ஞாயிறு, ஜனவரி 17, 2010

எங்க ஊர் பொங்கல்! (பாகம் இரண்டு)



சற்றே பெரிய கட்டுரை...

இந்த கட்டுரையை படிக்கத் தொடங்கும் முன் முந்தைய பதிவைப் பார்க்கவும்.

பொதுவா நெல்லை, கோவை, மதுரை போன்ற வட்டாரங்களில் பேசப் படும் 'வட்டார மொழி' நமக்குத் தெரியும். பேசும் போதே நாம் கண்டுப் பிடித்துவிடலாம். இது எந்த பகுதியைச் சார்ந்தது என்று. ஆனால் (அன்றைய ஒருங்கிணைந்த) தஞ்சை மாவட்டங்களில் கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி போன்ற சரகங்களில் பேச்சுத் தமிழில் பெரிதாக வேறுபாடு தெரியாது. அங்கு பேசப்படும் மொழி அமைப்பு 'நாடகத் தமிழ்'. அதைத்தான் நாம் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துகிறோம். அதனால் எங்கள் பகுதிகளில் 'பிரத்தியேகமான சொல்லாடலை' காண முடியாது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். (தமிழக கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழும் 'கர்னாடக சங்கீதம்' தோன்றியது இந்த பகுதிகளில்தான் என்பதையும் அறிக.... )

ஆனால் தஞ்சை மாவட்டத்தின் தெற்கே ஒரத்தானாடு, பேராவூரணி, நாகை மாவட்டத்தின் தெற்கே திருத்துரைப்பூண்டி,வேதாரண்யம் போன்ற பகுதிகளிலும் திருவாரூர் மாவட்டத்தின் மேற்கே வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர் போன்ற பகுதிகளிலும் நாம் பேச்சு வழக்கில் சற்று வித்தியாசத்தை காணமுடியும்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நாகையும், கலைஞர் ஆட்சி காலத்தில் திருவாரூரும், தஞ்சை மாவட்டத்திலிருந்து நிர்வாக ரீதியாக மூன்றாகப் பிரிக்கப்பட்டது. இதெல்லாம் சேர்ந்ததுதான் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம். பிரிக்கப் பட்டாலும் கூட கலைஞர் கருணாநிதியையும் சேர்த்து பெரும்பாலானவர்கள் இன்றும் "நான் தஞ்சை மாவட்டத்துக்காரன்" என்றுதான் சொல்லுவார்கள். அதில் ஒரு பெருமை / சந்தோஷம் இருக்கிறது. இருக்கத்தான் செய்கிறது.

முன்பு தஞ்சை மாவட்டத்துக்காரர்கள் தமிழ் திரைப்படைத் துறையை ஆக்கிரமித்திருந்தார்கள். இன்று அது மதுரைக்காரர்கள் கைக்கு போயுள்ளது.

முந்தைய பதிவில் விடுப்பட்டது.

பெரும் பொங்கலன்று (முதல் நாள்) பொங்கலை சூரியனுக்கு படையளிடுவார்கள். இரண்டு முறத்தில் இலை விரித்து அதில், ஒன்றில் வெண் பொங்கல், மற்றொன்றில் சர்க்கரை பொங்கல் வைத்து, இரண்டு வாழைப் பழத்தை தோலை உரித்து வைத்து, தேங்காய் உடைத்து மூன்று முறை உயரே தூக்கி சூரியனிடத்தில் காட்டுவார்கள். பிறகு குடும்பம் சகிதமாய் சூரியனுக்கு வணக்கம் (நமஸ்காரம்) செய்வார்கள்


இனி முந்தைய பதிவின் தொடர்ச்சி....

மாட்டு பொங்கல்....

சட்டியில கறி வேகும் போதே பய புள்ளைங்க (இளவட்டங்கள்) உசார் பன்னிடும். வறுத்ததையும், பொறித்ததையும் தனியே டிபன் பாக்சில் போட்டு 'எஸ்கேப்' ஆகிவிடுவார்கள். எடத்துக்கா பஞ்சம்... தோப்பு ,தொரவு, ஆத்தாங்கரை, வயல் வெளின்னு 'ஜமா' கிளம்பிடும். இனி இரண்டு நாளைக்கு அவனுங்களுக்கு தலையில தண்ணி தெளிச்ச மாதிரிதான்.

சரக்குல மிக்சிங்குக்கு சாதா தண்ணியெல்லாம் கிடையாது 'இளநி' தான். பின்ன... தென்னந்தோப்புல குடிச்சா அப்படிதான். ஆட்டு கறி, மீன் வறுவல், கோழி குழம்புன்னு எல்லோரது வீட்டிலிருந்தும் எடுத்து வருவதால் 'சைடு டிஷ்' க்கு பஞ்சம் இருக்காது.

சில நேரங்களில் 'பார்ட்டி' காவேரிக்கரையின் வாழைத் தோப்புகளில் நடைபெறும். அப்போதெல்லாம் சைடு டிஷ் மரத்திலேயே கணிந்த வாழைப் பழம் தான். தலைவாழை இலையை விரிச்சி பழங்களையும் மிளகா பிஞ்சிகளையும் கொட்டி விடுவார்கள். (அதெல்லாம் ஒரு காலம்)

மதியம் மாட்டுக்கு புது கயிறு எல்லாம் மாத்தி நல்ல நேரம் பார்த்து, மாட்டு கொட்டகையில உலக்கையைப் போட்டு, மாட்டை தாண்டவச்சி அழைத்து போவார்கள். பிறகு மாட்டு கொட்டா முழுசும் சாம்பிராணி காட்டி, மாட்டின் முதுகிலும், வயிற்றிலும் சோற்றால் செய்த பசையை (அடுப்புக் கரி, மிளகா சாந்து) திருஷ்டிக்காக பூசுவார்கள். மாட்டின் கழுத்தில் நெல்லித் தழை, மா இலை,தேங்காய் மூடி, கரும்பு, வாழைப் பழம், துண்டு, போன்றவற்றை கட்டுவார்கள். மாட்டு கொம்பில் அவரவருக்குப் பிடித்த கட்சி வண்ணத்தை வரைவர்.

சூடம் ஏத்தி, மாடுகளுக்கு சாதம் ஊட்டி பொடிசுங்க எல்லாம் 'ஹோ...'ன்னு சத்தம் பொடும். தட்டை தட்டிக் கொண்டு "பொங்கலோ... பொங்கல் மாட்டு பொங்கல்" ன்னு எல்லோரும் உற்சாகமாய் குரல் எழுப்புவார்கள். கன்றுக் குட்டிங்கயெல்லாம் மாலைய போட்டோன்ன சும்மா... துள்ளிக் குதிக்கும் பாருங்க 'காண கண் கோடி வெண்டும்'.

'மாட்டை தெய்வமா மதிக்கும் மனிதர்கள்'.

சரி விஷயத்திற்கு வருவோம்... மாட்டின் கழுத்தில் தேங்காய் மூடி, கரும்பு, வாழைப் பழம், துண்டு, போன்றவற்றை எடுக்க சின்ன சின்ன பசங்க எப்போதும் மாட்டுக் கொட்டாயை சுத்தி சுத்தி வருவாங்க. கோயிலுக்கு போறவரைக்கு நாம அதை காப்பாத்திடனும். மதியத்திற்கு மேல் நல்ல நேரம் பார்த்து மாட்டை கோயிலுக்கு அழைச்சுக்கிட்டு போவாங்க. சாமி கும்பிட்டுவிட்டு மாட்டை அவிழ்த்து விட்டால் போச்சு, மாடு 'ஜலாங்...ஜலாங்...ஜலக்கு... ஜலாங்' ன்னூ பின்னங்கால் பிடறியில் பட ஓட ஆரம்பிக்கும். அங்க இருக்கு... உங்க சாமர்த்தியம். மாட்டை பிடிக்க...!

இவனுங்க பண்ற அளப்பரையில மாடு பிச்சிகிட்டு போயிடும். பயலுவ துரத்த... மாடு மிரள...ன்னு ஊரே களோபரமாயிடும். அப்புறமென்ன... மாடு 'ம்ம்ம்மே....' ன்னு அடி வயித்தில் கத்திக்கிட்டு எவன் வூட்டு கொல்லையிலாவது புகுந்து ஓடும். மாட்டுக்காரன் மாட்ட கானாம... ராவு முழுசும் லாந்தர வச்சி தேடுவான். ஒரு பாடு *'ஒழுத்தாமுட்ட' வுடவும் தயங்க மாட்டான்.
*ஆபாசமான வசவு!

மதுரை மாவட்டங்களில் நடப்பது போன்று பெரிய அளவில் 'மஞ்சு விரட்டு' (ஜல்லிக்கட்டு)யெல்லாம் எங்கள் மாவட்டத்தில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். சில இடங்களில் சாலைகளில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெறும்.

வேப்பமரத்தின் கிளைகளை ஒடித்து கூராக சீவி, அதற்கு மஞ்சள் தடவி வீட்டின் வெளியே நாலு மூலைகளிலும் அடிப்பார்கள். இதனால் 'காத்து கருப்பு' அண்டாது என்பது ஒரு நம்பிக்கை. கூடவே பல கிளைகளைக் கொண்ட 'கள்ளிச் செடியை' வீட்டின் தாழ்வாரத்தில் தொங்கவிடுவார்கள். அது கண் திருஷ்டியைப் போக்கும்.

மாலையில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். நீளம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம், சாக்கு ஓட்டப் பந்தயம், ஸ்லோ சைக்கிள் ரேஸ், பலுன் உடைத்தல், உரி அடி போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தி சிறுவர்களுக்கு பரிசுகள் கொடுப்பார்கள்.

இனி கன்னி பொங்கல்.

கன்னி பொங்கல்.

பெருவாரியான இடங்களில் இதை காணும் பொங்கல் என்று சொல்லுவார்கள்.

எங்கள் ஊரில் அன்று எல்லோரும் பார்த்து...பார்த்துதான் நடந்து போகனும். பின்ன மத்தவங்க மேல 'மஞ்ச தண்ணி' ஊத்தற நாளாச்சே. அதுவும் 'கொண்டா(ன்) கொடுத்தான்' (மாமன் வகையறா) என்றால் போச்சு. தூக்கிக் கொண்டு போய் மாடு, தண்ணி குடிக்கும் கழனி தொட்டில (எப்படி நாத்தம் அடிக்கும் தெரியுமில...?) வச்சி முக்கி எடுத்திடுவாங்க.

காலையிலேயே மஞ்சல கரைச்சி கூட கொஞ்சம் சுண்ணாம்பும் கலந்து அண்டாவுல வச்சிடுவாங்க. அப்புரமென்ன... போறவுங்க வரவுங்க மேல தண்ணிய கலந்து ஊத்த வேண்டியதுதான். இது வட இந்தியாவுல் நடக்கிற ஹோலி பண்டிகை போலதான். மஞ்சலோட சுண்ணாம்பும் கலந்தா தண்ணி செகப்பா மாறிடும். அன்னைக்கு யாரும் வெள்ளை சட்டை போடுறதில்ல.

இந்த விளையாட்டுக்கு எங்க அப்பா என்னை எப்போதும் அனுமதித்ததில்லை. நிறைய சம்பவங்களில் நான் தின்னையில் அமர்ந்து பார்வையிடும் பார்வையாளன் மட்டுமே.

மஞ்ச தண்ணி விளையாட்டு முடிந்ததும், இளவட்டம் எல்லாம் மம்புட்டியை எடுத்துக்கிட்டு கெலம்பிடும், தெருவ சுத்தம் பண்ண. மாலையில் சாமி புறப்பாடு இருப்பதால் வேலையில் எல்லோரும் ஆர்வம் காட்டுவர். தெரு இடையில ஓடுற மரக்கிளைகளை அப்புரப்படுத்தி, சாலையை சுத்தம் செய்து தோரணங்கள் கட்டி, கலர் கலராய் வண்ணத்தாள்கள் தொங்க விட்டு ஊரே அமர்க்களப் படும். இதையெல்லாம் ஊரில் உள்ள இளைஞர் அணி செய்யும்.

மாலை நேரம் நெருங்க...நெருங்க கன்னிப் பெண்கள் எல்லோரும் குழுவாகப் பிரிந்து வட்ட... வட்டமாக நின்று 'கும்மி' அடிப்பர்கள். இதற்கு வயதான பொண்கள் உதவி செய்வார்கள்.

ஊரா.. ஊரான் தோட்டத்தில
ஒருத்தன் போட்டனாம் வெள்ளரிக்கா
வெள்ளரிக்கா வாசத்துக்கு வந்தானாம் வெள்ளைகாரன்
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி
காயிதம் போட்டனா(ம்) வெள்ளைக் காரன்
தந்தானே...தந்தானே
தான தந்தா தந்தானே...

கும்மி பாட்டு நம்மை வசீகரிக்கச் செய்யும். இதைத் தொடர்ந்து சாமி புறப்பாடு இருக்கும்.

ஏழு கன்னிமார்

காலையிலேயே நாதசுவரம் மேளக் கச்சேரி தொடங்கிவிடும். தலைஞாயிரு, செம்பொன்னார்கோயில் போன்ற ஊர்களில் இருந்து பார்ட்டிகள் வருவார்கள். காலையில் ஆரப்பித்தார்களானால் இரவு 8மணி வரை அடி பின்னியெடுத்து விடுவார்கள்.

கருவரையில் ஏழு கன்னிமாருடன் இரண்டு குதிரை வீரனும் இருப்பார்கள். சுமார் 1000 வருடத்திற்கு முந்தையது கன்னியம்மன். இங்கு சுத்த சைவம் மட்டுமே படைக்கப்படும்.

வீதி உலாவிற்கு சாமி வெளியே வருவதில்லை. தீ சட்டி எடுத்துக்கொண்டு பூசாரிதான் வருவார். கூடவே ஒரு சாட்டைக் காரனும் உண்டு. காவேரிக்குச் சென்று கரகம் தூக்கிக் கொண்டு ஓவ்வொரு வீட்டின் வழியாகவும் சாமி வரும். எல்லோரது வீட்டிலும் 'மாவிலக்கு' போடுவார்கள் கூட்டம் சேர..சேர மேளத்தின் அடி பெரிதாகும். அடி பெரிதாக... பெரிதாக சாமியாடுபவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகும். அதில் நிச்சயம் ஏழு கன்னி பெண்கள் இருப்பார்கள்.

மாலை 4 மணிக்கு புறப்பட்ட சாமி, கோயிலுக்கு வர இரவு 7 மணிக்குமேல் ஆகிவிடும். சாட்டைக்காரன் சாட்டையை சுழற்றிக் கொண்டு வர... கூட்டம் 'ஹோ... வென ஒதுங்கும். முன்பெல்லாம் சிறு சிறு குற்றங்களுக்கு கூட சாட்டையடி, புளிய மிளாரால் விளாசுதல் போன்ற தண்டனைகள் இருந்துள்ளன.

பூசாரி தீ சட்டியை ஏந்தி வர... மற்ற சாமிவந்தவுங்க (சாமியாடிகள்) சூடத்தை கை, வாயில் ஏந்தி சாமியாடுவார்கள். அவர்களை சாதாரண நிலைக்கு கொண்டுவர பூசாரி விபூதி பூசுவார். பின்னர் ஊர்சார்பாக பூசாரியிடம் குறி கேட்கப் படும். கோயிலை விஸ்தரிப்பது, கோயில் குளத்தை செப்பனிடுவது போன்று கேள்விகள் கேட்கப்படும். எல்லாம் பொது நன்மைவாய்ந்ததாக இருக்கும்.

இந்த நேரத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற சிலர் 'மைக்'கை பிடித்துக் கொண்டு ரவுசு விடுவார்கள். "மேலத்தெரு தங்கராசு எங்கயிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும். அவுங்கவுங்க மாவிலக்கு சட்டியை பார்த்து வாங்கவும். சட்டியை பார்த்து எடுத்துக்கிட்டு போங்க, மாத்தி எடுத்துக்கிட்டு போவாதிங்கா... சாமிக்கு வழிய விட்டு ஒதுங்கி நில்லுங்க..." அப்படிங்கிற ரேஞ்சில போட்டு தாக்கிக் கொண்டு இருப்பார்கள்.

சாமி கோயில நெருங்க..நெருங்க ஓட்டம் அதிகமா இருக்கும். முத்தாய்ப்பா பூசாரி திடு..திடுப்புன்னு ஓட ஆரம்பிச்சிடுவாரு. ஓடிய பூசாரி கோயில் கிணற்றில் தொபுக்கடின்னு குதிச்சிடுவாரு!. இதை தெரிந்தே ஆட்கள் கிணற்றில் தயராய் இருப்பார்கள். முப்பது அடி கிணறு, தண்ணியும் பாதியளவிற்கு இருக்கும். பூசாரி கிணற்றில் குதித்த வேகத்தில் மேலே வருவார். அப்படியே அவர தூக்கிக் கொள்வார்கள். இது ஒரு சடங்காகவே பல வருடங்கள் கடைப் பிடிக்கப்பட்டு வந்துள்ளது. இப்போதெல்லாம் கிணற்றில் விழும் பழக்கம் இல்லை.

பிறகு பூசாரி கையில விபூதி வாங்க கூட்டம் அலைமோதும். ஒவ்வொரு வீட்டிற்கும் கோயிலிலுருந்து தனித்தனியே பிராசாதங்களை நாட்டாண்மைக்காரர்கள் கொண்டுவந்து தருவார்கள்.

இப்படியாக 'பொங்கல் விழா' தமிழனின் பாரம்பரியத்துடன் இனிதே நிறைவு பெறும்.

"சொல்லப் போனால் திருவிழாக்கள் தான் மனிதர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. குடும்பத்தையும், உறவுகளையும், நட்பையும் சீரான பாதையில் கொண்டு செல்கிறது. கிராமத்தையும் கிராம மக்களின் ஒற்றுமையையும் போற்றி பாதுகாப்பதில் இத்தகைய திருவிழாக்கள் தன் முக்கியப் பங்காற்றுகிறது. இது நகரத்திற்கும் பொருந்தும்".

நன்றி!
பொங்கலோ... பொங்கல்!

நன்றி: புகைப்படங்கள் 'கூகுள்'

1 கருத்து:

பிச்சைப்பாத்திரம் சொன்னது…

கட்டுரையின் தொடர்ச்சியும் சுவையாகவே இருந்தது. கிராமத்தின் அதே எளிமையான மொழியில் இருந்த விவரிப்பு சுவையைக் கூட்டியது.

//*'ஒழுத்தாமுட்ட'//

ஓ.. இந்த வசவுக்குச் சொந்தமானது தஞ்சை மாவட்டமா? சுவையான தகவல். இது பரவலாக தமிழகம் முழுவதும் பயன்படுத்தப்படும் வசவு வார்த்தை என்று கருதுகிறேன். சென்னையில் இதை "யாருப்பா அவன்ட்ட ஓத்தாமுட்ட வாங்கறது' அப்படின்னு உபயோகிப்பாங்க.

//இந்த நேரத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற சிலர் 'மைக்'கை பிடித்துக் கொண்டு ரவுசு விடுவார்கள். //

:-)

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...