எனது நினைவலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எனது நினைவலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, நவம்பர் 09, 2014

காஞ்சிபுரமும் மூத்திரச்சந்தும்?!.



முந்தைய பதிவை படிக்காதவர்களுக்கு..... 
             1997 மற்றும் 98ம் ஆண்டு வாக்கில், தமிழகத்தில் இருக்கும் பத்திரிகைகள் தீபாவளி மலருக்கு ஒரு கிலோ தங்கம், இரண்டு கிலோ வெள்ளி என்று அறிவித்து....பெரும் கல்லா கட்டிக்கொண்டு இருந்தனர். குலுக்கள் முறையில் தங்கம், வெள்ளி, மிக்சி, கிரைண்டர், பட்டுப்புடவைகள் என்று வாரி வழங்கி கொண்டு இருந்தது. அப்போது தினபூமிக்காக 300 பட்டுப்புடவை தரச் சம்மதித்து, தராமல் தலைமறைவாக இருந்த கடை ஓனரை கண்டுபிடித்த போது, அவர் ஒரு ரவுடிகளின் பிடியில் சிக்கி இருந்தார். அவரை அந்த சிக்கலில் இருந்து  காப்பாற்றினேன். அவர் எனக்கு பட்டுப்புடவைத் தராமல் மீண்டும் தலைமறைவாக, அவரை எப்படி கண்டுபிடித்தேன் என்பதுதான் இந்தப் பதிவு.

முந்தைய பதிவை விரிவாகப் படிக்க இங்கே சொடுக்கவும். (தீபாவளி மலர் வாங்கினால் ஒரு கிலோ தங்கம் இலவசம்?! ) 

                   வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறியிருந்தது. பட்டுப்புடவை கடை ஓனர் சுரேஷ் மீண்டும் எங்கோ அப்ஸ்காண்டாகிவிட்டார். வீடும் கடையும் பூட்டி இருந்ததால், பிரச்சனை மீண்டும் என்னை புடனியில் தாக்கியது. மறுபடியும் எங்கிருந்து துவங்குவது என்று தெரியவில்லை. டிவியில் அறிவித்தப்படி புடவை தரவில்லை என்றால், வாசகர்கள் நம் மீது நுகர்வோர் நீதி மன்றத்திற்கு போகக்கூடும். அதனால் பத்திரிகைக்கு  பெரும் பிரச்சனைகள் உருவாகலாம் என்று எனக்கு பலமான நெருக்கடி அலுவலகத்தில் தரப்பட்டது. மேனேஜர் ஒரு படி போய், என்னை விரோதியாக பார்க்க ஆரம்பித்திருந்தார். தினமும் எனக்கும் அவருக்கும் வாய்க்கால் தகராறு ஓடிக்கொண்டு இருந்தது. என்னைப் போட்டுப் பார்க்க அவர் நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் பாக்கி இருந்தது. எங்கும் தீபாவளி களைகட்டத் தொடங்கி இருந்தது.

அலைந்து திரிந்து ஒரு வழியாக கடை மேனேஜர் ராமச்சந்திரன் வீட்டை கண்டுப் பிடித்துவிட்டேன்.  அவரது வீடும் அதே வடபழனி குமரன் காலனியில், 100 அடி ரோட்டை ஒட்டி இருந்த சந்தில் இருந்தது.  காலையில் சென்று அவரது வீட்டின் கதவை தட்டினேன். அவரே திறந்தார். என்னைப் பார்த்ததும் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. "ஸார், ஓனர் ஊர்ல இல்லை, சூரத் வரைக்கும் போயிருக்காரு. நீங்க இன்னும் இரண்டு நாள் கழிச்சி கடைக்கு வாங்க, கடையை நாளைக்கு திறந்துவிடுவோம்" என்றார்.

எனக்கு தலை சுற்றியது!. "என்ன சார், இப்படி பண்றீங்க, நான் பிரச்சனையில் மாட்டி இருக்கேன், நீங்க என்னாடான்னா, சர்வசாதாரணமாக இரண்டு நாள் கழித்து வாங்க நாலு நாளு கழிச்சு வாங்கன்னு கூலா சொல்றீங்க?" என்றேன் கோபத்தில்.

"நான் என்ன சார் பண்ணட்டும், அவரு இங்க வர்ரதேயில்லை, வந்தாதானே சொல்ல முடியும். தீபாவளி அதுவுமா கடையை மூடி வச்சிருக்கோமே, உங்களுக்கு அது தெரியலையா?" என்றார் அவரும் விடாப்பிடியாக.

இனியும் வள வளன்னு பேசிக்கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை என்பது புரிந்தது. நேரிடையாக விஷயத்திற்கு வந்தேன். "சார், நீங்க சொல்லியபடி 300 பட்டுபுடவை கொடுக்கவில்லை என்றால், பிரச்சனையை நீங்கதான் சந்திக்கனும். பத்திரிகையிடம் வச்சிக்கிட்டிங்கன்னா பிரச்சனை உங்களுக்குதான். தேவையில்லாம பிரச்சனையை இழுத்துவிட்டுக்காதிங்க. இல்லெனா போலீஸ்ல புகார் கொடுக்கிறாப்பல ஆயிடும். சாதாரனமா நினைக்காதீங்க. உங்க ஓனரை எவ்வளவு பெரிய இக்கட்டுலேருந்து காப்பாத்திருக்கேன், கடைசில என்ன இக்கட்டுல மாட்டிவிடுவீங்க போலயிருக்கு" என்று சத்தம்போட்டேன்.

"வாங்க ஓனருட்ட பேசலாம், அவருட்ட போன போடுங்க, நான் பேசுறேன்" என்றேன். ஓனர் நம்பர் இல்லென்னு முதலில் மறுத்தவர், பிறகு கொடுத்த நெருக்கடிக்கு பேச ஓப்புக்கொண்டார். எஸ்டிடி பூத்திற்கு போனோம். அப்பெல்லாம் மொபையில் போன் ஏது....?!.

"நீங்க வெளியில இருங்க" என்று சொல்லியவர் பூத்திற்குள் புகுந்துக் கொண்டு கதவை சத்திக்கொண்டார். நம்ப நல்ல நேரம் கதவை சரியாக மூட முடியவில்லை. கதவு கொஞ்சம் திறந்து இருக்க.... என்னதான் பேசுகிறார் என்று சைடில் நின்று (ஒட்டு) கேட்டுக்கொண்டு இருந்தேன். மேனேஜர் பேசிக்கொண்டு இருந்தார். நான் தொடர்ந்து வந்து டார்ச்சர் செய்வதை கூறிக் கொண்டு இருந்தார். "அண்ணே காஞ்சிபுரத்தில.....அந்த மூத்திர சந்து பக்கத்திலதான இருக்கிங்க?" என்ற வார்த்தை மட்டும் எனக்கு பளிச்சென்று கேட்டது. 'ஆகா...துப்பு கிடைத்துவிட்டது!, இனியும் இந்த மேனஜரை தப்ப விடக்கூடாது' என்று நினைத்துக் கொண்டேன்.

சிலபேர் சாப்பிட்டபின் எதுவும் சாப்பிடாதமாதிரி, வாயை வைத்துக் கொண்டு வருவார்களே பார்த்து இருக்கிறீர்களா....? அப்படிதான் வந்தார் அந்த மேனஜரும். "சார், ஓனருட்ட பேசிட்டேன், அவரு சூரத்தில இருக்காரு, வந்ததும் புடவையை கொடுத்திடுறேன்" என்றார்.

 எப்படி இப்படி முழு பூசணிக்காயை இந்த ஆளு சோற்றில் மறைக்கிறானே என்று எனக்கு கோபம் தலைக்கு மேலே ஏறியது.  "ஹலோ...உங்க ஓனர் காஞ்சிபுரத்திலதான இருக்காரு, எனக்கு தெரியும். எதுக்கு இப்படி இல்லெனு பொய் சொல்றீங்க" என்று கத்த ஆரம்பித்தேன். "வாங்க காஞ்சிபுரம் போவோம்" என்று கூறிக்கொண்டு, அவரது பதிலையும் எதிர்ப்பார்க்கமல், அருகில் போன ஆட்டோவை கூப்பிட்டேன். அவரை ஆட்டோவில் அள்ளிப் போட்டுக் கொண்டு பூந்தமல்லி வந்து காஞ்சிபுரம் பஸ் பிடித்தோம்.  ஓனர் காஞ்சிபுரத்தில்தான் இருக்காரு என்று எனக்கு தெரிந்துவிட்டது. இனியும் தாமதித்தால் நிலமை மோசமாகிவிடும், காஞ்சிபுரம் போனால், பட்டுபுடவைக்கு வழி பிறக்கும் என்று எனக்குப் பட்டது.

ஓவர் டூ காஞ்சி......!.
()()()()()()()



        காஞ்சிபுரத்தில் நாங்கள் இறங்கிய போது, மதியம் ஆகிவிட்டது. ஆட்டோவில் பயணித்து மார்க்கெட் பக்கம் வந்தோம். அங்கேதான் கடை ஓனர் வீடு இருந்தது. இதற்கிடையில் பசிக்குது சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று நச்சரித்துக் கொண்டே வந்தார் மேனேஜர். எனக்கு பசியில்லை என்று சொல்லிப் பார்த்தும் விடவில்லை. பின்பு மார்க்கெட் பக்கத்தில் இருந்த ஹோட்டலைக் காட்டி இங்கே சாப்பிடலாம் என்றார். நுழைந்து அமர்ந்ததும், அவரே இரண்டு மீல்ஸ் ஆர்டர் செய்தார். பாதி சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே, இலையை மூடிவிட்டு, "சார் சாப்பிட்டுக் கொண்டே இருங்கள், இதோ வந்துவிடுகிறேன்" என்று கூறிவிட்டு எழுந்து அவசர அவசரமாக சென்றுவிட்டார்,

எதுக்கு இந்த ஆள் இப்படி அவசரமாக ஓடுறான்? என்று நினைத்துக் கொண்டே நானும் சாப்பாட்டை பாதியில் மூடிவிட்டு, ஹோட்டலுக்கு வெளியே வந்தேன்,  ஆனால் ஆளை காணவில்லை... சாலை இரு மருங்கிலும் ஆளை காணவில்லை 'எங்கடா போனான் இந்த ஆளு?' என்று நினைத்துகொண்டு.....சுற்றும் முற்றும் பார்த்தேன்.  அப்போதுதான் அந்த க்ளு கிடைத்தது!.  ஹோட்டலுக்கு பக்கத்தில் நடந்தவன், அதை ஒட்டி காம்பவுண்டுக்குப் பக்கத்தில் யாரும் பயன்படுத்தாத மூத்திர சந்து ஒன்று இருந்தது. அதைப் பார்த்த போது.....போனில் மேனேஜர் பேசிய போது குறிப்பிட்ட அதே மூத்திரச் சந்து இதுதான் என்று எனக்குள் பொறி தட்டியது!.

யாரும் பயன்படுத்தாத சந்து என்பதால் அது பொது கழிப்பிடமாக மாறிவிட்டு இருந்தது. சந்தில் புல் பூண்டு முளைத்து ஒற்றையடிப் பாதையாக மாறியிருந்தது. முகப்பில் ஒரு சிதிலமடைந்த ஓட்டு வீடு வேற பெரும் திகிலை கிளப்பியது. சந்தேகத்தோடு அந்தச் சந்தில் நடக்க ஆரம்பித்தேன். அதை என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். இல்லையென்றால் அது நிகழ்ந்திருக்காது. நானும் கொஞ்சம் தூரம் நடந்து சென்றுவிட்டு, திரும்பி ஹோட்டல் வாசலில் மேனேஜருக்காக காத்துக் கொண்டு இருந்திருப்பேன். சந்தில் இரண்டு தப்படி நடந்து இருப்பேனே இல்லையோ.....அந்த சிதிலமடைந்த வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி, ஒரு ஓட்டு வீடு வராந்தாவில் அமர்ந்திருந்த உருவம் தலையை வெளியே நீட்டி வாயிலில் இருந்த தண்ணிரை கொப்பளித்து வெளியே துப்பியது. அது வேறு யாரும் இல்லை, நான் யாரை தேடி வந்தேனே, யார் சூரத் போயிருக்கிறார் என்று கூறினார்களோ அவரேதான்.....ஓனர் சுரேஷேதான் அங்கு அமர்ந்திருந்தார். கூட நாளைந்து நண்பர்களும் இருந்தார்கள். கடன்காரர்களுக்குப் பயந்து உள்ளூரிலேயே ஒளிந்துக் கொண்டு இருந்தார். ஜன நடமாட்டம் உள்ளப் பகுதியில் அப்படி ஒரு சந்தை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்?.

நான் எதிரில் போய் நிற்கவும், ஒரு கணம் அவர் ஆடிப் போய்விட்டார். என்னை அவர் எதிர்பார்க்கவில்லை.  இந்த நேரத்தில் இந்த இடத்தில் நம்மை பார்த்தால் யாருக்குதான் அதிர்ச்சி இருக்காது?. அதிர்ச்சி மேலிட..... "வா.....மகேஸூ" என்று அழைத்தவர், "எப்படி இந்த இடத்தை கண்டு பிடிச்ச....? இந்தப் பக்கம் யாரும் வரமாட்டாங்களே....?" என்றார் முகம் சிவக்க. நான் கண்டுபிடிச்ச விபரத்தை சொன்னதும், எதிரில் இஞ்சி திண்ண குரங்காய் உட்கார்ந்து இருந்த மேனேஜரை கடிந்துக் கொண்டார்.

"சார் உங்கள சாப்பிட்டுக்கிட்டுதானே இருக்கச் சொன்னேன், எதுக்கு இப்படி இடத்த தேடி வந்தீங்க?. என்று என் மேல் எகிற அராம்பித்தார் மேனேஜர். "அட, சும்மா இருய்யா.....அவருதான் வந்துட்டாரே அப்புரம் எதுக்கு கத்துற?" என்று கூறிய ஓனர் புல் மப்பில் இருந்தார். "சார், என்ன சார் இப்படி தவிக்க விட்டுடீங்க? நான் பெரிய இக்கட்டுல மாட்டிக்கிட்டு இருக்கேன். நீங்க இப்ப பட்டுப் புடவை குடுக்கலனா, பிரச்சனைதான் சார் அதிகமாகும். அதுக்கப்புறம் என்னை எதுவும் கேட்காதீங்க" என்று சத்தம் போட்டேன். ஆத்திரத்தில் பொறிந்து தள்ளினேன்.

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஓனர், "மகேஸூ கவலைப்படாத நீ மெட்றாஸூக்கு போறப்ப பட்டுப்புடவையோடத்தான் பேவே....போதுமா?. நீ என்னை காப்பாத்திருக்க......அதுவுமில்லாமல் இவ்வளவு தூரம் என்னை தேடி வேற வந்திட்ட......உனக்கு 200 பட்டுப்புடவை ஏற்பாடு பண்ணித்தரேன். மீதி இன்னும் இரண்டு நாளைக்குள்ள உனக்கு மெட்றாஸிலேயே கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிடுறேன் " என்றவர் அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவரது நண்பர் மாரிமுத்து என்பவரிடம் "மாரி....நீ சொசைட்டி குமாரை போய்ப் பார்த்து பட்டுப்புடவை வாங்கியா....இந்தா" என்று தனது பையில் இருந்து நூறு ரூபாய் நோட்டு கட்டை ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.

"மகேஸூ..... பட்டுப்புடவை வர ஈவினிங் ஆயிடும், அதுவரைக்கும் வா ஒரு பெக் போடு" என்றார். நான் யோசிப்பதைப் பார்த்து, "என்ன யோசிக்கிற......தண்ணி வாங்கிக் கொடுத்து உன்னை கவிழ்த்திடுவேன்னு நினைக்கிறியா...?. நீ தண்ணி அடிச்சாதான் உனக்கு சரக்கு (பட்டுப்புடவை) கொடுப்பேன். இல்லென உனக்கு பட்டுப்புடவை கிடையாது". என்றார் சிரித்திக் கொண்டு.... "வேணம் சார், ஆபிஸ் வேலையா வந்திருக்கேன், இப்போ போய் தண்ணி அடிச்சிகிட்டு இருந்தா, நல்லா இருக்காது. நான் இன்னோரு நாளைக்கு வரேன்" என்றேன். எனக்கு  வேலை முடிந்தால் போதும் என்றிருந்தது. ஆனால் அவர் விடுவதாக இல்லை.

 இருங்க.... 'ஆபிஸ்க்கு ஒரு போன் போட்டு வர்றேன்". என்று வெளியே கிளம்பி ஆபிஸ்க்கு போன் செய்தேன். மேனேஜர் விஜயன் சாரிடம் நடந்தவற்றை கூறி, இருக்கும் இடத்தையும் கூறி, ஈவினிங்குதான் சார் புடவை கிடைக்கும் என்று தகவலையும் தெரிவித்தேன். அவரும் ஒரு நிம்மதி பெருமூச்சுவிட்டார். "பத்திரமாக எடுத்துகிட்டு வா" என்றார்.

எதுக்கு இருக்கும் இடத்தைக் கூறினேன் என்றால், எதாவது பிரச்சனை என்றால் நாம் இருக்கும் இடம் ஆபிஸூக்கு தெரிய வேண்டு என்பதற்காகத்தான். நான் திரும்பி போனபோது, ஒரு புல் பாட்டிலும் சிக்கன், மட்டன் முட்டை என்று அடிக்கி வைத்திருந்தார். எல்லாம் அவரது நணபர் வீட்டில் இருந்து வந்திருந்தது. நான் செய்த உதவியை அவரது நண்பர்களிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனார்.  இப்படியாக தொடங்கிய பார்ட்டி.....மாலை வரை தொடர்ந்தது. பார்ட்டி முடியவும், பட்டுப்புடவை வருவதற்கும் சரியாக இருந்தது.

பட்டுப் புடவையைப் பார்த்ததும்தான் எனக்கு உயிர் வந்தது. எத்தனை நாள் போராட்டம். தீபாவளி நெருங்க இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் பட்டுப் புடவை கிடைத்தது பெரிய விஷயம். கிடைக்காமல் போயிருந்தால், எனக்கு நிச்சயம் கெட்டப் பெயர் கிடைத்திருக்கும். பத்திரிகைக்கும் கெட்டப் பெயர் கிடைத்திருக்கும். வாசகர்களுக்கு அறிவித்த பரிசுப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இப்படி மறைமுகமாக எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு செயல்களுக்கு பின்னரும் ஒரு கதை இருக்கும். ஒவ்வொரு கதைக்கும் பின்னரும் ஒரு செயல் இருக்கும். என்னைப் போன்ற மார்கெட்டிங் மனிதர்களின் வாழ்வு என்பது,  எப்போதும் பரப்பரப்பாகவே இருக்கும். தான் வாழ வேண்டும் என்பதற்காகவே, பிறருக்காக வாழக் கூடியவர்கள் இவர்கள். இலக்குகள் நிர்ணயக்கப்பட்ட பெரிய குக்கர்களில் வேகக் கூடிய பருப்புகள் இவர்கள் என்றால் அது மிகையல்ல?!.
 
சரி, போகட்டும். கதையை முடிக்க வருவோம்.

இரண்டு பெரிய அட்டைப் பெட்டிகளில் வந்திரங்கிய பட்டுப்புடவையை எடுத்துக் கொண்டு, காஞ்சிபுரத்தில் பஸ் பிடித்து,  சென்னை எல்ஐசி பஸ் ஸ்டாப்பில் வந்திறங்கிய போது மணி இரவு பனிரெண்டு ஆகிவிட்டிருந்தது.  பேருந்து நிலையம் அப்போது பாரிஸ் கார்னரில் இருந்தது. கோயம்பேடுக்கு வரவில்லை. பட்டுப்புடவையை அலுவலகத்தில் இறக்கிவிட்டு, எடிட்டோரியல் பக்கம் தலையை காட்டிவிட்டு,  18K பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தபோது....பொழுது விடிய இன்னும் கொஞ்ச நேரமே இருந்தது.

()()()()()()()

வெள்ளி, அக்டோபர் 24, 2014

தீபாவளி மலர் வாங்கினால் ஒரு கிலோ தங்கம் இலவசம்?!




             1997 அல்லது 1998ம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்பொழுதெல்லாம் நாளிதழ்கள் தங்களது தீபாவளி மலரோடு கை நிறைய பை நிறைய பரிசுப் பொருட்களை கொடுப்பது வழக்கம். ஒரு கிலோ தங்கம், இரண்டு கிலோ வெள்ளி, பைக், பிரிஜ், கிரைண்டர், கட்டில், பீரோ, பட்டுப் புடவைகள் என்று ஏகத்தும் பரிசுப் பொருட்களை வாரி வாரி வழங்கி, தீபாவளி மலர்களை கூவி கூவி விற்பார்கள். சந்தையில் தினகரன், தினமலர், தினபூமி என்று பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு தீபாவளி மலரை விற்பனை செய்வார்கள். இதில் தினபூமியின் கையே ஓங்கி இருந்தது.

தீபாவளி மலர்களை படிக்க வாங்குகிறார்களோ இல்லையோ, இந்த பரிசுப் பொருட்களுக்காகவே வீட்டுக் வீடு ஐந்து பத்து என்று வாங்குவார்கள். ஒரு கிலோ தங்கம் இரண்டு கிலோ வெள்ளி என்று பரிசுப் பொருட்களை அறிவித்தால், பாவம் மக்கள்தான் என்ன செய்வார்கள்?!.  தங்கள் அதிஷ்டத்தை சோதித்துப் பார்க்க தீபாவளி மலர் கூப்பனாக வாங்கி குவிப்பார்கள்.

குலுக்களில் பரிசுப் பொருட்கள் மட்டும் இல்லாமல், தீபாவளி மலர் புத்தகத்தோடு சோப்பு, ஷாம்பு, டால்கம் பவுடர், விபூதி பாக்கெட், பத்தி பாக்கெட், சாம்பிரானி பாக்கெட், பிஸ்கட், சாக்லெட், காபித்தூள் என்று பை நிறைய பரிசுப் பொருட்களோடு தீபாவளி மலர் உங்கள் வீடு தேடி வரும்.

இதில் ஆர்வம் முத்தி போய் ஒரு வார இதழ் அரிசி மூட்டை தருகிறோம்  என்றேல்லாம் அறிவித்தது. பின்னர் விஜயன் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கொன்றில், இத்தகைய திட்டத்திற்கு முற்று புள்ளி வைத்தது நீதி மன்றம்.

""வாங்கி விட்டீர்களா தீபாவளி மலர்" என்று தீபாவளி மலருக்காக முழ நீளத்திற்கு டிவியில் விளம்பரங்கள் வரும். 50,60வது ஸ்பான்ஸர் பெயர்களை வாசித்து முடிக்கவே பொழுது போய்விடும். டிவியில் வரும் தினபூமி தீபாவளி மலர் விளம்பரத்திற்கு அனுராதா மேடம்தான் வாய்ஸ் தருவார். தி.நகர் ராஜாபாதர் தெருவில் இருக்கும் ராகவேந்திரா ஸ்டூடியோவில்தான் அனைத்துவிதமான ஒலிப்பதிவுகள் நடைபெறும்.  கேசட்டுகளை டிவி சேனல்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டிருந்தது.

அப்போது நான் தினபூமி பத்திரிகையில் இருந்தேன். நண்பன் ராஜசேகரனும் இருந்தான். இருவரும் அட்வர்டைசிங் ரெப்ரசண்டேட்டிவாக  வேலையை ஆத்து ஆத்துன்னு ஆத்திகிட்டு இருந்தோம். நாங்கள் சேர்ந்து சுற்றிய நாட்களை மறக்க முடியாது.  இப்போ மாப்ள குமுதத்தில் இருக்கிறான், நான் இண்டியன் எக்ஸ்பிரஸில் இருக்கிறேன்.

ஒவ்வொரு விளம்பர பிரதிநிதிக்கும் டார்கெட் உண்டு.  பரிசுப் பொருட்களை நாங்கள்தான் வாங்க வேண்டும். அந்த நிறுவனத்தோடு பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களது பொருட்களை வாங்கி இந்த குலுக்களில் சேர்க்க வேண்டும். இதுதான் எங்கள் வேலை. அதற்குப் பதிலாக அந்த நிறுவனத்தின் விளம்பரங்களை டிவி மற்றும் தினபூமி பத்திரிகையில் வெளியீட வேண்டும்.

அப்படிதான் ஒரு பட்டுப் புடவைக் கடையைப் பிடித்தேன். சென்னை புரசைவாக்கத்தில் அப்போதுதான் அவர்கள் புதிதாக  அருள் ஜெயந்தி சில்க்ஸ்  (கடை பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடையை திறந்து இருந்தனர். அதுநாள் வரையில் ஊர் ஊராக சென்று கண்காட்சி மூலம் விற்பனை செய்தவர்கள், ஒரே இடத்தில் இருந்து விற்பனை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கடையை தொடங்கியிருந்தனர்.

கடை உரிமையாளர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நண்பராகிவிட...தினபூமி தீபாவளி மலருக்கு 300 பட்டுப் புடவைகள் வழங்க சம்மதித்தார். கேமிராவோடு சென்று அவரது கடையை ஷூட் செய்து, "காஞ்சிபுரம் அருள் ஜெயந்தி சில்க்ஸ் வழங்கும் 300 பட்டுப்புடவைகள்" என்று அனுராதா மேடம் குரலில் விளம்பரமும் வரத்தொடங்கிகிவிட்டது. பரிசுப் பட்டியலில் காஞ்சிபுரம் அருள் ஜெயந்தி சில்க்ஸூம்  சேர்ந்துவிட்டது.

----------

தீபாவளி நெருங்கிக் கொண்டு இருந்தது.....

                  ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே புரசைவாக்கம் கடைக்கு நடையாய் நடந்துக் கொண்டு இருந்தேன். எப்போது போனாலும் "ஓனர் இல்லை, வெளியூருக்கு போயிருக்கிறார். அப்புறமா வாங்க" என்ற பதிலே வந்தது.  ஆபிஸில் வேற பதில் சொல்ல முடியவில்லை. மற்ற பொருட்கள் எல்லாம் அலுவலகத்திற்கு லாரியில் வந்துக் கொண்டு இருக்க.... நம்ம பட்டுப் புடவை மட்டும் வரும் வழியே காணும். கடையில் இருந்த மேனேஜர் ராமச்சந்திரன்  "ஓனர் வந்தாதான் சார், பட்டுப் புடவைக்கு வழி; அவர் வராம நான் எதுவும் சொல்ல முடியாது. நீங்க இரண்டு நாள் கழித்து வாங்க, அவர் வந்தா நான் உங்களுக்கு போன் பண்றேன்." என்றார். நான் போகும் போதெல்லாம் இதே பதிலையே ஸ்டீரியோ டைப்பாய் கூறிக்கொண்டு இருந்தார்.

நாட்கள் வினாடிகளாய் ஓடிக் கொண்டு இருந்தது.......இன்னும் ஓனர் சூரேஷ் வந்தபாடில்லை. இனியும் மேனேஜரை நம்பியிருந்தால் வேலைக்காது என்று நானே அவரது கடை பையன் ஒருவன் மூலம் சுரேஷின் வீட்டு அட்ரஸை கண்டுபிடித்தேன். . வடபழனி குமரன் காலனியில் ரூம் எடுத்து தங்கி இருந்தார். மதியம் போனால் வீடு பூட்டி இருந்தது. பக்கத்தில் இருந்த கடைக்காரர் "சார், காலையில வந்தா பாக்கலாம்" என்றார்.

காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு போனால், வீட்டில் துண்டைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து இருந்தார் சுரேஷ். சுற்றியும் தடி தடியாய் ஒரு பத்து பேர் அவரை சுற்றி உட்கார்ந்திருந்தனர். "வா.... மகேஸூ" என்று வரவேற்ற அவரது முகம் வெளிறிக் கிடந்தது. "சார்....பட்டுப்புடவை" என்று நான் ஆரம்பிக்கவும் அந்த கும்பலில் இருந்த ஒருவன் "நீ  யாரு? முதல்ல வெளியில போ..." என்று கத்த ஆரம்பித்தான். "நான் பத்திரிகையில இருந்து வர்றேன்" என்றதும். சுரேஷே முந்திக்கொண்டு "மகேஸூ நீ வெளியில வெயிட் பண்ணு என்றார்"

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. சிறிது நேரம் கழித்து சுரேஷே வெளியில் வந்தார். கூடவே ஒரு தடியனும் வெளியில் வந்தான். "மகேஸூ நீ போயி வளசரவக்கம் சிக்னல்ட்ட இருக்கிற சைக்கிள் கடையில போய் பட்டுப் புடவை வாங்கிக்க" என்று கூறிகொண்டே மின்னல் வேகத்தில் எனது தொடையைத் தட்டி,  ஒரு துண்டு பேப்பரை எனது பேண்ட் பாக்கெட்டில் திணித்தார்.  "சீக்கிரம் போ, அங்க போனா உனக்கு புடவை கிடைக்கும். நான் முன்னாடியே சொல்லிவச்சிட்டேன்." என்றார்.  எப்படி சைக்கிள் கடையில பட்டுப்புடவை  கிடைக்கும்.   எனக்கு ஒன்றும் புரியவில்லை.

குழம்பிக்கொண்டே கீழயிறங்கி டிவிஸ் சேம்ப்பை ஸ்டார்ட் செய்து, இரண்டு தெரு தள்ளி நிறுத்தி பேண்ட் பாக்கெட்டில் இருந்த துண்டு காகிதத்தை பிரித்துப் பார்த்தேன். அதில் வட சென்னை அரசியல் பிரமுகர் ஒருவர் பெயரை குறிப்பிட்டு, அவரது ஆட்கள் என்னைக் கடத்தி வைத்திருக்கிறார்கள். உடனே சென்று வளசரவாக்கம் ராஜாராமனிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) விஷயத்தை சொல்லி என்னை காப்பாத்து' என்று கோணல் மாணலாய் எழுதி இருந்தார். அப்போதுதான் விஷயத்தின் விபரீதம் புரிந்தது.

சரியாக வளசரவாக்கம் சிக்னல் அருகிலேயே அந்தக் கடை இருந்தது. போய் விஷயத்தை கூறியதும் பதறிவிட்டார்கள். நல்ல வேளை கடை ஓனரின் தம்பியும் அங்கிருந்தார். உடனே மூன்று டாடா சூமோக்களில் ஆட்களை நிரம்பிக் கொண்டு கிளம்பி விட்டார்கள். "தம்பி, நீங்க அந்தப் பக்கம் வராதீங்க. அப்படியே போரூர் பக்கம் போயிடுங்க. நீங்கதான் சொல்லி இருப்பீங்கன்னு உங்களைப் பார்த்தா கண்டு பிடிச்சிடுவாங்க" என்றார் வளசை ராஜாராமன். (கடத்துனவரும் இவரும்  ஒரே கட்சி)

அப்படியே போரூர் பக்கம்  வண்டியை திருப்பி விடு...  ஜூட்....!!!

அப்ப பட்டுப்புடவை.....?
-------

               ரண்டு நாள் கழித்து இராமச்சந்திரன் போன் செய்திருந்தார். "சார், சார் உங்கள பாக்கனுமா. வடபழனி  சேலம் ஆர் ஆர் ஹோட்டலுக்கு வரச்சொன்னார். என்றார். போயிருந்தேன். பார்த்ததும் கட்டிப் பிடித்துக் கொண்டார். "என் உயிர காப்பாத்தின மகேஸூ, நீ வரல்லனா நான் மாடியிலேருந்து குதிச்சி இருப்பேன். சேலம் செட்டியார்ட்ட வாங்கின கடன் 10 லட்சத்த திருப்பித் தரமுடியல. அதான் அவரு ஆள வச்ச என்ன தூக்க பாத்தாரு. நல்ல வேளை நீ வந்த நான் தப்பிச்சேன்.  வயிறு வலிக்குதுன்னு சொல்லி பாத்ரூம்ல போயி அந்த பேப்பர்ல எழுதினேன்".

இல்லெனா இவ்வளவு நேரம் என்ன நடந்து இருக்கும்ன்னே தெரியாது. அப்புரம் ஆளுங்கள வச்சி பஞ்சாயத்துப் பேசி ஒரு வழியா பிரச்சனையை முடிச்சாச்சிப்பா.   மகேஸூ உன் கல்யாணதுக்கு நம்ம கடை பட்டு புடவைதான்" என்றார்.

"அதெல்லாம் இருக்கட்டும்ண்ணே, எனக்கு பட்டுப் புடவையை குடுங்க. தீபாவளி நெருங்கிகிட்டு இருக்கு. ஆபீஸ்ல தலை காட்ட முடியால. பிரச்சனை பெருசா ஆகும்போல இருக்கு, அதனால பேசினபடி பட்டுப்புடவையை கொடுங்க என்றேன் விடாப்பிடியாக.

"எனக்கு ஒரு வாரம் டைம் கொடு, பட்டுப் புடவையை ரெடி பண்ணி கொடுத்திடுறேன். ஏவாரத்தில பயங்கர நஷ்டம். தலை போற பிரச்சனை எனக்கு நிறைய இருக்கு. வர்ற வாரத்தில பட்டுப்புடவை ஒன்ட்ட இருக்கும்" என்றார்.

குறிப்பிட்ட அந்த வாரமும் வந்தது.....

 பார்த்தா கடையும் பூட்டி இருக்கு, அவரது ரூமும் பூட்டி இருக்கு. ஆளூ.... மறுபடியும் எஸ்கேப்!.

அப்ப பட்டுப்புடவை.......??????

அது ஒரு பெரிய கதை. காத்திருக்கவும்!.
-------------

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...