வெள்ளி, ஜூலை 31, 2015

போதும் சாவு செய்தி?



டந்த சில நாட்களாகவே இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சாவு செய்தி தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர்தான் இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன் காலமானர். தமிழக சினிமா ரசிகர்களின் ஒட்டு மொத்த இதயத்தையும் கொள்ளைக் கொண்ட அவரை சில நாட்களுக்கு முன்னர்தான் பெஸண்ட் நகர் மயானத்தில் எரித்துவிட்டு வந்தோம்.

அது முடிந்த அடுத்த கையோடு...இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காலமானார். நாட்டையே உலுக்கிய அந்த திடீர் மரணம், இந்தியாவை துக்க வீடாக மாற்றியது. பிரதமர் முதல் சாமானியன் வரை, குடிசை வீடு முதல் மாளிகை வரை தெருவுக்கு தெரு துக்கம் அனுஷ்டித்தனர். மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், முப்படை தளபதிகள் என்று இந்தியாவின் அதிகார வர்க்கமே இராமேஸ்வரத்தில் சங்கமித்தது.    அவரை அடக்கம் செய்வதற்கு, முந்தைய இரவு, ஒரு உயிர் நாக்பூர் சிறையில் ஊசலாடிக் கொண்டு இருந்தது.

மும்பை குண்டு வெடிப்பிற்காக சரணடைந்த யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் வியாழன் விடியற்காலை தூக்கில் போடப்பட்டார்.    'விடிய விடிய விசாரணை விடிந்தப்பின் பிரேத பரிசோதனை' என்ற உயர்ந்தபட்ச கொள்கையின் அடிப்படையில் மிக மிக துரிதமாக செயல்பட்டு தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருக்கிறது மஹாராஷ்டிரா பாஜக அரசு. அரசு இயந்திரத்தை நினைத்தால் அதிர்ச்சியும் வேதனையுமே எழுகிறது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த செய்தி: . மதுக்கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் திடீரென இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதையடுத்து மதுவுக்கு எதிரான பேராட்டக்குழுவை அமைத்தனர். அவர்களுக்கு ஆதரவாக 200 அடி செல் போன் கோபரத்தில் ஏறி 4 மணி நேரமாக போராட்டம் நடத்திய சசி பெருமாள் திடிரென்று ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துவிட்டார். சசி பெருமால் உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் டாஸ்மாக் எதிரான போராட்டம் மேலும் வலுவடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

பிறந்தவர்கள் இறக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி என்றாலும், இப்படி தொடர் சாவு என்பது மனிதனை அழக் கூட முடியாதவனாக்கிவிடுகிறது. அன்பும் கருனையும் கொண்ட உலகத்தில்தான் யாம் ஜீவிக்கவே விரும்புகிறோம். போதும்.... "இத்தகைய நிகழ்வுகளை நிறுத்து" என்று யாரிடம் விண்ணப்பம் வைப்பது....
இறைவா....!.
 

புதன், ஜூலை 29, 2015

'அணையா விளக்கு - அப்துல் கலாம்'




நதி போகும் கூழாங்கள்
பயணம் தடையமில்லை
வலிதாங்கும் சுமைதாங்கி
மண்ணில் பாரமில்லை
ஒவ்வொரு அலையின் பின்
இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே.....

மனதை வருடும் வீடியோ பதிவு.....

காலத்தை வென்ற கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி!. 

 





புதன், ஜூலை 22, 2015

சன் டிவியை கை மாற்றத் துடிக்கும் பாஜக அரசு?

               ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பார்கள், ஊடக குரல்வளையை நெரிப்பது  என்றால் ஆளும் கட்சிகளுக்கு எப்போதும் அல்வா சாப்பிடுவது போல்தான். அதுவும் தனக்கு எதிரான ஊடகம் என்றால் கேட்கவே வேண்டாம், அதை ஒழித்துக் கட்டிவிட்டுதான் மறு வேலை பார்ப்பார்கள். இதில் காங்கிரஸும் ஒன்றுதான் பாரதிய ஜனதாவும் ஒன்றுதான். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பில் ஏறியதுமே சன் டிவி மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  நமது எதிர்பார்ப்பின்படியே சன் குழுமத்தின் மீது தனது கோர பார்வையை திருப்பியுள்ளது பாஜக அரசு.

சன் டிவியின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஊடகங்கள் மீதான ஆளும் பாஜக அரசின் மறுபக்கத்தை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. சன் தொலைகாட்சிக்கு செக்யூரிட்டி கிளியரன்ஸ் கொடுக்கும் விஷயத்தில் மத்திய உள் துறையும், தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறையும் மறுத்துள்ளது. இது ஊடகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன் டிவி வருகைக்கு முன்னர், சன் டிவி வருகைக்கு பின்னர்  (சமு சபி) என்று தமிழக தொலைகாட்சி வரலாற்றை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். சன் டிவியின் வருகைக்கும் முன்னர், அரசு தொலைகாட்சியான தூர்தர்ஷன் வைத்ததுதான் சட்டம். மத்திய அரசின் விருப்பத்திற்கு இனங்க செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் தயாரித்து வந்தனர். ஆளும் கட்சியின் குரலாகவே தூர்தர்ஷன் செயல்படும். ஒளியும் ஒலியும் வயலும் வாழ்வும் என்று நிகழ்ச்சி தயாரித்து மக்களை பதம் பார்த்துவந்த தூர்தர்ஷனின் சக்தி (?) எப்படிப்பட்டது என்று இன்றைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஞாயிறுகளின் மதியத்தில் ராஜேஷ் கண்ணாவும் டிம்பிள் கபாடியாவும் 'கியா பியா' என்று ஹிந்தியில் ஆடி பாடி நடித்ததை நம் மக்கள் ஒன்றும் புரியாமல் கை தட்டி ரசித்துக் கொண்டு இருந்தனர். சினிமா பாடல்கள் பார்க்க வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை 'சித்திரகார்' வரை காத்திருக்க வேண்டும்.

அதுவும் நாடகம் என்று ஒன்று போடுவார்கள், பார்க்கவேண்டுமே....?!. காத்தாடி ராமமூர்த்தி வகையறா டிராமாவை மொத்த குத்தகை எடுத்ததுபோல், சென்னை தூர்தர்ஷனில் வீட்டு தயாரிப்பு டிராமாக்களே ஆக்கிரமித்து இருக்கும். செட்டுக்குள்ளேயே மொத்த  நாடகத்தையும்  நடத்தி காட்டிவிடுவார்கள். வந்த விமர்சனத்தை படிப்பதற்கென்று ஒரு நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியை திட்டி கழுவி கழுவி ஊத்தியதை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு, பாராட்டி எழுதிய கடிதத்தை மட்டுமே இரெண்டு பேர் மெனக்கெட்டு படிப்பார்கள். இந்தக் கன்றாவியெல்லாம் இந்த தலைமுறை பார்க்காமல் போனது அவர்களது அதிஷ்டம். நமது துரதிஷ்டம்.

சன் டிவியின் வருகைக்கு பின்னர்தான் இந்திய தொலைகாட்சி வரலாற்றில் ஒரு மாற்றம் ஏற்பட்டது எனலாம். கலாநிதி மாறன் தொடக்கத்தில் தனது நண்பர்களுடன் 'தமிழ் மாலை' என்ற வீடியோ பத்திரிகையை நடத்திவந்தார். வாரம் தோறும் புதிய புதிய நிகழ்ச்சிகளை தயாரித்து அதை கேஸட்டில் பதிவு செய்து ஒரு வீடியோ மேகஸினாக நடத்திவந்தார். ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சிகள்  மாற்றப்பட்டு வெளிவரும். இந்த வீடியோ கேசட்டுகளே வார இதழ்கள் போல் விற்கப்படும். முந்தின வார காஸட்டை பெற்றுக் கொண்டு புதிய காஸட்டை தருவார்கள். அப்போதெல்லாம் தூர்தர்ஷன் டிவி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருந்தது. அதனாலயே கலாநிதி மாறனின்  வீடியோ மேகஸினுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வாரம் தோறும் புதிய புதிய நிகழ்ச்சிகளையும் உலக நிகழ்ச்சிகளையும் தயாரித்து வெளியீட்டு வந்தார். அதுவே பின்னர் தனியாக தொலைக் காட்சி தொடங்கும் எண்ணத்தை தோற்றுவித்தது எனலாம்.

எப்படி செட்டுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை பாரதிராஜா அவுட்டோருக்கு கொண்டுவந்தாரோ.....அப்படி ஸ்டூடியோவிற்குள் முடங்கிக் கிடந்த டிவி நாடகங்களை வெளியுலத்திற்கு கொண்டுவந்தது சன் டிவிதான். இதன் மூலம் 'சின்னத்திரை' என்ற உலகமே தோன்றியது. இதனால் நிறைய நடிகர் நடிகைகள் வாழ்வு பெற்றனர். பொருளாதார ரீதியாக சின்னத்திரை நடிகர்களை உயத்தியது சன் டிவி. மக்களின் பொழுது போக்கு ரசனையிலும் மாற்றம் ஏற்பட்டது.

()()()

பொதுவாக இந்திய அளவில் ஒரு நிறுவனம் பிரபலமாக இருக்க வேண்டும் என்றால் அது வட இந்தியாவை சேர்ந்த நிறுவனமாகத்தான் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி.  டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ், பஜாஜ் என்று வட நாட்டு கம்பெனிகளின் பெயரை சொல்லித்தான் நாம் வளர்க்கப்பட்டு இருக்கிறோம். இதில் தமிழகத்திலிருந்து ஒரு நிறுவனம் இந்திய அளவில் பெயர் எடுப்பதிலோ....அல்லது தென் இந்தியாவை  தனது ஊடக கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையோ வட நாட்டு அரசியல்வாதிகளும் தொழில் அதிபர்களும் விடுவார்களா என்ன....?. அந்த நெருக்கடிதான் இப்போது மத்திய அரசு மூலம் சன் குழுமத்திற்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

ஏதோ.... அரசியல் பின் புலம் இருந்ததால் சன் டிவி இத்தனை நாள் தப்பித்து வந்திருக்கிறது. அரசியல் பின்புலம் மட்டும் இல்லையென்றால் இன்னேரம் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.

சன் டிவி அதிபர்கள் மீது வழக்குகள் இருக்கிறது என்பதற்காக அந்த குழுமத்தின் டிவி சேனல்களுக்கு வழங்கப்பட்ட செக்கியூரிட்டி கிளியரன்சை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்ய முயற்சிப்பது அபத்தமான செயலாகும். தனிப்பட்டவர் மீது இருக்கும் வழக்குகளை அவர் சார்ந்த நிறுவனத்தின் மீது திணிப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை?. சன் டிவியை கை மாற்ற வேண்டும் என்பதற்காகவே அரசு தரப்பில் பல் வேறு நெருக்கடிகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. பாஜக அரசுக்கு சகலவிதத்திலும் படியளக்கும் இந்தியாவின் ஆகச்சிறந்த மிகப் பெரிய நிறுவனம் சன் டிவியை விலை பேசுவதாக தகவல் கசிகிறது. .

அரசின் மற்றுமொரு நெருக்கடியாக சன் கூட்டுக் குழுமத்தின் 45 RED FM வானொலிகளுக்கு பாதுகாப்பு அனுமதி புதுப்பிப்பதற்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தற்போது எப்எம் ரேடியோ ஏலத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட விவகாரமும் சேர்ந்துள்ளது. மத்திய உள்துறையின் இந்த நடவடிக்கைக்கு அட்டர்னி ஜெனரல் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும் சன் குழுமத்திற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி மற்றும் எப்எம் இரண்டும் சன் குழுமத்தின் அங்கம் என்றாலும் அனுமதி மறுப்பு விஷயத்தை பொறுத்தவரை மத்திய உள்துறை தனித்தனியாகவே மேற்கொண்டுள்ளது.  இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள்  வேலை பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

சன் தொலைகாட்சி மற்றும் எப்எம் ரேடியோக்களால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டு மத்திய அரசு பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்கிறது.

()()()

தமிழகத்தில் எத்தனையோ தொலைக்காட்சிகள் இருந்தாலும் சன் டிவி மட்டுமே முதன்மையான தொலைக்காட்சியாக இன்றும் திகழ்கிறது.  கிராமத்தில் கேபிள் டிவி கனெக்சன் கொடுப்பதை கூட,  மக்கள் சன் டிவி கனெக்சன் குடுங்கள் என்றுதான் கூறுவார்கள். அந்த அளவிற்கு சன் டிவியின் தாக்கம் கடை கோடி கிராமம் வரை பரவியிருக்கிறது. கிராமத்து வெள்ளாந்தி மக்களுக்கு டிவின்னா அது சன் டிவிதான்!. கிராமம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சன் டிவி ஒளிபரப்பாகிவருகிறது.

சன் டிவியை புறக்கணித்துவிட்டு எந்த ஒரு பொருளும் தமிழகத்தில் சந்தைப்படுத்த முடியாது என்பது விளம்பர உலகம் கண்ட  உண்மை. ஒரு விளம்பர பட்ஜெட்டில் முக்கால்வாசி பட்ஜெட்டையும் சன் டிவி இழுத்துக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. ஆனால் அதன் உலகம் தழுவிய வெற்றியே அபரிமிதமான கோடிகளை கரன்ஸியாக கொட்டச் செய்கிறது. இதுவே பிரச்சனைகளையும் இழுத்து வருகிறது. சன் டிவியின் ஆதிக்கத்தாலேயே வட இந்திய தொலைக்காட்சி ஜாம்பவான்களால் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திற்குள் நுழைய முடிவதில்லை.  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று நான்கு  திராவிட மொழிகளில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகிறது சன் குழுமம். 25 வருடங்களுக்கு மேலாக தென் இந்தியாவில் 33 சேனல்களுடன் கோலோச்சி வரும் சன் டிவி, இந்தியாவின் முதல் தனியார் தொலைக்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

சன் டிவியை தமிழகத்தில் இருட்டடிப்பு செய்யும்பட்சத்தில் வரும் தேர்தலில் அதிமுகவுக்கு அது சாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது.   இதனால் ஜெயலலிதா மீது பாஜக காட்டி வரும் நெருக்கம், உள்துறை மீது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவோடு கூட்டணி அமைத்தால் தமிழகத்தில் பாஜகவை கால் ஊன்றச் செய்யலாம் என்று பாஜக தலைமை கணக்கு போடுகிறது. அதன் விளைவே சன் டிவியை கை மாற்றத் துடிக்கிறது பாஜக அரசு.  சன் டிவி நிறுவனர்கள் மீது வழக்கு இருக்கிறது என்பதற்காக அவர்கள் நடத்தும் சேனல்களால்  நாட்டுக்கு எந்த வகையில் ஆபத்து இருக்கிறது என்பதை ஆளும் பாஜக அரசு விளக்கத் தவறிவிட்டது.
 
அரசியல் பின்புலத்திலிருந்து சன் டிவி தோன்றினாலும், அரசியல் மாட்சரியங்களை கடந்து தமிழகத்தின் பொதுவான டிவி என்ற பெயரை அது என்றோ பெற்றுவிட்டது. மக்கள் மன்றத்தில் சன் டிவிதான் தமிழகத்தின் டிவி என்பதையும் அது நிலை நிறுத்தியுள்ளது. வீட்டிற்கு வந்ததும்  இரவு ஏழரை மணிக்கு சன் டிவியில் தவறாமல் செய்தி பார்க்கும் குடும்பத் தலைவர்களே அதிகம் என்பது நிதர்சனமான ஒன்று. உண்மை இப்படி இருக்க... சன் குழுமத்தை முடக்குவது என்ற முடிவு பாஜக அரசுக்கு பெரும் பின்னடவைத்தான் ஏற்படுத்தும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் பேராதரவை பெற்றிருக்கும் சன் டிவி மீதான அடக்குமுறையை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை ஆளூம் பாஜக அரசு உணர்ந்துக் கொள்ளவேண்டும். இத்தகைய அதிகாரதுஷ்பிரயோகங்கள் ஆளும் கட்சிக்கு என்றும் ஆபத்தைத்தான் ஏற்படுத்தி இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனி!.
தோழன் மபா.
சென்னை.

வியாழன், ஜூலை 16, 2015

தினமணியின் 'ஈகை பெருநாள் சிறப்பு மலர்'.



இந்த வருடம் ரமலானை முன்னிட்டு "ஈகை பெருநாள் மலரை வெளியீட்டு அசத்தி இருக்கிறது தினமணி நாளிதழ்.

பொதுவாக தீபாவளி பொங்கலுக்குதான் சிறப்பு மலர் வெளிவரும். ரமலான் மற்றும் கிருஸ்துமஸ் சிறப்பு மலர் எப்போதாவது அத்தி பூத்தாற்போல்தான் வெளிவரும். பத்திரிகைகளும் அதில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் விட்டுவிடும்.

அதுவும் ஈகை பெருநாள் மலரென்றால் மார்க்கம் சார்ந்த கட்டுரைகளே அதிகம் இடம் பெற்று இருக்கும். மாற்று மதத்தினரும் விரும்பி படிக்கும் அளவிற்கு ஜனரஞ்சகமாக இல்லாமல் போய்விடுவது இத்தகைய மலர்களின் பொதுத்தன்மை. ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனித்துவமிக்க ஒரு ஈகை பெருநாள் சிறப்பு மலரை வெளியீட்டு பெருமை தேடிக் கொண்டுள்ளது தினமணி நாளிதழ்.

இத்தகைய பெருநாள் மலர்களை கலாச்சாரத்தின் காலத்தே பதிவாகத்தான் நாம் பார்க்கவேண்டும். பத்திரிகைகளே இப் பணியை செய்ய முடியும். அதை செய்திருக்கிறது தினமணி!. இம் மலருக்கென்று தனி வழிகாட்டுதல் குழு அமைத்து இம் மலரை தயாரித்துள்ளனர். மதம் சார்ந்த சென்ஸிட்டிவ் விஷயங்களை கையாலும் போது தனி கவனம் எடுத்துக் கொள்ளுவது எப்போதுமே நன்மைத்தரும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரையே முதன்மை கட்டுரையாக இம் மலரில் இடம்பெற்றிருக்கிறது. அதோடு உலக வரலாற்றில் முதலிடத்தில் முஹம்மது நபி, தமிழகத்தில் இஸ்லாமியர்கள், நபிவழியில் வெற்றி நிச்சயம், பேரா முனைவர் எம்.எச்,ஜவாஹிருல்லா எழுதிய விடுதலை போரின் முன்னோடிகள் முஸ்லீம் மார்க்க அறிஞர்கள், டாக்டர் கே.வி.,எஸ்,ஹபீப் முஹம்மத் எழுதிய சமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள், நோன்பு ஒரு கேடயம், பள்ளிவாசலும் தொழுகையின் அற்புதமும், கவனம் தரும் லைலத்துல் கத்ர் இரவு, யார் பயங்கரவாதிகள்?, பழ.கருப்பையா எழுதிய அழகியவற்றுளெல்லாம் அழகியது, முனைவர்  ஆர்.ராதிகா தேவி எழுதிய 'பெண்களுக்கான மார்க்கம் இஸ்லாம்', முனைவர் சொ.சேதுபதி எழுதிய பாரதியார் பேசிய இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை, பக்கீர்கள் என்னும் இஸ்லாமியப் பாணர்கள் போன்ற கட்டுரைகளோடு இன்னும் பல கட்டுரைகள் இம் மலரில் இடம்பெற்றுள்ளன.

தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய 'ஆழம் தெரியாக் கடல்', ஜே.எம் சாலி எழுதிய 'சம்மதம்', சிராஜூல் ஹசன் எழுதிய 'முத்தலாக்', எஸ்.பர்வீன் பானு எழுதிய 'முதல் பாடம்', மு.அ அபுல் அமீன் எழுதிய 'ஈமானில் சீமான்' போன்ற முத்தான சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 'முனைவர் ஜெ.ஹாஜாகனி 'புரட்டிப் பாருங்கள் உங்களை புரட்டிவிடும்' என்ற மூன்று பக்க கவிதையை எழுதியிருக்கிறார்.

தமிழகத்தில் பிரபலமான 8 தர்காக்கள் பற்றிய கட்டுரைகள் இம் மலரில் இடம்பெற்றுள்ளன. தர்காக்கள் பற்றிய விமர்சனங்களை இக் கட்டுரைகள் தவிடுபொடியாக்கியிருக்கின்றன.

மலரெங்கும் மார்க்க துணுக்குகள் விரவிக் கிடக்கின்றன. வழுவழுத் தாளில் மாற்று மதத்தினரும் விரும்பி படிக்கும் வகையில் இம் மலரை தயாரித்துள்ளனர். இச் சிறப்பு மலர் பாரதியாரின் கவிதையை அட்டையில் தாங்கி வெளிவந்திருப்பது சிறப்பு!.

பக்கம் 160
விலை ரூ.50/-

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...