வெள்ளி, நவம்பர் 02, 2018

பிறிதொன்றாய் - கவிதை

இந்த வாரம் (29.10..2018)  கல்கி இதழில் எனது கவிதை !

-----------------------------

'பிறிதொன்றாய்'

குட்டி மீன்கள் நீந்தும் அத்தடாகத்தில்
அவன் மிதந்துக்கொண்டு இருந்தான்
நேற்றைய இரவுகளில் அவன்
உயிரோடு இருந்தானா என்பதை இனிதான்
துப்பு துலக்க வேண்டும்.

பல முறை அவன் இதே தடாகத்தில்
மீன்களிடத்தில் இளைப்பாறியதுண்டு

அவனது தோல்கள் உரிந்து செதில்களாக உதிரும்வரை...
அவன் அவற்றோடு நீந்தி களித்தின்புறுவான்

காலிடிக்கில் வழுக்கிச் செல்லும் அம் மீன்கள்
அதற்காக அவனிடத்திலிருந்து பொறிகளை பரிசாக பெறுவதுண்டு
சொப்புவாய்யைத் திறந்து கவ்வும் அழுகே...அழகு!

கொதி நிலையற்ற அவ்வாழ் பிரதேசத்தில்
தக்கையாகும் வரை நீந்துவான்.

அக்கரையில் மிதந்த அவனது உடலை
இடுப்பில் கயிறுக் கட்டி இக்கரை கொண்டுவந்தார்கள்

இனி அவனது உடலை பிரேதப்பரிசோதனை செய்யவேண்டும்

புறம் அகம் எதுவுமின்றி உயிர் போன
தடமுமின்றிக் கிடந்தான் அவன்.

அறிக்கை; 'சந்தேகத்திற்கிடமான மரணம்' என்று சொல்லிவிட...

அத்தடாகமெங்கும்
மீன்கள் துள்ளிக் குதித்து நீந்தின
புதிதாய் வந்த மீனுடன்.

-தோழன் மபா

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

கவிதை இறந்ததைக் குறித்து உயிரோட்டமான வார்த்தைகளுடன்...

வாழ்த்துகள் தோழர்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துகள் ஐயா
தொடர்ந்து வலைப் பூவில் எழுதுங்கள்

கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !

    கவிஞர் ரவி சுப்ரமணியன்                 ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும்  என்று நி...