வியாழன், டிசம்பர் 29, 2016

மறுதாம்பு புத்தக வெளியீட்டு விழா

       திசையறியாது திகைத்து நின்றவனுக்கு வழி காட்ட எத்தனையோ நல் உள்ளங்கள். சிக்கிக்கொண்ட ஆற்றுச் சுழலில் அதன் போக்குணர்ந்து போராடுபவனுக்கு நம்பிக்கையாய் கரை தெரிவதுபோல் இதோ 'மறுதாம்பு' எனது கவிதை நூல் வெளிவரத் தயாராக இருக்கிறது.


அழைப்பிதழ்

வரும் ஜனவரி இரண்டாம் தேதி மாலை 6 மணிக்கு கவிக்கோ மன்றத்தில்

 மறுதாம்பு புத்தக வெளியீட்டு விழா

தினமணி ஆசிரியர் திரு கே.வைத்தியநாதன் அவர்கள் தலைமையேற்று நூலை வெளியீடுகிறார்கள்.

கவிதைகளின் சக்ரவர்த்தி, கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் சிறப்புரை.

நண்பர் அமிதம் சூர்யா மற்றும் சுகந்தி நாச்சியாள் வாழ்த்துரை.

நண்பர் வேல் கண்ணன் அவர்கள் விழாவினை தொகுத்து வழங்குகிறார்.

அனைவரும் வருக!. உங்கள் வருகையால்தான் இவ் விழா மேலும்
 சிறப்படையும்!.

உங்களுக்காக Iam waiting

#மறுதாம்பு

செவ்வாய், நவம்பர் 22, 2016

எனது முதல் கவிதை தொகுப்பு 'மறுதாம்பு'.




மறுதாம்பு  கவிதை தொகுப்பு    


         டந்த ஞாயிறு  அன்று தினமணியில் (13.11.2016)  'இந்த வாரம்' பகுதில், வெளிவரப் போகும் எனது 'மறுதாம்பு' கவிதை தொகுப்பிலிருந்து 'நந்தி' என்ற கவிதையை வெளியீட்டு எனது கவிதை தொகுப்பை முன் மொழிந்திருக்கின்றார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்.

என்றோ தொடங்கப்பட்ட எனது பயணம், இன்றுதான் ஒரு இலக்கை அடைந்திருக்கிறது.
எனது கவிதை தொகுப்பு 'மறுதாம்பு' வேலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 6 மாதமாகிவிட்டது. இதோ முடிவுற்று புத்தகமாய் வெளிவர இருக்கின்றது. அச்சு வேலை முடிந்தப்பின் கவிதை புத்தகத்தைப் பற்றி முக நூலில் அறிமுகம் செய்யலாம் என்று இருந்தேன், ஆனால் அதற்கு முன்னர் தினமணியே எனது கவிதை தொகுப்பை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகம் செய்திருப்பது, நான் பெற்ற பேறு!.
தினமணியில்  வந்த அறிமுகம் 
டெல்டா மாவட்ட விவசாயிகளின் வலியை சொல்லக் கூடிய மிகச் சிறிய, மிக எளிமையான கவிதைதான் 'நந்தி'. மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் குறையத் தொடங்கினால், அணையிலிருக்கும் நந்திச் சிலை வெளியே தெரிய ஆரம்பிக்கும். நந்தி சிலை வெளிய தெரிய ஆரம்பித்தால், காவிரி ஆற்றை நம்பி வாழும் விவசாயி கவலைக் கொள்ள ஆரம்பித்துவிடுவான். இதை பின்னணியாக வைத்தே இக் கவிதையை எழுதினேன்.


நந்தி


மேட்டூரில்

நந்தி தெரிந்தால்

கீழையூரில் 
எங்கள் 
தொந்தி காயும்.


                                      ()()()
ஜனவரி சென்னை 

புத்தகக் காட்சிக்கு ரிலீஸ்!. 

      

     தில் கீழையூர் என்ற ஊர், காவிரி ஆறு கடல் புகும் பூம்புகாருக்கு அருகில் இருக்கிறது. மறுதாம்பு வரும் சென்னை புத்தகக் காட்சிக்கு வெளிவரயிருக்கிறது. இக்கவிதை தொகுப்பை 'மேய்ச்சல் நிலம்' பதிப்பகம் வெளியீடுகிறது.

அதென்ன 'மறுதாம்பு' என்று நீங்கள் கேட்கலாம்?. அறுவடை முடிந்தப் பின்னரும், மீண்டும் கிளைத்து எழும் நெற்கதிரே மறுதாம்பு. அதையே எனது கவிதைப் புத்தகத்திற்கு பெயராக வைத்துவிட்டேன். அடிப்படையில் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த நமக்கு இதுவே சாஸ்வதம்!.

தினமணி ஆசிரியருக்கு எனது நன்றியும் அன்பும்!.
அன்புடன் 
தோழன் மபா

ஞாயிறு, அக்டோபர் 16, 2016

வதந்தி பரப்புவர்கள் மீது கைது நடவடிக்கை; தமிழக அரசு மீது மக்கள் அதிருப்தி!





        முன் எப்போதும் இல்லாத வகையில் முகநூல் மற்றும் ட்விட்டர்களில் எழுதுபவர்கள் கிலிப் பிடித்துக் கிடக்கின்றனர்.  முதல்வர் ஜெயலலிதா உடல் நிலைப் பற்றி தவறான தகவலைப் பரப்பினார்கள் என்று இதுவரை 52 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது தமிழக காவல் துறை. அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து கோவையில் இரு வங்கி ஊழியர்களை கைது செய்து, சிறையில் அடைத்திருக்கிறது. தமிழக காவல் துறையின் இந்த ஏதேச்சதிகார நடவடிக்கை,  மக்களிடையே ஒரு வித வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது!.

முதல்-அமைச்சர் உடல் நிலைக்குறித்து வதந்தி பரப்பியதாக ஏற்கனவே மாடசாமி, சதீஷ் குமார், பாலு, திருமணி செல்வம், ரமேஷ்குமார், சுரேஷ் குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மணப்பாடு கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ மத போதகர் ஆண்டனி ஜேசுராஜ், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இத்தைகைய கைது நடவடிக்கையால் மக்களிடையே அதிருப்தி எழுந்துள்ளதை தமிழக அரசு கவனித்ததா என்று தெரியவில்லை?. 

சமூகவலைத் தளங்களான முகநூல், ட்விட்டர், வாட்ஸப் பயன்படுத்துவதுப் பற்றிய போதுமான விழிப்புணர்வு இன்னும் மக்களிடையே ஏற்படவில்லை. எத்தகைய தகவலை பகிரவேண்டும், எத்தகைய செய்திகளை லைக் செய்ய வேண்டும் என்ற குறைந்தப்பட்ச தெளிவு இல்லாமலேயே மக்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இணையத் தளங்களைப் பயன்படுத்துவோர் அதிகமாகிவிட்ட வேளையில், இதற்கான சட்ட பூர்வ விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்த வேண்டும். அதன் வாயிலாகவே இத்தகைய இக்கட்டுகளை நான் தவிற்க முடியும். பள்ளிக் கல்லூரிகளில் இதற்காண பாடத்திட்டத்தை வைத்தாலும் தவறில்லை. அந்தளவிற்கு மனிதன் குனிந்த தலை நிமிராமல் காலம் ஓட்டுகிறான்.

கடந்த 24 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. முதலில் சாதாரண காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மக்கள் மன்றத்தில் கூறிய தமிழக அரசு, போக போக முதல்வர் உடல் நிலைப் பற்றி தெளிவான தகவலை வெளியிடாமல் பார்த்துக் கொண்டது. 

முதல்வர் ஜெயலலிதா மீது பற்றும் பாசமும் கொண்ட இரத்தத்தின் இரத்தமான அதிமுக உடன்பிறப்புகள்,  ஆயிரக் கணக்கில் அப்பல்லோ மருத்துவமனையில் குவியத் தொடங்கினர். அப்பல்லோ வாசலில் குவிக்கப்பட்ட காவல் துறையினராலும், அப்பல்லோவைச் சுற்றி அமைக்கப்பட்ட தடுப்பரண்களாலும் ஒரு அசாதராண நிலை மாநிலம் முழுவதும் பரவத்தொடங்கியது. 

"இவ்ளோ போலீஸூ....... இவ்ளோ கெடுபிடி..... அப்ப அம்மாவிற்கு ஏதோ ஆயிடுச்சிடா" என்று சாதாரண அதிமுக தொண்டன் நினைக்கத் தொடங்கினான். விளைவு; முதல்வர் உடல் நிலைப் பற்றிய வதந்திகள் விர் விர்ரென்று எட்டுத் திக்கும் பறக்கத் தொடங்கியது. உண்மை நிலை தெரியாத மக்கள், அப்படி இருக்குமோ... இப்படி இருக்குமோ... யூகத்தின் அடிப்படையில் பேசியதே வதந்தியாக உருவெடுத்தது.   வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தவரும் தமிழ் நாட்டில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு போன் செய்து "அம்மாவுக்கு என்னதான் ஆச்சு?" என்று கேட்கும் அளவிற்கு விஷயம் உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது. . 

முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலையே அவரது உடல் நிலைக் குறித்த உண்மை நிலையை மக்களுக்கு விளக்கி இருந்தால், முதல்வர் உடல் நிலை என்பது விவாதத்திற்குரிய பொருளாக இல்லாமல், நலம்பெற வேண்டுதலுக்குரிய பொருளாக மாறியிருக்கும்.  ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு அடுத்த நாளே  முதலமைச்சர் முழுமையாக குணமடைந்து வழக்கமான உணவுகளை எடுக்கத் தொடங்கிவிட்டார் என்று கூறிய மருத்துவமனை கம் தமிழக அரசுதான், அடுத்த சில நாட்களில் முதலமைச்சருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது. இன்னும் நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாக மூலம் தெரிவித்தது. இத்தகைய முன்னுக்குப்பின் முரணான தகவல்தான், முதல்வர் உடல் நிலை குறித்து அரசு நிர்வாகம் தரும் தகவல் மீது நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தி, வதந்திகள் பரவ வாய்ப்பை உருவாக்கின என்பதை எவரும் மறுக்க முடியாது. 

நிலமை இப்படி இருக்க.... முதல்வர் உடல் நிலைக்குறித்து வதந்தி பரப்பினார்கள் என்று, அப்பாவிகளை கைது செய்வது நியாயமான செயல் அல்ல. இத்தகைய கைது நடவடிக்கையால், அந்த அப்பாவிகளின் வாழ்க்கை முற்றிலும் முடங்க வாய்ப்பிருக்கிறது.  இந்த கைது நடவடிக்கையால் அவர்களின் வேலை பறிபோகும், குடும்பத்திற்கு அவப்பெயர் உண்டாகும், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடும்.   கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப எதிர்கால நலன் கருதி அவர்களை உடனே விடிவிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பு. 

செய்யுமா தமிழக அரசு?.

-தோழன் மபா. 






 . 




ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்- கவிதை நூல் வெளியீடு




                   ரண்டு நாளுக்கு முன்னர் வரை 'பாலைவன லாந்தர்' என்றால் யார் என்றே தெரியாது. அதுவும் நண்பர் வேல் கண்ணன் அவரது முக நூல் பக்கத்தில் கவிதை வெளியீடு பற்றி தெரிவித்திருந்தார். பாலைவன லாந்தர் என்பது ஒரு பதிப்பகத்தின் பெயர் என்றே நினைத்திருந்தேன். கவிதை புத்தக வெளியீட்டிற்கு சென்ற பிறகுதான் தெரிந்தது. பாலைவன லாந்தர் என்ற பெயருக்குப் பின் ஒரு பெண் கவி இருக்கிறார் என்று!. 'லீடிங் லைட்ஸ்' போல காத்திரமான ஒரு மெட்டாலிக் பெயரை சூடிக் கொள்ளவே ஒரு துணிச்சல் வேணும். அந்தத் துணிச்சல் கவிஞர் பாலைவன லாந்தருக்கு இருக்கிறது! .


சென்னை மைலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் குளிரூட்டபபட்ட அரங்கில் நேற்று மாலை பாலைவன லாந்தர் எழுதிய 'உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்' கவிதை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் புத்தகத்தை வெளியிட, ஓவியர் மணிவண்ணன் பெற்றுக் கொண்டார். கவிதை நூல் குறித்து இந்திரன், எஸ். சண்முகம், அமிர்தம் சூர்யா, வேல் கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். உரை யூ டியூப்பில் காணக் கிடைக்கிறது.
புறம் மற்றும் அகச் சூழலில் காணும் எதுவும் கவிதை ஆகுமென்பதை இக் கவிதை தொகுப்பிலும் காண முடிகிறது. மிக சிரத்தையான வார்த்தை கோர்ப்புகளில் கவிதையெங்கும் இழையோடும் உக்கிரம், வெகுஜனத்தின் ஒரு குரலென நாம் மதிக்க வேண்டும். கொடி பிடிப்பவனுக்குள் இருக்கும் பாசாங்கற்ற முழக்கத்தினை பெண்ணிய குரலாக தனது கவிதைகளில் காட்சிப்படுத்துகிறார் கவிஞர். பெண்ணியத்தின் பொதுமை குற்றச்சாட்டுப் போல இங்கேயும் 'ஆண் குறி' ஒரு ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது.

அவர்களிடம் மூன்று ஆயுதங்கள் இருந்தன
கத்தி 
மரக்கட்டை 
அவர்களது ஆண் குறி

இக் கவிதைவரிகள் ஏதோ ஒரு சம்பவத்தின் குறியீடு என்றாலும், 'அது' தொங்குவதாலையே ஆண் மிக எளிதாக எதையும் கடந்து விடுகிறான்.. அல்லது எதையும் செய்ய துணிகிறான் என்பதையே சம கால சூழல் நமக்குச் சுட்டுகிறது. போகட்டும்.... அதே நேரத்தில் தனது தந்தைக்கும் ஒரு கவிதை (என் அப்பனுக்கு ஒரு கனவு இருந்தது) எழுதி அதை சமன் செய்துவிடுகிறார் பா.லா., இப்படியான சமன்பாடுகளில்தான் உலகம் இன்றளவும், ஆண் பெண்ணுக்கான புரிதலில் அன்பு கொண்டு இயங்குகிறது என்றே நினைக்கிறேன். வேறொன்றிலிருந்து இன்னொன்றாக அல்லது பிரிதொன்றிலிருந்து வேறொன்றாக வெளி வந்திருக்கிறது 'உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்' தொகுப்பு. பாலைவன லாந்தரின் முதல் கவிதைத் தொகுப்பு இது என்று; யாராவது சொன்னால்தான் தெரிகிறது!.

விழாவினை எழுத்தாளர் விஜய் மகேந்திரன் தொகுத்து வழங்கினார். இக் கவிதை தொகுப்பினை சால்ட் பதிப்பகம் வெளியீட்டு இருக்கிறது. நேர்த்தியான வடிவமைப்பில் கவிஞர் நரனின் மெனக்கெடல் தெரிகிறது. வாழ்த்துக்கள்!.
பக்கம் 112 
நூலின் விலை ரூ 100/-

-தோழன் மபா.

திங்கள், ஜூலை 04, 2016

மாசிலாமணி சாரும் சில ரேடியோ நினைவுகளும்...




          மாசிலாமணி சாரைப் பார்த்து 30 வருடத்திற்கு மேல் இருக்கும். சாரை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது. நான் 6 வது 7 வது படிக்கும் போது சார்தான் உடற்கல்வி ஆசிரியர் (P.T Master). எப்படியோ கடந்த மாதத்தில் ஒரு நாள் அவரை சந்தித்துவிட்டேன். இவ்வளவிற்கும் திருவாலங்காட்டிலிருந்து ஆடுதுறை இதோ கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறது. அப்படி இருந்தும் சாரை சந்திக்க 30 வருடம் தேவைபட்டிருக்கிறது.

மாசிலாமணி சார்
மாசிலாமணி சார்; ஆடுதுறை குமர குருபர சுவாமிகள் மேல் நிலைப் பள்ளியின் (Sri KGS Hr.Sec School Aduthurai) உடற் கல்வி ஆசிரியர். நான் ஆறாவதிலிருந்து பத்தாவது வரைக்கும் ஆடுதுறை கேஜிஎஸில்தான் படித்தேன். திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் கடைசி மகன் அன்பழகன் எனது கிளாஸ்மேட்!.

உடற்கல்வி ஆசிரியர்கள் பெரும்பாலும் ஸ்போர்ட்ஸில் மட்டும்தான் ஆர்வமாய் இருப்பார்கள். பைன் ஆர்ட்ஸ் பக்கம் தலைவைத்துக் கூட படுக்க மாட்டார்கள். சார் அதில் விதிவிலக்கு. பேச்சு போட்டி, நாடகம், ஆடல், பாடல், என்று ஃபைன் ஆர்ட்ஸ் முழுவதும் அவர்தான் ராஜா!. தற்போது பணி நிறைவுப் பெற்று வீட்டில் இருக்கிறார். 

சாருடன் நான்


ஆடுதுறை வீர சோழன் ஆறு பாலம் தாண்டியதும் இடது புரத்தில், சாத்தனூர் போகும் சாலையில் சாருடைய வீடு இருக்கிறது. நல்ல பிரமாண்டமான பழையகாலத்து வீடு. நான் சந்திக்கச் சென்ற போது, நெற்றி நிறைய விபூதியோடு இருந்தார். என்னை அறிமுகம் செய்து கொண்டு, காலை தொட்டு கும்பிட்டேன். முப்பது வருடங்கள் கழித்து ஒரு மாணவன் தன்னை தேடி வந்திருக்கிறான் என்று ரொம்ப சந்தோஷப்பட்டார்.

()()()()

திருச்சி வானோலி நிலையத்தில் எங்கள் பள்ளியின் சார்பாக 'விவசாயிகளுக்கு உற்ற துணையாக இருக்கும் ஃபாக்டீரியாக்கள்' பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடாயிருந்தது. பேச்சுப் போட்டியில் கலந்துக் கொள்ளும் மாணவன் என்பதால், கலந்துரையாடலில் பேச எனக்கும் வாய்ப்புக்கிடைத்தது. ஒரு தாத்தா அவரது பேரன், ஒரு கல்லூரி பேராசிரியர். மூன்று பேர்தான் கலந்துரையாடலில் பாத்திரங்கள். எனக்கு தாத்தா வேடம் கிடைத்தது. புரபுசர் வேடத்தில் இருக்கும் மாணவன் பாக்ட்டீரியாக்கள் பற்றி விரிவாக தெளிவாக கூற வேண்டும். எழுத்து இயக்கம் எல்லாம் மாசிலாமணி சார்தான். இதற்காக ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து தகவல்களை பெற்று கலந்துரையாடலில் சேர்த்திருந்தார். எங்கள் பகுதி முழுவதும் நெல் விளையும் பூமி என்பதால் விவசாயத்திற்கே முன்னுரிமை!. பின்ன தமிழகத்தின் நெற்களஞ்சியமாச்சே எங்கள் தஞ்சை மாவட்டம்!.

இரண்டு மூன்று நாட்களாக கலந்துரையாடலை ரிகர்சல் பார்த்துவிட்டோம். அடுத்த நாள் காலையில் திருச்சிக்கு கிளம்ப வேண்டும் என்பதால், முதல் நாள் இரவே சார் வீட்டிற்கு வந்துவிட்டோம்,. கலந்துரையாடலை டேப்பில் ரிக்கார்டரில் பதிவு செய்து பார்த்தால்தான் எவ்வளவு நேரம் ஓடுகிறது என்று தெரியும். அதைவைத்தே கலந்துரையாடலின் நேரத்தை கூட்டவோ குறைக்கவோ முடியும்.

கலந்துரையாடலை கேசட்டில் பதிவு செய்து, ரிக்கார்டரில் போட்டுக் கேட்டதில், எனது வாய்ஸ் தாத்தா வேடத்திற்கு பொருந்தவில்லை. தெளிவாக உச்சிரிப்பு பிழையின்றி, பெரிய ஆள் குரல் போல் கேட்டது. அப்போது நான் ஏழாவது அல்லது எட்டாவது படித்துக் கொண்டு இருந்ததாக ஞாபகம். புரபுசர் கேரக்டருக்கு வாய்ஸ் தந்தவனின் குரல் அந்த பத்திரத்திற்கு ஏற்றார் போல் இல்லை. உடனே என்னை புரபசர் கேரக்ட்டருக்கும், அந்த பையனை தாத்தா வேடத்திற்கும் மாற்றினார். இரவு நெடுநேரம் எப்படி ஏற்ற இறக்கத்துடன் பேச வேண்டும் என்று சார் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்.

அன் நாட்களில் தமிழகத்தில் உள்ள ரேடியோ நிலையங்களில் திருச்சி வானொலி நிலையம் பிரசித்திப் பெற்ற வானொலி நிலையமாக திகழ்ந்தது. தனது விதவிதமான நிகழ்ச்சிகளால் திருச்சி வானோலி நிலையம் ஒரு முன்னணி நிலையமாக இருந்தது. அதன் நிகழ்ச்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது என்று சொல்லாம். துகிலி சுப்ரமணியம், கமலா அம்மாள் போன்றவர்கள் தங்களது நாவன்மை மிக்க பேச்சால் அன்றைய ஒருங்கிணைந்த திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பிரபலமான மனிதர்களாக இருந்தனர்.

"அன்பார்ந்த விவசாய பணியாளர்களே...ஆய்வு மன்ற அமைப்பாளர்களே..., நடப்பு சம்பா பருவத்தில் குவிண்டாலுக்கு......" என்று விவசாயம் தொடர்பான அறிவிப்புகளை காலையில் அரைத் தூக்கத்தில் கேட்கும் சுகம் இருக்கிறதே அது மீண்டும் கிடைக்காத ஒன்று!. அந்த அறிவிப்புகளில் நிறைய புதுமைகளை அன்று புகுத்தியிருந்தனர். சர் சர்ரென்று டீ ஆற்றும் சத்தம், டீயைய் உறிஞ்சு குடிக்கும் சத்தம் போன்ற சவுண்ட் எஃபக்கெட்டுகளை போட்டு ஏதோ இருவர் டீ கடையில் அமர்ந்து விவசாயம் தொடர்பாக பேசுவது போல் அந்த நிகழ்ச்சிகள் தத்துருபமாக இருக்கும். மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி அது!.

இப்படி பேரு பெற்ற வானொலி நிலையத்தில் மகன் பேசுகிறான் என்றால் என் அப்பா விடுவாரா....? சொந்தக்காரர்களுக்கு கார்டு போட்டு சொல்லிவிடுவார். "பாபு இத்தானாம் தேதி திருச்சி ரேடியோவில் மாலை 6.5 மணிக்கு கிராம சமுதாயம் நிகழ்ச்சியில்' பேசுகிறான் என்று. அந்த வயதில் ரேடியோவில் பேசுவது என்பது இன்று டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வது போன்றது. நான் ஒரு மூண்று முறை ரேடியோவில் பேசியிருப்பேன்.

திருச்சி வானொலி நிலையம் எப்போதும் ஒரு பிரமிப்பைத் தரும்.  குண்டுசி கீழே விழுந்தால் கூட கேட்கும் துள்ளியமான பிரத்யேகமான அறைகள், வித்தியாசமான மைக்குகள், நிகழ்ச்சி பதிவு அறைகளில் ஓட்டை ஓட்டையாய் அட்டைகள் பொறுத்தப்பட்ட சவுண்ட் புருஃப் சுவர்கள் என்று வானொலி நிலையமே ஒரு மாய விஞ்ஞான உலகம் போன்று காட்சி அளிக்கும். ரவுண்டு மேஜையில் நடுவே மைக் பொருத்தியிருப்பார்கள். சுற்றி அமர்ந்துக் கொண்டு இயல்பாக பேச வேண்டும். பேச்சை பதிவு செய்யும் போது ஒன் டூ திரி சொல்லி கையை உயர்த்துவார்கள். பேச ஆரம்பிப்பதற்குள் எங்களது இதயம் உச்சபச்ச வேகத்தில் அடித்துக் கொள்ளும்!. அந்த வயதில் அதெல்லாம் ஒரு மிரட்சியான தருணங்கள்!.

பேசி முடித்தப்பின் திருச்சி சென்ட்ரல் பஸ்டாண்டு பக்கத்தில் இருக்கும் நல்லதொரு ஹோட்டலில் சுவையான மதியம் உணவு சார் வாங்கிக் கொடுத்துவிடுவார். சில நேரங்களில் சோனா மீனா தியேட்டரில் படம் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். மாசிலாமணி சார் பத்திரமாய் அழைத்துக் கொண்டு போய் அழைத்துவந்துவிடுவார். தனது குழந்தைகள் போன்றே எங்களை கவனித்துக் கொள்வார்.

()()()

இப்படித்தான் ஒரு டிராமாவில் எனக்கு வேலைக்காரன் வேடம். அதுவும் முட்டாள் வேலைக்காரன் வேடம், எது சொன்னாலும் ஏறுக்கு மாறுதான். வீட்டு முதலாளி கடிகாரத்திற்கு சாவி கொடுடா என்றால் சாவியை கடிகாரத்திற்கு முன்னால் நீட்டி "இந்தா கடிகாரம்..... சாவியை வாங்கிக்க...." என்று கெஞ்சுவதும், வீட்டு ஹாலில் சேரை போடுடா என்று வீட்டும்மா சொல்ல.... வீடு முழுவதும் சேற்றை தெளிப்பதுமாக எனது அட்ராசிட்டி தொடரும். இந்த டிராமா ரிகர்சலில் மாசிலாமணி சார் என் மேல் உட்கார்ந்து அமுக்குவது போல் நடித்துக் காட்டினார் அப்போது அவரது பேண்ட் கிழிந்துவிட்டது. வாத்தியார் பேண்ட் கிழிஞ்சுட்டுதுடான்னு பசங்களுக்கு அப்படி ஒரு சிரிப்பு!.

பத்தாம் வகுப்பில் நான் கோட் அடிக்க.... பின்னர் எப்படியோ பாஸ் செய்து, பதினோராம் வகுப்பு குத்தாலம் அரசு மேல் நிலைப்பள்ளியில் சேர்ந்திட்டேன். பத்தாவதில் கிடைத்த பாடம் என்னை பன்னிரண்டாவதில் பெயிலாகாமல் பாஸ் செய்ய வைத்தது. அதற்குப் பிறகான தொடர்புகள் குத்தாலம் மாயவரம் பக்கமே அமைய ஆடுதுறை பக்கம் செல்வது முற்றிலும் தடைபட்டுவிட்டது. ஆனால் மாசிலாமணி சாரை பார்க்க வேண்டும், என்ற எண்ணம் மட்டும் மனதில் ஒரு ஓரத்தில் இருந்துக் கொண்டே இருந்தது.

எப்படியோ அவரை பார்த்துவிட்டேன். இப்போதும் சார் சும்மா இருக்கவில்லை. ஒரு ஆர்கஸ்ட்ரா வைத்துக் கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அனைத்து விதமான வாத்தியக் கருவிகளை வைத்து 'நாத சங்கமம்' நடத்தி அப்ளாஸ் அள்ளுகிறார். கோயில் திருப்பணிகளையும் செய்து வருகிறார். பணி ஓய்வு பெற்றுவிட்டாலும், தனக்கான ஆர்வங்களுக்கு அவர் ஓய்வு கொடுக்கவில்லை. அவரது பூஜை அறைக்கு அழைத்துக்கொண்டு போய் திருநீறு இட்டு ஆசிர்வதித்தார். ஆளுயுர சாமிப் படங்கள் ஒரு கோயில் கருவரையில் இருந்த அமைதியை தந்தன.

நடக்க நடக்க பாதை விரியும், பாதை விரிய... விரிய.... பயணம் தொடரும் என்பார்கள். நமக்கான ராஜபாட்டைகளை ஆசிரியர்களே முதலில் அமைக்கின்றனர். அமைத்ததோடு மட்டுமல்லாமல் கைப் பிடித்து நடக்கவும் கற்றுத் தருகின்றனர். வழியில் நிழல் தரும் தரு போன்று, வளரும் தளிர்களை தழைக்கச் செய்கின்றனர். நாம் கடந்துவிடுகிறோம். அவர்கள் அங்கேயே நின்று நிலைத்து விடுகின்றனர்.
நமது நெஞ்சங்களிலும்!.

-தோழன் மபா.

செவ்வாய், மார்ச் 22, 2016

கள்ளப்படகில் வந்த இளைஞரை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை



                    ள்ளப்படகில் வந்த இளைஞரை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகரக் காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு புதன்கிழமை இரவு வந்த இலங்கை வவுனியா காந்திகுளத்தைச் சேர்ந்த த.மோகன்தாஸ் (22), வேலை கேட்டு மனு கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தார்.

பாஸ்போர்ட், விசா ஆகியன தன்னிடம் இல்லை என தெரிவித்த அவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் வேப்பேரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

விசாரணையில் அவர் கள்ளப்படகு மூலம் ராமேசுவரம் வந்து, அங்கிருந்து சென்னை வந்திருப்பதும் தெரியவந்தது. 

இதில், பாஸ்போர்ட், விசா இல்லாமல் தமிழகத்துக்குள் நுழைந்தது தவிர மோகன்தாஸ் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்போ, குற்றச்செயலில் ஈடுபடும் எண்ணமோ அவரிடம் இல்லை என போலீஸார் இலங்கை துணை தூதரகத்திடம் அறிக்கை அளித்துள்ளது.

இதையடுத்து, மோகன்தாஸ் மீதான சட்டரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்து, இலங்கை அனுப்புவதற்கு முயற்சிகளை இலங்கை துணை தூதரகமும், சென்னை காவல்துறையும் மேற்கொண்டுவருகின்றன.

இதற்காக அவருக்கு தாற்காலிகமாக பாஸ்போர்ட் வழங்குதற்கு இலங்கை துணை தூதரகம் சம்மதித்துள்ளது என்றும் ஒரிரு நாள்களில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட இருப்பதால் அவர் வேப்பேரி காவல் நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

வெள்ளி, மார்ச் 18, 2016

இலங்கையிலிருந்து புறப்பட்ட இளைஞன் இப்போது புழல் ஜெயிலில்.





த.மோகன் தாஸ் (வயது 22)இலங்கை வவுனியா காந்தி குளம்

             புதிய விடியலை நோக்கி இலங்கையிலிருந்து புறப்பட்ட இளைஞன் ஒருவன் இப்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறான். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வவுனியா காந்தி குளத்தைச் சேர்ந்த த.மோகன் தாஸ் (வயது 22) என்ற இளைஞர் ரூ.40 ஆயிரம் கொடுத்து கள்ளத் தோனி மூலம் இராமேஸ்வரம் வந்திருக்கிறார். தனது தந்தை இறந்துவிட்ட நிலையில், தனக்கான் புதிய வாழ்வை இந்தியாவில் தொடங்க அந்த அப்பாவி இளைஞன் வந்திருக்கிறான். சிலநாள்கள் சுற்றித் திரிந்த பின் மதுரைக்கு வந்து, சிம்கார்டு வாங்கி தனது குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார்.
பணம் முழுமையாகச் செலவானதால் சென்னைக்கு முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணச்சீட்டு இன்றி வந்து, பல்வேறு நிறுவனங்கள், கடைகளில் வேலை கேட்டு யாரும் அளிக்காததால் சாலையோரத்தில் தங்கியதாகவும், காவல் ஆணையர் அலுவலகத்தில் முறையிட்டால் வேலை கிடைக்கும் என சிலர் கூறவே சென்னை வேப்பரியில் உள்ள கமிஷனர் அலுவகத்திற்கு வந்திருக்கிறார்.
இலங்கை தமிழரான தனக்கு வேலை வாங்கித் தருமாறு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை கேட்டபோது, அந்த இளைஞர் தன்னிடம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். அவரைப் பிடித்து வேப்பேரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து க்யூ பிரிவு போலீஸார் விசாரணை நடந்தி , அவருக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என க்யூ பிரிவு போலீஸார் விசாரித்தனர். எவ்வித ஆவணமும் இன்றி கள்ளப்படகில் வந்ததாக மோகன்தாûஸ கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டார்.
()()()()()
"சிங்களர்கள் ஆக்கிரமிப்பால் பறிபோன வாழ்வாதாரம்'
தமிழகம் வந்ததற்கான காரணம் குறித்து போலீஸாரிடம் மோகன்தாஸ் கூறியதாவது:-
போருக்கு பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சிங்களர்களை குடியமர்த்தி வருகின்றனர். இதற்காக தமிழர்களின் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. தமிழர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் சிக்கியுள்ளனர். வெளிநாடு செல்ல முறையாக கடவுச்சீட்டு, விசா பெறுவது இயலாத காரியம். ஆகவே, சிலரிடம் கடன் பெற்று கள்ளப்படகில் தமிழகம் வந்தேன். இங்கு கடவுச்சீட்டு, விசா பெற்று மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன்.
வேலை கிடைக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபோது, சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள அகதிகள் மறுவாழ்வு ஆணையரகத்துக்கு செல்லும்படியும் சிலர் கூறினர். ஆனால், தவறாக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தபோது, சிக்கினேன் என்றார்.
பால் மணம் மாறாத அந்த முகத்தை பார்க்கும் போது, மனம் பதபதைக்கிறது. இந்த சிறு வயதில் நாடு விட்டு நாடு வந்து இப்படி சிறையில் மாட்டிக் கொண்ட அந்த இளைஞனுக்கு என்ன உதவி செய்வது என்று தெரியவில்லை. அவனது வாழ்க்கை எப்படி மாறும் என்றும் புரியவில்லை?. அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று மனம் அடித்துக் கொள்கிறது. எப்படி என்றுதான் புலப்படவில்லை.
பொழுது விடியட்டும் என்று காத்திருக்கிறேன்.
18/03/2016.

புதன், மார்ச் 16, 2016

யோனியில் உறைந்திருக்கும் சாதி?.





                ந்த கொடூர கொலையை வாட்ஸ்ப்பில் பார்க்கும் போது மனம் பதபதைக்கிறது. மனித நிலை கடந்த மிருக நிலையில் வீசும் அரிவாள், சதைகளை பிளந்து அந்த இளம் ஜோடியின் வாழ்க்கையை வெட்டி வீழ்த்துகிறது.
கொலையாளிகளின் வெறி கூச்சல், கணவனின் மரண ஓலம், சுற்றி ஆயிரம் பேர் இருந்தும் உதவிக்கு வராத மனிதர்கள் என்று உயிரற்ற கணவனின் உடலின் அருகில் அவள் சிலைபோல் நிற்கிறாள். இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அன் நிகழ்வு அவளிடமிருந்து அகலுமா...?. அதை நினைக்கும் போதெல்லாம் செத்து செத்து பிழைப்பாளே அந்த அப்பாவி பெண். அவளுக்கு இ(அ)ந்த சமூகம் என்ன செய்துவிட போகிறது?.

காதலிப்பது குற்றம் என்றால் இந்த உலகத்தில் எல்லோருமே குற்றவாளிகள்தான். மகள் காதலிப்பது பிடிக்கவில்லையா...?. ஊர் பொது பஞ்சாயத்தில் வைத்து பேசி முடிவெடுங்கள். இல்லை இரு குடும்ப பெரியவர்கள் பேசி முடிவெடுங்கள். இரு தரப்பும் காவல் துறை முன்னணியில் பேசி பிரச்சனைக்கு தீர்வு காணலாம். சம்மந்தப்பட்டவர்கள் தங்களது ஆசை மகனோ/மகளோ என்கின்ற போது இத்தகைய அணுகுமுறைகள் நிச்சயம் உயிர் பலிகளை தடுக்கும்.

"இதெல்லாம் நடக்கிற காரியமா...?" என்று நீங்கள் கேட்கலாம்?. முன்னேறிய நாகரிக சாதி என்றால் இதைக் கேட்கும், முட்டாப் பய சாதி என்றால், சாதிக்காக முண்டா தட்டும்.
கற்பனையில் இருக்கும் 'சாதி' என்ற பீ பெருமைக்காக மண் தின்னும் இந்த மடையர்களை எப்படி நல்வழிப் படுத்துவது?.

கொலைக்கு பின்னர் கோர்ட்டு கேஸு என்று அலையும், அந்த கொலைகாரக் குடும்பத்தை, சொந்த சாதியினரே வெறுத்தொதுக்குவார்கள் என்பது நாம் அறியாத உண்மை.

சங்கர்-கவுசல்யா திருமண கோலத்தில்


காதல் போய், காதல் கணவன் உயிர் போய், மகள் காலம் முழுவதும் கண்ணீர் சிந்துவதற்கு, கொளரவம் பார்க்காமல் பேசி முடிவெடுப்பது நல்லதுதானே....?. அதைவிடுத்து காதல் பிரச்சனைக்கு காதலனை அல்லது காதலியை கொல்வது ஒன்றுதான் தீர்வு என்று நினைப்பது எத்தனை கொடூரம்?.



மகளின் காதலை அழித்து, அவளின் காதலனை கொடூரமாய் கொன்று, குடும்பமே கொலை பழி சுமந்து, வாழ்க்கை முழுவதும் துயரம் தரித்து... அப்படி என்ன வாழ்க்கையை....., அந்த பெண்ணுக்கு அந்த பெற்றோர்கள் தந்துவிடப் போகிறார்கள்?

புதன், மார்ச் 02, 2016

குவைத்தில் மாபெரும் வீடு மற்றும் வீட்டு மனை கண்காட்சி!.


  


       ந்திய பத்திரிகை உலகில் முன்னணி நாளிதழான தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்/தினமணி மற்றும் எல்ஐசி ஹவுசிங் நிதி நிறுவனம்  இணைந்து நடத்தும் சர்வதேச ரியல் எஸ்டேட் கண்காட்சி குவைத்தில் நடைபெறுகிறது.  இவ்வீட்டு மனை கண்காட்சியை VGN டெவலெப்பர்ஸ் நிறுவனம் இணைந்து வழங்குகிறது.

இம் மாதம் (மார்ச்) வரும் 4 & 5ம் தேதிகளில் குவைத் சால்மியாவில் ஹோட்டல் ஹாலிடே இன், ஹல்தானா அரங்கில்  இக் கண்காட்சி நடைபெறுகிறது. ( ‘India Realty Show’ in Hotel Holiday Inn, Salmiya Kuwait on 4th & 5th of March ’16) இதில் முப்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளில்  நூற்றுக்கும் மேற்பட்ட புராஜெட்கள் காட்சிப் படுத்தப்படுகின்றன. இக் கண்காட்சியில் தமிழ் நாடு, கேரளா, ஹைதராபாத், பெங்களூர் முதற்கொண்டு, இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்  கலந்துக் கொள்கின்றன.

இந்தியாவின் பிரதான நகரங்களில்,  மக்கள் எளிதில் வாங்கக் கூடிய விலையில் வீட்டு மனை, அடுக்கு மாடி குடியிருப்புகள், தனி வீடுகள் (வில்லாக்கள்) வாங்கக் கூடிய வாய்ப்பினை இக் கண்காட்சி வழங்குகிறது.

இக் கண்காட்சியில் உடனடி வீட்டுக் கடன் வசதியையும் எல்ஐசி ஹவுசிங் நிதி நிறுவனம் வழங்கிறது.  குவைத் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு  ஒரு அரிய வாய்ப்பு .

அன்போடு அழைக்கிறோம், அனைவரும் வருக!.

செவ்வாய், ஜனவரி 12, 2016

நாளை தொடங்குகிறது சென்னை பொங்கல் புத்தகக் திருவிழா!,


         ந்த முறையாவது பொங்கலுக்கு ஊருக்கு செல்ல வேண்டும் என்று நிறைய பதிப்பகத்தார் நினைத்துக் கொண்டு இருந்தனர். இந்த பொங்கலுக்கும் அந்த கொடுப்பினை கிடைக்காமல் போய்விட்டது. 

வழக்கமாக பொங்கலை முன்னிட்டு ஜனவரியில் நடத்தப்படும் சென்னை புத்தகக் காட்சி (பபாசி) இந்த வருடம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பால் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிபோய்விட்டது. வெள்ளத்தால் தி நகரில் உள்ள பெரும்பான்மையான பதிப்பகங்கள் பாதிப்படைந்துள்ளன. அதனால் சென்னை புத்தகக் காட்சியை ஏப்ரலுக்கு தள்ளி வைத்துவிட்டது பபாசி. 

இன்னிலையில் நாளை தொடங்குகிறது 'சென்னை பொங்கல் புத்தகக் திருவிழா'. சென்னை நகரின் மையத்தில் ராயபேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை தொடங்கி வரும் ஜனவரி 24ம் தேதி வரை இப் புத்தக் காட்சி நடைபெறுகிறது.  தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த புத்தகக் காட்சியில் 250க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெருகின்றன. துவக்க விழா நாளை மாலை 6 மணிக்கு நடைபெருகிறது.

கடந்த 38 வருடங்களாக பொங்கலை முன்னிட்டு சென்னை புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. இதனால் பெரும்பான்மையான பதிப்பகத்தார் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்லமுடிவதில்லை.   இந்த வருடமாவது பொங்கலை ஊரில் மனுச மக்களோடு கொண்டாடலாம் என்று நினைத்திருந்தவர்கள் எல்லாம்,  கண்ணை துடைத்துக் கொண்டு  புத்தகத்தை அடுக்கத் தொடங்கிவிட்டனர். 

அடுத்த இரண்டு வாரங்கள் சென்னை ராயப்பட்டை விழா கோலம் பூண போகிறது.  ரொம்ப வருஷத்திற்கு பிறகு சென்னை மவுண்ட் ரோடு பக்கம் சென்னை புத்தகக் காட்சி நடைபெறுவது குறிபிடத்தக்கது. 









ஞாயிறு, ஜனவரி 10, 2016

தமிழில் 'இனிஷியல்' ஆசிரியர்களுக்கு உத்திரவு!.



 

   சத்தமில்லாமல் ஒரு நல்ல காரியத்தை செய்திருக்கிறது தமிழக பள்ளி கல்வித் துறை. இதுகாறும் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடியிருக்கிறது. தமிழில் நமது பெயரை எழுதும் போது, நமது இனிஷியலை ஆங்கிலத்தில் எழுதுவோம் இத் தவறு பன்னெடுங்காலமாகவே தமிழகத்தில் நடந்து வருகிறது. இதை தொடங்கி வைத்தவர்கள் பள்ளிகல்வி தொடக்க  ஆசிரியர்கள்தான். அவர்கள் அன்று செய்த தவறு இன்றும் பல தலைமுறை தாண்டி, தவறு என்று தெரியாமலேயே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  தமிழ ஆர்வலர்கள் இது தொடர்பாக பல முறை குரல் கொடுத்தும் தற்போதுதான் தமிழக கல்வி துறை தனது தவறை சரி செய்துள்ளது. 

சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசாணைகள், உத்திரவுகள் அனைத்தும் தமிழிலேயே வெளியிட வேண்டும் என, தமிழக அரசு  உத்திரவிட்டது. அதேபோல், கல்வி அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை தமிழில் கையெழுத்து போட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகல்வித்  துறையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தமிழில் கையெழுத்து போடுகின்றனர்; ஆனால் தமிழில் பெயரை எழுதும் போது, ஆங்கிலத்தில் தங்களது இன்னிஷியலை எழுதுகின்றனர். 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை  சேர்ந்த குணமால் என்பவர் பள்ளி கல்வி முதன்மைச் செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதை பரிசீலித்த செயலகம் அனைத்து ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தமிழில் கையெழுத்து போடவும், இனிஷியலாக இருந்தாலும் அதையும் தமிழில் எழுதவும் உத்திரவிட்டுள்ளது.  இது தொடர்பான சுற்றறிக்கையை, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளார். 

இனி இத் தவறு நடக்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!. 

இது தொடர்பாக நான் எழுதிய கட்டுரை 07/01.2013 ல் தினமணியில் வெளிவந்துள்ளது. 

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...