திங்கள், ஆகஸ்ட் 24, 2015

புத்துயிர் பெறுமா கபடி...?


  சடுகுடு ஆடி வந்த முந்தைய தலைமுறை குடுகுடு கிழங்களாக                     
மாற...மாற.. சடுகுடுவும் கிடுகிடுவென ஆடிப்போய் கிடக்கிறது.                       
 

          
 (கடந்த சனிக்கிழமையன்று தினமணியில் வந்த எனது கட்டுரை )
          றுதிக் கட்டத்தை எட்டிவிட்டது புரோ கபடி லீக் போட்டி. கடந்த மாதம் தொடங்கிய புரோ கபடி லீக், கபடி விளையாட்டில் புதிய மின்னலைப் பாய்ச்சியிருக்கிறது. கிரிக்கெட்டை தொடர்ந்து கபடி விளையாட்டிலும் லீக் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புரோ கபடி லீக் போட்டிகள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இது கபடி ஆர்வலர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திருக்கிறது.

 இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 8 அணிகள் இப் போட்டிகளில் மோதுகின்றன. ஆனால், கபடியின் தாயகமான தமிழ்நாட்டிலிருந்து எந்த ஓர் அணியும் கலந்துக் கொள்ளவில்லை என்பதுதான் வேதனையான ஒன்று.

 சடுகுடு ஆடி வந்த முந்தைய தலைமுறை குடுகுடு கிழங்களாக மாற...மாற.. சடுகுடுவும் கிடுகிடுவென ஆடிப்போய் கிடக்கிறது. தொன்மை இனமான தமிழினத்தின் வீர விளையாட்டான சடுகுடு என்ற கபடி இன்று கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் அழிந்துக் கொண்டு வருகிறது.

 காசு செலவு இல்லாத விளையாட்டு இது. உடல் வலு, மூச்சுப் பயிற்சி என்று கூடுதல் பலனும் நமக்கு கிட்டும். 

 உத்தி பிரித்து கபடி...கபடி... என்று தொடையைத் தட்டிக் கொண்டு அடங்கா ஆவேசத்துடன் எதிர் அணிக்குள் புகுந்து களமாடினால் சுற்றி வேடிக்கை பார்க்கும் கூட்டம் ஹோவேன்று ஆர்ப்பரிக்கும். அப்படி ஓர் உணர்ச்சிமிக்க விளையாட்டு கபடி.

 அன்றைய நாள்களில் தமிழகத்தில் திரும்பிய இடமெல்லாம் கபடி போட்டிகள் நடைபெறும். தெருவுக்குத் தெரு ஒரு கபடி அணி இருக்கும். பகல், இரவு ஆட்டமாக போட்டியை இரண்டு நாள் நடத்தும்போது, ஊரே திருவிழாக் கோலம் பூண்டு இருக்கும். 

 ஆனால் இன்றோ, தமிழர்களின் வீர விளையாட்டான கபடியின் நிலை... நினைத்தாலே நெஞ்சம் வெடித்துவிடும் போல் இருக்கிறது. மனிதனின் நேரத்தை விழுங்கும் கிரிக்கெட்டின் வருகைக்குப் பின்னர்தான் கபடி களையிழந்து போய்விட்டது.

 தமிழகத்தில்தான் கபடி விளையாடுவது குறைவாக உள்ளதே தவிர, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், பஞ்சாப், பிகார், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் போற்றப்படக் கூடியதாக கபடி வாழ்கிறது. வங்கதேசத்தில் கபடி தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

 இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், ஈரான், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தேர்ச்சி பெற்ற கபடி அணிகள் இருக்கின்றன. 13 உலக நாடுகளில் கபடி விளையாடப்படுகிறது என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
 இந்தியாவுக்குத் தொடர்ந்து தங்கப் பதக்கம் பெற்றுத் தரும் விளையாட்டுகளில் கபடியும் ஒன்று. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் கபடி அணி தொடர்ந்து ஏழு முறை தங்கப் பதக்கம் வென்று வருகிறது. 

 1985-இல் டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி முதல் முறையாக உலக அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 1990-இல் நடைபெற்ற 11}ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் கபடி களம் இறக்கப்பட்டது.

 ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய உள்விளையாட்டு அரங்கப் போட்டி, ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி என்று மூன்று பிரதான விளையாட்டுப் போட்டிகளில் கபடி சேர்க்கப்பட்டது. இம் மூன்றிலும் சேர்க்கப்பட்ட ஒரே விளையாட்டு கபடி மட்டுமே. இதுவரை கபடிக்காக நடைபெற்ற அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலும் கோப்பையை இந்தியாவே வென்றிருக்கிறது. 

 இந்த ஆண்டு புரோ கபடி லீக் போட்டியில் பல்வேறு தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இது கபடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
 தற்போது நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டியில் பல்வேறு அணிகளுக்காக புகழ்பெற்ற தமிழக வீரர்கள் விளையாடி வருகின்றனர். கடந்த முறை புரோ கபடி போட்டியில் பட்டம் வென்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் பயிற்சியாளர் தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பது குறிப்பிடத்தக்கது. நட்சத்திர வீரர்கள் இல்லாத ஜெய்ப்பூர் அணியை அவர் புரோ கபடி லீக் போட்டியின் முதல் சாம்பியனாக மாற்றினார்.

 இந்தியாவின் சிறந்த தடுப்பாட்டக்காரரான சேரலாதன் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகின்றார். தற்போதைய போட்டியில் முன்னணியில் இருக்கும் யூ மும்பா அணியில், தேர்ச்சி பெற்ற தமிழக வீரர்கள் விளையாடுகின்றனர். தமிழக வீரர்களின் ஆட்ட பாணி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துவிடுகிறது.

 வளமையான கபடி பாரம்பரியம் கொண்ட தமிழகத்திலிருந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் புரோ லீக் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்திலிருந்து ஓர் அணியும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பது நெருடலான ஒன்று. ஐபிஎல் போன்றே இதிலும் அணிகள் ஏலம் விடப்பட்டிருக்கின்றன.

 அப்படி இருக்க தமிழகத்திலிருந்து ஒருவர் கூடவா தமிழகத்தின் பெயரில் அணியை வாங்க முடியவில்லை? ஏலத் தொகை அப்படி ஒன்றும் கோடிகளில் இருக்கவில்லை. லட்சங்களில்தான் இருக்கின்றன. தமிழக நலன் சார்ந்த எந்த ஒரு நிறுவனத்துக்கும் இந்த நிகழ்வு கவனத்தில் வராதது மிகவும் கொடுமை.

அமெச்சூர் கபடி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (ஏ.கே.எஃப்.ஐ.) இணையதளங்களிலும், கபடிக்கான விக்கிபீடியாவிலும் கபடி இந்தியாவின் பழைமையான விளையாட்டு என்றே குறிப்பிடப்படுகிறது. இந்திய அளவிலோ அல்லது உலக அளவிலோ கபடி தமிழர்களின் விளையாட்டு என்பதைப் பதிவு செய்ய நாம் தவறிவிட்டோம்.

 கைப் பிடி, கைப் பிடி என்று சொல்லே கபடியாக மாறியது என்று இங்கு எத்தனை பேருக்குத் தெரியும். காலத்தே பதிவு செய்யாத நமது பிறவிக் குணத்தால் நமது பாரம்பரியமான கபடி விளையாட்டை தாரைவார்த்து இருக்கிறோம். 

 நமது வரலாற்றை நாம் மறந்தால் வரலாறு நம்மை மறந்துவிடும். எதிர்வரும் ஆண்டுகளிலாவது புரோ கபடி லீக் போட்டியில் தமிழகத்திலிருந்து கபடி அணிகள் இடம்பெற வேண்டும் என்பதே சாமானிய தமிழர்களின் எதிர்ப்பார்ப்பு.

திங்கள், ஆகஸ்ட் 17, 2015

சரித்திரம் படைத்த சாமானிய மனிதன் லியோ முத்து!.




              இந்தியாவின் தென் கிழக்கு மூலையில் உள்ள, அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டியில் எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர், பின்னாளில் பிரசித்திப்பெற்ற கல்வி நிலையங்களை தொடங்குவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 

கனவுகளின் கதவுகளை நோக்கி தீரமுடன் நடக்கத் தொடங்கிய அந்த எளிய மனிதர், தனக்கான பெரும் சாம்ராஜியத்தை நிறுவிவிட்டு சென்றிருக்கிறார்.
நமக்கெல்லாம் அரசாங்க வேலைக் கிடைத்தால் என்ன செய்திருப்போம்....?. ஓய்வு பெரும் நாள் வரையில் ஓய்வாக வேலை செய்துவிட்டு, ஓய்வு பெற்றதும் வீட்டில் அமர்ந்து ஓய்வாக பென்ஷனை வாங்கி காலத்தை கடந்திருப்போம். ஆனால் பொதுப்பணித்துறையில் வேலை செய்த ஒருவர் தனக்கு கிடைத்த சொற்ப நேரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி, அதன் நெளிவு சுளிவுகளை கற்று நல்லதொரு நிறுவனத்தை தொடங்கினார். அதுவே அவரை சிங்கமென இத் தொழில் உலகில் கர்ஜிக்கவைத்து அவருக்கான நெல்லதொரு பெயரை பெற்றுத் தந்தது. 

அவர் லியோ முத்து!. 
 ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் தலைவர். 

கடந்த சில மாதமாக உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த மாதம் ஜூலை 10ம் தேதி, தனது 63வது வயதில் இயற்கை எய்தினார். இவரது இயர்பெயர் எம்.ஜோதிபிரகாசம். 

அப்துல் கலாம் மீது மிகுந்த மரியாதை கொண்ட லியோ முத்து, தனது கல்வி நிறுவனங்களை ஒரு முன் மாதிரி கல்வி நிலையமாக மாற்றி இருக்கிறார், கடந்த சில வருடங்களாக அண்ணா பல்கலைக்கழத்தின் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டு வருகிறது ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி. 

அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் எந்த ஒரு பின்புலமும் இல்லாத ஒரு கல்லூரி, தொடர்ந்து தரவரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் வருவது என்பது பாராட்டப் படவேண்டிய ஒன்று!. 

மாணவர்கள் விரும்பும் பொறியியல் கல்லூரி, பெற்றோர்கள் விரும்பும் பொறியியல் கல்லூரி என்று இரண்டு விதமான பொறியியல் கல்லூரிகளை நாம் பார்க்க முடியும். இன்றைய கால கட்டத்தில் படித்து முடிக்கும் முன்பே பிளேஸ்மெண்ட் மூலம் வேலை வாய்ப்பினை பெருவதையே மாணவர் சமுதாயமும் பெற்றோர்களும் விரும்புகின்றனர். தரமான கல்வி, கட்டுப்பாடு, ஒழுக்கம் இவற்றில் அவர்கள் எந்தவித சமரசமும் செய்துக்கொள்வதில்லை. இரு தரப்பும் விரும்பும் ஒரு கல்லூரியாக தன்னை தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொள்வது என்பது மிகவும் சவாலான ஒன்று!. அந்த சவாலை மிக அனாயசமாக செய்து முடிக்கிறது ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமங்கள்.

அதனாலயே தமிழகத்தில் இருக்கும் 552 பொறியியல் கல்லூரிகளில் தொடர்ந்து முதல் 10 இடங்களைப் பிடித்துவிடுகிறது. 

லியோ ஹவுஸிங்கை தொடங்கி நடத்திவந்த லியோ முத்து, 1989 வாக்கில் சென்னை மடிப்பாக்கத்தில் சாய் மெட்ரிக்குலேஷன் பள்ளியை 137 மாணவர்களைக் கொண்டு தொடங்கினார். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக 100 சதவீத தேர்ச்சியை தக்கவைத்து வருகிறது இப் பள்ளி!. ஒரு கல்விச்சாலையை தொடங்கி இக் சமூதாயத்திற்கு உருப்படியாக எதாவது செய்ய வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. அதுவே பின்னாளில் அவர் சாய்ராம் பொறியியல் கல்லூரி தொடங்க வழிவகுத்தது. தொழிநுட்பக் கல்லூரிகள் மட்டுமல்லாமல் சித்தா, ஆயூர்வேதா, யூனானி, ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளையும், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளையும், பாலிடெக்னிக்குகளையும் நடத்திவருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் கல்லூரிகளை நடத்திவருகிறது சாய்ராம் கல்வி குழுமம்.

லியோ முத்து அவர்கள் விட்டுச் சென்ற பெரும் பணியை, அவரது புதல்வர் சாய் பிரகாஷ் ஏற்று செயல்பட தொடங்கிவிட்டார். கல்வி நிறுவனங்களை நடத்துவது என்பது பெரும் சவாலன ஒன்று. சவாலான அந்த பணியை மிக துணிவுடனும் வெற்றிகரமாகவும் செய்துவருகிறார் சாய்பிரகாஷ். 

()()()() 

இரண்டு வருடங்களுக்கு முன்னர், அவரது நிறுவனத்தைப் பற்றிய செய்தி ஒன்றை அவரது ஒப்புதல் இல்லாமல் எழுதிவிட்டோம். அது எங்களுக்கும் அவருக்கும் மனக் கசப்பை ஏற்படுத்திவிட்டது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் காரம்சாரமாய் ஓடிய அந்த பிரச்சனையை எப்படியோ சமாளித்து முடிவுக்கு கொண்டுவந்தோம். பத்திரிகையாளர்கள் மீது பெரும் அன்பு கொண்டவர். திடீரெண்டு அவரிடத்திலிருந்து போன் வரும் "சார்...... சேர்மன் சார் பேசுறாங்க" என்று அவரது உதவியாளர்கள் யாராவது பேசி போனைத் தருவார்கள். அவர் தொடங்கப் போகும் கல்வி நிலையங்களைப் பற்றி கூறுவார். அவருக்கான கனவுகள் என்பது மிகவும் பெரியதாகவே இருந்திருக்கிறது. என்னை சில நேரங்களில் மாயவரத்துக்காரரே என்றுதான் அழைப்பார். அவரோடு ஒரு நாள் அவரது இல்லத்தில் உணவறுந்தும் பாக்கியமும் கிடைத்தது. 

தாம்பரத்தில் சர்வ வல்லமைப் படைத்த அரசியல் பிரமுகர் ஒருவர் அவரோடு மோதி வந்தார். சாலையில் செல்லும் கல்லூரி பேருந்துகள் மீது இடையூறு ஏற்படுத்திவருவது, மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது, என்று பல வழிகளில் தொந்திரவு கொடுத்து வந்தார். இவர் பல முறை எச்சரித்தும் அந்த அரசியல்வாதி இவரை விடுவதாக இல்லை. முடிவில் இவர் செய்த ஒரு விஷயம் அந்த அரசியல்வாதியை தலையெடுக்க முடியாமல் செய்துவிட்டது.
சாய்ராம் கல்லூரிக்கு அந்த அரசியல்வாதி, என்னென்ன வழிகளில் இடையூறு செய்கிறார். அவரது அரசியல் ரீதியான தில்லுமுல்லுகள், சட்டத்திற்கு புறம்பான அவரது நடவடிக்கைகள், மக்கள் விரோத செயல்கள் என்று பெரும் பட்டியலை தயார் செய்து, அதை ஒரு மாலை பத்திரிகை ஒன்றில் ஒரு பக்கம் விளம்பரமாக கொடுத்துவிட்டார். முதலில் அந்த விளம்பரத்தை வெளியீட மறுத்த நிர்வாகம், இவர் வழங்கிய ஆதாரத்தை அடிப்படையாகவைத்து அந்த விளம்பரத்தை வெளியீட்டது. விளம்பரத்தை வெளியிட்டதோடு மட்டும் நில்லாமல், 50 ஆயிரம் பிரதிகளை காசு கொடுத்து வாங்கி தாம்பரத்தில் வீடு தோறும் விநியோகம் செய்துவிட்டார். அந்த விளம்பரத்தை அந்த அரசியல் பிரமுகர் எதிர்பார்க்கவில்லை. அந்த அரசியல்வாதியின் பொய் முகம் கிழிக்கப்பட்டு அவரது அரசியல் அஸ்திவாரத்தையே தகர்த்தெரிந்துவிட்டார். அத்தகைய போர்குணம்  கொண்டவர் லியோ முத்து. 

இத்தகைய போர் குணம் கொண்டவர்களே தங்களுக்கன வெற்றிகளை அடைகின்றனர். தங்களுக்கான கனவுகளை அடைய... அவர்கள் அயராது உழைக்கின்றனர். அது இச் சமூகம் மேம்படவும், மாணவர் சமுதாயம் நல்லதொரு உலகை படைக்க வழிகாட்டியாகவும் அமைந்துவிடுகிறது.  அத்தகைய மனிதர்களையே நாளைய விருச்சத்தின் விதையாக பார்க்கிறது இவ் உலகம்!. 

 அண்மையில் ( 9.8.2015) லியோ முத்து அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் திராவிடர்க்கழக் தலைவர் வீரமணி கலந்துக் கொண்டு படத்தை திறந்துவைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் தி.ஆர்.பாலு கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார், கம்யூனிஸ்ட் கட்சி நல்லக்கண்ணு, சன் டிவி  வீர பாண்டியன், ஜெயா கல்விக் குழுமத்தின் தலைவர் கனகராஜ், ஆரம்கே மற்றும் ஆரம்டி கல்விக் குழுமத்தின் தலைவர் முனிரத்தினம் போன்றோர் கலந்துக்கொண்டனர்.

விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு லியோ முத்துவின் மருமகனும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டி .ஆர்.பி ராஜா நன்றி கூறினர்.

.
-தோழன் மபா 

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...