செவ்வாய், ஏப்ரல் 07, 2026

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன் 

தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும். அவர்களின் படபடவென சுறுசுறுப்பும், அறிவார்ந்த செயல்திறனும் நமக்கு என்றும் வியப்பைத் தரும்!. அவர்களின் தொய்வில்லாப் பணி ஆர்வம், நம்மையும் தொற்றிக் கொள்ளும். அப்படியான ஒரு மனிதர்தான் தினமணியின் இணை ஆசிரியர் ஜே.ரங்கராஜன். பத்திரிகைத் துறையில் 40 ஆண்டுகளைக் கடந்த ஞாயிறு அன்று பூர்த்தி செய்து, இன்றும் பலருக்கு வழிக்காட்டியாக ஜொலித்துக் கொண்டு இருக்கிறார்.

ஒரு விஷயத்தை அவரிடம் சொல்வதற்காக  தொடர்பு கொண்டால்.... நாம் சொல்வதற்கு முன்பே, நாம் சொல்லவந்ததை யூகித்து…. அவரே கடகடவென சொல்லிவிடுவார். “இதைதானே சொல்ல வந்தீங்கஎப்படி  ?”  என்பார் கூலாக. சிரித்துக் கொண்டு; அப்படி ஒரு மதியூகம் !.

தினமணியில் சேர்ந்த போது, ஒரு செய்திக்காக அவரை தொல்லை செய்ய வேண்டி இருந்தது.  என்ன நினைத்தாரோ.? கையைப்பிடித்து நேராக அழைத்துப் போய்  அப்போதைய தினமணி ஆசிரியர் ஆர்.எம்.டி. சம்பந்தம் சார் முன்பாக நிற்க வைத்துவிட்டார். “இந்த பையன் என்னை தொல்லை செய்து கொண்டு இருக்கிறான்என்று சொல்லிவிட்டர். அவர் நேராக எங்களது துறைத் தலைவருக்கு போன் செய்துவிட்டார். பிற்பாடு அவரிடத்தில் என்ன தலைவா இப்படி பண்ணிட்டிங்களே ?” என்றேன். 

எங்கள் நட்பு இப்படிதான் தொடங்கியது. எடிட்டோரியலுக்கும் மார்க்கெட்டிங்குக்குமான உறவு எப்போதும் இப்படிதான் ஏற்றம் இறக்கமாகத்தான்  இருக்கும்.

நாற்பது ஆண்டுகளான இதழியல் பெரும் பணியில் தினமணி மருத்துவ மலர்’ மூலம் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் ஜே.ரங்கராஜன். இதழியல் பணி மூலமாக  மருத்துவத் துறைக்கும் அவர்கள் ஆற்றியப் பணி மெச்சதக்கது.  அலுவலகத்தில் யாருக்கு எந்த மருத்துவ உதவி என்றாலும் அதை முன்னின்று செய்து கொடுத்துவிடுவார்.   எனது மகன் குறைமாத குழந்தையாக பிறந்த போது, அப்போதைய மருத்துவத் துறை இயக்குநர் மீர் முஸ்தபா அவர்களிடம் சொல்லி எனக்கு உதவி புரிந்தார். அதை என்றும் மறக்க முடியாது. எவருக்கும் சளைக்காமல் உதவி செய்வார்.

போரூர் ராமசந்திரா பல்கலைக்கழக செய்தி இயக்குநராக இருந்த நல்லமுத்து சாரிடம் பேசும் போது ஒரு சம்பவத்தை என்னிடம் பகிர்ந்துக் கொண்டார்.  ஒரு முறை நான் ரயிலில் பயணம் செய்த போது, எதிர் சீட்டுக்காரர் ஒரு புத்தகத்தை ரொம்ப சுவாரசியமாக படித்துக் கொண்டு இருந்தார். அந்த புத்தகம் கிழியாமல் இருக்க அட்டை வேறு போட்டிருந்தார். இப்படி ஆழ்ந்து படிக்கிறரே.? அது என்ன புத்தகமாக இருக்கும் என்று எனக்கு ஆர்வம் ஏற்பட்டது; கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர்அது என்ன புத்தகம் ?” என்று கேட்டதில், அதுதினமணி மருத்துவமலர்’ என்று தெரிந்தது. புத்தகத்தை படிக்க படிக்க மருத்துவம் சார்ந்த அத்தனை தகவல்களோடு மருத்துவமலர் சிறப்பாக தயாரிக்கப்பட்டிருந்தது.  

தினமணி முன்னாள் ஆசிரியர் 

ஆர்.எம்.டி. சம்பந்தம்


 

இதற்காக உங்கள் ஆபிஸ் வந்து ஆர்.எம்.டி.யை சந்தித்து இந்த சம்பவத்தை பகிர்ந்துகொண்டேன். இண்டர்காமில் ரங்கராஜனை அழைத்த ஆர்.எம்.டி, “உங்கள் பாராட்டுக்கு முழு சொந்தக்கரர் இவர்தான்என்று ரங்கராஜனை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார் என்றார்.

தினமணியில் 1995-ஆண்டு நிருபர்கள் பிரிவில் தமக்கு அளிக்கப்பட்ட மருத்துவத் துறையை பெரிய வரமாகக் கருதி, மருத்துவம் சார்ந்த தமிழாக்க சொற்களைதான் ரங்கராஜன் அதிகம் பயன்படுத்துவார், பல மருத்துவ நிபுணர்கள் மூலம் மருத்துவம் குறித்த ஏராளமான தகவல்களை தினமணி வாசகர்களுக்காக வழங்கினார். இவரது மருத்துவ கட்டுரைகள் வாசகர்களிடையே ஏக பிரசித்தம்.  

பிற துறையினர் தமிழில் புலமை பெறுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். தமிழ்ப்புலமையாளர்கள், அறிவியல்துறைகளில் தேர்ச்சி பெறுவதைக் கடப்பாடாகக் கொள்ள வேண்டும் என்று தஞ்சை தமிழ் பல்கலைக்கழம் கூறுவது போல்…தனது மருத்துவக் கட்டுரைகளில் அதிகம் தமிழ் சொறகளை ரங்கராஜன் பயன்படுத்தினார்.

உதா: அகச்சுரப்பியியல் – Endocrinology, அடிசிலியல் – Aristology, அடையாளவியல் – Symbology, உடலியல் – Physiology, உடற் பண்டுவஇயல் – Phytogeography, உடற்பண்பியல் – Somatology, உடுவியக்கவியல்Cornea- கருவிழி வெண்படலம், Asteroseismology , உணர்வகற்றியல் – Anesthesiology, எலும்பியல் – Osteology,  எலும்பு நோய் இயல் - Osteo pathology, ஒளி உயிரியல் – Photobiology, ஒளி விளைவியல் – Actinology, ஒளிவேதியியல் - Photo Chemistry இப்படி சொற்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
      

எழுபதுகளில் இவரது  தாய் வழி தாத்தா பத்மநாபன் மன்னார்குடியில் பத்திரிகைகளின் முகவராக  இருந்தார். தினந்தோறும் அதிகாலை தாத்தாவின் கடையில் சுதேசமித்திரன், அலை ஓசை, மக்கள் குரல், தினமலர், ஹிந்து (ஆங்கிலம்) நாளிதழ்கள், பாட புத்தகங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய உதவிய பிறகு பள்ளிக்கூடம் செல்வதை வழக்கமாகக் கொண்டார் ரங்கராஜன். இதனால் பள்ளியில் படிக்கும் காலம்தொட்டே ரங்கராஜன் அவர்களுக்கு  பத்திரிகை ஆர்வம்  வந்துவிட்டது.

1964-இல் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பிறந்தவர்; தற்போது அவருக்கு 62 வயதாகிறது மனிதரிடம் சுறுசுறுப்பு மட்டும் குறையவில்லை. ஒரு தேனி போன்ற  சுறுசுறுப்பு !

காரைக்குடி அழகப்பா கல்லூரியில் எம்.எஸ்ஸி. (கணிதம்) படிப்பை 1986-இல் முடித்த பிறகு, இதழியல் துறை ஆர்வம் காரணமாக தினமலர் திருச்சி பதிப்பில் 1986 இல் பிழை திருத்துநராகப் பணியில் சேர்ந்தார் ரங்கராஜன். “எம்.எஸ்ஸி. கணிதம் படித்து விட்டு பத்திரிகை துறை பணி தேவையா  ?”  என்ற தாத்தாவின் அறிவுரையை ஏற்க மறுத்து, ஆர்வம் காரணமாக தாத்தாவின் உதவியுடன் இதழியல் துறையைத் தேர்வு செய்து, . சென்னை  தினமணியில் 1987-ல் பணியில் சேர்ந்தார்.

தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

 

தினமணியில் நிருபராகப் பணியாற்றியபோது இவர் அளித்த சிறப்புச் செய்திகள் அரசின் கவனத்தை மட்டுமல்லாது, பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தன. தினமணியில், பிழை திருத்துநர், நிருபர், முதுநிலை நிருபர், தலைமை நிருபர், தலைமைச் செய்தியாளர் (சிஓபி), சிறப்பு நிருபர், ஆசிரியர் உரைப் பக்க பொறுப்பாளர், செய்தி ஆசிரியர் எனப் படிப்படியாக உயர்ந்து இணை ஆசிரியர் (அசோசியேட் எடிட்டர்) என்று உயர்ந்து நிற்கிறார்.

இவரது இடைவிடாத பணித்திறனை கண்ட தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள்,  இவருக்கு இணை ஆசிரியர்  பதவி தந்து அங்கீகாரம் தந்திருக்கிறார்.  ஆசிரியர் அவர்களோடு அணுக்கமாக இருந்து  இருந்து தினமணியின் தனித்துவம் குன்றாது பார்த்துக் கொள்கிறார்.

சமூக ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் கோலோச்சும் இந்தக் காலகட்டத்தில் அச்சு ஊடகங்களின் தேவையும் அவற்றின் இன்றியமையாத பங்களிப்பையும் வெகுஜன மக்கள் உணர தொடங்கியுள்ளனர். மக்களின் கவனம் பத்திரிகைகளின் மீது மீண்டும் திரும்பத் தொடங்கி இருக்கிறது. சமூக ஊடகங்கள் போல் அச்சு ஊடகத்தை போகிற போக்கில் கையாள முடியாது. அதற்கு நேரம் காலம் உணரா அயராத உழைப்பும், அர்ப்பணிப்பு மன நிலையும் அவசியம். ஜே. ரங்கராஜன் போன்ற மூத்த பத்திரிகையாளர்களே கண்ணுக்கு தெரியாத வேர்கள் போல் காத்திரமாக செயல்பட்டு வருகின்றனர்.

-மபா

----------------

கருத்துகள் இல்லை:

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...