சனி, பிப்ரவரி 22, 2014

கணையாழி உயரிய விருதுகள் அறிவிப்பு!


                            விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. 


          மிழ் இலக்கிய உலகில் தவிற்க முடியத அடையாளம் 'கணையாழி'.  முன்னாள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக  துணைவேந்தர்  ம.இராசேந்திரன் அவர்களின் சீரிய முயற்சியால், கணையாழி மீண்டும் வெளிவந்து இலக்கிய ஆர்வலர்களின் விருப்பப் பட்டியலில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுவிட்டது.

இலக்கிய கர்த்தாக்களுக்கான கணையாழியின் உயரிய விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன.  சிறுகதைக்கான 'ஜெயகாந்தன் விருது' எஸ்.டி.ஏ. ஜோதிக்கும், கவிதைக்கான 'ஆண்டாள் விருது' கவிஞர் மலர்மகளுக்கும், கட்டுரைக்கான 'கா.சிவத்தம்பி விருது' முனைவர் பழ.அதியமானுக்கும் வழங்கப்படுகிறது.  சாகித்ய அகாதமி விருதுப் பெற்ற ஜோ.டி. குரூஸூக்கு பாராட்டு விழாவும் நடத்தப்படுகிறது.

இவ் விழாவில் நல்லி குப்புசாமி, நீதியரசர் கே.சந்துரு, கவிஞர் கலாப்ரியா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் தமன்பிரகாஷ், எஸ்.கே.பி கல்வி நிருவனங்களின் தலைவர் கு.கருணாநிதி போன்றோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

விருது வழங்கும் விழா இன்று (சனிக்கிழமை 22/02/2014) மாலை 5 மணிக்கு சென்னை முத்தமிழ் பேரவை அரங்கில் திருவாவடுதுறை டி.என்.இராஜரத்தினம் அரங்கம், (சத்யா ஸ்டூடியோ எதிரில்) நடைபெறுகிறது.

அனைவரும் வருக!

செவ்வாய், பிப்ரவரி 11, 2014

'பிஜேபியால் பைத்தியம் பிடித்து நிற்கும் வைத்தியராமன் தெருவாசிகள்!'




                                            அதிரிபுதிரி அரசியல் ரிப்போர்ட்!                                 
             


                         தினம் ஒரு பிரஸ் மீட், தினம் ஒரு கூட்டணி பேச்சுவார்த்தை என்று பரப்பரப்பு முகம் காட்டி வருகிறது தமிழக பா.ஜ.க.  முந்தையை தேர்தலில் பற்றிப்படர ஒரு கொழு கொம்பு இல்லாமல் அல்லாடிய பாஜக, இம் முறை  மோடியை சுற்றி படர்ந்திருக்கிறது.  குஜராத்தைவைத்து மோடிமஸ்தான் வேலை செய்து, தனக்கான தனி இமேஜை ஏற்படுத்திக் கொண்ட நரேந்திர மோடி, டீ ஆத்துவதை விட்டுவிட்டு இந்தியாவை நீள அகலத்தில் ஆத்து ஆத்துன்னு ஆத்திக்கொண்டு இருக்கிறார்.

சென்னை திநகர் வைத்தியராமன் தெருவில் இருக்கும் பிஜேபி தலைமை அலுவலகத்தின் வாசலில் வைத்துதான் ஊடகங்களுக்கு  பேட்டி தட்டுகின்றனர் தமிழக பாஜக தலைவர்கள். ஒரு பக்கம் எல். கணேசன் மைக் பிடிக்க, மறுபக்கம் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி கொடுக்க, வாசலில் வானதி ஸ்ரீனிவாசன் பேட்டிக் கொடுக்க தயாராக காத்திருக்க... என்று அந்த ஏரியாவே அதிரிபுதிரியாகி கதிகலங்கி நிற்கிறது. 

தெருவின் திரும்பிய திசையெல்லாம் பத்திரிகையாளர்களும் டிவிக்காரர்களும் நிரம்பி வழிகின்றனர்.
ஒரு டிவி பேட்டி முடித்தால், மற்றோரு டிவி பேட்டியை தொடங்குகிறது.  தமிழ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று டம்பிங் பட வரிசைபோன்று ரகத்திற்கு ஒன்றாய் பேட்டி கொடுக்கின்றனர்.

இதற்கு முந்தைய எபிசோடில் பிஜேபிக்காக வரட்டு வரட்டுன்னு கத்திகிட்டு இருந்த தமிழறிவு மணியன், தற்போது தனது டெசிபலைக் குறைத்துக் கொண்டு தனியாவர்த்தனம் செய்ய போய் விட்டார்.  விஜயகாந்த் திமுக பக்கம் போய்விடாமல் இருக்க என்னன்னவோ செய்து பார்த்தார்.  தனது வேட்டியை அவுத்து,   கேப்டன் போகும் பாதையெங்கும் திமுக என்ற எழுத்து அவரது கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளக் கூட முயன்றார்.  என்ன பிரயோசனம்.....கேப்டன் போடுவது கரன்ஸி கணக்கு என்று தமிழறிவு மணியன் என்ற தவளைக்குப் புரியவில்லை.  திமுகாவிற்கு எதிராக தினம் தினம் கொடுத்த பேட்டியும் வீணாகிவிட்டது.

தமிழறிவு மணியன் சொல்வதை கேட்க இவர் என்ன மச்சான் சதீசா.....?.

மோடியோடு மேடை ஏறுவேன் என்று சொன்ன நம்ம வைகோ, வாழ்த்து தந்தி மட்டும் பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு  தாயகத்தில் தஞ்சம் புகுந்துவிட்டார். பிற்பாடு கூட இருந்தவர்கள் எடுத்துச் சொல்லப் போக....ரெண்டாம் சாமத்துக்கு மோடியை, தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு சந்தித்திருக்கிறார் வைகோ.  அன்றைய தினம்  (மோடி வருவதற்கு முன்)  இரவு எட்டரை மணிக்கு கிளம்பிய ஒரு வதந்தி வைகோவை மேடை ஏறாமல் செய்துவிட்டது என்கிறார்கள் வைத்தியராமன் தெருவாசிகள்.


எட்டரை மணிக்கு கடையை (?) மூடிவிட்டு தலைவர்கள் காரில் ஏறி பறக்க இருந்த அந்த செகண்டில், எங்கிருந்தோ பறந்துவந்த ஊடகக்காரர்கள்  "உங்களுக்கும் திமுகவுக்கும் கூட்டணியாமே....?" என்ற வெடியை கொளுத்திப் போட, அது பொன்னார் முகத்தில் சரமாரியாக வெடித்தது.  வைகோவை மேடை ஏறாமல் செய்தது.

"உங்களுக்கு யாருங்க சொன்னா.....யாருங்க சொன்னா.....?" என்று பொன்னார் கோபத்தில் கத்த, "இங்கதாங்க தெரு முக்ல பேசிக்கிட்டாங்க...." என்று ரிப் போட்டர்கள் பொத்தாம் பொதுவாய்  பதிலளிக்க,   பொன்னார் மறுபடியும் மைக் பிடித்து பேட்டி கொடுக்க ஆரம்பித்தார்.  அன்றைய இரவு மூடிய கடையை மறுபடியும் திறக்கும்படியாகிவிட்டது. 

 பிளாஷ் லைட் வெளிச்சம் பீய்ச்சு அடிக்க.....சீரியல் பார்த்துக் கொண்டு இருந்த வைத்தியராமன் தெருவாசிகள் சிலபல நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியஸ் மூடுக்கு வந்தார்கள். ஒரு கட்சி இருந்தாலே இப்படி இருக்க, அதே தெருவில் இன்னோரு   கட்சியும் இருக்கிறது.

அது சிபிஐ!.  சிபிஐயில் ஒன்றும் பிரச்சனை இல்லை. அவர்கள் காம்ரேட்டுகள் என்பதால் கட்சி அலுவலகத்தில் அவ்வளவாக இருப்பதில்லை.  களப்பணியாற்ற சென்றுவிடுகின்றன்ர்.  செவப்பு கலர் உண்டு, அம்மா  தரும் தொகுதி உண்டு என்று காம்ரேட்டுகள் கம்முன்னு கிடந்து ரெண்டு மூனு வருஷமாச்சி. 

ஜெ எதுக்கு காம்ரேட்டுகளுக்கு ஒகே சொன்னார்ன்னு தெரிஞ்சா, எதுத்தாப்பல இருக்குறவுங்க மூக்கு மேல கை வைப்பிங்க.  தான் ஜெயிச்சு டெல்லிக்கு போனா.... கூட மாட கொரல் எழுப்ப ஆளு வேண்டாமா....?.. சைடு சப்போட்டுக்கு எப்படியும் இருபது முப்பது கம்யூனிஸ்ட்டு தேருவாய்ங்க!. 

தான் ஒரு சாமானியன் என்று கதை அளந்த மோடி எஸ்ஆர்எம்  பலகலைக்கழகத்திற்கு தனி விமானத்தில் வந்து போயிருகிறார். பூஷ்வாக்களின் நாயகன் என்ற முகமூடிதான் மோடிக்கு சரியாக பொருந்துகிறது. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு பல கோடி ரூபாய்களை வாரி இறைத்து இருக்கிறது எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம். 

தாங்கள் கூட்டணி வைக்கும் அளவிற்கு பச்சமுத்துவின் IJK ஒன்றும் பெரிய கட்சியல்ல என்ற முணுமுணுப்பு  பாஜகாவில் இப்போதே தோன்றிவிட்டது.

இரண்டு தவணையில் காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுத்த பாஜக இன்னும் சுய நினைவுக்கு வரவில்லை, என்பது நிதர்சனம். தனக்கு கிடைக்க இருக்கும் ஒரு வாய்ப்பை பறிகொடுக்கவே பாஜக இம்முறையும் முயலுகிறது.  பாஜகவின் செயல்பாடுகளை பார்த்தால், ஏதோ.... இப்பவே மோடி பிரதமாராகிவிட்டார் என்ற கனவில் மிதப்பதாகவேப்படுகிறது.

தாமறை கட்சிக்காரர்களே கொஞ்சம் சுய நினைவுக்கு வாங்க......  இல்லென நீங்க அபிட்டுதான்.




திங்கள், பிப்ரவரி 10, 2014

உங்கள் வீட்டு வைத்தியர்.




                  மெத்த படித்த வைத்தியர் ஒருவரை உங்கள் அருகிலேயே வைத்துக் கொண்டு, சதாசர்வக் காலமும் உடலை பேணுவது என்பது நீங்கள் பூர்வ புண்ணியத்தில் பெரும் பாக்கியம் பெற்ற மகா ஜனமாகத்தான் இருக்க முடியும்!. அதுவும் அவர் தமிழகத்தில் புகழ் பெற்ற மருத்துவர் என்றால் கேட்கவே வேண்டாம்.  நீங்கள் பெரும் கோடீஸ்வரராகத்தான் இருக்க முடியும்.

எந்த உபாதையும் இல்லாமல் மாடியிருந்து குதிக்கலாம், லட்டு லட்டாய் ஜிலேபியை முழுங்கலாம், உங்கள் காலைத் தூக்கி பின் பக்கமாய் கழுத்தில் போட்டுக் கொண்டு உஞ்சலாடலாம், திண்ணையில் உட்கார்ந்துக் கொண்டு உப்புசத்திற்கும் பொருமலுக்கும் ஏழு வித்தியசத்தை எண்ணிக் கூறலாம். வைத்தியர் இருக்க கடவுள் எதுக்குன்னு கூட... நீங்கள் எகத்தாளம் போடலாம். இவை எல்லாவற்றிருக்கும்  டாக்டர் தி.சே.செள.ராஜன் எழுதிய 'வீட்டு வைத்தியர்' என்ற நூல் உங்களிடம் இருக்கவேண்டும்!.

2012ம் ஆண்டு வெளி வந்து பெரும் வெற்றி பெற்ற டாக்டர் தி.சே.செள.ராஜனின் 'நினைவு அலைகளைத்' தொடர்ந்து, டாக்டர் தி.சே.செள.ராஜனின் எழுதிய 'வீட்டு வைத்தியர்' என்ற அடுத்த  படைப்பினை வெளியீட்டுள்ளது சந்தியா பதிப்பகம். இன் நூலின் முதல் படைப்பு 1945ல் வெளி வந்திருக்கிறது. முதல் பதிப்பில் ராஜாஜியின்  முன்னுரையோடு இன் நூல் வெளிவந்திருக்கிறது. கிட்டதட்ட 69 ஆண்டுகள் கழித்து மீண்டும் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறார் இந்த வீட்டு வைத்தியர்'.

உதாரணாமாக.... இருதயம் பற்றிக் கூறும் போது, இருதயம் குவிந்த வடிவமுள்ளது. அதன் நுனி இடது மார்புக் கூட்டுகுச் சமீபத்தில் இருக்கிறது. ஒவ்வொரு தடவை இருதயம் துடிக்கும்போதும் அதன் நுனி, மார்புக்கூட்டில் வந்து முட்டுகிறது. அதற்கு இருதய முட்டுதல் (Heart Impulse)  என்று பெயர்.  இடது புறம் ஐந்தாவது ஆறாவது விலா எலும்புகளுக்கு மத்தியில் இது காணப்படும். காதைவைத்து பார்த்தாலும் அல்லது இருதய சோதினியை (Stethoscope) வைத்துப் பாத்தாலும் இரண்டு சத்தமும் கேட்கும்.  இந்த சத்தம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நடுவில் சற்று ஓய்வுடன் இருக்கும். முதலில் கேட்கும் நீண்ட சத்தம் ஏற்றறைச் சுருக்கத்தினால் ஏற்படுகிறது. இரண்டாவது சத்தம் முக்கூற்று ஒரு வழி அடைப்பு முட்டி கொள்ளவதனால் உண்டாகிறது,  என்பது போன்ற மருத்துவ நுணுக்கங்களை நாம் புரிந்துக் கொள்ளும் வகையில் தந்திருக்கிறார் டாக்டர் ராஜன்.

நானும் டாக்டர் ராஜனும் திருச்சிராப்பள்ளிச் சிறைச்சாலையில் ஒரு வருடம் கூடவே இருக்குந்தோம். அப்போது மிகச் சிரமப்பட்டு இன் நூலை எழுதினார் என்று தனது முன்னுரையில் கூறுகிறார் சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியார். அந்தக் காலத்து நடையில் எந்த உருத்தலும் இல்லாமல் இந்த காலத்தில் படிப்பது என்பதே சிறந்ததொரு தருணம்தான்.

'எதைத் தின்றால் பித்தம் தெளியும்'   என்ற சராசரி மருத்துவ ஆலோசனையிலிருந்து ஒரு மாறுபட்ட கோணத்தில் எல்லோருக்கும் புரியும்படி வெளிவந்திருக்கிறது. அடிப்படை மருத்துவம், சுகாதாரம், வீடும் அதன் சுற்றுபுரம், பட்டினி என்று 25 அத்தியாங்களில் 563 பக்கங்களில் நம்மை காக்கும் ஒரு கடவுளாக அவதாரமெடுத்து வந்திருக்கிறது இன் நூல். வெறும் மருத்துவ குறிப்புகள் என்று ஜல்லி அடிக்கும் மனோ நிலையிருந்து விலகி, நம் அருகில் அமர்ந்து...இன்னும் ஸ்டூலை அருகில் இழுத்துப் போட்டுக் கொண்டு... நமது நோய் பற்றி விளக்கம் கூறும் கருணை மிகுந்த மருத்துவரை போன்று நம்முடன் உரையாடுகின்றது  இன் நூல்.

-தோழன் மபா.

(11/1/2014 அன்று தினமணி 'சென்னை புத்தகக் காட்சி சிறப்பு மலரில்' நான் எழுதிய புத்தக விமர்சனம்.)

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...