கபடி கபடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கபடி கபடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 24, 2015

புத்துயிர் பெறுமா கபடி...?


  சடுகுடு ஆடி வந்த முந்தைய தலைமுறை குடுகுடு கிழங்களாக                     
மாற...மாற.. சடுகுடுவும் கிடுகிடுவென ஆடிப்போய் கிடக்கிறது.                       
 

          
 (கடந்த சனிக்கிழமையன்று தினமணியில் வந்த எனது கட்டுரை )
          றுதிக் கட்டத்தை எட்டிவிட்டது புரோ கபடி லீக் போட்டி. கடந்த மாதம் தொடங்கிய புரோ கபடி லீக், கபடி விளையாட்டில் புதிய மின்னலைப் பாய்ச்சியிருக்கிறது. கிரிக்கெட்டை தொடர்ந்து கபடி விளையாட்டிலும் லீக் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புரோ கபடி லீக் போட்டிகள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இது கபடி ஆர்வலர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திருக்கிறது.

 இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 8 அணிகள் இப் போட்டிகளில் மோதுகின்றன. ஆனால், கபடியின் தாயகமான தமிழ்நாட்டிலிருந்து எந்த ஓர் அணியும் கலந்துக் கொள்ளவில்லை என்பதுதான் வேதனையான ஒன்று.

 சடுகுடு ஆடி வந்த முந்தைய தலைமுறை குடுகுடு கிழங்களாக மாற...மாற.. சடுகுடுவும் கிடுகிடுவென ஆடிப்போய் கிடக்கிறது. தொன்மை இனமான தமிழினத்தின் வீர விளையாட்டான சடுகுடு என்ற கபடி இன்று கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் அழிந்துக் கொண்டு வருகிறது.

 காசு செலவு இல்லாத விளையாட்டு இது. உடல் வலு, மூச்சுப் பயிற்சி என்று கூடுதல் பலனும் நமக்கு கிட்டும். 

 உத்தி பிரித்து கபடி...கபடி... என்று தொடையைத் தட்டிக் கொண்டு அடங்கா ஆவேசத்துடன் எதிர் அணிக்குள் புகுந்து களமாடினால் சுற்றி வேடிக்கை பார்க்கும் கூட்டம் ஹோவேன்று ஆர்ப்பரிக்கும். அப்படி ஓர் உணர்ச்சிமிக்க விளையாட்டு கபடி.

 அன்றைய நாள்களில் தமிழகத்தில் திரும்பிய இடமெல்லாம் கபடி போட்டிகள் நடைபெறும். தெருவுக்குத் தெரு ஒரு கபடி அணி இருக்கும். பகல், இரவு ஆட்டமாக போட்டியை இரண்டு நாள் நடத்தும்போது, ஊரே திருவிழாக் கோலம் பூண்டு இருக்கும். 

 ஆனால் இன்றோ, தமிழர்களின் வீர விளையாட்டான கபடியின் நிலை... நினைத்தாலே நெஞ்சம் வெடித்துவிடும் போல் இருக்கிறது. மனிதனின் நேரத்தை விழுங்கும் கிரிக்கெட்டின் வருகைக்குப் பின்னர்தான் கபடி களையிழந்து போய்விட்டது.

 தமிழகத்தில்தான் கபடி விளையாடுவது குறைவாக உள்ளதே தவிர, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், பஞ்சாப், பிகார், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் போற்றப்படக் கூடியதாக கபடி வாழ்கிறது. வங்கதேசத்தில் கபடி தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

 இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், ஈரான், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தேர்ச்சி பெற்ற கபடி அணிகள் இருக்கின்றன. 13 உலக நாடுகளில் கபடி விளையாடப்படுகிறது என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
 இந்தியாவுக்குத் தொடர்ந்து தங்கப் பதக்கம் பெற்றுத் தரும் விளையாட்டுகளில் கபடியும் ஒன்று. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் கபடி அணி தொடர்ந்து ஏழு முறை தங்கப் பதக்கம் வென்று வருகிறது. 

 1985-இல் டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி முதல் முறையாக உலக அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 1990-இல் நடைபெற்ற 11}ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் கபடி களம் இறக்கப்பட்டது.

 ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய உள்விளையாட்டு அரங்கப் போட்டி, ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி என்று மூன்று பிரதான விளையாட்டுப் போட்டிகளில் கபடி சேர்க்கப்பட்டது. இம் மூன்றிலும் சேர்க்கப்பட்ட ஒரே விளையாட்டு கபடி மட்டுமே. இதுவரை கபடிக்காக நடைபெற்ற அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலும் கோப்பையை இந்தியாவே வென்றிருக்கிறது. 

 இந்த ஆண்டு புரோ கபடி லீக் போட்டியில் பல்வேறு தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இது கபடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
 தற்போது நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டியில் பல்வேறு அணிகளுக்காக புகழ்பெற்ற தமிழக வீரர்கள் விளையாடி வருகின்றனர். கடந்த முறை புரோ கபடி போட்டியில் பட்டம் வென்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் பயிற்சியாளர் தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பது குறிப்பிடத்தக்கது. நட்சத்திர வீரர்கள் இல்லாத ஜெய்ப்பூர் அணியை அவர் புரோ கபடி லீக் போட்டியின் முதல் சாம்பியனாக மாற்றினார்.

 இந்தியாவின் சிறந்த தடுப்பாட்டக்காரரான சேரலாதன் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகின்றார். தற்போதைய போட்டியில் முன்னணியில் இருக்கும் யூ மும்பா அணியில், தேர்ச்சி பெற்ற தமிழக வீரர்கள் விளையாடுகின்றனர். தமிழக வீரர்களின் ஆட்ட பாணி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துவிடுகிறது.

 வளமையான கபடி பாரம்பரியம் கொண்ட தமிழகத்திலிருந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் புரோ லீக் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்திலிருந்து ஓர் அணியும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பது நெருடலான ஒன்று. ஐபிஎல் போன்றே இதிலும் அணிகள் ஏலம் விடப்பட்டிருக்கின்றன.

 அப்படி இருக்க தமிழகத்திலிருந்து ஒருவர் கூடவா தமிழகத்தின் பெயரில் அணியை வாங்க முடியவில்லை? ஏலத் தொகை அப்படி ஒன்றும் கோடிகளில் இருக்கவில்லை. லட்சங்களில்தான் இருக்கின்றன. தமிழக நலன் சார்ந்த எந்த ஒரு நிறுவனத்துக்கும் இந்த நிகழ்வு கவனத்தில் வராதது மிகவும் கொடுமை.

அமெச்சூர் கபடி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (ஏ.கே.எஃப்.ஐ.) இணையதளங்களிலும், கபடிக்கான விக்கிபீடியாவிலும் கபடி இந்தியாவின் பழைமையான விளையாட்டு என்றே குறிப்பிடப்படுகிறது. இந்திய அளவிலோ அல்லது உலக அளவிலோ கபடி தமிழர்களின் விளையாட்டு என்பதைப் பதிவு செய்ய நாம் தவறிவிட்டோம்.

 கைப் பிடி, கைப் பிடி என்று சொல்லே கபடியாக மாறியது என்று இங்கு எத்தனை பேருக்குத் தெரியும். காலத்தே பதிவு செய்யாத நமது பிறவிக் குணத்தால் நமது பாரம்பரியமான கபடி விளையாட்டை தாரைவார்த்து இருக்கிறோம். 

 நமது வரலாற்றை நாம் மறந்தால் வரலாறு நம்மை மறந்துவிடும். எதிர்வரும் ஆண்டுகளிலாவது புரோ கபடி லீக் போட்டியில் தமிழகத்திலிருந்து கபடி அணிகள் இடம்பெற வேண்டும் என்பதே சாமானிய தமிழர்களின் எதிர்ப்பார்ப்பு.

திங்கள், ஜூலை 28, 2014

ப்ரோ கபடி லீக்கும் தமிழ் நாட்டின் மானமும்!.

TAMILSNOW என்ற இணைய தளத்தில் நண்பர் ஹரிஹரன் எழுதிய கட்டுரையை இங்கு மறு பிரசுரம் செய்கிறேன்.





          ந்தியன் பீரிமியர் லீக் என்று கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த பிறகு ஹாக்கியிலும் அதே போன்று ஒரு வர்த்தகப்பூர்வமான ஒரு போட்டி ஆரம்பிக்கப்பட்டது. விளையாட்டில் வர்த்தகங்களை நுழைப்பது என்பது சரியா தவறா என்பதை விட இந்தியா போன்ற நாடுகளில், இப்படி வர்த்தக நிறுவனங்கள் நுழைவதால் விளையாட்டு வீரர்கள் மூன்று வேளை கஞ்சியாவது நிம்மதியாக குடிக்க வழிவகை ஏற்படும் வாய்ப்பை வழங்குகிறது.தேசிய அளவில் சாதனை புரிந்த விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி, சர்வதேச அரங்கில் பதக்கங்கள் வாங்கிய வீரர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் வாழ்வாதரம் என்பது விளையாட்டு வீரனாக இருந்தாலே போதும் என்ற நிலை கிரிக்கெட்டை தவிர இந்தியாவில் வேறு எந்த விளையாட்டிலும் கிடையாது. அத்தகைய நிலையில் விளையாட்டு போட்டிகளிலும் வர்த்தக நிறுவனங்கள் நுழைவது வரவேற்கத் தக்கதே. கிரிக்கெட், ஹாக்கி பீரிமியர் லீக் வரிசையில் கபடியும் நுழைந்துள்ளது.

கபடிக்கு புரோ கபடி லீக் ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 26ம் தேதி முதல் ஆக்ஸ்ட் 31ம் தேதி வரை ஒரு பெரும் திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. கபடி என்பது உலக அளவில் சில நாடுகளே விளையாடினாலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெற்ற விளையாட்டு, மேலும் கபடிக் கென்று தனியாக உலக கோப்பையும் இருக்கிறது, இந்த உலக கோப்பையை 2004லிருந்து 2013 வரை நடந்த ஆறு உலக கோப்பையையும் இந்தியாவே கைப்பற்றியுள்ளது. இவைகளில் தமிழக வீரர்களின் பங்களிப்பும் ஒரளவாவது இருந்தே வருகிறது, 39 வயது சேரலாதன் மிகச்சிறந்த தற்காப்பு கள ஆட்டக்காரராக இந்திய அணியில் பல்லாண்டுகளாக ஆடிவருகிறார்.

கபடி என்பது தமிழர்கள் விளையாட்டு என்பதை உலகமே ஒத்துக் கொண்ட ஒரு விளையாட்டு, கை பிடி என்பதே கபடியாக மாறியது என்பதாக வரலாறு சொல்கிறது, இதை நாம் சடுகுடு என்ற பெயரிலும் நாட்டுப்புற பாடல் வரிகளுடன் விளையாடி வந்த விளையாட்டு. ஏன் இன்று வரை தமிழக அரசின் அங்கீகரிப்பட்ட தமிழகத்தின் விளையாட்டாக இருப்பது கபடி தான். (நம்மை தவிர பங்களாதேஷ் தனது தேசிய விளையாட்டாக அங்கீகரித்துள்ளது) இப்படி தமிழக அரசின் விளையாட்டாக இருக்கும் கபடி இந்த புரோ கபடி லீக்கில் தமிழகத்தில் இருந்து குறைந்த பட்சம் 4 அணிகளாவது பங்கேற்று இருக்க வேண்டும் ஆம், ஊர்களுக்கு இடையிலான போட்டியிலிருந்து அனைத்து மட்டங்களிலும் கபடிப் போட்டிகள் கோயில் திருவிழா, பொங்கல் விழா என்று எங்கும் நிறைந்தே இருக்கும் கபடிப் போட்டிகள். இப்படி அனைத்து பகுதியிலும் விளையாடப்பட்டு வரும் நமது தமிழகத்தில் இருந்து ஒரு அணி கூட இந்த ப்ரோ கபடி லீக்கில் இல்லை.

காரணம் அணியை வாங்குவதற்கோ இல்லை அணி ஒன்றை நிறுவவோ எந்த நிறுவனமும் தயார் இல்லை என்று சொல்லலாம் ஆனால் நாமே இப்படி ஒரு போட்டி நடப்பதை அறியாதவர்களாகத் தான் இருக்கிறோம், இந்திய கபடி கழகத்தில் அனைத்து மாநிலங்களும் பங்கு பெற்றுள்ளன. இதில் இந்தியன் ப்ரீமியர் லீக் போன்று அணிகள் ஏலம் விடப்பட்டிருக்கின்றன. எட்டு அணிகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது, பெங்கால் வாரியர்ஸ்,  பூனேரி பல்தான், யு மும்பா, தபங்க் டில்லி, பெங்களூர் புள்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரைட்ஸ், தெலுங்கு டைட்டான்ஸ் இதில் பூனே அணியை அபிசேக் பச்சன் வாங்கியிருக்கிறார். அதிக பட்ச ஏலத்தொகையாக 12,80,000 ரூபாய்க்கும் குறைந்த பட்ச ஏலத்தொகையாக 9,10,000 ரூபாய்க்கும் அணிகள் ஏலம் விடப்பட்டுள்ளன, தமிழ்நாட்டில் இருந்து ஒருவரு கூட இந்த தொகையை முதலீடு செய்யும் அளவிற்கு இல்லையா என்ன.நடிகர்களுக்கு இடையே நடக்கும் ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட் போட்டி எந்த விதமான விளையட்டு மேம்பாட்டையும் கொடுக்காத வெறும் விளம்பரமாகவும், பொழுது போக்கிற்காகவும் நடக்கும் இந்த போட்டியின் சென்னை அணியை வாங்கிய ராதிகா சரத் குமார் போன்றவர்களுக்கு இந்த 12 லட்சம் பெரிய தொகையா என்ன. தமிழ் நாட்டி மானத்தை கட்டி காப்போம் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று பேசுபவர்கள் இங்கு பலர் உண்டு ஆனால் இப்படி ஒரு போட்டி அதை முதலில் முன்னெடுத்து இருக்க வேண்டியவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர் அதுவும் ஒரு முக்கியமான விளையாட்டு தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இதற்கு விளம்பரதாராகவும் நேரடி ஒளிபரப்பும் செய்கிறது இத்தகைய ஒரு போட்டி அதுவும் தமிழர்களின் விளையாட்டை நடத்த தமிழ்நாட்டில் இருந்து ஒருவரும் தயார் இல்லை. அதாவது பரவாயில்லை தமிழ் நாட்டில் இருந்து ஒரு அணி கூட கிடையாது.
    

தமிழ் நாடு கபடி கழகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்கலாம் என்றால் இரண்டு நபர்களின் பெயரும் எண்ணும் இணையத்தில் இருக்கிறது ப்ரெசிடெண்டாக திரு. சோலை எம். ராஜா மதுரையை சேர்ந்தவரும், செகரட்டரியாக திரு, சைபுல்லா, திருப்பூரை சேர்ந்தவரையும் குறிப்பிட்டுள்ளார்கள் அவர்கள் எண்களை தொடர்பு கொண்டால் ஒரு நம்பரில் அப்படிப்பட்ட பெயரில் இங்கு யாருமே இல்லை என்கிறார். அடுத்த எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது. இதில் பிரசிடண்டாக இருக்கும் சோலை எம் ராஜா அனைவரும் அறிந்தவரே ஒரு காலத்தில் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர், இவரது தந்தை மதுரை காவல் துறையில் துணை ஆணையளாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்கள் குடும்பத்தின் அடிதடி கட்டப்பஞ்சாயத்து சாம்ராஜ்யம் மதுரை மாவட்டம் அறிந்ததே ராஜா அவர்களின் தம்பி ரவியும் தந்தை சோலை முத்தையாவும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், ரவியின் மீது பல நூற்றுக் கணக்கான கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது. ராஜாவின் மீதும் பல வழக்குகள் உண்டு. இவர் தான் தமிழ் நாடு கபடி கழகத்தின் தலைவராக இருக்கிறார்.
 
இங்கு கபடி கழகம் மட்டும் தவறு செய்யவில்லை நாம் அனைவருமே தவறு செய்துள்ளோம், தமிழ்நாட்டின் விளையாட்டை அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம், இன்னும் பத்து வருடத்தில் இல்லை இந்திய கபடி கழகத்தில் கபடி வரலாறு என்று பழங்காலத்தில் இருந்து இந்தியா முழுவதும் அனைவரும் விளையாடிய விளையாட்டாக சித்தரித்துள்ளனர். இந்தியா என்ற நாடே 1800களில் தான் உருவானது என்ற வரலாற்றையே மறைத்துவிட்டு. தமிழர் விளையாட்டாக இது எங்கும் அகில இந்திய கபடி கழகத்தின் இணையத்தில் எங்குமே குறிப்பிட படவில்லை. நமது அடுத்த தலைமுறை கபடி என்ற விளையாட்டை எதோ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விளையாட்டாக பார்க்க போகிறது என்பது என்னவோ நிதர்சனமாகத் தெரிகிறது.
- ஹரிஹரன்

ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்' புத்தக வெளியீட்டு விழா !

ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்'  புத்தக வெளியீட்டு விழா கடந்த வெள்ளி  அன...