சனி, மார்ச் 20, 2010

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு?


மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் இதழியல் படித்த போது, கூட படித்த ஒரு நண்பரின் பெயர் சிட்டுக்குருவி (நாங்கள் வைத்த செல்லப் பெயர்). மனுசன் மகா சுறுசுறுப்பு அதனாலயே அந்த பெயர வச்சோம். திண்டுக்கல்லிலிருந்து வருவார். கூடவே தலைப்பாகட்டி பிரியாணியும் வரும். (ஹூம்... அதெல்லாம் ஒரு காலம்!)

சரி, இந்த பதிவுக்கு அவர் ஒரு 'லீடு' மட்டும்தான். விஷயத்திற்கு வருவோம்.

இன்று உலக சிட்டுக்குருவி தினம்.

நவீன மயமாக்கலில் அழிந்து வரும் உயிரினங்களில் 'சிட்டுக்குருவி'யும் ஒன்று. சிட்டுக்குருவிகளை நாம், நமது வாழ்வில் சந்தோஷம் மற்றும் சுதந்திரத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கின்றோம்.

அழியும் குருவிகள்.

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்று சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப் பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நன்பனான சிட்டுக் குருவி சங்க இலக்கியங்களில் பாடப் பெற்ற உயிரினம் ஆகும். பாரதியார் தனது கவிதைகளில் சிட்டுக் குருவியின் பெருமைகளை பாட மறக்கவில்லை.

காகங்களை போல மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் அறிவுத் திறன் கொண்டது சிட்டுக்குருவிகள். சிதறிய தானியங்களை தலையை சாய்த்து சாய்த்து அது தின்னும் அழகே அழகு!.

அழிந்து வரும் சிறு உயிரினங்களில் சிட்டுக் குருவி மட்டுமல்லாமல் பல்வேறு குருவி இனங்களும் அழியும் தருவாயில் இருக்கிறது.

அதுவும் அறுவடை காலம் என்றால் குருவிகளுக்கு கொண்டாட்டம்தான். எங்கள் ஊரில் வயல் வரப்புகள் ஊடே இரயில் பாதை நீண்டு இருக்கும். இரு புறமும் தந்தி மரங்கள், இரயில் பாதையை தொடர்ந்து சென்றுக் கொண்டு இருக்கும். தந்திக் கம்பிகளில் சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி,கருவாட்டுவாலி, மீன் கொத்தி, நானத்தான் குருவி (மைனா), அக்கா குருவி, பச்சைக் கிளி, என்று ரகத்திற்கு ஒன்றாய் குருவிகள் வரிசை கட்டி அமர்ந்து இருக்கும்.

வயலில் ஆட்கள் நெற்கதிர்களை அறுக்க அறுக்க, அதிலிருந்து பூச்சிகள், வெட்டுக்கிளி, அந்துப் பூச்சி, தட்டான், என்று வித விதமான பூச்சிகள் பறக்கத்தொடங்கும். வரிசை கட்டி காத்திருக்கும் குருவிகள் பறந்து பறந்து பூச்சிகளை வேட்டையாடும். பிறகு தந்தி கம்பங்களில் அமர்ந்து கொள்ளும்.
அத்தகைய கவின் மிகு காட்சிகள் ஆயிரம் இலக்கியத்திற்கு சமம்!.

சில துணிச்சலான சிட்டுக்குருவிகள் மட்டும் ஆட்கள் நெற் கதிர்களை அறுத்து போடும் இடத்திற்கு அருகிலேயே நின்றுக் கொண்டு பூச்சிகளை பிடிக்கும்.

அரி காடை (அறுத்து போட்ட அரிகளில் அமர்ந்து இருக்கும் அதனாலயே அந்த பெயர்), கவுதாரி, கானாங் கோழி போன்ற பறக்க இயலா கோழியினங்கள் அறுவடை நடைபெறும் வயல்களில் மனிதர்களிடமிருந்து கூப்பிடு (ம்) தூரத்தில் இருந்துக் கொண்டு புச்சிகளை பிடிக்கும். இத்தகைய அரிய குருவியினங்கள் இன்று அழிவின் பிடியில் சிக்கியுள்ளது.

மொபைல் போன்களால் ஆபத்து.

களங்கள், வீட்டு முற்றம், மளிகை கடைகள், தானியத் தோட்டங்கள், உணவு தானியங்களை ஏற்றிச் செல்லும் பார வண்டிகள், தானியங்களை சேமித்து வைக்கும் கிட்டங்கிகள், வீட்டின் கூரை என்று மனிதன் புழங்கும் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சிட்டுக்குருவிகள் மொபைல் போன் களின் வருகையால் 90 சதவீதம் அழிந்துவிட்டன என்கின்றன ஆய்வுகள்.

மொபைல் போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும் கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது. அதோடு மீதமுள்ள குருவிகளின் கருப்பையில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மெல்ல மெல்ல அருகி வரும் சிட்டுக்குருவியை காப்பது நமது கடமை.

குருவிகளை காக்கும் வழி.

1 பயிர்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளை அடிப்பதை தவிற்போம்.
2 சிறிய வீடானாலும், அபார்ட்மெண்டானாலும் குருவிகளை பாதுகாக்க சிறிய தோட்டங்களை பால்கனியில் அமைக்கலாம்.
3 வீட்டின் ஜன்னல்களை திறந்து வைத்து குருவிகளுக்கு உணவிடலாம்.
4 குருவிகள் குடிக்க சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும்.
5 முக்கியமாக ஜன்னலில் வந்தமரும் குருவிகளை 'அச்சூ' என்று விரட்டாத மன நிலை வேண்டும்.

'காக்கை குருவி எங்கள் ஜாதியென்ற பாரதியின் கனவை புத்துயிர் பெறச் செய்வோம்'.

8 கருத்துகள்:

அக்கினிச் சித்தன் சொன்னது…

பாத்துக்கிட்டே இருங்க, கடேசியில் மனுசனுங்க மட்டுந்தான் இருக்கப்போறோம். அடிச்சுக்கிட்டே!

மதுரை சரவணன் சொன்னது…

சிட்டுக்குருவி காக்கப் பாடுபடுவோம். நல்ல தகவல் அருமையாக , எளிமையாக,இனிமையாக கொடுத்துள்ளீர்கள்.நன்றி.

பிச்சைப்பாத்திரம் சொன்னது…

அவசியமான பதிவு.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி அக்னிச் சித்தன்.

ஆல மரத்திற்கு கீழே ஒரு மரமும் வளராது என்பார்கள். மனிதனும் அப்படித்தான். தானும் நிம்மதியாக வாழ மாட்டான், பிற உயிரினத்தையும் நிம்மதியாக வாழவிடமாட்டான்.

Kandumany Veluppillai Rudra சொன்னது…

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு? அது ஒரு காலம்,இன்று குருவிகள் கூடு கட்டுவதற்கே இடமில்லை இது இந்தக்காலம்.

பத்மா சொன்னது…

எங்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு சிட்டு குருவி கூடு உண்டு .சிலசமயம் செம்பருத்திசெடியில் தேன் சிட்டு கூடு கட்டும் .என் துணி காயவைக்கும் கொடியில் காலை இரு குயில்கள் வந்து அமர்ந்து பாடும். எப்போதாவது மரங்கொத்தியார் வருகை புரிவார். என் பெரும் சொத்தாக நினைப்பது இவர்களின் இருப்பையே

ப.கந்தசாமி சொன்னது…

சுற்றுச்சூழல் மாசுபடுதலே இந்த மாதிரி சிறு உயிரினங்கள் அழிவதற்கு காரணம். இப்படியே போனால் மனித இனமும் அழிந்து போகும் காலமும் ஒரு நாள் வரும்.

இராஜ. தியாகராஜன் சொன்னது…

கீழ்வரும் வெண்பா, நான் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் புனைந்தது.
நகரத்தை நஞ்செனவே நாசஞ்செய் சூழல்;
சகட்டுப் புகைதூசின் தாக்கம்; - நுகர்ந்தமையாற்
சிட்டுகளுஞ் சீக்கிரமாய்ச் சீச்சீ யெனநகர்
விட்டேகிப் போயின வே!

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...