திங்கள், ஜூன் 10, 2019

நீங்க தமிழா ?!


இப்போதெல்லாம் வட இந்தியா பக்கம் போனால், சுதந்திரமாக கூட தமிழில் பேச முடியவில்லை. பொது இடத்தில்... அங்கிருக்கும் யாராவது ஒருவருக்கு தமிழ் தெரிந்திருக்கிறது!முகம் தெரியாத யாராவது ஒருத்தர் 'சார் நீங்கள் தமிழா .... தமிழ் நாட்டில் எங்கே....? ' என்று ஆர்வமாக விசாரிக்க தொடங்கி விடுகின்றனர்.

இப்படிதான் சில வாரங்களுக்கு முன் கவுகாத்தி சென்ற போது நடந்த சம்பவம்.

சம்பவம் 1

நாங்கள் ஒரு ஹோட்டல் வாசலில் நின்று கொண்டு, அந்த ஹோட்டல் நல்ல ஹோட்டலா ? போகலாமா வேண்டாமா, என்று விவாதித்துக் கொண்டு இருந்த போது...உள்ளேயிருந்து ஒரு குரல் "நல்ல ஹோட்டல்தான், பயப்படாமல் சாப்பிட வா சார் " என்றது.
யார் என்று பார்த்தால்... அந்தக் கடையில் வேலை செய்யுமா சர்வர். கடந்த 5 வருடமாக சென்னையில் வேலை பார்த்தவராம். சென்னை என்றதும்... அந்த இடம் தெரியும் இந்த இடம் தெரியும், மெரீனா பீச், டாஸ்மாக், நயன்தாரா என்று அளக்க ஆரம்பித்துவிட்டார்.பிச்சிக்கோ என்று வருவதற்குள் மண்டை காய்ந்து விட்டது.

சம்பவம் 2

இது இந்தியா தாண்டி நேபாளத்தில்.

நேபாள தலைநகர் காத்மண்டுவிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது சந்திர கிரி மலைத் தொடர். அதன் உச்சியில் அழகான சிவன் கோயில். கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து 2556 மீட்டர் உயரத்தில் இருக்கிறது இந்த சந்திர கிரி. மேலே கேபிள் காரில்தான் செல்ல வேண்டும். மேலே போகப் போக கேபிள் கார் அப்படியே மேகங்களுக்குள் மறைந்து விடும். கீழே அழகிய கலர் கலர் மரங்களும், காத்மண்டுவின் மலைப் பிரதேசமும், தூரத்தில் மேகங்களுக்கிடையே எவரெஸ்ட் வெளியும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும். அப்படி ஒரு மயிர்கூச்செறியும் அழகு ! ஒரு கேபிள் காரில் ஆறு பேர் பயணிக்கலாம்.  நாங்கள் நான்கு போர் அமர்ந்து பயணிக்க... எங்களோடு இரண்டு வத்தல் மூஞ்சி நேபாள இளைஞர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர்.
Cable Car


Kathmandu ((Nepal) Chandra Giri Temple
நாங்கள் பேசுவதைப் பார்த்து, அதில் ஒரு பையன் நீங்கள் தமிழா ? என்றான் ஆர்வத்துடன்.

எங்களுக்கு ஆச்சரியமென்றால் அப்படி ஒரு ஆச்சரியம்!
உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் , அதுவும் அந்தரத்தில் மேகங்களுக்கிடையே ஒரு வேற்று மொழிக்காரன், தமிழில் கேட்கிறான் 'நீங்க தமிழா' என்று ?!

'ஆமாம்' என்றோம் கோரஸாக.

'சார், நான் கோயம்புத்தூரில்தான் செஃப்பாக வேலை செய்தேன் என்றான். பிறகு தமிழகத்தின் பல ஊர்களைப் பற்றி பேசத் தொடங்கிவிட்டான். பிறகு அவனே 'நீங்கள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் சென்றிருக்கிறீர்களா?' அங்குதான் டிப்ளமோ ஒன்று படித்தேன் என்றான். பின்பு அவனுக்கும் தமிழகத்திற்குமான தொடர்பினை மிகுந்த ஆர்வத்தோடு கண்கள் பளிச்சிட பேசினான்.

'பிறகு ஏன் நேபாளம் வந்திட்டே' என்றோம்.

'அப்பாவுக்கு முடியலை, குடும்பத்தை எடுத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதனால் தான் தமிழ் நாட்டிலிருந்து வந்து விட்டேன்' என்றான். அவனது பேச்சில் தமிழ்நாட்டை விட்டு பிரிந்த சோகம் இழையோடியது.

நேபாளம் என்று இல்லை, ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட், உ.பி மேற்கு வங்கம், குஜராத் போன்ற வட இந்திய மாநிலங்கள் மற்றும் அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, அருணாச்சல பிரதேசம் போன்ற வட கிழக்கு மாநிலங்களான உள்ள குக்கிராமங்களில் கூட தமிழ் பேசத் தெரிந்தவர்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர்.

இப்படிதான் ராஜஸ்தானுக்கு சுற்றுலா சென்று நமது நண்பர், ராஜஸ்தானில் சிறு கிராமத்தில் கூட தமிழ் பேசத் தெரிந்தவர்கள் ஒன்றிரண்டு பேர் இருக்கின்றார்கள் என்றார்.

இது எதுவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தி அல்ல, கள நிலவரம்.

****
1967க்குப் பிறகான திராவிட ஆட்சியில் தமிழகம், அடிப்படை சுகாதாரம், சாலை வசதி, தொழில் துறை, போக்குவரத்து, கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் வளர்ச்சிப் பெற்று, வளர்ந்த ஒரு ஐரோப்பிய நாட்டுக்கிணையான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.

அதனாலேயே இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மக்கள் சாரை சாரையாக தமிழகம் நோக்கி வருகிறார்கள்.

ஆலப்புழையிலிருந்து கோயமுத்தூர், திருப்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக டாடாபாத் செல்லும் 'தன்பாத்' ரயிலைப் பாருங்கள், ரயில் முழுவதும் வட இந்திய தொழிலாளர்களால் ரயில் பிதுங்கியபடி செல்லும். நிற்க இடமின்றி கழிப்பறைகளில் கூட அமர்ந்து செல்வார்கள்.

இந்தி பேசும் வட மாநிலத்திலிருந்து வரும் தொழிலாளர்கள் தமிழ் மொழியை தட்டுத்தடுமாறி பேச கற்றுக் கொள்கின்றனர்.
உண்மை இப்படி இருக்க....

இது தெரியாத சில அரைகுறை பேர்வழிகள், இந்தி கற்றுக் கொண்டால் என்ன, இந்தி கற்றுக் கொண்டால் தமிழ் அழிந்து விடுமா ? என்றெல்லாம் அறிவிலித்தனமாக கேள்வி எழுப்புகிறார்கள்.

அப்படி வலுக்கட்டாயமாக இந்தியை கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் தமிழருக்கில்லை என்பதே உண்மையின் நிதர்சனம்.

உலகில் தொல் இனமான தமிழர்கள், இதுகாறும் உயிர்ப்புடன் இருக்கவும், மற்ற இந்திய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழவும் தமிழே காரணம்.
தங்களது தாய் மொழியான தமிழ் மொழி பற்றே தமிழர்களை உலக அரங்கில் ஒரு அறிவார்ந்த சமுதாயமாக அடையாளம்படுத்துகிறது. நமது அடையாளம் தமிழ் என்பதை நாம் பெருமையுடன் உணர வேண்டும்.

உலகின் மூத்த மொழியான தமிழை நமது முன்னோர்கள், பாதுகாப்பாக நமது கையில் தந்திருக்கிறார்கள். அதை உலகம் உள்ள வரையில் பாதுகாக்க வேண்டிய மாபெரும் கடமை நமக்கிருக்கிறது. அந்த கடமையிலிந்து நாம் நழுவ வேண்டாம்.

- மபா
7.6.2019 



 டிஸ்கி:  
சந்திரகிரி சிவன் கோயில் வளாகத்திலேயே... 'Bar @ 2520' என்ற பெயரில் ஒரு பார் இருக்கிறது. சரியாக அந்த மலைச் சரிவில் அமைந்திருக்கிறார்கள். கடல் மட்டத்திலிருந்து 2520 அடி உயரத்தில் இருப்பதால், அதற்கு பார் 2520 என்ற பெயரையே வைத்துவிட்டர்கள். சில் பீயரோடு இமைய மலையை ரசிக்கலாம் என்றார்கள். சாமி தரிசனம் முடிந்த கையோடு பாருக்குள் நுழைந்துவிட்டோம். அங்கு கூர்க்கா என்ற பெயரில் ஒரு பீயர் இருக்கிறது. ஒரிஜினல் நேபாளி சரக்கு, செம ஸ்டார்ங்க். தோதான இடம் பார்த்து இமைய மலையை ரசிக்கலாம் என்று உட்கார்ந்தால், ஒரே மம்பும் மந்தாராமாக இருந்தது, எங்களைப் போலவே...

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...