சாப்பிட்டுவிட்டு தூங்கலாம் (வீட்டில்தாங்க..) என்றுப் பார்த்தால், எனது இரண்டு வயது மகன் 'நை'யென்று அழுதுகொண்டு இருந்தான். எனது மகளும் "வெளியே எங்காவது போகலாம் ப்பா" என்றாள்.
எனது இருசக்கர வாகனத்தில் இருவரையும் அழைத்துக் கொண்டு, என் வீட்டின் அருகில் உள்ள 'அன்னனுர்' இரயில் நிலையத்திற்கு சென்றேன். அன்னனுர் இரயில் நிலையம், சென்னை ஆவடி இரயில் மார்க்கத்தில் திருமுல்லைவாயிலுக்கும் ஆவடிக்கும் இடையில் இருக்கிறது. அதிகம் அறியப்படாத இரயில் நிலையம் அது!. பரந்து விரிந்து, அதிகம் கூட்டம் இல்லாமல் பார்க்கவே அழகாக இருக்கும். சென்னை தமிழில் சொல்வதென்றால் 'ஜில்லோன்னு' இருக்கும்.
2006 வாக்கில் நான் இங்கு வீடு வாங்கிக்கொண்டு வந்தேன். அப்போதுதான் இங்கு ஒரு இரயில் நிலையம் இருப்பதையே பார்த்தேன். பார்த்ததும் பிடித்துவிட்டது. அருகிலேயே இரயில் பணிமனையும் இருக்கிறது.
வேகமாக வளர்ந்துவரும் புறநகர் பகுதி இது. திருமுல்லைவாயில், அன்னனுர் பகுதிகளில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறன. சென்னையில் வீடு வாங்கும் எண்ணம் உள்ளவர்கள் இங்கு முயற்சி செய்யலாம். விலையும் சற்று குறைவுதான்.
போகட்டும் விஷயத்திற்கு வருவோம்...
பைக்கை மெதுவாக ஓட்டிக் கொண்டு இருந்தேன்.
அருகில் மாடுகள் மேய்ந்துக் கொண்டு இருந்தது, என்னைப் பார்த்து என் மகள் கேட்டாள்...

" அப்பா, இங்க மாடு 'அம்மா'ன்னு கத்துது. லண்டன்ல எப்படி கத்தும் மதர்ன்னு கத்துமா? " என்றாள்.
"இல்லம்மா மாடு எந்த மொழியில கத்தினாலும் 'அம்மா'ன்னுதான் கத்தும். மதர்ன்னெல்லாம் கத்தாது" என்றேன்.
கொஞ்ச நேரம் அமைதியாக வந்தவள்.
மீண்டும் ஒரு கேள்வி கேட்டாள்.
'ஏம்பா... எதுக்கு நாம மாட்டெல்லாம் 'வாயில்லா ஜீவன்'னு சொல்றோம்?. அதுக்குதான் வாய் இருக்கே. அப்படின்னா அதுங்கள நாம 'பேச்சில்லா ஜீவன்னு'தானே சொல்லனும் என்றாள்".
ஒன்றாம் வகுப்பு படிக்கும் எனது மகளிடமிருந்து இந்தக் கேள்வியை நான் சற்றும் எதிர்ப்பார்கவில்லை.
பொதுவாக மிருகங்களை நாம் வாயில்லா ஜீவன்னுதான் சொல்கிறோம். அதாவது; எதைவைத்து அப்படிச் சொல்கிறோம், அதுங்களால பேசமுடியாது என்பதால்தான். மற்றப்படி கத்தும், உங்களை உணர்ந்துக் கொள்ளும், தழை, வைக்கோல் உண்ணும், தண்ணி குடிக்கும். பேச்சைத் தவிர இன்னபிற வேளைகளையும் செய்யும். அப்படி இருக்க அதை நாம் வாயில்லா ஜீவன்னு சொல்றதைவிட 'பேச்சில்லா ஜீவன்னு' சொல்றதுதானே சரி?
தெரிந்தவர்கள் கொஞ்சம் தெளிவுப்படுதுங்களேன்?