![]() |
தெலுங்கு |
![]() |
மலையாளம் |
![]() |
கன்னடம் |
![]() |
தமிழ் |
கடந்த 1999-லிருந்து சபரிமலைக்குச் சென்று வருகிறேன். ஆனால் கடந்த 5 அல்லது 6 வருடமாக ஒரு காட்சி என்னை பெரிதும் கவர்ந்து வருகிறது. திராவிட மொழி குடும்பத்தைச் சார்ந்த தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளைச் சார்ந்த விளம்பர தட்டிகள், பத்தனந்திட்டா மாவட்டத்தில் சபரிமலை போகும் வழியெங்கும் வைக்கப்பட்டிருக்கின்றன.
முன்பெல்லாம் தமிழர் மற்றும் மலையாளிகள் மட்டுமே சபரிமலைக்கு சென்றுவந்தார்கள். ஆனால் தற்போது தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்கள் பெரிய அளவில் சபரிமலையில் குவிகிறார்கள். இதனால் இந்த கேரள மலையக மாவட்டங்களில் திரும்பிய பக்கம் எல்லாம் தென்னிந்திய மொழிகள் சரளமாகக் காணப் படுகின்றன.
=================================================
ஐயப்பன் ஒரு கிராம எல்லை தெய்வம்.
ஐயப்பன் கேரளாவில் குடிகொண்டிருந்தாலும், அவர் தமிழர்களின் தெய்வம்தான் என்பது அழிக்கமுடியாத வரலாறு. தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் (குறிப்பாக தென் மாவட்டங்களில்) அவர் அய்யனாரின் சொரூபமாகத்தான் பார்க்கப்படுகிறார். இன்றும் தென் மாவட்டங்களில் கிராமியப் பாடல்களில் ஐய்யப்பனை 'கருப்பன், சங்கிலி கருப்பன், சுடலைமாடன் சாமி, முனி' என்று கிராம எல்லை தெய்வமாக பாவித்து பல்வேறு கிராமிய பாடல்கள் இன்றும் பாடப் படுகின்றன.
ஐய்யப்பன் வழிபாடு ஒரு வாழ்க்கை முறை.
ஐய்யப்பன் வழிபாட்டினை சாதாரணமாக ஒரு மண்டல விரதம் என்று கூறிவிட முடியாது. அது உயர்வானதொரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறை என்பது நடைமுறை வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். புலால் மறந்து, மது -மாது துறந்து இறைவனை முழுதாய் சுமந்து வாழ்வதாகும்.
=================================================
அதோடு மெடிமிக்ஸ், மணப்புரம், முத்தூட், அனாசின், ஹமாம், ஜோஸ் ஆலுக்காஸ் போன்ற வியாபார நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வைத்து அந்தந்த மொழி ஐய்யப்ப பக்தர்களை தங்கள் பக்கம் இழுக்க விளம்பரங்களை வைத்துள்ளனர்.
'மணப்புரம் கோல்டு லோன்' ஒரு படி மேலே போய், மலையாளத்திற்கு மோகன்லாலையும், தமிழுக்கு விக்ரமையும், தெலுங்கிற்கு வெங்கடேஷையும், கன்னடத்திற்கு புனித் ராஜ்குமாரையும் வைத்து வழியெங்கும் விளம்பரம் செய்திருந்தனர்.
போதாத குறைக்கு நம்ம நடிகர் விஜயும் 'பொன்னம்பல மேட்டிற்கு- ஜோதி தரிசணம்' காண வரும் பக்தர்களை வழியெங்கும் 'ஜோஸ் ஆலுக்காஸ்' விளம்பரத்தில் வரவேற்றுக்கொண்டு இருந்தார்.
இப்படி திரும்பிய பக்கமெல்லாம் என்று இல்லாமல், கோவில் பிரகாரம் முழுவதும் இந்த நான்கு மொழிகளும் ஆக்கிரமித்துள்ளன. அதோடு தேவசம் போர்டும் தனது கோவில் சார்ந்த அறிவிப்புகளில் இந்த நான்கு மொழிகளிலுமே செய்து வருகிறது. கோவில் ஒலிபெருக்கிகளிலும் திராவிட மொழிகள் வலம் வருகின்றன.
இதுமட்டுமல்லாமல் காலண்டர், ஐய்யப்பன் வரலாறு, புகைப்படங்கள் போன்றவையும் திராவிட மொழிகளான தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம், அகிய மொழிகளில் அச்சிட்டு விற்கப் படுகின்றன.
ஒரு விஷயத்தை நான் மறந்து விட்டேன். அது... இசைத் தட்டு விற்பனை!.
மிக பிரமாண்டமான வியாபாரச் சந்தையான 'அய்யப்பன் இசைத் தட்டு விற்பனை'; இன்று இந்த நான்கு மொழிகளிலும் சக்கப் போடு போடுகின்றதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துக் கொள்ளவெண்டியவசியமில்லை.
வழியெங்கும் உள்ள உணவகங்களில் கூட தட்டுத்தடுமாறி தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் எழுதிவைத்திருக்கின்றனர்.
இப்படி திரும்பிய திசையெங்கும் திராவிட மொழி குடும்பத்தை சார்ந்த மொழிகள் அதிக அளவில் பின்னி பினைந்திருக்கும் காட்சி நமக்குள் வியப்பையும் மகிழ்ச்சியை தருகின்றது.
அதனாலயே 'சாமி ஐய்யப்பனை' இனி நாம் 'திராவிடர்களின் தெய்வம்' அல்லது 'தென்னிந்தியர்களின் தெய்வம்' என்று மனதார அழைக்கலாம்.