டாஸ்மாக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டாஸ்மாக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 09, 2020

மது இல்லாமல் மனித வரலாறு இல்லை


     மிழ் நாட்டில் அரசாங்கமே ஒயின் ஷாப் நடத்துவதால், கடந்த 20 வருடங்களாக பயமில்லாமல் குடித்துப் பழகிய தமிழனுக்கு, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிக்காமல் இருப்பது பெரும் தண்டனை காலமாக இருக்கிறது போலும் ?

விளைவு...

கைகால் நடுங்க ஆரம்பித்து, ஆளாளுக்கு வீட்டிலேயே சாராயம் காய்ச்சுவது
எப்படி ? ஒயின் தயாரிப்பது எப்படி? என்று கூகுளில் தேட ஆரம்பித்து விட்டனர். சிலர் அடுப்பில் குக்கர் வைத்து காய்ச்சவும் தொடங்கி விட்டனர். எத்தனை விசில் அடித்தப்பின் இறக்க வேண்டும், என்று யூடூபில் கேட்கும் நிலைக்கு, நிலமை சீரியஸாய் போய் விட்டதுதான் காமெடி!

உண்மையில்.... தடுமாறாமல் நாம் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்த்தோமானால் ஒரு உண்மை புலப்படும். 'மதுவை தவிர்த்து, மனித வரலாற்றை அறிய முடியாது' என்பதுதான் அது. 'Civilisation begins with distillation' என்கின்றார் நோபல் எழுத்தாளர் வில்லியம் ஃபாக்னர்.

இந்த உலகத்தில் மனிதன் எந்த மூலையில் எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் சரி, இருந்தாலும் சரி, தனக்கான போதை பொருளை தானே தயாரித்துக் கொள்ளக் கூடிய ஆற்றல் அவனுக்கு இயற்கையாகவே இருக்கிறது. அந்த சூழலில் இயற்கையாக என்ன பொருள் கிடைக்கிறதோ அதை வைத்து சுயமாக போதை தரக் கூடிய மது பானத்தை தயாரித்துக் கொள்கிறான். மனித குல வரலாற்றில் இது தொன்றுதொட்டு நடந்து வருகிறது.

அரிசியிலிருந்து ஓட்கா,
முந்திரிப் பழத்திலிருந்து ஃபென்னி,
திராட்சையிலிருந்து ஒயின்,
ஆப்பிள், ஆப்ரிகாட், பீச், திராட்சை போன்ற பழங்களிலிருந்து பிராந்தி,
பார்லியிலிருந்து பீர்,
பழைய சோற்றிலிருந்து சுண்டக்கஞ்சி,
பார்லி, கோதுமை, கம்பு, சோளம் போன்ற தானியங்களிலிருந்து விஸ்கி
பதப்படுத்தப்பட்ட கரும்பு கூழிலிருந்து ரம்
பல நாள் ஊறவைத்த பழங்கள், வெல்லம், மரப்பட்டைகள் கொண்டு சாராயம்,
தென்னை, பனை, ஈச்சை மரத்திலிருந்து கள்,

என்று மனிதன், விதவிதமான மதுபானங்களை தயாரித்து பயன்படுத்தி வருகின்றான்.

பழங்களையும் தானியங்களையும் பல நாட்களுக்கு ஊற வைத்தும், நொதிக்க வைத்தும், கொதிக்க வைத்தும், பின்னர் வடிகட்டியும் போதை தரும் மது
பானங்களை உற்பத்தி செய்கிறார்கள். 'நாகரீகமும் வடித்தலும்' ஒன்றோடொன்று இணைந்தது என்கிறார் ஆதம் ரோஜர்.

நாடோடியாக அலைந்த மனிதன் விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டதன் பயனாக நிலையாக ஒரு இடத்தில் வாழக் கற்றுக் கொண்டான். அறுவடை செய்த தானியத்தை தண்ணீரில் ஊற விட்ட போது அது புளித்தது. புளித்ததை முகர்ந்ததும் தலை கிறுகிறுத்தது. புளித்ததை கொதிக்க வைத்து குடித்ததும் போதை உச்சிக்கு ஏறியது. உலகின் பெரும்பான்மையான கண்டுபிடிப்புகள் ஏதேச்சையாக தோன்றியது தான். போதை தரும் பானத்தையும் அப்படித்தான் கண்டுபிடித்தான். இப்படிதான் முதன் முதலில் பீர் கண்டுபிடிக்கப்பட்டது.

விஞ்ஞானிகள், தொல்லியல் வல்லுனர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கண்டுபிடிப்புகளில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட களி மண் எம்பொராக்களில் ஒயின்களின் மிச்சத்தை கண்டனர். சிரியா, மொசபோட்டோமியா, எகிப்து போன்ற நாடுகளில் நொதித்தல் வடிகட்டுதல் போன்றவை அறியப்பட்டன. உலகின் பல கண்டு பிடிப்புகளுக்கு பாதை வகுத்த, எகிப்தில்தான் முதன்முதலில் மத சடங்குகளில் ஒயின் பயன்படுத்தப்பட்டது என்கின்றது வரலாறு.

-----------------------
அமெரிக்காவில் மக்களே தங்களுக்கு தேயையான பீர் மதுபானத்தை சுயமாக தயாரித்துக் கொள்ள முடியும். அதற்கான உபகரணங்கள் அங்காடிகளில்
விற்கப்படுகின்றன. பீர் தயாரிக்க தேவையான மூல பொருட்களும் அங்காடிகளில் கிடைக்கின்றன. விருப்பமுடையவர்கள் தங்களது வீடுகளிலேயே பீரை தயாரித்து (ஹோம் மேட் பீர்) பயன்படுத்துகின்றனர்.
இன்றும் கூட சவுதி அரேபியா, கத்தார், குவைத் போன்ற நாடுகளில் வசிக்கும் அயலக தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான மது பானங்களை குக்கரில் வைத்து தயாரிக்கின்றனர். அதை பாட்டில்கள் அல்லது சிறு பாக்கெட்டுகளில்
அடைத்து தங்களது நெருங்கிய வட்டங்களில் விற்கவும் செய்கின்றனர். கடுமையான சட்ட திட்டங்கள் கொண்ட அரபு நாடுகளிலேயே இப்படி என்றால் பிற நாடுகளில் கேட்கவும் வேண்டுமோ....?

இப்படி... மனிதன் சுயமாக சிந்திக்க தொடங்கிய காலத்திலிருந்தே, தனக்கான மது வகைகளை தயாரிக்க தொடங்கி விட்டான்.

 பழந்தமிழ் இலக்கியத்தில் மது பானங்கள் 

 பழந்தமிழர்கள் மதுபானங்கள் தயாரிப்பில் வளமான அறிவைக் கொண்டு இருந்தனர். அன்றைய நாட்களில் மதுபானங்கள் தேன், நெல்லரிசி, பழங்கள், பூவகைகள்,தென்னை. பனை மற்றும் ஈச்சை போன்ற மரங்களிலிருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டன.  மது, நறவு, தேறல், கள் எனப் பல்வகைப் பெயர்களில் மதுபானங்கள் அழைக்கப்பட்டன. பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களில்தகவல்கள்  விரவிக்கிடக்கின்றன.

சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!


- புறநானூறு   (திணை: பொதுவியல்.  துறை: கையறுநிலை)


 சிறிதளவு கள் கிடைக்குமானால் அதனை முழுமையாக எனக்கு உண்ணக் கொடுத்துவிடுவான். அது தீர்ந்துபோன பின்னர் பெருமளவு கள் கிடைக்குமாயின் வேண்டிய அளவு எனக்குக் கொடுத்து நான் உண்டு பாடக் கேட்டுக்கொண்டே அவனும் பருகுவான்.  என்று அதியமான் நெடுமான் அஞ்சியைப் புகழ்ந்து பாடுகிறார் அவ்வையார்.

அரசன் முதல் புலவர்கள், சான்றோர்கள். குடிமக்கள் வரை ஆண், பெண் அனைவரும் களிப்புடன் கள்ளைப் பருகி மகிழ்ந்த செய்திகளைப்  தமிழ் ஆதி இலக்கியங்கள் பதிவு செய்கின்றன.   காணலாம்.

வையை ஆற்றில் நீராடிய தலைவி உடலின் ஈரம் புலர வெப்பத்தைத் தரும் கள்ளைப் பருகினாள். கள் பருகுவதற்கு முன் நெய்தற் பூவைப் போன்ற கருமையாக இருந்த கண்கள் கள்ளைப் பருகியபின், நறவம் பூவைப் போல சிவந்தனவாம். அவ்வளவு வெப்பத்தினை அளிக்க வல்ல கள்ளைப் பருகி, நீராடிய களைப்பைப் போக்கி மகிழ்ந்தனர் அக்கால மகளிர் என்பதைப் பரிபாடல் உணர்த்தும்.

மலைத் தேனை காட்டு மூங்கில் குடுவைகளில் அடைத்து அவற்றை நாட்பட நாட்படமுதிர்விப்பார்கள். இவ்வாறு பதப்படுத்திய தேனே மென்போதை மிகுந்த 'தேக்கல் தேறல்' எனப்படும். குறவர்கள் இந்தத் தேறலைப் பருகி குறிஞ்சிக் கடவுளான முருகனைப் பாடி ஆடுவார்களாம். இந்தத் தேறல் பற்றிய குறிப்புகள் திருமுருகாற்றுப் படை, மலைபடுகடாம், அகநானூறு ஆகிய நூல்களில் காணப் பெறுகின்றன.

நறும்பிழி செய்முறை

பழந்தமிழர்கள் 'நறும்பிழி' என்ற மதுபானத்தை அருந்தினார்கள். உச்சபச்ச போதை தரும் இந்த நறும்பிழிக்கு நல்லதொரு சைட்டிஷ் நாட்டு மீன்
குழம்புதான். தேனில் ஊறிய பலாச்சுளைப் போல கெட்டியான மீன் குழம்பில் மிதக்கும் கொழுத்த மீன் துண்டங்களும், மண் குவளைகளில் ஊற்றிய நறும்பிழியும் அன்றைய பார்ட்டிகளில் களைகட்டும் என்கின்றது பெரும்பாணாற்றுப் படை.

ஊறவைத்த அரிசியை உருளைகளில் வாயகன்ற பாத்திரங்களிலிட்டு காய வைப்பார்கள். பின்னர் இரவும் பகலும் இரு வேளைகளிலும் நறுமணம் கமழும் பலவகைப் இலைகளை அதில் சேர்ப்பார்கள். தீப்போல் ஒளிரும் தாதிரிப்பூவையும், வெல்லத்தையும் கூடவே சேர்ப்பார்கள். இவற்றை இரு வேளையும் வெறும் கைகளால் நன்றாக கிளறிவிட வேண்டும். பிறகு
வாய்மூடி கட்டின மண் குடங்களில் நீண்ட காலத்திற்கு ஊற வைப்பார்கள்.
நொதித்து பக்குவமாகும் போது கொதி நீரில் வேகவைத்து பின்னர் பனை நாறிலான வடிகட்டிகளில் வடித்து வைப்பார்கள்.

சமீபத்தில் மொழிபெயர்ப்பிற்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற, மலையாளத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட 'நிலம் பூத்த மலர்ந்த நாள்' நாவலில்தான் மேற்கண்ட 'நறும்பிழி' தயாரிக்கும் செய்முறை அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

அன்றைய சங்ககால மது தயாரிப்பிற்கும் பிற்காலத்தில் சித்தர்கள் தயாரித்த
பட்டைசாராயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டுமே ஒன்று போல் அதே போன்றே சூத்திரத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

 இன்றைய குடி அவலம் 

அன்றைய நாட்களில் உடலுக்கு நன்மைத் தரும் பொருட்களைக் கொண்டு மதுபானங்கள் தயாரித்தனர், குடித்துக் களித்தனர், ஆடி மகிழந்தனர். இயற்கையாக என்ன கிடைத்ததோ அதைக் கொண்டு ஊறவைத்தும், நொதிக்கவைத்தும் புளிக்கவைத்தும் இயற்கையாக மதுபானங்களைத் தயாரித்தனர். இன்றையை நாட்களில் மதுபானங்கள் தயாரிக்கும் அவல முறையை சொல்லி மாளாது. அதுவும் அரசே டாஸ்மாக் மூலம் அயல் நாட்டு மதுபானங்கள் விற்கத் தொடங்கிய பின்னர், நிலைமை முன்பைவிட சீர் சீர்கெட்டுவிட்டது எனலாம். அயல் நாட்டு மது வகைகளைப் பயன்படுத்துவதில்; தனியாரிடம் இருந்த போது குடி மீதான பயம், அரசே மதுபான விற்பனையை ஏற்று நடத்தத் தொடங்கிய பின்னர் சுத்தமாய் இல்லாமல் போய்விட்டது.

விளைவு....குடி நோயாளிகள் பெருத்த மாநிலமாக தமிழகம் தற்போது மாறிக்கொண்டு இருக்கிறது.டாஸ்மாக் கடைகளில் இன்று பெருவாரியான மக்கள் குடிக்கும் மதுபானங்கள்; விலையைவைத்தே அடையாளம்
சொல்லப்படுகிறது. இதிலிருந்தே இன்றைய மதுபானங்கள் எத்தகைய தரத்தில் தயாரிக்கப்படுகிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

இவர்களின் அயல் நாட்டு மதுபானங்கள் விற்க வேண்டும் என்பதற்காக, இதுகாறும் தமிழர்கள் தொன்று தொட்டு குடித்து வந்த கள்ளையே கடந்த இருபது வருடங்களாக வடிக்கக் கூடாது விற்பனை செய்யக் கூடாது என்று தடைபோட்டுவிட்டார்கள், கிராதகர்கள்.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுவை போன்ற அண்டை மாநிலங்களில் இன்றும் கள் இறக்கவும் விற்பனை செய்யவும் அனுமதி இருக்கிறது. கெமிக்கல்கள் மூலம் தயாரிக்கப்படும் பீர் பிராந்தி விஸ்கியைவிடவா, இயற்கையான முறையில் வடிக்கப்படும் கள் கெடுதலாகிவிட்டது ?
இனிவரும் காலங்களிலாவது தமிழர்களின் தொல்
கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் வகையில், உடல் அரோக்கியப் பானமான 'கள்' இறக்க அரசு அனுமதிக்க வேண்டும். செய்வார்களா....?

- தோழன் மபா
27-4-2020

தகவல் உதவி:

#பரிபாடல்
#தினமணிடாட்காம்
#நிலம்பூத்துமலர்ந்தநாள்
#கீற்று

சனி, ஆகஸ்ட் 20, 2011

'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.

 தமிழ்மணம் நட்சத்திர பதிவு !

டாஸ்மாக் மதுபானக் கடை

இன்று தெருவுக்குத் தெரு டீ கடை இருக்கிறதோ இல்லையே அம்மா ஜெயலலிதா புண்ணியத்தில் மூலைக்கு மூலை டாஸ்மாக் இருக்கிறது. ஒயின்ஷாப்புகளை அரசுடமையாக்கி தமிழர்களை குடிக்கு அடிமையாக்கிய பெருமை ஜெயாவையே சாரும். 

முந்தைக்கும் முந்தைய  ஜெயா ஆட்சியில் திமுகாவினர் சிண்டிக்கேட் அமைத்து ஒயின்ஷாப்புகளை நடத்தி வந்தனர். அதிகம் பணம் புழங்கும் இந்த போதை தொழிலில் திமுகவினரின் ஆதிக்கத்தை நினைத்து பொறுமிய ஜெயலலிதா அவர்களின் கொட்டத்தை அடக்க என்ன செய்யாலாம் என்று யோசித்ததன் விளைவுதான்,  அதை அரசே ஏற்று நடத்துவது.


உலகில் எங்கேயாவது இந்த அநியாயத்தை கேள்விபட்டிருக்கிறீர்களா....? அரசாங்கமே போதை பொருள் விற்பதை!

இந்த அநியாயம் வேறு எங்கும் நடக்கவில்லை. 'கல்தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி' என்று நாம் வாய்கிழிய பேசுகிறோமே அந்த செந்தமிழ் நாட்டில்தான் இந்த அவலம். 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்றாரே கனியன் பூங்குன்றனார். அவர் பிறந்த திரு நாட்டில்தான் இந்த அவலம்.
 
காங்கோ உகாண்டா போன்ற ஆப்ரிக்க நாடுகளில்தான் மக்களை சிந்திக்க விட வேண்டாம் என்றும் அரசும், தீவிரவாத குழுக்களும்  போட்டி போட்டுக் கொண்டு  போதை பொருட்களை விற்பனை செய்யும். விற்பனை என்றால் இப்படி ரோட்டுக்கு ரோடு அல்ல...மறைமுகமாக கள்ள மார்கெட்டில் விற்பனை செய்வார்கள்.  அனால் இங்கே.....?

ஒயின்ஷப்புகளை நடத்துவதில்  திமுகவினர் ஆதிக்கம்.

அன்றைய அதிமுக ஆட்சியில் திமுகவினரின் கையில்தான் பெரும்பான்மையான ஒயின்ஷாப்பும் பார்களும் இருந்தன. திமுக ஆட்சி போன பின்னரும் அவர்கள் கை இறங்குவதாக இல்லை.  அதனால் ஜெயலலிதா திமுகவினரின் ஆதிக்கத்தை ஒழிக்க  'தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் - 1937 ' ஒரு திருத்தம் செய்து ஏல முறையை கொண்டுவந்தார். இதில் அதிகம் வருவையுள்ள கடைகள் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு குலுக்கள் முறையில் பிரித்தளிக்கப்பட்டன. 


ஆனால் இந்தத் தொழிலில் (?) பழம் தின்று கொட்டை போட்டவர்கள் அவ்வளவு எளிதில் விட்டுத்தருவார்களா?  ஏலம் எடுக்க யாரும் வராமல் பார்த்துக் கொண்டனர். அப்படியே எடுத்தாலும் அதை தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு கடைகளை பிரித்துக் கொண்டனர். இது ஜெயலலிதாவை இன்னும் வெறுப்பேற்றியது. இயல்பாகவே கண்மூடித்தனமான பிடிவாதம் கொண்ட ஜெயலலிதா அப்போதுதான் அந்த விபரீத முடிவை எடுத்தார். அதாவது அரசாங்கமே ஒயின்ஷாப்புகளை  ஏற்று நடத்துவது.  அதுவரை யாருக்கும் அப்படிபட்ட யோசனை தோன்றி இருக்காது.  கேள்வியும் பட்டு இருக்கமாட்டார்கள். முடிவெடுத்தப் பின் துணிந்து செயலில் இறங்கினார் ஜெயலலிதா.  மீண்டும் மது விலக்கு சட்டத்தில் திருத்தம் செய்து அக்டோபர் மாதம் 2003ம் வருடம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) மூலமாக டாஸ்மாக்கை தொடங்கினார்.   



இந்த ஈன காரியத்தை ஜெயலலிதா செய்யாமல் கருணாநிதி செய்திருந்தால், என்ன நடந்திருக்கும் தெரியுமா....? 

ஊடகங்கள் ஒன்று திரண்டு இருக்கும். பேசியும் எழுதியும் கருணாநிதியை கிழித்தெடுத்திருப்பார்கள். மடங்கள் வரிந்து கட்டிக் கொண்டு வந்திருக்கும். எதிர்ப்புகள் சுனாமியாய் எழுந்து அந்த திட்டத்தை அடியோடு ஒழித்துவிட்டுதான் உக்கார்ந்திருப்பார்கள். 

இன்று தெருவுக்கு தெரு, ஊருக்கு ஊர் என்று திரும்பிய பக்கமேல்லாம் ஒயின் ஷாப்புகளை ஆரம்பித்து, வருடத்திற்கு 12ஆயிரம் கோடி ரூபாய் கல்லா கட்டுகிறது தமிழ அரசு.

குடிக்க பயம் இல்லை.

இப்படி பிறந்ததுதான்  'டாஸ்மாக்'. அன்று தனியாரிடம் இருந்தபோது என்ன நிலையில் இருந்ததோ அதே நிலையில்தான் இருக்கிறது டாஸ்மாக். முன்பு இருந்த கெடுபிடிகள், கூடுதல் விலையில் சரக்கு விற்பனை என்று எல்லா அவலங்களும் இன்றும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. பார்  நடத்துவர்களின் அராஜக போக்குகளுக்கு கொஞ்சமும்  குறைந்து விடவில்லை.

தமிழன் ஈயோடு ஈயாய் உட்கார்ந்து சரக்கு   அடித்துவருகிறான்.
  
அரசாங்கமே ஊத்தித் தருவதால் மக்களுக்கு குடிக்க பயம் இல்லாமல் போச்சு. முன்பெல்லாம் குடிக்க போகும்போது  பயந்து பயந்து பம்மிக்கொண்டு குடிப்பார்கள். ஆனால் இன்றைய நிலை...? அதை நான் சொல்ல மாட்டேன். அது உங்களுக்கே தெரியும்.

தனியார் துறையிடம் ஒயின்ஷப்புகள் இருந்தபோது... குடிமகன்கள் போலீசை கண்டால் கொஞ்சம் அடங்கி போவார்கள்.  அரசே ஒயின்ஷாப்புகளை ஏற்று நடத்திவுடன் குடிமகன்களை கண்டால் போலீஸ் அடங்கி போனது.



கண்டுகொள்ளாத கருணநிதி

தமிழக அரசியலில் ஒரு விஷயம் எப்போதும் கடைபிடிக்கப்படும். ஒரு ஆட்சி கொண்டுவந்த திட்டத்தை, அடுத்து வரும் ஆட்சி  அமுல்படுத்தாது. அந்தத் திட்டதை ரத்து செய்துவிடும். அப்படிதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஜெயலலிதா கொண்டுவந்த டாஸ்மாகை கருணாநிதி கலைத்து விடுவாறென்று. ஆனால் நடந்தது வேறு....!



முதலில் எதிர்த்த கருணாநிதி, பின்னர் அதிலிருந்து கொட்டிய வருமானத்தைப் பார்த்து அப்படியே டாஸ்மாக்கிற்கு ஷாஷ்டாங்கமாய்  நமஸ்காரம் செய்துவிட்டார்.  'தொறடா டாஸ்மாக்கை' என்று தெருவுக்குத் தெரு திறந்து அரசு கஜானாவை நிறப்பத் தொடங்கினார். அப்போதுதானே தான் அறிவித்திருக்கும் இலவச திட்டங்களுக்கு பணம் சேர்க்க முடியும்.


தமிழ்நாட்டு மக்களைப் பற்றி  கவனம் கொள்ளாமல், தனது ஆட்சி அதிகாரத்தை இந்த டாஸ்மாக்கை கொண்டு பலப்படுத்தவே கருணாநிதி முயன்றார். இவரது ஆட்சி காலத்தில் ஒரு நல்ல விஷயம் நடந்தது. அது நாள் வரையில் இரவு 11 மணி வரை திறந்திருந்த கடைகள் இரவு 10 மணிவரைதான் என்று மாற்றம் செய்யப்பட்டது.

இன்று எல்லா மட்டத்திலும் குடிகாரர்கள் இருக்கிறார்கள். குடிப்பது தவறில்லை என்பதை இன்றைய தலைமுறையினருக்கு அரசாங்கமே குழப்பமில்லாமல் தெளிவாகவே (?) சொல்லாமல் சொல்லிவருகிறது.



பல  கேள்விகள் ?
  • இது ஒரு நல்ல திட்டம் என்றால் ஏன் பிற மாநிலங்கள் இதை தங்களது மாநிலத்தில் அமுல் படுத்தவில்லை? 
  • பாண்டிச்சேரி என்றாலே நமக்கு தண்ணி பற்றிதான் ஞாபகம் வரும். அந்த அளவிற்கு சரக்கு அங்கு சகஜம். அந்த மாநிலத்தில் ஏன் அரசாங்கமே ஒயின்ஷப்புகளை ஏற்று நடத்தவில்லை....?
  • அயல் நாட்டு மது விறபனை செய்யலாம் என்றால். தமிழர்களின் பாரம்பரியமான கள்ளுக்கு தடை ஏன்?


நாம் போராடுவோம்!

பாமக நிறுவனர் இராமதாஸ் மட்டுமே அவ்வப்போது  டாஸ்மாக்கிற்கு எதிராக குரல்கொடுத்து வருகிறார். பிற தமிழக தலைவர்களும் குரல் கொடுக்கவேண்டும்,  போராடவேண்டும்,  தமிழன் தலை நிமிர்ந்து நடக்க   டாஸ்மாக்கை அழிதொழிக்கும் போராட்டத்தில் இறங்குவோம்.

"தமிழ் நாட்டில் படிக்காதவனை விட... குடிக்காதவனே இல்லை" என்ற பெருமையை தமிழ் நாட்டிற்கு பெற்று தந்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா.  அதை துடைத்து,  இந்த அவலத்தை தமிழனிடமிருந்து போக்க நாம் போராடுவோம்.  டாஸ் மாக்கை அழித்து தமிழக மக்களை காப்பற்றுவோம்.



*************



ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...