தினமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 16, 2015

தினமணியின் 'ஈகை பெருநாள் சிறப்பு மலர்'.



இந்த வருடம் ரமலானை முன்னிட்டு "ஈகை பெருநாள் மலரை வெளியீட்டு அசத்தி இருக்கிறது தினமணி நாளிதழ்.

பொதுவாக தீபாவளி பொங்கலுக்குதான் சிறப்பு மலர் வெளிவரும். ரமலான் மற்றும் கிருஸ்துமஸ் சிறப்பு மலர் எப்போதாவது அத்தி பூத்தாற்போல்தான் வெளிவரும். பத்திரிகைகளும் அதில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் விட்டுவிடும்.

அதுவும் ஈகை பெருநாள் மலரென்றால் மார்க்கம் சார்ந்த கட்டுரைகளே அதிகம் இடம் பெற்று இருக்கும். மாற்று மதத்தினரும் விரும்பி படிக்கும் அளவிற்கு ஜனரஞ்சகமாக இல்லாமல் போய்விடுவது இத்தகைய மலர்களின் பொதுத்தன்மை. ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனித்துவமிக்க ஒரு ஈகை பெருநாள் சிறப்பு மலரை வெளியீட்டு பெருமை தேடிக் கொண்டுள்ளது தினமணி நாளிதழ்.

இத்தகைய பெருநாள் மலர்களை கலாச்சாரத்தின் காலத்தே பதிவாகத்தான் நாம் பார்க்கவேண்டும். பத்திரிகைகளே இப் பணியை செய்ய முடியும். அதை செய்திருக்கிறது தினமணி!. இம் மலருக்கென்று தனி வழிகாட்டுதல் குழு அமைத்து இம் மலரை தயாரித்துள்ளனர். மதம் சார்ந்த சென்ஸிட்டிவ் விஷயங்களை கையாலும் போது தனி கவனம் எடுத்துக் கொள்ளுவது எப்போதுமே நன்மைத்தரும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரையே முதன்மை கட்டுரையாக இம் மலரில் இடம்பெற்றிருக்கிறது. அதோடு உலக வரலாற்றில் முதலிடத்தில் முஹம்மது நபி, தமிழகத்தில் இஸ்லாமியர்கள், நபிவழியில் வெற்றி நிச்சயம், பேரா முனைவர் எம்.எச்,ஜவாஹிருல்லா எழுதிய விடுதலை போரின் முன்னோடிகள் முஸ்லீம் மார்க்க அறிஞர்கள், டாக்டர் கே.வி.,எஸ்,ஹபீப் முஹம்மத் எழுதிய சமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள், நோன்பு ஒரு கேடயம், பள்ளிவாசலும் தொழுகையின் அற்புதமும், கவனம் தரும் லைலத்துல் கத்ர் இரவு, யார் பயங்கரவாதிகள்?, பழ.கருப்பையா எழுதிய அழகியவற்றுளெல்லாம் அழகியது, முனைவர்  ஆர்.ராதிகா தேவி எழுதிய 'பெண்களுக்கான மார்க்கம் இஸ்லாம்', முனைவர் சொ.சேதுபதி எழுதிய பாரதியார் பேசிய இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை, பக்கீர்கள் என்னும் இஸ்லாமியப் பாணர்கள் போன்ற கட்டுரைகளோடு இன்னும் பல கட்டுரைகள் இம் மலரில் இடம்பெற்றுள்ளன.

தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய 'ஆழம் தெரியாக் கடல்', ஜே.எம் சாலி எழுதிய 'சம்மதம்', சிராஜூல் ஹசன் எழுதிய 'முத்தலாக்', எஸ்.பர்வீன் பானு எழுதிய 'முதல் பாடம்', மு.அ அபுல் அமீன் எழுதிய 'ஈமானில் சீமான்' போன்ற முத்தான சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 'முனைவர் ஜெ.ஹாஜாகனி 'புரட்டிப் பாருங்கள் உங்களை புரட்டிவிடும்' என்ற மூன்று பக்க கவிதையை எழுதியிருக்கிறார்.

தமிழகத்தில் பிரபலமான 8 தர்காக்கள் பற்றிய கட்டுரைகள் இம் மலரில் இடம்பெற்றுள்ளன. தர்காக்கள் பற்றிய விமர்சனங்களை இக் கட்டுரைகள் தவிடுபொடியாக்கியிருக்கின்றன.

மலரெங்கும் மார்க்க துணுக்குகள் விரவிக் கிடக்கின்றன. வழுவழுத் தாளில் மாற்று மதத்தினரும் விரும்பி படிக்கும் வகையில் இம் மலரை தயாரித்துள்ளனர். இச் சிறப்பு மலர் பாரதியாரின் கவிதையை அட்டையில் தாங்கி வெளிவந்திருப்பது சிறப்பு!.

பக்கம் 160
விலை ரூ.50/-

வெள்ளி, மார்ச் 14, 2014

காணாமல் போகட்டும் "காணவில்லை' சுவரொட்டிகள்!


(தினமணியில் தஞ்சாவூர்க் கவிராயர் எழுதிய கட்டுரை, பிடித்திருந்ததால் இங்கு  பிரசுரம் செய்கிறேன்)

                         பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் ஒட்டப்பட்டிருக்கும் "காணவில்லை' சுவரொட்டிகளைப் பார்க்கும்போதெல்லாம் நெஞ்சம் துணுக்குறுகிறது. இவர்கள் எல்லாம் எப்படி காணாமல் போக முடியும்? மனிதர்கள், காட்டில் காணாமல் போகலாம், நாட்டில் காணாமல் போகலாமோ? இவர்கள் காணாமல் போக எது காரணமாக இருந்திருக்கும்? "தேடுவதற்கு யாருமற்றவர்கள் காணாமல் போவதில்லை' - எங்கோ படித்தவரி, எட்டிப்பார்க்கிறது.

காணாமல் போனவர்கள் காணாமல் போன அன்றைக்கு, பெரும்பாலும் கட்டம் போட்ட சட்டை அணிந்திருக்கிறார்கள். "மனநிலை சரியில்லாதவர்' என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

அண்மையில், தென்மாவட்டத்திலுள்ள ஒரு நகரப்பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர், நல்ல மனநிலையுடையவராகவும் ஒழுங்கான முறையில் உடை அணிந்தவராகவும் காணப்பட்டாலும், எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் கைநீட்டி கெஞ்சிக் கொண்டிருந்தார். அவர் முகம் பரிச்சயமானதாக இருந்தது. அவரை நெருங்கினேன். அவரும் என்னை கவனித்து விட்டார். சட்டென்று பேருந்து நிலையக் கூட்டத்தில் கரைந்து காணாமல் போனார்.

சென்னையில் யார் வீட்டிலோ இவரைப்பார்த்திருக்கிறேன். யார் வீடாக இருக்கும் நினைவின் அடுக்குகளில் துழாவினேன். மனம் பதைத்தது. வழி தவறி வந்துவிட்டாரோ? என்னை கண்டதும் ஏன் ஒளிய வேண்டும்? அந்த பேருந்து நிலையத்தில் எவ்வளவு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வெயில் - கூட்டம் - பேருந்துகளின் ஹாரன் சப்தம். நான் விரைவிலேயே களைத்துப் போய்விட்டேன்.

சற்று நின்றேன். கையில் பை கனத்தது. அதைவிட மனசு கனத்தது. வீட்டைவிட வெளியிடத்தை பாதுகாப்பாக உணர்வது எவ்வளவு துர்பாக்கியமானது? சுயமான சம்பாத்தியமோ, பென்ஷன் போன்ற வருவாயோ இல்லாத முதியவர்கள், வீட்டில் உள்ளோரின் கடுஞ்சொல் தாங்காது சில நேரங்களில் வெளியேறி விடுகின்றனர்.

இந்த முதியவரும் அப்படிப்பட்டவர்களில் ஒருவாராக இருப்பாரோ? பெரும்பாலான "காணவில்லை' சுவரொட்டிகளில், சில குறிப்பிட்ட வாசகங்களே அடிக்கடி காணப்படும்.

ஒருமுறை நான் பார்த்த "காணவில்லை' சுவரொட்டி ஒன்றில், மீசை அரும்பத் தொடங்கும் ஒரு பையனின் பால் வடியும் முகமும், அதன் கீழே, "அசோக்! எங்கிருந்தாலும் வரவும். அம்மா உன் நினைவாக படுத்த படுக்கை ஆகிவிட்டாள். உன் விருப்பப்படி இனி எல்லாரும் நடந்து கொள்கிறோம், உடனே வரவும்' என்ற வாசகங்களும் காணப்பட்டன.

இந்த சுவரொட்டியை அந்த பையன் பார்த்திருப்பானா? அம்மாவின் மேல் உள்ள பாசம் அவனை வீட்டுக்கு அழைத்துப் போயிருக்குமா? சூதும் வாதும் நிரம்பிய இந்த உலகத்தில் கெட்டவர்கள் கையில் அவன் கிடைத்திருந்தால், அவன் நிலைமை என்னவாகியிருக்கும்? கடவுளே, அப்படி ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது.

அந்த பையன் திரும்ப வந்திருப்பானா என்று தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்குள் மூண்டது. அந்த சுவரொட்டி ஆறு மாதங்கள் முன்னால் ஒட்டப்பட்டதாக இருந்தது. அதிலிருந்த தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டேன். மறு முனையில் ஒரு பெண் குரல் கிறீச்சிட்டது.

"ஐயா, நீங்க யாருங்க? அசோக் கிடைச்சுட்டானா? அவனைப் பார்த்தீங்களா?' என் கைகள் நடுங்கின. நான் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தேன். ஆனாலும் "ஐயா'... "ஐயா'.. அந்தத் தாயின் தீனக்குரல் என்னைப் பல இரவுகள் தூங்கவிடாமல் செய்தது.

வீட்டை விட்டு ஓடிப்போன ஒரு சிறுவனைப் பற்றிய ருஷ்யக்கதை உருக்கமானது: தாத்தா, பேரன் } இரண்டே பேர். தாத்தா பேரனை கண்டிப்பாக வளர்க்கிறார். சின்னஞ்சிறுவனான பேரனுக்கு தாத்தாவின் கண்டிப்பு பிடிக்கவில்லை. ரயில் ஏறி தொலைதூர நகரத்துக்கு போகிறான். அங்கே ஒரு ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலையில் சேர்ந்து பல கஷ்டங்களை அனுபவிக்கிறான். ஒருநாள் காகிதமும், கவரும் சேகரித்து தாத்தாவுக்கு கடிதம் எழுதுகிறான்.

அன்புள்ள தாத்தா,

இங்கே நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன். உடம்பெல்லாம் கரியும் அழுக்குமாக இருக்கிறேன். அடிக்கிறார்கள். என்னை வந்து அழைத்துப் போங்கள். இனிமேல் உங்கள் பேச்சை கேட்கிறேன். உடனே வரவும். இப்படிக்கு - உங்கள் பேரன்.
கவரை ஒட்டி எடுத்துக் கொண்டு ஓடுகிறான். தபால் பெட்டியில் சேர்க்கும் முன்னதாக ஞாபகம் வந்தவனாய் முகவரியை எழுதுகிறான் தாத்தா, கிராமம். அவ்வளவுதான். 

நாம் நாளும் காணும் "காணவில்லை' சுவரொட்டிகளுக்குப் பின்னால் இது போன்ற கண்ணீர்க் கதைகள் எத்தனையோ? இனி ஒரு விதி செய்வோம். முதியோருக்குப் பரிவு காட்டுவோம்; பெண்களையும் சிறுவர்களையும் புரிந்து கொண்டு அன்பு செலுத்துவோம்; மனநலம் குன்றியவர்களைப் பாதுகாப்போம். காணாமல் போகட்டும் "காணவில்லை' சுவரொட்டிகள்!.



நன்றி தினமணி.

திங்கள், ஆகஸ்ட் 12, 2013

சமூக வலைதளங்களிலுமா சாதி?



//மார்க் சக்கம் பெர்க் என்ற 23 வயது பல்கலைக்கழக மாணவர் தனது சக மாணவர்களோடு கலந்து பழக உருவாக்கிய பேஸ்புக் என்ற சமூக வலைதளத்தை, தமிழ்ச் சமூகம் சாதிய சண்டைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறது.//


 By தோழன் மபா.
First Published : DINAMANI 12 August 2013 02:15 AM IST




    நமது கலையும் பண்பாடும் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. உலகின் தொன்மையான மொழிகளில் தமிழும் ஒன்று. மொழி வளமை, இலக்கியங்களின் ஆளுமை, உயர்வான கலாசாரம், ஆன்மிகம் என்று உலகிற்கு முன்னோடியாக இருந்தது தமிழகம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் கலாசார உச்சத்தில் இருந்தபோது, ஐரோப்பிய கண்டங்கள் இருண்ட கண்டமாக இருந்தது என்பார்கள்.


இப்படிப்பட்ட பெருமை மிக்க தமிழ்ச் சமுதாயம் சாதியின் பிடியில் சிக்கிக் கொண்டு தங்களுக்குள் சகோதர யுத்தத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பான இணையதளங்களை சாதிப் பெருமைக்கும், சாதிய சண்டைகளுக்கும் பயன்படுத்துகின்றனர் தமிழர்கள் என்பது வருத்தமான உண்மை.


மார்க் சக்கம் பெர்க் என்ற 23 வயது பல்கலைக்கழக மாணவர் தனது சக மாணவர்களோடு கலந்து பழக உருவாக்கிய பேஸ்புக் என்ற சமூக வலைதளத்தை, தமிழ்ச் சமூகம் சாதிய சண்டைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறது.


முன்னெப்போதையும் விட தற்போது சாதிய சண்டைகள் தமிழகத்தில் உச்சத்தில் இருக்கிறது. முன்பு தெரு முனைகளிலும், கடைத் தெருவிலும் நடந்த சாதிச் சண்டை தற்போது இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் நடைபெற்று வருகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் சமூக மறுசீரமைப்பில் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் ஒரு மேடையாக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. லிபியா, துனிசியா எகிப்து போன்ற நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு, சமூக வலைதளங்களே காரணமாக இருந்திருக்கின்றன.


நவீன உலகை கட்டமைப்பதில் இன்றைய தலைமுறையினரின் கருவியாக சமூக வலைதளங்கள் செயலாற்றுகின்றன. ஆனால், தமிழகத்திலோ நிலைமை தலைகீழ்.


முன்பெல்லாம் எழுதுவதற்கு எளிதில் யாருக்கும் வாய்ப்பு கிடைக்காது. நமது கருத்தை நம்மை சுற்றி உள்ளவர்களிடம் மட்டுமே பதிவு செய்ய முடியும். அப்படியே எழுதினாலும் அது அச்சேறுவதென்பதும் இமாலைய சாதனையாகவே இருந்தது.


என்னதான் முழு திறமையைக் கொண்டு எழுதினாலும், அதில் தரம் இருந்தால் மட்டுமே ஆசிரியர் குழுவால் ஏற்றுக் கொள்ளப்படும். இல்லையென்றால் "பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்' என்ற துண்டு சீட்டு உங்கள் வீடு தேடி வரும்.


ஆனால், இணையதளங்களிலோ யார் வேண்டுமானாலும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் எழுதலாம், எவரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என்ற நிலையே உள்ளது. இனம், சமூகம், மதம் போன்ற மிகவும் சென்சிட்டிவான விஷயங்கள் கூட அதன் விபரீதம் புரியாமல் இங்கே விஷமத்தனத்துடன் விமர்சிக்கப்படுகிறது. இதில் தனது சாதி பெருமையை தம்பட்டம் அடிப்பதோடு இவர்கள் நின்று விடுவதில்லை. இதில் சாதிகளை தங்களுக்குள் ஒப்பீடு செய்து கொள்கின்றனர். இரு பிரிவாக பிரிந்துக் கொண்டு மோதிக் கொள்கின்றனர். இதில் பெரும் சச்சரவுகள் ஏற்பட்டு, கேட்கவே காதுகூசும் பல நாராசமான சொற்கள் எழுத்தில் வடிக்கப்படுகின்றன.


இத் தளங்களை தொடங்குவது எளிது என்பதால், தனி நபர்கள்கூட தளங்களை தொடங்கி பிற சமூகங்களை சீண்டும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இத் தளங்களில் மிகவும் அருவருக்கத்தக்க, அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். கழிவறை சுவர் போன்று எவர் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை கிறுக்கிவிட்டு சென்றுவிடுகின்றனர்.


கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தமது பெயருக்கு பின்னால் தனது ஜாதி பெயரை வைத்துக் கொள்வது ஒரு அநாகரிகமான செயல் என்ற புரிதல் 60களிலேயே ஏற்படுத்தப்பட்டுவிட்டது. சாதியை தனது பெயரில் இருந்து தூக்கியெறிந்து பல மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது தமிழகம் என்பதை வளரும் தலைமுறை அறிந்திருக்கவில்லை.


இத்தகைய போக்கு நமக்கு நிச்சயம் பலன் தராது. நம்மை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கிதான் அழைத்துச் செல்லும். பொழுது போக்கிற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சாதனம் நம் பொழுதையும் சிலரின் உயிரையும் அழிப்பதற்குப் பயன்படவேண்டாம்.


நமது முன்னேற்றத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் மிகப் பெரிய தடையாக சாதியே இருக்கிறது என்பதை வளரும் தலைமுறை உணரவேண்டும்.


அரசாங்கமும் சமூகத் தளங்களை கட்டுப்படுத்தி வரைமுறைப்படுத்தவேண்டும். அதில் வரும் பதிவுகள் தணிக்கை செய்யப்படவேண்டும். ஆயுதத்தை விட கூர்மையானது எழுத்து. அது பல விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் பெற்றது என்பதை நாம் மறந்துவிடவேண்டாம். மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வளரும் தலைமுறை சாதி என்ற கொடிய நோயால் பீடிக்கப்பட்டுவிடும் என்பதை மறந்துவிடவேண்டாம்.
()()()()()()()()()()()()()


தினமணியில் மார்க்கெட்டிங் பிரிவில் சேர்ந்து கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆகிவிட்டது. இன்றுதான் எனது கட்டுரை தினமணி தலையங்கம் பக்கத்தில் துணை கட்டுரையாக வெளிவந்திருக்கிறது.   தொடர்ந்து  எழுதி வந்தாலும் தினமணி தலையங்கப் பக்கத்தில் துணை கட்டுரையாக வெளிவருவதென்பது மிகுந்த கடினமான ஒன்று.  அதில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்பது எனது எழுத்திற்கு கிடைத்த  வெற்றியாகவே உணர்கிறேன். என்னை தொடர்ந்து எழுதத் தூண்டும் உங்கள் அனைவருக்கும் எனது  நன்றியும்  வணக்கங்களும்!. 

அன்புடன் 
-தோழன் மபா. 
நன்றி! தினமணி (12.08.2013).

வியாழன், மே 30, 2013

தமிழுக்குச் சிறுமை!

தினமணி  (28/05/2013 ) தலையங்கம்.


                                 லையாளத்துக்கு செம்மொழித் தகுதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு ஆகியவற்றுடன் மலையாளமும் செம்மொழித் தகுதிப் பட்டியலில் சேர்ந்துள்ளது.

மலையாள அன்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் இவ்வேளையில், நம் மனதில் தோன்றும் நெருடலான கேள்வி இதுதான்:... செம்மொழித் தகுதி வரையறைக்குள் தமிழ், சமஸ்கிருதம் தவிர ஏனைய இந்திய மொழிகள் வருகின்றனவா?

ஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றால், அது "தொன்மையானதாக இருக்க வேண்டும்; தனக்கான சொந்தக் கலாசாரம், பண்பாட்டுக் கூறுகள் கொண்டிருக்க வேண்டும்; மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது ஒரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்'.

இந்த வரையறை அனைத்தும் பொருந்திய தமிழ் மொழியைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்க நாம் பட்ட பாடெல்லாம், தமிழ்ச் சான்றோர் மட்டுமே அறிவர். இப்போது, விண்ணப்பித்தவர்களுக்கு எல்லாம் செம்மொழித் தகுதிச் சான்று வழங்கி கௌரவிக்கத் தலைப்பட்டிருக்கிறது நடுவண் அரசு.

மலையாள மக்கள் பன்னெடுங்காலமாகத் தமிழ் பேசியவர்கள்தான். சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நிலப்பரப்பு முழுதும் தமிழ் மொழிதான் வழக்கு மொழியாக நிலவியது. சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளும் பேசியதும் எழுதியதும் தமிழ்தான். சென்னைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ் போல வட்டாரத் தமிழ் பாணி மாறுபட்டிருக்கலாமே தவிர, மொழி ஒன்றுதான்.

சேர நிலம் - மலைஞாலம். மலைஞாலம் என்பதன் திரிபே மலையாளம். மூவேந்தர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி விடுத்து, ஆங்காங்கே குறுநில மன்னர்களும் விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் ஏற்பட்டபோது தமிழும் சமஸ்கிருதமும் கலந்து புதிய பல வார்த்தைகள் உருவாகித் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தோன்றின என்பதுதான் திராவிட மொழி ஆராய்ச்சியாளர்களின் தேர்ந்த முடிவு. அதில் குறிப்பாக மலையாளம் அதிகமான தமிழ்ச் சொற்களால் உருவான மொழியாக அமைந்தது.

இன்றும்கூட, பல தூயத் தமிழ்ச் சொற்கள் மலையாளத்தில் வழக்கத்தில் உள்ளன. நாம் மறந்துவிட்ட வெள்ளம், இல்லம், ஊன், உறக்கம் போன்ற சொற்கள் மலையாளத்தில்தான் புழக்கத்தில் உள்ளன. 16-ஆம் நூற்றாண்டில்தான் மலையாள மொழி, எழுத்தச்சனால் எழுத்துரு பெறுகிறது. மலையாளத்துக்கென தனியாகத் தொன்மை இலக்கியங்கள் இல்லை. ஏனென்றால் அவர்கள் தமிழ்ச் சமுதாயத்திலிருந்து கிளைத்து உருவானவர்கள். தொன்மை இலக்கியம் என்று மலையாளத்தினர் தேடினால் அது தமிழ்ச் சங்க நூல்களில்தான் வந்து முடியும்.

இருபதாம் நூற்றாண்டு இந்திய இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், மலையாளம் முன்னணியில் நிற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. திரைப்படத் துறையை எடுத்துக்கொண்டாலும்கூட, கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த 100 சிறந்த திரைப்படங்கள் என்று பட்டியலிட்டால், அதில் ஐம்பது திரைப்படங்கள் மலையாள, வங்க மொழித் திரைப்படங்களாகத்தான் இருக்கும். அதற்காக, மலையாளத்தை செம்மொழி என்று சொல்லும்போது நெருடல் ஏற்படவே செய்கிறது.

இந்நிலைக்குக் காரணம், மொழியின் தொன்மைக்கான காலவரையறையை 2,000 ஆண்டுகளாக நிர்ணயிக்காமல், 1,000 ஆக குறைத்ததுதான். செம்மொழித் தகுதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழின் தொன்மையை வெறும் ஆயிரம் ஆண்டுகளாகச் சுருக்கிக்கொள்ள நாம் தலைப்பட்டதால்தான் இப்போது, எல்லா மொழிகளும் செம்மொழி அந்தஸ்து கேட்டு விண்ணப்பிக்கின்றன. முன் யோசனை இல்லாமல் செய்த அந்த முடிவின் விளைவால் இப்போது தமிழின் தொன்மையே கேள்விக்குறியாக்கப்படுகிறது.

"மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது மற்றொரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்' என்ற வரையறைக்குள் மலையாளம் வரவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய மத்திய அமைச்சரவை, அரசியல் காரணங்களுக்காக இந்த வரையறைகளை எளிதில் மறந்துவிட்டு, மலையாளத்தையும் செம்மொழியாக அறிவித்திருக்கிறது.

ஓட்டப்பந்தயத்தில்கூட முதல் மூன்று பேருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பரிசு அளித்து, ஓடி முடித்த மற்றவர்களுக்கு வெறும் சான்றிதழ் கொடுத்து வேறுபடுத்தும் நிலை உள்ளதைப் போல, தமிழ்ச் செம்மொழி இந்தியாவின் செம்மொழிகளிலேயே முதன்மையானது என்ற உயர்வை அளிக்க வேண்டாமா? குறைந்தபட்சம் இந்த நியாயத்தைக்கூட செய்யவில்லை என்றால், தமிழ்மொழியும் ஒரு செம்மொழியாக உலா வருவது என்பது, "தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்பதற்கு ஒப்பானது.

தமிழ் மொழி சாதாரண செம்மொழி அல்ல. அது உயர்தனிச் செம்மொழி. அதற்கேற்ப அதிக நிதி, அதிக இருக்கைகளை ஏற்படுத்துதல் வேண்டும். தமிழுக்குத் தனித்துவம் அளிக்கப்பட வேண்டும்.

மலையாளமும் செம்மொழி, தமிழும் செம்மொழி என்றால், அது மலையாளத்தைப் பெருமைப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாகத் தமிழைச் சிறுமைப்படுத்தும் முடிவு. இதற்கு செம்மொழி அந்தஸ்து இல்லாமலேயேகூட இருந்துவிடலாம். செம்மொழி அந்தஸ்து இல்லை என்பதால் தமிழின் தொன்மையொன்றும் குறைந்துவிடாது. செம்மொழி அந்தஸ்து பெற்று அதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடுகளை நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம். தகுதி இல்லாவிட்டாலும்கூட செம்மொழித் தகுதி பெற்று தங்களது தாய்மொழியை வளப்படுத்தத் துடிக்கிறார்கள் மற்றவர்கள். இனிமேலாவது நாம் விழித்துக் கொள்வோமா? செம்மொழி அந்தஸ்து பெற்றுவிட்டதாலேயே ஏனைய மொழிகள் பழம்பெரும் மொழிகளாகிவிடாது.

வெட்டி பந்தாவுக்காகத் தகுதி இல்லாதவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதுபோல இருக்கிறது மத்திய அரசின் செம்மொழித் தகுதி வழங்கும் போக்கு!

-நன்றி தினமணி!

திங்கள், பிப்ரவரி 25, 2013

இனிஷியலை தமிழில் எழுதுங்கள்...



கடந்த ஜனவரி தினமணி 'கருத்துக்களத்தில்'  வந்த எனது கட்டுரை.

"நான் ரொம்ப ஸ்லோங்க... பாருங்க இவ்வளவு நாள் கழித்து இப்பதான் பதிவிடுறேன்."


எளிதாக படிக்க கட்டுரையின் மீது கிளிக் செய்யவும்.

ஞாயிறு, மே 13, 2012

'ஆதினங்களின் கனவில் ரஞ்சிதாவா நயன்தாராவா....?!'





துறவு என்பது பெருமளவுக்கு இந்தியச் சமயங்களுக்கு உரியது!

துறவு என்பது உடைமைத் துறவு மற்றும் காமநீக்கம்!

பற்று நீக்கம் என்பது துயர நீக்கம்! துயரம் என்பது உடைமை சார்ந்தும், காமம் சார்ந்தும் வருவதால், துயரத்திலிருந்து முற்றாக விடுபட விரும்புபவர்கள் இவை இரண்டிலிருந்தும் முற்றாக விடுபட்டு விடுவார்கள்!

பற்றில் உழல்பவர்களைப் பற்றற்ற துறவிகளே தூக்கி நிறுத்த முடியும் என்பதால், துறவிகளுக்கு இலக்கணம் வகுக்கின்ற பணியைப் புத்தன் செய்தான்!

ஒரே வீட்டில் மூன்று நாட்களுக்கு மேல் பிச்சை கொள்ள வேண்டாம் என்றான் புத்தன்! அது அவ் வீட்டாரோடு தொடர்பும், அதன் வழியாகப் பற்றும் வளரக் காரணமாகுமாம்!

ஒரே மரத்தடியில் மூன்று நாட்களுக்கு மேல் படுத்துறங்க வேண்டாம் என்றும் சொல்கிறான். வேறொருவன் அங்கு படுத்துறங்க நேரிட்டால், அவனிடம், ""எழுந்திரு; இந்த இடம் என்னுடையது'' என்று மல்லுக்கு நிற்க நேரிடும். எல்லாவற்றையும் துறந்து விட்டு வந்து, கேவலம் இந்த மரத்தடி இடத்தை உரிமை பாராட்டுகின்ற அசிங்கங்கள் நேரிடும்! மனத்தின் நீர்மை இப்படிப்பட்டதுதான் என்பதால், "கருத்தோடிருங்கள், கருத்தோடிருங்கள்' என்று பன்னிப் பன்னிச் சொல்லுவான் புத்தன்!

புத்தன் மன்னனாக இருந்தவன்; எல்லையற்ற செல்வத்தின் மீது மட்டுமன்று; மக்களின் மீதும் அதிகாரம் உடையவனாக இருந்தான்!

பல்லாயிரம் பேருக்கு வகைப்பாடுடைய விருந்தளிக்க முடிந்தவன், ஒரு மஞ்சளாடை அணிந்து தன்னுடைய உணவுக்காக ஓர் எளிய குடிசையின் முன்னால் கையேந்தி நிற்பதற்கு முன் வந்ததையும், அதிகார மணிமுடியைத் துறந்துவிட்டுத் தலையை முண்டிதம் செய்து கொண்டதையும் சிந்தித்துப் பார்க்கும்போது, துறவு நிலை அரச நிலைக்கும் மேலானதாய் இருக்க வேண்டும் என்று புத்தனின் துறவால் உய்த்தறிய முடிகிறது!

அரசனாக இருந்து துறவியாக மாறிய இன்னொருவன் பத்ரகிரி. ஒரு கோயிலின் மேற்கு வாயிலில் பிச்சையைப் பெறுவதற்கு ஓர் ஓட்டினை வைத்திருந்ததற்காகவும், தன்னை ஒட்டிக் கொண்ட நாயை விரட்ட மனம் ஒப்பாது அதை வளர்த்து வந்ததற்காகவும், "பத்ரகிரி ஒரு சம்சாரி' என்று அந்தக் கோயிலின் மேற்கு வாயிலில் இருந்த பட்டினத்தார் கேலி செய்தாராம்!

காரணம் ஓர் ஓடு கூட ஓர் உடைமைப் பொருளாகும் என்றெண்ணிப் பட்டினத்தார் கைகளைச் சேர்த்தே பிச்சை ஏற்று உண்டவராம்!

""உடை கோவணம் உண்டு; உறங்கப் புறந்திண்ணை உண்டு; பசி வந்தால் உணவிட வீதிக்கு நல்ல மாதர்கள் உண்டு இந்த மேதினியில்! ஏதுக்கு நீ சலித்தாய் மனமே'' என்று மனத்தினைச் சவுக்கால் அடித்து ஒழுங்கு செய்யும் இயல்பினர் பட்டினத்தார்!

காவி என்பது துறவின் அடையாளம்; அதை அதற்குத் தகுதியில்லாதவன் அணியக் கூடாது! பசு மேயப் போவது புல்லைத்தான்; அதற்கு எதற்குப் புலியின் தோலாலான போர்வை? என்று கேட்பான் அறிஞர்க்கெல்லாம் அறிஞனான வள்ளுவன்! "பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று' (273).

ஆதீனங்களாக இருப்பவர்கள் பேசும்போது, "நான் சொன்னேன்' என்று சொல்ல மாட்டார்கள். "நாங்கள் சொன்னோம்' என்றுதான் சொல்லுவார்கள்! "நான்' என்பது அகந்தைச் சொல்லாம்; "நான்' "எனது' என்னும் சொற்களைக் கூடத் துறந்து விட்டிருக்க வேண்டியவர்கள் அவர்கள். ஆனால், இவர்களின் மடங்களுக்குள் பதுக்கி வைத்திருக்கிற சொத்தையும் பணத்தையும் சோதனையிட வருமானவரித் துறை வருகிறது!

"என்னிடம் கோவணத்தையும் உத்திராட்சத்தையும் தவிர வேறென்ன இருக்க முடியும்' என்று சொல்ல வேண்டியதுதானே! "இன்ன மந்திரியின் ஏவல் இது' என்று ஏன் புலம்ப வேண்டும்?

ஒரு காலத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிகள் ஏலம் விடப்பட்டது போல், ஆதீனகர்த்தர் பதவிகளும் இப்போது ஏலம் விடப்படுகின்றன.

பழைய ஆதீனகர்த்தருக்கு ஐந்து கோடி ரொக்கம்; தங்கச் சிம்மாசனம்; தங்கச் செங்கோல் - அடுத்தடுத்த தவணைகளில் இன்னும் என்னென்ன வழங்கப்படுமோ? இந்திய ரூபாய் மதிப்புச் சரிந்து வருவதால் அமெரிக்க டாலராகவே வழங்கப்படலாம்!

சர்வதேச மதிப்புக்குச் சம்பந்தர் மடத்தை உயர்த்த வருகிறவருக்கு சர்வதேச மதிப்புள்ள டாலருக்கா பஞ்சம்?

இன்றைய ஆதீனத்திற்கு உதவியாளர்களெல்லாம் பெண்கள்தாம்! இன்ன புடவைக் கடையை இன்ன நடிகை திறந்து வைத்தார் என்று பெருமை பேசப்படுவதுபோல, இன்ன ஆதீனம் பதவி ஏற்றுக் கொண்டபோது இன்ன நடிகை முன்னிலை வகித்தார் என்பதும் பெருமையாகப் பேசப்படுகிறதே இது காலக் கொடுமை!

அரசியல்வாதிகள் மீது குற்ற வழக்குகள் பெருகப் பெருக "இவ்வளவுதானே' என்று அவர்கள் வெட்கத்தை உதிர்த்து விடுவது போல, ஆதீனகர்த்தர்களும் சொரணை இல்லாமல் போய் விடுவார்கள் போலிருக்கிறது!

ஆதீனகர்த்தர்களின் எண்ணிக்கை இருநூற்றுத் தொண்ணூறைத் தாண்டிவிட்டது. ஞானசம்பந்தரைத் தவிர வேறு யாரையாவது யாருக்காவது நினைவிருக்கிறதா? ஞானசம்பந்தர் தங்கச் செங்கோல் வைத்துக் கொண்டா சைவத்தை வளர்த்தார்?

ஞானசம்பந்தர் சைவத்தை வளர்த்தார் என்பதன் பொருள் பெளத்தத்திலிருந்தும் சமணத்திலிருந்தும் எண்ணில் அடங்காதவர்களை மதம் மாற்றினார் என்பதல்லவா!

இப்போது சைவம் யாரையும் தன்னுடைய மடிப்புக்குள் புதிதாக அனுமதிப்பதில்லை. ஒருவன் சைவன் என்றால் அவன் சைவனாகவே பிறக்கிறான் என்பதுதான்!

ஏனெனில் சைவனாகப் பிறப்பவனுக்குச் சமய அடையாளம் மட்டும் போதாது. அவனுக்குச் சாதி அடையாளமும் வேண்டும்!

ஒரு வெள்ளைக்காரனைச் சைவ சமயத்தில் சேர்ப்பதாக இருந்தால், அவனை எந்தச் சாதியில் சேர்ப்பது என்பதற்கு விடை கண்டாக வேண்டும்!

அவனைச் சேர்த்துக் கொள்ள எந்தச் சாதியும் இசையாது! சாதி உறுப்பினர்கள் சேர்க்கப்படுபவர்கள் அல்லர்; பிறப்பவர்களே!

இதே நிலைதான் சைவத்திற்கும். மக்கள்தொகைப் பெருக்கத்தால் சைவர்களின் எண்ணிக்கை கூட முடியுமே தவிர, வேறு எந்த விதத்தாலும் கூட்ட முடியாது. சைவ மடங்களை எல்லாம் மூடி விட்டாலும் இந்த எண்ணிக்கை மாறப் போவதில்லை.

தமிழனுக்குத் தனியான நிலம் உண்டு; தனியான மொழி உண்டு; தனியான பண்பாடு உண்டு. தனியான சமயங்கள் உண்டு; தனியான மெய்யியல் கொள்கைகளும் உண்டு.

ஆனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரசாவர்க்கார் காலம் தொட்டுத் தமிழர்களெல்லாம் இந்துக்களாக ஆக்கப்பட்டு விட்டார்கள். அப்படி ஒரு பொதுமை வழக்கு உருவாக்கப்பட்டு விட்டது. இந்துக்களின் மெய்யியல் நூலாகப் பகவத் கீதை ஆக்கப்பட்டது!

தமிழனின் சமய அடையாள இழப்புக் குறித்து எந்தச் சைவ, வைணவ மடங்களாவது போராடியதுண்டா? எதற்கு ஆயிரம் வேலி நிலம்? எதற்குத் தங்கச் செங்கோல்?

தமிழனின் சமயங்கள் சைவம், வைணவம், முருக வழிபாடு, இயற்கை வழிபாடு, மூதாதையர் வழிபாடு என்றிவைதாம். மூதாதையரைத் "தென்புலத்தார்' (43) என்பான் அறிவுப் பேராசான் வள்ளுவன்!

தமிழனின் சமய நூல்கள் நாயன்மார்களின் திருமுறைகளும், ஆழ்வார்களின் பிரபந்தங்களும், திருமுருகாற்றுப் படையும், உலகிலேயே மிகச் சிறிய நூலான பன்னிரண்டே சூத்திரங்கள் அடங்கிய சிவஞான போதமுமேதாம்; தமிழர்கள் எல்லாரும் ஒப்ப முடிந்த வேத நூல் சமயங் கடந்த திருக்குறளாகும்! ஒரு காலத்திலும் கீதை தமிழனின் மெய்யியல் நூலாக முடியாது என்று எந்த ஆதீனமாவது தமிழர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதுண்டா?

ஞானசம்பந்தர் வாதுக்குப் போனார்; அவரிடம் தோல்வியடைந்ததாகச் சொல்லப்பட்ட ஏழாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றினார்! சமணம் ஒழிந்தது; சைவம் தழைத்தது; மெத்தச் சரி!

திருமறைகளும், பிரபந்தங்களும், சிவலிங்கமும் பெரியாரால் கேலிக்குள்ளாக்கப்பட்டபோது, எந்த ஆதீனமாவது பெரியாரை வாதுக்கழைத்ததுண்டா? அப்படி நினைத்துப் பார்க்கவே உங்களால் முடியவில்லையே!

தமிழரின் சமயங் குறித்தும் தமிழின் பெருமை குறித்தும் விழிப்பை உண்டாக்கியவர்களும் அதை இயக்கமாக்கியவர்களும் முதற் கட்டத்தில் மறைமலை அடிகளும், பிற்கட்டத்தில் தேவநேயப் பாவாணரும்தானே!

கொழுத்த பணத்தில் புரள்கிற ஆதீனங்கள் இவர்களையாவது ஆதரித்துப் புரந்ததுண்டா?

தமிழ்நாட்டை மராத்தியர்களும் நாயக்கர்களும் ஆண்டபோது, தமிழ்க் கடவுள் முருகனை முன்னிறுத்தித் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரின் நோக்கம் தெலுங்கரினின்றும், மராத்தியரினின்றும் தமிழ்ச் சமயத்தை வேறுபடுத்திக் காட்டுவதுதான்! அதனால்தான் தமிழர்க்கே உரிய முருகன் பாடுபொருளாக்கப்பட்டான்!

பெளத்தமும், சமணமும் துறவுதான் பரிநிருவாணத்திற்குரிய வழி என்று வற்புறுத்தியபோது, தமிழ் இளைஞர்கள் இளந்துறவிகளானார்கள்! அப்போது ஞானசம்பந்தர் "எதற்கு இந்த வறண்ட வாழ்க்கை? நீங்கள் இங்கே வாருங்கள்; சிரமமில்லாமல் மண்ணில் பெண்ணோடு நல்ல வண்ணம் வாழலாம்; மேலும் எங்கள் சிவனே பெண்ணோடுதான் இருக்கிறார்' என்று கவர்ச்சியூட்டி ஞானசம்பந்தர் மாற்று மதத்தினரை இழுத்தார்!

""பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே'' என்று அவர் மக்களுக்குச் சொன்னதைத் தங்களுக்குத்தான் பாடியதாக ஆதீனங்கள் சில கருதியதன் விளைவு மடத்தின் போக்கே மாறிவிட்டது!

சமயத் தலைவர்கள் ஆதீனங்களில்லை; அவர்கள் மடங்களின் மேலாளர்கள்!

வள்ளலார் போன்றவர்களே சமுதாயத்தையே மாற்றி அமைக்க வந்தவர்கள்!

வள்ளலார் ஒரு கட்டத்தில் சைவத்திற்கு மாற்று நிலை எடுத்தார். அது முக்கியமில்லை. ""பசிநீக்கம்; உயிரிரக்கம்'' இரண்டையுமே தலையாய கொள்கையாகக் கொண்டார்!

பதவியால், பணத்தால், சாதியால் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்னும் நிலை போய், ""ஒத்தாரும் தாழ்ந்தாரும் உயர்ந்தாரும் ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும்'' என்றார் பசியை நீக்குவதற்கு அணையாத தீயை அடுப்பில் மூட்டிய வள்ளற்பெருமான்!

இவ்வளவு சிறந்த வள்ளலாருக்கு சிவபெருமான் கனவில் வந்து எதுவும் சொல்லவில்லை. ""நின் கருத்தை அறியேன் நிர்க்குணனே நடராச நிபுண மணி விளக்கே'' என்றுதான் பாடுகிறார்!

மகாத்மா காந்தி "வாய்மைதான் கடவுள்' என்று உய்த்துணர்ந்து சொன்னதற்குக் காரணம் இறைவன் அவருக்கு நேரில் வராததுதான்!

நல்லவேளை ஆதீனங்களின் கனவில் நயன்தாரா வராமல் சிவபெருமான் வருவது நல்லதுதான் என்றாலும், அவர் வந்ததை உயர் நீதிமன்றம் விசாரித்து அறியுமாறு நீதிமன்றத்தின் கவனத்திற்கு வழக்கறிஞர்கள் கொண்டு செல்ல வேண்டும்!

மீனாட்சி அம்மன் கோயில் மதுரை ஆதீனத்திற்குச் சொந்தம் என்று கிளம்பி விட்டார்கள். ரியல் எஸ்டேட் விலை ஏறி விட்டதுதான் காரணம்!

பாண்டியர்கள் தாய் மீனாட்சிக்கு அளித்த சீதனம் அது! எல்லாம் அறிந்தவன் நீ; எல்லாம் வல்லவன் நீ சொக்கா! கடைசியில் உன் மடியிலேயே கை வைத்து விட்டார்கள்!

ஆட்டத்தை நிறுத்து சொக்கா!

உன் ஆட்டத்தை அல்ல;

ஆடக் கூடாதவர்களின் ஆட்டத்தை!

""பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே'' என்று அவர் மக்களுக்குச் சொன்னதைத் தங்களுக்குத்தான் பாடியதாக ஆதீனங்கள் சில கருதியதன் விளைவு மடத்தின் போக்கே மாறிவிட்டது!

- பழ. கருப்பையா.

(எழுத்தாளர், பேச்சாளர்,  கட்டுரையாளர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் என்ற பன்முகத்திறன் கொண்ட பழ. கருப்பையா  தினமணியில் எழுதிய கட்டுரை.)


நன்றி: தினமணி

வியாழன், டிசம்பர் 22, 2011

மதுரை வெங்கடேசனுக்கு சாகித்ய அகாடமி விருது!


தெளிவாகப் படிக்கசெய்தியை 'கிளிக்' செய்து படிக்கவும்.


 நன்றி:  தினமணி.

செவ்வாய், டிசம்பர் 20, 2011

தூங்காதே பெண்ணே தூங்காதே...!



விளம்பரம் ஏக பொருத்தம் !

   

No Comments!

இன்றைய தினமணியில்  (20/12/2011)  முதல்பக்கத்தில் சசிகலா நீக்கம் பற்றிய  செய்தியும், அதற்கு  கீழே...'லலிதா ஜூவல்லரி' விளம்பரமும் வெளியாகியிருக்கிறது.   மேலே உள்ள செய்திக்கு கீழே உள்ள விளம்பரம் பல உண்மைகளை சொல்லாமல் சொல்கிறது.

இனி நீங்களே பார்த்துப்... படித்து... புரிந்துக் கொள்ளுங்கள்.


சனி, நவம்பர் 26, 2011

அன்னிய முதலீட்டில் அழிபடபோகும் சில்லறை வர்த்தகம். அதிர்ச்சி ரிப்போர்ட். - எஸ். குருமூர்த்தி

"வருகிறது வால்மார்ட்"





       ப்போது வருகிறது, அப்போது வருகிறது என்று "புலிவருது புலி' பாணியில் பாய்ச்சல் காட்டிக் கொண்டிருந்த சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு வந்தேவிட்டது. இந்தியச் சில்லறை வர்த்தகத்திலும் அன்னிய நேரடி முதலீட்டுக்குக் கதவைத் திறந்தாகிவிட்டது.

 கடந்த சில வாரங்களாகவே இந்தியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு மேலும் சரிவு, அன்னியச் செலாவணி கையிருப்பு வேகமாகக் குறைவு, அன்னிய நிறுவனத் தொழில் முதலீட்டாளர்களின் முதலீடுகள் இந்தியாவிலிருந்து மீண்டும் வெளியேற ஆரம்பித்தது ஆகியப் பொருளாதார நிகழ்வுகளால் என்ன செய்வது என்று முடிவு எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இந்திய அரசால் சரிந்து கொண்டிருக்கும் ரூபாயின் மதிப்பையோ விலைவாசி உயர்வையோ கட்டுப்படுத்த முடியாத நிலையில் பொருளாதார சீர்திருத்தத்தில் அடுத்த கட்டம் என்ற பெயரில் அன்னிய பெருவர்த்தகர்களுக்கு இந்தியச் சந்தையில் புகுந்து விளையாடக் கதவுகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது அரசு.

 உள்நாட்டுப் பெருந்தொழில் நிறுவனங்களும் அயல் நாடுகளின் தொழில் நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாக இடையறாமல் தூபம் போட்டு வந்த ""மிகப்பெரிய பொருளாதாரச் சீர்திருத்த'' நடவடிக்கைக்கு மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்டது. இந்த சீர்திருத்தத்துக்காக ""பாடுபட்ட சக்திகள்'' வென்றுவிட்டன. ஆனால், ""இந்தியா'' தோற்றுவிட்டது என்பதுதான் உண்மை.

 பெருநகரங்களின் நலன்தான் இந்த அரசின் முக்கிய குறிக்கோள் என்பதை இந்த நடவடிக்கையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

 இந்திய கிராமப்புறங்கள் குறித்தும் வேளாண்மை குறித்தும் இந்த அரசுக்குப் போதிய அறிவோ, அக்கறையோ இல்லை என்பதையும் இந்த முடிவு உணர்த்துகிறது.

 சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற அரசின் முடிவால், இந்த வியாபாரத்தில் நாடு முழுவதும் ஈடுபட்டு வரும் 12 லட்சம் குடும்பங்களின் எதிர்காலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதே சமயம் கிராமப்புற இந்தியாவில் இப்போது கிடைத்துவரும் உணவுப் பாதுகாப்பையும் இது சேர்த்தே அழித்துவிடும் என்பது பெரும்பாலானவர்களுக்கு இன்னும் தெரியாமலேயே இருக்கிறது.

 இந்திய சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் கிராமங்களுக்கே சென்று நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அவர்களுக்கு நியாயவிலை கிடைக்க உதவும் என்பது முதல் வாதம். இதன் மூலம் விவசாயிகள் பணக்காரர்களாகிவிடுவார்கள் என்பது அரசு மற்றும் சில்லறை விற்பனையில் அன்னிய முதலீட்டுக்காகக் குரல் எழுப்புபவர்களின் இன்னொரு வாதம். இப்படிச் சொல்கிறவர்கள் இந்தியாவின் கிராமப்புறங்களைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் என்பதுதான் நிஜம்.

 பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-12) வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்தவும், அடித்தளக் கட்டமைப்பை உருவாக்கவும், உள்நாட்டு - வெளிநாட்டு வர்த்தகத்தைப் பெருக்கவும் தேவைப்படும் கொள்கைகளை வகுப்பதற்கான மத்திய திட்டக்குழுவின் செயல்திட்டக் குழு நாடாளுமன்றத்துக்கு அறிக்கை தயாரித்து அளித்தது.

 அதேசமயம், உணவு, நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம் ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவும் அரசுக்கு அறிக்கை அளித்தது. இவ்விரு அறிக்கைகளையும் சேர்த்துப் படித்தால் கிராமப்புற இந்தியா எப்படி இருக்கிறது என்ற உண்மை புலப்படும்.

 இந்தியாவில் உள்ள விவசாயப் பண்ணைகளையும் வெளிநாடுகளில் உள்ள பண்ணைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் உண்மை நிலவரம் புரியும்.

 இந்தியாவில் சுமார் 588 லட்சம் சிறு, குறு விவசாயக் குடும்பங்கள் உள்ளன. அதாவது 32 கோடிக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தியாவில் நிலங்களை நம்பி நேரடியாக வாழ்கின்றனர். சராசரியாக அவர்கள் வைத்திருக்கும் நிலத்தின் அளவு 5 ஸ்டாண்டர்டு ஏக்கர் அல்லது அதற்கும் கீழே.

 வெளிநாடுகளின் நிலைமை அதுவல்ல. கனடா நாட்டில் சராசரியாக ஒரு விவசாயி வைத்திருப்பது 1,798 ஏக்கர். அமெரிக்காவில் இது 1,089 ஏக்கர், ஆஸ்திரேலியாவில் 17,975 ஏக்கர், பிரான்சில் 274 ஏக்கர், பிரிட்டனில் 432 ஏக்கர்.

 அமெரிக்க விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவு, இந்திய விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவைப் போல 250 மடங்கு அதிகம். ஆஸ்திரேலியாவிலோ இது 4,000 மடங்கு அதிகம்! எனவே அமெரிக்காவிலும் இதர மேற்கத்திய நாடுகளிலும் பண்ணை வீட்டிலிருந்து சூப்பர் மார்க்கெட்டுக்கு வால்மார்ட் நிறுவனம் வாங்கிப்போகும் ""கொள்முதல் பாணி'' இந்தியாவுக்கு ஒத்துவராது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

 இந்தியாவில் கிராமங்களில் விளையும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை எப்படி சந்தைக்கு வருகின்றன, எப்படி கிராமங்களிலேயே வாங்கி உண்ணப்படுகின்றன என்பது தெரியாமல், இந்தியாவில் மேலைநாட்டுக் கொள்முதல் பாணியை அறிமுகப்படுத்த நினைக்கிறார்கள்.

 வால்மார்ட் போன்ற சூப்பர்மார்க்கெட் நிறுவனங்களை அனுமதித்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற வாதம் சரியானதல்ல; இடைத் தரகர்கள் மட்டும் அல்ல, சிறு விவசாயிகளும் சேர்த்தே ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதுதான் உண்மை. அது மட்டும் அல்ல, வேறு எதையெல்லாம் அந்தக் "கொள்முதல் பாணி' ஒழிக்கும் என்பதைச் சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும்.

 விவசாய வேலைகள் அனைத்துமே ஒப்பந்த அடிப்படையில் இனி மேற்கொள்ளப்படும். மிகப்பெரிய நிறுவனம்தான் ஆள்களை வேலைக்கு வைத்துக்கொள்ளும் அல்லது நீக்கும். பெரிய நிலப்பரப்பாக நிலங்கள் இணைக்கப்பட்டு இயந்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும். பாரம்பரிய விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.

 நிலங்களை அதிக பரப்பளவில் வைத்திருப்பவர்களால்தான் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகமாக வழங்க முடியும் என்பது உலக அளவிலான ஆய்வுகளின் முடிவு. ஆனால் இந்தியாவில் அதுவே தலைகீழாக இருக்கிறது.

 மொத்த சாகுபடிப் பரப்பில் 34% நிலத்தை சிறு, குறு விவசாயிகள்தான் பயிர் செய்கின்றனர். ஆனால், நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் இவர்களுடைய பங்களிப்பு 41% ஆக இருக்கிறது. அவர்களுடைய உற்பத்தித்திறன் மற்றவர்களைவிட 33% அதிகமாக இருக்கிறது.

 சிறு நிலங்களையெல்லாம் சேர்த்து பெரு நிலப்பரப்புகளாகவும் பெரும் பண்ணைகளாகவும் மாற்றினால் உடனடியாக தேசிய உணவு உற்பத்தியில் 7% குறைந்துவிடும்! உணவு தானியம் மட்டும் அல்ல பால் உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்படும். கிராமப்புறங்களில் கிடைக்கும் 1,009 லட்சம் டன் பாலில் பெரும்பகுதிக்கு சிறு, குறு விவசாயிகள்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

 கிராமப்புறங்களில் உள்ள மக்கள்தொகையில் பாதியைக் குறைக்காமல் சிறு, குறு விவசாயத்தை ஒழித்துவிட முடியாது. திட்டக்குழு நியமித்த செயல்திட்டக் குழு தனது அறிக்கையின் இறுதியில் இவ்வாறு தெரிவிக்கிறது: ""சிறு, குறு விவசாயிகள் இந்தியாவில் இன்னும் நெடுங்காலத்துக்கு இருக்கப் போவது நிச்சயம் - அதே சமயம் அவர்கள் ஏராளமான சோதனைகளை (அரசின் முடிவுகளால்தான்) சந்திக்கப் போவதும் நிச்சயம்; எனவே சிறு, குறு விவசாயிகளுக்கு என்ன நேரப் போகிறதோ அதைப் பொருத்துத்தான் கிராமப் பொருளாதாரத்தின் எதிர்காலமும் அமையும்''.

 இதைவிட முக்கியம், சிறு - குறு விவசாயிகள் எதை உற்பத்தி செய்கிறார்கள், எதை உண்கிறார்கள், எதை மற்ற விவசாயத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்பது. சிறு, குறு விவசாயிகளிடம் வியாபாரிகளுக்கு விற்பதற்காக உபரி உற்பத்தி ஏதும் இல்லை. இந்த நிலையில், வால்மார்ட் வகையறாக்கள் கிராமங்களில் நுழைந்தால், அவர்களுடைய உணவுப் பாதுகாப்பே பாதிக்கப்பட்டு விடும்.

 கிராமப்புற இந்தியா குறித்து பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத உண்மை என்ன என்றால், இந்தியாவில் விளையும் உணவுப் பொருள்களில் 60%-க்கும் மேல் வியாபார ரீதியாக சந்தைக்கு வருவதில்லை, அவை கிராமங்களுக்குள்ளேயே விநியோகிக்கப்பட்டு உண்ணப்படுகிறது என்பது. சிறு விவசாயிகள் இவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். தங்களுடைய நுகர்வுக்காகவும் தங்களிடம் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலிக்குப் பதில் கொடுப்பதற்காகவும்தான் இதை இப்படிப் பாதுகாக்கிறார்கள்.

 இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விவசாயிகளின் உற்ற நண்பர்களான கால்நடைகளுக்கும் கூட உணவாகப் பயன்படுகிறது. மிகவும் அவசியப்படும் நேரத்தில் கிராமத்தில் பிறருக்கும் விற்கப்படுகிறது.

 இந்த 60 சதவீதத்தில் ஒரு சிறு பகுதியையாவது வால்மார்ட் நிறுவனம் கொள்முதல் செய்கிறது என்று வைத்துக் கொண்டாலும்கூட, ""நகர்ப்புற விலை நிர்ணயம்'' கிராமங்களிலும் நுழைகிறது என்று பொருள்.

 நகரில் விற்கும் விலைக்கு கிராமங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகளும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும் வாங்கிச் சாப்பிட முடியுமா?

 அப்படியொரு நிலை வந்தால் கொங்கணப் பிரதேசத்தில் பரவலாக விளையும் அல்போன்சா ரக மாம்பழங்களுக்கு ஏற்பட்ட நிலையும் கேரளத்தில் மீன்களுக்கு ஏற்பட்ட நிலையும்தான் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் ஏற்படும்.

 இப்போதெல்லாம், அல்போன்சா ரக மாம்பழங்களைக் கண்ணால்தான் கொங்கணப் பகுதி மக்கள் பார்க்கின்றனரே தவிர சாப்பிடுவதில்லை. ஏற்றுமதிக்கே அனைத்தையும் கொடுத்துவிட்டு கிடைக்கும் ரூபாயில் நகர்ப்புறங்களிலிருந்து தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்கின்றனர்.

 கேரள மீனவர்கள் மீன்களை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்துவிட்டு கிடைக்கும் பணத்தில் வெளிநாட்டு மதுரகங்களை வாங்கிச் சாப்பிடுகின்றனர். காரணம், சொந்த ஊரில் யாருக்கும் அந்த மீன் மலிவு விலையில் கிடைப்பதில்லை.

 சில்லறை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு என்பது சிறு, குறு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பை இப்படித்தான் ஆபத்தில் ஆழ்த்துகிறது. இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரு மடங்கு என்று கருதப்படும் விவசாயத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் விளைவிக்கும் பொருள்களே கிடைக்காத நிலையும் அதிக விலை கொடுத்துத்தான் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்க வேண்டும் என்ற நிலையும் ஏற்படும்!

 இது ஒருபுறம் இருக்க எஞ்சிய 40% உணவு தானியங்கள் எப்படி கிராமங்களிலும் பிற பகுதிகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன? எஞ்சியுள்ள 40% உணவு தானியங்களில் சுமார் 35% அளவு, அதாவது பத்து டன்களில் 9 டன் அளவுக்கு தினசரி, வார கிராமச் சந்தைகள், திருவிழாச் சந்தைகள் மூலம்தான் விற்கப்படுகின்றன.

 கிராமங்களில் நடைபெறும் சந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 47,000. எஞ்சிய 5% உணவு தானியங்கள் மட்டுமே அரசின் கண்காணிப்பில் செயல்படும் 6,359 மொத்தவிலை மண்டிகளுக்கு விற்பனைக்கு வருகின்றன.

 இந்த இடத்தில்தான் நாட்டின் உபரி உணவு தானிய உற்பத்தி நவீனச் சந்தை அமைப்பு மூலம் விற்கப்படுகிறது. இந்த உணவு தானியத்தைத்தான் அரசு பொது விநியோகத்துக்காக வாங்கி, பத்திரப்படுத்துகிறது. மொத்த விளைச்சலில் எந்த அளவுக்கு பொதுச் சந்தைக்கு வருகிறது என்று பாருங்கள்.

 வார, தினச் சந்தைகள் எப்படிச் செயல்படுகின்றன? முக்கால்வாசிச் சந்தைகள் வாரத்தில் ஒரு முறை கூடுகின்றன. ஐந்தில் ஒரு பகுதி வாரத்தில் இருமுறை கூடுகின்றன. இருபதில் ஒரு மடங்கு தினசரி கூடுகின்றன.

 ஒரு சந்தை, சுமார் 14 கிராமங்களுக்குப் பொருள்களை விற்கிறது. எல்லாச் சந்தைகளும் சேர்ந்து 6.58 லட்சம் இந்தியக் கிராமங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்களையும் இதர வேளாண் பொருள்களையும் விற்கின்றன.

 மூன்றில் இரு மடங்கு சந்தைகள் கிராமங்களிலிருந்து அதிகபட்சம் 16 கிலோ மீட்டர் தொலைவில் நடக்கின்றன. நாலில் ஒரு பகுதி சந்தைகள் 6 கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நடைபெறுகின்றன. பத்தில் ஒரு பகுதி சந்தைகள் 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் நடக்கின்றன.

 மூன்றில் இரு மடங்குக்கும் மேற்பட்ட மக்கள், சந்தைகளுக்கு நடந்து சென்றே பொருள்களை வாங்குகின்றனர். மூன்றில் ஒரு பங்கு மக்கள் சைக்கிளில் சென்று வாங்குகின்றனர். மற்றவர்கள் மாட்டு வண்டிகளிலும், மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்களிலும் வந்து வாங்குகின்றனர்.

 இந்த சந்தைகளுக்கு வரும் மக்கள் வெறும் சரக்குகளை வாங்கிப் போக மட்டும் வருவதில்லை. சமூக, கலாசார பரிவர்த்தனைகளுக்காகவும் வருகின்றனர்.

 இங்குதான் கொடுக்கல், வாங்கல் பிரச்னைகள் பேசித்தீர்க்கப்படுகின்றன. வாய்க்கால் வரப்பு தகராறுகளும் சுமுகமாக முடிகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இங்கேயே வரன் பார்ப்பதும் உண்டு. வீடு வாங்குவது, வாகனம் வாங்குவது போன்ற விஷயங்களையும் இங்கேயே பேசி முடிக்கின்றனர்.

 கால்நடைகளை வாங்குவது விற்பது, அவற்றுக்குத்தேவையான உணவு, மருந்து ஆகியவற்றை வாங்குவது போன்றவற்றுக்கும், உழவுக்கருவிகள் வாங்கவும் இந்த சந்தைகளைத்தான் பயன்படுத்துகின்றனர்.

 பாத்திரங்களுக்குக் கலாய் பூசுவது, விவசாயக் கருவிகளைப் பழுதுபார்ப்பது, கைப்பிடி போடுவது, சாணை பிடிப்பது என்று எல்லாமே இந்தச் சந்தைகளில்தான்.

 அடுத்து என்ன பயிர்ச் சாகுபடி செய்யலாம், அதற்குத் தேவைப்படும் பணத்துக்கு என்ன செய்யலாம் என்றுகூட இங்குதான் பேசி முடிவு செய்கின்றனர்.

 விவசாயிகள் அடுத்து என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று தங்கள் அலுவலகங்களுக்கு வந்து கேட்க வேண்டும் என்று கூறாமல் அரசே இந்த சந்தைகளுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்துத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று திட்டக் கமிஷனின் செயல்திட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது.

 திட்டக்கமிஷனின் செயல்திட்டக்குழு தங்களைப் போகச் சொன்ன இடத்துக்கு, வால்மார்ட் போன்ற அன்னிய நிறுவனங்கள் போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறது இந்திய அரசு.

 கிராமப்புற இந்தியா, மத்திய அரசிடமிருந்து அந்த அளவுக்கு அன்னியப்பட்டுப் போயிருக்கிறது. அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ன என்று நாட்டின் விவசாயிகளில் 70 சதவீதம் பேர் இன்னமும் கேள்விப்பட்டதுகூட இல்லை என்று தேசிய சாம்பிள் சர்வே (என்.எஸ்.எஸ்.) அமைப்பு தெரிவிக்கிறது.

 அப்படி அதைக் கேள்விப்பட்ட 30 சதவீதம் பேரிலும் 81 சதவீதம் பேருக்கு அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று தெரியவில்லையாம். காரணம், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அரசு நடத்தும் கொள்முதல் நிலையங்களில்தான் அமலில் இருக்கிறதே தவிர, விவசாயிகளுக்கு நன்கு பரிச்சயமான சந்தைகளில் அல்ல.

 எனவேதான், குறைந்தபட்ச ஆதரவு விலை என்றாலே என்னவென்று தெரியாத விவசாயிகள், எதிர்கால சந்தையை எப்படித் தங்கள் நலனுக்கேற்ப பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நாடாளுமன்ற நிலைக்குழு சரியாகவே கேட்டிருக்கிறது.

 இதற்குப் பதில் சொல்ல முடியாத அரசு, உணவு தானியத்தில் ""எதிர்காலத்துக்கான ஊக பேரம் கூடாது'' என்று மட்டும் தடை செய்திருக்கிறது, அவ்வளவே. அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது நமது மத்திய ஆட்சியாளர்களின் இந்திய கிராமங்கள் பற்றிய நுண்ணறிவு. என்ன செய்வது மண்ணின் மணம் தெரியாமல் ஹார்வேர்ட், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு வந்த பொருளாதார நிபுணர்களின் திட்டமிடலின் லட்சணம் அப்படி.

 பின்குறிப்பு: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவால் பாரம்பரியமாக சமுதாய மக்களால் நடத்தப்படும் 12 லட்சம் சில்லறைக் கடைகளை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கிறது மத்திய அரசு; அது மட்டும் அல்ல, கிராமப்புற உணவுப் பாதுகாப்பு வளையத்தையும் ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறது. 2012-ம் ஆண்டு தொடங்கி எதிர்வரும் காலத்துக்கு ஐக்கிய முன்னணி அரசு இந்த நாட்டுக்கு அளித்திருக்கும் கொடை இதுதான்!

நன்றி: தினமணி.


திங்கள், செப்டம்பர் 12, 2011

78ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது தினமணி.





தினமணி  பற்றி சில சுவராசியத் துளிகள்.....
1932இல் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 13ஆவது நினைவு நாளன்று, அதன் நிறுவன ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களால் தினமணி தொடங்கப்பட்டது.  பின்னர் திரு.ராம்நாத் கோயங்கா அவர்களால் சீரிய முறையில் வளர்க்கப்பட்டு,  நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளோடு உயர்ந்து நிற்கிறது தினமணி.

  • தொடங்கிய நாள் முதல் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. அதனாலயே அதிகார வர்க்கத்தின் எதிர்ப்பை தொடர்ந்து சாம்பாதித்துக் கொண்டு வருகிறது. (பணம் காசு சம்பாதிப்பது குறைவுதான். )
  • நெருக்கடி நிலையின்போது அதிகம் பாதிக்கப்பட்டது தி இந்தியன் எஃஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்கள்தான். 
  • 2007வரை  சென்னை கிளப் ஹவுஸ் சாலையில் இயங்கி வந்த தினமணி,  தனது ஜாகையை அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு மாற்றிக்கொண்டது.
  • இடையில் சிறிது தொய்வை சந்தித்த தினமணி, ஆசிரியர் வைத்தியநாதனின் வருகைக்குப் பின்னர் சற்று தெம்பாக  நடைபோட்டு வருகிறது.
  • தமிழகத்தில் மக்கள் மனமாற்றதிற்கு முக்கிய காரணியாக தினமணி திகழ்ந்துவருகிறது.
  • தினமணி தனது முதல் பக்கத்தில் அரை பக்கத்திற்கு மேல் விளம்பரம் பிரசுரிக்கமாட்டாது.  ஏனென்றால் 'அது  வாசகர்களின் பகுதி, அதை முழுமையாக ஆக்ரமிக்க நமக்கு அதிகாரம் இல்லை' என்று பதில் வரும்.   இவ்வேளையில் தினமலர் , தினத்தந்தி மற்றும் தினகரனை நினைத்துப் பாருங்கள்.  தினமலரில் முதல் பக்கத்தில் வெறும் 'ஷாக்' என்றுதான் இருக்கும். மீதி இடம் முழுவதும் விளம்பரம் நிறைந்திருக்கும். ஷாக் யாருக்கு....? அதன் வாசகர்களுக்கா....?
  • தமிழகத்தின் மிகப்பழமையான நாளிதழ் தினமணி.
  • டி.எஸ் சொக்கலிங்கம், ஏ.என் சிவராமன், ஆர்.எம்.டி. சம்பந்தம் போன்ற திறன்படைத்தோர் ஆசிரியர்களாக பணி புரிந்துள்ளனர்.
  • பதிப்பக விளம்பரங்கள் தினமணியில்தான் முதலில் வரும். எப்படி சினிமா எடுப்பவர்கள் முதலில் 'தினத்தந்தியில் விளம்பரம் செய்வார்களோ, அதேபோல் புத்தக விற்பனை விளம்பரம் முதலில் தினமணிக்குதான் வரும்.
  • பதிப்பகங்களின் பாதுகாவலன் தினமணி.  சென்னையில் வருடம் தோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாவில்  தினமணிதான் முக்கிய ஸ்பான்சர்.
  • மதராஸ் ராஜதானியிலிருந்து தமிழ்நாடு பிரிந்த 50தாவது வருடத்தை 'தங்கத் தமிழகம்' என்ற பெயரில் 100 பக்க (முழு பக்கம்) ஆளவில் சிறப்பிதழாக  கொண்டுவந்து சாதனை செய்தது தினமணி.  தமிழகத்தின் தகவல் களஞ்சியாமாகத்  தங்கத் தமிழகம் இன்றும் திகழ்கிறது.  தினமணிக்கு  நிகர்  தினமணிதான் என்பதை நிருபித்தது.
  • தங்கத் தமிழகம் சிறப்பாக வெளிவர  அன்றைய தினமணி கதிர் ஆசிரியர் சிவக்குமாரின் பங்கு போற்றுதலுக்குரியது. (தங்கத் தமிழகம் பெயர் உபயம்... அடியேன் என்பதையும் இத் தருணத்தில் சிரம் தாழ்த்திக் கூறிகொள்கிறேன்)
  • மாணவர் மலர், மருத்துவ மலர், தீபாவளி மலர் மற்றும் இசை மலர் என்று வருடம் தோறும் என்னற்ற சிறப்பிதழ்களை கொண்டு வருகிறது.
  • தினமணி வெளியீட்ட  'அண்ணா நூற்றாண்டு மலர்', 'செம்மொழி கோவை' சிறப்பிதழ் போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
  • கோவையில் நடைபெற்ற உலக செம்மொழி மாநாட்டை ஒட்டி எல்லா  நாட்களும் நான்கு பக்கத்தில் சிறப்பிதழை வெளியிட்டு தமிழுக்கு சிறப்பு சேர்த்தது.
  • முன்னாள் முதல்வர் கருணாநிதி தினமணி மீது அவ்வப்போது கருத்து யுத்தம் நடத்தினாலும்,  தினந்தோறும் தினமணியை வாசிக்காமல் இருக்கமாட்டார் என்று கேள்விபட்டு இருக்கிறேன்.
  • தினமணி கருணாநிதியை வாழ்த்தினாலும் தாழ்த்தினாலும் அடுத்த நாள் அது முரசொலியில்  எதிரொலிக்கும்.
  • தமிழ் நாளிதழ்களில் இன்றும் தலையங்கம் வருவது தினமணியில்தான்.
  • ஈழத்தமிழர்கள் மீது ஆழ்ந்த பற்றுக்கொண்டு அவர்களது செய்திகளை தாய் உள்ளத்துடன் வெளியிடும் தினமணி.
  • இலங்கையில் நடைபெற்ற  போரில் பிரபாகரன் கொல்லப்பட்டபோது, தனது முதல் பக்கத்தில் 'பிரபாகரன் வீர மரணம்'  என்று வெளியிட்டு அந்த மாவீரனுக்கு மரியாதை செய்தது தினமணி.
  • இலங்கையில் நடந்த போரில் பிரபாகரன் கொல்லப்பட்டபோது தினமணி தீட்டிய தலையங்கம்,  உலகத் தமிழர்களால் பெரிதும் பேசப்பட்ட, . முக்கியமான தலையங்கமாக இன்றும் கருதப்படுகிறது.
  • மற்ற பத்திரிகைகளில் கற்பழிப்பு, கள்ளக் காதல், கொலை போன்ற சம்பவங்கள் பெரிதுப்படுத்தபட்டு வரும்போது...அந்த செய்தி தினமணியில் ஒரு காலத்தில்தான் வரும்.  சில நேரங்களில் வராமலும் போகும்.
  • விபத்தில் இறந்தவர்கள் அல்லது கொலையுண்டவர்களின் புகைப்படங்களை அப்படியே வெளியிடாது தினமணி. மாறாக அவர்கள் உயிரோடு (live pixure) இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களையே வெளியீடும்.
  • தமிழக நாளிதழ்களில் தினமணியை மட்டுமே அதிகம்பேர் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
  • தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் தினமணியையே அதிகம் தேர்வு செய்கின்றனர். .
  • அன்மையில்  புது தில்லியில் தனது 8வது பதிப்பை தொடங்கியது தினமணி.
  • இன்றும் சிலர் தினமணியை தனிப்பட்ட முறையில் சேமித்து பாதுகாத்து வருகின்றனர்.
  • இப்படி என்னற்ற தகுதிகளை கொண்டது தினமணி நாளிதழ். இந்த வரலாற்றுதினத்தில்  தினமணியை வாழ்த்தி வணங்குகிறது தமிழன்வீதி.

சனி, செப்டம்பர் 10, 2011

ஜெயலலிதாவின் தலையில் தட்டிய தினமணி.



முதாய நலனில் எப்போதும் அக்கரைக் கொண்டு, மக்கள் பக்கம் நின்று செய்திகளை வழங்கி வரும் தினமணி நாளிதழ், தனது இன்றைய (10/09/2011)  தலையங்கத்தின் மூலம் ஜெயலலிதாவிற்கு 'குட்டு' வைத்துள்ளது.
நேற்று முன்தினம் 8ம் தேதி  சட்டப் பேரவையில்  ஜெயலலிதா பேசும் போது...  "  கள்ளச்சாராயம் காய்ச்சி சம்பாதிக்கவேண்டும்  என்பதற்காக சமூகவிரோதிகள்தான் டாஸ்மாக்கை மூடவேண்டும்  என்கிறார்கள்.  டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று சொல்பவர்கள் சமூக விரோதிகள். டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும்...." என்று வசைபாடினார்.  

டாஸ்மாக் வருவதற்கு நாம்தானே காரணம்  (படிக்க... குடிக்க கற்றுக் கொடுத்த 'கோ' மகள்) என்ற மனசாட்சியின்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.   இதை நாளிதழ்களில் படித்தவர்கள்  முகம் சுழிக்கத்தான் செய்தனர்.   முழு ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லாமா...? இதை தட்டிக் கேட்க ஆளில்லையா என்று நாம் திகைத்து நிற்க....  இன்றைய  தலையங்கம்  'மகுடமல்ல, முள்கிரீடம்' என்ற தலையங்கம் மூலம் ஜெயலலிதாவிற்கு 'குட்டு' வைத்துள்ளது தினமணி நாளிதழ். 



'டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும் என்றால்,  எதற்கு ஆட்சி அதிகாரம், காவல்துறை' என்று கேள்வி எழுப்பி... சற்று காட்டமாகவே ஜெவை விளாசிவுள்ளது தினமணி.  

இனி தினமணி தலையங்கம்......

                                                  'மகுடமல்ல, முள்கிரீடம்'                                                   

மதுவிலக்கை அமல்படுத்தினால் அரசுக்குக் கிடைக்கும் ரூ.15,000 கோடி வருவாய் சமூக விரோதிகளுக்குச் சென்றுவிடும்' என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், சட்டப்பேரவையில் விளக்கம் அளித்திருக்கிறார்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இது நியாயமான கருத்து போலத் தோன்றும். மது விற்பனையை அரசு செய்யாமல் தனியார் எடுத்துக்கொண்டு செய்தால், இத்தனை லாபமும் தனியாருக்கு அல்லவா போகும் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், இந்த மதுவைத் தயாரித்துத் தரும் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் பணம் எவ்வளவு, இந்த மதுவின் உற்பத்திச் செலவு எவ்வளவு என்பதை அரசு வெளிப்படையாகத் தெரிவிக்குமேயானால், தற்போது மது விற்பனையில் அரசுக்குக் கிடைக்கும் ரூ.15,000 கோடியைக் காட்டிலும் அதிகமான வருவாயைத் தனியார் மது தயாரிப்பு நிறுவனங்கள் லாபமாக அடைந்து வருகின்றன என்கிற கசப்பான உண்மை வெளிப்படும்.

அந்நிய மதுபானத் தொழிலில் வெறும் எரிசாராயத்தைத் தண்ணீரில் கலந்து விற்பதைத் தவிர, மிகப்பெரிய தொழில்நுட்பங்கள் கிடையாது. பல தருணங்களில் இந்த மது புளிப்பேறும் காலஅவகாசம்கூட இல்லாமல் அப்படியே பாட்டில்களில் அடைக்கப்பட்டு, சந்தைக்கு அனுப்பப்படுகின்றன. அவ்வளவு தேவை இருக்கிறது. ஆகவே, மது தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபம் மேலதிகமாகவே கிடைக்கிறது என்பது நிச்சயம். தரக்கட்டுப்பாடு எந்த அளவுக்கு இருக்கிறது, கலால் வரி கட்டாமல் திருட்டுத்தனமாக எவ்வளவு மது விற்பனையாகிறது என்பதெல்லாம் வெளியில் விவாதிக்கவேபடாத பிரச்னைகள்.

மதுவிலக்கை அமல்படுத்தினால் என்ன ஆகும் என்று பார்க்கலாம். தமிழக அரசுக்கு ரூ. 15,000 கோடி வருவாய் கிடைப்பது நின்றுபோகும். அதேபோல, மதுபானத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்காது. இத்தனை வருமானமும் சமூகவிரோதிகளுக்குப் போகும் என்று சொன்னால், தமிழகத்தில் இப்போது விற்பனையாகும் அதே அளவுக்கு கள்ளச்சாராயம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடினால்தான் உண்டு. பிறகு எதற்கு காவல்துறை, கண்காணிப்பு? ஏன், ஒரு ஆட்சி, அரசாங்கம் எல்லாம்? லஞ்சத்தைக் கட்டுப்படுத்த அரசால் முடியாது என்று கூறி லஞ்சத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதுபோல இருக்கிறது இந்த வாதம்.

மதுவிலக்கு அமலில் இருக்கும்போது, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் இருக்கத்தான் செய்தனர். இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இவர்களிடம் திருட்டுத்தனமாக சாராயம் குடித்தவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஊரிலும் சில நூறு பேர்தான். கள்ளச்சாராயம் குடிப்பது சமூக அவமானமாகக் கருதப்பட்டதால் 95 சதவிகித குடிமக்கள் குடிகார மக்களாக இல்லாமல் இருந்தனர்.

ஆனால், அரசு சொல்கிறது 32 மாவட்டங்களில் ரூ.66 லட்சத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தி மதுவின் தீமை குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லவிருக்கிறோம். இதுதவிர, ஆயத் தீர்வை ஆணையருக்கு ரூ.34 லட்சம் வழங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்று! ஏற்கெனவே மாநிலத்தில் மதுஅடிமைகளின் புனர்வாழ்வு மையங்கள் 15 உள்ளன. இவற்றுடன் மேலும் 3 மையங்கள் திறக்கப்படும். புதிய மையத்துக்காகவும், பழைய மையங்களை மேம்படுத்தவும் ரூ.5 கோடி வழங்கப்படும் என்று சொல்கிறது தமிழக அரசு. கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக இருக்கிறது.

ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜ், பக்தவத்சலம், அண்ணாதுரை ஆகிய ஆறு முதல்வர்கள், மதுவாசனையை தமிழக இளைஞர்களுக்குக் காட்டாமல் இருந்தார்கள். 1991-ல் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றபோது, சாராயக்கடைகளை மூடி புண்ணியம் கட்டிக்கொண்டார். அதற்காக அவரைப் பாராட்டாத தாய்மார்களே கிடையாது. இப்போது அவர் ஏன் அதே மனத்திண்மையுடன் செயல்படாமல் இருக்கிறார் என்பதுதான் அவரிடமிருந்து நல்லாட்சியை எதிர்பார்ப்பவர்கள் எழுப்பும் கேள்வி.

"திமுக அரசின் இலவசத் திட்டங்களை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்கான நிதி மதுவிற்பனையில்தான் கிடைக்கும் என்பதால், இத்திட்டத்தைக் கைவிட முடியாத நிலை' என்று காரணம் கூறக்கூடும். அதற்கு படிப்படியாக இலவசங்களைக் குறைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுதான் வழியே தவிர, மது விற்பனையை அதிகரித்து இலவசங்களை வாரி வழங்குவது சரியான முடிவாக இருக்காது.

மதுக்கடைகளில் வேலை செய்யும் சுமார் 30,000 பேரும் ஏதோ ஓர் அரசியல்கட்சியுடன் இணைவு பெற்ற டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்கள் அமைத்துள்ளனர். பணிநிரந்தரம் செய்யக் கோரி போராடுகின்றனர். மதுவிலக்கை அமல்படுத்தக் கோரும் அதே அரசியல் கட்சிகள் தங்கள் தொழிற்சங்க அங்கத்தினர்களுக்காகக் களத்தில் குதிக்கின்றன. அரசியல் கட்சிகளின் ஆஷாடபூதிதனத்திற்கு எல்லையே இல்லை என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.

மது விற்பனையால் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. அதனால் இலவசங்களை அள்ளிக் கொடுக்க முடிகிறது. 30,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது என்பதெல்லாம் நொண்டிச் சாக்குகள். மது விற்பனையால் மக்களின் ஆரோக்கியம் கெடுகிறது. மருத்துவச் செலவு அதிகரிக்கிறது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரம் சீர்குலைகிறது. உழைக்கும் திறன் குறைகிறது. அடுத்த தலைமுறையினர் சீரழிகிறார்கள். மாலை 5 மணிக்குப் பிறகு பெண்கள் தனியாகத் தெருவில் நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சுகாதாரக் குறைவான தெருவோரக் கடைகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து அதிகரித்திருக்கிறது. இவையெல்லாம்தான் நிஜமான விளைவுகள்.

"முதலில் தெருவுக்குத் தெரு மதுக்கடைகளும் பார்களும் இருப்பதை பாதிக்குப் பாதியாகக் குறைப்பது அடுத்த 5 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை நோக்கித் தமிழகத்தை இட்டுச் செல்வது மதுக்கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் சுயதொழில் செய்ய வாய்ப்பளித்து அந்த இளைஞர்களுக்கு நல்லதொரு வருங்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பது'. இப்படியெல்லாம் முதல்வர் ஜெயலலிதா இந்தப் பிரச்னையில் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்பதுதான் பெருவாரியான மக்களின் எதிர்பார்ப்பு.

2003-04-ம் ஆண்டில் மது விற்பனையால் அரசுக்குக் கிடைத்த வருவாய் ரூ.3,639 கோடி. 2010-11-ம் ஆண்டில் ரூ.14,965 கோடி.
   

இது நமக்கு நாமே சூட்டிக்கொள்ளும் மணிமகுடமா, முள்கிரீடமா? என்ற கேள்வியோடு தனது தலையங்கத்தை முடித்துள்ளது தினமணி.

தினமணி போன்ற  பொறுப்புமிக்க பத்திரிகைகளால்தான் நாடும் வீடும் உறுப்படும். அவர்கள் தரும் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு நல்வழியில் நடந்தால் எல்லோருக்கும் நலமே....!

                                                                                                                                                   

திங்கள், ஜனவரி 03, 2011

தம்பி என்று கூப்பிடுவது சரியா ?

தினமணி கதிரில் கவிக்கோ ஞானசெல்வன் 'பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம்' என்ற தலைப்பில் பல்வேறு தகவல்களை வாரம் தோறும்  வழங்கி வருகிறார்.  இந்த வாரத்தில் வந்ததை உங்களுக்காக ...

சகோதரர் என்னும் சொல்லுக்கு உடன் பிறந்தவர் என்பது பொருள். சக+உதரர் (உதரம் -வயறு) ஒரே வயிற்றில் பிறந்தவர் சகோதரர்.   தனித் தமிழில் உடன் பிறந்தார். இது பொதுச்சொல். ஆனால் தமையன்,தமக்கை,தம்பி,தங்கை எனும் சொற்கள் அமைந்த தமிழின் சிறப்பு என்னே?

தம் + ஐயன் = தமக்கு மூத்தவன்- தமையன் (அண்ணன்)

தம் + அக்கை =தமக்கை - தமக்கு மூத்தவள் (அக்கா)

தம் + பின் = தம்பி எனத் திரிந்தது. தம்பின் (தமக்குப் பின்)  பிறந்தவன்- தம்பி

தம் + கை = தமக்குச் சிறியவள்  - தங்கை  (கை எனும் சொல் சிறிய என்று பொருள்படும்)



இப்படி எல்லாம்  ஆங்கிலத்தில் கூறிவிட முடியுமா?  அங்கு Brother என்பதோடு ஒட்டுச் சொற்களை இணைக்க வேண்டும்.  Younger Brother, Elder Brother என்றிவ்வாறு  குறிப்பிடுகிறோம்.  நந்தமிழில் ஒவ்வொரு நிலைக்கும் தனித் தனி பெயர் இருக்கும் போது, ஆங்கில மொழியின் தாக்கத்தால் 'மூத்த சகோதரர்' என்றும் 'இளைய சகோதரர்' என்றும் அழைப்பது சரியா?  என்று இக் கட்டுரையில் நம்மை கேள்வி கேட்கிறார் கட்டுரையாளர்.

அதோடு குழந்தை பருவம் என்று சொல்லுகிறோம். இந்த குழந்தை பருவத்திலேயே பத்து பிரிவை கண்டவர்கள் தமிழர்கள்.

ஆண்பால் பிள்ளையாயின்.... 1. காப்புப் பருவம், 2. செங்கீரைப் பருவம், 3. தாலப் பருவம், 4. முத்தப் பருவம், 5. சப்பாணிப் பருவம், 6. அம்புலிப் பருவம், 7. வருகைப் பருவம்,  8. சிற்றில் பருவம், 9. சிறுதேர்ப் பருவம், 10. சிறுபறைப் பருவம்.
இதுவே பெண் பிள்ளையாயின்.... இறுதி மூன்றும் மாறுபட்டு,   8. கழங்கு (தட்டாங்கல்), 9.அம்மானை, 10.ஊசல் (ஊஞ்சல்) என்று பகுத்துப் பிரித்தார்கள். 

தமிழின் பொருள் பட வாழ்ந்தார்கள் என்று தமிழின் பெருமையை தமிழன் உணர தொடர்ந்து எழுதிவருகிறார். நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

ஆனால், இன்றோ தமிழன் வேற்று மொழிக்கு வரவேற்பு செய்து 'தமிழுக்கு' சங்கு ஊதுகிறான்.   நாம் தமிழைப் பற்றி, அதன்  பெருமை பற்றி ஏதாவது  கூறினால், 'உச்' கொட்டுகிறான்.

  • தமிழன் தம் மொழி மறந்த மாந்தனாக மாறிவிட்டான்.



இந்தியர்களுக்கு பிரியாணி தந்த பாரசீகம்

  அழகான ஈரான் தேசத்தவர்கள். படம்: கூகுள்.   க ருகரு கூந்தல், மீனை ஒற்றிய கண்கள், மிகையற்ற மார்பு, கையளவு இடை, வனப்பு பொருந்திய முகம், மை தீ...