சனி, ஆகஸ்ட் 22, 2009

"என் அன்னைக்கு பிறகு என்னை வளர்த்தது சென்னை"

இன்று சென்னை தினம் 22/08/09



சென்னை பற்றி எனக்கு எப்போதுமே ஒரு உயர்ந்த அபிப்பிராயம் உண்டு. நான் மாயவரம் அ.வ.அ., கல்லுரியில் இளங்கலை வணிகவியல் முடித்து, 20 நாட்கள் தான் வீட்டில் இருந்தேன். 1995 ஜுலையில் நானும், தம்பி வேல்முருகனும் சென்னை வந்தோம். இப்போ அவன் அமெரிக்காவில் ஜாகை. சென்னையில் அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் உள்ள 'அமெரிக்கன் எம்பஸியத்திற்கு' இருவரும் அடிக்கடி செல்வதுண்டு. வழ வழப்பான தாளில் உலக நாடுகளின் வரலாறும், பல் துறைத் தகவல்களும் புதைந்திருக்கும். வாரக் கடைசியில் புகழ்ப் பெற்ற ஆங்கிலப் படங்கள் திரையிடப்படும். காலையில் வேலை தேடுவதும், மதியத்தில் அமெரிக்கன் எம்பஸியத்தில் இளைப்பாருவதுமாய் வாழ்க்கை நகர்ந்துக் கொண்டு இருந்த நாட்கள் அது!

பிறகு பத்திரிகைகளில் பணி புரிய ஆரம்பித்தவுடன், சென்னையின் நீள அகலத்தை அளக்க ஆரம்பித்தேன். சென்னையின் வளர்ச்சியை கடந்த 14 வருடங்களாக அருகில் இருந்து பார்த்து வருகிறென். அதன் வளர்ச்சி நம்மை பிரமிக்கவைக்கிறது.


சென்னையில் எனக்கு பிடித்த... பிடிக்காத பத்து.


சென்னையில் பிடித்த பத்து.


1 எளிமை மாறாத மக்கள்.

2 என்னதான் கார்ப்பொரேட் சிட்டி என்ற முகம் காட்டினாலும் ஆடி மாதத்தில் தெருவுக்குத் தெரு கூழ் ஊத்த மறக்காதது.

3 காசு இல்லை என்றாலும், கவலையே இல்லாமல் காத்து வாங்கலாம்- மெரினாவில்.

4 எப்பொதும் மக்கள் கூட்டத்தில் மயங்கிக் கிடக்கும் தி நகர் ரெங்கனாதன் தெருவும் உஸ்மான் சாலையும்.

5 நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் பெருகினாலும், தானும் வளர்ந்து தனது மக்களையும் வளர்த்து விடும் அற்புதம்.

6 மாணவர்கள் ஓடும் பேருந்தில் இருந்து லாகவமாய் கம்பியை பிடித்துக் கொண்டு இறங்குவதும், என்னதான் கூட்டம் கூரையை பியித்துக் கொண்டு இருந்தாலும், மேற்கூரையில் தட்டிக்கொண்டு மாணவன் பாடும் 'கானா' அழகு.

7 யாரவது சாலையில் அடிப்பட்டு விட்டால், மனித நேயத்தோடு உடனே உதவி செய்யும் மக்கள்.

8 சென்னையை பாதுகாப்பாக வைத்திருக்க, தனது தூக்கத்தையும் மறந்து காவல் பாணியாற்றும் சென்னை மாநகர காவல் துறையினர்.

9 பழமை மாறாமல் இருக்கும் திருவல்லிக்கேணியும்,சென்னையின் வர்த்தக தலை நகரான பிராட் வேயும் அதன் நெருக்கடியான தெருக்களும்.

10 "இன்னாமே...யெப்டிக் கீற... நல்லாக் க்ரியா?" என்று தமிழின் தனி இலக்கணத்தோடு பேசும் சென்னை தமிழ்.


பிடிக்காத பத்து (அத...எத்து)


1) சாலை விதிகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத மக்கள்.

2) இதைப் போல வண்டிகள் கூட இன்னும் இருக்கிறதா ? என்று நம்மை புருவம் உயர்த்தச் செய்து புகை கக்கி ஊரையே நாறடிக்கும் இரு/மூன்று/நான்கு சக்கர வாகனங்கள்.

3) ஒரு இடத்தில் குப்பையை அள்ளி ஊர் முழுவதும் கொட்டும் அசிங்கமான, நாற்றம் பிடித்த குப்பை வண்டிகள். கூடவே குப்பையை கொளுத்தி காற்றை மாசுப் படச் செய்யும் பொறுப்பில்லாத பக்கத்து வீட்டுக் காரர்கள்.

4 சென்னையில் 'சிங்கிள் டீ' குடிக்கவேண்டும் என்றாலும் மலையாளிகளிடம் தான் கேட்கவேண்டியிருக்கிறது. (டீ நல்லா இருந்தாலாவாவது சகித்துக்கொள்ளலாம்.)

5 கொழ...கொழவென சளியை சாலையில் துப்பி, குழந்தைகளும் இந்த சாலையில் தான் நடக்கிறார்கள் என்பதை மறந்த சொரனையற்ற ஜென்மங்கள்.

6 'டாஸ்மாக் பார்' பார்க்கவே கண்றாவியாய் இருந்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப் படமால் 'ஈ யோடு ஈ யாய்' அமர்ந்து கடை மூடும் வரை சரக்கடிக்கும் நம்ம சென்னை குடிமகன்கள்.

7 தமிழையும், தமிழர்களையும் பற்றி கவலைப் படாத, . தன் தாய் மொழியாம் தமிழை மறந்து அயல் மொழிக்கு சாமரம் வீசும் சென்னை தமிழர்கள்.

8 சாலை விதிகளுக்கு நாங்கள் அப்பாற் பட்டவர்கள் என்று, ஆட்டோ / பேருந்துகளை தாரு மாராய் இயக்கி அப்பாவிகளின் உயிரைக் குடிக்கும் "சென்னை மா நகர பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள்.

9 சாலையில் நான்கு பேர் ஒர் இடத்தில் நின்று எட்டிப் பார்த்தால் போதும்..., அந்த வழியே வரும் வாகன ஓட்டிகள் அவசர அவசரமாய்' வண்டியை நிறுத்தி எட்டிப் பார்ப்பது. அப்படியும் தகவல் கிடைக்கவிட்டால், அங்கே பராக்குப் பார்த்துக் கொண்டு (அவனுக்கும் ஒன்னும் தெரியாது) நிற்பவனை பிராண்டுவது " என்ன சார்... என்ன ஆச்சி..." என்று. அலுவலகத்திற்கு கால தாமதமாய் சென்றாலும் பரவாயில்லை என்று, தகவல் கிடைத்தப் பிறகுதான் அங்கிருந்து நகர்வது.

10 "இன்னைக்கு நீ தோண்டினால்... நாளை நான் தோண்டுவேன்" என்று கங்கனம் கட்டிக் கொண்டு சென்னை சாலைகளை தோண்டிப் போட்டு பிறகு அதைப்பற்றி கவலைப் படாத... மின்சார வாரியம்/தொலை தொடர்பு துறை,குடி நீர் / வடிகால் வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி.

வாழ்க சென்னை...வாழிய...வாழியவே!

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...