எனது மனைவியின் ஊரிலிருந்து 14 கி.மீ தூரத்தில் இருக்கிறது தில்லை அம்பலத்தானின் ஆலையம். அதாவது சிதம்பரம். எங்கள் ஊர் மாயவரம் போக சிதம்பரம் தாண்டித்தான் போக வேண்டும். ஆயிரம் முறை சிதம்பரத்தை தாண்டி செல்வேன். ஆனால், ஒரு நாள் கூட அந்த ஆலையத்திற்குச் செல்ல வேண்டும் என்ற என்னம் என்னுள் ஏற்பட்ட'தில்லை'.
எங்கள் திருமணம் முடித்து இரண்டு மூன்று நாட்கள் கழித்து இரு சக்கர வண்டியில் சிதம்பரம் கோயிலுக்குச் சென்றோம். பழையபாளையத்திலிருந்து குறுக்கு ரோட்டில் ஆச்சாள்புரம் தாண்டி, கொள்ளிடம் வந்து சிதம்பரத்தை அடைந்தோம்.
40 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் கட்டப்பட்டுள்ளது. பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலமான இங்கு சிவன் கனகசபை - சபாநாயகர், திருமூலட்டானம் - திருமூலநாதர் என்று பற்பல பெயர்களில் காட்சித் தருகிறார்.
அங்கு சிற்றம்பல சபையை, தில்லை கூத்தனை தரிசனம் முடித்து, கோயில் பிரகாரம் சுற்றுகையில் தலையின் பக்க வாட்டில் கொண்டைப் போட்ட இரண்டு இளம் வயது தீட்சதர்கள் எங்களை வளைத்தார்கள். எங்களை பார்த்தாலே வெளியூர் புது மண தம்பதிகள் போல் தெரிந்ததாலோ என்னவோ...கையில் ஒரு சீட்டை கொடுத்து கட கடவென்று ஒப்பிக்க ஆரப்பித்துவிட்டார்கள். இது நடந்தது 2002 வருடத்தில்.
எங்களது குலம் கோத்திரம் எல்லாம் குறித்துக் கொண்டார்கள். வீட்டுக்கு மாதம் மாதம் பிரசாதம் வரும் அதனால் ஒரு ஆயிரம் ரூபாய் கட்டுங்கள், உங்கள் குடும்பம் சுபீட்சமாக இருக்கும். உங்களுக்கு உடனே ஆண் குழந்தை பிறக்கும். என்று அடுக்க ஆரம்பித்து விட்டார்கள். நம்மிடம் அவ்வளவு பணம் இல்லை. அப்படியே இருந்தாலும் அந்தக் குடுமிக்காரனிடம் தூக்கிக் கொடுக்க நான் ஒன்னும் அம்மாஞ்சி இல்லை.
அந்த இரண்டு தீட்சதர்களும் எங்களை விடுவதாக இல்லை. ஆயிரம் ரூபாயிலிருந்து ஆரம்பித்த பேரம் கடைசியில் 250 ரூபாய்க்கு வந்து நின்றது. "கொடுத்துவிட்டு வாங்க....என்று "என் மனைவியின் நச்சரிப்பு வேறு. இதற்கிடையில் இன்னும் இரண்டு இளம்வட்ட தீட்சதர்கள் (?) வந்து சேர்ந்து கொண்டார்கள். வந்தவன் கையில் துணியால் சுற்றப்பட்ட குவாட்டர் பாட்டில் இருந்ததையும் நாம் பார்க்க நேர்ந்தது. வேண்டாம் என்று அவர்களை தவிர்த்து தள்ளி வந்தாலும் தொடர்ந்து வந்து தொல்லை தந்தார்கள் அந்த தில்லை தீட்சதர்கள். இதை பிரகாரத்தில் நிறைய இடத்தில் காண முடிந்தது.
நானும் பணம் கொடுக்காமல் முரண்டுப் பிடித்துப் பார்த்தேன். அவர்கள் விடுவதாக இல்லை. அந்தக் கும்பல் அன்று என்னை 'குறி'வைத்து விட்டார்கள் போலும். அதோடு இறைவனின் சன்னிதியிலா இந்த வழிப்பறி என்று மனம் குமைந்து, கடைசியில் 200 ரூபாயை அவர்களுக்கு கொடுத்து தொலைத்துவிட்டு வந்தேன். 'அது அன்றைய குவாட்டருக்கு ஆச்சி!'.
வெளியூரிலிருந்து வருபவர்களை சரியாக அடையாளம் கண்டுக் கொண்டு, காலம் காலமாக இப்படி பேசி பேசியே காரியம் சாதிக்கக் கூடியக் கலையை அவர்கள் (தீட்சதர்கள்) கற்று வைத்திருக்கின்றனர்?
முற்காலத்தில் தில்லை வாழ் அந்தணர்களான தீட்சதர்கள் தங்களுக்கென்று எவரிடமும் பொன்னோ, பொருளோ பெறுவதில்லை. அவர்கள் இரவு அர்த்தசாம பூஜை முடிந்தவுடன் செம்பினால் உருவாக்கிய தாமரை மலரைப் பைரவரின் பாதங்களில் வைத்து வணங்கிவிட்டு சென்றுவிடுவர். மறுநாள் காலை வந்து பார்க்க அந்த செப்புத் தாமரை சுவர்ணத்தாமரையாக (அதாவது தங்கமாக?) அவர்களது பணிக்கான பலனுக்கேற்ப மாறி இருக்குமாம். பின்அதை விற்று அந்தப் பணத்தில் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வார்களாம். என்ற கதை இங்கு சொல்லப்படுகிறது.
கோயில் சொத்தை கொள்ளை அடிப்பார்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள்.
டிஸ்கி:
நல்லவேளை முந்தைய அரசு, பெரும் போரட்டாத்திற்கு இடையில் சிதம்பரம் கோயிலை இந்து அற நிலையத் துறையின் கீழ் கொண்டுவந்துவிட்டது.
ஆயினும் அதை பொருக்க முடியாத சிலர் உண்டியலில் எண்ணையை கொட்டுவது, வாழைப்பழங்களை உள்ளே போடுவது போன்ற விஷயங்கள் சிதம்பரத்தில் நடந்துக் கொண்டுதான் இருந்தது.
***இக்கட்டுரை எனக்கு ஏற்பட்ட அனுபவத்தினைக் கொண்டு எழுதப்பட்டது. யார் மனதையும் புண்படுத்த அல்ல.

