் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்தார். பிரிவினைக்கு ஆதரவாக அப்துஸ் சத்தார் கைரி, அப்துல் மஜீத் சிந்தி ஆகியோர் கொண்டுவந்த தீர்மானங்களைத் தனது வாதத் திறமையால் தோற்கடித்தார்.





இப்படி தேச ஒற்றுமைக்காக குரல் கொடுத்த ஜின்னா, 1940 ஜனவரி முதல் பிரிவினைப் பாதையில் மெல்ல மெல்ல நடக்கத்தொடங்கினார். அவருக்கு அதரவுப் பெறுகி பாகிஸ்தான் பிரிந்தது தனிக் கதை.





பா. ஜ. க., வின் சின்ன புத்தி!





இப்படி உள்ளதை உள்ளப்படி எழுதியிருக்கிறார் ஜஸ்வந்த் சிங். இதில் கதையின் நாயகனை புகழ்ந்தும் எழுதியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸின் கிளையாகச் செயல்படும் பா.ஜ.க.,விற்கு இது பெரும் தலைவலியாக இருக்க... சற்றும் எதிர்பாராமல் ஜஸ்வந்த் சிங்கின் தலையில் கைவைத்து விட்டார்கள். முன்பு ஒரு முறை அத்வானி பாகிஸ்தான் சென்றிருந்தபோது இதே போல் ஜின்னாவை புகழ்ந்து பேசி சிக்கலில் மாட்டிக் கொண்டார். 'தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்' என்று அவர் தப்பியது தனிக் கதை.





இப்படி ஜின்னாவைப் பற்றிப் பேசினால், அவர்களது சின்ன புத்தியால் அதை ஜீரணித்துக் கொள்ளமுடியாது என்பதுதான் உண்மை.





எது எப்படியோ! பா.ஜ.க வில் இருந்துக் கொண்டு ஜின்னாவைப் பற்றி எழுத தனி துணிச்சல் வேண்டும். அதற்காகவாவது ஜஸ்வந்த் சிங்கை நாம் பாரட்ட வேண்டும்.





இந்தியர்களால் தூற்றப்பட்ட ஜின்னாவின் ஆவி இந்த முறை எத்தனைப் பேரை 'பலி' கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை?

சனி, ஆகஸ்ட் 22, 2009

"என் அன்னைக்கு பிறகு என்னை வளர்த்தது சென்னை"

இன்று சென்னை தினம் 22/08/09



சென்னை பற்றி எனக்கு எப்போதுமே ஒரு உயர்ந்த அபிப்பிராயம் உண்டு. நான் மாயவரம் அ.வ.அ., கல்லுரியில் இளங்கலை வணிகவியல் முடித்து, 20 நாட்கள் தான் வீட்டில் இருந்தேன். 1995 ஜுலையில் நானும், தம்பி வேல்முருகனும் சென்னை வந்தோம். இப்போ அவன் அமெரிக்காவில் ஜாகை. சென்னையில் அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் உள்ள 'அமெரிக்கன் எம்பஸியத்திற்கு' இருவரும் அடிக்கடி செல்வதுண்டு. வழ வழப்பான தாளில் உலக நாடுகளின் வரலாறும், பல் துறைத் தகவல்களும் புதைந்திருக்கும். வாரக் கடைசியில் புகழ்ப் பெற்ற ஆங்கிலப் படங்கள் திரையிடப்படும். காலையில் வேலை தேடுவதும், மதியத்தில் அமெரிக்கன் எம்பஸியத்தில் இளைப்பாருவதுமாய் வாழ்க்கை நகர்ந்துக் கொண்டு இருந்த நாட்கள் அது!

பிறகு பத்திரிகைகளில் பணி புரிய ஆரம்பித்தவுடன், சென்னையின் நீள அகலத்தை அளக்க ஆரம்பித்தேன். சென்னையின் வளர்ச்சியை கடந்த 14 வருடங்களாக அருகில் இருந்து பார்த்து வருகிறென். அதன் வளர்ச்சி நம்மை பிரமிக்கவைக்கிறது.


சென்னையில் எனக்கு பிடித்த... பிடிக்காத பத்து.


சென்னையில் பிடித்த பத்து.


1 எளிமை மாறாத மக்கள்.

2 என்னதான் கார்ப்பொரேட் சிட்டி என்ற முகம் காட்டினாலும் ஆடி மாதத்தில் தெருவுக்குத் தெரு கூழ் ஊத்த மறக்காதது.

3 காசு இல்லை என்றாலும், கவலையே இல்லாமல் காத்து வாங்கலாம்- மெரினாவில்.

4 எப்பொதும் மக்கள் கூட்டத்தில் மயங்கிக் கிடக்கும் தி நகர் ரெங்கனாதன் தெருவும் உஸ்மான் சாலையும்.

5 நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் பெருகினாலும், தானும் வளர்ந்து தனது மக்களையும் வளர்த்து விடும் அற்புதம்.

6 மாணவர்கள் ஓடும் பேருந்தில் இருந்து லாகவமாய் கம்பியை பிடித்துக் கொண்டு இறங்குவதும், என்னதான் கூட்டம் கூரையை பியித்துக் கொண்டு இருந்தாலும், மேற்கூரையில் தட்டிக்கொண்டு மாணவன் பாடும் 'கானா' அழகு.

7 யாரவது சாலையில் அடிப்பட்டு விட்டால், மனித நேயத்தோடு உடனே உதவி செய்யும் மக்கள்.

8 சென்னையை பாதுகாப்பாக வைத்திருக்க, தனது தூக்கத்தையும் மறந்து காவல் பாணியாற்றும் சென்னை மாநகர காவல் துறையினர்.

9 பழமை மாறாமல் இருக்கும் திருவல்லிக்கேணியும்,சென்னையின் வர்த்தக தலை நகரான பிராட் வேயும் அதன் நெருக்கடியான தெருக்களும்.

10 "இன்னாமே...யெப்டிக் கீற... நல்லாக் க்ரியா?" என்று தமிழின் தனி இலக்கணத்தோடு பேசும் சென்னை தமிழ்.


பிடிக்காத பத்து (அத...எத்து)


1) சாலை விதிகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத மக்கள்.

2) இதைப் போல வண்டிகள் கூட இன்னும் இருக்கிறதா ? என்று நம்மை புருவம் உயர்த்தச் செய்து புகை கக்கி ஊரையே நாறடிக்கும் இரு/மூன்று/நான்கு சக்கர வாகனங்கள்.

3) ஒரு இடத்தில் குப்பையை அள்ளி ஊர் முழுவதும் கொட்டும் அசிங்கமான, நாற்றம் பிடித்த குப்பை வண்டிகள். கூடவே குப்பையை கொளுத்தி காற்றை மாசுப் படச் செய்யும் பொறுப்பில்லாத பக்கத்து வீட்டுக் காரர்கள்.

4 சென்னையில் 'சிங்கிள் டீ' குடிக்கவேண்டும் என்றாலும் மலையாளிகளிடம் தான் கேட்கவேண்டியிருக்கிறது. (டீ நல்லா இருந்தாலாவாவது சகித்துக்கொள்ளலாம்.)

5 கொழ...கொழவென சளியை சாலையில் துப்பி, குழந்தைகளும் இந்த சாலையில் தான் நடக்கிறார்கள் என்பதை மறந்த சொரனையற்ற ஜென்மங்கள்.

6 'டாஸ்மாக் பார்' பார்க்கவே கண்றாவியாய் இருந்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப் படமால் 'ஈ யோடு ஈ யாய்' அமர்ந்து கடை மூடும் வரை சரக்கடிக்கும் நம்ம சென்னை குடிமகன்கள்.

7 தமிழையும், தமிழர்களையும் பற்றி கவலைப் படாத, . தன் தாய் மொழியாம் தமிழை மறந்து அயல் மொழிக்கு சாமரம் வீசும் சென்னை தமிழர்கள்.

8 சாலை விதிகளுக்கு நாங்கள் அப்பாற் பட்டவர்கள் என்று, ஆட்டோ / பேருந்துகளை தாரு மாராய் இயக்கி அப்பாவிகளின் உயிரைக் குடிக்கும் "சென்னை மா நகர பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள்.

9 சாலையில் நான்கு பேர் ஒர் இடத்தில் நின்று எட்டிப் பார்த்தால் போதும்..., அந்த வழியே வரும் வாகன ஓட்டிகள் அவசர அவசரமாய்' வண்டியை நிறுத்தி எட்டிப் பார்ப்பது. அப்படியும் தகவல் கிடைக்கவிட்டால், அங்கே பராக்குப் பார்த்துக் கொண்டு (அவனுக்கும் ஒன்னும் தெரியாது) நிற்பவனை பிராண்டுவது " என்ன சார்... என்ன ஆச்சி..." என்று. அலுவலகத்திற்கு கால தாமதமாய் சென்றாலும் பரவாயில்லை என்று, தகவல் கிடைத்தப் பிறகுதான் அங்கிருந்து நகர்வது.

10 "இன்னைக்கு நீ தோண்டினால்... நாளை நான் தோண்டுவேன்" என்று கங்கனம் கட்டிக் கொண்டு சென்னை சாலைகளை தோண்டிப் போட்டு பிறகு அதைப்பற்றி கவலைப் படாத... மின்சார வாரியம்/தொலை தொடர்பு துறை,குடி நீர் / வடிகால் வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி.

வாழ்க சென்னை...வாழிய...வாழியவே!

வியாழன், ஆகஸ்ட் 20, 2009

"தமிழ் விக்கிபீடியாவில் -68வது இடத்தில் தமிழ்



இன்று ஊடங்களும், இனையத் தளங்களும் பெருகி விட்டப் பிறகு தேடுதல் எண்பது மிகுந்த சுக அனுபவமாக மாறிவிட்டது என்றால் அது மிகையன்று.
பத்திரிகை அலுவலகங்களில் ... ஒரு நூலகம் எப்பொதும் இயங்கிக்கொண்டு இருக்கும். அதில், தங்களது படைப்புகள், புகைப்படங்கள், வரலாற்றுத் தொகுப்புகள் , இதுநாள் வரையில் வந்த நாளிதழ்கள் போன்ற முக்கிய ஆவணங்களை சேகரித்து வைத்திருப்பார்கள். இதற்காகவே பல லட்சங்களை செலவு செய்வார்கள். ஏதாவது பழைய நாளிதழ் வேண்டும் என்றால் கூட, அது எத்தனை வருடம் ஆகி இருக்கிறதோஅத்தனை வருடத்திற்கான தொகையை செலுத்த வேண்டும்.


நூலகத்திற்கென்றே மிகப் பெரிய கட்டிடத்தை பராமரித்தார்கள் எக்ஸ்பிரஸ் குழுமத்தினர். எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலமையகம், சென்னை மவுண்ட் ரோடில் இயங்கிக் கொண்டு இருந்த பொது, நான் நூலகத்தைப் பார்த்திருக்கின்றேன்.



கிளப் ஹவுஸ்


ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காரர்கள் அங்கு தங்கி இருந்ததால், அதற்கு 'கிளப் ஹவுஸ்' என்ற பெயர். இன்றும் அண்ணாசாலை, ஸ்பென்சர் பிளாசா எதிரில் கிளப் ஹவுஸ் ரோடு இருக்கிறது. அந்த கிளப் ஹவுஸ்ஸில் தான் எக்ஸ்பிரஸ் குழுமம் இயங்கிக்கொண்டுஇருந்தது. அங்கு உள்ள நீச்சல் குளத்தை நாளிதழ்கள் சேமித்துவைக்கும் கிடங்காக மாற்றி இருந்தார்கள். ஒரு நாள் 80 தாவது வருட தினமணி தேவைப்பட்டதால் அதை எடுக்கச் சென்றேன்.


உள்ளே ஒரே இருட்டு, இரும்பு கிராதிகள் வானுயரத்திற்கு நிறுத்தி இருந்தது. ஒரு 40 வால்ட் குண்டு பல்ப் வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டு இருந்தது. அந்த இடமே பார்க்க பயம் கொள்ளக் கூடிய அளவில் இருந்தது. நீச்சல் குளத்தின் ஆழத்திலிருந்து மர ராக்குகளை கூறை வரை அமைத்து இருந்தனர். பேப்பர் தேடவேண்டும் என்றால், நீச்சல் குளத்தின் கீழே இறங்கித் தான் தேடவேண்டும். அந்தக் கட்டிடத்தின் உச்சி வரை மர ராக் நீண்டு இருக்கும். வரலாற்றின் வாசனையோடு நாளிதழ்கள் மர ராக்குகளில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கும். வரிசை, வரிசையாக மர ராக்குகளை பார்க்கவே பிரமாண்டமாய் இருக்கும். முழுவதும் பேப்பர் வாசனை, அப்போதுதான் நினைத்துகொண்டென், இதை பராமரிக்க எவ்வளவு செலவு ஆகும் என்று!
அந்த காலத்தில் அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு, வரலாற்று ஆவணங்களை சேமித்து வைத்தார்கள்.


அனால் இன்று அந்த நிலை இல்லை. தினசரிகள் எல்லாம் 'ஸகேன்' செய்யப்பட்டு குறுந்தகடுகளாக மாற்றப் பட்டு சேமிக்கப்படுகிறது. போகட்டும், விஷயத்திற்கு வருவோம்...



தமிழ்க் கலைக்களஞ்சியம்.


அச்சு வடிவில் அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கிய நிலையிலிருந்து வளர்ந்து இன்று மின்னணு ஊடகங்களின் வழியாக அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன. இனையத்திள் அனைவரும் பயன்படுத்தும் தமிழ்க் கலைக்களஞ்சியமாக 'விக்கிபீடியா' திகழ்கிறது.
விக்கி என்னும் அவாய்மொழிச் சொல்லுக்கு "விரைவு" என்று பெயர். விரைவாகத் தகவல்களைத் தொகுப்பது என்ற அடிப்படையில் விக்கி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. விக்கி + என்சைக்கிளேபீடியா என்னும் இரு சொற்கள் இணைந்து விக்கிபீடியா என்ற சொல் உருவானது.



68வது இடத்தில் தமிழ்



2001 ம் ஆண்டு விக்கிபீடியா ஆங்கில மொழியில் தொடங்கப்பட்டு, பின்னர் பல மொழிகளில் விரிவுப்படுத்தப் பட்டது. இன்று 267 மொழிகளில் விக்கிபீடியா செய்திகளைத் தருகிறது. இதில் 28,97,231 கட்டுரைகளைத் தாங்கி ஆங்கிலம் முதல் இடத்தில் உள்ளது. தமிழ் மொழி 18,226 கட்டுரைகள் கொண்டு 68-வது இடத்தில் உள்ளது.



தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்கு வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் தான் மிகுதியான கட்டுரைகளை வழங்கி வருகின்றனர். 2003 முதல் இலங்கை யழ்ப்பாணத்தைச் சார்ந்த மயூரநாதன் ஒன்றரைஆண்டுகள் தன்னந்தனியே 2760 கட்டுரைகள் உருவாக்கி உள்ளார், என்ற தகவலைத் தருகிறார் மு. இளங்கோ. (விரிவான செய்திகளுக்குப் பார்க்க...பக்கம் 6, தினமணி கட்டுரை 18/08/09)



நமது கடைமை



விக்கிபீடியாவில் அனைவரும் பங்களிப்பு செய்தால் அனைத்துச் செய்திகளும் ஒரிடத்தில் கிடைக்கிறது என்ற நிலை உருவாகும். பங்களிப்போரும் பயன்படுத்துவோரும் அதிகரிப்பர். எனவே துறைசார்ந்த செய்திகள் என்றில்லாமல் ஊர் பற்றியும், உறவு பற்றியும், பண்பாடு, பழக்கவழக்கம், தெய்வ வழிபாடு, விளையாட்டுகள், நம்பிக்கைகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், சடங்குகள்,மனக்கணக்குகள், தமிழில் அறிவியல் வளர்ச்சி, தமிழர்களின் வாழ்வு முறைகள், வீரம், வணிகம் என எதனை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். இது தமிழர்களாகிய நமது தலையாயக் கடமை.



இது தொடர்பான பயிலரங்கங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.



எனவே உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் 'விக்கிபீடியாவில்' தமிழ் கட்டுரைகளை வரைந்து தமிழின் வளர்ச்சிக்கு தமது பங்களிப்பை செய்யுமாறு வேண்டுகிறேன்.
***************************

புதன், ஆகஸ்ட் 19, 2009

ஒரு ஏப்ரல் மாதத்தில்...! (எனது கவிதை)

ஒரு
ஏப்ரல் மாத
பகல் பொழுதில்
அவளை- மீண்டும்
சந்திக்க நேர்ந்தது,


நடந்து முடிந்துவிட்ட
துயரங்களுக்கு-பின்
எதன்
மீதும் நம்பிக்கை
கொள்வதில்லை,


நூலிழையாய்
தொடர்ந்த... அன்பின்
வெளிப்பாடு...


பிரிவின்-பார்
பட்டதும்,


துன்பங்கள்
தோரண
வாயிலாய் மாறின,


நேருக்கு நேர்
பார்த்ததில்...


விழிகளுக்குள்
வெளிச்சம்
பறவினாலும்...


இதயம்
இறந்துவிட்டப்பின்,
விழிகளும்
குருடுதான்,
செல்லும்
வழிகளும்
கரடுதான்.


-19/04/97 இல் நான் எழுதிய கவிதை. நீங்கள் ஊகிப்பது சரிதான், நான் அப்பொது காதல் வயப்பட்டு இருந்தேன்.

திங்கள், ஆகஸ்ட் 17, 2009

கக்கூசுல உக்காந்து முக்குனா வரும் !



"விடுங்க பாஸ். இவனுங்க எப்போவுமே இப்படித்தான்" இப்படித்தான் நினைக்த் தோன்றுகிறது இந்திய அரசைப் பார்த்து.



உலகிலேயே தன் நாட்டு மக்கள் அயல் நாட்டில் அடி ,உதை பட்டாலும் இல்லை கொலையுன்டாலும் கவலைப் படாத அரசு இருக்கிறது என்றல், அது ! இந்திய அரசுதான்.


முன்னால் ஜனாதிபதியை அமெரிக்க விமான நிறுவனம் அவமானப் படித்தியப்போது இவர்கள் என்ன செய்தார்கள் சொல்லுங்கள் பார்ப்போம்? இவனுங்க சும்மா ஒரு (இந்திய ஆட்சியாளர்கள்) மொக்கப் பசங்க. இவர்கள் கல்லாபெட்டி நிரம்பினால் போதும் என்று நினைக்கூடிய சுயநல கிரிமிகள்.


எம் தமிழ் இனம் ;இலங்கை இனவாத அரசால் கூட்டம் கூட்டமாக, கொன்று குவித்தப்போது, அதற்கு வெண் சாமரம் வீசிய கருங்களிகள் தானே இவர்கள்?


இப்போவெல்லாம், நான் இந்தியன் என்ற வுணர்வே வரமாட்டேன்கிறது. சிலசமயம் கக்கூசுல உக்காந்து முக்கிக்கிட்டு இருப்போம் பாருங்க, அதைப் போலத்தான் இருக்கிறது என்னிடம் 'நான் இந்தியன் என்ற உணர்வு'.


ஈழத் தமிழர்களின் முப்பது வருட கனவு சில நாட்க்களிலே, கலைந்தது பாருங்க, அன்று என்னுள் கரைந்தது நான் இந்தியன் என்ற எண்ணம். 'நீங்கள் கேட்கலாம், இந்தியா பிடிக்கவில்லை என்றால் இந்தியாவை விட்டு போக வேண்டியதுதானே' என்று.


நான் ஏன் போக வேண்டு? இது எனது தாய் பூமி. எனது முன்னோர்கள் வாழ்ந்து மறைந்த தேசம். அவர்களது ஆன்மா இங்குதான் சுற்றி இருக்கிறது. இப்போதுள்ள ஆட்சியாளர்களின் முடிவால் நான் இந்தியாவை ஆதிரிக்க வேண்டும் என்பதில் அர்த்தமில்லை. ஆட்சிக்கு வந்து விட்டால் அவர்கள், நடத்துவதெல்லாம் நல்லதாகி விடாது.



இன்று சாருக் கானை அமெரிக்கன் சுருக்கென்று, குத்தியவுடனே கோபம் கொப்பளிக்கிறது வட இந்திய உடகங்களுக்கு. தமிழன் குடும்பம் , குடும்பமாய் செத்தானே, அப்போதெல்லாம் உங்களுக்கு கோபம் வரவில்லையா? ஒரு வட இந்தியன் பாதிக்கப் பட்டவுடன் இப்படி கூச்சல் போடுகின்றீர். இல்லை தமிழன் இந்தியனாகத் தெரியவில்லையா? இல்லை தமிழ்



கடலூர் தமிழன் ஒருவன் , ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொள்ளப் பட்டப் போது, இந்த வட இந்திய ஊடகங்கள் எங்கே சென்று இருந்தார்கள்? மலேசியாவில் தமிழர்கள் அடிப்பட்டபோது, ஏன் வட இந்திய ஊடகங்கள் கண்டுக்கொள்ளவில்லை.


ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப் பட்டத்திற்கு, இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?



இவர்கள் எப்போதும் தனது நட்டு மக்கள் பற்றி கவலைப்பட்டதில்லை, என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன.


தங்கள் சொந்த நாட்டு மக்கள் அயல் நாடுகளில் அடி வாங்குவதையும், இந்திய வம்சாவழித் தமிழர்கள் அயல் நாடுகளில் கொன்றுக் கூவிப்பதையும் வேடிக்கைப் பார்க்கும் ஒரே அரசு இந்திய அரசுதான்(?)


இதில் எங்கேயிருந்து வரும் இந்தியன் என்ற எண்ணம்.


வாழ்க இந்திய ஜனநாயகம் !



ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2009

இந்த வாரம்...



இந்த வாரம் உலகில் வலம் வந்த சில சம்பவங்கள்.




பன்றி காய்ச்சல்!


உலகம் முழுவதும் பன்றி காய்ச்சல் நோய், எல்லோர் வாயிலும் அகப்பட்டுப் போனது. (எழுதுவதால் யாருக்கும் தொற்றிவிடது).


என் நண்பன் கேட்டான் "மச்சான், பன்றிக்கு காய்ச்சல் வந்தால், மனுஷனுக்கு ஏன் ஊசி போடுறாங்க..." நல்ல கேள்வி என்று நினைத்துக்கொண்டேன்.

முன்பு வந்த சீசனில் 'சிக்கின்-குனிய' நோய் உலகம் முழுவதும் பரவியது. பொதுவாக இந்த போல் வைரஸ் கிருமிகள் முதலில் தோன்றுவது ஆசியக் கண்டத்தில் தான் என்று மேற்கு நாடுகள் பொய்யுரை பரப்பி வரும். ஆனால் இந்த முறை மெக்சிகோ என்று உண்மையை சொல்லி இருக்கிறார்கள். மெக்சிகோ தென் அமெரிக்கவில் உள்ள ஏழை நாடு என்பதால் இருக்குமோ ? (மெக்சிகோ, உலகப் பந்தில் சரியாக இந்தியாவிற்கு கீழே வருகிறது என்கிறார்களே உண்மையா?)




கே பி கைது. ஒரு நாடகம்!
என்னசொல்லி... மலேசிய அரசு இலங்கைக்கு அனுமதி வழங்கி இருக்கும்?

" நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். இல்லை என்றால் தமிழர்கள் இங்கேயும் ஆயுதம் தூக்குவார்கள். அது உங்கள் தேசத்தை துண்டாடும். அதனால் புலிகளின் மீதமுள்ள தலைவர் கே பி யை பிடித்துக் குடுத்தால் போதும். மலேசிய தமிழர்களை அடக்க எங்கள் நாடும் உங்களுக்கு உதவும். இது புத்தர் (?) மேல் ஆணை." என்று அவர்களின் காலில் விழுந்து நக்கி இருப்பார்கள். அதனால் தான் மலேஷியாவில் நடந்த கைதை, தாய்லாந்து என்று பொய்யுரை பரப்பி வருகிறார்கள் சிங்கள இனவாத அரசு.


உலகில் இதுவரை நடந்த எந்த ஒரு சுதந்திரப் போரும், முடிவில் வெற்றிதான் பெற்றுள்ளது. ஏனன்றால், தனது தாய் நாட்டுக்காக இன்னுயிர் தந்த வீரர்களின் ஆத்மா அந்த வெற்றியை பெற்று தரும்.
ஈழம் வெல்லும்.


சிலைகள் திறப்பு... இரு மனங்களின் இணைப்பு...




திருவள்ளுவர் -சர்வைன்கர் சிலை சிலை திறப்பு, நல்ல அரசுகளின் சிறப்பான செயல்பாடுதான் என்று சொல்லவேண்டு. ஏனன்றால், தமிழ் நாட்டிற்கு நீர் தரவேண்டம் என்று அணையில் விழுந்து செத்தவர்கள் கன்னடர்கள். தமிழர்களுக்கும் இவர்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். எந்த வகையிலாவது தமிழகத்திற்கும், கன்னடதிருகும் எப்போதும் பிரச்சினை இருந்து வரும். அது ! காவிரி ஆகட்டும் ஓகேநக்கல் ஆக்கட்டும்.

எதாவது ஒரு தகராறு என்றால் உடனே தமிழ் சினிமா ஓடும் தியேட்டரை அடித்து உடைப்பது, நகருக்கு வரும் தமிழ் நாட்டு வண்டிகளை அடித்து நொறுக்குவது. என்று அவர்களின் அலப்பறை நம்மால் தாங்க முடியாது.

நான் கூடசிறு வயதில் பெங்களூரு தமிழ் நாட்டின் ஒரு பகுதி என்றுதான் நினைத்து இருந்தேன்(?) அந்தளவிற்கு நம்ம ஆள், அங்கு இருந்து வேர் ஊன்றி உள்ளான்.


எடியுரப்பா தமிழ் நாட்டிற்கு இடையுராக இருப்பார் என்று தான் நினை த்திருப்போம். நல்ல வேலை அவர் முன்பு இருந்தவர்கள் போல் இல்லை என்று தான் சொல்லவேண்டு. எடியுரப்பவின் முயற்சிக்கு கரம் நீட்டிய கலைஞரையும் வாழ்த்த வேண்டும்.


நல்ல முயற்சி என்றும் நன்மை தரும்.

எனது கவிதை...'வழக்கமான ஒன்டேன்று..."

வழக்கமான ஒன்டேன்று

நீ

நிற்கச் சொன்ன...

இடத்தில் அல்லாமல்,

பிறிதொரு இடத்தில்

நிற்கும் போதுதான்,

உணர்கிறேன்,

காத்திருப்பின் அவசியத்தை.

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2009

வலைப் பதிவாளர்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் வருமா?

(நீங்கள் எதை திறந்து வைத்தாலும் முகத்தை மூடிக் கொள்ளுங்கள்)



மெக்சிகோவில் தோன்றி உலகமுழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது பன்றிக் காய்ச்சல் நோய். இது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களை மிக எளிதாக தாக்குகிறதாம்.






தற்காத்துக் கொள்ள சில வழி நமக்கு.






  1. சத்தான உணவுகளையே உண்ணவேண்டும்



  2. பழம், காய்கறிகளை உணவில் அதிகம் பயன் படுத்த வேண்டும்



  3. காலையில் நடைப் பயிற்சி செய்யவேண்டும்



  4. இரவில் அதிக நேரம் கண் விழிக்கக் கூடாது. நம்ம மக்களெல்லாம் (வலைப் பதிவாளர்கள்) இரவில் அதிக நேரம் கண் விழித்து கணினியில் லொட்டு...லொட்டு என்று தட்டிக்கொண்டு இருப்பார்கள். இப்படி அதிக நேரம் கண்விழிபதால், நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. நாம் இப்போது எச்சரிக்கையாக இருப்பது நலம்.



  5. குடி, பீடி கூடாது.



  6. கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்



  7. பன்றிக் காய்ச்சல் நோய் உள்ளவர்களை அருகில் சென்று தொடுதல்/பேசுதல் கூடாது.



  8. சுத்தமான முக மூடிகளை, வெளியில் செல்லும் பொது பயன்படுத்த வேண்டு.



இப்படி நெறைய ஆலோசனைகள் நாளிதழ்களிலும், டிவி களிலும் தொடர்ந்து வந்து நம்மை துன்புறுத்துகின்றன. இதெல்லாம் இரவில் கண் விழிக்கும் நம் போன்ற ஆட்களுக்கு பயமாகத்தான் இருக்கும். அதனால் தோழர்களே வலை பதிவினை பகலிலேயே முடித்துவிட்டு, இரவில் நிம்மதியாக தூங்குங்கள்.

























வெள்ளி, ஆகஸ்ட் 07, 2009

"நீங்கள் ஓடி ஒளிய மக்கள் கூட்டம் தான் நல்லது..."

##குறும்பன்##

.....................நவீனம்.............

மீதமிருந்த நேரத்தில் தினமணி கதிர் எடிட்டர் சிவகுமார் சாரை பார்க்க சென்றேன், அவர் மீதமிருந்த (?) நேரத்தில் என்னோடு பேசிக்கொண்டு இருந்தார். சங்க இலக்கியம் முதற்கொண்டு சாயந்தரம் சங்கதி வரைக்கும் விலாவரியாக பேசக்கூடியவர்.

சங்கீதத்தில் அவர் ஒரு மகா அனுபவஸ்தன், அப்படி ஒரு சங்கீத ஞானம் . அதுவும் பழைய சங்கதியெல்லாம் தனிஅவர்தனமே செய்வார், அதற்கு தினமணி கதிரில், வருடம் தோறும் அவர் தயாரிக்கும் இசை மலரே சாட்சி. அவர் சங்க இலக்கியங்களை திரட்டி 'பொங்குதேர் வாழ்க்கை' என்ற புத்தகத்தை 500 பக்கங்களில் எழுதியுள்ளார். (இதை பற்றி பிறிதொரு சந்தர்பத்தில் கூறுகிறேன்)

அவரிடம் பேசிக் கொண்டு இருக்கும் பொது 'குறும்பன்' என்றொரு நூலை பற்றி சொன்னேன். எனது மனதை தொட்ட சில நூல்களில் குறும்பனுக்கும் இடமுண்டு. சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர், எதேட்சையாக என் கையில் கிடைத்தது. மறைந்த நெடுமாறன் மாமா வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கும் போது அருகில் உள்ள புத்தக குவியலில் கிடந்தது. வழக்கமான புத்தகம் போல் அல்லாமல், அளவிலும், அட்டையிலும் சற்றே பெரியதாக இருந்தது. அதுவே என்னை கையில் எடுக்க தூண்டியது.

அதுவரையில் அப்படி ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்தை நான் படித்ததில்லை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தினர் அப்புத்தகத்தை தயாரித்து வெளியிட்டுஇருந்தனர். மிகவும் வித்தியாசமான 'குறும்பன்' என்னும் சுயசரிதை நவீனத்தை உச்பெஸ்கிஸ்தான் மக்கள் கவிஞர் குல்யாமின் (1903-1966) எழுதிஉள்ளார். அந்த உரையாடல் நிச்சயம் வெகுவாக கவரும் என்று சொல்லிவிடலாம். இதுநாள் வரையில் அந்த புத்தகத்தைப் பல இடங்களில் தேடி அலைந்திருக்கிறேன். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சில் விசாரித்தபோது 'அந்த புத்தகம் தற்போது விற்பனையில் இல்லை என்று சொன்னார்கள். அவ்வப்போது பல கடைகளில் தேடி அலைந்துஇருகிறேன்.

நேற்று சிவகுமாரிடம் அந்த புத்தகத்தைப் பற்றி சிலாகித்து சொல்லிக் கொண்டு இருக்கும்போதுதான், அவர் சொன்னார், ''அட ! பாவி அந்த புத்தகம் re-print ஆகி வந்திரிட்சிடா '' என்றார்.

வீட்டுக்கு கிளம்ப இருந்த நான், வண்டியை நேராக திருமங்கலம் சிக்னலுக்கு விட்டேன். அங்குதான் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தினர் கண்காட்சி. நடத்தி வருகின்றனர். இரவு ஒன்பது இருக்கும், வெளிச்சத்தின் வூடே குறும்பனை தேடினேன், யாரிடம்மும் கேட்கவில்லை. நாமே கண்டுபிடிப்போம் என்று. சரியாக மூன்றாவது சுற்றில் முதல் அடிக்கில் இருந்தான் குறும்பன். சரியான கள்ளன்!

சற்றே கைகள் நடுங்க (பிரமையா?) குறும்பனை புரட்டினேன். நல்ல அச்சில் மிக நேர்த்தியாக வந்திருக்கிறது குறும்பன்.

குறும்பனைப் பற்றி சில வரிகள்...

"தப்பி ஓடி ஒழிய வேண்டுமானால் ஆள் கூட்ட நெரிசலில் அமிழ்வதைவிட மேலானது எதுவுமில்லை. சந்தை திடலின் நடுவே, திறந்த வெளியில் கண்ணுக்கு மறைவது போல எந்தக் காட்டிலும் முடியாது" - இவ்வாறு கூறுகிறான் நமது நூலின் கதாநாயகன் குறும்பன். சமயோசித சாமர்த்யமும் உள்ள குறும்பன் - சின்னச்சிறு போக்கிரி. எத்தனையோ தடவை தன் கிருத்ரி மங்களுக்கு பிறகு அவன் தலைதெறிக்க ஓடி தப்ப நேர்ந்தது, எனவே அவன் இந்த விழயத்தில் அனுபவசாலிதான்!

இந்த குறும்புகார பையனின் கதையையே இந்நூல் ஆசிரியர் கூறுகிறார். அவர் தமது பிள்ளை பருவத்தை நினைவு கூறுகிறார். எத்தனையோ ஆண்டுகளுக்கு முந்திய காலம் அது. அப்போது உச்பெஸ்கிஸ்தான் வாழ்க்கை இப்போதைய வாழ்க்கைக்கு முற்றிலும் வேறாய் இருந்தது.

தமிழாக்கம் : பூ. சோமசுந்தரம்.

பக்கம் 287

விலை Rs.125/-

பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

செவ்வாய், ஆகஸ்ட் 04, 2009

ஒரு பகல் நேரத்தில்... கவிதை





!!!!!கவிதை!!!!!!


ஒரு பகல் நேரத்தில்...
நான் எழுதிய இக் கவிதை
தினமணி கதிரில் (22/04/2001)
அன்று வெளிவந்தது.

நீ
வந்து
சென்றதற்கான
அடையாளம் எதுவும்
இல்லையென்றுதான்
நினைத்திருந்தேன்.
பார்வையும்
அப்படித்தான்
சொன்னது.
மேஜையில்
இருந்த
பூச்-ஜாடி
அப்படியே
இருந்தது.
கொடியில்
காயவைத்த
*அவளது துணியிலும்
வித்யாசம் இல்லை.
டம்ளரில்
இருந்த
பாலுக்கும்
சேதமில்லை.
இருந்தும்
கண்டு பிடித்துவிட்டேன்,
அட!
போக்கிரி
சிட்டுக்குருவியே...
அரிசியை
இப்படியா
இறைத்துவிட்டு
செல்வது...?
-தோழன் மபா
*நான் முதலில் எழுதிய கவிதையில் 'துணியிலும் வித்யாசம் இல்லை ' என்று எழுதிஇருந்தேன், இப்போது துணிக்கு முன்பாக 'அவளது' என்ற வார்த்தையை சேர்த்து எழுதி உள்ளேன்.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...