செவ்வாய், டிசம்பர் 31, 2013

சென்னை பார்களில் பாடும் பெண்கள்!



சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருக்கிறது அந்த ஹோட்டல்.   வியாபார நிமித்தமாக ஒரு நண்பர் என்னை அங்கு வந்து சந்திக்கும் படி கூறி இருந்தார்.  ஹோட்டலுக்கு சென்று அவரை தொடர்பு கொண்டால்.... "பாரில் இருக்கிறேன் வாங்க" என்றார்.  பார் ஹோட்டலின் தரை தளத்திற்கும் கீழே இருந்தது.

பாரில் குடிமகன்கள் சீப்பிக் கொண்டு இருக்க... ஒரு ஓரத்தில் மூன்று இளம் மங்கைகள் மைக் பிடித்து பாடிக் கொண்டு இருந்தனர். பழைய  மற்றும் புதிய பாடல்களாகப்  பாடி வந்திருந்த 'பார்'யாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டு இருந்தனர்.  பொதுவாக இத்தகைகைய நடுத்தரவர்க்க பார்களில், யாரும் பாட மாட்டர்கள். சத்தத்தை அதிகம் வைத்து நமது காதைதான் செவிடாக்குவார்கள். ஆனால், இங்கு பெண்கள் பாடுவது புதிதாக இருந்தது.

ஸ்டார் அந்தஸ்த்தில் உள்ள ஹோட்டல் பார்களில் மட்டும்தான் இத்தகைய இசை நிகழ்ச்சிகள் நடைபெரும்., அல்லது யாராவது ஒருவர் இசை கருவியை மென்மையாக இசைத்து, குடிமகன்களை  உற்சாக மூட்டுவார்கள்.  கார்பெரேட் மனிதர்களின் வாழ்வியலில், இத்தகைய லைஃப் ஸ்டல் சகஜமான ஒன்று.

ஆனால், நடுத்தர வர்க்க  குடிமகன்கள் வாழ்வில் இப்படிப்பட்ட லைப்ஸ்டைல் இல்லை. பாட்டிலை திறந்து ஒரே கல்பாவா அடித்துவிட்டு, ஆபிஸில் இருக்கும் எவனைப் பற்றியாவது சத்தம் போட்டு பேசிக்கொண்டு இருப்பதைதான் நாம் அதிகம் பார்த்துக் இருக்கிறோம்.

சிறிய ரக ஹோட்டல்களில் இப்படி பாடகிகளை வைத்து இசை நிகழ்ச்சி நடத்துவது சற்று நெருடலாகவே இருக்கிறது. அதிலும் அந்த  மூன்று பெண்களில் இருவர் மணமானவர்.  பார் முழுவதும் ஆண்கள் குடித்துக் கொண்டு இருக்க, அந்த மூன்று பெண்களும்,  சங்கோஜத்துடன்  பாடிக் கொண்டு இருந்தது வேதனையாக இருந்தது.

பார்களில் பெண்கள் பாடித்தான் ஆக வேண்டுமா....???

சனி, டிசம்பர் 28, 2013

தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம்!. PART 2


                    ழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள் முதலில் எல்லாம் பத்திரிகைகளை நம்பிக் கொண்டிருந்தார்கள். பத்திரிகைக்கு ஒன்றை அனுப்பிவிட்டு அது எப்போது வரும்? என்று காத்திருப்பார்கள். அப்படி வந்துவிட்டால் அந்தப் பக்கத்தைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, தெரிந்தவர், தெரியாதவர் எல்லாரிடமும் நான் எழுதியது  வந்திருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் காட்டுவார்கள்.
இப்போது எல்லாரும் கையும் கணினியுமாக அலைகிறார்கள். இணையதளங்கள் பெருகிவிட்டன. ஆளுக்கொரு அல்ல...  பல பிளாக்ஸ்பாட்கள் ஆரம்பித்து, நினைத்ததை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களில் சிலர்... இவர்கள் !

முந்தைய வலைப்பதிவர்கள் அறிமுகம் பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்....


தோத்தவண்டா
ஆரூர் மூனா என்ற பெயரில் எழுதிவரும் செந்தில்குமாருக்கு திருவாரூர்தான் சொந்த ஊர். சென்னையில் ரயில்வேயில் பணிபுரியும் இவர் சினிமா, அனுபவம் என்று கலந்துகட்டி எழுதுகிறார். சினிமா பார்ப்பதையே அனுபவப் பதிவாகப் போட்டு சினிமாவைவிட விறுவிறுப்பு ஊட்டக்கூடியவர். (www.amsenthil.com)

யாரும் அழைக்காத நானும்
என் கணினியும்...

நானும் ஒரு வாரமாக பாக்குறேன். ஒரு பய நமக்கு அழைப்புவிட மாட்டேங்குறான். பிரபல பதிவர்களில் ஆரம்பிச்சு போன வாரம் வந்த பதிவர்கள் வரை ஒருத்தரை மாத்தி ஒருத்தர் அழைப்பு விடுத்துகிறாங்க. நம்மளை ஒருத்தனும் கண்டுகிட மாட்டேங்கிறாய்ங்க. சரி யாரும் நம்மளை மனுசனாகவே மதிக்கலை போல. நாமளும் யாரிடமும் ஒழுங்கா பழகியது இல்லையே. எங்க பார்த்தாலும் சண்டையும் சச்சரவுமாத்தேன் போய்க்கிட்டு இருக்கு.

என்னை, நானும் என் முதல் கணினி அனுபவமும் என்ற தொடர் பதிவை எழுதும்படி  வந்த அழைப்பை ஏற்று அந்த அனுபவத்தை நான் உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.
இருபது வயது வரை நான் கணினியை அருகில் இருந்து பார்த்தது இல்லை. படத்தில் பார்த்தது கூட "காதலர் தினம்' படத்தில்தான். அதிலும் கவுண்டமணி கையின் முட்டியால் அடிப்பதையெல்லாம் நிஜம் என்று நம்பிக்கொண்டு இருந்த அப்பாவி (நீயாடா, வெளங்கிடும்) நான்.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடங்களில் கம்ப்யூட்டரை பின்பக்கமாகப் பார்த்து ரசித்து இருக்கிறேன். வங்கிக்கணக்கு கூட இல்லாததால் பேங்கு பக்கம்கூட அதுவரை சென்றதில்லை. அதனால் வங்கியில் கணினியைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.

நாஞ்சில் மனோ
சொந்தக் கதை சோகக் கதை என்று ரகளையாய் தனது பதிவுகளை எழுதக்கூடியவர். நாஞ்சிலை சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும், பஹ்ரைனில் பணி. மும்பையில் வாசம் என்றிருந்தாலும் காமெடியில் கலக்கவே இவருக்கு விருப்பம். அனுபவம் சார்ந்த எழுத்துக்களையே அதிகம் எழுதக் கூடியவர். (http/nanjilmano.blogspot.in)

மலையாளி பெண்கள்  

மலையாளி ஆண்களுக்கு தமிழனைப் பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்பப் பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லியிருக்கேன். அது என் அனுபவமும்கூட. மலையாளி தோழிகள் வாயால் சொல்லியும் கேட்டிருக்கிறேன். அதுக்குக் காரணம் கேட்டால் அவர்கள் சொல்வது, ""தமிழர்கள் நீங்கள் மனைவிகளை பொன்னை (தங்கம்) போல நேசிக்கிறீர்கள். வேலைக்குப் போகவிடாமல் அன்பாய் நடத்துகிறீர்கள். ஆனால் கேரளாவில் வேலை இல்லாத பெண்களை ஆண்கள் திருமணம் செய்ய மாட்டார்கள். அப்படியே நாங்கள் வேலைக்கு போய் படும் அவஸ்தை எங்களுக்குத்தான் தெரியும். அதில் உங்கள் ஊர் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள். கூடப் பிறந்த சகோதரிகளையும் அப்படியே நேசிக்கிறார்கள்.  அந்த குணம், பண்பு, பாசம், நேசம்  கேரளாவில் குறைவு மனோ'' என்பார்கள். எனக்கு இருக்கும் மலையாளி தோழிகளைப் பார்த்து கேரள நண்பர்கள் காதில் எப்போதும் புகை வரும் (தண்ணி வந்தாலாவது நல்லாயிருக்கும்)


அரசர் குளத்தான்
அரசியலில் அதிரடி எழுத்துக்கு சொந்தக்காரர். ரஹீம் கஸாலி என்ற பெயரில் எழுதும் இவர் அறந்தாங்கி அருகில் இருக்கும் அரசர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். கலந்து கட்டி எழுதினாலும் அரசியல்தான் இவருக்கு ஃபேவரைட்.
(www.rahimgazzali.com)

சித்திரை திங்கள் முதல் தேதி மட்டும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கும் கலைஞர் டி.வி., மற்ற தமிழ் மாதங்களான வைகாசி, ஆனி, ஆடி என்று எந்த மாதத்தின் முதல் தேதியையும் கண்டுகொள்ளாதது ஏன்? அதான் தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றியாச்சே, அப்புறம் ஏன் இன்னும் சித்திரை கொண்டாட்டம்? ஒருவேளை சித்திரை முதல் தேதிதான் சிங்களர்களின் புத்தாண்டாம். அதைத்தான் இப்படி மறைமுகமாக கொண்டாடுகிறதோ கலைஞர் டி.வி.

இந்திய ஊடகங்கள் எந்த செய்தியை வெளியிட வேண்டும் என்பதைவிட, எதை வெளியிடக்கூடாது என்பதில் அதிக கவனமாக இருக்கின்றன.
   - மனுஷ்யபுத்திரன்.
  
நீங்ககூட அப்படித்தான் தலைவரே... டெல்லி பெண் கற்பழிப்பு, வினோதினி ஆசிட் வீச்சு என்று எல்லாவற்றிற்கும் எதிர்க்குரல் கொடுத்துவிட்டு, சன் நியூஸ் சானலை சேர்ந்த ராஜா மீது அகிலா என்ற பெண் செய்தி வாசிப்பாளர் கொடுத்த பாலியல் புகார் பற்றி வாயே திறக்கவில்லை. அப்படி திறந்திருந்தால், சன் டி.வி. தனக்கு வாய்ப்பு கொடுக்காது என்ற பயம்தானே காரணம்.
ஒன்பது எம்.பி., பத்து எம்.பி. வைத்திருப்பவர்கள் எல்லாம் பிரதமர் கனவில் இருக்கும்போது 8192 எம்.பி. அதாவது எட்டு ஜிபி வச்சிருக்க நான் ஏன் பிரதமராகக் கூடாது?

கரிகாலன்
சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஜீவகரிகாலன், சமூகப் பொருளாதாரம், தலித் பொருளாதாரம், சிற்பங்கள், ஓவியங்கள், கவிதை, கதை என பதிவிட்டு வருகிறார். மாறி வரும் நுகர்வுக் கலாச்சாரத்தின் ஆபத்தான சூழலை வெளிக்கொணர்வதில் இவரது கட்டுரைகள் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. (www.kalidasanj.blogspot.com)

மாற்றம்?
மெக். டொனால்டு, பீட்சா ஹட், கே.எஃப்.சி போன்ற பன்னாட்டு உணவகங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது. இப்போது எல்லா மேலை நாட்டு உணவு விடுதிகளும் தமது ஃபிரான்சைஸ் வணிக யுக்தியில் பெரிய அளவு வெற்றி கண்டுவிட்டன என்று சொல்லலாம். இந்தக் கடைகளின் வணிகத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் பெரும்பான்மை மத்திய தர, வேலை பார்க்கும் வர்க்கத்தின் மாறிவிட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து நாம் தெளிவான பட்டியல் இட முடியாது. ஆனால் ஐரோப்பா, அமெரிக்கா போல இளைஞர்களின் பீ.எம்.ஐ. ஏற்றம், உடல் நலக் குறைவினை, மிகச் சிறிய வயதிலேயே பூப்படைதல் போன்ற குறைபாடுகளைக் கண்டறிந்தால் நமக்கு இந்த பாதிப்பு குறித்து தெளிவு பிறக்கும்.

-நன்றி தினமணி கதிர் (15/12/2013)

 குறிப்பு: இரண்டு  வாரங்கள் கழித்து இந்த பதிவு வருவதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.  தொடர் வேலை பளு மற்றும் குடும்பத்தில் ஒரு நிகழ்ச்சி தொடர்பாகவே இந்த காலதாமதம்.

மீண்டும் அடுத்த வலைப்பதிவர்கள் அறிமுகத்தில் சந்திப்போம்!.
காத்திருங்கள்... அது நீங்களாகக் கூட  இருக்கலாம்?!.
நன்றி!

-தோழன் மபா.



வெள்ளி, டிசம்பர் 27, 2013

ஏகே-47னும் நகை முரணும்!



       சென்ற நூற்றாண்டில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஏகே-47 எந்திர துப்பாக்கி குறைந்தது பல லட்சம் மனித உயிர்களையாவது பறித்திருக்கும். ரஷ்யாவிற்காக தயாரிக்கப்பட்ட ஏகே-47, அதன் எளிமை மற்றும் வளமையான தாக்கும் திறனால், இன்று உலகம் முழுவதும் பல லட்சம் மனித உயிர்களை கொன்று குவித்து வருகிறது.

மனித இன அழிப்புக்கு பயன்படும் கருவிகளை வரிசைப் படுத்தினால், அதில் ஏகே-47தான் முதலிடத்தில் இருக்கும். ஏகே-47 தேசிய ராணுவங்கள் காவல்துறை மட்டுமல்லாமல், தீவிரவாத குழுக்கள், இன விடுதலை குழுக்கள், போராளி அமைப்புகள், கடத்தல்காரர்கள், கடற்கொள்ளையர்கள் என்று அனைத்துத் தரப்பையும் வசீகரித்த மாபெரும் அழிவுக் கருவி அது!. அது தயாரிக்கப்பட ஆண்டான 1947ல் 47யையும், ஆட்டோமேட்டிக் என்பதலிருந்து Aயையும் அதனை கண்டுபிடித்தவரான கலாஷ்னிக்கோவ் என்பதிலிருந்த் K யையும் எடுத்துக் கொண்டு AK -47 என்ற நாமகாரணத்துடன், இவ் உலகை சுட்டுத் தள்ளி வருகிறது!.

AK -47 கருவியால் எத்தனை எத்தனை மனிதர்கள் தங்களது அல்ப ஆயுசுல் மடிந்திருப்பார்கள். ஆனால், அதை கண்டுப் பிடித்த மிகையில் கலாஷ்னிக்கோவ் மட்டும் 94 வயது வரை பரிபூர்ணமாக இருந்து தனது உயிரை விட்டு இருக்கிறார். அப்படிப்பட்ட மனித இன அழிப்புக் கருவியான ஒன்றை கண்டுபிடித்த மனிதன் 94 வயது வரை உயிரோடு இருந்தார் என்கின்றபோது, அவர் கண்டுபிடித்த கருவிமட்டும் பல உயிர்களை துள்ள துடிக்க பலி வாங்குகிறது... வாங்கிவருகிறது!.

'கெடுவான் கேடு நினைப்பான்' என்கிறது நமது நீதி நூல்கள், ஆனால் இங்கு மனித குலத்திற்கு கேடு விளைவித்த ஒரு கருவியை கண்டுபிடித்தவர் தனது 94 வயது வரை உயிர் வாழ்ந்தார்.

என்னே இந்த நகைமுரண்...?!.

திங்கள், டிசம்பர் 23, 2013

அப்துல் கலாமும் தேவயானியும்!



                           மெரிக்க துணை தூதர்  தேவயானி கோப்ரகடே கைது நடவடிக்கை உலக அரங்கில் பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியிருக்கும் வேளையில்,  இந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் அது  ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!.

வீட்டு வேலைக்குப் பணிப் பெண்ணை அமர்த்தியதில் விசா முறைகேடு செய்ததாக கடந்த வாரம் அமெரிக்க காவல்துறை இந்திய துணைத் தூதர்  தேவயானி கோப்ரகடேவை  கைது செய்தது.  அவரை கைவிலங்கிட்டு அழைத்து சென்றது மட்டுமல்லாமல், அவரது ஆடைகளை களைந்து சோதனை செய்து, அவரை போதை பொருள் கடத்தியவர்களுடன் சிறையில் அடைத்ததால் இந்தியாவில் பெரும் பரப்பரப்பு எழுந்துள்ளது.

தேவயானி கைது நடவடிக்கை இரு அவைகளிலும் எதிரொலித்தது. எதிர்ச் கட்சிகள் முதற்கொண்டு ஆளும் கட்சிவரை அனைத்து கட்சிகளும் இச் செயலுக்கு கடும் கண்டம் தெரிவித்தது. இதனால் தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வழங்கப்பட்டு வந்த விசேஷ சலுகைகளை இந்திய அரசு உடனே விலக்கிக் கொண்டது.

இந்த எதிர்தாக்குதலை அமெரிக்க அரசாங்கம் எதிர்ப்பார்க்கவில்லை. அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி அலறி அடித்துக் கொண்டு  இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னிலை விளக்கம் அளித்தார்.

தேவயானி கைது நடவடிக்கைக்கு எதிராக கிளர்ந்து எழுந்த இந்திய அரசு,  ஏன் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை,  அமெரிக்க அரசாங்கம் அவமதித்த போது மெளனம் சாதித்தது?.  இந்த ஒப்பீட்டு விவகாரம், இணையத்தில் பெரும் ஆரவாரத்தோடு விவாதிக்கப்பட்டு வருகிறது!.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அவமதித்ததும், தேவயானி கைது நடவடிக்கையும் வேறு வேறு கோணத்தில் இருப்பவை.   இந்த இரண்டு பிரச்சனைகளையிம் ஒப்பிட்டு பார்ப்பது என்பது தேவையில்லாத ஒன்று!. இந்த பிரச்சனையில்  இந்திய துணை தூதுவரை கை விலங்கிட்டு கைது செய்து, 'காவிட்டிஸ் செக்'  (Cavities Check) என்று சொல்லப்படும் சோதனை செய்துள்ளது அமெரிக்க அரசு.

அதாவது ஒரு மனித உடலில் எங்கெல்லாம் துவாரங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் சக்தி வாய்ந்த வெளிச்சத்தை அடித்து சோதனை செய்வது காவிட்டு செக்காகும்.  இச் சோதனையில் இந்திய துணை தூதரின் உடைகளை களைந்து அவரது அந்தரங்கப் பகுதிகளில்   ஏதேனும் மறைத்து வைத்து இருக்கிறாரா? என்று சோதனை செய்து இருக்கிறார்கள்.   (இச் சோதனை முன்பு ஈராக் அதிபர் சதாம் உஸேனுக்கு நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்)  அதோடு மட்டுமல்லாமல் அவரை போதை பொருள் மற்றும் விபச்சார கிரிமினல்களோடு அடைத்துவைத்து இருக்கிறார்கள்.  இச் சோதனைகள்   நம்மை மிகவும் பலகீனமாக்கி, நமது மன உறுதியை குலைக்கக் கூடியது.

இந்திய துணைத் தூதுவரை கைது செய்த விதம்,  இந்திய தரப்பை மிகவும் அவேசப்பட வைத்துள்ளது. ஒரு வெளி நாட்டு தூதுவரை நடத்தப்பட வேண்டிய  வியன்னா மாநாட்டு வழிகாட்டு நெறிமுறைகள் அப்பட்டமாக அமெரிக்க அரசால் மீறப்பட்டுள்ளன

இந்த விஷயத்தை தனது IFS சக அதிகாரிகளுக்கு தேவயானி  மின் அஞ்சல் செய்த பிறகே விஷயம் தீவிரம் அடைத்துள்ளது.  IFS அதிகாரிகளின்  அழுத்தமே இந்திய அரசை, தீவிரமாக  செயல் படவைத்துள்ளது.

இதற்கு முன்பு தூதரக அதிகாரிகளை அவமானப் படுத்தியுள்ளனர். இந்திய தூதர் மீரா சங்கரும் கூட  அமெரிக்கா  விமான  நிலையத்தில்  தோளில்  தட்டி  உட்கார வைக்கப்பட்டனர் .இந்த சம்பவம்  மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 2011 ஆம் ஆண்டு  அமெரிக்காவில்  உள்ள இந்திய தூதரகத்தில்  பணியாற்றிய கீர்த்திகா  பிஸ்வாஸ்  என்பவரும்  கைது  செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டு  அழைத்து செல்லப்பட்டார்.

இந்த பிரச்சனையில் எதற்கு அப்துல் கலாம் விஷயத்தை  ஒப்பிட்டு பார்க்கவேண்டும்?.

  முன்னாள்  ஜனாதிபதி  அப்துல் கலாமை  விமான  நிலையத்தில், ஷீ வை  கழற்றச்  சொல்லி  சோதனையிட்டு  அமெரிக்கா  அவமானப்படுத்தித்தியது.  இது  நாட்டில்  பெரும்  சர்ச்சையை  உண்டாக்கியது.

அப்துல் கலாமுக்கு நிகழ்ந்த போது இந்திய அரசு மௌனம் சாதித்தது போல்,  இப்பவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?.  முன்னாள் குடியரசுத் தலைவருக்கு நடந்தது ஏற்றுக் கொள்ள முடியாது என்கின்றபோது, ஒரு பெண்ணிற்கு நடந்ததும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாததுதான். இதில் இரண்டையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பது துரதிஷ்ட வசமானது.

ஜார்ஜ் பெர்ணாண்டஸ், ஷாருக்கான் ,கமல்ஹாசன், மீரா சங்கர், பிரபுல் பட்டேல், ஹர்தீப் புரி,  கீர்த்திகா பிஸ்வாஸ், தேவயானி என்று அமெரிக்க அதிகாரிகளால் அவமதிப்பட்ட இந்தியர்களின் பட்டியல் நீண்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதில் 'காவிட்டி செக்கிற்கு' ஆளானவர் தேவானி மட்டுமே என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

அப்துல் கலாமை அவமதித்த போதே இந்திய அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்திருந்தால், இத்தகைய அவகாரமான  நடவடிக்கைகள் இந்திய தூதரகத்திற்கு நடந்திருக்காது.  அதைவிட்டு இப்போதும் முந்தயை நிலையிலே நமது அரசு இருந்திருந்தால், இந்த துயர் ஒரு தொடர்கதையாகத்தான் இருந்திருக்கும்.

அமெரிக்க அரசிற்கு எதிரான இந்த தீவிர நடவடிக்கைகள்,  நிச்சயம் சர்வதேச அளவில் நமக்கான புதிய பார்வையை உலக அரங்கில் பெற்றுத்தந்திருக்கும் என்று நம்புவோம்!.

 இப்போதாவது மத்திய அரசுக்கு சுரணை வந்ததே என்று காலரை தூக்கிவிட்டுக் கொள்வோமாக?!
(()) (()) (())

கொசுறு:  மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முரண்டுப் பிடித்த இந்திய அரசிற்கு, மன்னிப்பு கேட்க முடியாது என்று பதிலடித் தந்துள்ளார் அமெரிக்க வெளிவிவகாரத் துறை செய்தி தொடர்பாளர் மேரி ஹர்ப்.

 விரைவில் இப் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் சல்மான் குர்ஷித்.  தேவயானியை ஐ.நா சபை தூதராக நியமித்து, அவரது பாதுகாப்பை உறுதி செய்துள்ளது இந்திய அரசு. அதன் பலனாக தேவயானி நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து, எரியும் நெருப்பில் சற்று நீரை தெளித்திருக்கிறது அமெரிக்க அரசு.
-தோழன் மபா. 
(()) (()) (())

சனி, டிசம்பர் 14, 2013

ஆனந்த விகடனில் 'குமுதம்' டைப் கதைகள்...!?



                   இந்த வார விகடனில் (18/12/13) ஜி.ஆர்.சுரேந்தர்நாத் எழுதிய 'இது காதல் இல்லாத கதை' தான் அப்படி நினைக்க வைத்தது.

அந்த கதையில் வரும் ஒரு சம்பவம்.

//தான் ஒரு பெண் என்பதற்கான  அடையாளங்களை அவள் பிடிவாதமாக மறுத்திருந்தாள். ஆனால், ஒரு ஓவியன் அவளை படமாக வரைந்தால், கழுத்துக்கு கீழே பிரஷை வெளி நோக்கிப் பெரிதாக வளைக்க வேண்டியிருக்கும்.

"ரொம்ப தப்பு....." என்றாள் வந்தனா, மிதுனை நோக்கி.

"என்ன...?"

"இப்ப நீங்க பார்த்த இடம்". //


என்று சற்றே மிகைப்படுத்தியே எழுதியிருந்தார்கள். இதைபோன்ற குமுதம் டைப் கதைகள் இதற்கு முன்னர் ஆவியில் படித்ததில்லை. வேறொரு தளத்தில் இயங்க வேண்டும் என்று நினைத்து இப்படி மாற்றிவிட்டார்களா என்று தெரியவில்லை...?

அதோடு அந்த 3D சமாச்சாரமும் எரிச்சலைதான் கிளப்புகிறது.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...