சனி, நவம்பர் 02, 2013

திணிக்கப்பட்ட தீபாவளியும், புறம் தள்ளப்பட்ட பொங்கலும்.

 

                          ஒரு இனம் இருக்க, அந்த இனத்தின் கலாச்சாரம் அழிக்கப்படுவதென்பது, உடல் இருக்க உயிர் பறிக்கப்படுவது போல். அந்த இனத்தின் பழக்க வழக்கங்களும், பண்டிகைகளும் அந்நிய இனத்தின் வருகையால் முற்றிலும் புறம் தள்ளப்பட்டு,  அந்த அந்நிய இனத்தின் பழக்க வழக்கங்களை சுவிகரீத்துக் கொள்வது உலகில் நடவாத ஒன்று.  அப்படியே நடந்தாலும் அது முற்றிலும் மாறிவிடுவதில்லை.
  
'கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி' என்று வாய் கிழிய பேசும் நாம், நமது கலாச்சாரத்தை காவு கொடுத்தது ஏன்?  கட்டுக்கதைகளும், பொய் புரட்டல்களும் நமது மேன்மையை மறைத்து விட முடியுமா...?  யாரோ ஒருவரின் பண்டிகையை நம் பண்டிகையாக நாம் கொண்டாடத்தான் வேண்டுமா....? அதுவும் நமது பண்டிகையை புறம்தள்ளிவிட்டு....?  

அது, இங்குதான் தமிழகத்தில்தான் நடந்துக் கொண்டு இருக்கிறது.


பொங்கலைத் தின்ற தீபாவளி.

தீபாவளி கொண்டாடப்படுவதற்கு முன் தமிழ்நாட்டில், தமிழர் பண்டிகையான பொங்கல் மட்டுமே பிரதான பண்டிகையாக இருந்து  வந்துள்ளது. அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மூன்று நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.  

பழையன கழித்து, அல்லாதவற்றை ஒழித்து, வீடு துடைத்து, வர்ணம் பூசி,  மார்கழி தொடங்கி தை வரை வாசலில்    மாக்கோலம் இட்டு, அதில் பறங்கிப் பூ வைத்து,   அப்போதுதான் அறுவடை செய்த தானியங்களை பொங்கி (சமைத்து), உலகின் முதற்கடவுளான சூரியனுக்குப் படைத்து,  உழுவதற்கு உதவி செய்த அந்த வாயில்லா ஜீவன்களுக்கு (ஆடு மாடு), நன்றி தெரிவிக்கும் விழாவாகத்தான் தமிழன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினான். தமிழர்கள் தங்களது பண்டிகைகளை இயற்கை சார்ந்தே கொண்டாடிவந்தனர் என்பது இயற்கை!.

ஆனால், இடைக்காலத்தில் ஆரியர்களின் வருகைக்குப் பின்னர்தான் எல்லாமே மாறிப்போனது. ஜோதிடம், வானசாஸ்த்திரம், யாகம், பூஜை என்று மன்னர்களிடம் அண்டிப் பிழைத்த  ஆரியர்கள், பிற்பாடு மன்னனை வளைத்து,  மண்னையும் வளைத்தார்கள்.  அவர்களது கலாச்சாரத்தை நம்முல் விதைத்தார்கள்.

அதுநாள் வரை சுமூகமாக போய்கொண்டிருந்த தமிழர்கள் வாழ்வியலில்,  பெரும் மாற்றம் காணத் தொடங்கியது. கலச்சாரா மாறுபாடும் அப்போதுதான் தோன்றியது.  வடபுலத்தார் தங்களுக்குள் கொண்டாடிக் கொண்டிருந்த பண்டிகைகளில், மன்னனை சிறுப்பு அழைப்பாளர்களாக அழைத்தனர்.   பிற்பாடு மன்னனிடம் கூறி  இந்தப் பண்டிகையை எல்லோரும் கொண்டாட வேண்டும், அதற்கு நீங்கள்தான் உத்திரவிட வேண்டும்  என்று ஓதி மண் ஆளும் மன்னன் மூலமாக மக்கள் மனதை மாற்றியிருப்பார்கள்.

பின்னர் சிறுக சிறுக மாற்றம் ஏற்பட்டு தமிழர் பண்டிகையின் முக்கியத்துவம் குறைந்து 'தீபாவளி' முக்கிய பண்டிகையாக மாறியிருக்கும்.


கட்டுக் கதை  தீபாவளி !

'கிருஷ்ண பக்ஷம், அமாவசை திதிக்கு முன்தினம்  சதுர்த்தசி திதி அன்று நடுநிசி காலம் கழிந்து, பிரம்ம மூகூர்த்த காலத்திற்கு முன்பாக நரகாசுரனை, ஸ்ரீ கிருஷ்ண பகவானும் ராதையும் வதம் செய்ததாகவும், இந்த நாளை அனைத்து மக்களும் புத்தாடை அணிந்து குதுகலத்துடன் கொண்டாடி மகிழ வேண்டும் என்று நரகாசுரன் கிருஷ்ணரை வேண்டிக் கொண்டதாக  சொல்லப்படுகிறது.   அதன் விளைவாக தோன்றியதுதான் தீபாவளி என்கிறார்கள். 

ஒரு திருவிழா என்றால் அதில் ஒரு பொருள் இருக்கவேண்டும். ஒரு கருத்து இருக்க வேண்டும் இது எதுவும் இன்றி,  கற்பனையின் உச்சமாகத்தான் தீபாவளி இருக்கிறது.  தின்பண்டம், புத்தாடை, பரிசுப் பொருள், வானவேடிக்கை இதுதான் இத் திருவிழாவை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
போகட்டும்.

அதோடு தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் (எண்ணை குளியல்) , 'கோதார கவுரி விரதம்' போன்றவை கடைபிடிக்கப்  படுகிறது. இதில் எங்கேயாவது தமிழர் பண்பாடு,  கலாச்சாரம் இருக்கிறதா?.  அப்படி இருந்திருந்தால் 'காவேரி, தாமிரபரணி,பவானி,பெரியாறு குளியல்' என்றுதானே இருக்கவேண்டும்.  தீபாவளி பண்டிகை என்பது முழுக்க முழுக்க வடபுலத்தாரின் பண்டிகை. அதற்கும் நமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதுதான் உண்மை.  

நம்மீதும் குற்றம் உண்டு.


'மாற்றான் வீட்டு மல்லிகைக்கும் வாசம் உண்டு' என்றார் அறிஞர் அண்ணா, 

யார் எது சொன்னாலும் அல்லது காட்டினாலும், சிந்திப்பதில்லை.  'ஆவென்று' வாய் பிளக்கும் கூட்டமாக மாறிவருகிறோம்.  ஏன் என்று கேள்வி கேட்பதில்லை, அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், என்று நினைப்பது.  சாதி பாகுபாடுப் பார்த்து பிரிந்தே இருப்பது.

இன்னோரு சக தமிழன் பாதிக்கப்பட்டாலும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. நமக்கு வராமல் இருந்தால் சரி என்று ஒதுங்கி விடுவது. அல்லது ஒதுங்கி வாழ்வது. என்று தமிழனிடம் பட்டியல் போட நிறையவே மைனஸ்  இருக்கிறது. 

என்னதான் பிறர் நம் மீது எதையாவது திணித்தாலும், " உன் சுய புத்தி எங்கேயா போச்சி...?" என்று எவனாவது கேள்வி கேட்டால், மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வைப்பது.  பிறரை குற்றம் சொல்லும் அதே நேரத்தில்,   அதில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை நாம் ஒத்துக் கொள்ளதான் வேண்டும்.


தமிழர் திருவிழாவிற்கும் முக்கியத்துவம் கொடுங்கள்:

ஒரே ஒரு நாள் தீபாவளி பண்டிகைக்கு எத்தனை கோடி பணம் செலவழிக்கப்படுகிறது தெரியுமா. தீபாவளி பண்டிகையில் எங்கேயாவது உண்மைத் தன்மை இருக்கிறதா?. ஒரு கட்டுக் கதைக்கு இத்தனை பெரிய ஆர்பாட்டாமா?. அதைவிட உயிரோட்டமான பொங்கல் பண்டிகைக்கு இந்த முக்கியத்துவம் உண்டா?

தீபாவளிக்கு மாஞ்சி மாஞ்சி புது துணி எடுக்கும் தமிழன், தனது  பொங்கல் பண்டிகைக்கு புதுத் துணி எடுக்கிறானா?. அதைப் பற்றிய சுய சிந்தனைக் கூட  பழந்தமிழன் முதற்கொண்டு சமகால தமிழன் வரைக்கும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அருகில் இருக்கும் மலையாளிகள் தீபாவளி கொண்டாடுவதில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.  ஓணம்தானே அவர்கள பிரதான பண்டிகை. இங்கு மட்டும் ஏன் மாறிபோனது?.

தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை.  பொங்கல் பண்டிகைக்கும் முக்கியத்துவம் கொடுங்கள் என்பதுதான் எனது கேள்வி. தமிழை தாய் மொழியாகக் கொண்ட வியாபாரிகளில் எத்தனை பேர் பொங்கல் பண்டிகைக்கு தள்ளுபடி வழங்குகிறார்கள். அதைப் பற்றிய சிந்தனை வியாபாரிகளிடத்தில் இருக்கிறதா?. அவர்களுக்கு அவர்களது கல்லாப்பெட்டியும் பானை வயிறும் நிறைந்தால் போதும். இதில் இன உணர்வாவது மண்ணங்கட்டியாவது. 'போப்பா, போயி வேலெய பாப்பியா, இக்கிட்டு நின்னுக்கிட்டு பினாத்துகிட்டு இருக்க?' என்று ஒதுங்கி விடுவார்கள்.


காலத்தின் கோலம்

காலம் எப்போதும் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த பூமி எத்தனை யுகங்களைக் கடந்திருக்கும் என்பது நமக்குத் தெரியாமா? ஒரு அறுவடை முடிந்து அடுத்த அறுவடை போன்றதுதான்,   பூமி அழிந்து புத்துயிர் பெறுவது.  நாம் எத்தனையாவது ஈடில் இருக்கிறோம் என்று யாருக்காவது தெரியுமா...!?

இப்படி பதில் தெரியா கேள்விகளுக்கிடையேதான்  மனிதன், தமது கலாச்சாரத்தையும் மொழியையும் காக்க பல காலமாக போராடி வருகிறான்.  போராடும் அதே வேளையில் பிறர் கலாச்சாரத்தையும் அவர்தம் மொழியையும் அந்த இனத்தையும் சிதைக்கவும் தயங்குவதில்லை.  இதில் 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்பதுபோல் யார் கை ஓங்கி இருக்கிறதோ அவனது இனமும் மொழியும் காப்பாற்றப்படுகிறது.

தடுமாறி, தயங்கி, தூங்கிக் கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்ந்துவரும்  ஒரு இனத்தின்  இயல்பு என்பது, நம்மை போலவே  இருக்குமானால், அதுதான் அந்த இன அழிவின் ஆரம்பம்.   அதன் தொடக்கம் வெளியில் தெரியாமல் தொடங்கி, நாம் விழித்துப் பார்க்கும்போது முடிந்து இருக்கும்.


         'உலகில் எதுவும் தானாக  மாறாது 'என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்'. 
                                                                                                                      -தோழன் மபா.
                                                                                                                          மீள் பதிவு!.

11 கருத்துகள்:

நம்பள்கி சொன்னது…

உண்மைதான்! சுய புத்தியில்லாத ஒரு கூடம். ஒரு இனத்தை அழிக்க மொழியை அழித்தால் பொது; கூடவே கலாசாரமும் அழியும். வைணவர்கள் கும்பிட்டால் கூட பரவாயில்லை. சைவர்கள் [கிருஷ்ணனை கும்பிடாதவர்கள்] கூட கும்பிடுது தமாஷ்!

தமிழ்மணம் வோட்டு +1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று கூறி, நாமும் வாழ வேண்டும், நமது பெருமைகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதையே மறந்துவிட்டோம் ஐயா.
அதிக மறதிக்கும், கலாசார சீரழிவிற்கும் ஆட்பட்ட இனங்களில் முதலிடத்தில் தமிழினம்தான் இருக்கும் என எண்ணுகின்றேன்.

இராய செல்லப்பா சொன்னது…

தீபாவளி என்பது தமிழரின் பண்டிகை இல்லை என்பது உண்மையே. ஆனால் வணிகர்களால் மக்கள் மீது திணிக்கப்பட்ட பண்டிகை. (ஆடித்தள்ளுபடி மாதிரி). அது மட்டுமன்றி, நாம் கொண்டாடும் ஆங்கிலப் புத்தாண்டும் தமிழரின் பண்டிகை இல்லையே! போதாததற்கு வேலண்டைன் தினமும் சேர்ந்துவிட்டதே! உலகமயமான பொருளாதாரச் சூழ்நிலையில் இதுபோன்று பல்வேறு இன, மொழி, மரபுகள் சார்ந்த பண்டிகைகளைக் கொண்டாடவேண்டி வருவதில் வியப்பில்லை. (2) பொங்கல் கொண்டாடுவதை யாரும் வேண்டாம் என்றா சொன்னார்கள்? காவிரியும் இல்லை, வான் மழையும் இல்லை, தோண்டிப் பிடிக்கவும் தரைநீர் இல்லை, விவசாயி எங்கிருக்கிறான் இப்போது? பிறகு பொங்கல் கொண்டாடப்போவது யார்? - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி நம்பள்கி!
வருகை தந்ததற்கும் கருத்து சொன்னதற்கும்!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி தித!
தீபாவளி வாழ்த்துகள்!.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ கரந்தை ஜெயக்குமார்,
நன்றி அய்யா!.
இந்தளவிற்கு மொழி மற்றும் கலாச்சார ஆக்கிரமிப்பு இருந்தாலும் தமிழ் மொழியும், தமிழனும் உயிர்ப்புடன் இருக்க அவனது மொழிப்பற்றே காரணம்!.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ Chellappa Yagyaswamy.

நன்றி சார்!,

இன்றும் தமிழ் மாதத்தின் பெயரை வரிசைக்கிரமாக சொல்ல, நான் சற்றே தடுமாறுவேன். ஆங்கில ஆண்டு வரிசை தலை கீழ் பாடம். இது எனது குற்றம் அல்ல, இப்படிப் பட்ட ஒரு தலை முறையினரை வளர்த்துவிட்ட போன தலைமுறையையைத்தான் நாம் குற்றம் சொல்ல வேண்டும். எனக்கு நடந்ததுதான் இன்று எனது குழந்தைகளுக்கும் நடந்துக் கொண்டு இருக்கிறது.

தண்ணி இல்லை, மழை இல்லை, விவசாயம் இல்லை என்று, நமது பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் இருப்பது, பக்கத்துவீட்டுக்காரியை அம்மா என்று வாரி அணைப்பது போன்றது. எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாத தீபாவளியை, இந்த அளவிற்கு நாம் கொண்டாடி மகிழும் போது, இயற்கைக்கு நன்றி சொல்லக் கூடிய பொங்கல் திருவிழாவினை கொண்டாடுவதில் தப்பில்லை.

பலவேறு இன மொழி மனிதர்கள் இருந்தாலும், நமது பொங்கல் பண்டிகையை தமிழகத்தில்தானே கொண்டடுகிறேம். மனிதர்கள் வருவார்கள் போவார்கள், ஒரு இனத்தின் மொழி மற்றும் பண்பாட்டினை தற்காத்து அதை வரும் தலைமுறையினரிடம் வழங்குவதே நிகழ்கால மனிதர்களின் தலையாயக் கடமை.

அதை செய்யவில்லை என்றால் நாம்தான் முதல் குற்றவாளி?!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

கி. பாரதிதாசன் கவிஞா்.

Wish you a Happy Deepavali!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

தெளிவான கட்டுரை...
நன்றி...

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...