ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

திருவாலங்காட்டில் அம்மனுக்கு வளைக்காப்பு!





திருவாலங்காடு அருள்மிகு வடராண்யேசுவரர் சுவாமி திருக்கோயில்



எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆதங்கம் உண்டு. கூகுள் தேடு பொறியில்  எங்கள் ஊர் திருவாலங்காட்டைப் பற்றி தேடினால், சென்னைக்கு அருகில்  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  திருவாலங்காட்டைத்தான் காட்டும். நானும் தேடு பொறியில் விதவிதமான சொற்களைப் போட்டு தேடினாலும் அந்த திருவாலங்காட்டைப் பற்றிதான் நிறைய தகவல்கள் கிடைக்கும். எங்கள் ஊரை பற்றி ஒன்றும் இருக்காது.  முடிவில் ஏமாற்றமே மிஞ்சும்.

சரி.... இதை நாம்தான் சரிசெய்யவேண்டும் என்று முடிவு செய்து,  நான் எடுத்த படங்களையும் ஊரைப்பற்றியும்  எனக்கு தெரிந்தவரை பதிவேற்றிவுள்ளேன்

     ****                     ****                          ****                    ****                    ****                   ****


காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள அழகிய கிராமம்தான் திருவாலங்காடு.   மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில் குத்தாலம் மற்றும்  மாதிரிமங்கலம் தாண்டினால்   ஊர் வந்துவிடும்.   கும்பகோணத்திலிருந்து வரும்போது திருபுவனம், திருவிடைமருதூர், கோவிந்தபுரம்,  ஆடுதுறை, நரசிங்கன்பேட்டையை தாண்டவேண்டும்.





 



திருவாவடுதுறை செல்ல இங்கு இறங்க வேண்டும்.

பிரசித்திப்பெற்ற திருவாவடுதுறை மடத்திற்கு செல்ல எங்கள் ஊரில்தான் இறங்க வேண்டும். இங்கிருந்து 3 கிமீ இருக்கிறது திருவாவடுதுறை. நாதஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் வாழ்ந்த ஊர் திருவாவடுதுறை. தோடியில் அடி பின்னியடித்த அவரது தெய்வீக ராகம் இன்றும் திருவாவடுதுறை காற்றில் தவழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.  மடத்தின்  பிரமாண்டமான  மதில் சுவரும், பெரிய சிவன் கோயிலும், தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு இணையான நந்தியும்   பார்ப்பவரை பரவசப்படுத்தும். ஆண்டுக்கு ஒரு முறை இங்கு மடத்தார் பட்டினப்பிரவேசம் செய்து மக்களுக்கு காட்சித் தருவார்.  திருவாவடுதுறை அன்ன மடமாக போற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



சோழ சாம்ராஜ்ஜியம்.

சோழ சாம்ராஜ்ஜியத்தின் மைய பகுதியில் எங்கள் ஊர் இருப்பது நாங்கள் பெற்ற பேரு என்றுதான் சொல்லவேண்டும். .  சேழ நாட்டிற்கே உள்ள பார்முலா இங்கும் இருக்கும்.  எல்லா பெரிய ஊர்களிலும் சோழர்களால் கட்டப்பட்ட  ஒரு பிரமாண்டமான சிவன் கோயில் இருக்கும். அதற்கென்று நிலபுலன்ங்கள் உண்டு.  எங்கள் ஊரிலும் மேற்கு பக்கம் பார்த்த சிவன் கோயில் இருக்கிறது.  வடராண்யேசுவரராக  இங்கு எழுந்தருளியுள்ளார்.


திரு+ஆலங்காடு = திருவாலங்காடு

முன்பு ஆல மரங்கள் நிறைந்திருந்ததால் திரு-ஆலங்காடு என்று அழைக்கபெற்று. பின்பு அதுவே மருவி திருவாலங்காடு என்றானது என்று சொல்லக் கேள்வி. நான் சிறு வயதாக இருந்த போது காவிரிக்கரையின் ஓரத்தில் நிறைய ஆல மரங்கள் நிறைந்திருந்தது. ஆலம் விழுதுகளைப்  பிடித்துக் கொண்டு ஊஞ்சல் ஆடிய காலங்கள் உண்டு. அதை 'கோண' மதகு என்று அழைப்போம். 

கோயில் வரலாறு!

இங்கு இரு சிவ சன்னதிகள் உள்ளது. மூல ஸ்தானம் வட ஆரண்யேஸ்வரர். இன்னொரு சிவ சன்னதிக்கு பெயர் புத்ரகாமேஸ்வரர். அம்மன் பெயர் வண்டார்குழலி. இங்கு தலவிருச்சமாக ஆலமரம் போற்றப்படுகிறது. திருவாவடுதுறை ஆதினத்தை சார்ந்த மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைஅவர்கள் 'திருத்துருத்தி புராணத்தில்'  இந்தக் கிராமத்தை பற்றியும் கோவிலைப் பற்றியும் குறிப்பு எழுதியுள்ளார்.

சோழர்கள் காலத்தில்  இக் கோயில் புகழ்பெற்று விளங்கியது எனலாம்.  மூன்றாம் குலோத்துங்கனால் இக் கோயில் புனரமைக்கபட்டு வடராண்யேசுவர சுவாமியை வணங்கினார் என்று கூறப்படுகிறது.  இக் கோயிலை முதலாம் குலோத்துங்கச் சோழன் கிபி1178-1218வாக்கில் கட்டினார். 
புத்திரகாமேசவர குளம்


திருவாவடுதுறை ஆதினத்தால் இக் கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது.  பரத முனிவரும் அவரது மனைவி சுபத்ராவும் குழந்தைவரம் வேண்டி சிவனை வேண்டிய போது...வானத்திலிருந்து ஒரு குரல்  'திருவாலங்காடு சென்று அங்கு உள்ள வடராண்யேசுவரரை தருசிக்கவும்' என்றது. அதன்படி திருவாலங்காடு வந்த அந்த தம்பதிகள், வடராண்யேசுவரரை தரிசித்து இங்கு உள்ள  குளத்தில் நீராடி.... 'புத்திரகாமேசவர யாகம்' செய்து, புத்திரபாக்கியம் பெற்றனர்.   புத்திரபாக்கியம் பெற சிறந்த தளமாககவும் இது விளங்குகிறது.  அதோடு மட்டுமல்லாமல் சிவனுக்கு சனி தோஷம் நிவர்த்தி செய்த தளமாகவும் இக் கோயில் அறியப்படுகிறது. 
'பாதாள நந்தி'


நந்தி மற்ற கோயில்கள் போலல்லாமல் தரைக்கு கீழே இருக்கும். அதனாலயே 'பாதாள நந்தி' என்று அழைக்கப்படுகிறது. இக் கோயிலில்  முருகன் தனது மனைவியருடன் காட்சித் தருகிறார்.  தெக்ஷனாமூர்த்தி மிக இளமையான கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு எமனுக்கு என்று  தனி சன்னிதியும் உண்டு.   கருவரைக்கு முன் ஊள்ள சந்தன பிள்ளையார் இரட்டை பிள்ளையாராக காட்சித் தருகிறார்.

அம்மனுக்கு வளைகாப்பு

ஒவ்வொரு வருடத்திலும் பங்குனி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.  ஒவ்வொரு  அமாவாசை அன்றும்   புத்திரபாக்கியம் பெற புத்திரகாமேஸ்வர தீர்த்த  பூஜை செய்யப்படுகிறது. அதோடு இங்கு அம்மனுக்கு ஆடி மாதத்தில் 'வளைகாப்பு'செய்யப்படுகிறது.  புத்திரபாக்கியம் பெற விரும்புவோர் இந்த வளைகாப்பில் கலந்துக் கொண்டு அம்மனின் அருளைப் பெறுகின்றனர். 
உள் பிரகாரத்திலிருந்து ஒரு 'கிளிக்'





எப்படிச் செல்வது                                                      .


சென்னையிலிருந்து 260 கிமி. சென்னையிலிருந்து பேருந்து மார்க்கமாகவோ அல்லது புகைவண்டியிலோ வரலாம். மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்தில் தங்கி சுற்றி உள்ள கோயில்களை தரிசிக்கலாம்.  திருவாலங்காடு வர இரயில் மார்க்கம் என்றால் அருகில் நரசிங்கன்பேட்டை அல்லது குத்தாலம் இரயில் நிலையத்தில்  இறங்கலாம்.
அருகில் உள்ள தளங்கள்:

திருமணஞ்ச்சேரி         : 13 கிமி (approx...)
கஞ்சனூர்                         :  5 கிமி
சூரியனார்கோயில்      :  7 கிமி
திருவாவடுதுறை        :  3 கிமி
மயிலாடுதுறை             :  15 கிமி
குமபகோணம்                : 21 கிமி
திருவிடைமருதூர்       :  15 கிமி
திருபுவனம்                     :  17 கிமி
----------------------------------------------------------------------------
படங்கள் மற்றும் கட்டுரை :  - தோழன் மபா. 

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இக்கோயிலுக்குச் சில வருடங்களுக்குமுன் சென்றிருந்தேன். அழகிய கோயில்.

இத்தலத்து ஈசன் மேல் எழுதிய பதிகத்தை இங்கே காண்க: http://madhisudi.blogspot.com/2015/11/0238.html

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

மிக்க நன்றி, தங்களது வருகைக்கும் பதிவுக்கும்.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...