கோமல் சுவாமிநாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோமல் சுவாமிநாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், அக்டோபர் 28, 2013

கோமல் சுவாமிநாதன் என்றோரு நீர்கோடு!



மாயவரம் பஸ்ஸாண்டில் உள்ள புத்தகக் கடையில், சொல்லி வைத்தால்தான் 'சுபமங்களா' கிடைக்கும். கல்லூரி காலங்களில் ஏதோ ஒன்றை தேடியலைந்த போது, நவீன இலக்கியங்களை எனக்குள் அறிமுகம் செய்துவைத்தது சுபமங்களாதான்.

எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது அச் சிற்றிதழ்.  அதன் இலக்கிய ரசனைக்காக சிற்றிதழ்  என்கிறேனே தவிர அது சிற்றிதழ் கிடையாது. மிகப் பெரிய சைஸில் வரக் கூடிய இதழ். ஸ்ரீராம் சிட்ஸ் நிதி பங்களிப்பில் வெளிவந்தது. அது வெகு ஜன பத்திரிகை இல்லையென்றாலும் 90களில் நவீன இலக்கியத்தை இளைஞர்களிடையே கொண்டு சொன்ற பெருமை சுபமங்களாவையே சேரும்.

எஸ் வைதீஸ்வரன், அசோகமித்திரன்,அம்பை,ந.பி., க.நா.சு., ப.முருகன் என்று பெரும் இலக்கிய கர்த்தாக்கள், மொழிபெயர்ப்பு இலக்கியம், 'நேர்காணல்' என்ற சொல்லாடல், கோவி.ஆனந்தின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் என்று இந்த கழுதைக்கு கற்பூர வாசத்தை காட்டியது சுபமங்களாதான். 
 
 
இத்தகைய அரும் பணிக்கு பின்னால் ஒரு பெரிய மனிதர் இருக்கிறார். அவர் கோமல் சுவாமிநாதன்.  சுபமங்களா என்றால் கோமல்தான் நினைவுக்கு வருவார். அந்தளவிற்கு ஒரு 'நீர்கோடாய்' சுபமங்களாவில் விரவியிருந்தவர். எழுத்து, நாடகம், சினிமா என்று எங்கும் எப்போதும் பேசப்பட்ட ஒரு மனிதர் கோமல் சுவாமிநாதன். எங்கலூர் திருவாலங்காட்டிலிருந்து அப்படியே திருவாவடுதுறை, மேக்கிரிமங்களம், ஆனாங்கூர், தேரழந்தூர என்று பின்பக்கமாய் சென்றால் கோமல் என்ற ஊர்  வந்துவிடும். தனது சொந்த ஊரின் பெயரையே  தனது பெயருக்கு முன்னால் வைத்து ஊருக்கு பெருமைச் சேர்த்தவர் கோமல் சுவாமிநாதன்.

இவரது 'தண்ணீர் தண்ணீர்' நாடகம் கம் சினிமா, இன்றும் நமக்குள் கண்ணீரை வரவழைத்துவிடும்.  இன்றளவுக்கும் அது பேசப்படக் கூடிய ஒரு படைப்பாகவே இருக்கிறது.  ஒரு படைப்பாளியின் வெற்றியே அதுதான். நாடகம், சினிமா, கதைகள் என்று தனது இலக்கிய ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திய மனிதர் அவர்.  நாடக உலகில் அவர் விட்டுச் சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது. நாடக உலகில் மட்டுமல்ல இலக்கிய உலகிலும் அவரது இடம் அப்படியேதான் இருக்கிறது எனலாம்.

 கோமலின் நாடகங்கள் பலவற்றை மேடையேற்றும் நல்லதொரு பணியை,  அவரது மகள் லலிதா தாரணி செய்துக்கொண்டு இருக்கிறார்.

வாழ்ந்து  மறைந்தாலும் பலர் மனதில், இன்றும் நிறைந்து வாழ்கிறார் கோமல் சுவாமிநாதன்.

இன்று அவரது 18 வது நினைவு நாள்.

-தோழன் மபா.

ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்' புத்தக வெளியீட்டு விழா !

ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்'  புத்தக வெளியீட்டு விழா கடந்த வெள்ளி  அன...