செவ்வாய், மார்ச் 11, 2025

தர்மேந்திர பிரதான் - தமிழர்களுக்கு பொது எதிரியா ???

தமிழர்களுக்கு காலம்தோறும் ஒரு பொது எதிரி உருவாவார்கள் போலும்....??


தர்மேந்திர பிரதான்

முன்பு இலங்கை அதிபர் ஜெயவர்தனா, பின்பு அதே இலங்கையிலிருந்து
ருந்து கோத்தபய ராஜபக்சே. அந்த லிஸ்டில் புதிதாக சேர்ந்திருக்கிறார் ஒன்றிய கல்வியமைச்சர் பாஜகவின் தர்மேந்திர பிரதான் ?

புதிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் திட்டத்தையும் முன்னிலைப்படுத்தும் பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளை தமிழ்நாடு ஏற்காவிட்டால், தமிழகத்துக்குத் தரவேண்டிய 2,152 கோடி கல்விக்கான நிதியை   
கொடுக்க முடியாது என்று காட்டமாக கூறினார். தர்மேந்திர பிரதான்.  

இவரது ஆணவப் பேச்சு, தமிழக மக்களிடையே கோபத்தைக் கிளறியிருக்கிறது. 
தமிழகத்திலிருந்து பிரதானுக்கு பெரும் கண்டனங்கள் எழுந்தது. கடந்தவாரம் சென்னையில் நடக்க இருந்த கூட்டத்திற்கு வரவிருந்த தர்மேந்திர பிரதான், நிலமை சூடாக இருப்பதை உணர்ந்து கடைசி நேரத்தில் தமிழகத்திற்கு வருவதை தவிர்த்துவிட்டார். 

இந்நிலையில்... இன்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் தமிழக மக்களை மீண்டும் சீண்டியுள்ளார் தர்மேந்திர பிரதான். புதியக் கல்வி கொள்கைக்கு எதிராக முழக்கமிட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து... "நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதிகள்" என்றிருக்கிறார். இவரது பேச்சு மீண்டும் தமிழகத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

 தர்மேந்திர பிரதானின் இந்த மிரட்டல் பேச்சுக்கு, தமிழக முதல்வர் முதற்கொண்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துவருகிறார்கள்
மத்திய கல்வி அமைச்சர் பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்” என்றார் முதல்வர் ஸ்டாலின் காட்டமாக. 

தர்மேந்திர பிரதானின் அரசியல் முதிர்ச்சியற்ற பேச்சு, தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீப காலமாக இவர் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து காட்டமாக பேசிவருகிறார்.  

"அரண்மனை நாயே, அடுக்கடா வாயை"
 என்று மந்திரிகுமாரியில் கலைஞர் எழுதிய வசனம்தான் ஞாபகத்தில் வருகிறது. 

தமிழை, தமிழர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்திப் பேசி... 
தமிழர்களின் பொது எதிரியாக மாறி வருகிறாரா தர்மேந்திர பிரதான் ???


ஞாயிறு, மார்ச் 09, 2025

'இது பெண்களுக்கான நேரம்'


நினைத்துப் பார்த்தால் ஆண் பெண் என்ற பேதம் ஒரு ஹம்பக் என்றே தோன்றுகிறது. 

அம்மா, அக்கா, தங்கை, மகள் என்று பெண்கள் சூழ் பெரு உலகமாக நமது உலகம் தொன்று தொட்டு வருகிறது. தினந்தோறும் அவர்களுடன்தான் பொழுது புலர்கிறது, சாய்கிறது. அவர்களின் நமக்கான நாட்கள் என்றுமே தொடங்கப்படுவதில்லை.

இந்த உலகம் தோன்றிய பொழுது பெண் வழிச் சமூகமாகவே இருந்தது. அது 'தாயின் ராஜ்யம்'. அவளே அனைத்தையும் தீர்மானித்தாள். தாய், மகன், மகள் என்ற பேதமில்லை. அங்கே உன்னுடையது- என்னுடையது என்ற வேறுபாடில்லை, அங்கு எல்லாமே பொது. 
அவளது ராஜ்ஜியத்தில் எல்லா ஆடவர் மீதும் தாய்க்குதான் முதல் அதிகாரம் இருந்தது என்கிறார் ராகுல சங்கிருத்தியாயன் தனது 'வால்காவிலிருந்து கங்கை வரை' நூலில். 

முந்தைய ஆண்களின் பெயரைக் கூட சொல்லுவதற்கு பெண்கள் அஞ்சினார்கள். ஆண் மட்டுமே அனைத்தையும் செய்ய வல்லமை உடையவன் என்ற ஒரு பிம்பம் பெண்களிடம் கட்டமைக்கப்பட்டது. அவள் கணவனுக்குப் பின்னால் மூணு அடி தள்ளியே நடந்துவந்தாள். 

பெண்கள் அவளது உடலைக் கொண்டே பொது அளவீடுகளின் வழியே வளர்க்கப்பட்டனர். போர்க்காலங்களில் ஆவினங்களை கவர்வது போல் பெண்களை கவர்ந்து இழுத்து சென்றார்கள். அவளுக்கென்று எந்த உரிமையும் இல்லை. மதவாத வேதங்களும் பெண்களை அடிமை என்றே சித்தரித்தது. 

இன்று உலகம் மீண்டும் பெண் வழிச் சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறது. பெண்கள் மிக அதிக பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறார்கள். பெரிய நிறுவனங்களை தலைமை தாங்கி வழி நடத்துகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் பணிபுரியும் இடங்களில் பாலின பேதம் இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது.
உலகளாவில் 2024 ஆம் ஆண்டில் 32.2% பெண்கள் தலைமைப் பதவிக்கு வந்துள்ளனர். 

கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியால், வீடுகளில் பாலின பேதங்கள் குறைந்துள்ளன. பெண்களின் உடல் ரீதியான இடர்பாடுகளில் குடும்பத்தினருக்கு ஒரு புரிதல் வந்திருக்கிறது. அந்த மூன்று நாட்களில் அவள் முன்புபோல் தனது உடமைகளை தூக்கிக் கொண்டு ஓட வேண்டாம். அது வழமையான ஒன்றாக, சகிக்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது.

கடைக்கு செல்லும் போது, ​​மிக இயல்பாக 'அப்பா நாப்கின்ஸ் வாங்கிக்கிட்டு வந்துடுங்க'
என்கிறாள் மகள். "எந்த பிராண்டுமா ?" என்ற கேள்விக்கு, ஏதோ சோப்பு சீப்பு பெயர் சொல்வது போல் சங்கோஜமின்றி சொல்லிவிடுகிறாள். நாமும் அவள் கேட்கும் பிராண்டை கடையாக ஏறி இறங்கி வாங்கி வந்துவிடுகிறோம். 

ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே... அந்த குழந்தையின் தகப்பன், ஆண் பெண் பேதமற்ற மனிதனாக, அவனும் புதிதாக பிறக்கிறான். அதுநாள்வரையில் ஆண்கள் உலகில் வாழ்ந்து கொண்டிருந்தவன் இப்போது பெண்கள் உலகத்தில் நுழைகிறான். மகளை பார்க்கும் போது அவளது வலிகளை அவனும் உணர்கிறான் 

ஒரு பெண்ணும் அப்படிதான். "ஏய் அவன் என்னை பார்க்கிறாண்டி. இவன் முறைக்கிறாண்டி" என்று ஆண்களை கண்டாலே பயந்து கதா தூரம் ஓடுகிற அந்த பதின் பருவப் பெண், பிற்பாடு திருமணம் முடிந்து, ஒரு ஆண் குழந்தைக்கு தாயானவுடன் அவளும் ஆண்கள் உலகில் நுழைகிறாள்.

அவளுக்கு, அவளது மகன்தான் உலகம் என்றாகிவிடுகிறது. அவனை உள்ளும் புறமுமாக, நுணுக்கமாக அறிந்து வைத்திருக்கிறாள். அவனது சிறு அசைவுக்குக்கூட அவளிடம் ஒரு பதில் இருக்கும். ஆண்களை கண்டு மிரண்டு ஓடியவள், மிக எளிதாக தனது மகனை வளர்க்கிறாள். 

ஆணுக்கும் பெண்ணுக்கும் முன்பைவிட இப்போது பரஸ்பர புரிதல் வந்திருக்கிறது. கணவன் மனைவி என்ற பந்தத்தைத் தாண்டி அவர்கள் 'நண்பர்கள்' என்ற அளவிற்கு நெருக்கமாக இருக்கிறார்கள். கணவனை பெயர் செல்லி அழைப்பதற்குப் பயந்த இந்திய மனைவிகள், இன்று 'வாடா போடா' என்ற அளவிற்கு வந்திருக்கிறார்கள். (பாவம் பயலுகள்தான் செய்வறியாது முழி பிதுங்கிக் கிடக்கிறார்கள். இப்படியானபோக்கு இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் நீடிக்கும்)
மெக்ஸிக்கோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் 

"மனிதகுலத்தின் போக்கை ஆண்கள் மட்டுமே வழி நடத்துகிறார்கள் என்று நம்பவைக்கப்பட்டது. அவர்கள் விரும்பிய வரலாற்றை அடைய குழந்தை பருவத்திலிருந்தே நம்மில் பலருக்கு அப்படியே சொல்லப்பட்டது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கண்ணோட்டம் தலைகீழாக மாறிவிட்டது.  இது பெண்களுக்கான நேரம்" என்றார் மெக்ஸிக்கோவின் அதிபர் கிளாடியா ஷீன்பாம் தனது பதவியேற்பு உரையில்.

20 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகான நவீன உலகப் வார்ப்புகளில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இடைவெளி குறுகிக் கொண்டே வருகிறது.  

அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் !!

-மபா. 
8.3.2025

திங்கள், செப்டம்பர் 23, 2024

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்





படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது. 

ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமான திரைக்கதையாக்குவதில் சேட்டன்கள் மகா சமர்த்தர்கள். அப்படி நெட்பிளிக்ஸில் வந்து கவனம் பெற்ற மலையாள படம்தான் 'அடியோஸ் அமிகோ'  (படம்: தமிழில் டப் செய்யப்பட்டிருக்கிறது.)

அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்ந்திருக்கும் ஒருவனுக்கு, ஆஸ்பத்திரி செலவுக்கு 25 ஆயிரம் தேவைப்படுகிறது. தங்கையிடமிருந்து போன் வந்து கொண்டே இருக்கிறது. யார்யாரிடமோ பணம் கேட்கிறான். எல்லோரும் கை விரிக்க....ஏற்கனவே வாங்கி கொடுக்காமல் இருக்கும் நண்பனிடமே மீண்டும் கேட்கிறான். குடிக்க பணம் கேட்கிறான் என்று நினைத்து அவனை திட்டி தீர்க்கும் அவனது நண்பன்; முடிவில்... "எதையாவது பண்ணி தொலைக்கிறேன், பஸ்ஸ்டாண்டுக்கு வா" என்கிறான். 
 
அவன் பஸ்ஸ்டாண்டில் காத்திருக்கிறான். 

கிடைக்கும் பஸ்ஸில் ஏறி, நினைக்கும் இடத்தில் இறங்கி ஜாலியாக ஊர் சுற்றும்,  ஒரு பெரிய பணக்காரரின் மகன் ஒருவன் மகா குறும்புக்காரன், மகா போதைக்காரன். கத்தையாக பணத்தை வைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு குடித்துவிட்டு பணத்தை வாரியிறைக்கும் ரகளையான மனிதன் அவன், அந்தப் பஸ்ஸ்டாண்டிற்கு வருகிறான். 

25 ஆயிரம் பணம் வேண்டி காத்திருக்கும் அவனும் (சூரஜ் வெஞ்சரமூடு), கத்தையாக பணம் வைத்திருக்கும் இவனும் (ஆசிப் அலி), அந்தப் பஸ்ட்டாண்டில் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள்.

அதன் பிறகு என்ன நடக்கும் ? என்று நீங்கள் நினைப்பதற்கு மாறாக, புது ரூட் பிடித்து பயணிக்கிறது 'அடியோஸ் அமிகோ' திரைப்படம். 

அன்றாட வாழ்வாதரத்திற்காக போராட வேண்டிய எளிய மனிதராக தன்னை ஒப்பிட்டு கொண்ட சூரஜ், பாத்திரம் அறிந்து விளையாடி இருக்கிறார். 
இதில் நிறைய அவமானங்களை சந்திக்கவேண்டிய தருணங்களை அப்படியே நமக்கும் கடத்திவிடுகிறார். என்னவொரு தேர்ந்த நடிப்பு, ஆசம் !!

சூரஜ் என்ற தேர்ந்த நடிகனுக்கு இணையாக டஃப் கொடுத்து நடித்திருக்கிறார் ஆசிப் அலி. பணக்கார வீட்டுப் பிள்ளையாக குடி போதையில் அவர் அடிக்கும் லூட்டிகள் A1 ரகம்.
இவரது அடாவடித்தனத்தால் சூரஜ் போன்ற இவரது தந்தை உட்பட அனைவரிடமும் அவமானங்களை சந்தித்துள்ளார். 

படம் முழுவதுமே இருவர் மட்டுமே பெரும்பாலான நேரங்கள் திரையில் இருப்பதால் கொஞ்சம் தொய்வு இருந்தாலும், சுகமான நகர்வுகளால் அதை நாம் உணராமல் செய்துவிடுகிறார் படத்தின் இயக்குநர்.  

 மிக எதார்த்தமான கதைக் களம் நமக்குள் ஒரு ஆசுவசத்தை ஏற்படுத்துகின்றது. அந்த இழையோட்டமான பிரதிபலன் பாராத அன்புக்கு படத்தின் முடிவு ஒரு ஜீவனை தந்துவிடுகிறது. அதன் தாக்கம் நம்மை கண்கலங்க செய்துவிடுகிறது.

கதை : தங்கம்
இயக்கம்: நஹாஸ் நாசர்.

பி.கு: 'அடியோஸ் அமிகோ' என்ற ஸ்பானிய (ஸ்பானிஷ்) மொழிக்கு 'போய்வருகிறேன் நண்பா', அல்லது 'விடைபெறுகிறேன் நண்பா' என்ற அர்த்தம்.

-மபா

#adiosamigomovie 
#அடியோஸ்அமிகோ

வெள்ளி, ஏப்ரல் 26, 2024

கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !

 

 

கவிஞர் ரவி சுப்ரமணியன்

               ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும்  என்று நினைத்திருந்தேன்.
தொடர் வேலைப் பளுவால் அது தள்ளிக் கொண்டே போனது.  இவ்வளவிற்கும் அலுவலகம் போகும் வழியில்தன்  அவரது வீடும் இருக்கிறது.  இன்று திடுதிப்பென்று அவரைப் பார்க்க கிளம்பிவிட்டேன்.  புரசைவாக்கம் கெல்லீஸ் பகுதியில் இருக்கிறது அவரது வீடு.  


போன் செய்ததும், ஆர்வமாக வரவேற்றார்.

புரசைவாக்கம், கெல்லீஸ், அயனாவரம் என்று திரும்பிய திசையெங்கும் மெட்ரோ ரயில் வேலை நடைபெறுகிறது.  'இன்றைய சிரமம், நாளைய வசதிக்காக'  என்று நினைத்துக் கொண்டு ஒரு வழியாக புரசை தானா தெரு வழியாக உள்  நுழைந்து, ஜமாலியா, ஓட்டேரி,  அயனாவரம் நம்மாழ்வார்பேட்டை தாண்டி அவரது விலாசத்தை அடைந்துவிட்டேன்.

"வேறு யாராக இருந்தாலும்,  ஐந்து வாட்டியாவது அட்ரசைக் கேட்டு போன் செய்திருப்பார்கள், நீங்கள் டக்கென்று வந்துவிட்டீர்களே...?"  என்றார் ரவி சார்.

 என்னை போன்ற மார்கெட்டிங் மனிதர்களுக்கு    விலாசம்  தேடுவது  பெரிய  சிரமமான  வேலை இல்லை, அது எளிதானது. எந்த ஒரு விலாசத்திற்கு ஒரு கீ வேர்ட் இருக்கும், அதை பிடித்துக் கொண்டால் போதும்.  

காலை  உணவு இல்லை என்பதால், Mid Morning Meals ஐ அப்போதுதான் முடித்து அமர்ந்திருந்தார் கவிஞர் ரவி சுப்ரமணியன்.   அடர்த்தியான சிகை, சரியான திராவிடக் கலர்,  அதிராத மென் குரல், புன்னகை தளும்பாத முகம் என்று ஒரு  படைப்பாளிக்கான சர்வலட்சணமும் அவரிடத்தில் இருந்தது. 



இசையின் மீது தீராப் பற்றும், அவரது மென் குரல் பாடல்களும்  இலக்கிய மேடைகளில் ஏக பிரபல்யம்.  

தமிழின் குறிப்பிடத்தக்க ஆவணப்பட இயக்குநரான ரவி சுப்பிரமணியன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன், ஜெயகாந்தன், சேக்கிழார் அடிப் பொடி, டி.என்.ராமசந்திரன்,  திரிலோக சீதாராம் போன்ற தமிழின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறார்.  

எழுத்தாளர்கள் எம்.வி.வெங்கட்ராமன், கரிச்சான் குஞ்சு, மா, அரங்கநாதன்,  தேனுகா போன்றோரிடம் நெருங்கிப் பழகியவர்.  

எம்.வி.வி.தனது கடைசி காலத்தில் , 'ரவி சுப்ரமணியன் மெட்ராஸ் போய்ட்டான்...இனி வரமாட்டான்' என்று ஆதங்கத்தோடு கேட்கும் அளவிற்கு தனது  அன்பை  அவர்களிடத்தில் பதியம் செய்தவர்.

எத்தனை எத்தனை இலக்கிய  ஜாம்பவான்களைப் பார்த்து இருப்பார், பழகி இருப்பார்.  ஒரு இலக்கிய ஆளுமையாக இருந்தாலும், எந்தவித படாடோபமும் இன்றி  எளிய மனிதராக என்னோடு பேசிக் கொண்டு இருந்தார். 



கும்பகோணம், காவிரி, டைமண்ட் தியேட்டர், புருஷோத் விஹார், அரசு கலைக் கல்லூரி, பெரியக் கடைத் தெரு   என்று  பேசிக் கொண்டு இருந்தோம்.  கும்பகோணம் அருகில்தான் எனது ஊரும் என்பதால்,  அவரோடு மிக எளிதாக பொருந்திப் போக முடிந்தது.

 இயக்குநர்கள் அரவிந்த ராஜ், லிங்குசாமி, கவிஞர் பிருந்தாசாரதி என்று கும்பகோணத்திலிருந்து கிளைத்தெழுந்த படைப்பாளிகளைப் பற்றி சிலாகித்து பேசினார்.

தனது பெரும் மதிப்பு மிக்க சொத்துக்களை, உறவுகளுக்கு   கொடுத்துவிட்டு, தன்னை முழுமையாக இலக்கியத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட உயர்ந்த மனிதர். 



அவரது படைப்புக்களில் மிளிரும் அழகியல் போன்றே அவரது உரையாடலும் அழகாக  இருந்தது.   

உரையாடலின் இறுதியில் நான் எடுத்த படங்களை அவருக்கு வாட்ஸ்ப்பில் அனுப்பி வைத்திருந்தேன். படத்தைப் பார்த்தவர்... "செழியன்  எடுத்தா மாதிரி இருக்கு, தேர்ந்த ஒளிப்பதிவாளர் எடுத்தா மாதிரி அழகாக எடுத்து இருக்கீங்க" என்று பாராட்டினார்.

மதிய வெயில்...உக்கிரம் குறைந்து நிலா போன்று காய்ந்து கொண்டிருந்தது !




-மபா

#ரவிசுப்ரமணியன்
#கும்பகோணம்
#mabaclicks

செவ்வாய், பிப்ரவரி 28, 2023

வெட்பாலை

     

 


வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! செடியாக கிடைக்கவில்லை, விதையாகக் கிடைத்தது.  ஊரில் வீட்டில் வைப்பதற்காக,  சென்னையிலிருந்து ஆர்டர் செய்தேன், இரண்டே நாளில் டெலிவரி செய்துவிட்டார்கள்.

வெட்பாலை இலைகள் சருமத்திற்கும்  கேசத்திற்கும் நல்லது. சுத்தமான  தேங்காய் எண்ணையில் வெட்பாலை இலைளைப் போட்டு  ஏழு நாட்களுக்கு ஊரவைத்து....வெயிலில் காயவைத்துப் பயன்படுத்த வேண்டும். அடுப்பில் வைத்து சூடு  பண்ணக் கூடாது.  வெட்பாலையில் ஊர வைத்த தேங்காய் எண்ணெய்... பார்க்கப் அடர் பிங்க் நிறத்தில், ஒயின் போல மாறிவிடும்.   தலையில் தொடர்ந்து தடவி வர, தலை முடி கருகருவென இருக்கும். பொடுகைப் போக்கும்.

இந்த வெட்பாலை எண்ணை  காளாஞ்சுப்படை எனப்படும் சொரியாசிஸ் நேய்க்கு மிகச் சிறந்த மருந்தாகும்.  சொரியாசிஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல்  வெட்பாலைக்கு உண்டு.  வறண்ட சருமத்திற்கு இயற்கையின் கொடை வெட்பாலை.  நாட்டு மருந்துக் கடைகளில் வெட்பாலை எண்ணெய் கிடைக்கும்.

வெப்பாலை என்பது ஒருவகை மரமாகும். இதற்கு வெட்பாலை, நிலப்பாலை, பாலை, நிலமாலை, வற்சம், குடசம் ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இது பழந்தமிழகத்தில் பலை என அழைக்கப்பட்டது.

அமேசானில் வெட்பாலை மட்டும் ஆர்டர் செய்யாமல், கூடவே  எலுமிச்சை மற்றும் மனோரஞ்சிதம் செடிகளையும் ஆர்டர் செய்திருந்தேன்.   மனோரஞ்சிதம் செடிகளைப் பார்க்க கத்திரிக்காய் செடி போன்று இருந்தது.  வளர்ந்தபின்தான் தெரியும் இது வாசம் தரும் மனோரஞ்சிதமா இல்லை அரிப்புத் தரும் கத்திரிக்காய் செடியா என்று ?!

பி.கு:

ஐந்திணைகளில் ஒன்றான பாலை நிலத்துக்குப் பெயர் தந்தது  வெட்பாலை மரம்  என்கிறார்கள். இதிலிருந்தே இந்த மரத்தின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.  கடும் கோடையிலும் தளிரும், மலருமாக இந்த மரம் காட்சி தரும்.  பாலை நில தாவரத்தை மருத நிலத்தில் வளர்க்க முயற்சி செய்கிறேன், பார்ப்போம். 

படம்: எலுமிச்சை மற்றும் மனோரஞ்சிதம் செடிகள். 

#வெட்பாலை
#Wrightiatinctoria
#சொரியாசிஸ்

புதன், அக்டோபர் 26, 2022

பாஸ்கர பட்டேலரும் தொம்மியின் ஜீவிதமும் (விதேயன்)

                      அது கர்நாடகத்தின் தென் கோடி கிராமம். அங்கு ஒரு மிலேக்சன் இருக்கிறான். அவன் அந்த ஊரின் பரம்பரை பணக்காரன், முரடன். என்னேரமும் அடியாட்களோடு வலம் வரும் அவன், கடைத்தெருவில் இருக்கும் அவனது கள்ளுக்கடையில் அமர்ந்து கொண்டு குடித்துக் கொண்டு போகிற வருகிறவர்களை சண்டைக்கு இழுத்து சண்டியர்தனம் செய்வது, பெண்களை சீண்டித் தொல்லை கொடுப்பதுதான் அவனது வேலை. அவனது பெயர் பாஸ்கர பட்டேலர். 
 
அப்படியான அந்தக் கடைத்தெருவிற்கு பஞ்சைப்பராரியான, மாற்றுத் துணிக்கு வழி யில்லாத ஒருவன், அவனது அழகான மனைவியோடு கேரளத்தின் வயநாட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க வருகிறான். அவனது பெயர் தொம்மி.
 
பாஸ்கர பட்டேலரும் தொம்மியும்தான் கதையின் பிரதான பாத்திரங்கள். கதை எப்படி போகும் என்பதை, நீங்கள் ஒருவாறு ஊகித்திருப்பீர்கள்?
 
மலையாள எழுத்துலகின் தனித்த அடையாளம் கொண்ட பால் சக்காரியா எழுதிய 'பாஸ்கர பட்டேலரும் தொம்மியின் ஜீவிதமும்' என்ற நாவல்தான் அது! இக்கதை பிற்பாடு 1993 ல் 'விதேயன்' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்து, தேசிய விருதுகள் உள்பட பல விருதுகளை தட்டிச் சென்றது. 
 
பால் சக்காரியா எழுதிய கதையை செல்லூலாயிட்டில் அப்படியே ஒரு காவியமாக படைத்திருப்பார் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். மம்முட்டியின் மிகையற்ற நடிப்பில் 'விதேயன்' சகாவரம் பெற்றது எனலாம்.
 
படத்தின் தொடக்கமே உங்களை அந்த கிராமத்திற்கு அழைத்து சென்றுவிடும். கள்ளுக்கடையின் வாசலில்.... ஒரு பக்கம் கைப்பிடி இல்லாத நாற்காலி போடப்பட்டிருக்கும். நாற்காலியின் ஒரு பக்கத்தில் ஒரு நீண்ட நாட்டுத் துப்பாக்கி சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். உடைந்த நாற்காலியின் கைப்பிடி ஓரத்தில் வெடி மருந்துகள் அடங்கிய சின்னஞ்சிறிய பை தொங்கிக் கொண்டிருக்கும். 
 
வாழ வழித்தெரியாத நோஞ்சானான 'தொம்மி' ஒரு கடையின் வாசலில் இரு கால்களையும் கட்டிக் கொண்டு சோகத்தில் உட்கார்ந்து இருக்கிறான். கடைத்தெருவில் போகிற வருகிறவர்களை எடவுட்டு பண்ணும் பாஸ்கர பட்டேலருக்கு இப்படியான ஒரு அப்பிராணி கண்ணில்பட்டால் சும்மா விடுவானா...?
 
அவனை வம்படியாக 'இவ்விட வாடா நாயிண்ட மகனே' என்று கூப்பிட்டு அவனை உதைத்து முகத்தில் வெற்றிலை எச்சிலை காறி உமிழ்ந்து விரட்டிவிடுகிறான் பட்டேலர். 
 
பஞ்சம் பிழைக்க வந்த தொம்மிக்கு அழகான மனைவி இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டு, அவனது குடிசைக்குள் புகுந்து அவளை நாசம் செய்கிறான் பட்டேலர். கடைத்தெருவில் அடிவாங்கியதில் அவமானம் தாங்காது எங்கோ திரிந்துவிட்டு இரவில் வீடு சேரும் தொம்மிக்கு, அவனது மனைவி ஓமனாவின் அழு குரல் வரவேற்கிறது. நடந்ததை ஊகித்துக் கொண்ட தொம்மி, மனதளவில் குமைந்து போகிறான்.
 
பிற்பாடு பட்டேலரின் ஆட்கள் "உன்னை பட்டேலர் அழைத்து வரச் சொன்னார்" என்று தொம்மியை அழைக்க..."வரமுடியாது" என்று முரண்டு பிடிக்கிறான் தொம்மி. "பட்டேலரைப் பகைத்துக் கொண்டு இந்த ஊரில் நீ வாழ முடியாது, வா" என்று பட்டேலரின் ஆட்கள் தொம்மியை மிரட்ட...பயந்த சுபாவம் கொண்ட தொம்மி பட்டேலரைப் பார்க்க வருகிறான். 
 
அங்கு தொம்மிக்கும், தொம்மியின் மனைவி ஓமனாவுக்கும் ஆடைகளைத் எடுத்துத் தந்து தொம்மியை தனது கள்ளுக்கடையில் வேலைக்கு சேர்த்து தன்னுடனே வைத்துக் கொள்கிறான் பட்டேலர். அன்றிலிருந்து பட்டேலரின் நிழல் போலவே மாறிவிடுகிறான் தொம்மி. 
 
அடிக்கடி தொம்மியின் குடிசைக்கு பட்டேலர் வருவதும் போவதுமாக இருக்கிறான்.  "உன் மேல் எண்ட எஜமானரின் வாசம் அடிச்சாலும், நீ எனது ஸ்திரி" என்று தனது மனைவிடம் தனது உரிமையை விட்டுக் கொடுக்காது கட்டிப்பிடித்து கொள்கிறான் தொம்மி. 
 
கதை இதற்குப் பிறகுதான் புது ரூட் பிடித்து பயணிக்கிறது. 
 
பட்டேலரின் மனைவி அழகு மற்றும் பொறுமையின் சிகரமா இருக்கிறார். அவரை சரோஜா அக்கா என்று வாய் நிறைய அழைக்கிறான் தொம்மி. பட்டேலரின் அடாவடி நாளைக்கு நாள் அதிகமாகிறது. இதனால் தொடர்ந்து பட்டேலருக்கும் சரோஜாவிற்கும் சண்டை நடக்கிறது. சரோஜாவை தனது இஷ்ட வாழ்விற்கு இடைஞ்சலாக நினைக்கும் பட்டேலர், அவளை ஒரு நாள் கொலை செய்து விடுகிறான். 
 
பட்டேலர் தனது மனைவியை கொலை செய்த செய்தி காட்டுத்தீயாய்ப் பரவ...சரோஜா வின் சகோதரர்கள் ஊர் மக்களோடு சேர்ந்து பட்டேலரின் ஜீப்பைக் கொளுத்தி அவனைத் தாக்குகிறார்கள். போலீஸ் பட்டாளம் குவிக்கப்படுகிறது. அங்கிருந்து தப்பிக்கும் பட்டேலர், தொம்மியின் குடிசைக்குள் வெற்று உடம்போடு மாற்றுத் துணியில்லாமல் தஞ்சமடைகிறான். பசியோடு இருக்கும் பட்லர் தொம்மி குடித்துவிட்டு வைத்தக் கஞ்சியைக் குடிக்கிறான். ஆஜானுபாகுவான பாஸ்கர பட்டேலர் பரிதாபத்திற்குரிய ஒரு மனிதனாக தொம்மியின் முன்னால் நிற்கிறான். 
 
பாஸ்கர பட்டேலராக மம்முட்டியும், தொம்மியாக கோபக்குமாரும் நடித்திருக்கிறார்கள். 
 
ஒட்ட வெட்டிய தலைமுடி, முறுக்கி விடப்பட்ட மீசை என்று மிரட்டலான ஒரு சண்டியராக நடித்திருக்கிறார் மம்முட்டி. அந்த எகத்தாளமான நடிப்பு ஆஸம்! இந்தப் படத்தில் நடித்ததற்காக மம்முட்டிக்கு 1994 ல் தேசிய விருது கிடைத்தது. 
 
அதேபோல் தொம்மியாக நடித்திருக்கும் கோபக்குமாரின் நடிப்பு.... "எஜமானரே" என்று பட்டேலரை அழைப்பதாகட்டும், தனது மனைவியை பட்டேலர் நாசம் செய்துவிட்டான் என்று தெரிந்தும் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று மறுகுவதாகட்டும், பிற்பாடு யுசுப் பாய் பட்டேலரை கொலை செய்ய வெடி குண்டு வீசும் போது அதற்கு துணை நிற்பதும், அதிலிருந்து தப்பித்து காயமுற்று விழும் பட்டேலருக்காக அழுவதாகட்டும் என்று ஒரு எஜமானருக்கு விசுவாசத்துடன் இருக்கும் நம்பிக்கையான வேலைக்காரனாக மம்முட்டிக்கு இணையான ஒரு நடிப்பை வழங்கியிருப்பார் கோபக்குமார்.  படத்தில் மம்முட்டிக்கு மனைவியாக நடித்திருக்கிறார் தன்வீ ஆஸ்மி,  என்னவொரு அழது !!
 
படத்தின் பிரதான கதாபாத்திரமாக 'இருட்டும்' நடித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான காட்சிகள் இருட்டின் துணை கொண்டு நகர்கிறது. அந்த இருட்டிலிருந்து கதை மாந்தர்கள் மெல்ல ஒளிப்பெற்று உயிர் பெறுகிறார்கள். அந்த வித்தையை படம் நெடுக நிகழ்த்தியிருக்கிறார்கள் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனும் காமிராமேன் ரெவி வர்மாவும்.
சில காட்சிகளை புளி போட்டு விலக்காமல், பார்வையாளனின் முடிவுக்கு விட்டுவிடுவது இயக்குநரின் தனி சாமர்த்தியம். 
 
இருட்டையும் தெளிவான வண்ணத்தையும் பூசிக் கொண்டு படம் வெளிவந்து 28 ஆண்டுகள் கடந்தும் 'விதேயன்' திரைப்படம் அழகாக மிளிர்கிறது. 
 
-மபா 
 

சனி, அக்டோபர் 08, 2022

இளையத் தலைமுறைக்கு தமிழர் பெருமை போதிக்கும் பொன்னியின் செல்வன்.


திரும்பிய இடமெல்லாம் பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. மக்கள் சாரி சாரியாக பொன்னியின் செல்வனைப் பார்க்க போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வனை சினிமாவாகப் பார்ப்பது எளிதானது. ஆனால் அதையே புத்தகமாகப் படிப்பது என்பது எளிதானது அல்ல.
மொத்தம் 5 தொகுதிகள். ஒவ்வொரு தொகுதியும் குறைந்தது 450 பக்கங்களுக்கு மேல் இருக்கிறது. இதில் 5 ஆவது தொகுதி மட்டுமே ஏறக்குறைய 900 பக்கங்களுக்கு மேல் வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் அதை ஏக் தம்மில் படிப்பது எல்லாம் முடியாத காரியம். எடுத்தோம் படித்தோம் என்ற பாட்சாவெல்லாம் பொன்னியின் செல்வனிடம் பலிக்காது.
அவ்வளவு நீ.......ளமானது !
நானெல்லாம் பொ. செ. கதையை இரண்டு தொகுதிகளுக்கு மேல் தாண்டவில்லை.
கல்லூரியில் படிக்கும் காலத்தில், எங்கள் பாட்டி பைண்ட் செய்து வைத்திருந்த புத்தகம்தான் கிடைத்தது. அதையும் ஏக கண்டிஷனில் கொடுத்தார்கள். கொஞ்சம் அழுத்திப்பிடித்தால் போதும், அப்படியே அப்பளம் போல் நொறுங்கிவிடும்.
சிறுவயதில் குமுதத்தில் சாண்டில்யனின் கடல்புறா, யவன ராணி, மஞ்சள் ஆறு, மன்னன் மகள் என்று படித்து வளர்ந்தவன் நான். பக்கம் பக்கமாக நீளும் சாண்டில்யனின் அந்த வர்ணனைகள், வார்த்தை பிரயோகம் இருக்கிறதே... அது கற்பனையின் உச்சம் எனலாம் !
சாண்டில்யனின் எழுத்துக்களோடு ஒப்பிடும் போது, கல்கியின் எழுத்து நடை சாதாரணமாகத்தான் தெரிகிறது. அன்றைய நாட்களில் கல்கியின் எழுத்து நடையை விமர்சித்தவர்களும் இருக்கிறார்கள். பெரிய கவித்துமான மரபார்ந்த தமிழ் கொஞ்சி விளையாடும் எழுத்தெல்லாம் கல்கியிடம் இல்லை. கல்கியின் எழுத்து நடை எளிமையானது, எளியவர்களுக்கும் புரியும் படி இருக்கிறது. ஒரு வகையில் அதுதான் அதன் வெற்றியோ.... என்னவோ ?!
"தூய தமிழ்ச் சொற்களைத் துருவித் தேடுவதுமில்லை. வடமொழிச் சொற்களென்று தூர விலகியோடுவதுமில்லை. மிகத் தெளிவான நடை, உணர்ச்சி ததும்பும் நடை. வாசகர்களை உடன் கொண்டு செல்லும் நடை. சந்தர்ப்பத்திற்கும் பாத்திரங்களுக்கும் தக்க நடை. இக்காலத்துள்ள வசனகர்த்தர்களுள் முன்னணியில் நிற்பவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி என்கிறார் பேராசிரியர் வையாபுரி பிள்ளை அவர்கள்.
ஆனந்த விகடனில் பணிபுரிந்த கல்கி பிற்பாடு அதிலிருந்து வெளியேறி, கல்கி என்ற இதழைத் தொடங்கினார். கல்கி இதழை மக்கள் மத்தியில் பிரபலமாக்கவே அவர் 'பொன்னியின் செல்வன்' என்ற வரலாற்று நெடுந்தொடரை எழுதினார் என்பார்கள். அவர் கணித்தது பொய்யாக்கவில்லை !
1950 லிருந்து 1954 வரை கல்கியில் வெளிவந்த பொன்னியின் செல்வன் மக்களிடையே மகத்தான வரவேற்பை பெற்றது.
****************************************
ன்றளவும் என்னை பிரமிக்க செய்வது 'பொன்னியின் செல்வன்' என்ற அந்தக் காரணப் பெயர்தான். பொதுவாக வரலாற்று கதைகளுக்கு வீரம் செறிந்த பெயர்களையே வைப்பார்கள். தமிழகத்தில் ஓடும் மற்ற எந்த நதிகளைவிடவும், தமிழகத்தின் 'ஜீவ நதி' என்றால் அது காவிரியைத்தான் குறிக்கும். அப்படிபட்ட தமிழகத்தின் ஜீன் (மரபு) நதியான காவிரியின் இன்னொரு பெயர்தான் பொன்னி நதி.
"வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசைத் திரிந்து தெற்கேகினும்
தற்பாடிய களி உணவின் புள்தேம்பப் பயன்மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத்தலைஇய கடற்காவிரி "
என்று பட்டினப்பாலை காவிரியின் தொன்மையைப் போற்றிப் புகழ்ந்ததும்...
'கோள் நிலைத் திரிந்து கோடை நீடினும்
தான் நிலைத் திரியா தண்டமிழ்ப் பாவை'
என்று பிற்பாடு மணிமேகலை காவிரியின் மேன்மையை மேற்கண்டவாறு பதிவு செய்ததையும்...
இற்றைய நூற்றாண்டில்....
"தென்னகமாம் இன்பத்திரு நாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனி வயிற்றில்
கருவாகி தலைக்காவிரி என்னும் தாதியிடம்
உருவாகி வண்ணம் பாடி ஒரு வளர்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணை கடந்து நலம் பாடி
ஏர் வீழ்ச்சி காணாமல் இருக்க
சிவசமுத்திர நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்...
வீடு தாண்டாக் கற்பு விளங்கும் தமிழ்மகள் போல்
ஆடு தாண்டும் காவிரியாய் அடங்கி நடந்து
அகண்ட காவிரியாய்ப் பின் தவழ்ந்து
கரிகாலன் பேர் வாழும் கல்லணையில்.. கொள்ளிடத்தில்..
காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து
தஞ்சை வள நாட்டைத் தாயாகி காப்பவளாம் தனிக் கருணைக் காவிரி போல்..."
என்று செம்மாந்து புலவர் புலமைப்பித்தன் இருமாந்து பாடி மெய்சிலிர்த்தை நாம் எப்படி மறக்க முடியும் ?!
காவிரியின் வளம் கொழிக்கும் வண்டல் போல... தமிழகத்தின் பெருமைமிகு 'சோழ சாம்ராஜ்யம்' தோன்றி வளர்ந்ததும், தமிழ் பெருநிலத்தின் பேரரசன், ராஜராஜ சோழன்
உலகை வென்றதும் இந்த காவிரியின் கரையில்தான். இதனாலேயே.... வரலாற்று தொன்மையாலும், வளத்தாலும் பீடு நடை போடும் பொன்னியின் பெயரையே, தனது புதினத்திற்கு வைத்திருக்கிறார் கல்கி.
***************
ஆடித் திருநாள் என்ற முதல் அத்தியாயம் தொடங்கி, இக் கதையின் கடைசி அத்தியாயமான மாயமோகினி வரை மொத்தம் 57 அத்தியாயங்கள் வருகிறது.
கிட்டத்தட்ட 70 வருடங்களுக்குப் பிறகு இப் புதினம் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது. பொ செ திரைப்படம் தயாரிப்பில் இருக்கும் போது எந்த பரப்பரப்பும் தெரியவில்லை. ஆனால் படம் வெளி வந்தப்பிறகு தீ பற்றிக்கொண்டு விட்டது.
படத்தைப் பார்த்துவிட்டு சோழர்களின் சுவடுகளைப் பார்க்க ஆவலாக சுற்றுகின்றனர். பழையரை என்ற ஊர் எங்கு இருக்கிறது என்று இணையத்தில் தேடிதுலாவுகின்றனர்.
என்ஜோட்டு வயதில் பொன்னியின் செல்வன் வாசிக்கும் போது, பழையாறை எங்கிருக்கிறது என்று தீவிரமாக தேடியிருக்கிறேன். சீர்காழிக்கு அருகில் இருக்கும் பழையாரா ? இல்லை இன்றைய முசுரியா? என்றெல்லாம் தேடியிருக்கிறேன். கும்பகோணத்திற்கு தெற்கு மேற்கில் இருக்கும் புறநகர் பகுதிகளான , பட்டீஸ்வரம், தாராசுரம் போன்ற ஊர்களின் தொகுப்புதான் பழையாறை என்கிறது விக்கிப்பீடியா.
இன்றைய இளம் தலைமுறை தமிழர்கள் தங்களின் இனப்பெருமை இன்னதென்று அறிந்து கொள்வது அவர்களின் வாழ்வியல் கடமையாகும். அதை அறியத்தருவதில், தமிழரின் காதலையும் வீரத்தையும், வாழ்தலையும் வாழ்வித்தலையும் சுவைப்படக் கூறுவதில் பொன்னியின் செல்வன் புதினம் தனித்துவமான இடம் பிடித்திருக்கிறது. திரைப்படம் அதை இன்னும் உயரே கொண்டு போய் இருக்கிறது.
-மபா
08.10.2022

தர்மேந்திர பிரதான் - தமிழர்களுக்கு பொது எதிரியா ???

தமிழர்களுக்கு காலம்தோறும் ஒரு பொது எதிரி உருவாவார்கள் போலும்....?? தர்மேந்திர பிரதான் முன்பு இலங்கை அதிபர் ஜெயவர்தனா, பின்பு அதே இலங்கையிலிர...