திங்கள், ஜூலை 28, 2014

ப்ரோ கபடி லீக்கும் தமிழ் நாட்டின் மானமும்!.

TAMILSNOW என்ற இணைய தளத்தில் நண்பர் ஹரிஹரன் எழுதிய கட்டுரையை இங்கு மறு பிரசுரம் செய்கிறேன்.





          ந்தியன் பீரிமியர் லீக் என்று கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த பிறகு ஹாக்கியிலும் அதே போன்று ஒரு வர்த்தகப்பூர்வமான ஒரு போட்டி ஆரம்பிக்கப்பட்டது. விளையாட்டில் வர்த்தகங்களை நுழைப்பது என்பது சரியா தவறா என்பதை விட இந்தியா போன்ற நாடுகளில், இப்படி வர்த்தக நிறுவனங்கள் நுழைவதால் விளையாட்டு வீரர்கள் மூன்று வேளை கஞ்சியாவது நிம்மதியாக குடிக்க வழிவகை ஏற்படும் வாய்ப்பை வழங்குகிறது.தேசிய அளவில் சாதனை புரிந்த விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி, சர்வதேச அரங்கில் பதக்கங்கள் வாங்கிய வீரர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் வாழ்வாதரம் என்பது விளையாட்டு வீரனாக இருந்தாலே போதும் என்ற நிலை கிரிக்கெட்டை தவிர இந்தியாவில் வேறு எந்த விளையாட்டிலும் கிடையாது. அத்தகைய நிலையில் விளையாட்டு போட்டிகளிலும் வர்த்தக நிறுவனங்கள் நுழைவது வரவேற்கத் தக்கதே. கிரிக்கெட், ஹாக்கி பீரிமியர் லீக் வரிசையில் கபடியும் நுழைந்துள்ளது.

கபடிக்கு புரோ கபடி லீக் ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 26ம் தேதி முதல் ஆக்ஸ்ட் 31ம் தேதி வரை ஒரு பெரும் திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. கபடி என்பது உலக அளவில் சில நாடுகளே விளையாடினாலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெற்ற விளையாட்டு, மேலும் கபடிக் கென்று தனியாக உலக கோப்பையும் இருக்கிறது, இந்த உலக கோப்பையை 2004லிருந்து 2013 வரை நடந்த ஆறு உலக கோப்பையையும் இந்தியாவே கைப்பற்றியுள்ளது. இவைகளில் தமிழக வீரர்களின் பங்களிப்பும் ஒரளவாவது இருந்தே வருகிறது, 39 வயது சேரலாதன் மிகச்சிறந்த தற்காப்பு கள ஆட்டக்காரராக இந்திய அணியில் பல்லாண்டுகளாக ஆடிவருகிறார்.

கபடி என்பது தமிழர்கள் விளையாட்டு என்பதை உலகமே ஒத்துக் கொண்ட ஒரு விளையாட்டு, கை பிடி என்பதே கபடியாக மாறியது என்பதாக வரலாறு சொல்கிறது, இதை நாம் சடுகுடு என்ற பெயரிலும் நாட்டுப்புற பாடல் வரிகளுடன் விளையாடி வந்த விளையாட்டு. ஏன் இன்று வரை தமிழக அரசின் அங்கீகரிப்பட்ட தமிழகத்தின் விளையாட்டாக இருப்பது கபடி தான். (நம்மை தவிர பங்களாதேஷ் தனது தேசிய விளையாட்டாக அங்கீகரித்துள்ளது) இப்படி தமிழக அரசின் விளையாட்டாக இருக்கும் கபடி இந்த புரோ கபடி லீக்கில் தமிழகத்தில் இருந்து குறைந்த பட்சம் 4 அணிகளாவது பங்கேற்று இருக்க வேண்டும் ஆம், ஊர்களுக்கு இடையிலான போட்டியிலிருந்து அனைத்து மட்டங்களிலும் கபடிப் போட்டிகள் கோயில் திருவிழா, பொங்கல் விழா என்று எங்கும் நிறைந்தே இருக்கும் கபடிப் போட்டிகள். இப்படி அனைத்து பகுதியிலும் விளையாடப்பட்டு வரும் நமது தமிழகத்தில் இருந்து ஒரு அணி கூட இந்த ப்ரோ கபடி லீக்கில் இல்லை.

காரணம் அணியை வாங்குவதற்கோ இல்லை அணி ஒன்றை நிறுவவோ எந்த நிறுவனமும் தயார் இல்லை என்று சொல்லலாம் ஆனால் நாமே இப்படி ஒரு போட்டி நடப்பதை அறியாதவர்களாகத் தான் இருக்கிறோம், இந்திய கபடி கழகத்தில் அனைத்து மாநிலங்களும் பங்கு பெற்றுள்ளன. இதில் இந்தியன் ப்ரீமியர் லீக் போன்று அணிகள் ஏலம் விடப்பட்டிருக்கின்றன. எட்டு அணிகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது, பெங்கால் வாரியர்ஸ்,  பூனேரி பல்தான், யு மும்பா, தபங்க் டில்லி, பெங்களூர் புள்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரைட்ஸ், தெலுங்கு டைட்டான்ஸ் இதில் பூனே அணியை அபிசேக் பச்சன் வாங்கியிருக்கிறார். அதிக பட்ச ஏலத்தொகையாக 12,80,000 ரூபாய்க்கும் குறைந்த பட்ச ஏலத்தொகையாக 9,10,000 ரூபாய்க்கும் அணிகள் ஏலம் விடப்பட்டுள்ளன, தமிழ்நாட்டில் இருந்து ஒருவரு கூட இந்த தொகையை முதலீடு செய்யும் அளவிற்கு இல்லையா என்ன.நடிகர்களுக்கு இடையே நடக்கும் ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட் போட்டி எந்த விதமான விளையட்டு மேம்பாட்டையும் கொடுக்காத வெறும் விளம்பரமாகவும், பொழுது போக்கிற்காகவும் நடக்கும் இந்த போட்டியின் சென்னை அணியை வாங்கிய ராதிகா சரத் குமார் போன்றவர்களுக்கு இந்த 12 லட்சம் பெரிய தொகையா என்ன. தமிழ் நாட்டி மானத்தை கட்டி காப்போம் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று பேசுபவர்கள் இங்கு பலர் உண்டு ஆனால் இப்படி ஒரு போட்டி அதை முதலில் முன்னெடுத்து இருக்க வேண்டியவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர் அதுவும் ஒரு முக்கியமான விளையாட்டு தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இதற்கு விளம்பரதாராகவும் நேரடி ஒளிபரப்பும் செய்கிறது இத்தகைய ஒரு போட்டி அதுவும் தமிழர்களின் விளையாட்டை நடத்த தமிழ்நாட்டில் இருந்து ஒருவரும் தயார் இல்லை. அதாவது பரவாயில்லை தமிழ் நாட்டில் இருந்து ஒரு அணி கூட கிடையாது.
    

தமிழ் நாடு கபடி கழகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்கலாம் என்றால் இரண்டு நபர்களின் பெயரும் எண்ணும் இணையத்தில் இருக்கிறது ப்ரெசிடெண்டாக திரு. சோலை எம். ராஜா மதுரையை சேர்ந்தவரும், செகரட்டரியாக திரு, சைபுல்லா, திருப்பூரை சேர்ந்தவரையும் குறிப்பிட்டுள்ளார்கள் அவர்கள் எண்களை தொடர்பு கொண்டால் ஒரு நம்பரில் அப்படிப்பட்ட பெயரில் இங்கு யாருமே இல்லை என்கிறார். அடுத்த எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது. இதில் பிரசிடண்டாக இருக்கும் சோலை எம் ராஜா அனைவரும் அறிந்தவரே ஒரு காலத்தில் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர், இவரது தந்தை மதுரை காவல் துறையில் துணை ஆணையளாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்கள் குடும்பத்தின் அடிதடி கட்டப்பஞ்சாயத்து சாம்ராஜ்யம் மதுரை மாவட்டம் அறிந்ததே ராஜா அவர்களின் தம்பி ரவியும் தந்தை சோலை முத்தையாவும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், ரவியின் மீது பல நூற்றுக் கணக்கான கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது. ராஜாவின் மீதும் பல வழக்குகள் உண்டு. இவர் தான் தமிழ் நாடு கபடி கழகத்தின் தலைவராக இருக்கிறார்.
 
இங்கு கபடி கழகம் மட்டும் தவறு செய்யவில்லை நாம் அனைவருமே தவறு செய்துள்ளோம், தமிழ்நாட்டின் விளையாட்டை அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம், இன்னும் பத்து வருடத்தில் இல்லை இந்திய கபடி கழகத்தில் கபடி வரலாறு என்று பழங்காலத்தில் இருந்து இந்தியா முழுவதும் அனைவரும் விளையாடிய விளையாட்டாக சித்தரித்துள்ளனர். இந்தியா என்ற நாடே 1800களில் தான் உருவானது என்ற வரலாற்றையே மறைத்துவிட்டு. தமிழர் விளையாட்டாக இது எங்கும் அகில இந்திய கபடி கழகத்தின் இணையத்தில் எங்குமே குறிப்பிட படவில்லை. நமது அடுத்த தலைமுறை கபடி என்ற விளையாட்டை எதோ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விளையாட்டாக பார்க்க போகிறது என்பது என்னவோ நிதர்சனமாகத் தெரிகிறது.
- ஹரிஹரன்

சனி, ஜூலை 26, 2014

"நோக்குமிடமெல்லாம் நீயின்றி வேறில்லை ஜெயகாந்தா(ன்)!"



எழுத்தாளர் ஜெயகாந்தன் 80தாவது பிறந்த நாள் விழா நேரடிப் பதிவு!.
   
ஜெயகாந்தன் 80-ஆவது
பிறந்த நாள் விழாவில் ஜெயகாந்தன் கதைகள் நூலை விகடன் குழும நிறுவனங்களின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் வெளியிட தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெறுகிறார். உடன் (இடமிருந்து) மொழிபெயர்ப்பாளர் கே.எஸ்.சுப்பிரமணியம், நடிகை லட்சுமி,
நடிகர் சிவக்குமார், ஓவியர் மாயா, நூலை தொகுத்த வனிதா ராம் அவரது கணவரும்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான லண்டன் மருத்துவர் ராம்.
  
           சென்னை மியூஸிக் அக்காடமிக்குள் நுழைய முடியவில்லை. வழியெங்கும் கார்களும் பைக்குகளும் அணிவகுத்து நிறுத்தப்பட்டு இருந்தன. கிடைத்த இடத்தில் பைக்கை நுழைத்துவிட்டு விழா அரங்கிற்குள் நுழையத் தொடங்கினால்,  வழியிலேயே எழுத்தாளர் தமிழ்மகன் நின்றுக் கொண்டு இருந்தார்.  நலம் விசாரித்துவிட்டு அரங்கிற்குள் நுழைந்தால் அரங்கம் மக்களால் நிரம்பி இருந்தது. அப்படி ஒரு ஜனத் திரளை நான் பார்த்ததில்லை. எள் போட்டால் கீழே விழ வழியில்லை என்று சொல்வார்களே அப்படி இருந்தது விழா அரங்கு. திரும்பிய திசையெங்கும் மனிதத் தலைகள்.

தமிழ் எழுத்துலக பிதாமகன் ஜெயகாந்தனின் எண்பதாவது பிறந்த நாள் விழா மற்றும் கதைகள் வெளியீட்டு விழா கடந்த 24ம் தேதி சென்னை மியூசிக் அக்காடமியில் நடைபெற்றது.  ஒரு எழுத்தாளனுக்கு இப்படி ஒரு கூட்டமா....? என்று நாம் மலைக்கத் தேவையே இல்லை. நேரு ஸ்டேடியத்தில் வைத்திருந்தாலும் ஸ்டேடியம் நிரம்பி வழிந்துதான் இருக்கும் என்பது உண்மை. லண்டன் வாழ் தமிழரான டாக்டர் ராம் தனது மானசீக எழுத்தாளருக்கு எடுத்த பிறந்த நாள் விழாவில் எழுத்தாளர்கள் முதற்கொண்டு ரசிகர்கள்வரை வந்து குவிந்துவிட்டனர்..

அரங்கில் எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய  வீடியோ காட்சிகள் திரையில் ஓடிக்கொண்டு இருந்தது. அவரைப்பற்றிய குறிப்புகள் பெரும் மலைப்பைத் தந்தன. மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரிடம் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரல் சினிமாவில் வேலைக்காரி சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது....ஃபுரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர்...என்று பல பரிணாமம் பெற்று இருக்கிறார்.

இது நாள்வரையில் மலையாள எழுத்துலக பிதாமகன் வைக்கம் முகமது பஷீர் மட்டுமே பல்வேறு தொழில்களை செய்திருக்கிறார் என்று நினைத்திருந்தேன்,  ஜெயகாந்தனும் அந்த வரிசையில் வருகிறார் என்கின்றபோது அவரது எழுத்தின் வீச்சு வரும் திசை தெரிந்தது.

---------

    மிழ் தாய் வாழ்த்துகளுடன் விழா தொடங்க...மேடையில் இடமிருந்து வலமாக ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பரும், மொழிபெயர்ப்பாளரும், முன்னாள் ஆசிய வளர்ச்சி வங்கி இயக்குநருமான கே.எஸ்.சுப்பிரமணியம், நடிகை லட்சுமி, நடிகர் சிவக்குமார்,  தொழிலதிபர் நல்லி குப்புசாமிசெட்டி, விழா நாயகர் எழுத்தாளர் ஜெயகாந்தன், ஆனந்த விகடன் நிறுவனங்களின் தலைவர் பாலசுப்பிரமணியன், ஓவியர் மாயா, இவ் விழாவினை நடத்தும் லண்டன் வாழ் தமிழரான டாக்டர் ராம், அவரைத் தொடர்ந்து அவரது துணைவியார் வனிதா ராம் ஆகியோர் வரிசைக்கிரமமாக அமர்ந்து இருந்தனர்.

விழாவில் மூத்த ஓவியர் கோபுலு கலந்துக் கொள்வதாக இருந்தது. எதிர்பாராத விதமாக அவரது மனைவி இறந்துவிட்டதால் அவர் வரமுடியாமல் போய்விட்டது. அவர் வராத குறையை நடிகர் சிவக்குமார் தீர்த்துவைத்தார். விகடனில் அவர் வரைந்த ஓவியங்கள் பற்றி சிவக்குமார் கூறியது அவர் ஒரு ஓவியக் கலைஞன் என்பதைக் காட்டியது. விகடன் தீபாவளி மலருக்கு கோபுலு வரைந்த ஓவியங்களைப் பற்றி இஞ்ச் பை இஞ்சாக வர்ணித்தார். கோபுலு அய்யாவை பார்த்தபோது,  "இந்த கையால படங்கள்ல நிறைய ஸ்டோக்ஸ் போட்டோன்ல்லியோ அதான் எனக்கும்  ஸ்டோக் வந்துடுத்துரா....." என்று அந்த நேரத்திலேயும் தனது நகைச்சுவையை வெளிப்படுத்தினார் என்றார்.  ஜெயகாந்தனின் கதைகளில் வரும் கதாபாத்திர பெயர்களையும், கதை சுருக்கத்தையும் சுவைப் பட பேசி பெரும் கைத் தட்டலை பெற்றார்.

முன்னதாக விழாவை தொடங்கிவைத்து டாக்டர் ராம் வரவேற்புரையாற்றினார். ஜெயகாந்தனின் தீவீர ரசிகர் என்பது அவரது ஒவ்வொரு செய்கையிலும் பேச்சிலும் தெரிந்தது. இல்லையென்றால் இப்படி பல லட்சங்களை செலவு செய்து இந்த விழாவை நடத்துவாரா?. ஜெயகாந்தனின் தீவிர ரசிகர் என்று இவரைத்தான் சொல்லவேண்டும். இவரால்தான் நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது. இவ் விழா எடுக்கப்படாமல் இருந்திருந்தால் தமிழர் செய்த பல தவறுகளில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும். நல்லவேளை டாக்டர் காப்பாற்றினார்.

இவ் விழாவில் பிறந்த நாள் கொண்டாட்டம் மட்டும் அல்லாமல் ஜெயகாந்தன் 70-80களில் அவர் எழுதி ஆனந்த விகடனில் வெளிவந்த கதைகளில் 20 கதைகளை தேர்ந்தெடுத்து, அதே அச்சு வடிவில், அதே ஓவியங்களை கொண்டு  நல்லதொரு தொகுப்பையும் வெளியீட்டு இருக்கிறார்கள்.  இத் தொகுப்பை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி வெளியீட விகடன் நிறுவனத் தலைவர் பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். ஓவியங்களை ஓவியர் மாயாவும், ஓவியர் கோகுலும். வரைந்துள்ளனர். ஜெயகாந்தனை விட மூத்தவரான மாயா அந்த ஓவியங்களை இப்போதும் அப்படியே வரைந்திருப்பது  இத் தொகுப்பிற்கு பெரும் வரவேற்பை கூட்டி இருக்கிறது!.

நடிகை லட்சுமி எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

"பதினோரு வயதுவரை எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது. வீட்டில் ஆங்கிலம் மட்டுமே பேசுவோம் படிப்போம். தமிழ் படிக்கத் தெரிந்த பிறகு எனது ஆதர்ஷ எழுத்தாளராக ஜெயகாந்தனே இருந்தார். மிஸ்டர் ஜேகேயோட 'அக்னி பிரவேசம்' என்ற நாவலைத்தான் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள்.  அதில் முக்கியமா ஒரு சீன்:  கல்லூரி முடிந்து பஸ் ஸ்டாப்பில் அந்த பெண் நிற்க; அவள் ஏற வேண்டிய பஸ் மட்டும் அன்றுப் பார்த்து வர லேட்டாகிறது. அவளோடு கூட இருந்தவர்கள் எல்லோரும் அவரவர் பஸ் வந்தவுடன் ஏறி போய்விட, இந்தப் பெண் மட்டும் தனிமையில் மழையில் நனைந்துக் கொண்டு இருக்கிறாள். அப்போது அந்த வழியாக காரில் வந்த இளைஞன் அவள் நிற்பதை பார்த்துவிட்டு, அவளை அவள் வீட்டில் இறக்கிவிடுகிறேன் என்று கூறி அவளை தனது காரின் பின் சீட்டில் ஏற்றிக் கொண்டு அவளை யாரும் அற்ற இடத்தில் வைத்து கற்பழித்து விடுகிறான். பின்னர் அவளை அவளது வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டு பறந்துவிடுகிறான்".

"இந்தப்படத்தில் இந்த சீன் மிகவும் முக்கியமானது. அந்த பிராமணாத்து  வெகுளிப் பெண் கேரக்ட்டருக்கும், மழையில நனைஞ்சி நிக்கிற கேரக்டருக்கும்  நான் தான் பொருத்தமா இருப்பேன்னு ஜேகே, இயக்குனர் பீம்சிங்கிடம் கூறிவிட்டார். அப்போது நடிக்காம ஒதுங்கி இருந்த ஒரு நடிகை ஜெயகாந்தனின் இந்த கதைக்கு நான்தான் நடிப்பேன்னு ஒத்தக்கால்ல பிடிவாதமா நிற்கிறார். அப்படத்தில் நடிப்பதற்கும் தொடர்ந்து முயற்சி செய்துக் கொண்டு இருந்தார்.  இயக்குனர் பீம்சிங்கும் இதை ஜேகேயிடம் அடிக்கடி கூறி இருக்கிறார். அப்போ ஜேகே ஒரு வார்த்தை சொன்னாரு பாருங்க......அய்யோ.....அதை எப்படி நான் சொல்வேன்" என்று இரண்டு மூன்று சொன்னவர், எல்லொரும் ஆவலுடன் அமைதி காக்க.... அவரே ஜேகே சொன்னதை பின்வருமாறு கூறினார்  "அந்த நடிகையையெல்லாம் தனியா அழைச்சிக்கிட்டு போய் கெடுக்க முடியாதுப்பா!"  என்று கூற.... அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது!. அந்தப் படம் 1977ல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது என்றார். பேசிமுடித்தவர் ஜெயகாந்தன் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று  கைகளை பற்றிக் கொண்டு நெக்குருகி அவரது கால்களை தொட்டு வணங்கினார்.

இவ் விழாவிற்கு கவிஞர் வைரமுத்து வருவதாக இருந்தது.  கடைசி நேரத்தில் வர முடியாமல் போக....அவர் வராத குறையை அவரது வீடியோ பேச்சு தீர்த்துவைத்தது. ஜெயகாந்தனின் தீவிர  ரசிகர் கம் நண்பரான இசையமைப்பாளர் இளையராஜா இவ் விழாவிற்கு ஏன் அழைக்கப்படவில்லை  என்ற காரணமும் புரிந்தது. விழாவை ஏற்று   நடத்தியவர்கள் வைரமுத்துவின் உறவினர்கள் என்பதால் இளையராஜாவை இவ் விழவிற்கு அழைக்கவில்லை போலும்?!.

ஏற்புரையாக ஓவியர் மாயாவை பேச அழைத்தனர் "எனது இந்த வெற்றிக்கு விகடன் ஆசிரியரே காரணம், அவர்தான் எனக்கு இந்த வாழ்க்கையை அளித்தார். இங்கே கோபுலு வரவில்லை வந்திருந்தால் அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியிருப்பேன். இங்கே அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் என்னைவிட வயதில் இளையவர்கள். அனைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துகளும்" என்றார்.

இறுதியாக ஏற்புரையாற்ற ஜெயகாந்தனை அழைத்தனர்.  எழுந்து நடக்க முடியாததால் அவரது இருக்கைக்கு மைக் வைக்கப்பட்டது. மிகவும் சிரமப்பட்டு பேசிய அவர் " இங்கு வந்து நீங்கள் நன்றி வணக்கம் சொன்னால் போதும் என்றார்கள், இங்கு வர முடியாதவர்கள் மனம் இங்குதான் உலாவிக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் நன்றி வணக்கம் என்று குளறலுடன் முடித்துக் கொண்டார். ஜெயகாந்தன் பேசுவதற்கு பெரிதும் சிரமப்பட்டார்.  அதனால் அவரது ஒற்றை வார்த்தைக் கூட நமக்கு கண்ணில் கண்ணீரை வரவழைத்தது. தமிழுக்கு கிடைத்த ஒரு யதார்த்தமான எழுத்தாளரின் பிறந்த நாளை அன்று தமிழகமே கொண்டாடியது எனலாம்.

இனி விழா துளிகள்....

விழாவில் தனிப்பட்ட முறையில் பஜாக செயற் குழு உறுப்பினர் இல கணேசன்,  சால்வை போர்த்தினார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விடியல் சேகர் ஜெயகாந்தனுக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லகண்ணு ஜெயகாந்தனுக்கு சால்வை போர்த்த மேடைக்குவர.... அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.

விழாவிற்கு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், அவ்வை நடராசன், சிலம்பொலி செல்லப்பனார், எழுத்தாளர் விக்கிரமன், எழுத்தாளர் சுபா, முன்னாள் நீதிபதி சந்துரு, முன்னாள் பப்பாசி தலைவர்கள் செண்பகா பதிப்பகம் ஷண்முகம் மற்றும் கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் ஆகியோர் வந்திருந்தனர்.

இறுதியில் தேசிய கீதம் பாடுவதற்கு, ஒலி பெருக்கி ஏதோ மக்கர் செய்ய....எழுந்து நின்று அனைவரும் ஒரே குரலில் தேசிய கீதம் பாடி விழாவை நிறைவு செய்தது,   எழுத்தாளர்கள் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டியவர்கள்  என்பதை சொல்லாமல் சொல்லியது.

()()()()
-தோழன் மபா.
26/07/2014
புகைப்படம் உதவி ஏ.எஸ் கணேஷ்,  தினமணி.


வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...