திங்கள், பிப்ரவரி 10, 2014

உங்கள் வீட்டு வைத்தியர்.




                  மெத்த படித்த வைத்தியர் ஒருவரை உங்கள் அருகிலேயே வைத்துக் கொண்டு, சதாசர்வக் காலமும் உடலை பேணுவது என்பது நீங்கள் பூர்வ புண்ணியத்தில் பெரும் பாக்கியம் பெற்ற மகா ஜனமாகத்தான் இருக்க முடியும்!. அதுவும் அவர் தமிழகத்தில் புகழ் பெற்ற மருத்துவர் என்றால் கேட்கவே வேண்டாம்.  நீங்கள் பெரும் கோடீஸ்வரராகத்தான் இருக்க முடியும்.

எந்த உபாதையும் இல்லாமல் மாடியிருந்து குதிக்கலாம், லட்டு லட்டாய் ஜிலேபியை முழுங்கலாம், உங்கள் காலைத் தூக்கி பின் பக்கமாய் கழுத்தில் போட்டுக் கொண்டு உஞ்சலாடலாம், திண்ணையில் உட்கார்ந்துக் கொண்டு உப்புசத்திற்கும் பொருமலுக்கும் ஏழு வித்தியசத்தை எண்ணிக் கூறலாம். வைத்தியர் இருக்க கடவுள் எதுக்குன்னு கூட... நீங்கள் எகத்தாளம் போடலாம். இவை எல்லாவற்றிருக்கும்  டாக்டர் தி.சே.செள.ராஜன் எழுதிய 'வீட்டு வைத்தியர்' என்ற நூல் உங்களிடம் இருக்கவேண்டும்!.

2012ம் ஆண்டு வெளி வந்து பெரும் வெற்றி பெற்ற டாக்டர் தி.சே.செள.ராஜனின் 'நினைவு அலைகளைத்' தொடர்ந்து, டாக்டர் தி.சே.செள.ராஜனின் எழுதிய 'வீட்டு வைத்தியர்' என்ற அடுத்த  படைப்பினை வெளியீட்டுள்ளது சந்தியா பதிப்பகம். இன் நூலின் முதல் படைப்பு 1945ல் வெளி வந்திருக்கிறது. முதல் பதிப்பில் ராஜாஜியின்  முன்னுரையோடு இன் நூல் வெளிவந்திருக்கிறது. கிட்டதட்ட 69 ஆண்டுகள் கழித்து மீண்டும் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறார் இந்த வீட்டு வைத்தியர்'.

உதாரணாமாக.... இருதயம் பற்றிக் கூறும் போது, இருதயம் குவிந்த வடிவமுள்ளது. அதன் நுனி இடது மார்புக் கூட்டுகுச் சமீபத்தில் இருக்கிறது. ஒவ்வொரு தடவை இருதயம் துடிக்கும்போதும் அதன் நுனி, மார்புக்கூட்டில் வந்து முட்டுகிறது. அதற்கு இருதய முட்டுதல் (Heart Impulse)  என்று பெயர்.  இடது புறம் ஐந்தாவது ஆறாவது விலா எலும்புகளுக்கு மத்தியில் இது காணப்படும். காதைவைத்து பார்த்தாலும் அல்லது இருதய சோதினியை (Stethoscope) வைத்துப் பாத்தாலும் இரண்டு சத்தமும் கேட்கும்.  இந்த சத்தம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நடுவில் சற்று ஓய்வுடன் இருக்கும். முதலில் கேட்கும் நீண்ட சத்தம் ஏற்றறைச் சுருக்கத்தினால் ஏற்படுகிறது. இரண்டாவது சத்தம் முக்கூற்று ஒரு வழி அடைப்பு முட்டி கொள்ளவதனால் உண்டாகிறது,  என்பது போன்ற மருத்துவ நுணுக்கங்களை நாம் புரிந்துக் கொள்ளும் வகையில் தந்திருக்கிறார் டாக்டர் ராஜன்.

நானும் டாக்டர் ராஜனும் திருச்சிராப்பள்ளிச் சிறைச்சாலையில் ஒரு வருடம் கூடவே இருக்குந்தோம். அப்போது மிகச் சிரமப்பட்டு இன் நூலை எழுதினார் என்று தனது முன்னுரையில் கூறுகிறார் சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியார். அந்தக் காலத்து நடையில் எந்த உருத்தலும் இல்லாமல் இந்த காலத்தில் படிப்பது என்பதே சிறந்ததொரு தருணம்தான்.

'எதைத் தின்றால் பித்தம் தெளியும்'   என்ற சராசரி மருத்துவ ஆலோசனையிலிருந்து ஒரு மாறுபட்ட கோணத்தில் எல்லோருக்கும் புரியும்படி வெளிவந்திருக்கிறது. அடிப்படை மருத்துவம், சுகாதாரம், வீடும் அதன் சுற்றுபுரம், பட்டினி என்று 25 அத்தியாங்களில் 563 பக்கங்களில் நம்மை காக்கும் ஒரு கடவுளாக அவதாரமெடுத்து வந்திருக்கிறது இன் நூல். வெறும் மருத்துவ குறிப்புகள் என்று ஜல்லி அடிக்கும் மனோ நிலையிருந்து விலகி, நம் அருகில் அமர்ந்து...இன்னும் ஸ்டூலை அருகில் இழுத்துப் போட்டுக் கொண்டு... நமது நோய் பற்றி விளக்கம் கூறும் கருணை மிகுந்த மருத்துவரை போன்று நம்முடன் உரையாடுகின்றது  இன் நூல்.

-தோழன் மபா.

(11/1/2014 அன்று தினமணி 'சென்னை புத்தகக் காட்சி சிறப்பு மலரில்' நான் எழுதிய புத்தக விமர்சனம்.)

9 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அடடா...! இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே...! நண்பர்களிடம் சொல்லி வாங்கி விடுகிறேன்... நன்றி...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

அந்த புத்தகம் நிச்சயம் 'நம்ம வீட்டு டாக்டர்' என்பது மிகச் சரியானது!

இராய செல்லப்பா சொன்னது…

நண்பரே, இந்தப் பதிவை, புத்தகக் கண்காட்சி முடிவதற்கு முன்னால் வெளியிட்டிருந்தால் பத்து சதம் தள்ளுபடியில் வாங்கியிருக்கலாமே! இப்படி நஷ்டம் உண்டாக்கலாமா நீங்கள்?

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@திண்டுக்கல் தனபாலன்.
உடனே வாங்கிடுங்க. உடம்புக்கு நல்லது!.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@கரந்தை ஜெயக்குமார்.

வாங்கி படியுங்கள் அய்யா. நல்லதொரு மருத்துவ புத்தகம் அது!.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

நம்ம வீட்டு டாக்டருதான். எப்ப கூப்பிட்டாலும் வருவார்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@Rathnavel Natarajan.
நன்றி சார்!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@Chellappa Yagyaswamy.

நோ...பிராப்ளம் சார், சந்தியா பதிப்பகம் சொளந்தர்ராஜன் சாரிடம் சொல்லி கூடுதல் கழிவு வாங்கித் தருகிறேன்.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...