ஞாயிறு, மார்ச் 29, 2026

இந்தியர்களுக்கு பிரியாணி தந்த பாரசீகம்

 
அழகான ஈரான் தேசத்தவர்கள்.படம்: கூகுள்.

 ருகரு கூந்தல், மீனை ஒற்றிய கண்கள், மிகையற்ற மார்பு, கையளவு இடை, வனப்பு பொருந்திய முகம், மை தீட்டிய புருவம், எடுப்பான நாசி, உயர்ந்து பார்க்கும் உயரம், உறுத்தாத வெண்ணிரம் என்று... ஈரான்: அழகன்களும் அழகிகளும் நிறைந்த நாடு!!
 
உலகில் மிகவும் அழகானவர்கள் பாரசீகர்கள். அவர்களுக்கும் இந்தியர்களுக்குமான உறவு என்பது தொன்று தொட்டது, தொன்மையானது, கலாச்சார பரிவர்த்தனை நிறைந்தது.
 
பண்டைய காலத்திலிருந்தே இந்தியா மற்றும் பாரசீகம் (இன்றைய ஈரான்) இடையே ஆழமான வரலாறு மற்றும் கலாச்சார தொடர்புகள் இருந்தன. இரு பகுதிகளும் இன்டோ-இரானிய நாகரிகத்தின் பகுதிகளாக இருந்ததால் வர்த்தகம் மற்றும் மக்கள் இடம்பெயர்வு தொடர்ந்து நடைபெற்றது.
பாரசீகர்கள் இந்தியாவிற்குள் நுழையும் போது கூடவே குதிரைகளையும், பருத்தித் துணிகளையும், முத்துக்களையும் கொண்டு வந்தனர். அவர்களின் வருகை ஒரு நீண்ட நெடிய புதிய கலாச்சாரத்தை இந்தியாவிற்குள் அறிமுகம் செய்தது.
 
இந்தியர்களின் விருப்ப உணவான பிரியாணி, கபாப், சமோசா, புலாவ், நான், ஃபலுடா என்று உணவிலும்... சல்வார் கமீஸ், சுடிதார், பைஜாமா, ஷெர்வானி என்று ஆடையிலும்,  பஜார்,கஸானா, தோஸ்த் என்று பேச்சு வழக்கில் நாம் பயன்படுத்தும் சொற்கள் வரை பாரசீகத்திடமிருந்து (ஈரான்) நாம் பெற்றது அதிகம்.
 
இந்தோ பாரசீக (Indo Persian) கட்டிடக் கலை இந்தியாவில் பிரசித்திபெற்ற கட்டிடக்கலையாகும். தாஜ்மஹால், குதுப்மினார், செங்கோட்டை என்று இந்தியாவின் முக்கிய அடையாளங்களையும் நாம் பட்டியலிடலாம்.
இந்தியாவுக்கும் பாரசீகத்திற்கும் இடையிலான கலாச்சாரத் தொடர்புகள் 4,000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானவை என்று வரலாற்று மற்றும் தொல்லியல் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. சிந்து சமவெளி நாகரிகக் காலத்தில், ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ போன்ற நகரங்களை ஈரானியப் பீடபூமிப் பகுதிகளுடன் வர்த்தக வலைப்பின்னல்கள் இணைத்திருந்தன. இத்தகைய பரிமாற்றங்கள், இந்தோ-ஈரானிய உலகிற்கு இடையே தொடக்ககால கலாச்சாரப் பாலங்களை உருவாக்க உதவின.
 
 
பாரசீகப் பாலம்: ஈரான் தலைநகரில் உள்ள ஈரான் மாலில் இந்த பாலத்தில் பண்டைய பாரசீக வீரர்களை குதிரையில் சவாரி செய்வதை சித்தரிக்கும் பிரமாண்டமான சிலைகள் வரிசையாக இடம்பெற்றுள்ளன, இது ஈரானின் வளமான வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.
படம்: கூகுள்.

ஒரே வேரிலிருந்து வந்த சொற்கள்:
மாதா (Mata) – Sanskrit
மாதர் (Madar) – Persian
அர்த்தம்: தாய்
பிதா (Pita) – Sanskrit
பெதர் (Pedar) – Persian
அர்த்தம்: தந்தை
ப்ராதா (Bhrata) – Sanskrit
பராதர் (Baradar) – Persian
அர்த்தம்: சகோதரன்
நாம (Nama) – Sanskrit
நாம் (Nam) – Persian
அர்த்தம்: பெயர்
துவார் (Dvara) – Sanskrit
தர் / தார் (Dar) – Persian
அர்த்தம்: கதவு
 
அழகான ஈரான் தேசத்தவர்கள்.படம்: கூகுள்.

சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளில் காணப்படும் பல சொற்கள் ஒரே மாதிரி காணப்படுகிறன. இந்தியா மற்றும் பாரசீக மக்களுக்கு பழங்கால Indo-Iranian கலாசார வேர்கள் இருந்ததை மொழியியல் ஆய்வுகள் மூலம் காட்டுகின்றன. இதில் சில சொற்களை தமிழர்களாகிய நாமும் பயன்படுத்துகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பாரசீகத்தில் (ஈரான்) இருந்து 6 ம் மற்றும் 8 ம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பார்ஸிக்கள் (Parsis) இன்று இந்தியாவின் தவிர்க்க முடியாத ஒரு வியாபார சமூகமாகும். கல்வி, சுகாதாரம், எஃகு, சாலை, விமான போக்குவரத்து, கப்பல், கணிணி நீதி என்று டாடா குழுமம் ஈடுபடாத துறைகளே இல்லை எனலாம். இந்தியாவின் அடையாளமாக மாறி இருக்கும் ' டாடா' என்ற சொல் ஈரானில் உள்ள ஒரு ஊரின் பெயராகும். 
 
இந்தியர்களிடையே பிரபலமாக கோத்ரேஜ் நிறுவனமும் பார்ஸிகளின் நிறுவனம்தான். இங்குள்ள போரா முஸ்லீம்கள் ஈரானை பூர்விகமாக கொண்டவர்கள்தான்.  
 
பார்ஸிக்கள் தங்களது Zoroastrianism மரபுகளை காத்து இந்திய சமூகத்தில் இன்றும் முக்கிய சமூகமாக பங்காற்றி வருகின்றனர். 
 
இப்படியான செழுமையான கலாச்சார வேர்களை கொண்ட பாரசீக (ஈரானை) மண்ணைதான் டிரம்ப்பும் நெதன்யாகும் அழித்து வருகின்றனர். பாரசீகத்தோடு நீண்ட நெடிய உறவு கொண்ட இந்தியர்களும் இந்திய அரசும் ஈரானை காப்பாற்ற துணை நிற்க வேண்டும். 
 
-மபா.

சென்னையில் பர்மா முனி !


 
 
சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ளடங்கி இருக்கிறது இந்த பிரமாண்டமான பர்மா காலனி முனீஸ்வரர் சிலை. நிறைய சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். முறுக்கிய மீசை, முறுக்கேறிய தசையுமாக முனீஸ்வரர் படு பிரமாண்டமாக காட்சித் தருகிறார். 'ஆத்துக் கோவில் அங்காள அம்மன், ஸ்ரீ அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயம், பர்மா காலனி முனீஸ்வரர்' என்று பல்வேறு பெயர்களில் இக் கோவில் அழைக்கப்படுகிறது. 
 
ஆனால், அந்த இடத்திற்கு அவ்வளவு எளிதாக யாரும் சென்றுவிட முடியாது. ஒரு சிக்கலான நிலப்பரப்பில் யாரும் எளிதில் அணுக முடியாத இடத்தில் இருந்துதான் முனீஸ்வரர் அருள்புரிகிறார்.
 
சரியாக அசோக் நகர் காசி தியேட்டர் தாண்டி, பாலம் ஏறி இறங்கி யுடர்ன் அடித்து அடையாறு ஆற்றை ஒட்டிய சாலைகளில் வளைந்து நெளிந்து பயணித்தோமானால், இராணுவ கண்டோன்மன்டில் இருக்கிறது இந்த ஏரியா.
பர்மாவிலிருந்து புலம் பெயர்ந்த மக்கள் வசிக்கும் பகுதி இது. சுற்றிலும் இராணுவத்திற்கு சொந்தமான பகுதி என்பதால் கட்டுப்பாடுகள் உண்டு.
கிண்டி போரூர் போகும் வழியில் போர்வீரர்கள் கல்லறை பின்பகுதி வழியாகவும் இந்த பகுதிக்கு வரலாம். நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையம் (CTC) எதிரே வருகிறது இந்தப் பகுதி.கோவிலுக்கு போகும் பாதை குறுகலானது என்பதால் காரில் போக முடியாது. முகப்பிலேயே போர்டு வைத்திருக்கிறார்கள். இறங்கி தெருவில் நடந்துதான் கோவிலுக்கு செல்லமுடியும்.  
 
2010ல் அங்கு போன போது இந்தளவிற்கு வளர்ச்சி இல்லை, நிறைய போட்டேக்கள் எடுத்து எனது ஃபிளிக்கர் பக்கத்திலேயும் பதிவிட்டேன். அதோடு தற்போதுதான் மீண்டும் விஜயம்.
 
முனீஸ்வரர் எதிரே சிலையை கலை நயத்தோடு பிரமாண்டமாக அமைத்திருக்கிறார்கள். அம்மன் சிலையும் பெரிய அளவில் இருக்கிறது . பேச்சியாயி, பெரியாயி என்று தமிழர்களின் மண் சார்ந்த நாட்டார் சிறு தெய்வங்களை காண முடிந்தது. 
 
மாலை நேரங்களில் அத்தோ, பேஜோ போன்ற பர்மிய உணவுவகைகளும் இங்கு விற்கிறார்கள்.  
 





 
 

திங்கள், ஆகஸ்ட் 04, 2025

ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்' புத்தக வெளியீட்டு விழா !



ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்'  புத்தக வெளியீட்டு விழா கடந்த வெள்ளி  அன்று சென்னையில்  நடைபெற்றது. நிகழ்வுக்கு அழைப்பின் பேரில் சென்றிருந்தேன்.  விழா சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற்றது.

ஆங்கிலத்தில் வெளிவந்த ஜோய் ஆலுக்காஸின் 'ஸ்ப்ரெடிங் ஜோய்' ( Spreading Joy)  தமிழ் பதிப்பை "தங்க மகன் ஜோய்" என்ற தலைப்பில் வெளியிட்டார்கள்.

விழாவில் பெருந்திரளான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கேரளத்தில் பெரும் பணக்கார குடும்பத்தில்  பிறந்த ஜோயை குடும்பத்தினர் யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.  15 குழந்தைகள் உள்ள பெரிய குடும்பத்தில் இவர் 11 ஆவது குழந்தை.  தனக்கான தனிமையை உணர்ந்த ஜோய் தனது பால்யத்தில்  முழு கவனத்தையும் வியாபாரத்தில் செலுத்தினார். அவரது தீவிரமான வியாபார நுணுக்கம் உலக அளவில் தங்க நகை விற்பனையில் அவருக்கு பேரும் புகழையும் வாங்கித் தந்திருக்கிறது.
 
"கேரளம் தாண்டி எனது முதல் கடையை சென்னையில்தான்  தொடங்கினேன். அதனால் சென்னை எனக்கு மிகவும் பிடித்தமான நகரம்" என்றார் ஜோய் ஆலுக்காஸ்  தனது ஏற்புரையில்.

சென்னை தி நகரில்  இருக்கும்  பிரசாந்த கோல்டு டவரில்  இயங்கும் ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லரிதான் இந்தியாவின் பெரிய நகைக் கடை  என்ற பெருமையைப் பெற்றுள்ளது. பார்க்க  தங்க நகைக்கென பிரத்யேக மால் போலவே இருக்கிறது பிரசாந்த் கோல்டு டவர்!
**

விழா முடிந்ததும், விழாவிற்கு வந்தவர்களுக்கு ஒரு விசிட்டிங் கார்டு போல ஒரு அட்டை தந்தார்கள். அதில் க்யூ ஆர் கோடு இருந்தது. அந்த க்யூ ஆர் கோர்டை நமது மொபைலில் ஸ்கேன் செய்ததும்... நம்மை ஒரு   தற்படம் (செல்ஃபி) எடுக்க சொல்கிறது,   இல்லை மொபைலிலிருந்தும் நமது புகைப்படத்தை பதிவேற்றமும் செய்யலாம்.

பதிவேற்றம் முடிந்ததும், நமது புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன்  முக அடையாளம் (Face    Recognitions) தரவுகளை  வைத்து,  நாம்  நிகழ்வில் எங்கெங்கு இருந்தோமோ அந்தப் புகைப்படங்களை  தேடி எடுத்து,  சடுதியில் நமது வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பிவிடுகிறது.  



புகைப்படங்களை பார்க்கவே பிரமிப்பாக, ஆச்சரியமாக இருந்தது. செயற்கை நுண்ணறிவு எந்தளவிற்கு நமது வாழ்க்கையில் ஊடுறுவி இருக்கிறது பாருங்கள் ?!!!

பி.கு: நல்ல வேளையாக கையில் கிளாசு இருக்கும் புகைப்படத்தை அனுப்பவில்லை  என்று நினைத்துக் கொண்டேன். விழாவில் காக்டெயில் இருந்தது.😍 இனிவரும் காலங்களில் இந்த AI என்னென்ன ரகளை செய்யப் போகிறதோ....??!!!

#AI
#joyallukas

வெள்ளி, ஏப்ரல் 25, 2025

நட்ராஜ் மகராஜ் - புத்தக அறிமுகம்


 
 
                        ஊருக்கு போகிற அவசரத்தில், பயணத்தில் படிக்க "ஒரு புத்தகம் எடுடா" என்று தம்பி பயலிடம் சொன்னேன். "இந்தாப்பா இதை எடுத்துட்டு போ..." என்று புதுக் கருக்கு குலையாத ஒரு புத்தகத்தை எடுத்து நீட்டினான். 

அது தேவிபாரதி எழுதிய 'நட்ராஜ் மகராஜ்'

ரயில் பயணத்தில் ஜன்னலோர சீட், ரயில் சென்னையை விடுத்து திருச்சியை நோக்கி விரைய... காலை நேரக் காற்று இதமாய் அடித்துக் கொண்டு இருந்தது. படிக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 'நட்ராஜ் மகராஜ்' என்னை இழுத்துக் கொண்டா(ர்)ன்.

ரயிலின் வேகத்தில் பக்கங்கள் சர சரவென கரைந்து கொண்டிருந்தது. குறு குறுவென பார்த்துக் கொண்டிருந்த எதிர் சீட்டு இளைஞன் "என்ன அங்கிள், அதற்குள் இவ்வளவு பேஜ் படிச்சிட்டீங்க?" என்றான். அவன் சொன்ன பிறகுதான் கவனித்தேன் 110 பக்கங்களுக்கு மேல் தாண்டிவிட்டிருந்தேன்.

பொதுவாக புத்தக வாசிப்பில் நான் ஒரு தவணை முறைப் படிப்பாளி. எடுத்தோம் முடித்தோம் என்ற கதையெல்லாம் நம்மிடத்தில் இல்லை. ஆற அமரதான் வாசிப்பேன். இந்த முறை கொஞ்சம் ஸ்பீடு !!

சமீபகாலத்தில் நான் படித்ததில் முக்கியமான கவனிக்கதக்க ஒரு நாவல் 'நட்ராஜ் மகராஜ்' கதை சொல்லப்படுகின்ற விதமே அலாதியானது. கதையாடலில் ஒரு வசீகர நடையை ரசிக்க முடிந்தது. கதையில்...கதா பாத்திரத்தில், நடராஜைத்தவிர. யாருக்கும் பெயர் என்பது கிடையாது. எல்லாருக்கும் பெயரின் முதல் எழுத்தை மட்டுமே தந்திருப்பார் நாவலாசிரியர்.  


'செ' என்ற ஊரிலிருந்து 'தி' என்ற ஊருக்கு ரயிலில் செல்லும் 'ம' என்ற வாசகன் விடாப்பிடியாக 'ந'வின் கதையைப் படித்தான். இப்படிதான் கதை போகும். அதுவே நமக்கு சுவாரசியமான ஒரு கதைக் களத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது. தமிழுக்கு இப்படியான கதை சொல்லல் புதிது!

கதா பாத்திரத்திற்கு எதற்கு பெயர் ? நீட்டி முழங்கும் அளவிற்கு அந்தப் பெயர்கள் ஒன்றும் கதையில் பெரிய மாறுதலை கொண்டு வந்துவிடாது என்று நினைத்தாரோ என்னவோ...கதையாசிரியர் யாருக்கும் பெயர் வைக்க வில்லை. 

பரம ஏழையான நட்ராஜ், அந்த ஊரில் இருக்கும் சிதிலமடைந்த அரண்மனையில் வசிக்கிறான். முழு அரண்மணையும் காடு மண்டிக் கிடக்க, முகப்பில் இருக்கும் மணிகூண்டில்தான் அவனது வாசம். அவன் என்றால் அவன் மட்டுமல்ல, அவன், அவனது பொஞ்சாதி, இரு புள்ளைங்க. அரசாங்க ஊழியனாக வேண்டிய கனவில் நட்ராஜ் சத்துணவு அமைப்பாளராக பணியில் சேர்கிறான். 

கடும் வெயிலில் ரயில் வேகமெடுத்து... விழுப்புரத்தை தாண்டுகிறது. எதிர் சீட்டு இளைஞன் மதியத்திற்கான உணவு பாக்ஸ்களை பிரிக்கிறான். சோறு தனியாக ஹைடெக் பாக்ஸில் சீலிடப்பட்டிருக்கிறது. கோழி இறைச்சியும் அவ்விதமே சீலிடப்பட்டிருந்தது. பாக்ஸ்களை ரொம்ப நேரமாக பிரித்துக் கொண்டிருந்தான்.  

அன்று ஞாயிறு என்பதால் ரயிலில் இருந்த பெருமபாலோர் அசைவ உணவுகளையே  
வீட்டிலிருந்து மதிய உணவாக எடுத்து வந்திருந்தார்கள். பக்கத்து சீட் ஆண்டி கருவாட்டுக் குழம்பு ?! எங்கள் வீட்டில் காலையிலே மட்டன் குழம்பு. குழம்பு தனி, சோறு தனியாக தருகிறேன் என்றாள் மனைவி. அப்படியெல்லாம் வேண்டாம் ரயிலில் பிரித்துவைத்து சாப்பிட சிரமமாக இருக்கும் கிளறியே கொடுத்துவிடு என்றேன். ஒரு சில்வர் டிபன் பாக்ஸில் சாப்பாட்டை கிளறி கொடுத்துவிட்டாள். சாப்பிட எளிதாக, வேலையும் விரைவாக முடிந்தது. 

எதிர் சீட்டு இளைஞன் ஒருவழியாக பிரித்து சாப்பிடத் தொடங்கினான். எந்த சங்கோஜமும் இன்றி சோறு, கறிகளை தனித்தனியே தட்டில் எடுத்துவைத்து சாப்பிட்டான். பொறுமையாக சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் பெர்த்தில் உட்கார்ந்திருந்தவர்களை எழுப்பிவிட்டு கட்டையை நீட்டிவிட்டான். இரண்டு மணி நேரம் நல்ல உறக்கம். 

"வீட்டில் ஒரே பிள்ளையா ?" என்றேன்
 "ஆமாம்" என்றான், கண்கள் மிளிர. 

ரயிலில் பயணிக்கும் போதே, நாளை சென்னை திரும்புவதற்காக TNSTC ஆப்பில் ஏசி பஸ்ஸில் தனி சீட்டாக பார்த்து புக் செய்துவிட்டேன். அது எளிதாக இருந்தது. பஸ்ஸ்டாண்ட் சென்று சென்னைப் பஸ்ஸில் சீட் இருக்கிறதா ? என்று ஒவ்வொரு பஸ்ஸாக அலைய வேண்டாம். TNSTC ஆப்பை தரவிறக்கம் செய்து கொண்டால் போதும். மிக சிறப்பாக பராமரிக்கிறார்கள். சாதாரண பேருந்து முதற்கொண்டு ULTRA DELUXE, ஏசி படுக்கை, இருக்கை என்று தமிழகம் முதற்கொண்டு, அண்டை மாநிலங்கள் வர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கட்டணமும் குறைவு, பயணிப்பதும் சிரமமின்றி இருக்கிறது.

கதைக்கு வருவோம்... ஸ்ரீரங்கத்தில் கல்யாணத்தை முடித்து விட்டு, சென்னை திரும்பும் வழியில், பஸ் பயணத்தில் மீண்டும் நட்ராஜ் மகராஜ் புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன்.  

தனது பூர்வீகத்தை மறந்து, இந்த அறத பழசான அரண்மணை புறாக் கூண்டில் வசிக்க முடியாது என்பதை உணர்ந்த 'ந' அரசாங்கத்தின் இலவச தொகுப்பு வீடு கட்டுவதற்கு விண்ணப்பிக்கிறான். அதற்காக அரசாங்கத்தின் பல அடுக்குளில் ஜீவித்து வாழும் பல ரக அரசாங்க மனிதர்களை சந்திக்கிறான்.  

அரண்மணை எப்போது இடிந்து விழுமோ என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இனியும் வாழ முடியாது, நமக்கென்று சின்னதாக ஒரு வீடு இருந்தால் போதும், பாம்பு, தேள் என்று விஷ ஜந்துக்கள் பயமின்றி வாழலாம் என்று முடிவெடுக்கிறான்.

கதை வேகமெடுத்து வரும் இத்தருணத்தில்... இடையிடையே வரும் போன் அழைப்புகளை பதிலளித்துவிட்டு, கொஞ்சம் முக நூல், கொஞ்சம் வாட்ஸ்ஸப் என்ற நேர விரயத்தில் இரவு எட்டரை மணி வாக்கில் சென்னை கிளாம்பாக்கம் வந்தடைகிறது பேருந்து. அங்கிருந்து கோயம்பேடு, அங்கிருந்து இன்னொரு பஸ் என்று வீடு வந்து சேர இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. (இந்த நேரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தோடு பஸ்ஸை நிறுத்தியவர்களை சபிக்கிறேன்.) 

வீடு வந்து மீண்டும் ஆவலாக 'நட்ராஜ் மகராஜ்' புத்தகத்தை தேடினால் புக்கை காணோம். எங்கு தேடியும் இல்லை. மொபைல் பார்க்கும் போது புத்தகத்தை சீட்டில் சைடில் செருகியாதாக நினைவு....  
 
'நட்ராஜ் மகராஜ்' என்ன ஆனார் என்று தெரியவில்லை ??

-மபா 

(வெளியீடு: காலச்சுவடு. விலை ரூ.390)
 
#நட்ராஜ்மகராஜ் 
#தேவிபாரதி 
#காலச்சுவடு 
#பயணங்கள்

செவ்வாய், மார்ச் 11, 2025

தர்மேந்திர பிரதான் - தமிழர்களுக்கு பொது எதிரியா ???

தமிழர்களுக்கு காலம்தோறும் ஒரு பொது எதிரி உருவாவார்கள் போலும்....??


தர்மேந்திர பிரதான்

முன்பு இலங்கை அதிபர் ஜெயவர்தனா, பின்பு அதே இலங்கையிலிருந்து
ருந்து கோத்தபய ராஜபக்சே. அந்த லிஸ்டில் புதிதாக சேர்ந்திருக்கிறார் ஒன்றிய கல்வியமைச்சர் பாஜகவின் தர்மேந்திர பிரதான் ?

புதிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் திட்டத்தையும் முன்னிலைப்படுத்தும் பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளை தமிழ்நாடு ஏற்காவிட்டால், தமிழகத்துக்குத் தரவேண்டிய 2,152 கோடி கல்விக்கான நிதியை   
கொடுக்க முடியாது என்று காட்டமாக கூறினார். தர்மேந்திர பிரதான்.  

இவரது ஆணவப் பேச்சு, தமிழக மக்களிடையே கோபத்தைக் கிளறியிருக்கிறது. 
தமிழகத்திலிருந்து பிரதானுக்கு பெரும் கண்டனங்கள் எழுந்தது. கடந்தவாரம் சென்னையில் நடக்க இருந்த கூட்டத்திற்கு வரவிருந்த தர்மேந்திர பிரதான், நிலமை சூடாக இருப்பதை உணர்ந்து கடைசி நேரத்தில் தமிழகத்திற்கு வருவதை தவிர்த்துவிட்டார். 

இந்நிலையில்... இன்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் தமிழக மக்களை மீண்டும் சீண்டியுள்ளார் தர்மேந்திர பிரதான். புதியக் கல்வி கொள்கைக்கு எதிராக முழக்கமிட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து... "நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதிகள்" என்றிருக்கிறார். இவரது பேச்சு மீண்டும் தமிழகத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

 தர்மேந்திர பிரதானின் இந்த மிரட்டல் பேச்சுக்கு, தமிழக முதல்வர் முதற்கொண்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துவருகிறார்கள்
மத்திய கல்வி அமைச்சர் பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்” என்றார் முதல்வர் ஸ்டாலின் காட்டமாக. 

தர்மேந்திர பிரதானின் அரசியல் முதிர்ச்சியற்ற பேச்சு, தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீப காலமாக இவர் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து காட்டமாக பேசிவருகிறார்.  

"அரண்மனை நாயே, அடுக்கடா வாயை"
 என்று மந்திரிகுமாரியில் கலைஞர் எழுதிய வசனம்தான் ஞாபகத்தில் வருகிறது. 

தமிழை, தமிழர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்திப் பேசி... 
தமிழர்களின் பொது எதிரியாக மாறி வருகிறாரா தர்மேந்திர பிரதான் ???


ஞாயிறு, மார்ச் 09, 2025

'இது பெண்களுக்கான நேரம்'


நினைத்துப் பார்த்தால் ஆண் பெண் என்ற பேதம் ஒரு ஹம்பக் என்றே தோன்றுகிறது. 

அம்மா, அக்கா, தங்கை, மகள் என்று பெண்கள் சூழ் பெரு உலகமாக நமது உலகம் தொன்று தொட்டு வருகிறது. தினந்தோறும் அவர்களுடன்தான் பொழுது புலர்கிறது, சாய்கிறது. அவர்களின் நமக்கான நாட்கள் என்றுமே தொடங்கப்படுவதில்லை.

இந்த உலகம் தோன்றிய பொழுது பெண் வழிச் சமூகமாகவே இருந்தது. அது 'தாயின் ராஜ்யம்'. அவளே அனைத்தையும் தீர்மானித்தாள். தாய், மகன், மகள் என்ற பேதமில்லை. அங்கே உன்னுடையது- என்னுடையது என்ற வேறுபாடில்லை, அங்கு எல்லாமே பொது. 
அவளது ராஜ்ஜியத்தில் எல்லா ஆடவர் மீதும் தாய்க்குதான் முதல் அதிகாரம் இருந்தது என்கிறார் ராகுல சங்கிருத்தியாயன் தனது 'வால்காவிலிருந்து கங்கை வரை' நூலில். 

முந்தைய ஆண்களின் பெயரைக் கூட சொல்லுவதற்கு பெண்கள் அஞ்சினார்கள். ஆண் மட்டுமே அனைத்தையும் செய்ய வல்லமை உடையவன் என்ற ஒரு பிம்பம் பெண்களிடம் கட்டமைக்கப்பட்டது. அவள் கணவனுக்குப் பின்னால் மூணு அடி தள்ளியே நடந்துவந்தாள். 

பெண்கள் அவளது உடலைக் கொண்டே பொது அளவீடுகளின் வழியே வளர்க்கப்பட்டனர். போர்க்காலங்களில் ஆவினங்களை கவர்வது போல் பெண்களை கவர்ந்து இழுத்து சென்றார்கள். அவளுக்கென்று எந்த உரிமையும் இல்லை. மதவாத வேதங்களும் பெண்களை அடிமை என்றே சித்தரித்தது. 

இன்று உலகம் மீண்டும் பெண் வழிச் சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறது. பெண்கள் மிக அதிக பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறார்கள். பெரிய நிறுவனங்களை தலைமை தாங்கி வழி நடத்துகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் பணிபுரியும் இடங்களில் பாலின பேதம் இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது.
உலகளாவில் 2024 ஆம் ஆண்டில் 32.2% பெண்கள் தலைமைப் பதவிக்கு வந்துள்ளனர். 

கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியால், வீடுகளில் பாலின பேதங்கள் குறைந்துள்ளன. பெண்களின் உடல் ரீதியான இடர்பாடுகளில் குடும்பத்தினருக்கு ஒரு புரிதல் வந்திருக்கிறது. அந்த மூன்று நாட்களில் அவள் முன்புபோல் தனது உடமைகளை தூக்கிக் கொண்டு ஓட வேண்டாம். அது வழமையான ஒன்றாக, சகிக்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது.

கடைக்கு செல்லும் போது, ​​மிக இயல்பாக 'அப்பா நாப்கின்ஸ் வாங்கிக்கிட்டு வந்துடுங்க'
என்கிறாள் மகள். "எந்த பிராண்டுமா ?" என்ற கேள்விக்கு, ஏதோ சோப்பு சீப்பு பெயர் சொல்வது போல் சங்கோஜமின்றி சொல்லிவிடுகிறாள். நாமும் அவள் கேட்கும் பிராண்டை கடையாக ஏறி இறங்கி வாங்கி வந்துவிடுகிறோம். 

ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே... அந்த குழந்தையின் தகப்பன், ஆண் பெண் பேதமற்ற மனிதனாக, அவனும் புதிதாக பிறக்கிறான். அதுநாள்வரையில் ஆண்கள் உலகில் வாழ்ந்து கொண்டிருந்தவன் இப்போது பெண்கள் உலகத்தில் நுழைகிறான். மகளை பார்க்கும் போது அவளது வலிகளை அவனும் உணர்கிறான் 

ஒரு பெண்ணும் அப்படிதான். "ஏய் அவன் என்னை பார்க்கிறாண்டி. இவன் முறைக்கிறாண்டி" என்று ஆண்களை கண்டாலே பயந்து கதா தூரம் ஓடுகிற அந்த பதின் பருவப் பெண், பிற்பாடு திருமணம் முடிந்து, ஒரு ஆண் குழந்தைக்கு தாயானவுடன் அவளும் ஆண்கள் உலகில் நுழைகிறாள்.

அவளுக்கு, அவளது மகன்தான் உலகம் என்றாகிவிடுகிறது. அவனை உள்ளும் புறமுமாக, நுணுக்கமாக அறிந்து வைத்திருக்கிறாள். அவனது சிறு அசைவுக்குக்கூட அவளிடம் ஒரு பதில் இருக்கும். ஆண்களை கண்டு மிரண்டு ஓடியவள், மிக எளிதாக தனது மகனை வளர்க்கிறாள். 

ஆணுக்கும் பெண்ணுக்கும் முன்பைவிட இப்போது பரஸ்பர புரிதல் வந்திருக்கிறது. கணவன் மனைவி என்ற பந்தத்தைத் தாண்டி அவர்கள் 'நண்பர்கள்' என்ற அளவிற்கு நெருக்கமாக இருக்கிறார்கள். கணவனை பெயர் செல்லி அழைப்பதற்குப் பயந்த இந்திய மனைவிகள், இன்று 'வாடா போடா' என்ற அளவிற்கு வந்திருக்கிறார்கள். (பாவம் பயலுகள்தான் செய்வறியாது முழி பிதுங்கிக் கிடக்கிறார்கள். இப்படியானபோக்கு இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் நீடிக்கும்)
மெக்ஸிக்கோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் 

"மனிதகுலத்தின் போக்கை ஆண்கள் மட்டுமே வழி நடத்துகிறார்கள் என்று நம்பவைக்கப்பட்டது. அவர்கள் விரும்பிய வரலாற்றை அடைய குழந்தை பருவத்திலிருந்தே நம்மில் பலருக்கு அப்படியே சொல்லப்பட்டது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கண்ணோட்டம் தலைகீழாக மாறிவிட்டது.  இது பெண்களுக்கான நேரம்" என்றார் மெக்ஸிக்கோவின் அதிபர் கிளாடியா ஷீன்பாம் தனது பதவியேற்பு உரையில்.

20 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகான நவீன உலகப் வார்ப்புகளில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இடைவெளி குறுகிக் கொண்டே வருகிறது.  

அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் !!

-மபா. 
8.3.2025

திங்கள், செப்டம்பர் 23, 2024

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்





படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது. 

ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமான திரைக்கதையாக்குவதில் சேட்டன்கள் மகா சமர்த்தர்கள். அப்படி நெட்பிளிக்ஸில் வந்து கவனம் பெற்ற மலையாள படம்தான் 'அடியோஸ் அமிகோ'  (படம்: தமிழில் டப் செய்யப்பட்டிருக்கிறது.)

அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்ந்திருக்கும் ஒருவனுக்கு, ஆஸ்பத்திரி செலவுக்கு 25 ஆயிரம் தேவைப்படுகிறது. தங்கையிடமிருந்து போன் வந்து கொண்டே இருக்கிறது. யார்யாரிடமோ பணம் கேட்கிறான். எல்லோரும் கை விரிக்க....ஏற்கனவே வாங்கி கொடுக்காமல் இருக்கும் நண்பனிடமே மீண்டும் கேட்கிறான். குடிக்க பணம் கேட்கிறான் என்று நினைத்து அவனை திட்டி தீர்க்கும் அவனது நண்பன்; முடிவில்... "எதையாவது பண்ணி தொலைக்கிறேன், பஸ்ஸ்டாண்டுக்கு வா" என்கிறான். 
 
அவன் பஸ்ஸ்டாண்டில் காத்திருக்கிறான். 

கிடைக்கும் பஸ்ஸில் ஏறி, நினைக்கும் இடத்தில் இறங்கி ஜாலியாக ஊர் சுற்றும்,  ஒரு பெரிய பணக்காரரின் மகன் ஒருவன் மகா குறும்புக்காரன், மகா போதைக்காரன். கத்தையாக பணத்தை வைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு குடித்துவிட்டு பணத்தை வாரியிறைக்கும் ரகளையான மனிதன் அவன், அந்தப் பஸ்ஸ்டாண்டிற்கு வருகிறான். 

25 ஆயிரம் பணம் வேண்டி காத்திருக்கும் அவனும் (சூரஜ் வெஞ்சரமூடு), கத்தையாக பணம் வைத்திருக்கும் இவனும் (ஆசிப் அலி), அந்தப் பஸ்ட்டாண்டில் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள்.

அதன் பிறகு என்ன நடக்கும் ? என்று நீங்கள் நினைப்பதற்கு மாறாக, புது ரூட் பிடித்து பயணிக்கிறது 'அடியோஸ் அமிகோ' திரைப்படம். 

அன்றாட வாழ்வாதரத்திற்காக போராட வேண்டிய எளிய மனிதராக தன்னை ஒப்பிட்டு கொண்ட சூரஜ், பாத்திரம் அறிந்து விளையாடி இருக்கிறார். 
இதில் நிறைய அவமானங்களை சந்திக்கவேண்டிய தருணங்களை அப்படியே நமக்கும் கடத்திவிடுகிறார். என்னவொரு தேர்ந்த நடிப்பு, ஆசம் !!

சூரஜ் என்ற தேர்ந்த நடிகனுக்கு இணையாக டஃப் கொடுத்து நடித்திருக்கிறார் ஆசிப் அலி. பணக்கார வீட்டுப் பிள்ளையாக குடி போதையில் அவர் அடிக்கும் லூட்டிகள் A1 ரகம்.
இவரது அடாவடித்தனத்தால் சூரஜ் போன்ற இவரது தந்தை உட்பட அனைவரிடமும் அவமானங்களை சந்தித்துள்ளார். 

படம் முழுவதுமே இருவர் மட்டுமே பெரும்பாலான நேரங்கள் திரையில் இருப்பதால் கொஞ்சம் தொய்வு இருந்தாலும், சுகமான நகர்வுகளால் அதை நாம் உணராமல் செய்துவிடுகிறார் படத்தின் இயக்குநர்.  

 மிக எதார்த்தமான கதைக் களம் நமக்குள் ஒரு ஆசுவசத்தை ஏற்படுத்துகின்றது. அந்த இழையோட்டமான பிரதிபலன் பாராத அன்புக்கு படத்தின் முடிவு ஒரு ஜீவனை தந்துவிடுகிறது. அதன் தாக்கம் நம்மை கண்கலங்க செய்துவிடுகிறது.

கதை : தங்கம்
இயக்கம்: நஹாஸ் நாசர்.

பி.கு: 'அடியோஸ் அமிகோ' என்ற ஸ்பானிய (ஸ்பானிஷ்) மொழிக்கு 'போய்வருகிறேன் நண்பா', அல்லது 'விடைபெறுகிறேன் நண்பா' என்ற அர்த்தம்.

-மபா

#adiosamigomovie 
#அடியோஸ்அமிகோ

இந்தியர்களுக்கு பிரியாணி தந்த பாரசீகம்

  அழகான ஈரான் தேசத்தவர்கள். படம்: கூகுள்.   க ருகரு கூந்தல், மீனை ஒற்றிய கண்கள், மிகையற்ற மார்பு, கையளவு இடை, வனப்பு பொருந்திய முகம், மை தீ...