புத்தக விமர்சனம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தக விமர்சனம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஏப்ரல் 25, 2025

நட்ராஜ் மகராஜ் - புத்தக அறிமுகம்


 
 
                        ஊருக்கு போகிற அவசரத்தில், பயணத்தில் படிக்க "ஒரு புத்தகம் எடுடா" என்று தம்பி பயலிடம் சொன்னேன். "இந்தாப்பா இதை எடுத்துட்டு போ..." என்று புதுக் கருக்கு குலையாத ஒரு புத்தகத்தை எடுத்து நீட்டினான். 

அது தேவிபாரதி எழுதிய 'நட்ராஜ் மகராஜ்'

ரயில் பயணத்தில் ஜன்னலோர சீட், ரயில் சென்னையை விடுத்து திருச்சியை நோக்கி விரைய... காலை நேரக் காற்று இதமாய் அடித்துக் கொண்டு இருந்தது. படிக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 'நட்ராஜ் மகராஜ்' என்னை இழுத்துக் கொண்டா(ர்)ன்.

ரயிலின் வேகத்தில் பக்கங்கள் சர சரவென கரைந்து கொண்டிருந்தது. குறு குறுவென பார்த்துக் கொண்டிருந்த எதிர் சீட்டு இளைஞன் "என்ன அங்கிள், அதற்குள் இவ்வளவு பேஜ் படிச்சிட்டீங்க?" என்றான். அவன் சொன்ன பிறகுதான் கவனித்தேன் 110 பக்கங்களுக்கு மேல் தாண்டிவிட்டிருந்தேன்.

பொதுவாக புத்தக வாசிப்பில் நான் ஒரு தவணை முறைப் படிப்பாளி. எடுத்தோம் முடித்தோம் என்ற கதையெல்லாம் நம்மிடத்தில் இல்லை. ஆற அமரதான் வாசிப்பேன். இந்த முறை கொஞ்சம் ஸ்பீடு !!

சமீபகாலத்தில் நான் படித்ததில் முக்கியமான கவனிக்கதக்க ஒரு நாவல் 'நட்ராஜ் மகராஜ்' கதை சொல்லப்படுகின்ற விதமே அலாதியானது. கதையாடலில் ஒரு வசீகர நடையை ரசிக்க முடிந்தது. கதையில்...கதா பாத்திரத்தில், நடராஜைத்தவிர. யாருக்கும் பெயர் என்பது கிடையாது. எல்லாருக்கும் பெயரின் முதல் எழுத்தை மட்டுமே தந்திருப்பார் நாவலாசிரியர்.  


'செ' என்ற ஊரிலிருந்து 'தி' என்ற ஊருக்கு ரயிலில் செல்லும் 'ம' என்ற வாசகன் விடாப்பிடியாக 'ந'வின் கதையைப் படித்தான். இப்படிதான் கதை போகும். அதுவே நமக்கு சுவாரசியமான ஒரு கதைக் களத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது. தமிழுக்கு இப்படியான கதை சொல்லல் புதிது!

கதா பாத்திரத்திற்கு எதற்கு பெயர் ? நீட்டி முழங்கும் அளவிற்கு அந்தப் பெயர்கள் ஒன்றும் கதையில் பெரிய மாறுதலை கொண்டு வந்துவிடாது என்று நினைத்தாரோ என்னவோ...கதையாசிரியர் யாருக்கும் பெயர் வைக்க வில்லை. 

பரம ஏழையான நட்ராஜ், அந்த ஊரில் இருக்கும் சிதிலமடைந்த அரண்மனையில் வசிக்கிறான். முழு அரண்மணையும் காடு மண்டிக் கிடக்க, முகப்பில் இருக்கும் மணிகூண்டில்தான் அவனது வாசம். அவன் என்றால் அவன் மட்டுமல்ல, அவன், அவனது பொஞ்சாதி, இரு புள்ளைங்க. அரசாங்க ஊழியனாக வேண்டிய கனவில் நட்ராஜ் சத்துணவு அமைப்பாளராக பணியில் சேர்கிறான். 

கடும் வெயிலில் ரயில் வேகமெடுத்து... விழுப்புரத்தை தாண்டுகிறது. எதிர் சீட்டு இளைஞன் மதியத்திற்கான உணவு பாக்ஸ்களை பிரிக்கிறான். சோறு தனியாக ஹைடெக் பாக்ஸில் சீலிடப்பட்டிருக்கிறது. கோழி இறைச்சியும் அவ்விதமே சீலிடப்பட்டிருந்தது. பாக்ஸ்களை ரொம்ப நேரமாக பிரித்துக் கொண்டிருந்தான்.  

அன்று ஞாயிறு என்பதால் ரயிலில் இருந்த பெருமபாலோர் அசைவ உணவுகளையே  
வீட்டிலிருந்து மதிய உணவாக எடுத்து வந்திருந்தார்கள். பக்கத்து சீட் ஆண்டி கருவாட்டுக் குழம்பு ?! எங்கள் வீட்டில் காலையிலே மட்டன் குழம்பு. குழம்பு தனி, சோறு தனியாக தருகிறேன் என்றாள் மனைவி. அப்படியெல்லாம் வேண்டாம் ரயிலில் பிரித்துவைத்து சாப்பிட சிரமமாக இருக்கும் கிளறியே கொடுத்துவிடு என்றேன். ஒரு சில்வர் டிபன் பாக்ஸில் சாப்பாட்டை கிளறி கொடுத்துவிட்டாள். சாப்பிட எளிதாக, வேலையும் விரைவாக முடிந்தது. 

எதிர் சீட்டு இளைஞன் ஒருவழியாக பிரித்து சாப்பிடத் தொடங்கினான். எந்த சங்கோஜமும் இன்றி சோறு, கறிகளை தனித்தனியே தட்டில் எடுத்துவைத்து சாப்பிட்டான். பொறுமையாக சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் பெர்த்தில் உட்கார்ந்திருந்தவர்களை எழுப்பிவிட்டு கட்டையை நீட்டிவிட்டான். இரண்டு மணி நேரம் நல்ல உறக்கம். 

"வீட்டில் ஒரே பிள்ளையா ?" என்றேன்
 "ஆமாம்" என்றான், கண்கள் மிளிர. 

ரயிலில் பயணிக்கும் போதே, நாளை சென்னை திரும்புவதற்காக TNSTC ஆப்பில் ஏசி பஸ்ஸில் தனி சீட்டாக பார்த்து புக் செய்துவிட்டேன். அது எளிதாக இருந்தது. பஸ்ஸ்டாண்ட் சென்று சென்னைப் பஸ்ஸில் சீட் இருக்கிறதா ? என்று ஒவ்வொரு பஸ்ஸாக அலைய வேண்டாம். TNSTC ஆப்பை தரவிறக்கம் செய்து கொண்டால் போதும். மிக சிறப்பாக பராமரிக்கிறார்கள். சாதாரண பேருந்து முதற்கொண்டு ULTRA DELUXE, ஏசி படுக்கை, இருக்கை என்று தமிழகம் முதற்கொண்டு, அண்டை மாநிலங்கள் வர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கட்டணமும் குறைவு, பயணிப்பதும் சிரமமின்றி இருக்கிறது.

கதைக்கு வருவோம்... ஸ்ரீரங்கத்தில் கல்யாணத்தை முடித்து விட்டு, சென்னை திரும்பும் வழியில், பஸ் பயணத்தில் மீண்டும் நட்ராஜ் மகராஜ் புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன்.  

தனது பூர்வீகத்தை மறந்து, இந்த அறத பழசான அரண்மணை புறாக் கூண்டில் வசிக்க முடியாது என்பதை உணர்ந்த 'ந' அரசாங்கத்தின் இலவச தொகுப்பு வீடு கட்டுவதற்கு விண்ணப்பிக்கிறான். அதற்காக அரசாங்கத்தின் பல அடுக்குளில் ஜீவித்து வாழும் பல ரக அரசாங்க மனிதர்களை சந்திக்கிறான்.  

அரண்மணை எப்போது இடிந்து விழுமோ என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இனியும் வாழ முடியாது, நமக்கென்று சின்னதாக ஒரு வீடு இருந்தால் போதும், பாம்பு, தேள் என்று விஷ ஜந்துக்கள் பயமின்றி வாழலாம் என்று முடிவெடுக்கிறான்.

கதை வேகமெடுத்து வரும் இத்தருணத்தில்... இடையிடையே வரும் போன் அழைப்புகளை பதிலளித்துவிட்டு, கொஞ்சம் முக நூல், கொஞ்சம் வாட்ஸ்ஸப் என்ற நேர விரயத்தில் இரவு எட்டரை மணி வாக்கில் சென்னை கிளாம்பாக்கம் வந்தடைகிறது பேருந்து. அங்கிருந்து கோயம்பேடு, அங்கிருந்து இன்னொரு பஸ் என்று வீடு வந்து சேர இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. (இந்த நேரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தோடு பஸ்ஸை நிறுத்தியவர்களை சபிக்கிறேன்.) 

வீடு வந்து மீண்டும் ஆவலாக 'நட்ராஜ் மகராஜ்' புத்தகத்தை தேடினால் புக்கை காணோம். எங்கு தேடியும் இல்லை. மொபைல் பார்க்கும் போது புத்தகத்தை சீட்டில் சைடில் செருகியாதாக நினைவு....  
 
'நட்ராஜ் மகராஜ்' என்ன ஆனார் என்று தெரியவில்லை ??

-மபா 

(வெளியீடு: காலச்சுவடு. விலை ரூ.390)
 
#நட்ராஜ்மகராஜ் 
#தேவிபாரதி 
#காலச்சுவடு 
#பயணங்கள்

செவ்வாய், மார்ச் 21, 2017

மறுதாம்பு புத்தகம் பேசுது விமர்சனம்





    னிப்பும், கசப்பும் கொண்ட வாழ்வில் பொய்மையும் ஒரு சுவையென்று அறியும் தருணத்தில் வாழ்விற்கான நீட்சியை இனங்காண்கிறார் தோழன் மபா. வாழ்க்கையை விரிவாக்கம் செய்து ஓலை அனுப்பியிருந்த கடவுள், மனிதர்கள் ‘மால்’களின் மின் தூக்கிகளில் கடைவாயில் அதக்கிய பீட்ஸாவுடன் வார இறுதிப் பொழுதுகளில் கடன் அட்டைகளைக் கையில் ஏந்தி களமாடும் போக்கைக் கோபத்துடன் கவனித்திருக்கிறான். எருக்கஞ்செடி மண்டி, ஏர் உழாமல் பாலையாகி விட்ட நிலங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது கடவுளின் கேள்வி; (ப.103). ‘வந்தேறிகள் சூழ் உலகு’ என்ற இன்றைய உலகை ஆள்வோர் யாரென இனங் காட்டுகிறார்.

கண்ணியமிக்க கனவான்களே உலகம் முழுவதும் நிறைந்து இருப்பதையும், குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து பிஞ்சுக் கைகளில் இரத்தத்தைப் பூசுவதற்கும், உலகளாவிய விதத்தில் போர்களைத் திணிப்பதற்கும் அவர்கள் திட்டமிடுவதையும் அம்பலப்படுத்துகிறார். செம்பரம்பாக்கம் ஏரிக்கரை உடைத்துப் பெருகி சென்னை மாநகரை மூழ்கடித்த ஊழிப் பெருவெள்ளம் வடிந்தபின் நகரெங்கும் பூத்திருந்த பாலித்தீன் (நச்சுப்) பூக்களைக் காட்சிப்படுத்துகிறது ஒரு கவிதை. ‘கட்டிங் கேட்ட கடவுள்’, ‘ஆதி நிலத்து தேவதை’ ‘அது மாத்திரம்‘ கவிதைகளில் சாதியத்தின் மீது சவுக்கடி வீசுகிறார் தோழன் மபா.  


”தோழன் மபாவின் கவிதைகள் நாம் அறியாத சந்து பொந்துகளுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன” என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். ‘மேய்ச்சல் நிலம்‘, வளமான வண்டல்மண் படிவுகள் நிரம்பியதுதான் என நிறுவுகிற படைப்பு. நேரடியாகவும், வெடிப்புறவும் பேசுகிற வரிகள். ‘மறுதாம்பு’கள் மீண்டும் மீண்டும் துளிர்க்கும் என்பதில் ஐயமில்லை. எழிலார்ந்த அட்டையும், ‘மண்குதிரை’ச் சின்னமும் பொருத்தமானவை.

புதன், ஏப்ரல் 08, 2015

குருபீடம் நோக்கி... வா மணிகண்டன்?



இணைய எழுத்தாளர் வா.மணிகண்டனின் 'லிண்ட்சே லோகன் w/o மாரியப்பன்' மற்றும் 'மசால் தோசை-38 ரூபாய்' ஆகிய இரண்டு நூலுக்கான விமர்சனம் மற்றும் கலந்துரையாடல் யாவரும்.காம் சார்பாக கடந்த ஞாயிறு அன்று டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது. ஒரு அடிப்படை சம்சாரியின் ஞாயிற்றுக் கிழமை சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு கூட்டத்திற்கு சென்று இருந்தேன். அரங்கு நிறைந்திருந்தது.

இப்பொழுதெல்லாம் புத்தக விமர்சனக் கூட்டங்களில் பேச வருபவர்கள் எல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஏடாக் கூடாமா பேசி எதற்கு எழுத்தாளனை இம்சிக்க வேண்டும், என்ற ரீதியில் பொத்தாம் பொதுவாய் பாராட்டி, நாலு வார்த்தை பேசி இறங்கி விடுகின்றனர்.  இந்த கூட்டத்திலேயும் அதுதான் நடந்தது.

ஒரு மனிதனை மேடையில் வைத்துக் கொண்டு அவனை வாய்க்கு வந்தபடி புகழ்வது என்பது, அவனுக்கு அனஸ்தீஸிய கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்வது போன்றது.   அப்படி ஒரு அவஸ்தைக்கு ஆட்பட்டு நாற்காலியில் துவண்டுக் கிடக்கத்தான் முடிந்தது வா.மணிகண்டனால். வந்தவர்கள் எல்லாம் பாராட்டித் தள்ள முகத்தை எப்படி வைத்துக் கொள்வது என்று, இன்னும் வா.மணிகண்டனுக்கு கை கூடவில்லை போலும்?.

இந்த காலமான காலத்தில படிக்க நேரம் இருக்காது என்பதை மிக நன்றாக உணர்ந்து இருக்குகிறார் மணிகண்டன். 'பாஸ்ட் ஃபுட்' வகையை சார்ந்த இவரது எழுத்துகள், மிக எளிதாக ஒரு வாசகனை உள்ளிழுக்கும் சக்தி கொண்டது. பெரிய தரவுகளையோ, சரித்திர ஆதாரங்களையோ, மண்டயை குழுப்பும் வார்த்தை பம்மாத்துகளோ எதுவுமின்றி, 'இந்தா, இதை வாங்கி அந்தப் பக்கம் வை' என்பதுபோல் எளிமையாக கட்டுரை கம் கதை சொல்வதில் இருக்கிறது இவரது வெற்றி!.

அதே நேரத்தில் வா. மணிண்டன் எழுத்தை  விமர்சனம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு?. சொல்லுங்க....?. 

நோயாளர்களை பற்றியோ, அல்லது படிக்க பணம் இல்லாமல் தவிப்பவர்களை பற்றியோ வா.மணிகண்டன் தனது 'நிசப்தம்' வலைத்தளத்தில் எழுதும் போது, அது பொது கவனத்திற்கு வந்துவிடுகிறது.  அதற்கு உதவி செய்ய நிறைய ஆதரவு கரங்கள் நீண்டு விடுகிறது.  அப்படி கிடைக்கப்பெறும் தொகையை சரியான முறையில் பயனாளர்களுக்கு கொண்டு செல்ல ஒரு அறக்கட்டளையையும் ஏற்படுத்தி இருக்கிறார். அதில் தற்போது 10 லட்சம் வரை சேர்ந்திருக்கிறது. வா.மணிகண்டனின் எழுத்து வீச்சிற்கு இந்த பத்து லட்சம் பதம்!.  20 நிமிடத்தில்  ஒரு பதிவை எழுதிவிடுகிறார் என்றால் பார்த்துக்  கொள்ளுங்களேன்!.

விழாவில் இயக்குனர் கவிதா பாரதி, கார்டூனிஸ்ட் பாலா, தம்பி சோழன் கூத்துப் பட்டறை, நாகேஸ்வரன்,சைதை புகழேந்தி, கிருஷ்ண பிரபு ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர். வா.மணிகண்டன் நன்றியுரை நிகழ்த்த, நிகழ்ச்சிகளை ஜீவ.கரிகாலன் தொகுத்து வழங்கினார்.

மற்ற பிரபல எழுத்தாளர்கள் போன்று நீங்களும்  'குரு பீடத்தை' நோக்கி போகிறீர்களா...? என்றொரு முக்கியமான கேள்வியை விழாவிற்கு வந்த ஒருவர் திரும்ப திரும்ப கேட்டார்.  "நான் அப்படி எல்லாம் போகலைங்க. அதிலெல்லாம் விருப்பமும் இல்லைங்க. நான் எழுதுவது 'நிசப்தம்' வாசகர்களுக்காகத்தான்" என்றார் மீண்டும் மீண்டும். ஏதோ "விதை விதைச்சேங்க.....வெள்ளாமை நல்லா வந்தது!" என்று எளிமையான விவசாயி சொல்வது போல் இருந்தது அவரது பேச்சு!.

அதிகம் கவனிக்கப் பெறும் எழுத்தாளனுக்கு 'குருபீடம்' என்பது தவிற்கமுடியாத ஒன்று. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தன்னிச்சையாக அது நிகழ்ந்துவிடும். பாடாவதி சினிமா நடிகனுக்கு கூட அவனது ரசிகர்கள் குருபீடத்தை அமைத்து விடுகிறார்கள். எழுத்தாளனுக்கு அமைத்தால் என்ன பெரிய குடியா மூழ்கிவிடப் போகிறது?. தன்னியில்பாக நிகழ்ந்துவிடும் குருபீடத்தால் எழுத்தாளன் தன்நிலை மறந்தால், அது 'பலிபீடமாக' மாறும் என்பதையும் எழுத்தாளன் உணர்ந்திருக்க வேண்டும்.





புதன், பிப்ரவரி 04, 2015

'ரத்தம் விற்பவனின் சரித்திரம்'



           ரும்பு திறை கொண்ட நாட்டிலிருந்து, ரத்த வாடை வீசும் நாவல் வருவதென்பது இயல்பானதொன்று என்று நீங்கள் நினைத்திருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். இது அடக்குமுறை கவுச்சி வீசும் ரத்த சரித்திரம் அல்ல, உண்மையாகவே பஞ்சம் பிழைக்க தனது ரத்தத்தை விற்கும் ஒரு சாமானிய சீனனின் கதை!.

1994களில் வெளிவந்து சர்வதேச கவனத்தைக் கவர்ந்த யூ ஹூவாவின் 'கிராணிக்கல் ஆஃப் ஏ பிளட் மெர்ச்சண்ட்' என்ற நாவல்தான் தற்போது ரத்தம் விற்பவனின் சரித்திரமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சீனாவின் மைய பகுதியில் கதை நிகழ்கிறது.  இதுகாரும் திறக்கப்படாத சீனா கம்யூனிச கதைவுகளை சற்றே நெம்பி, நமது கையை பிடித்து சீனாவின் உள் தேசத்திற்கு அழைத்துச் செல்கிறார் யூ ஹூவா.

இந்தியாவை போலவே ஆணாதிக்க குடும்ப சூழலை பிரதிபலிக்கும் சீனாவில், சதாரண சீனர்கள் வாழும் தெருக்களிலும், வீடுகளிலும், உள் முற்றங்களிலும், உள் அறைகளிலும், அடுக்களைக்குமாய் நம்மை நகர்த்தி செல்கிறது கதை. அன்றைய காலகட்டத்தில் ரத்தம் விற்பது என்பது சீனாவில் வாழும் ஏழைகளின் தொழிலாக இருந்தது. ரத்தம் விற்பது மூலமாக 35 யுவான்வரை கூலியாக தரப்பட்டது. இது ஆறு மாதங்கள் வயல்களில் விவசாயம் செய்தால் என்ன கிடைக்குமோ அதைவிட அதிகமானது.  வியற்வை சிந்தி கூலி பெறுவதும், ரத்தம் கொடுத்து பணம் பெறுவதும் ஒன்று போலவே கருதினர் அன்றைய சீனர்கள்.

மக்கள் தொகையில் உலகை மிஞ்சிவிட்ட ஒரு தேசத்தில் வறுமை என்பது வாசல்படி போன்றது.  பதற்றம் நிறைந்த மாவோ காலத்து சீனவின் குடும்ப வாழ்க்கையை முறையையும், இலகுவானதொரு அதினின்றும் சற்றே மாறுபாட்ட வாழ்வில கூறுகளையும் மிக நிதானமாக விவரிக்கிறார் யூ ஹூவா. வாழ்வின் படிமங்களையும் நுண்ணிய வாழ்வியல் முறைகளையும் மிக ஆனாயசமாக கடந்து  பயணிக்கிறது இன் நாவல்.

1960களில் பிறந்த  யூ ஹூவா  பிறந்தபோது நிலவிய கடும் பஞ்சம், லட்சக் கணக்கான சீனர்களை பலிகொண்டது. 1959ல் தொடங்கி மூன்றாண்டு  வரை பஞ்சம் நீடித்தது. அவரது மாணவப் பருவத்தில் சீனாவில் கலாச்சார புரட்சி நிகழ்ந்தது. இருபதாம் நூற்றாண்டில் சீனர்கள் சந்தித்த துன்பியல் வாழ்க்கை முறையை விஷமத்தனமான நகைச்சுவையோடு சொல்கிறது இன் நாவல். 

ரத்தம் கொடுக்கும் முன்னர், சிறுநீர் கழித்துவிட்டால் அது ரத்தமாக மாறாமல் சிறு நீராக வெளியே வீணாக போய்விடும்  என்பதால் ரத்தம் கொடுக்கும்வரை சிறு நீர் கழிக்காமல் இருப்பது போன்ற கிராமத்து அறியாமை இன் நாவல் முழுவதும் ஆங்காங்கே விரவிக் கிடக்கிறது. 303 பக்கம் கொண்ட இப் புகழ்பெற்ற நாவலை சந்தியா பதிப்பத்தினர் வெளியீட்டுள்ளனர். இன் நாவல் சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கிறது. இன் நாவலை எழுத்தாளர் யூமா வாசுகி மொழி பெயர்த்துள்ளார்.

யூ ஹூவா சீனாவின் மரபுகளை மீட்டெடுக்கும் ஒரு நம்பிக்கை நச்சத்திரமாக துளிர்த்து இருக்கிறார். கடந்த இருபது ஆண்டுகளில் மிகவும் பேசப்பட்ட, வாசகர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீனாவின் பத்து நூல்களில் யூ ஹூவாவின் "ரத்தம் விற்பவனின் சரித்திரம்" இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

மனித வாழ்வியலின் துயரங்களையும், தூசி படிந்த நினைவுகளையும் யார் சொன்னால் என்ன.....? எங்கிருந்து சொன்னால் என்ன.....? ரத்தம் விற்பவனின் சரித்திரம் சீன எல்லை கடந்து... இந்திய இதயத்தை தொட்டிருக்கிறது. படைப்பாளிக்கும் படிப்பவனுக்கும் பிரபஞ்சமே எல்லை.!.

-தோழன் மபா.

ஞாயிறு, ஜூலை 28, 2013

'உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்'. Book Review


'உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்'.
தொகுப்பு: கோபிநாத் மொகந்தி
தமிழாக்கம்: முனைவர் ஆனைவாரி ஆனந்தன்


பக்கம் : 208
விலை: ரூ.125/-
வெளியீடு: சாகித்திய அகாதெமி
'இரவீந்திர பவன்'
35, பெரோஸ்ஷா சாலை,
புதுதில்லி-110001.

        
   காடுகள் விலங்கினத்திற்கு மட்டும் சொந்தமில்லை. மனித குலத்திற்கும் சொந்தமானது. அங்கு மனிதர்களும் வாழ்கிறார்கள். ஒளிக்கதிர் ஊடுறுவும் காடுகளின் நிழல்களாக மனிதர்கள் இருக்கின்றனர். ஒற்றையடிப் பாதைகளின் ஊடே சரிவுகளில் முளைத்திருக்கும் குடில்களில் மலைக் பழங்குடிகளின்   ஜீவ மரண போராட்டங்கள், நாட்டுபுறத்து பெண்களின் சுய கொளரவம், சுதந்திரதிற்கு பிறகான கிராமப்புர வாழ்வியலில் வீசிய அரசியல் மாற்றங்கள் என்று 13 சிறுகதைகளை கொண்டது இத் தொகுப்பு.  ஒரிசாவில் கோராபுட் பகுதியில் மலை பழங்குடிகள்  வசிக்கும் காடுகளே இத் தொகுப்பின் கதைகலன்.


எறும்பு என்ற சிறுகதையில்  ஒரு அதிகாரி அரிசி கடத்தலை முற்றிலுமாய்  தடுக்கும் பொருட்டு மலைக் கிராமத்தில் பல நாட்கள் நடந்து அந்த சந்தைக்கு வருகிறான். துணைக்கு வினு என்ற உதவியாளனும், கூட நாலைந்து  மலைவாசி கோந்துகளும் வருகின்றனர்.  இத்தகைய நடவடிக்கை தனது எதிர்காலத்திற்கும் புரமோஷனுக்கும் பயன்படும் என்று நிலையில் மிகுந்த முனைப்புடன் செயல் ஆற்றத் துடிக்கிறான்.   வழி நெடுக  மலைசாதி மக்களின் வாழ்வியல் தடங்களை ஊடுறிச் செல்லும் அவனது கண்கள், அந்த பஞ்சடைந்த கண்களை கடந்து செல்ல முடியாமல் தவிக்கிறது. இலையில் அந்த வெண்மையான அரிசி சோற்றைத் தவிர வேரொன்றுமில்லை என்றான போது ஒரு அதிகாரியின் மன நிலையிலிருந்து விலகி  மனிதனாக தனியே நடக்கத்  துவங்குகின்றான்.


'உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்' எனும் இக்கதை தொகுப்பு The Bed of Arrows and other Stories என்னும் ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். கோபிநாத் மொகந்தியால்  ஒரிய மொழியில் எழுதப்பட்ட இச்சிறுகதைத் தொகுப்பு, சீத்தாகந்த் மகாபத்ராவின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து  ஆனைவாரி ஆனந்தன் அவர்களின் இனிய மொழி நடையில் தமிழ் இலக்கிய உலகிற்கு வந்துள்ளது. நாம் அதிகம் அறியப்படாத  ஒடிஷாவிலிருந்து இக் கதை தொகுப்பு வந்திருப்பது, அந்த மண்ணையும்  அந்த மனிதர்களையும் பற்றிய புதிய புரிதலை ஏற்படுத்துகிறது.

-தோழன் மபா.
() () () () () () ()


கடந்த திங்களன்று தினமணி நூல் அரங்கத்தில் நான் எழுதிய விமர்சனத்தின் எடிட் செய்யாத பகுதி.

செவ்வாய், மே 14, 2013

ஏமாறும் கலை (புத்தக விமர்சனம்)


நூலின் பெயர்      : ஏமாறும் கலை 
எழுத்தாளர்            : யுவன் சந்திரசேகர் 
பக்கம்                       : 240
வெளியீடு               : காலச்சுவடு 
                                      669 கே.பி.சாலை, 
                                      நாகர்கோவில், 629001.
விலை                     : ரூ.190/-


நவீன இலக்கியத்தில் புதிய கதை சொல்லியாக இருக்கிறார் யுவன் சந்திர சேகர். சும்மா 'பம்மாத்துப் பண்ணாமல் சக பயணி போன்றே நம்முடன் பயணிக்கிறது இச் சிறு கதை தொகுப்பு. மொத்தம் 12 சிறுகதைகள்.  கதை கதைகளுக்குள் கதை, அதில் மற்றொரு கதை என்று பல படிம வெரைட்டிகளை தந்து நீங்கள் கொடுத்த காசுக்கு மேலேயே உங்களுக்கு வாசிப்பனுவம் கிடைக்கிறது. 

சிறுகதை தொகுப்பு என்றாலும் ஒவ்வொரு கதையும் சிறு இழையில் தொடர்பு கொண்டே சொல்லப்படுகிறது.  அதனதன்  பிணைப்பை  மிக எளிதாக நமக்குள் கொண்டுவந்து விடுகிறார் கதையாசிரியர். 

 
 உதாரணமாக ஒரு கதை:   வங்கியில்தொடர்ந்து  பணம் கட்டவரும் பெண்மனி, தனது கணவருக்கு இரண்டு காலும் முடியாது, அவரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வந்திருக்கிறேன், என்று கேஷியரிடம்  சொல்லி  கீயுவில் நிற்காமல் பணம் கட்ட அனுமதி வாங்கிவிடுகிறார். அந்த வங்கியின் கேஷியரும்    பரிதாபப்பட்டு பர்மிஷன் தந்துவிடுகிறார். 
 
அப்படி இருக்க... ஒரு திருமண விருந்தில் அந்த பெண்மனியை கேஷியர் பார்க்க நேரிடுகிறது. கூடவே அவரது ஆஜானுபாகுவான கணவருடன். அவர் முழு காலுடன் நல்ல அரோக்கியத்துடன் இருக்கிறார். இதைப் பார்த்ததும் கேஷியருக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது.  அவர்கள் பார்வையில் படாமல் ஒதுங்கிக் கொள்ளும் அவர்
"சை...இந்த அம்மாள்  நம்மள இப்படி ஏமாத்திட்டாளே " எற்று குமைந்து போகிறார்.   நாளைக்கு வரட்டும் நாக்க பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேக்கிறேன்" என்று நினைத்துக் கொள்கிறார்.

இதை அவரது ரயில் சினேகிதரிடம் பகிர்ந்துக் கொள்ள, அவரோ ....'அந்த பெண்மனியிடம் எதுவும் கேட்காதிர்கள், அவர்கள் வந்தாலும் ஒன்னும் தெரியாத மாதிரியே சர்வீஸ் பன்னுங்க. விஷயம் தெரியாதது மாதிரியே நடந்துக்குங்க'. உங்களுக்கு விஷயம் தெரியும்ன்னு அவங்களுக்கு தெரியாதே? இப்ப ஏமாந்தது யாரு சொல்லுங்க ...?  என்கிறார். 

 'ஏமாறும் கலை'  தெரிந்தால் மட்டுமே இவ்வுலகில் ஏமாறாமல் தப்பிக்கலாம்?!.

 தினமணியில் நான் எழுதிய  புத்தக விமர்சனம். 13 மே 2013.  


 

இந்தியர்களுக்கு பிரியாணி தந்த பாரசீகம்

  அழகான ஈரான் தேசத்தவர்கள். படம்: கூகுள்.   க ருகரு கூந்தல், மீனை ஒற்றிய கண்கள், மிகையற்ற மார்பு, கையளவு இடை, வனப்பு பொருந்திய முகம், மை தீ...