திங்கள், ஜூலை 03, 2017

விபத்து தரும் பாடம் - தோழன் மபா


தினமணியில் வந்த கட்டுரை

By தோழன் மபா  |   Published  in Dinamani on : 29th June 2017 01:46 AM  |

   புனித ரமலான் மாதத்தில் பெரும் தேசிய சோகத்தை சந்தித்திருக்கிறது பாகிஸ்தான். கடந்த ஞாயிற்றுக் கிழமை பெட்ரோல் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து, வெடித்துச் சிதறியதில் ஏறத்தாழ 153 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அது வெறும் சாலை விபத்தாக மட்டும் இருந்திருந்தால், இத்தகைய உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது. அதையும் தாண்டி மனித மனதின் இலவச அல்ப ஆசை ஒரு மாபெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணம் லாகூர் நகரை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றுக் கொண்டு இருந்த பெட்ரோல் லாரி விடியற்காலை 6.30 மணிக்கு டயர் வெடித்ததன் காரணமாக நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.

லாகூருக்கு 400 கீ.மீ. தொலைவிலுள்ள பஹவல்பூர் மாவட்டம், அகமதுபூர் ஷார்கியா பகுதியில் நேரிட்ட இந்த விபத்தில், லாரியிலிருந்த பெட்ரோல் வெளியேறி கிட்டத்தட்ட 25 ஆயிரம் (5500 கேலன்ஸ்) லிட்டர் சாலையின் அருகில் இருந்த வயல்களில் ஆறாக ஓடியது.


கோர விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி
சுற்றி வளைத்த தீ










சுவடுகள்
அருகில் இருந்த கிராம மக்கள் இதைக் கேள்விப்பட்டதும் பெரும் திறளாக, கைகளில் கேன்களுடனும் பெரிய பெரிய டின்களுடனும் வந்து ஆறாக ஓடிய பெட்ரோலை கேன்களில் பிடித்து நிரப்பிக் கொண்டனர்.
இந்த விபத்தைப் பற்றியும் பெட்ரோல் ஆறாக ஓடுவதும் பற்றியும் அருகிலிருந்த மசூதியின் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தகவலும் எச்சரிக்கையும் விடப்பட்டது. மக்கள் பெரும் கூட்டமாக பைக்குகளிலும் வண்டிகளிலும் வந்து பெட்ரோலை பிடிக்க ஆரம்பித்தனர்.

அப்போது பெட்ரோல் லாரி திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த யாரோ ஒருவர் புகைப்பிடிப்பதற்காக தீ குச்சியைப் பற்ற வைத்ததில், காற்றில் ஆவியாக பரவி இருந்த பெட்ரோல் தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த பகுதியில் காற்றில் பரவி இருந்த பெட்ரோல் தீ பற்றி ஒரு நெருப்புக் கோளம் போல் ஆகிவிட்டது.

உடனே ஆவியாகக் கூடிய பெட்ரோல் தனது அடர்த்தியின் காரணமாக காற்றில் அப்படியே பரவி இருக்கும். இத்தகைய விபத்துகளில் கசிந்து ஓடும் பெட்ரோல் அவ்வளவு எளிதில் கரைந்துவிடாது.

இந்த சம்பவத்தில் 25 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் என்பதால் அடர்த்தியும் எளிதில் தீப்பற்றக் கூடிய தன்மையும் அதிகம். அதனால் ஒரு சிறு தீப் பொறி கூட பெரும் சேதத்தை விளைவித்துவிடும். அதுவே நிகழ்ந்திருக்கிறது.
பெட்ரோலை சேகரித்துக் கொண்டு இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தீயில் எரிந்து கரிக்கட்டையாக மாறிவிட்டனர். 130 பேர் 80 சதவீதம் தீக்காயத்தால் முல்தானில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தில் பலர் இந்த விபத்தில் மாண்டிருக்கின்றனர். அங்கிருந்த லாரி, பைக், கார் என்று நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாயின. 

எப்போதும் துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு என்று நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு இது ஆறாத ரணம்.

சுல்கா பீபீ என்பவர் தனது இரண்டு மகன்களை தேடிக் கொண்டு இருக்கிறார். உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கரிக்கட்டையாகக் கிடக்கும் மனித உடல்களில் தனது மகன்களை தேடிக் கொண்டு இருக்கிறார். உடல்களை அடையாளம் காண மரபணு சோதனைக்கு உத்தரவு இட்டிருக்கிறது பஞ்சாப் மாகாண அரசு.
புனித ரமலான் மாதத்தின் கடைசி நாளான ஈதுல் பித்தர் அன்று இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சவூதி அரேபியா போன்ற நாடுகள் ஞாயிற்றுக்கிழமையே ரமலான் பண்டிகையை கொண்டாடிவிட, பாகிஸ்தான் மட்டும் திங்கள்கிழமை கொண்டாட இருந்தது. அதற்குள் இப்படிப்பட்ட துயரம் நிகழ்ந்துவிட்டது.

மக்களின் ஆசையே, மாபெரும் துயரத்தையும், மனித இழப்பையும் கொண்டு வந்திருக்கிறது. பெட்ரோல் இலவசமாக பெறுவதற்காக தங்களது உன்னதமான உயிரை இழந்திருக்கின்றனர். எத்தகைய கொடூரம் இது?
காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து செயலாற்றியிருந்திருந்தால், இத்தகைய உயிரிழுப்பு ஏற்பட்டு இருந்திருக்காது. விபத்து நடந்த சாலையில் போக்குவரத்தை தடை செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் போக்குவரத்தை அனுமதித்திருந்தனர். அதோடு மக்களை விபத்து நடந்த இடம் அருகில் வரவிடாமல் செய்திருக்க வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் செய்திருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாததால், மக்கள் அதிக அளவில் வந்துவிட்டனர்.

போலீஸாரின் அலட்சியத்தால்தான் இப்படிப்பட்ட பெரும் விபத்துகள் நடக்கின்றன. எததெற்கோ கடுமைக் காட்டும் காவல் துறை, இத்தகைய ஆபத்தான விஷயங்களில் மெத்தனமாக இருப்பது வேதனை அளிக்கிறது. அந்த மெத்தனமே மக்களை விபத்து நடந்த இடத்திற்கு அருகில் வரச் செய்திருக்கிறது.

போலீஸாரை குறை சொல்லும் அதே நேரத்தில், மக்களையும் நாம் கண்டிக்க வேண்டும். கசிந்து ஓடுவது பெட்ரோல் என்று தெரிந்தும், இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக பேரல்களை எடுத்துக் கொண்டு வந்தவர்களை என்னவென்று சொல்வது?

நமது நாட்டிலும் இலவச வேட்டி, சேலை வழங்கும்போதும், கோயில்களில் அன்னதானம் வழங்கும்போதும் ஏற்படும் கூட்ட
நெரிசல்களில் பலர் உயிரை இழந்திருக்கின்றனர்.

ஒரு பக்கம் அரசு தரும் இலவசங்களால் மக்கள் சோம்பேறிகளாக மாறிக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் இப்படியான இலவச மனோபாவங்களால் தங்களது விலை மதிக்கமுடியாத உயிரை இழப்பது வேதனையிலும் வேதனை.

இத்தகைய விபத்துகளில் நமக்கான படிப்பினையும் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

-நன்றி தினமணி

செவ்வாய், மார்ச் 21, 2017

மறுதாம்பு புத்தகம் பேசுது விமர்சனம்





    னிப்பும், கசப்பும் கொண்ட வாழ்வில் பொய்மையும் ஒரு சுவையென்று அறியும் தருணத்தில் வாழ்விற்கான நீட்சியை இனங்காண்கிறார் தோழன் மபா. வாழ்க்கையை விரிவாக்கம் செய்து ஓலை அனுப்பியிருந்த கடவுள், மனிதர்கள் ‘மால்’களின் மின் தூக்கிகளில் கடைவாயில் அதக்கிய பீட்ஸாவுடன் வார இறுதிப் பொழுதுகளில் கடன் அட்டைகளைக் கையில் ஏந்தி களமாடும் போக்கைக் கோபத்துடன் கவனித்திருக்கிறான். எருக்கஞ்செடி மண்டி, ஏர் உழாமல் பாலையாகி விட்ட நிலங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது கடவுளின் கேள்வி; (ப.103). ‘வந்தேறிகள் சூழ் உலகு’ என்ற இன்றைய உலகை ஆள்வோர் யாரென இனங் காட்டுகிறார்.

கண்ணியமிக்க கனவான்களே உலகம் முழுவதும் நிறைந்து இருப்பதையும், குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து பிஞ்சுக் கைகளில் இரத்தத்தைப் பூசுவதற்கும், உலகளாவிய விதத்தில் போர்களைத் திணிப்பதற்கும் அவர்கள் திட்டமிடுவதையும் அம்பலப்படுத்துகிறார். செம்பரம்பாக்கம் ஏரிக்கரை உடைத்துப் பெருகி சென்னை மாநகரை மூழ்கடித்த ஊழிப் பெருவெள்ளம் வடிந்தபின் நகரெங்கும் பூத்திருந்த பாலித்தீன் (நச்சுப்) பூக்களைக் காட்சிப்படுத்துகிறது ஒரு கவிதை. ‘கட்டிங் கேட்ட கடவுள்’, ‘ஆதி நிலத்து தேவதை’ ‘அது மாத்திரம்‘ கவிதைகளில் சாதியத்தின் மீது சவுக்கடி வீசுகிறார் தோழன் மபா.  


”தோழன் மபாவின் கவிதைகள் நாம் அறியாத சந்து பொந்துகளுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன” என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். ‘மேய்ச்சல் நிலம்‘, வளமான வண்டல்மண் படிவுகள் நிரம்பியதுதான் என நிறுவுகிற படைப்பு. நேரடியாகவும், வெடிப்புறவும் பேசுகிற வரிகள். ‘மறுதாம்பு’கள் மீண்டும் மீண்டும் துளிர்க்கும் என்பதில் ஐயமில்லை. எழிலார்ந்த அட்டையும், ‘மண்குதிரை’ச் சின்னமும் பொருத்தமானவை.

சனி, ஜனவரி 21, 2017

மறுதாம்பு கவிதை நூல் வெளியீடு

சமகால பிரச்னைகளை கவிதைகள் பிரதிபலிக்க வேண்டும்: 

கவிக்கோ அப்துல் ரகுமான்.

 
மறுதாம்பு வெளியீட்டின் போது ... 
இடமிருந்து கவிஞர் வேல் கண்ணன்,   நூல் ஆசிரியர் தோழன் மபா, ஊடகவியலாளர் நாச்சியாள் சுகந்தி, தோழன் மபா வின் தந்தை பத்மநாபன், கவிக்கோ அப்துல் ரகுமான், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், கல்கி வார இதழ் தலைமை துணை ஆசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா. 

      மகால பிரச்னைகளை பிரதிபலிப்பதாக கவிதைகள் இருக்க வேண்டும் என கவிக்கோ அப்துல் ரகுமான் வலியுறுத்தினார்.


கவிஞர் தோழன் மபா எழுதிய "மறுதாம்பு' கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை (02/01/2017) நடைபெற்றது. விழாவுக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்து நூலை வெளியிட, கவிக்கோ அப்துல் ரகுமான் பெற்றுக் கொண்டார்.



பின்னர் விழாவில் கவிஞர் அப்துல் ரகுமான் பேசியது: இந்தக் காலத்தில் சமுதாயத்தில் நடக்கும் அவலம், உண்மைகளைப் பேச யாரும் தயாராக இல்லை என்ற ஆதங்கம் பலரிடையே இருக்கிறது. எது உண்மை என்று தெரியாத நிலையிலேயே பலர் இருக்கிறார்கள். இது பற்றிப் பேசுகையில் "பெரியவங்க பொய் சொன்னா பேப்பரில போடுறான். சின்னவங்க உண்மை சொன்னா ஜெயிலுக்குள்ள போடுறான்' என்று கொத்தமங்கலம் சுப்பு எழுதிய வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.


தான் எழுதிய நூலுக்கு "மறுதாம்பூ' என்ற அற்புதமான பெயரை வைத்த தோழன் மபா தனது மனைவி, தந்தை ஆகியோரையும் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்து கௌரவித்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில், இதுபோன்ற நிகழ்வுகள் இன்று அரிதாகி வருகின்றன. மபா எழுதிய கவிதைகள் எதுவுமே மனைவியை வைத்துக் கொண்டு சொல்வதற்கு தயங்கும் கவிதைகள் இல்லை. ஒரு படைப்பு அப்படித்தான் இருக்க வேண்டும்.


சமுதாய நோக்கம் அவசியம்: கவிதைகளில் நவீனத்துவம் எப்போதோ வந்து விட்டது. சிலர் அறியாமையின் காரணமாக "வசனத்தை ஒடித்துப் போட்டால் புதுக்கவிதை' என்கிறார்கள். அது தவறு. "ஒடித்துப் போடப்பட்ட மனிதர்களைப் பற்றி எழுதுவதுதான் புதுக்கவிதை'. பொதுவாக கவிதைகளில் தற்போதைய பிரச்னைகளைப் பற்றி சொல்வது அவசியம். சமகாலப் பிரச்னைகளை பிரதிபலிக்கும் கவிதைகள்தான் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.


வீழாதததற்கு விருது வழங்க வேண்டும்: புயலில் கீழே விழுந்து கிடக்கும் மரங்களைப் பார்க்கும்போது எனக்கு அழ வேண்டும்போல் தோன்றியது. அதனால் இந்த விழாவுக்கு வருவதற்கு முன்பு "வெறித்தனமாக வீசிய புயலோடு வீராவேசமாக போராடி நின்று கொண்டிருக்கும் மரங்களுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும்' என்று ஒரு கவிதையை எழுதிவிட்டுத்தான் வந்தேன். இன்றைய சூழலில் தென்றலைக் காட்டிலும் புயலைப் பற்றிக் கூறுவதே சரியாக இருக்கும். சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தாத கருத்துகள் இல்லாவிட்டால் கவிதை எழுத வேண்டிய அவசியமே இல்லை.
அந்தக் காலத்தில் தீபாவளி மலரில் மட்டும்தான் கவிதைகள் வெளியாகும். இப்போது கவிதைகள் வெளியாகாத செய்தித்தாள்களே இல்லை. கவிஞர்கள் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதட்டும். அவற்றில் ஒரு கவிதையாவது சமூகத்துக்குப் பயன்பட்டாலே போதுமானது. அன்றாடம் நிகழும் வீட்டுப் பிரச்னைகள், சமூக அவலங்கள் குறித்து ஒருவர் எழுதினால் அவரையும் அவர் கவிதையையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அதுதான் நாம் எழுத்துக்கு கொடுக்கும் மிகப்பெரிய கௌரவம் என்றார் அவர்.


முன்னதாக கல்கி வார இதழ் தலைமை உதவி ஆசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா, கவிஞர் நாச்சியாள் சுகந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அப்போது மறுதாம்பு கவிதை நூலில் இடம்பெற்றுள்ள சமுதாய சிந்தனைகள் கொண்ட கவிதைகளை மேற்கோள் காட்டி விளக்கினர்.


விழாவில் ரஹமத் பதிப்பக உரிமையாளர் முஸ்தபா, கவிஞர் வேல்கண்ணன், மபாவின் தந்தை கே.பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் 

 தினமணி ஆசிரியர் கி.வைத்திய நாதன் உரை:

https://www.youtube.com/watch?v=fbs4ToqQARo

கல்கி வார இதழ் துணை ஆசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா உரை:

 https://www.youtube.com/watch?v=CYBLRKvnd-8&t=21s

கவிஞர் சுகந்தி நாச்சியாள் உரை

https://www.youtube.com/watch?v=ZeHCHHKlIdY 

மனைவியிடம் எதையும் மறைக்ககூடாது - கவிக்கோ அப்துல் ரகுமான் நகைச்சுவை பேச்சு | Kaviko Abdul Rahman

https://www.youtube.com/watch?v=3lgUvNoTZCc


வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...