வியாழன், டிசம்பர் 25, 2014

பாரதிராஜாவை மறக்கலாமா......?!

 
 எழுத்தாளர் சுரா
 
 
தமிழ் திரைப்பட உலகை தங்களுடைய அபார திறமையால் வளர்த்த இயக்குநர்களைப் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.அப்போது என் மனதில் திரும்ப திரும்ப வலம் வந்தவர் பாரதிராஜா.

தான் இயக்கிய படங்களின் மூலம் தமிழ் படவுலகிற்கு பாரதிராஜா எவ்வளவு புகழையும்,பெருமையையும் சேர்த்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது,எனக்கு அவர் மீது அளவற்ற மரியாதை உண்டாகிறது.

என் மனம் பின்னோக்கி பயணிக்கிறது.

     1977 ஆம் ஆண்டு...அப்போது நான் என் பட்டப் படிப்பை முடித்திருக்கிறேன்.அந்தச் சமயத்தில்தான் பாரதிராஜா இயக்கிய முதல் படமான 'பதினாறு வயதினிலே' திரைக்கு வருகிறது.கமல்,ஸ்ரீதேவி இணைந்து நடித்த அப்படத்தில் வில்லனாக நடித்தவர் ரஜினி.படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு.இசையமைத்தவர் இளையராஜா.சப்பாணியாக கமல் நடித்திருந்தார்.பரட்டையாக ரஜினி.மயிலாக ஸ்றீதேவி.படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.எங்கு பார்த்தாலும் அந்தப் படத்தைப் பற்றித்தான் எல்லோரும் பேசினார்கள்.பத்திரிகைகள் அப்படத்தை தலையில் வைத்துக் கொண்டாடின.'யார் இந்த பாரதிராஜா?எங்கிருந்து இப்படியொரு திறமைசாலி படவுலகிற்கு வந்தார்?'என்று ஆச்சரியப்பட்டு எழுதின.இவற்றையெல்லாம் படித்து விட்டு, நான் படம் பார்க்கச் சென்றேன்.உண்மையிலேயே நான் வியப்பின் எல்லைக்கே சென்று விட்டேன்.இதுவரை தமிழில் பார்த்திராத ஒரு புது வகை சினிமா ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.உண்மையான கிராமத்தை படத்தில் பார்த்தேன்.இளையராஜா படத்தில் ஆட்சி புரிந்திருந்தார்.பாடல்கள் அத்தனையும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.நிவாஸ் ஒளிப்பதிவில் தன் திறமை அத்தனையும் வெளிப்படுத்தியிருந்தார்.நடிகர்களும்,நடிகைகளும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தார்கள்.மிகச் சிறப்பாக திரைக்கதை அமைத்து புதுமையான பாணியில் படத்தை இயக்கியிருந்தார் பாரதிராஜா.படம் பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் உள்ளங்களிலும் பாரதிராஜா நிறைந்து நின்றிருந்தார்.என் உள்ளத்திலும்தான்.தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலை வீச ஆரம்பித்து விட்டது,ஒரு புதிய அத்தியாயம் பிறந்து விட்டது என்பதை நான் புரிந்து கொண்டேன்.தலையை நிமிர்த்தி திரையரங்கை விட்டு வெளியே வந்தேன்.'பதினாறு வயதினிலே'திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் சிறப்பாக ஓடி சாதனை புரிந்தது.25 வாரங்கள் ஓடி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய படம் 'கிழக்கே போகும் ரயில்'.சுதாகர் என்ற புதிய கதாநாயகனும்,ராதிகா என்ற புதிய கதாநாயகியும் அறிமுகம்.முற்றிலும் ஒரு புதிய பாணியில் படத்தை இயக்கியிருந்தார் பாரதிராஜா.அவர் நினைத்திருந்தால்,கமல் அல்லது ரஜினியை வைத்தே தன் அடுத்த படத்தையும் இயக்கியிருக்கலாம்.அப்படிச் செய்யாமல் தன்னுடைய திறமையை முழுமையாக நம்பி,புதுமுகங்களை வைத்து படத்தை இயக்கிய பாரதிராஜாவை எனக்கு மிகவும் பிடித்தது.இளையராஜா கோவில்மணி ஓசைதனை,மாஞ்சோலை கிளிதானோ,பூவரசம்பூ பூத்தாச்சு ஆகிய பாடல்களின் மூலம் அந்த படத்தை எங்கோ கொண்டு சென்றிருந்தார்.நிவாஸ் ஒளிப்பதிவில் முத்திரை பதித்திருந்தார்.கிராமத்தில் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி கதாநாயகனை முதல் தடவையாக நான் தியேட்டரில் பார்த்தேன்.அவன் சென்னைக்கு புறப்பட்டு வந்து வாழ்க்கையில் முன்னுக்கு வரப் போவதை,அந்த கிராமத்தின் வழியே வரும் புகை வண்டியின் பின் புறத்தில் 'நம் வாழ்க்கையில் வசந்தம் பிறந்தது' என்று எழுதி அனுப்புவான்.அதைப் பார்த்து பரஞ்சோதியின் காதலியான பாஞ்சாலி 'பூவரசம்பூ பூத்தாச்சு'என்று குதூகலித்து பாட்டு பாடுவாள்!என்ன உயர்ந்த கற்பனை!மதுரை கல்பனா திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த என் மனமும் ராதிகாவுடன் சேர்ந்து துள்ளி குதித்தது.அவருடன் சேர்ந்து நானும் ஆனந்த நடனம் ஆடினேன்.அதில் இருந்த 'பட்டாளத்தான்' கதாபாத்திரம் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்தது.

கிராமத்து மனிதர்களின் முகத்தில் கரியைப் பூசி விட்டு,கிழக்கே போகும் ரயிலில் ஏறி தப்பித்துச் செல்லும் அந்த இளம் காதல் ஜோடிகளை படம் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை உள்ளங்களும் வாழ்த்தின.காதலர்களை வாழ வைத்த பாரதிராஜாவையும்.

அந்தப் படம் சென்னை தேவி காம்ப்ளெக்ஸில் 50 வாரங்கள் ஓடி சாதனை புரிந்தது.
கிராமிய பாணி படங்கள் மட்டும்தானா,தன்னால் நகரத்து பின்னணியில் ஆங்கில படங்களுக்கு நிகராக தமிழ் படத்தை இயக்கவும் தெரியும் என்பதை பாரதிராஜா 'சிகப்பு ரோஜாக்கள்'படத்தை இயக்கியதன் மூலம் நிரூபித்தார்.இளையராஜா பாடல்களிலும்,பின்னணி இசையிலும் அபார சாதனை புரிந்திருந்தார்.பாரதிராஜாவிற்கு இன்னொரு வெற்றிப் படம்!
அடுத்து பாரதிராஜா இயக்கிய படம் 'புதிய வார்ப்புகள்'.கதாநாயனாக பாக்யராஜ் அறிமுகம்.கதாநாயகியாக 'லக்ஸ்'சோப் விளம்பரப் படங்களில் நடித்த ரத்தி அக்னிஹோத்ரி.ஒரு கவித்துவமான கிராமத்து காதல் கதை.கவுண்டமணி சுய உணர்வற்ற நிலையில் இருக்கும் ரத்தியின் கழுத்தில் தாலியைக் கட்டி விடுவார்.'உனக்கு இது தாலியாக இருக்கலாம்.எனக்கு இது சாதாரண கயிறு'என்று கூறி,ரத்தி அதைக் கழற்றி வீசி எறிவார்.அதற்கு முன்பு இப்படியொரு புதுமைக் காட்சியை நாம் எந்த தமிழ் படத்திலும் பார்த்தது இல்லையே!ரத்தி தாலியைக் கழற்றி விட்டெறிந்தபோது,மொத்த தியேட்டரும் கைத்தட்டி ஆரவாரித்தது.பாரதிராஜாவிற்கு எவ்வளவு பெரிய வெற்றி!இளையராஜாவின் இசையில் 'இதயம் போகுதே' ஒலித்தபோது,பாக்யராஜுடன் சேர்ந்து மக்களும் பேருந்தில் பயணித்தனர்.அந்த காதலர்களுக்காக கண்ணீர் விட்டனர்.இதுதான் உண்மை.பாரதிராஜாவிற்கு இன்னொரு வெற்றி மகுடம்!

பாரதிராஜா அடுத்து இயக்கிய படம் 'நிறம் மாறாத பூக்கள்'.அதுவும் ஒரு வெற்றிப் படமே! தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்கள்!யாரும் புரியாத சாதனை... பாரதிராஜாவின் அடுத்த படம் 'கல்லுக்குள் ஈரம்'.இயக்கம் என்று ஒளிப்பதிவாளர் நிவாஸின் பெயர் வரும்.டைரக்ஷன் மேற்பார்வை என்று பாரதிராஜாவின் பெயர் வரும்.யாரும் இதற்கு முன்பு தமிழ் படங்களில் தொடாத கதைக் கரு.ஒரு கிராமத்திற்கு படப்பிடிப்பிற்கு வரும் படப்பிடிப்பு குழு,அதைத் தொடர்ந்து அங்கு உண்டாகும் சில நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்...இதுதான் அப்படத்தின் கதை.அருணா,விஜயசாந்தி என்ற இரு புதுமுக நடிகைகள் அதில் அறிமுகம்.மாறுபட்ட கதை.எனினும்,வர்த்தக ரீதியாக படம் வெற்றி பெறவில்லை.பாரதிராஜாவின் கலையுலக பயணத்தில் அவருக்கு கிடைத்த முதல் தோல்வி அது!

1980ல் பாரதிராஜா இயக்கிய படம் 'நிழல்கள்'.பாரதிராஜாவிற்கும் நிவாஸுக்கும் கருத்து வேறுபாடு உண்டாகி இருவரும் பிரிய பி.கண்ணன் ஒளிப்பதிவாளராக நுழைந்தார்.வைரமுத்து பாடல் எழுதிய முதல் படம்.வேலையில்லா திண்டாட்டத்தை வைத்து எடுக்கப்பட்ட கதை.ராஜசேகர்,ரவி,சந்திரசேகர்,சுவிதா,ரோகிணி-புதுமுகங்கள் என்று தோன்றாத அளவிற்கு பாத்திரங்களுக்கு உயிர தந்திருந்தனர்.இளையராஜாவின் இசையமைப்பில் இது ஒரு பொன்மாலைப் பொழுது.பூங்கதவே தாழ் திறவாய் ஆகிய பாடல்கள் தெருவெங்கும் முழங்கின.அனைத்தும் இருந்தும்,ஏதோ ஒன்று இல்லை.விளைவு-வர்த்தக ரீதியாக படம் தோல்வி.பாரதிராஜாவிற்குக் கிடைத்த இரண்டாவது தோல்வி.
அடுத்து பாரதிராஜா இயக்கிய படம் 'அலைகள் ஓய்வதில்லை'.கார்த்திக் கதாநாயகனாகவும், ராதா கதாநாயகியாகவும் அறிமுகமானார்கள்.தியாகராஜனும்,கமலா காமேஷும்.ஒரு முற்போக்கான காதல் கதை.ஒரு பிராமண இளைஞனுக்கும்,ஒரு கிறிஸ்தவ மீனவ பெண்ணுக்கிடையே மலரும் காதலை கவித்துவமாக வெளிப்படுத்தியிருந்தார் பாரதிராஜா.இளையராஜா இசை சாம்ராஜ்யமே நடத்தியிருந்தார்.அவரின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர்தான் படத்தின் தயாரிப்பாளர்.படம் சூப்பர் ஹிட்! 25 வாரங்கள் ஓடி சாதனை புரிந்தது.அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.வெற்றி விழாவில் கலந்து கொண்டு கேடயங்களை வழங்கினார்.படத்தின் உச்சக்கட்ட காட்சியையும்,பாரதிராஜாவையும் அவர் மனம் திறந்து பாராட்டினார்.

கமல்ஹாசன்,ராதா,மாதவி,ஸ்வப்னா ஆகியோரை வைத்து பாரதிராஜா இயக்கிய க்ரைம் கதை 'டிக்...டிக்...டிக்'.கமல் சட்டையை ஸ்வப்னா மாட்டிக் கொள்ள,ஸ்வப்னாவின் ஆடையை அணிந்து கமல் இருக்க.கீழே போலீஸ் வேன் வர..அந்த ஒரு காட்சி போதும் பாரதிராஜாவின் திறமையைப் பறை சாற்றுவதற்கு!அடுத்து பாரதிராஜா இயக்கிய அருமையான படம் 'மண் வாசனை'.பாண்டியன் கதாநாயகனாகவும்,ரேவதி கதாநாயகியாகவும் அறிமுகமானார்கள்.உண்மையிலேயே மண் வாசனை நிறைந்த படம்தான்.இளையராஜாவின் அற்புதமான இசை!வைரமுத்துவின் வைர வரிகள்!ரேவதியின் அருமையான நடிப்பு!பாரதிராஜாவின் திறமை வாய்ந்த இயக்கம்!அனைத்தும் சேர்ந்து படத்தை வெற்றிப் படமாக ஆக்கின.அடுத்து ஏவிஎம்மின் 'புதுமைப் பெண்'.மீண்டும் பாண்டியன்-ரேவதி ஜோடி.இளையராஜாவின் இசை,வைரமுத்துவின் பாடல்கள்,பாரதிராஜாவின் சிறந்த இயக்கம் படத்தை வெற்றிப் படமாக ஆக்கின.தமிழக அரசு அந்தப் படத்திற்கு வரி விலக்கு அளித்தது.

'சங்கராபரணம்' ஓடி எங்கு பார்த்தாலும் அப்படத்தின் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்த நேரம்.அதேபோல கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் தந்து ஒரு படத்தை இயக்கினால் என்ன என்று நினைத்த பாரதிராஜா இயக்கிய படம் 'காதல் ஓவியம்'.இளையராஜா இசையமைத்த அருமையான பாடல்களைக் கொண்ட படமது.கண்ணன் என்ற புதிய கதாநாயகன் அதில் அறிமுகம்.கதாநாயகி ராதா.இசையில் தோய்ந்த கதாநாயகனுக்கு பார்வை சக்தி இல்லை.அதற்காக காதல் வராமல் இருக்குமா?பாடல் காட்சிகளில் திரையரங்கில் கூச்சல்...குழப்பம்...விஷில்!ஏன்?பாரதிராஜாவிற்கே புரியவில்லை.கூச்சல் போடப்பட்ட பாடல் காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டன.ப.டம் தோல்வி!

அந்த தோல்வியால் உண்டான கோபத்தில் பாரதிராஜா இயக்கிய படம்தான் 'வாலிபமே வா வா'.ஆண் தன்மையற்ற கதாநாயகனைப் பற்றிய கதை.கதாநாயகன் கார்த்திக்.படம் பரவாயில்லாமல் ஓடியது.ஆனல்,'இந்தப் படத்தை பாரதிராஜா இயக்க வேண்டுமா?' என்ற விமர்சனம் எழுந்தது.

கே.பாக்யராஜ் கதை எழுத,பாரதிராஜா இயக்கிய படம் 'ஒரு கைதியின் டைரி'.கமல் ஹீரோ.அருமையான திரைக்கதை.விறுவிறுப்பான காட்சிகள்.கமல்,ரேவதி ஆகியோரின் அருமையான நடிப்பு படத்திற்கு சிறப்பு சேர்த்தது.ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற படமது.

ரஜினி நடித்து,பாரதிராஜா இயக்கிய 'கொடி பறக்குது' வெற்றி பெறவில்லை.
நடிப்பு மாமேதை சிவாஜி கணேசனை வைத்து பாரதிராஜா இயக்கிய 'முதல் மரியாதை' காலமெல்லாம் பாரதிராஜாவின் பெயரைக் கூறிக் கொண்டேயிருக்கும்.'பூங்காற்று திரும்புமா?' பாடலைக் கேட்கும்போதெல்லாம் சிவாஜி,பாரதிராஜா,இளையராஜா,வைரமுத்து அனைவரும் நம் நினைவில் வந்து கொண்டே இருப்பார்கள்.

பாரதிராஜாவின் குறிப்பிடத்தக்க படம் 'கடலோரக் கவிதைகள்'அவரின் துணிச்சலான முயற்சி.'வேதம் புதிது'.'வா ராசா வா'என்று சரிதா சிறுவனை வீட்டிற்குள் அழைக்கும் காட்சி மனதிலேயே நிற்கிறது.

'புது நெல்லு புது நாத்து'-பாரதிராஜா இயக்கிய இன்னொரு நல்ல படம்.'வர்ற லட்சுமியை யாருடா தடுத்து நிறுத்த முடியும்?நான் எப்பவும் நல்லதுதான் சொல்லுவேன்.நல்லதுதான் செய்வேன்.இந்த ஜனங்கதான் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க' என்ற நெப்போலியனையும்,கதாநாயகன் ராகுல் தோளில் போட்டு தூக்கிக் கொண்டு போகும்போது,அவரின் முதுகை விரல்களால் வருடும் சுகன்யாவையும் எப்படி மறக்க முடியும்?

பாரதிராஜாவை புகழ் குன்றின் உச்சியில் சிம்மாசனம் போட்டு உட்கார வைத்த படம் 'கிழக்குச் சீமையிலே'.விஜயகுமார்,ராதிகா,நெப்போலியன் மூவரும் கதாபாத்திரங்களாகவே அதில் வாழ்ந்திருந்தார்கள்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த தென் கிழக்குச் சீமையிலே,மானூத்து மந்தையிலே,ஆத்தங்கரை மரமே ஆகிய பாடல்கள் இப்போதும் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றனவே!

வித்தியாசமான கதை என்று இயக்கிய 'என் உயிர் தோழன்'..தேசிய விருதுகள் பெற்ற 'கருத்தம்மா'...'அந்தி மந்தாரை'...'கடல் பூக்கள்'...மாறுபட்ட முயற்சியான 'கேப்டன் மகள்'...சிவாஜி நடித்த 'பசும்பொன்'..ஏ.ஆர்.ரஹ்மானின் இனிய பாடல்களைக் கொண்ட 'தாஜ்மஹால்'...ஆங்கிலேயர் காலத்து காதல் கதையான 'நாடோடித் தென்றல்'...எதிர் பார்த்த வெற்றியைப் பெறாமல் போன 'அன்னக்கொடி'...விஜயகாந்த் நடித்த 'தமிழ்செல்வன் ஐ.ஏ.எஸ்...நல்ல முயற்சியான 'கண்களால் கைது செய்'....அருமையான படமான 'பொம்மலாட்டம்'...இப்படி பாரதிராஜாவின் சாதனைகளையும்,பெருமைகளையும் கூறிக் கொண்டே போகலாம்.

இன்றைக்கு யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்,யாரும் படத்தை இயக்கலாம்,யார் வேண்டுமானாலும் படம் தயாரிக்கலாம் என்ற சூழ்நிலை உண்டாகி,கூட்டம் கூட்டமாக ஆட்கள் வெளியூர்களிலிருந்து தினமும் படவுலகைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால்...அவர்கள் பாரதிராஜாவிற்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.அவர்தான் கோட்டைகளைத் தகர்த்தெறிந்து இந்த அருமையான சூழ்நிலையை உண்டாக்கிய மாமனிதர்.அவர் போட்ட பாதையில்தான் இன்று எல்லோரும் சந்தோஷமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.பாதை போட்டவரை மறக்கலாமா?
 
(எழுத்தாளர் சுரா  தனது முக நூலில் எழுதிய கட்டுரை! )

ஞாயிறு, டிசம்பர் 07, 2014

பிரிதலின் பொருட்டு ஒரு பை.....பை.....!


           அது ஒன்றும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. கிட்டதட்ட 7 வருடங்களுக்கு மேலாக இணை பிரியாமல் இருந்துவிட்டு, விட்டுவிலகுவது என்பது வலி நிறைந்ததாகத்தான் இருக்கிறது!.

தேவைக்கு பயன்படுத்திவிட்டு தேவை முடிந்த பின் தூக்கி எறிவது என்பது, மனிதனின் அடிப்படை கசடுகளில் ஒன்றாகிவிட்ட பிறகு, நான் மட்டும் எப்படி அதிலிருந்து தப்ப முடியும்?. பிரிதலின் அவசியம் உணர்ந்தே அந்த முடிவு எடுக்கப்பட்டது. விட்டு விலகிய அந்த நொடிகளில் துளிர்த்த கண்ணீருக்கு பதில் சொல்ல முடியாமல் திரும்பி பார்க்காமல் நடக்கத் தொடங்கினேன்.    

சில விஷயங்கள் நம் கையில் இல்லை என்பதால், அதிலிருந்து விலகி இருக்க ரொம்ப மெனக்கட வேண்டியிருக்கிறது. தொடர்பை துண்டித்து விட்டுவிட்ட பிறகும்......அது என்னை பார்ப்பது(?) போன்ற ஒரு பிரேமை எனக்குள் ஏற்பட்டது.

நடக்க...நடக்க...பாதை நீண்டு கொண்டே இருந்தது. இன்னேரம் எனது பைக் இருந்திருந்தால், இரண்டு சிக்னல் கடந்து இருப்பேன். பைக்கை எக்ஸ்ச்சேஞ்சில் விட்டுவிட்டு வந்த பிறகும், அதன் உருவம் என்னினைவிலிருந்து எக்ஸ்சேஞ்சாகாமல் தங்கியே இருக்கிறது. அவ்வளவு எளிதாக எனது பைக்கை எக்ஸ்சேஞ்சில் விட்டு வர மனமில்லை.

உயிரற்ற வாகனம் என்றாலும், அது தனது சுய நினைவுடனே என்னை இந்த மாநகரத்தில் சுமந்து திரிந்திருக்கிறது. எனது சுக துக்கங்களில் உடன் இருந்து ஆறுதல் தரும் நல்லதொரு பயணத்தையும் அது எனக்கு வழங்கி இருக்கிறது. வாழ்வின் கடினங்களையும் நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றலைத் தருவது எனது பைக் பயணம் மட்டுமே. முகத்தில் அறையும் காற்றில் கவலைகள் கரைந்து போகும் வரை எனக்கான பயணத்தை அது தந்திருக்கிறது. நமது சிந்தனை ஊர் சுற்றும் போதெல்லாம், பழக்கப்பட்ட குதிரையாய் தடம் பார்த்து தங்குதடையின்றி பயணத்தை மேற்கொள்ளும் திறன் (?) நமது வாகனத்திற்கு உண்டோ என்று நினைக்கும் அளவிற்கு அது இருந்திருக்கிறது!. 
எனது பைக்


நினைத்துப் பார்த்தால் இது சிறு பிள்ளைத்தனமாகக் கூட இருக்கலாம். இத்தகைய அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் என்னை போன்று ரோட்டில் அலையும் மார்க்கெட்டிங் மனிதனுக்கு பைக் என்பது ஒரு உடன் பிறவாத நண்பன் போன்றது; என்பதை நீங்கள் உணரும் பட்சத்தில் இக் கட்டுரையை தொடரலாம்.

என்னை போன்ற மார்க்கெட்டிங் மனிதர்கள், வீட்டிலிருக்கும் நேரத்தை விட, அலுவலகத்தில் இருக்கும் நேரத்தைவிட ரோட்டில் இருக்கும் நேரம்தான் அதிகம். இத்தகைய வேலைகளுக்கு அடிப்படை தகுதியே வண்டிதான். நேர்காணலில் போது கைவசம் பைக் இருக்கிறதா? என்று கேட்டுவிட்டுதான் அப்பாயின்மெண்ட் ஆர்டரையே டைப் செய்வார்கள். டார்க்கெட் நோக்கிய பயணம் என்பதால், வண்டி எப்போதும் சீறீப் பாயும் சிறுத்தையாகத்தான் இருக்கும். அப்படி இருக்க... பைக்கின் மீதான பிடிமானம் என்பது இல்லாமலா இருக்கும்?!.

பயணத்தோடு மட்டுமல்லாமல், வீட்டில் இருந்து எடுத்து வரும் மதிய உணவை சாப்பிட பைக் சீட்டுதான் தற்காலிக டைனிங் டேபிளாக பயன்படும். அதோடு, உண்ட களைப்பு போக..... சிறிது நேரம் உட்கார்ந்து இளைபாரவும் வண்டியே மஞ்சு மெத்தையாகவும் அவதாரம் எடுக்கும். தி நகர் நடேசன் பார்க், அதை சுற்றிய இடங்கள், ஜாய் ஆலுகாஸ் பின்புறம் இருக்கும் சோமசுந்தரம் கிரவுண்ட், அண்ணா நகர் பார்க், அடர்ந்த நிழல் கொண்ட ஏதாவது ஒரு தெரு, நிழல் தரும் ஏதாவது ஒரு மரத்தடி என்று பல இடங்களில் இப்படிப்பட்ட மார்கெட்டிங் மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

பைக்கையே ஒரு சிறு வீடாக மாற்றி இருப்பார்கள். புற உலகைப் பற்றி கவலை இன்றி தாங்கள் கொண்டு வந்த மதியம் உணவை, சீட்டில் அமர்ந்துக் கொண்டு ஸ்பூனால் எடுத்து சாப்பிடும் அழகு இருக்கிறதே....அது அலைந்து திரியும் மனிதனுக்கு மட்டுமே வரும்!.

இப்படியான ஒரு பிடிப்பு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீது இருக்கத்தான் செய்கிறது. நமக்கும் அதுக்குமான அந்த ஆத்மார்த்தமான நினைவுகளை சேமித்து வைத்து நமக்கு தருகிறது. நமக்கு விளையாட்டாய் தெரியும் சில விஷயங்கள் சிலருக்கு உணர்வு பூர்வமாய் இருக்கும். தொடர்ந்து பயன்படுத்திய பேனா, சைக்கிள், கார், மோட்டார் பைக், சட்டை, டி ஷர்ட், செருப்பு, மூக்கு கண்ணாடி, கத்தி, வெற்றிலை பெட்டி, குடை, கைகடிகாரம், பர்ஸ் என்று ஏகத்திற்கும் பட்டியல் நீளும். இதற்கான பட்டியளில் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. இந்த போஸசிவ் டைப் மனிதருக்கு மட்டும்தானா.....? என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

நாய்களுக்கு தேங்காய் சிரட்டை கிடைத்தால் விடாது. ஒன்றுமில்லாத அந்த தேங்காய் சிரட்டையை கவ்விக் கொண்டு, லொங்கடா.....லொங்கடா....என்று ஒரு ஓட்டம் ஓடும். அங்கே போய் தனது இரண்டு கால்களையும் நீட்டி வைத்து படுத்துக் கொண்டு, அந்த சிரட்டையை கறண்டிக் கொண்டு இருக்கும். நக்கியது போரடித்தவுடன் மீண்டும் ஒரு நாய் ஓட்டத்தை ஆரம்பிக்கும். அது முடிந்த பிறகு மீண்டும் அந்த சிரட்டையை எடுத்துக் கொண்டு வேறொரு மூலையில் அமர்ந்துக் கொண்டு கரண்டத் தொடங்கிவிடும். (கி.ராஜநாராயனின் கரிசல் காட்டு கடுதாசியில் இந்த நாய் ஓட்டைத்தை மிக அழகாக விவரித்து இருப்பார்) தனக்கான பொருட்கள் மீது நாய்களுக்கு எப்போதும் பிரியம் இருக்கும். வீட்டில் வளர்க்கும் விலங்குகள் கூட, தாம் பயன்படுத்தியதை பிறர் தொட்டால் சண்டைக்கு வந்துவிடும். மனிதனுக்கும் அதே குனம் இருக்கத்தான் செய்கிறது!. யாரிடமிருந்து யார் கற்றுக் கொண்டார்கள், என்று தெரியவில்லை....?!.

ஒரு பைக்கை எக்ஸேஞ்சில் போட்டதற்கு இவ்வளவு அளப்பரையா? என்று நீங்கள் முனுமுனுப்பது கேட்கதான் செய்கிறது?!.

இதற்கு முன்பும் இதே நிலை ஏற்பட்டபோது அப்போதைய பைக்கான டிவிஸ் சுசுகியை விற்க மனமில்லாமல் வீட்டிலேயே வைத்து விட்டேன். புது டயர் பளபளக்க இன்னும் அது வீட்டில்தான் (ஊரில்) நின்றுக் கொண்டு இருக்கிறது. இந்த ஹோண்டா ஷைனையும் வீட்டில் வைக்கத்தான் நினைத்திருந்தேன். "இன்னும் எத்தனை பைக்கைதான் வீட்டில் இப்படி வெட்டியாய் நிறுத்துவே.....?" என்ற எதிர்ப்பு குரல் வலுக்கவே, ஜகா வாங்கிவிட்டேன்.

நினைத்துப் பார்த்தால் எங்கேயும் எப்போதும் பிரிதலே நிலையாக இருக்கிறது!. ஆனால் வேறு வழியில்லை, காலத்தின் எக்ஸ்க்ளேட்டர்களில் நாம் தொடர்ந்து பயணம் செய்ய... இந்த பிரிதல் அவசியமான ஒன்றாகவே இருக்கிறது. நிலையற்ற வாழ்வில் நினைவுகள் மட்டுமே நிலைத்திருக்கிறது. இதுகாரும் என்னை சுமந்து திரிந்த எனது பைக்கை விட்டுவிட்டு, அதன் சுகமான நினைவுகளை சுமந்தபடி நடக்கத் தொடங்கினேன்.

என்றேனும் ஒரு நாள் சாலையில் நாங்கள் சக பயணியாய் சந்திக்கலாம்?!.
(((((()()())))))

ஞாயிறு, நவம்பர் 09, 2014

காஞ்சிபுரமும் மூத்திரச்சந்தும்?!.



முந்தைய பதிவை படிக்காதவர்களுக்கு..... 
             1997 மற்றும் 98ம் ஆண்டு வாக்கில், தமிழகத்தில் இருக்கும் பத்திரிகைகள் தீபாவளி மலருக்கு ஒரு கிலோ தங்கம், இரண்டு கிலோ வெள்ளி என்று அறிவித்து....பெரும் கல்லா கட்டிக்கொண்டு இருந்தனர். குலுக்கள் முறையில் தங்கம், வெள்ளி, மிக்சி, கிரைண்டர், பட்டுப்புடவைகள் என்று வாரி வழங்கி கொண்டு இருந்தது. அப்போது தினபூமிக்காக 300 பட்டுப்புடவை தரச் சம்மதித்து, தராமல் தலைமறைவாக இருந்த கடை ஓனரை கண்டுபிடித்த போது, அவர் ஒரு ரவுடிகளின் பிடியில் சிக்கி இருந்தார். அவரை அந்த சிக்கலில் இருந்து  காப்பாற்றினேன். அவர் எனக்கு பட்டுப்புடவைத் தராமல் மீண்டும் தலைமறைவாக, அவரை எப்படி கண்டுபிடித்தேன் என்பதுதான் இந்தப் பதிவு.

முந்தைய பதிவை விரிவாகப் படிக்க இங்கே சொடுக்கவும். (தீபாவளி மலர் வாங்கினால் ஒரு கிலோ தங்கம் இலவசம்?! ) 

                   வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறியிருந்தது. பட்டுப்புடவை கடை ஓனர் சுரேஷ் மீண்டும் எங்கோ அப்ஸ்காண்டாகிவிட்டார். வீடும் கடையும் பூட்டி இருந்ததால், பிரச்சனை மீண்டும் என்னை புடனியில் தாக்கியது. மறுபடியும் எங்கிருந்து துவங்குவது என்று தெரியவில்லை. டிவியில் அறிவித்தப்படி புடவை தரவில்லை என்றால், வாசகர்கள் நம் மீது நுகர்வோர் நீதி மன்றத்திற்கு போகக்கூடும். அதனால் பத்திரிகைக்கு  பெரும் பிரச்சனைகள் உருவாகலாம் என்று எனக்கு பலமான நெருக்கடி அலுவலகத்தில் தரப்பட்டது. மேனேஜர் ஒரு படி போய், என்னை விரோதியாக பார்க்க ஆரம்பித்திருந்தார். தினமும் எனக்கும் அவருக்கும் வாய்க்கால் தகராறு ஓடிக்கொண்டு இருந்தது. என்னைப் போட்டுப் பார்க்க அவர் நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் பாக்கி இருந்தது. எங்கும் தீபாவளி களைகட்டத் தொடங்கி இருந்தது.

அலைந்து திரிந்து ஒரு வழியாக கடை மேனேஜர் ராமச்சந்திரன் வீட்டை கண்டுப் பிடித்துவிட்டேன்.  அவரது வீடும் அதே வடபழனி குமரன் காலனியில், 100 அடி ரோட்டை ஒட்டி இருந்த சந்தில் இருந்தது.  காலையில் சென்று அவரது வீட்டின் கதவை தட்டினேன். அவரே திறந்தார். என்னைப் பார்த்ததும் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. "ஸார், ஓனர் ஊர்ல இல்லை, சூரத் வரைக்கும் போயிருக்காரு. நீங்க இன்னும் இரண்டு நாள் கழிச்சி கடைக்கு வாங்க, கடையை நாளைக்கு திறந்துவிடுவோம்" என்றார்.

எனக்கு தலை சுற்றியது!. "என்ன சார், இப்படி பண்றீங்க, நான் பிரச்சனையில் மாட்டி இருக்கேன், நீங்க என்னாடான்னா, சர்வசாதாரணமாக இரண்டு நாள் கழித்து வாங்க நாலு நாளு கழிச்சு வாங்கன்னு கூலா சொல்றீங்க?" என்றேன் கோபத்தில்.

"நான் என்ன சார் பண்ணட்டும், அவரு இங்க வர்ரதேயில்லை, வந்தாதானே சொல்ல முடியும். தீபாவளி அதுவுமா கடையை மூடி வச்சிருக்கோமே, உங்களுக்கு அது தெரியலையா?" என்றார் அவரும் விடாப்பிடியாக.

இனியும் வள வளன்னு பேசிக்கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை என்பது புரிந்தது. நேரிடையாக விஷயத்திற்கு வந்தேன். "சார், நீங்க சொல்லியபடி 300 பட்டுபுடவை கொடுக்கவில்லை என்றால், பிரச்சனையை நீங்கதான் சந்திக்கனும். பத்திரிகையிடம் வச்சிக்கிட்டிங்கன்னா பிரச்சனை உங்களுக்குதான். தேவையில்லாம பிரச்சனையை இழுத்துவிட்டுக்காதிங்க. இல்லெனா போலீஸ்ல புகார் கொடுக்கிறாப்பல ஆயிடும். சாதாரனமா நினைக்காதீங்க. உங்க ஓனரை எவ்வளவு பெரிய இக்கட்டுலேருந்து காப்பாத்திருக்கேன், கடைசில என்ன இக்கட்டுல மாட்டிவிடுவீங்க போலயிருக்கு" என்று சத்தம்போட்டேன்.

"வாங்க ஓனருட்ட பேசலாம், அவருட்ட போன போடுங்க, நான் பேசுறேன்" என்றேன். ஓனர் நம்பர் இல்லென்னு முதலில் மறுத்தவர், பிறகு கொடுத்த நெருக்கடிக்கு பேச ஓப்புக்கொண்டார். எஸ்டிடி பூத்திற்கு போனோம். அப்பெல்லாம் மொபையில் போன் ஏது....?!.

"நீங்க வெளியில இருங்க" என்று சொல்லியவர் பூத்திற்குள் புகுந்துக் கொண்டு கதவை சத்திக்கொண்டார். நம்ப நல்ல நேரம் கதவை சரியாக மூட முடியவில்லை. கதவு கொஞ்சம் திறந்து இருக்க.... என்னதான் பேசுகிறார் என்று சைடில் நின்று (ஒட்டு) கேட்டுக்கொண்டு இருந்தேன். மேனேஜர் பேசிக்கொண்டு இருந்தார். நான் தொடர்ந்து வந்து டார்ச்சர் செய்வதை கூறிக் கொண்டு இருந்தார். "அண்ணே காஞ்சிபுரத்தில.....அந்த மூத்திர சந்து பக்கத்திலதான இருக்கிங்க?" என்ற வார்த்தை மட்டும் எனக்கு பளிச்சென்று கேட்டது. 'ஆகா...துப்பு கிடைத்துவிட்டது!, இனியும் இந்த மேனஜரை தப்ப விடக்கூடாது' என்று நினைத்துக் கொண்டேன்.

சிலபேர் சாப்பிட்டபின் எதுவும் சாப்பிடாதமாதிரி, வாயை வைத்துக் கொண்டு வருவார்களே பார்த்து இருக்கிறீர்களா....? அப்படிதான் வந்தார் அந்த மேனஜரும். "சார், ஓனருட்ட பேசிட்டேன், அவரு சூரத்தில இருக்காரு, வந்ததும் புடவையை கொடுத்திடுறேன்" என்றார்.

 எப்படி இப்படி முழு பூசணிக்காயை இந்த ஆளு சோற்றில் மறைக்கிறானே என்று எனக்கு கோபம் தலைக்கு மேலே ஏறியது.  "ஹலோ...உங்க ஓனர் காஞ்சிபுரத்திலதான இருக்காரு, எனக்கு தெரியும். எதுக்கு இப்படி இல்லெனு பொய் சொல்றீங்க" என்று கத்த ஆரம்பித்தேன். "வாங்க காஞ்சிபுரம் போவோம்" என்று கூறிக்கொண்டு, அவரது பதிலையும் எதிர்ப்பார்க்கமல், அருகில் போன ஆட்டோவை கூப்பிட்டேன். அவரை ஆட்டோவில் அள்ளிப் போட்டுக் கொண்டு பூந்தமல்லி வந்து காஞ்சிபுரம் பஸ் பிடித்தோம்.  ஓனர் காஞ்சிபுரத்தில்தான் இருக்காரு என்று எனக்கு தெரிந்துவிட்டது. இனியும் தாமதித்தால் நிலமை மோசமாகிவிடும், காஞ்சிபுரம் போனால், பட்டுபுடவைக்கு வழி பிறக்கும் என்று எனக்குப் பட்டது.

ஓவர் டூ காஞ்சி......!.
()()()()()()()



        காஞ்சிபுரத்தில் நாங்கள் இறங்கிய போது, மதியம் ஆகிவிட்டது. ஆட்டோவில் பயணித்து மார்க்கெட் பக்கம் வந்தோம். அங்கேதான் கடை ஓனர் வீடு இருந்தது. இதற்கிடையில் பசிக்குது சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று நச்சரித்துக் கொண்டே வந்தார் மேனேஜர். எனக்கு பசியில்லை என்று சொல்லிப் பார்த்தும் விடவில்லை. பின்பு மார்க்கெட் பக்கத்தில் இருந்த ஹோட்டலைக் காட்டி இங்கே சாப்பிடலாம் என்றார். நுழைந்து அமர்ந்ததும், அவரே இரண்டு மீல்ஸ் ஆர்டர் செய்தார். பாதி சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே, இலையை மூடிவிட்டு, "சார் சாப்பிட்டுக் கொண்டே இருங்கள், இதோ வந்துவிடுகிறேன்" என்று கூறிவிட்டு எழுந்து அவசர அவசரமாக சென்றுவிட்டார்,

எதுக்கு இந்த ஆள் இப்படி அவசரமாக ஓடுறான்? என்று நினைத்துக் கொண்டே நானும் சாப்பாட்டை பாதியில் மூடிவிட்டு, ஹோட்டலுக்கு வெளியே வந்தேன்,  ஆனால் ஆளை காணவில்லை... சாலை இரு மருங்கிலும் ஆளை காணவில்லை 'எங்கடா போனான் இந்த ஆளு?' என்று நினைத்துகொண்டு.....சுற்றும் முற்றும் பார்த்தேன்.  அப்போதுதான் அந்த க்ளு கிடைத்தது!.  ஹோட்டலுக்கு பக்கத்தில் நடந்தவன், அதை ஒட்டி காம்பவுண்டுக்குப் பக்கத்தில் யாரும் பயன்படுத்தாத மூத்திர சந்து ஒன்று இருந்தது. அதைப் பார்த்த போது.....போனில் மேனேஜர் பேசிய போது குறிப்பிட்ட அதே மூத்திரச் சந்து இதுதான் என்று எனக்குள் பொறி தட்டியது!.

யாரும் பயன்படுத்தாத சந்து என்பதால் அது பொது கழிப்பிடமாக மாறிவிட்டு இருந்தது. சந்தில் புல் பூண்டு முளைத்து ஒற்றையடிப் பாதையாக மாறியிருந்தது. முகப்பில் ஒரு சிதிலமடைந்த ஓட்டு வீடு வேற பெரும் திகிலை கிளப்பியது. சந்தேகத்தோடு அந்தச் சந்தில் நடக்க ஆரம்பித்தேன். அதை என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். இல்லையென்றால் அது நிகழ்ந்திருக்காது. நானும் கொஞ்சம் தூரம் நடந்து சென்றுவிட்டு, திரும்பி ஹோட்டல் வாசலில் மேனேஜருக்காக காத்துக் கொண்டு இருந்திருப்பேன். சந்தில் இரண்டு தப்படி நடந்து இருப்பேனே இல்லையோ.....அந்த சிதிலமடைந்த வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி, ஒரு ஓட்டு வீடு வராந்தாவில் அமர்ந்திருந்த உருவம் தலையை வெளியே நீட்டி வாயிலில் இருந்த தண்ணிரை கொப்பளித்து வெளியே துப்பியது. அது வேறு யாரும் இல்லை, நான் யாரை தேடி வந்தேனே, யார் சூரத் போயிருக்கிறார் என்று கூறினார்களோ அவரேதான்.....ஓனர் சுரேஷேதான் அங்கு அமர்ந்திருந்தார். கூட நாளைந்து நண்பர்களும் இருந்தார்கள். கடன்காரர்களுக்குப் பயந்து உள்ளூரிலேயே ஒளிந்துக் கொண்டு இருந்தார். ஜன நடமாட்டம் உள்ளப் பகுதியில் அப்படி ஒரு சந்தை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்?.

நான் எதிரில் போய் நிற்கவும், ஒரு கணம் அவர் ஆடிப் போய்விட்டார். என்னை அவர் எதிர்பார்க்கவில்லை.  இந்த நேரத்தில் இந்த இடத்தில் நம்மை பார்த்தால் யாருக்குதான் அதிர்ச்சி இருக்காது?. அதிர்ச்சி மேலிட..... "வா.....மகேஸூ" என்று அழைத்தவர், "எப்படி இந்த இடத்தை கண்டு பிடிச்ச....? இந்தப் பக்கம் யாரும் வரமாட்டாங்களே....?" என்றார் முகம் சிவக்க. நான் கண்டுபிடிச்ச விபரத்தை சொன்னதும், எதிரில் இஞ்சி திண்ண குரங்காய் உட்கார்ந்து இருந்த மேனேஜரை கடிந்துக் கொண்டார்.

"சார் உங்கள சாப்பிட்டுக்கிட்டுதானே இருக்கச் சொன்னேன், எதுக்கு இப்படி இடத்த தேடி வந்தீங்க?. என்று என் மேல் எகிற அராம்பித்தார் மேனேஜர். "அட, சும்மா இருய்யா.....அவருதான் வந்துட்டாரே அப்புரம் எதுக்கு கத்துற?" என்று கூறிய ஓனர் புல் மப்பில் இருந்தார். "சார், என்ன சார் இப்படி தவிக்க விட்டுடீங்க? நான் பெரிய இக்கட்டுல மாட்டிக்கிட்டு இருக்கேன். நீங்க இப்ப பட்டுப் புடவை குடுக்கலனா, பிரச்சனைதான் சார் அதிகமாகும். அதுக்கப்புறம் என்னை எதுவும் கேட்காதீங்க" என்று சத்தம் போட்டேன். ஆத்திரத்தில் பொறிந்து தள்ளினேன்.

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஓனர், "மகேஸூ கவலைப்படாத நீ மெட்றாஸூக்கு போறப்ப பட்டுப்புடவையோடத்தான் பேவே....போதுமா?. நீ என்னை காப்பாத்திருக்க......அதுவுமில்லாமல் இவ்வளவு தூரம் என்னை தேடி வேற வந்திட்ட......உனக்கு 200 பட்டுப்புடவை ஏற்பாடு பண்ணித்தரேன். மீதி இன்னும் இரண்டு நாளைக்குள்ள உனக்கு மெட்றாஸிலேயே கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிடுறேன் " என்றவர் அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவரது நண்பர் மாரிமுத்து என்பவரிடம் "மாரி....நீ சொசைட்டி குமாரை போய்ப் பார்த்து பட்டுப்புடவை வாங்கியா....இந்தா" என்று தனது பையில் இருந்து நூறு ரூபாய் நோட்டு கட்டை ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.

"மகேஸூ..... பட்டுப்புடவை வர ஈவினிங் ஆயிடும், அதுவரைக்கும் வா ஒரு பெக் போடு" என்றார். நான் யோசிப்பதைப் பார்த்து, "என்ன யோசிக்கிற......தண்ணி வாங்கிக் கொடுத்து உன்னை கவிழ்த்திடுவேன்னு நினைக்கிறியா...?. நீ தண்ணி அடிச்சாதான் உனக்கு சரக்கு (பட்டுப்புடவை) கொடுப்பேன். இல்லென உனக்கு பட்டுப்புடவை கிடையாது". என்றார் சிரித்திக் கொண்டு.... "வேணம் சார், ஆபிஸ் வேலையா வந்திருக்கேன், இப்போ போய் தண்ணி அடிச்சிகிட்டு இருந்தா, நல்லா இருக்காது. நான் இன்னோரு நாளைக்கு வரேன்" என்றேன். எனக்கு  வேலை முடிந்தால் போதும் என்றிருந்தது. ஆனால் அவர் விடுவதாக இல்லை.

 இருங்க.... 'ஆபிஸ்க்கு ஒரு போன் போட்டு வர்றேன்". என்று வெளியே கிளம்பி ஆபிஸ்க்கு போன் செய்தேன். மேனேஜர் விஜயன் சாரிடம் நடந்தவற்றை கூறி, இருக்கும் இடத்தையும் கூறி, ஈவினிங்குதான் சார் புடவை கிடைக்கும் என்று தகவலையும் தெரிவித்தேன். அவரும் ஒரு நிம்மதி பெருமூச்சுவிட்டார். "பத்திரமாக எடுத்துகிட்டு வா" என்றார்.

எதுக்கு இருக்கும் இடத்தைக் கூறினேன் என்றால், எதாவது பிரச்சனை என்றால் நாம் இருக்கும் இடம் ஆபிஸூக்கு தெரிய வேண்டு என்பதற்காகத்தான். நான் திரும்பி போனபோது, ஒரு புல் பாட்டிலும் சிக்கன், மட்டன் முட்டை என்று அடிக்கி வைத்திருந்தார். எல்லாம் அவரது நணபர் வீட்டில் இருந்து வந்திருந்தது. நான் செய்த உதவியை அவரது நண்பர்களிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனார்.  இப்படியாக தொடங்கிய பார்ட்டி.....மாலை வரை தொடர்ந்தது. பார்ட்டி முடியவும், பட்டுப்புடவை வருவதற்கும் சரியாக இருந்தது.

பட்டுப் புடவையைப் பார்த்ததும்தான் எனக்கு உயிர் வந்தது. எத்தனை நாள் போராட்டம். தீபாவளி நெருங்க இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் பட்டுப் புடவை கிடைத்தது பெரிய விஷயம். கிடைக்காமல் போயிருந்தால், எனக்கு நிச்சயம் கெட்டப் பெயர் கிடைத்திருக்கும். பத்திரிகைக்கும் கெட்டப் பெயர் கிடைத்திருக்கும். வாசகர்களுக்கு அறிவித்த பரிசுப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இப்படி மறைமுகமாக எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு செயல்களுக்கு பின்னரும் ஒரு கதை இருக்கும். ஒவ்வொரு கதைக்கும் பின்னரும் ஒரு செயல் இருக்கும். என்னைப் போன்ற மார்கெட்டிங் மனிதர்களின் வாழ்வு என்பது,  எப்போதும் பரப்பரப்பாகவே இருக்கும். தான் வாழ வேண்டும் என்பதற்காகவே, பிறருக்காக வாழக் கூடியவர்கள் இவர்கள். இலக்குகள் நிர்ணயக்கப்பட்ட பெரிய குக்கர்களில் வேகக் கூடிய பருப்புகள் இவர்கள் என்றால் அது மிகையல்ல?!.
 
சரி, போகட்டும். கதையை முடிக்க வருவோம்.

இரண்டு பெரிய அட்டைப் பெட்டிகளில் வந்திரங்கிய பட்டுப்புடவையை எடுத்துக் கொண்டு, காஞ்சிபுரத்தில் பஸ் பிடித்து,  சென்னை எல்ஐசி பஸ் ஸ்டாப்பில் வந்திறங்கிய போது மணி இரவு பனிரெண்டு ஆகிவிட்டிருந்தது.  பேருந்து நிலையம் அப்போது பாரிஸ் கார்னரில் இருந்தது. கோயம்பேடுக்கு வரவில்லை. பட்டுப்புடவையை அலுவலகத்தில் இறக்கிவிட்டு, எடிட்டோரியல் பக்கம் தலையை காட்டிவிட்டு,  18K பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தபோது....பொழுது விடிய இன்னும் கொஞ்ச நேரமே இருந்தது.

()()()()()()()

வெள்ளி, அக்டோபர் 24, 2014

தீபாவளி மலர் வாங்கினால் ஒரு கிலோ தங்கம் இலவசம்?!




             1997 அல்லது 1998ம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்பொழுதெல்லாம் நாளிதழ்கள் தங்களது தீபாவளி மலரோடு கை நிறைய பை நிறைய பரிசுப் பொருட்களை கொடுப்பது வழக்கம். ஒரு கிலோ தங்கம், இரண்டு கிலோ வெள்ளி, பைக், பிரிஜ், கிரைண்டர், கட்டில், பீரோ, பட்டுப் புடவைகள் என்று ஏகத்தும் பரிசுப் பொருட்களை வாரி வாரி வழங்கி, தீபாவளி மலர்களை கூவி கூவி விற்பார்கள். சந்தையில் தினகரன், தினமலர், தினபூமி என்று பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு தீபாவளி மலரை விற்பனை செய்வார்கள். இதில் தினபூமியின் கையே ஓங்கி இருந்தது.

தீபாவளி மலர்களை படிக்க வாங்குகிறார்களோ இல்லையோ, இந்த பரிசுப் பொருட்களுக்காகவே வீட்டுக் வீடு ஐந்து பத்து என்று வாங்குவார்கள். ஒரு கிலோ தங்கம் இரண்டு கிலோ வெள்ளி என்று பரிசுப் பொருட்களை அறிவித்தால், பாவம் மக்கள்தான் என்ன செய்வார்கள்?!.  தங்கள் அதிஷ்டத்தை சோதித்துப் பார்க்க தீபாவளி மலர் கூப்பனாக வாங்கி குவிப்பார்கள்.

குலுக்களில் பரிசுப் பொருட்கள் மட்டும் இல்லாமல், தீபாவளி மலர் புத்தகத்தோடு சோப்பு, ஷாம்பு, டால்கம் பவுடர், விபூதி பாக்கெட், பத்தி பாக்கெட், சாம்பிரானி பாக்கெட், பிஸ்கட், சாக்லெட், காபித்தூள் என்று பை நிறைய பரிசுப் பொருட்களோடு தீபாவளி மலர் உங்கள் வீடு தேடி வரும்.

இதில் ஆர்வம் முத்தி போய் ஒரு வார இதழ் அரிசி மூட்டை தருகிறோம்  என்றேல்லாம் அறிவித்தது. பின்னர் விஜயன் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கொன்றில், இத்தகைய திட்டத்திற்கு முற்று புள்ளி வைத்தது நீதி மன்றம்.

""வாங்கி விட்டீர்களா தீபாவளி மலர்" என்று தீபாவளி மலருக்காக முழ நீளத்திற்கு டிவியில் விளம்பரங்கள் வரும். 50,60வது ஸ்பான்ஸர் பெயர்களை வாசித்து முடிக்கவே பொழுது போய்விடும். டிவியில் வரும் தினபூமி தீபாவளி மலர் விளம்பரத்திற்கு அனுராதா மேடம்தான் வாய்ஸ் தருவார். தி.நகர் ராஜாபாதர் தெருவில் இருக்கும் ராகவேந்திரா ஸ்டூடியோவில்தான் அனைத்துவிதமான ஒலிப்பதிவுகள் நடைபெறும்.  கேசட்டுகளை டிவி சேனல்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டிருந்தது.

அப்போது நான் தினபூமி பத்திரிகையில் இருந்தேன். நண்பன் ராஜசேகரனும் இருந்தான். இருவரும் அட்வர்டைசிங் ரெப்ரசண்டேட்டிவாக  வேலையை ஆத்து ஆத்துன்னு ஆத்திகிட்டு இருந்தோம். நாங்கள் சேர்ந்து சுற்றிய நாட்களை மறக்க முடியாது.  இப்போ மாப்ள குமுதத்தில் இருக்கிறான், நான் இண்டியன் எக்ஸ்பிரஸில் இருக்கிறேன்.

ஒவ்வொரு விளம்பர பிரதிநிதிக்கும் டார்கெட் உண்டு.  பரிசுப் பொருட்களை நாங்கள்தான் வாங்க வேண்டும். அந்த நிறுவனத்தோடு பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களது பொருட்களை வாங்கி இந்த குலுக்களில் சேர்க்க வேண்டும். இதுதான் எங்கள் வேலை. அதற்குப் பதிலாக அந்த நிறுவனத்தின் விளம்பரங்களை டிவி மற்றும் தினபூமி பத்திரிகையில் வெளியீட வேண்டும்.

அப்படிதான் ஒரு பட்டுப் புடவைக் கடையைப் பிடித்தேன். சென்னை புரசைவாக்கத்தில் அப்போதுதான் அவர்கள் புதிதாக  அருள் ஜெயந்தி சில்க்ஸ்  (கடை பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடையை திறந்து இருந்தனர். அதுநாள் வரையில் ஊர் ஊராக சென்று கண்காட்சி மூலம் விற்பனை செய்தவர்கள், ஒரே இடத்தில் இருந்து விற்பனை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கடையை தொடங்கியிருந்தனர்.

கடை உரிமையாளர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நண்பராகிவிட...தினபூமி தீபாவளி மலருக்கு 300 பட்டுப் புடவைகள் வழங்க சம்மதித்தார். கேமிராவோடு சென்று அவரது கடையை ஷூட் செய்து, "காஞ்சிபுரம் அருள் ஜெயந்தி சில்க்ஸ் வழங்கும் 300 பட்டுப்புடவைகள்" என்று அனுராதா மேடம் குரலில் விளம்பரமும் வரத்தொடங்கிகிவிட்டது. பரிசுப் பட்டியலில் காஞ்சிபுரம் அருள் ஜெயந்தி சில்க்ஸூம்  சேர்ந்துவிட்டது.

----------

தீபாவளி நெருங்கிக் கொண்டு இருந்தது.....

                  ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே புரசைவாக்கம் கடைக்கு நடையாய் நடந்துக் கொண்டு இருந்தேன். எப்போது போனாலும் "ஓனர் இல்லை, வெளியூருக்கு போயிருக்கிறார். அப்புறமா வாங்க" என்ற பதிலே வந்தது.  ஆபிஸில் வேற பதில் சொல்ல முடியவில்லை. மற்ற பொருட்கள் எல்லாம் அலுவலகத்திற்கு லாரியில் வந்துக் கொண்டு இருக்க.... நம்ம பட்டுப் புடவை மட்டும் வரும் வழியே காணும். கடையில் இருந்த மேனேஜர் ராமச்சந்திரன்  "ஓனர் வந்தாதான் சார், பட்டுப் புடவைக்கு வழி; அவர் வராம நான் எதுவும் சொல்ல முடியாது. நீங்க இரண்டு நாள் கழித்து வாங்க, அவர் வந்தா நான் உங்களுக்கு போன் பண்றேன்." என்றார். நான் போகும் போதெல்லாம் இதே பதிலையே ஸ்டீரியோ டைப்பாய் கூறிக்கொண்டு இருந்தார்.

நாட்கள் வினாடிகளாய் ஓடிக் கொண்டு இருந்தது.......இன்னும் ஓனர் சூரேஷ் வந்தபாடில்லை. இனியும் மேனேஜரை நம்பியிருந்தால் வேலைக்காது என்று நானே அவரது கடை பையன் ஒருவன் மூலம் சுரேஷின் வீட்டு அட்ரஸை கண்டுபிடித்தேன். . வடபழனி குமரன் காலனியில் ரூம் எடுத்து தங்கி இருந்தார். மதியம் போனால் வீடு பூட்டி இருந்தது. பக்கத்தில் இருந்த கடைக்காரர் "சார், காலையில வந்தா பாக்கலாம்" என்றார்.

காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு போனால், வீட்டில் துண்டைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து இருந்தார் சுரேஷ். சுற்றியும் தடி தடியாய் ஒரு பத்து பேர் அவரை சுற்றி உட்கார்ந்திருந்தனர். "வா.... மகேஸூ" என்று வரவேற்ற அவரது முகம் வெளிறிக் கிடந்தது. "சார்....பட்டுப்புடவை" என்று நான் ஆரம்பிக்கவும் அந்த கும்பலில் இருந்த ஒருவன் "நீ  யாரு? முதல்ல வெளியில போ..." என்று கத்த ஆரம்பித்தான். "நான் பத்திரிகையில இருந்து வர்றேன்" என்றதும். சுரேஷே முந்திக்கொண்டு "மகேஸூ நீ வெளியில வெயிட் பண்ணு என்றார்"

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. சிறிது நேரம் கழித்து சுரேஷே வெளியில் வந்தார். கூடவே ஒரு தடியனும் வெளியில் வந்தான். "மகேஸூ நீ போயி வளசரவக்கம் சிக்னல்ட்ட இருக்கிற சைக்கிள் கடையில போய் பட்டுப் புடவை வாங்கிக்க" என்று கூறிகொண்டே மின்னல் வேகத்தில் எனது தொடையைத் தட்டி,  ஒரு துண்டு பேப்பரை எனது பேண்ட் பாக்கெட்டில் திணித்தார்.  "சீக்கிரம் போ, அங்க போனா உனக்கு புடவை கிடைக்கும். நான் முன்னாடியே சொல்லிவச்சிட்டேன்." என்றார்.  எப்படி சைக்கிள் கடையில பட்டுப்புடவை  கிடைக்கும்.   எனக்கு ஒன்றும் புரியவில்லை.

குழம்பிக்கொண்டே கீழயிறங்கி டிவிஸ் சேம்ப்பை ஸ்டார்ட் செய்து, இரண்டு தெரு தள்ளி நிறுத்தி பேண்ட் பாக்கெட்டில் இருந்த துண்டு காகிதத்தை பிரித்துப் பார்த்தேன். அதில் வட சென்னை அரசியல் பிரமுகர் ஒருவர் பெயரை குறிப்பிட்டு, அவரது ஆட்கள் என்னைக் கடத்தி வைத்திருக்கிறார்கள். உடனே சென்று வளசரவாக்கம் ராஜாராமனிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) விஷயத்தை சொல்லி என்னை காப்பாத்து' என்று கோணல் மாணலாய் எழுதி இருந்தார். அப்போதுதான் விஷயத்தின் விபரீதம் புரிந்தது.

சரியாக வளசரவாக்கம் சிக்னல் அருகிலேயே அந்தக் கடை இருந்தது. போய் விஷயத்தை கூறியதும் பதறிவிட்டார்கள். நல்ல வேளை கடை ஓனரின் தம்பியும் அங்கிருந்தார். உடனே மூன்று டாடா சூமோக்களில் ஆட்களை நிரம்பிக் கொண்டு கிளம்பி விட்டார்கள். "தம்பி, நீங்க அந்தப் பக்கம் வராதீங்க. அப்படியே போரூர் பக்கம் போயிடுங்க. நீங்கதான் சொல்லி இருப்பீங்கன்னு உங்களைப் பார்த்தா கண்டு பிடிச்சிடுவாங்க" என்றார் வளசை ராஜாராமன். (கடத்துனவரும் இவரும்  ஒரே கட்சி)

அப்படியே போரூர் பக்கம்  வண்டியை திருப்பி விடு...  ஜூட்....!!!

அப்ப பட்டுப்புடவை.....?
-------

               ரண்டு நாள் கழித்து இராமச்சந்திரன் போன் செய்திருந்தார். "சார், சார் உங்கள பாக்கனுமா. வடபழனி  சேலம் ஆர் ஆர் ஹோட்டலுக்கு வரச்சொன்னார். என்றார். போயிருந்தேன். பார்த்ததும் கட்டிப் பிடித்துக் கொண்டார். "என் உயிர காப்பாத்தின மகேஸூ, நீ வரல்லனா நான் மாடியிலேருந்து குதிச்சி இருப்பேன். சேலம் செட்டியார்ட்ட வாங்கின கடன் 10 லட்சத்த திருப்பித் தரமுடியல. அதான் அவரு ஆள வச்ச என்ன தூக்க பாத்தாரு. நல்ல வேளை நீ வந்த நான் தப்பிச்சேன்.  வயிறு வலிக்குதுன்னு சொல்லி பாத்ரூம்ல போயி அந்த பேப்பர்ல எழுதினேன்".

இல்லெனா இவ்வளவு நேரம் என்ன நடந்து இருக்கும்ன்னே தெரியாது. அப்புரம் ஆளுங்கள வச்சி பஞ்சாயத்துப் பேசி ஒரு வழியா பிரச்சனையை முடிச்சாச்சிப்பா.   மகேஸூ உன் கல்யாணதுக்கு நம்ம கடை பட்டு புடவைதான்" என்றார்.

"அதெல்லாம் இருக்கட்டும்ண்ணே, எனக்கு பட்டுப் புடவையை குடுங்க. தீபாவளி நெருங்கிகிட்டு இருக்கு. ஆபீஸ்ல தலை காட்ட முடியால. பிரச்சனை பெருசா ஆகும்போல இருக்கு, அதனால பேசினபடி பட்டுப்புடவையை கொடுங்க என்றேன் விடாப்பிடியாக.

"எனக்கு ஒரு வாரம் டைம் கொடு, பட்டுப் புடவையை ரெடி பண்ணி கொடுத்திடுறேன். ஏவாரத்தில பயங்கர நஷ்டம். தலை போற பிரச்சனை எனக்கு நிறைய இருக்கு. வர்ற வாரத்தில பட்டுப்புடவை ஒன்ட்ட இருக்கும்" என்றார்.

குறிப்பிட்ட அந்த வாரமும் வந்தது.....

 பார்த்தா கடையும் பூட்டி இருக்கு, அவரது ரூமும் பூட்டி இருக்கு. ஆளூ.... மறுபடியும் எஸ்கேப்!.

அப்ப பட்டுப்புடவை.......??????

அது ஒரு பெரிய கதை. காத்திருக்கவும்!.
-------------

வியாழன், அக்டோபர் 23, 2014

வலி!



                  நாம் நமக்கான வாழ்வை வாழ்ந்துக் கொண்டு இருக்க...சிலர் தமக்கான வாழ்வு எது என்பதே தெரியாமல் மனத் தெளிவின்றி வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர்.

மழையா, வெயிலா, புயலா, தீபாவளியா, பொங்கலா? என்ற எந்தத் தெளிவும் இன்றி தமக்குத்தாமே பேசிக் கொண்டும், கட்டிலில் முடங்கியும் கிடக்கின்றனர். என்றோ விட்டுப் போன சொந்தங்கள் கூட தீபாவளி பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் விசாரிப்பதில்லை. தப்பித்தவறி பண்டிகை நாட்களில் பார்க்க வரும் உறவினர்கள் கூட அவர்களை அழைத்துக் கொண்டு போய் பண்டிகையை கொண்டாட விரும்புவதில்லை.

மன நலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தன்னார்வ அமைப்பு FRIENDS FOR THE NEEDY' Home for the mentally ill poor woman' என்ற அமைப்பு சென்னை திருமுல்லைவாயிலில் இயங்கி வருகிறது. கேரளா கோட்டயத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. தீபாவளிக்கான இனிப்புகளை வழங்கிய போது மேற்கண்ட தகவலை கூறினார் சிஸ்டர் லீமா ரோஸ். "நீங்கள்தான் சார், இன்னைக்கு ஸ்வீட் கொண்டு வந்து கொடுத்து இருக்கீங்க. இன்னிக்கான உணவுகளையும் நாங்கள்தான் தயாரித்துக் கொண்டு இருக்கின்றோம்" என்றார்.

இத் தொண்டு நிறுவனத்தில் 50 மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்கின்றனர். 18 வயதிலிருந்து 70 வயதுவரை வைத்து பராமரிக்கிறார்கள். எப்போதாவது அவர்களை விசாரித்து சிஸ்டர் லீமா ரோஸூக்கு போன் வருகிறது. நான் சென்றிருந்த சமயம், எம்சியே படித்த மன நலம் பாதிக்கப்பட்ட காயத்திரி என்ற பெண்ணிற்கு போன் வந்திருந்தது. எடுத்து ஏதேதோ பேசினார். அவர் பேசுவது ஒன்றும் புரியவில்லை. 21வயது பெண் மனம் பேதலித்து இருப்பது அவருக்கு மட்டும் தண்டனை அல்ல?!.

உறவின் பார்வையிலிருந்து என்றோ விலக்கிவைக்கப்பட்டவர்கள், யாரோ ஒரு முகம் தெரியாதவர்களின் அரவணைப்பில்தான் தங்கள் காலத்தை கழித்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஆதரவற்று, நிராகரிக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, சமூகத்தின் பார்வையிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டு இன்னும் எத்தனை எத்தனையோ பேர் இருட்டு அறைகளிலும், நாலு சுவர்களிலும் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு தீபாவளி பொங்கல் போன்ற எந்த பண்டிகையும் கிடையாது.

நாம் நமக்கான வாழ்வை வாழ்கிறோம்!. அவர்கள் அவர்களுக்கான வாழ்வை வாழ்வதில்லை!.

வெள்ளி, அக்டோபர் 10, 2014

செகண்ட் லைனை உருவாக்காத ஜெயலலிதா!.

.  .

மேம்படுத்தப்பட்ட பதிவு !.

 
              "True Leaders don't create followers.... they create more leaders!" என்றொரு ஆங்கில பழமொழி உண்டு. இந்த பழமொழி ஒர்க்கவுட் ஆகாத தலைவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர். சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற பிறகு அடுத்த தமிழக முதல் அமைச்சர் யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் முதற்கொண்டு, வழக்கறிஞர் நவனீத கிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன், விசாலாட்சி நெடுஞ்சேழியன், அமைச்சர்கள் வைத்தியலிங்கம்,செந்தில் பாலாஜி வரை ஏகப்பட்ட பெயர்கள் பட்டியல் இடப்பட்டது. ஊடகங்கள் தங்கள் இஷ்டத்திற்கு ஒவ்வொரு பெயர்களை பரிந்துரைத்தனர்.

பெங்களூருவில் சொத்து குவிப்பு வழக்கில் கிடைத்த தீர்ப்புக்கு பின்னர் தமிழக அமைச்சர்களால், ஜெயலலிதாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. தண்டனை அறிவிக்கப்பட்ட உடனே, முறைப்படி சிறைத்துறையினரிடம் ஜெயலலிதா ஒப்படைக்கப்பட்டார். யார் அடுத்த முதல்வர் ? என்ற முக்கியமான முடிவு எடுக்கத் தெரியாமல் ஆளுக்காள் கையை பிசைந்துக் கொண்டு இருந்தனர். சிறையில் இருக்கும் ஜெவை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. நேரமோ ஓடிக் கொண்டு இருந்தது, உடனடியாக அடுத்த முதல்வரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் தமிழக அமைச்சரவைக்கு இருந்தது. ஜெயலலிதாவும் யார் அடுத்த முதல்வர் என்பதை முன் கூட்டியே தெரிவிக்கவும் இல்லை முன் கூட்டியே சொல்லவும் இல்லை. "அம்மா போய்ட்டு ஈவினிங் ரிட்டன் ஆயிடுவாங்க" என்றே எல்லோரும் நினைத்திருந்தனர்.

ஜெயலலிதாவிற்கு மருந்து மாத்திரைகளை சிறைச்சாலைக்கு அனுப்பியது வாயிலாக, யார் அடுத்த முதல்வர்? என்ற தகவலைத் தெரிவித்து, பிறகு எப்படியோ மருந்து சீட்டின் பின்புறம் ஜெ OP என்று எழுத....பிரச்சனை தீர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானார். செகண்ட் லைன் இல்லாததே இந்த கடைசி நேர தடுமாற்றத்திற்கு காரணம் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.
ஒவ்வொரு முறையும் ஓ.பன்னீர் செல்வம் கட்டாயத்தின் பேரில் முதலமைச்சராக ஆக்கப்படுகிறார். அதிலிருந்து வெளிவந்த பிறகு அதற்கான எந்த தடயமும் இன்றி அவர் செயல்படுகிறார். இந்த முனி மனோ நிலை வேறு யாருக்கும் வருமா என்று தெரியவில்லை...?
செகண்ட் லைன்.

அரசியல் கட்சியோ, இயக்கமோ, போராளிகள் குழுவோ, இராணுவமோ, தனியார் நிறுவனங்களோ, ஊடகங்களோ, விளையாட்டு குழுவோ, எதுவாயிருந்தாலும் 'செகண்ட் லைன்' என்பது இன்றியமையாதது. நிறுவனங்கள் தங்கு தடையின்றி நடைபெற செகண்ட் லைன் என்பது தவிற்கமுடியாத ஒன்று. முடிவெடுக்கும் தலைமைக்கு அடுத்த நிலையில் இருந்து முடிவெடுப்பவரே செகண்ட் லைன் என்பார்கள். ஒரு நிறுவனத்தின் தலைவர் சந்தர்ப்ப சூழ் நிலையில் நிறுவனத்திற்கு வரமுடியாமல் போக நேர்ந்தால் அடுத்த இடத்தில் இருக்கும் தலைவரே முடிவெடுப்பார். இன்னும் புரியும்படி கூறுவதென்றால் கணவன் ஃபஸ்ட் லைன் என்றால்; மனைவி செகண்டு லைன். இந்த இரண்டு லைனும் இருந்தால்தான் குடும்பம் குடும்பமாக இருக்கும். கம்பெனி கம்பெனியாக இருக்கும்!. இது கட்சிகளுக்கும் பொருந்தும்.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க சென்ற போது கூட, செகண்ட் லைனாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நியமித்துவிட்டுதான் சென்றார். இதற்கு முன்பாக சென்ற ஜப்பான் பயணத்தின் போது செகண்ட் லைனை மோடி அறிவிக்கவில்லை. சிறிய நெருக்கடிக்குப் பிறகே இந்த தவறை அவர் திருத்திக் கொண்டார். இவன் எனக்கு அடுத்த நிலையிலா என்ற ஈகோகூட செகண்ட் லைனை அறிவிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தலாம்.

அதிமுகவை பொருத்தவரை இங்கு எல்லாமே ஜெயலலிதாதான். அவர் எடுப்பதுதான் இறுதி முடிவு. இரண்டாம், மூன்றாம், நான்காம் என்று எந்த இடத்திலும் யாரும் நிலையாக இருந்ததில்லை. இன்று உச்சத்தில் இருப்பவர்கள் அடுத்த நாளே மண்ணை கவ்வலாம். நிலையாமை என்பது ஜெயா அமைச்சரவையை பொருத்தவரை நிலையானது!.
ஆளாளுக்கு போராட்டம்.

ஜெயிலில் இருக்கும் ஜெயலலிதாவை மகிழ்விப்பதற்காக கட்சியின் உயர் மட்ட அமைச்சர் முதல் அடிமட்ட தொண்டன் வரை தங்கள் இஷ்ட்டதிற்கு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கட்சியையும் போராட்டத்தையும் ஒருங்கிணைக்க ஆளும் இல்லை வழி நடத்த தலைமையும் இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் டில்லியில் உண்ணாவிரதம் இருந்தால், தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்ஜியார் சமாதியில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். 'ஆள் இல்லாத மாட்டு வண்டி வயலில வேலை செய்யுற ஆத்தா மேல ஏறிச்சாம்' என்பது போல இருக்கிறது அதிமுகவினரின் செயல்பாடு.

தீர்ப்பு நாளான கடந்த 27ம் தேதி, பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்திற்கு மாற்றுத் துணி எதுவும் இன்றி, வெறுங் கையோடுதான் ஜெயலலிதா வந்திருந்தார். இந்த வழக்கில் வெற்றி பெற்று விடுவோம் என்ற எண்ணத்தை அவருக்கு சுற்றி இருந்தவர்கள் விதைத்து இருந்தனர். கர்னாடகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தசரா விடுமுறை என்பதையோ, வழக்கு அவருக்கு சாதகமாக இல்லை என்பதையோ அவரிடும் சொல்லத் துணிந்த இரண்டாம் நிலை தலைவர்கள் அதிமுகவில் இல்லை என்பதுதான் உண்மை. "அம்மா ஒன்றும் ஆகாதும்மா" என்று குருட்டுத்தனமாக கூறுபவர்கள் தான் அவரிடம் இருந்தார்கள். அவர்களே இத்தகைய துயரத்தை ஜெயலாலிதாவிற்கு பரிசாக தந்திருக்கின்றனர்.

அதிமுக ஆட்சியில் அதிகார மையம் ஒரே இடத்தில் மையம் கொண்டு இருக்கும். ஜெவைத் தவிர வேறு யாரும் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது. முக்கிய முடிவுகளுக்காக அமைச்சர்கள் காத்து இருக்க வேண்டும். ஆனால், திமுகவில் அதிகாரம் மையம் பரவலாக்கப்பட்டு இருக்கும். இந்த பரவலாக்கம் அரசு எந்திரம் விரைவாக நடைபெற உதவியாக இருக்கும். திமுக தலைமையை தொடர்பு கொள்ள, சாதாரண அடிமட்ட தொண்டனால் முடியும். ஆனால், இது அதிமுகவில் சாத்தியம் இல்லாத ஒன்று!.

தனக்கான செகண்ட் லைனை உறுவாக்குவதில்தான் ஒரு தலைவனின் வெற்றி இருக்கிறது. சரியான திறமையான தேர்வின் மூலம்தான் அது சாத்தியமாகிறது. அதன் வாயிலாகவே அந்தத் தலைவனின் வெற்றி பதிவு செய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனை நம்பிக்கைக்கு உரியவனாக, விரைந்து முடிவெடுக்கும் தீரனாக, நெருக்கடி நிலையில் சமயோசிதமான முடிவுகளை எடுக்கும் தொலைக் நோக்கு பார்வை கொண்டவனாக, தொண்டர்களை கவர்ந்து இழுக்கும் பேச்சாற்றல் மிக்கவனாக, தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் தலைவனாக, சமூக நோக்கம் கொண்ட சமூதாய சிற்பியாக, முன் வரிசையில் நின்று நல்லதொரு வழிகாட்டியாக என்று பல்வேறு திறமைகளை உள்ளடக்கியே இந்த செகண்ட் லைன் தேர்வு இருக்கிறது!.

அதற்கு மாறாக தனக்கு கீழே யாரையும் வளர விடக் கூடாது என்ற கொள்கை இருந்தால் அவ்வளவுதான். நீங்கள்தான் அந்த நிறுவனத்தின் உடனே வெடிக்கும் வெடி குண்டு!. தமக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள், நமது காலை வாரமாட்டர்கள் என்ற உயர்ந்த நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். இல்லை காலை வாரித்தான் நான் மேலே வந்தேன் என்றால், உங்கள் காலையும் ஒருவன் வாரத் தயங்கமாட்டான்.

போகட்டும், செகண்ட் லைன் உருவாக்குவது என்பது ஒரு தலைவனின் அடிப்படை கடமை, அந்த கடமையிலிருந்து அவன் வழுவும் போதுதான், அந்த இயக்கத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதில் பெரும் கூச்சலும் குழுப்பமும் ஏற்படுகிறது!.

அதுதான் இப்போது அதிமுகவில் நடந்துக் கொண்டு இருக்கிறது.....?!.

-தோழன் மபா.
() () () ()

 
முக நூலில் நான் எழுதிய  இந்த பதிவுக்கு வந்த பின்னோட்டங்கள்.....

  • Chandra Sekaran தான் இல்லாவிட்டால் நிறுவனமோ கட்சியோ அசையாது என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றுதான் தலைமை விரும்புகிறது - இன்றைய சூழலில். செகண்ட் லைனில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. அரசியலில் மட்டுமல்ல, நிறுவனங்களிலும்கூட
  • Vetriselvan Vck Arumai tholarae. Valimai atra katchigalil matumae second lind alladhu kuzhu irukkiradhu seyal padugiradhu tholar
  • Sandilyan Sambandam can you say the second line in Dmk, mdmk, congress, . see throughot india it is the condition now. most of the time the second line are their blood relative. In Admk any one can be cm think about dmk.
  • Mohan Raj மிக நேர்த்தி .....
  • Manikandan Vpmanikandan When sincere,persons are sidelined,where is the talk of 2nd line,today world believes in sycophants, not lending their ears. To grass roots,
  • Balaji Vasudevan in dmk the second line leaders is stalin, kani, alagiri , maran all family members of karuna. the only problem with jaya is she is single
  • Mahesh Babu Padmanabhan Sandilyan Sambandam யாருக்கு இதய நோய் முற்றி, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவேண்டுமோ அவர்களுக்குதான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதை விடுத்து கண்ணில் கண்டவர்களுக்கு எல்லாம் செய்துவிட முடியாது. தற்போது அது அதிமுகவிற்கு தேவைப்படுகிறது. அதைத்தான் பேச முடியும். யார் உப்பைத் தின்றார்களோ அவர்கள்தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் என்றால், அந்த யார் வேண்டுமானாலும் என்பவர்கள் யார்?. அவர்களுக்கு எந்த தகுதியின் அடிப்படையின் முதல்வர் பதவி வழங்கப்படுகிறது?. இவர் கொஞ்சமாய் குனிவார், இவர் நன்றாக முதுகை வளைத்து கீழே விழும்படி குனிவார், இவர் காலில் விழுந்தார் என்றால் நீங்கள்தான் அவரை எழுப்பிவிடவேண்டும் என்பது போன்ற தகுதிகள்தான் முதல்வர் பதவிக்கு அடையாளமா......????

    7
    7 October at 17:38 · Like · 2
  • Sandilyan Sambandam What are all the merits that Kani mozhi, stalin and other possess my friend. எந்த தகுதியின் அடிப்படையின் Raugal, in congress, stalin in DMk, Anubumani in PMK got their position in their party. இவர் காலில் விழுந்தார் because the relationship they have with the party leader.where us In ADMk, they have to show this kind of thing, expect this you can see all the the nonsense among the remaining party. Think about Vasan, PA C. in their own style they cool they bend for Sonia. Hiere in ADMK it is some what more visible that all. Apart from that are we vote and elect our MLA based on any qualification? if we select our MLA based on the gift he gives then he slelct the CM based on the benefit what he going to harvest that all. in this issue all are same7 October at 18:21 · Like
  • Sandilyan Sambandam if we think deeply we did the mistake by the way of voting and selecting ......
  • Mahesh Babu Padmanabhan Sandilyan Sambandam
    • குறிப்பிட்ட வேட்பாளரை ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த வாக்களரை போல....அவருக்கு எதிராக வாக்கு அளித்தவர்களும் கனிசமாக இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தானே வேண்டும். மூடர்களின் கூடாரமோ என்று அஞ்சும் அளவிற்கு இன்றைய ஆட்சியாளர்களின் அடிவருடிகள் இருக்கின்றார்கள். வரிசையாய் நின்று ஹெலிகாப்டருக்கு சலாம் போடுவதும்,பதவி பிரமாணத்தின் போது அமைச்சர்கள் மூக்கை சிந்துவதும் எந்த நாட்டில் நடக்கிறது?. "கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய ஒரு மூத்த குடியின் லட்சணம்" இதுதானா?.

      "காவிரியை வைத்துக் கொள், அம்மாவை விட்டுவிடு" என்று போஸ்டர் ஒட்டுகிறான் ஒருவன். அவனது வாயில் செருப்பால் அடிக்க வேண்டாமா?. டெல்டா விவசாயின் வேதனை தெரியுமா? அவனுக்கு. 'முப்போகம் இரு போகமாச்சி, இரு போகம் ஒரு போகமாச்சி ஒரு போகம் ஒன்றுமில்லாம போச்சு' என்பதை அந்த போஸ்டர் அடித்தவன் உணர்ந்திருந்தால் இப்படி எழுதியிருப்பானா...?.

      நாம் எதை இந்த உலகத்திற்கு கற்றுத் தருகிறோம். இதற்கான மாற்று என்ன என்பதை எப்போது நாம் சிந்திக்கப் போகின்றோம். சுரண்டலையும், சாதியத்தையும், இலவசங்களையும், அத்துமீறல்களையும், சட்டத்தை வளைக்கும் சாதுர்யத்தையும் யார் நமக்கு கற்றுத் தந்தார்கள்?. இன்றைய தமிழ் இளைஞனை எதை சொல்லி அவன் கை பிடித்து அழைத்துச் செல்கிறோம். அவனுக்கு தெரியாமல் போன நமது வரலாற்றை யார் அவனுக்கு சொல்ல போகிறார்கள்?. அரசாங்கமே மதுக்கடைகளை நடத்தும் காலத்தில்தானே அவன் பிறந்திருக்கின்றான். மது கெடுதல் என்றால் ஏன் அதை அரசாங்கமே நடத்துகிறது.....? என்ற கேள்விக்கு நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம்.

      ஆசிரியர்களாகிய நீங்கள்தான் ஆட்டம் காணும் நமது சமூதாயத்தை ஏற்றம் காண செய்ய வேண்டும்.

      செய்வீர்களா...?.
    7 October at 22:06 · Like · 2
  • Sandilyan Sambandam காவிரியை வைத்துக் கொள், அம்மாவை விட்டுவிடு" என்று போஸ்டர் ஒட்டுகிறான் ஒருவன். அவனது வாயில் செருப்பால் அடிக்க வேண்டாமா?. i don't have a second opinion in this mater sure we should do.
  • Sandilyan Sambandam ஆசிரியர்களாகிய நீங்கள்தான் ஆட்டம் காணும் நமது சமூதாயத்தை ஏற்றம் காண செய்ய வேண்டும்.
  • Sandilyan Sambandam ஆசிரியர்களாகிய நீங்கள்தான் ஆட்டம் காணும் நமது சமூதாயத்தை ஏற்றம் காண செய்ய வேண்டும். machi our hands are already tied you know, in Tn a teacher cannot scold , punish a student, the next day the teacher questioned by parents, politician, police, court, m...See More
  • Sandilyan Sambandam அரசாங்கமே மதுக்கடைகளை நடத்தும் காலத்தில்தானே அவன் பிறந்திருக்கின்றான். Ya it is a fact, all government want that their citizen wont think, for their benefit, they want that all Tamilian should be a drunken because, a drunken cannot think what is correct or wrong. so they want their citizen should be always under the influence of alchocal
  • Sandilyan Sambandam I want to register one point clear that am not a blind supporter of ADMK, as like others i want that a lovable, brilliant, able Tamilnadu, and where ever i go i should rise my collar that am a Tamilian
  • Mageshwar Anbazhagan முழுமனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டிய பதிவு.
    இத்தகு சூழ்நிலையில் பாதிக்கபடுவது நல்லது நடக்கும் என நம்பி வாக்களித்து வெற்றிபெற செய்திததிட்ட நம்போன்ற பொதுஜனமே.
  • Mageshwar Anbazhagan தமிழ்நாட்டின் மாணவர் சார்ந்த கல்விமுறை என்பது உயர்ந்த சிந்தனை, நல்லொழுக்கம், துணிவுடன் கூடிய இளைய சமுதாயம் அமையுமேயானால் அதனால் தமக்கும் தமைசார்ந்தோருக்கும் உண்டாகும் தீங்கினை நன்கறிந்தஅரசியல்வாதிகளினாலும், அதிகாரிகளினாலும் நன்கு திட்டமிடப்பட்டு வருங்கால சமூகத்தை பாழ் செய்ய பின்னப்பட்ட ஒரு சதிவலை.
    அறியாத வயதில் மாணவர்தம் தனிப்பட்ட சுதந்திரம் எனும் பெயரால் கொடுக்கப்படும் மட்டற்ற / கட்டுப்பாடற்ற அதிகாரம் குரங்கு கையில் கொடுக்கப்பட்ட பூமாலை என்பதினை அவர்கள் நன்கு அறிவர். இதுவும் ஒரு வகை போதையே.
    உயர்நிலை பள்ளி ஒன்றில் கணினி ஆசிரியையாக பணிபுரியும் என் மனைவி இன்றைய மாணவ மாணவியர் இடையே ஆசிரியர் குறித்த கண்ணோட்டத்தை என்னிடம் பகிரும் போது ஆசிரியர்களின் பரிதாப நிலையினையும் அவர்தம் பணியினை செம்மையாக நிறைவேற்ற முடியா பாதுகாப்பற்ற சூழலையும் கண்டு வருத்தமே மிஞ்சியது.
    Yesterday at 10:31 · Edited
    · Unlike · 1
  • Sandilyan Sambandam Exactly sir, once teaching profession is considers as a noble one, but now it is the worst one after police,
  • Mahesh Babu Padmanabhanநமது நண்பரின் நண்பர் PT மாஸ்டராக இருக்கிறார். அவரது பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறினார். ஜெ கைது பற்றி வகுப்பு மாணவர்களிடம் பேசி கொண்டு இருந்த போது....ஒரு மாணவன் எழுந்திருந்து "அம்மாவ கைது பண்ணது தப்பு சார். அவுங்கதான் எங்களுக்கு லேப்டாப் கொடுத்து இருக்காங்க, சைக்கிள் கொடுத்து இருக்காங்க, எங்க ஆயாவுக்கு ஆடு கொடுத்து இருக்காங்க அவுங்கள எப்படி சார் ஜெயில்ல போட முடியும்....?." என்று கோபத்துடன் கேட்டிருக்கிறான். அரசியல் தெரியாத புரியாத இளம் தளிர்களைக் கூட இந்த இலவசம் என்ற போதை மயக்கி வைத்து இருக்கிறது!.

    இலவசங்களை வழங்கி, வளரும் தலைமுறையை கெடுத்து இருக்கிறார்கள் இன்றைய அரசியல்வாதிகள். இப்படிபட்ட ஒரு தலைமுறையை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமே, நாம்தான் குற்றவாளி!. இதை மாற்ற என்ன வழி.....எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பது கூட நமக்கு இன்னும் புரியவில்லை.
    Yesterday at 21:39 · Like
  • Mahesh Babu Padmanabhan Mageshwar Anbazhagan மகேஷ்வர் உங்கள் தமிழ் நடை நன்றாக இருக்கிறது!. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்!.
  • Srikkanth Pushpala No second lines only Horizontal lines.
    7 hrs · Unlike · 1
  • Mahesh Babu Padmanabhan

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...