திங்கள், மே 25, 2020

வேலைக்கு போவதற்காக வாழ்கிறோமா...?

(கீற்று இணையதளத்தில் கடந்த ஏப்ரல் 2020 மாதத்தில் வந்த எனது கட்டுரையின் திருத்திய மீள் பதிவு)
'வாழ்வதே வேலைக்கு போவதற்காகத்தான்' என்ற பெரும்பாலான இந்தியர்களின் பொதுப் புத்திக்கு இயற்கை கட்டாய ஓய்வளித்திருக்கிறது. இப்படி 2 மாதங்கள் மொத்தமாய் வீட்டில் முடங்குவது என்பதெல்லாம் அவர்கள் நினைத்திடாத ஒன்று!

இரண்டு நாள் லீவு கேட்க... நாம் படும் பாடு இருக்கிறதே.. அப்பப்பா சொல்லி மாளாது. தலை சொறிய வேண்டும், குரல் கம்ம வேண்டும், மேனேஜரின் மனநிலை பார்த்து விடுப்பு சொல்ல வேண்டும். அப்படியே எடுத்தாலும் சில சமயம் லாஸ் ஆப் பே வந்து விடும். வாங்கும் சம்பளத்தில் துண்டு விழும். விடுப்பு எடுப்பதிலும் சொல்வதிலும் இப்படி பல இடர்பாடுகள். இந்த கரோனா வந்து எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

சென்னை ரிப்பன் பில்டிங் 
வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே ஒரு மாதம் கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என்றெல்லாம் இந்தியர்கள் எவரும் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். வீடு விட்டால் வேலை, வேலை விட்டால் வீடு. வீட்டிற்கு வந்த பிறகும் வேலை பற்றிய சிந்தனை, அதற்கான மெனக்கெடல் என்று மிக மிகச் சாதாரணமான வாழ்க்கை இந்தியர்களுடையது.
தனது வாழ்வில் பெரும்பாலான நேரத்தையும் ஒப்பற்ற இளமையையும் வேலைக்காக சாசனம் எழுதிக் கொடுத்தவர்கள் நம்மில் பலர் உண்டு. கூலி குறைவோ, நிறைவோ... ஆனால் திருப்தியான மனநிலையில் தொழில் மற்றும் நிறுவனம் சார்ந்த ஓர் இரத்த பிணைப்பு நம்மிடம் உண்டு. வாழ்வதற்காக வேலைக்குச் சென்று பொருள் ஈட்டிய மனிதன், காலப்போக்கில் வேலைக்குச் செல்வதற்காக வாழத் தொடங்கினான். பணி மற்றும் பணியிடம் சார்ந்தே அவனது வசிப்பிடமும், வாழ்வியலும் அமைந்தது.
வரலாறுகளின் தொடக்கத்தில் ஆற்றுப் படுகைகளில் தனது வசிப்பிடங்களை அமைத்துக் கொண்ட மனிதன், தொழில் புரட்சிக்குப் பிந்தைய நாட்களில் நகரங்களை நோக்கி நகரத் தொடங்கினான். தனது வசிப்பிடங்களை அங்கேயே அமைத்துக் கொண்டான்.
கிடைத்த நேரத்தில் வேட்டையாடி, கிடைத்த நேரத்தில் ஓய்வு எடுத்து, கிடைத்ததை உண்டு, ஓர் ஏகந்தமான சூழலில் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்த மனித இனத்திற்கு நாகரீக உலகம் முற்றுப்புள்ளி வைத்தது. பணி சார்ந்தே, அவன் எதையும் சிந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டான். விளைவு கணவன் ஒரு பக்கம், மனைவி ஒரு பக்கம், பிள்ளைகள் ஒரு பக்கமென்று திசைக்கொன்றாய் பிரிந்து வாழ வேண்டிய சூழல் இங்கு சர்வ சாதாரணம். கணவன் அயல் நாட்டில் வருடக் கணக்கில் பணி புரிய... மனைவி பிள்ளைகளோடு தனித்து வாழ வேண்டிய சூழலும் இங்கு சர்வ சாதாரணம்தான்.
விடியற்காலையில் 5 மணி ரயிலைப் பிடிக்க, 4 மணிக்கு எழுந்து அரக்க பரக்க குளித்து சோத்தைக் கட்டிக் கொண்டு, திருத்தணி உள் கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து பாசஞ்சர் ரயிலைப் பிடித்து, சென்னை வந்து சேர சரியாக ஒன்பதரையாகும். வேலை முடிந்து அதே ஓட்டமும் நடையுமாக சென்டரல் ஸ்டேஷன் வந்து ரிட்டன் பாசஞ்சர் ரயிலைப் பிடித்து இடம் கிடைத்து, உட்கார்ந்து வீடு வந்து சேர இரவு 9 அல்லது பத்து பத்தரையாகும். இனி இரவு உணவு முடிந்து மனைவி பிள்ளைகளோடு அளவளாவி படுக்கையில் விழுந்து அரைகுறையாக தூங்கி, இதோ மீண்டும் மூணு மணிக்கு எழுந்து ஓட வேண்டும். 'ஏன் இந்தக் கஷ்டம் சென்னைக்கே வந்து விடலாமே ' என்று கேட்டால்... 'மனைவி உள்ளூரிலேயே ஆசிரியையாகப் பணி புரிகிறார். அதனால் வீடு மாற முடியாது' என்று ஒரு பதில் வரும்.
வெவ்வேறு ஊர் என்றில்லை, பணி நிமித்தமாக தினந்தோறும் நாடுவிட்டு நாடு, எல்லை தாண்டும் மனிதர்களும் இருக்கின்றனர்.

தினமும் நாடுவிட்டு நாடு எல்லை தாண்டும் மனிதர்கள்
சிங்கப்பூர் அருகில் இருக்கும் மலேஷிய நகரமான ஜோகர்பரிலிருந்து (ஜேபி) பல்லாயிரக்கணக்கான மலேஷியர்கள் (பெரும்பாலும் தமிழர்கள்) தினமும் உட்லன்ஸ் வழியாக சிங்கப்பூர் வந்து பணி புரிகின்றனர். இதற்காக பல மணி நேரம் பயணம் செய்து, தினமும் இரு நாட்டு எல்லை சோதனைச் சாவடியில் தங்களது பாஸ்போர்ட் மற்று கடவுச் சீட்டு ஆவணங்களைக் காண்பித்து குடியேற்ற ஒப்புகை பெற்று பணிக்குச் செல்கின்றனர். பின்னர் அதே நடைமுறைகளோடு பணி முடிந்து இரவு மலேஷியா திரும்புகின்றனர். பின்னர் மீண்டும் விடியற்காலையில் ஆயத்தமாகின்றனர். இப்படி திருத்தணி - சென்னை, ஜோகர்பர் - சிங்கப்பூருக்குப் பதிலாக நீங்கள் வெவ்வேறு ஊர்களைப் போட்டுக் கொள்ளலாம்.
உலகில் எல்லாமே வேலை அல்லது பணி சார்ந்தே சிந்திக்கப்படுகிறது. அதை மையமாக வைத்தே மனிதன் தனது எல்லைகளை வகுத்துக் கொண்டு நகர்கிறான். இதையே நீங்கள் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள், அவர்கள் வேலைக்கும், வாழ்தலுக்குமான எல்லைகளை மிக அழகாக வகுத்து இருப்பார்கள். மிக எளிதாக இரண்டு மூன்று மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு உலகைச் சுற்றி வருவார்கள். இந்தியப் பணி சூழலில் அதையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
தொடக்கத்தில் 12 மணி நேரமாக இருந்த வேலை நேரத்தை, 1942ம் ஆண்டு நடந்த 7வது தொழிலாளர்கள் மாநாட்டில் 8 மணி நேரமாகக் குறைத்து இந்தியத் தொழிலாளர்கள் வயிற்றில் பால் வார்த்தார் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர். இல்லையென்றால் கூடுதலாக மூன்று மணி நேரம், நாக்கு தொங்க ஓடிக் கொண்டு இருக்க வேண்டும்.
இப்படி வேலையே பிரதானம், வேலையே சாஸ்வதம் என்றிருந்த நிலையில் இயற்கையே... 'நீ வீடடங்கு' என்று ஊரடங்கு உத்திரவு போட்டிருக்கிறது. உலகை அச்சுறுத்தும் கரோனா ஆட் கொல்லி வைரஸ் மின்னல் வேகத்தில் மனிதர்களை பலி கொண்டு வருகிறது. சங்கிலித் தொடராய் ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்குப் பரவும் கரோனாவைக் கட்டுப்படுத்த, அந்த தொடர் சங்கிலியை அறுத்தெறிய வீடடங்குவதைத் தவிர வேறு மருந்தில்லை என்றாகி விட்டது.
அரசு அறிவித்த மொத்தம் 21 நாளில் இரண்டு வாரங்கள் தான் கழிந்திருக்கிறது. இன்னும் 1 வாரம் வீட்டில் இருக்க வேண்டும். இந்நிலையில் ஊரடங்கு இந்த மாதம் முழுவதும் நீட்டிக்க வாய்ப்பு இருக்கிறது. இப்பொழுதே கண்ணைக் கட்டுதே என்று வீட்டில் நெளிய ஆரம்பித்து விட்டார்கள்.
இந்தியா என்றில்லை உலக நாடுகளில் உள்ள மொத்த மக்களுமே வீடடங்கிக் கிடக்கின்றனர். வீட்டை விட்டு நேரம் காலமின்று அலைந்து கொண்டு இருந்த மனிதன், வீட்டில் அமர்ந்து மனைவி மக்கள் முகம் பார்த்துக் கிடக்கின்றான்.
மனிதனின் இடைவிடாத ஓட்டத்தின் மீது காலம் கரோனாவை சொடுக்கி இருக்கிறது. வேலை, வேலை என்று ஓடிக் கொண்டு இருந்த மனித இனத்திற்கு 'கட்டாயமாக வீட்டில் இரு' என்று பணிக்கப்படுவதெல்லாம் கனவிலும் கிடைக்காத ஒன்று! எக்காலத்திலும் நடவாத ஒன்று ! அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வரலாற்றைதான் நாம் வீடடங்கி எழுதிக் கொண்டிருகின்றோம். 'வேலையை விட நலமுடன் வாழ்தல் இனிது' என்பதை படித்துக் கொண்டு இருக்கின்றோம்.

சனி, மே 09, 2020

மது இல்லாமல் மனித வரலாறு இல்லை


     மிழ் நாட்டில் அரசாங்கமே ஒயின் ஷாப் நடத்துவதால், கடந்த 20 வருடங்களாக பயமில்லாமல் குடித்துப் பழகிய தமிழனுக்கு, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிக்காமல் இருப்பது பெரும் தண்டனை காலமாக இருக்கிறது போலும் ?

விளைவு...

கைகால் நடுங்க ஆரம்பித்து, ஆளாளுக்கு வீட்டிலேயே சாராயம் காய்ச்சுவது
எப்படி ? ஒயின் தயாரிப்பது எப்படி? என்று கூகுளில் தேட ஆரம்பித்து விட்டனர். சிலர் அடுப்பில் குக்கர் வைத்து காய்ச்சவும் தொடங்கி விட்டனர். எத்தனை விசில் அடித்தப்பின் இறக்க வேண்டும், என்று யூடூபில் கேட்கும் நிலைக்கு, நிலமை சீரியஸாய் போய் விட்டதுதான் காமெடி!

உண்மையில்.... தடுமாறாமல் நாம் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்த்தோமானால் ஒரு உண்மை புலப்படும். 'மதுவை தவிர்த்து, மனித வரலாற்றை அறிய முடியாது' என்பதுதான் அது. 'Civilisation begins with distillation' என்கின்றார் நோபல் எழுத்தாளர் வில்லியம் ஃபாக்னர்.

இந்த உலகத்தில் மனிதன் எந்த மூலையில் எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் சரி, இருந்தாலும் சரி, தனக்கான போதை பொருளை தானே தயாரித்துக் கொள்ளக் கூடிய ஆற்றல் அவனுக்கு இயற்கையாகவே இருக்கிறது. அந்த சூழலில் இயற்கையாக என்ன பொருள் கிடைக்கிறதோ அதை வைத்து சுயமாக போதை தரக் கூடிய மது பானத்தை தயாரித்துக் கொள்கிறான். மனித குல வரலாற்றில் இது தொன்றுதொட்டு நடந்து வருகிறது.

அரிசியிலிருந்து ஓட்கா,
முந்திரிப் பழத்திலிருந்து ஃபென்னி,
திராட்சையிலிருந்து ஒயின்,
ஆப்பிள், ஆப்ரிகாட், பீச், திராட்சை போன்ற பழங்களிலிருந்து பிராந்தி,
பார்லியிலிருந்து பீர்,
பழைய சோற்றிலிருந்து சுண்டக்கஞ்சி,
பார்லி, கோதுமை, கம்பு, சோளம் போன்ற தானியங்களிலிருந்து விஸ்கி
பதப்படுத்தப்பட்ட கரும்பு கூழிலிருந்து ரம்
பல நாள் ஊறவைத்த பழங்கள், வெல்லம், மரப்பட்டைகள் கொண்டு சாராயம்,
தென்னை, பனை, ஈச்சை மரத்திலிருந்து கள்,

என்று மனிதன், விதவிதமான மதுபானங்களை தயாரித்து பயன்படுத்தி வருகின்றான்.

பழங்களையும் தானியங்களையும் பல நாட்களுக்கு ஊற வைத்தும், நொதிக்க வைத்தும், கொதிக்க வைத்தும், பின்னர் வடிகட்டியும் போதை தரும் மது
பானங்களை உற்பத்தி செய்கிறார்கள். 'நாகரீகமும் வடித்தலும்' ஒன்றோடொன்று இணைந்தது என்கிறார் ஆதம் ரோஜர்.

நாடோடியாக அலைந்த மனிதன் விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டதன் பயனாக நிலையாக ஒரு இடத்தில் வாழக் கற்றுக் கொண்டான். அறுவடை செய்த தானியத்தை தண்ணீரில் ஊற விட்ட போது அது புளித்தது. புளித்ததை முகர்ந்ததும் தலை கிறுகிறுத்தது. புளித்ததை கொதிக்க வைத்து குடித்ததும் போதை உச்சிக்கு ஏறியது. உலகின் பெரும்பான்மையான கண்டுபிடிப்புகள் ஏதேச்சையாக தோன்றியது தான். போதை தரும் பானத்தையும் அப்படித்தான் கண்டுபிடித்தான். இப்படிதான் முதன் முதலில் பீர் கண்டுபிடிக்கப்பட்டது.

விஞ்ஞானிகள், தொல்லியல் வல்லுனர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கண்டுபிடிப்புகளில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட களி மண் எம்பொராக்களில் ஒயின்களின் மிச்சத்தை கண்டனர். சிரியா, மொசபோட்டோமியா, எகிப்து போன்ற நாடுகளில் நொதித்தல் வடிகட்டுதல் போன்றவை அறியப்பட்டன. உலகின் பல கண்டு பிடிப்புகளுக்கு பாதை வகுத்த, எகிப்தில்தான் முதன்முதலில் மத சடங்குகளில் ஒயின் பயன்படுத்தப்பட்டது என்கின்றது வரலாறு.

-----------------------
அமெரிக்காவில் மக்களே தங்களுக்கு தேயையான பீர் மதுபானத்தை சுயமாக தயாரித்துக் கொள்ள முடியும். அதற்கான உபகரணங்கள் அங்காடிகளில்
விற்கப்படுகின்றன. பீர் தயாரிக்க தேவையான மூல பொருட்களும் அங்காடிகளில் கிடைக்கின்றன. விருப்பமுடையவர்கள் தங்களது வீடுகளிலேயே பீரை தயாரித்து (ஹோம் மேட் பீர்) பயன்படுத்துகின்றனர்.
இன்றும் கூட சவுதி அரேபியா, கத்தார், குவைத் போன்ற நாடுகளில் வசிக்கும் அயலக தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான மது பானங்களை குக்கரில் வைத்து தயாரிக்கின்றனர். அதை பாட்டில்கள் அல்லது சிறு பாக்கெட்டுகளில்
அடைத்து தங்களது நெருங்கிய வட்டங்களில் விற்கவும் செய்கின்றனர். கடுமையான சட்ட திட்டங்கள் கொண்ட அரபு நாடுகளிலேயே இப்படி என்றால் பிற நாடுகளில் கேட்கவும் வேண்டுமோ....?

இப்படி... மனிதன் சுயமாக சிந்திக்க தொடங்கிய காலத்திலிருந்தே, தனக்கான மது வகைகளை தயாரிக்க தொடங்கி விட்டான்.

 பழந்தமிழ் இலக்கியத்தில் மது பானங்கள் 

 பழந்தமிழர்கள் மதுபானங்கள் தயாரிப்பில் வளமான அறிவைக் கொண்டு இருந்தனர். அன்றைய நாட்களில் மதுபானங்கள் தேன், நெல்லரிசி, பழங்கள், பூவகைகள்,தென்னை. பனை மற்றும் ஈச்சை போன்ற மரங்களிலிருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டன.  மது, நறவு, தேறல், கள் எனப் பல்வகைப் பெயர்களில் மதுபானங்கள் அழைக்கப்பட்டன. பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களில்தகவல்கள்  விரவிக்கிடக்கின்றன.

சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!


- புறநானூறு   (திணை: பொதுவியல்.  துறை: கையறுநிலை)


 சிறிதளவு கள் கிடைக்குமானால் அதனை முழுமையாக எனக்கு உண்ணக் கொடுத்துவிடுவான். அது தீர்ந்துபோன பின்னர் பெருமளவு கள் கிடைக்குமாயின் வேண்டிய அளவு எனக்குக் கொடுத்து நான் உண்டு பாடக் கேட்டுக்கொண்டே அவனும் பருகுவான்.  என்று அதியமான் நெடுமான் அஞ்சியைப் புகழ்ந்து பாடுகிறார் அவ்வையார்.

அரசன் முதல் புலவர்கள், சான்றோர்கள். குடிமக்கள் வரை ஆண், பெண் அனைவரும் களிப்புடன் கள்ளைப் பருகி மகிழ்ந்த செய்திகளைப்  தமிழ் ஆதி இலக்கியங்கள் பதிவு செய்கின்றன.   காணலாம்.

வையை ஆற்றில் நீராடிய தலைவி உடலின் ஈரம் புலர வெப்பத்தைத் தரும் கள்ளைப் பருகினாள். கள் பருகுவதற்கு முன் நெய்தற் பூவைப் போன்ற கருமையாக இருந்த கண்கள் கள்ளைப் பருகியபின், நறவம் பூவைப் போல சிவந்தனவாம். அவ்வளவு வெப்பத்தினை அளிக்க வல்ல கள்ளைப் பருகி, நீராடிய களைப்பைப் போக்கி மகிழ்ந்தனர் அக்கால மகளிர் என்பதைப் பரிபாடல் உணர்த்தும்.

மலைத் தேனை காட்டு மூங்கில் குடுவைகளில் அடைத்து அவற்றை நாட்பட நாட்படமுதிர்விப்பார்கள். இவ்வாறு பதப்படுத்திய தேனே மென்போதை மிகுந்த 'தேக்கல் தேறல்' எனப்படும். குறவர்கள் இந்தத் தேறலைப் பருகி குறிஞ்சிக் கடவுளான முருகனைப் பாடி ஆடுவார்களாம். இந்தத் தேறல் பற்றிய குறிப்புகள் திருமுருகாற்றுப் படை, மலைபடுகடாம், அகநானூறு ஆகிய நூல்களில் காணப் பெறுகின்றன.

நறும்பிழி செய்முறை

பழந்தமிழர்கள் 'நறும்பிழி' என்ற மதுபானத்தை அருந்தினார்கள். உச்சபச்ச போதை தரும் இந்த நறும்பிழிக்கு நல்லதொரு சைட்டிஷ் நாட்டு மீன்
குழம்புதான். தேனில் ஊறிய பலாச்சுளைப் போல கெட்டியான மீன் குழம்பில் மிதக்கும் கொழுத்த மீன் துண்டங்களும், மண் குவளைகளில் ஊற்றிய நறும்பிழியும் அன்றைய பார்ட்டிகளில் களைகட்டும் என்கின்றது பெரும்பாணாற்றுப் படை.

ஊறவைத்த அரிசியை உருளைகளில் வாயகன்ற பாத்திரங்களிலிட்டு காய வைப்பார்கள். பின்னர் இரவும் பகலும் இரு வேளைகளிலும் நறுமணம் கமழும் பலவகைப் இலைகளை அதில் சேர்ப்பார்கள். தீப்போல் ஒளிரும் தாதிரிப்பூவையும், வெல்லத்தையும் கூடவே சேர்ப்பார்கள். இவற்றை இரு வேளையும் வெறும் கைகளால் நன்றாக கிளறிவிட வேண்டும். பிறகு
வாய்மூடி கட்டின மண் குடங்களில் நீண்ட காலத்திற்கு ஊற வைப்பார்கள்.
நொதித்து பக்குவமாகும் போது கொதி நீரில் வேகவைத்து பின்னர் பனை நாறிலான வடிகட்டிகளில் வடித்து வைப்பார்கள்.

சமீபத்தில் மொழிபெயர்ப்பிற்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற, மலையாளத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட 'நிலம் பூத்த மலர்ந்த நாள்' நாவலில்தான் மேற்கண்ட 'நறும்பிழி' தயாரிக்கும் செய்முறை அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

அன்றைய சங்ககால மது தயாரிப்பிற்கும் பிற்காலத்தில் சித்தர்கள் தயாரித்த
பட்டைசாராயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டுமே ஒன்று போல் அதே போன்றே சூத்திரத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

 இன்றைய குடி அவலம் 

அன்றைய நாட்களில் உடலுக்கு நன்மைத் தரும் பொருட்களைக் கொண்டு மதுபானங்கள் தயாரித்தனர், குடித்துக் களித்தனர், ஆடி மகிழந்தனர். இயற்கையாக என்ன கிடைத்ததோ அதைக் கொண்டு ஊறவைத்தும், நொதிக்கவைத்தும் புளிக்கவைத்தும் இயற்கையாக மதுபானங்களைத் தயாரித்தனர். இன்றையை நாட்களில் மதுபானங்கள் தயாரிக்கும் அவல முறையை சொல்லி மாளாது. அதுவும் அரசே டாஸ்மாக் மூலம் அயல் நாட்டு மதுபானங்கள் விற்கத் தொடங்கிய பின்னர், நிலைமை முன்பைவிட சீர் சீர்கெட்டுவிட்டது எனலாம். அயல் நாட்டு மது வகைகளைப் பயன்படுத்துவதில்; தனியாரிடம் இருந்த போது குடி மீதான பயம், அரசே மதுபான விற்பனையை ஏற்று நடத்தத் தொடங்கிய பின்னர் சுத்தமாய் இல்லாமல் போய்விட்டது.

விளைவு....குடி நோயாளிகள் பெருத்த மாநிலமாக தமிழகம் தற்போது மாறிக்கொண்டு இருக்கிறது.டாஸ்மாக் கடைகளில் இன்று பெருவாரியான மக்கள் குடிக்கும் மதுபானங்கள்; விலையைவைத்தே அடையாளம்
சொல்லப்படுகிறது. இதிலிருந்தே இன்றைய மதுபானங்கள் எத்தகைய தரத்தில் தயாரிக்கப்படுகிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

இவர்களின் அயல் நாட்டு மதுபானங்கள் விற்க வேண்டும் என்பதற்காக, இதுகாறும் தமிழர்கள் தொன்று தொட்டு குடித்து வந்த கள்ளையே கடந்த இருபது வருடங்களாக வடிக்கக் கூடாது விற்பனை செய்யக் கூடாது என்று தடைபோட்டுவிட்டார்கள், கிராதகர்கள்.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுவை போன்ற அண்டை மாநிலங்களில் இன்றும் கள் இறக்கவும் விற்பனை செய்யவும் அனுமதி இருக்கிறது. கெமிக்கல்கள் மூலம் தயாரிக்கப்படும் பீர் பிராந்தி விஸ்கியைவிடவா, இயற்கையான முறையில் வடிக்கப்படும் கள் கெடுதலாகிவிட்டது ?
இனிவரும் காலங்களிலாவது தமிழர்களின் தொல்
கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் வகையில், உடல் அரோக்கியப் பானமான 'கள்' இறக்க அரசு அனுமதிக்க வேண்டும். செய்வார்களா....?

- தோழன் மபா
27-4-2020

தகவல் உதவி:

#பரிபாடல்
#தினமணிடாட்காம்
#நிலம்பூத்துமலர்ந்தநாள்
#கீற்று

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...