வெள்ளி, நவம்பர் 02, 2018

பிறிதொன்றாய் - கவிதை

இந்த வாரம் (29.10..2018)  கல்கி இதழில் எனது கவிதை !

-----------------------------

'பிறிதொன்றாய்'

குட்டி மீன்கள் நீந்தும் அத்தடாகத்தில்
அவன் மிதந்துக்கொண்டு இருந்தான்
நேற்றைய இரவுகளில் அவன்
உயிரோடு இருந்தானா என்பதை இனிதான்
துப்பு துலக்க வேண்டும்.

பல முறை அவன் இதே தடாகத்தில்
மீன்களிடத்தில் இளைப்பாறியதுண்டு

அவனது தோல்கள் உரிந்து செதில்களாக உதிரும்வரை...
அவன் அவற்றோடு நீந்தி களித்தின்புறுவான்

காலிடிக்கில் வழுக்கிச் செல்லும் அம் மீன்கள்
அதற்காக அவனிடத்திலிருந்து பொறிகளை பரிசாக பெறுவதுண்டு
சொப்புவாய்யைத் திறந்து கவ்வும் அழுகே...அழகு!

கொதி நிலையற்ற அவ்வாழ் பிரதேசத்தில்
தக்கையாகும் வரை நீந்துவான்.

அக்கரையில் மிதந்த அவனது உடலை
இடுப்பில் கயிறுக் கட்டி இக்கரை கொண்டுவந்தார்கள்

இனி அவனது உடலை பிரேதப்பரிசோதனை செய்யவேண்டும்

புறம் அகம் எதுவுமின்றி உயிர் போன
தடமுமின்றிக் கிடந்தான் அவன்.

அறிக்கை; 'சந்தேகத்திற்கிடமான மரணம்' என்று சொல்லிவிட...

அத்தடாகமெங்கும்
மீன்கள் துள்ளிக் குதித்து நீந்தின
புதிதாய் வந்த மீனுடன்.

-தோழன் மபா

திங்கள், ஜூலை 03, 2017

விபத்து தரும் பாடம் - தோழன் மபா


தினமணியில் வந்த கட்டுரை

By தோழன் மபா  |   Published  in Dinamani on : 29th June 2017 01:46 AM  |

   புனித ரமலான் மாதத்தில் பெரும் தேசிய சோகத்தை சந்தித்திருக்கிறது பாகிஸ்தான். கடந்த ஞாயிற்றுக் கிழமை பெட்ரோல் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து, வெடித்துச் சிதறியதில் ஏறத்தாழ 153 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அது வெறும் சாலை விபத்தாக மட்டும் இருந்திருந்தால், இத்தகைய உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது. அதையும் தாண்டி மனித மனதின் இலவச அல்ப ஆசை ஒரு மாபெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணம் லாகூர் நகரை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றுக் கொண்டு இருந்த பெட்ரோல் லாரி விடியற்காலை 6.30 மணிக்கு டயர் வெடித்ததன் காரணமாக நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.

லாகூருக்கு 400 கீ.மீ. தொலைவிலுள்ள பஹவல்பூர் மாவட்டம், அகமதுபூர் ஷார்கியா பகுதியில் நேரிட்ட இந்த விபத்தில், லாரியிலிருந்த பெட்ரோல் வெளியேறி கிட்டத்தட்ட 25 ஆயிரம் (5500 கேலன்ஸ்) லிட்டர் சாலையின் அருகில் இருந்த வயல்களில் ஆறாக ஓடியது.


கோர விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி
சுற்றி வளைத்த தீ










சுவடுகள்
அருகில் இருந்த கிராம மக்கள் இதைக் கேள்விப்பட்டதும் பெரும் திறளாக, கைகளில் கேன்களுடனும் பெரிய பெரிய டின்களுடனும் வந்து ஆறாக ஓடிய பெட்ரோலை கேன்களில் பிடித்து நிரப்பிக் கொண்டனர்.
இந்த விபத்தைப் பற்றியும் பெட்ரோல் ஆறாக ஓடுவதும் பற்றியும் அருகிலிருந்த மசூதியின் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தகவலும் எச்சரிக்கையும் விடப்பட்டது. மக்கள் பெரும் கூட்டமாக பைக்குகளிலும் வண்டிகளிலும் வந்து பெட்ரோலை பிடிக்க ஆரம்பித்தனர்.

அப்போது பெட்ரோல் லாரி திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த யாரோ ஒருவர் புகைப்பிடிப்பதற்காக தீ குச்சியைப் பற்ற வைத்ததில், காற்றில் ஆவியாக பரவி இருந்த பெட்ரோல் தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த பகுதியில் காற்றில் பரவி இருந்த பெட்ரோல் தீ பற்றி ஒரு நெருப்புக் கோளம் போல் ஆகிவிட்டது.

உடனே ஆவியாகக் கூடிய பெட்ரோல் தனது அடர்த்தியின் காரணமாக காற்றில் அப்படியே பரவி இருக்கும். இத்தகைய விபத்துகளில் கசிந்து ஓடும் பெட்ரோல் அவ்வளவு எளிதில் கரைந்துவிடாது.

இந்த சம்பவத்தில் 25 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் என்பதால் அடர்த்தியும் எளிதில் தீப்பற்றக் கூடிய தன்மையும் அதிகம். அதனால் ஒரு சிறு தீப் பொறி கூட பெரும் சேதத்தை விளைவித்துவிடும். அதுவே நிகழ்ந்திருக்கிறது.
பெட்ரோலை சேகரித்துக் கொண்டு இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தீயில் எரிந்து கரிக்கட்டையாக மாறிவிட்டனர். 130 பேர் 80 சதவீதம் தீக்காயத்தால் முல்தானில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தில் பலர் இந்த விபத்தில் மாண்டிருக்கின்றனர். அங்கிருந்த லாரி, பைக், கார் என்று நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாயின. 

எப்போதும் துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு என்று நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு இது ஆறாத ரணம்.

சுல்கா பீபீ என்பவர் தனது இரண்டு மகன்களை தேடிக் கொண்டு இருக்கிறார். உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கரிக்கட்டையாகக் கிடக்கும் மனித உடல்களில் தனது மகன்களை தேடிக் கொண்டு இருக்கிறார். உடல்களை அடையாளம் காண மரபணு சோதனைக்கு உத்தரவு இட்டிருக்கிறது பஞ்சாப் மாகாண அரசு.
புனித ரமலான் மாதத்தின் கடைசி நாளான ஈதுல் பித்தர் அன்று இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சவூதி அரேபியா போன்ற நாடுகள் ஞாயிற்றுக்கிழமையே ரமலான் பண்டிகையை கொண்டாடிவிட, பாகிஸ்தான் மட்டும் திங்கள்கிழமை கொண்டாட இருந்தது. அதற்குள் இப்படிப்பட்ட துயரம் நிகழ்ந்துவிட்டது.

மக்களின் ஆசையே, மாபெரும் துயரத்தையும், மனித இழப்பையும் கொண்டு வந்திருக்கிறது. பெட்ரோல் இலவசமாக பெறுவதற்காக தங்களது உன்னதமான உயிரை இழந்திருக்கின்றனர். எத்தகைய கொடூரம் இது?
காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து செயலாற்றியிருந்திருந்தால், இத்தகைய உயிரிழுப்பு ஏற்பட்டு இருந்திருக்காது. விபத்து நடந்த சாலையில் போக்குவரத்தை தடை செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் போக்குவரத்தை அனுமதித்திருந்தனர். அதோடு மக்களை விபத்து நடந்த இடம் அருகில் வரவிடாமல் செய்திருக்க வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் செய்திருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாததால், மக்கள் அதிக அளவில் வந்துவிட்டனர்.

போலீஸாரின் அலட்சியத்தால்தான் இப்படிப்பட்ட பெரும் விபத்துகள் நடக்கின்றன. எததெற்கோ கடுமைக் காட்டும் காவல் துறை, இத்தகைய ஆபத்தான விஷயங்களில் மெத்தனமாக இருப்பது வேதனை அளிக்கிறது. அந்த மெத்தனமே மக்களை விபத்து நடந்த இடத்திற்கு அருகில் வரச் செய்திருக்கிறது.

போலீஸாரை குறை சொல்லும் அதே நேரத்தில், மக்களையும் நாம் கண்டிக்க வேண்டும். கசிந்து ஓடுவது பெட்ரோல் என்று தெரிந்தும், இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக பேரல்களை எடுத்துக் கொண்டு வந்தவர்களை என்னவென்று சொல்வது?

நமது நாட்டிலும் இலவச வேட்டி, சேலை வழங்கும்போதும், கோயில்களில் அன்னதானம் வழங்கும்போதும் ஏற்படும் கூட்ட
நெரிசல்களில் பலர் உயிரை இழந்திருக்கின்றனர்.

ஒரு பக்கம் அரசு தரும் இலவசங்களால் மக்கள் சோம்பேறிகளாக மாறிக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் இப்படியான இலவச மனோபாவங்களால் தங்களது விலை மதிக்கமுடியாத உயிரை இழப்பது வேதனையிலும் வேதனை.

இத்தகைய விபத்துகளில் நமக்கான படிப்பினையும் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

-நன்றி தினமணி

செவ்வாய், மார்ச் 21, 2017

மறுதாம்பு புத்தகம் பேசுது விமர்சனம்





    னிப்பும், கசப்பும் கொண்ட வாழ்வில் பொய்மையும் ஒரு சுவையென்று அறியும் தருணத்தில் வாழ்விற்கான நீட்சியை இனங்காண்கிறார் தோழன் மபா. வாழ்க்கையை விரிவாக்கம் செய்து ஓலை அனுப்பியிருந்த கடவுள், மனிதர்கள் ‘மால்’களின் மின் தூக்கிகளில் கடைவாயில் அதக்கிய பீட்ஸாவுடன் வார இறுதிப் பொழுதுகளில் கடன் அட்டைகளைக் கையில் ஏந்தி களமாடும் போக்கைக் கோபத்துடன் கவனித்திருக்கிறான். எருக்கஞ்செடி மண்டி, ஏர் உழாமல் பாலையாகி விட்ட நிலங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது கடவுளின் கேள்வி; (ப.103). ‘வந்தேறிகள் சூழ் உலகு’ என்ற இன்றைய உலகை ஆள்வோர் யாரென இனங் காட்டுகிறார்.

கண்ணியமிக்க கனவான்களே உலகம் முழுவதும் நிறைந்து இருப்பதையும், குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து பிஞ்சுக் கைகளில் இரத்தத்தைப் பூசுவதற்கும், உலகளாவிய விதத்தில் போர்களைத் திணிப்பதற்கும் அவர்கள் திட்டமிடுவதையும் அம்பலப்படுத்துகிறார். செம்பரம்பாக்கம் ஏரிக்கரை உடைத்துப் பெருகி சென்னை மாநகரை மூழ்கடித்த ஊழிப் பெருவெள்ளம் வடிந்தபின் நகரெங்கும் பூத்திருந்த பாலித்தீன் (நச்சுப்) பூக்களைக் காட்சிப்படுத்துகிறது ஒரு கவிதை. ‘கட்டிங் கேட்ட கடவுள்’, ‘ஆதி நிலத்து தேவதை’ ‘அது மாத்திரம்‘ கவிதைகளில் சாதியத்தின் மீது சவுக்கடி வீசுகிறார் தோழன் மபா.  


”தோழன் மபாவின் கவிதைகள் நாம் அறியாத சந்து பொந்துகளுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன” என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். ‘மேய்ச்சல் நிலம்‘, வளமான வண்டல்மண் படிவுகள் நிரம்பியதுதான் என நிறுவுகிற படைப்பு. நேரடியாகவும், வெடிப்புறவும் பேசுகிற வரிகள். ‘மறுதாம்பு’கள் மீண்டும் மீண்டும் துளிர்க்கும் என்பதில் ஐயமில்லை. எழிலார்ந்த அட்டையும், ‘மண்குதிரை’ச் சின்னமும் பொருத்தமானவை.

சனி, ஜனவரி 21, 2017

மறுதாம்பு கவிதை நூல் வெளியீடு

சமகால பிரச்னைகளை கவிதைகள் பிரதிபலிக்க வேண்டும்: 

கவிக்கோ அப்துல் ரகுமான்.

 
மறுதாம்பு வெளியீட்டின் போது ... 
இடமிருந்து கவிஞர் வேல் கண்ணன்,   நூல் ஆசிரியர் தோழன் மபா, ஊடகவியலாளர் நாச்சியாள் சுகந்தி, தோழன் மபா வின் தந்தை பத்மநாபன், கவிக்கோ அப்துல் ரகுமான், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், கல்கி வார இதழ் தலைமை துணை ஆசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா. 

      மகால பிரச்னைகளை பிரதிபலிப்பதாக கவிதைகள் இருக்க வேண்டும் என கவிக்கோ அப்துல் ரகுமான் வலியுறுத்தினார்.


கவிஞர் தோழன் மபா எழுதிய "மறுதாம்பு' கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை (02/01/2017) நடைபெற்றது. விழாவுக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்து நூலை வெளியிட, கவிக்கோ அப்துல் ரகுமான் பெற்றுக் கொண்டார்.



பின்னர் விழாவில் கவிஞர் அப்துல் ரகுமான் பேசியது: இந்தக் காலத்தில் சமுதாயத்தில் நடக்கும் அவலம், உண்மைகளைப் பேச யாரும் தயாராக இல்லை என்ற ஆதங்கம் பலரிடையே இருக்கிறது. எது உண்மை என்று தெரியாத நிலையிலேயே பலர் இருக்கிறார்கள். இது பற்றிப் பேசுகையில் "பெரியவங்க பொய் சொன்னா பேப்பரில போடுறான். சின்னவங்க உண்மை சொன்னா ஜெயிலுக்குள்ள போடுறான்' என்று கொத்தமங்கலம் சுப்பு எழுதிய வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.


தான் எழுதிய நூலுக்கு "மறுதாம்பூ' என்ற அற்புதமான பெயரை வைத்த தோழன் மபா தனது மனைவி, தந்தை ஆகியோரையும் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்து கௌரவித்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில், இதுபோன்ற நிகழ்வுகள் இன்று அரிதாகி வருகின்றன. மபா எழுதிய கவிதைகள் எதுவுமே மனைவியை வைத்துக் கொண்டு சொல்வதற்கு தயங்கும் கவிதைகள் இல்லை. ஒரு படைப்பு அப்படித்தான் இருக்க வேண்டும்.


சமுதாய நோக்கம் அவசியம்: கவிதைகளில் நவீனத்துவம் எப்போதோ வந்து விட்டது. சிலர் அறியாமையின் காரணமாக "வசனத்தை ஒடித்துப் போட்டால் புதுக்கவிதை' என்கிறார்கள். அது தவறு. "ஒடித்துப் போடப்பட்ட மனிதர்களைப் பற்றி எழுதுவதுதான் புதுக்கவிதை'. பொதுவாக கவிதைகளில் தற்போதைய பிரச்னைகளைப் பற்றி சொல்வது அவசியம். சமகாலப் பிரச்னைகளை பிரதிபலிக்கும் கவிதைகள்தான் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.


வீழாதததற்கு விருது வழங்க வேண்டும்: புயலில் கீழே விழுந்து கிடக்கும் மரங்களைப் பார்க்கும்போது எனக்கு அழ வேண்டும்போல் தோன்றியது. அதனால் இந்த விழாவுக்கு வருவதற்கு முன்பு "வெறித்தனமாக வீசிய புயலோடு வீராவேசமாக போராடி நின்று கொண்டிருக்கும் மரங்களுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும்' என்று ஒரு கவிதையை எழுதிவிட்டுத்தான் வந்தேன். இன்றைய சூழலில் தென்றலைக் காட்டிலும் புயலைப் பற்றிக் கூறுவதே சரியாக இருக்கும். சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தாத கருத்துகள் இல்லாவிட்டால் கவிதை எழுத வேண்டிய அவசியமே இல்லை.
அந்தக் காலத்தில் தீபாவளி மலரில் மட்டும்தான் கவிதைகள் வெளியாகும். இப்போது கவிதைகள் வெளியாகாத செய்தித்தாள்களே இல்லை. கவிஞர்கள் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதட்டும். அவற்றில் ஒரு கவிதையாவது சமூகத்துக்குப் பயன்பட்டாலே போதுமானது. அன்றாடம் நிகழும் வீட்டுப் பிரச்னைகள், சமூக அவலங்கள் குறித்து ஒருவர் எழுதினால் அவரையும் அவர் கவிதையையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அதுதான் நாம் எழுத்துக்கு கொடுக்கும் மிகப்பெரிய கௌரவம் என்றார் அவர்.


முன்னதாக கல்கி வார இதழ் தலைமை உதவி ஆசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா, கவிஞர் நாச்சியாள் சுகந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அப்போது மறுதாம்பு கவிதை நூலில் இடம்பெற்றுள்ள சமுதாய சிந்தனைகள் கொண்ட கவிதைகளை மேற்கோள் காட்டி விளக்கினர்.


விழாவில் ரஹமத் பதிப்பக உரிமையாளர் முஸ்தபா, கவிஞர் வேல்கண்ணன், மபாவின் தந்தை கே.பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் 

 தினமணி ஆசிரியர் கி.வைத்திய நாதன் உரை:

https://www.youtube.com/watch?v=fbs4ToqQARo

கல்கி வார இதழ் துணை ஆசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா உரை:

 https://www.youtube.com/watch?v=CYBLRKvnd-8&t=21s

கவிஞர் சுகந்தி நாச்சியாள் உரை

https://www.youtube.com/watch?v=ZeHCHHKlIdY 

மனைவியிடம் எதையும் மறைக்ககூடாது - கவிக்கோ அப்துல் ரகுமான் நகைச்சுவை பேச்சு | Kaviko Abdul Rahman

https://www.youtube.com/watch?v=3lgUvNoTZCc


வியாழன், டிசம்பர் 29, 2016

மறுதாம்பு புத்தக வெளியீட்டு விழா

       திசையறியாது திகைத்து நின்றவனுக்கு வழி காட்ட எத்தனையோ நல் உள்ளங்கள். சிக்கிக்கொண்ட ஆற்றுச் சுழலில் அதன் போக்குணர்ந்து போராடுபவனுக்கு நம்பிக்கையாய் கரை தெரிவதுபோல் இதோ 'மறுதாம்பு' எனது கவிதை நூல் வெளிவரத் தயாராக இருக்கிறது.


அழைப்பிதழ்

வரும் ஜனவரி இரண்டாம் தேதி மாலை 6 மணிக்கு கவிக்கோ மன்றத்தில்

 மறுதாம்பு புத்தக வெளியீட்டு விழா

தினமணி ஆசிரியர் திரு கே.வைத்தியநாதன் அவர்கள் தலைமையேற்று நூலை வெளியீடுகிறார்கள்.

கவிதைகளின் சக்ரவர்த்தி, கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் சிறப்புரை.

நண்பர் அமிதம் சூர்யா மற்றும் சுகந்தி நாச்சியாள் வாழ்த்துரை.

நண்பர் வேல் கண்ணன் அவர்கள் விழாவினை தொகுத்து வழங்குகிறார்.

அனைவரும் வருக!. உங்கள் வருகையால்தான் இவ் விழா மேலும்
 சிறப்படையும்!.

உங்களுக்காக Iam waiting

#மறுதாம்பு

செவ்வாய், நவம்பர் 22, 2016

எனது முதல் கவிதை தொகுப்பு 'மறுதாம்பு'.




மறுதாம்பு  கவிதை தொகுப்பு    


         டந்த ஞாயிறு  அன்று தினமணியில் (13.11.2016)  'இந்த வாரம்' பகுதில், வெளிவரப் போகும் எனது 'மறுதாம்பு' கவிதை தொகுப்பிலிருந்து 'நந்தி' என்ற கவிதையை வெளியீட்டு எனது கவிதை தொகுப்பை முன் மொழிந்திருக்கின்றார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்.

என்றோ தொடங்கப்பட்ட எனது பயணம், இன்றுதான் ஒரு இலக்கை அடைந்திருக்கிறது.
எனது கவிதை தொகுப்பு 'மறுதாம்பு' வேலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 6 மாதமாகிவிட்டது. இதோ முடிவுற்று புத்தகமாய் வெளிவர இருக்கின்றது. அச்சு வேலை முடிந்தப்பின் கவிதை புத்தகத்தைப் பற்றி முக நூலில் அறிமுகம் செய்யலாம் என்று இருந்தேன், ஆனால் அதற்கு முன்னர் தினமணியே எனது கவிதை தொகுப்பை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகம் செய்திருப்பது, நான் பெற்ற பேறு!.
தினமணியில்  வந்த அறிமுகம் 
டெல்டா மாவட்ட விவசாயிகளின் வலியை சொல்லக் கூடிய மிகச் சிறிய, மிக எளிமையான கவிதைதான் 'நந்தி'. மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் குறையத் தொடங்கினால், அணையிலிருக்கும் நந்திச் சிலை வெளியே தெரிய ஆரம்பிக்கும். நந்தி சிலை வெளிய தெரிய ஆரம்பித்தால், காவிரி ஆற்றை நம்பி வாழும் விவசாயி கவலைக் கொள்ள ஆரம்பித்துவிடுவான். இதை பின்னணியாக வைத்தே இக் கவிதையை எழுதினேன்.


நந்தி


மேட்டூரில்

நந்தி தெரிந்தால்

கீழையூரில் 
எங்கள் 
தொந்தி காயும்.


                                      ()()()
ஜனவரி சென்னை 

புத்தகக் காட்சிக்கு ரிலீஸ்!. 

      

     தில் கீழையூர் என்ற ஊர், காவிரி ஆறு கடல் புகும் பூம்புகாருக்கு அருகில் இருக்கிறது. மறுதாம்பு வரும் சென்னை புத்தகக் காட்சிக்கு வெளிவரயிருக்கிறது. இக்கவிதை தொகுப்பை 'மேய்ச்சல் நிலம்' பதிப்பகம் வெளியீடுகிறது.

அதென்ன 'மறுதாம்பு' என்று நீங்கள் கேட்கலாம்?. அறுவடை முடிந்தப் பின்னரும், மீண்டும் கிளைத்து எழும் நெற்கதிரே மறுதாம்பு. அதையே எனது கவிதைப் புத்தகத்திற்கு பெயராக வைத்துவிட்டேன். அடிப்படையில் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த நமக்கு இதுவே சாஸ்வதம்!.

தினமணி ஆசிரியருக்கு எனது நன்றியும் அன்பும்!.
அன்புடன் 
தோழன் மபா

ஞாயிறு, அக்டோபர் 16, 2016

வதந்தி பரப்புவர்கள் மீது கைது நடவடிக்கை; தமிழக அரசு மீது மக்கள் அதிருப்தி!





        முன் எப்போதும் இல்லாத வகையில் முகநூல் மற்றும் ட்விட்டர்களில் எழுதுபவர்கள் கிலிப் பிடித்துக் கிடக்கின்றனர்.  முதல்வர் ஜெயலலிதா உடல் நிலைப் பற்றி தவறான தகவலைப் பரப்பினார்கள் என்று இதுவரை 52 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது தமிழக காவல் துறை. அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து கோவையில் இரு வங்கி ஊழியர்களை கைது செய்து, சிறையில் அடைத்திருக்கிறது. தமிழக காவல் துறையின் இந்த ஏதேச்சதிகார நடவடிக்கை,  மக்களிடையே ஒரு வித வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது!.

முதல்-அமைச்சர் உடல் நிலைக்குறித்து வதந்தி பரப்பியதாக ஏற்கனவே மாடசாமி, சதீஷ் குமார், பாலு, திருமணி செல்வம், ரமேஷ்குமார், சுரேஷ் குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மணப்பாடு கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ மத போதகர் ஆண்டனி ஜேசுராஜ், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இத்தைகைய கைது நடவடிக்கையால் மக்களிடையே அதிருப்தி எழுந்துள்ளதை தமிழக அரசு கவனித்ததா என்று தெரியவில்லை?. 

சமூகவலைத் தளங்களான முகநூல், ட்விட்டர், வாட்ஸப் பயன்படுத்துவதுப் பற்றிய போதுமான விழிப்புணர்வு இன்னும் மக்களிடையே ஏற்படவில்லை. எத்தகைய தகவலை பகிரவேண்டும், எத்தகைய செய்திகளை லைக் செய்ய வேண்டும் என்ற குறைந்தப்பட்ச தெளிவு இல்லாமலேயே மக்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இணையத் தளங்களைப் பயன்படுத்துவோர் அதிகமாகிவிட்ட வேளையில், இதற்கான சட்ட பூர்வ விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்த வேண்டும். அதன் வாயிலாகவே இத்தகைய இக்கட்டுகளை நான் தவிற்க முடியும். பள்ளிக் கல்லூரிகளில் இதற்காண பாடத்திட்டத்தை வைத்தாலும் தவறில்லை. அந்தளவிற்கு மனிதன் குனிந்த தலை நிமிராமல் காலம் ஓட்டுகிறான்.

கடந்த 24 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. முதலில் சாதாரண காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மக்கள் மன்றத்தில் கூறிய தமிழக அரசு, போக போக முதல்வர் உடல் நிலைப் பற்றி தெளிவான தகவலை வெளியிடாமல் பார்த்துக் கொண்டது. 

முதல்வர் ஜெயலலிதா மீது பற்றும் பாசமும் கொண்ட இரத்தத்தின் இரத்தமான அதிமுக உடன்பிறப்புகள்,  ஆயிரக் கணக்கில் அப்பல்லோ மருத்துவமனையில் குவியத் தொடங்கினர். அப்பல்லோ வாசலில் குவிக்கப்பட்ட காவல் துறையினராலும், அப்பல்லோவைச் சுற்றி அமைக்கப்பட்ட தடுப்பரண்களாலும் ஒரு அசாதராண நிலை மாநிலம் முழுவதும் பரவத்தொடங்கியது. 

"இவ்ளோ போலீஸூ....... இவ்ளோ கெடுபிடி..... அப்ப அம்மாவிற்கு ஏதோ ஆயிடுச்சிடா" என்று சாதாரண அதிமுக தொண்டன் நினைக்கத் தொடங்கினான். விளைவு; முதல்வர் உடல் நிலைப் பற்றிய வதந்திகள் விர் விர்ரென்று எட்டுத் திக்கும் பறக்கத் தொடங்கியது. உண்மை நிலை தெரியாத மக்கள், அப்படி இருக்குமோ... இப்படி இருக்குமோ... யூகத்தின் அடிப்படையில் பேசியதே வதந்தியாக உருவெடுத்தது.   வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தவரும் தமிழ் நாட்டில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு போன் செய்து "அம்மாவுக்கு என்னதான் ஆச்சு?" என்று கேட்கும் அளவிற்கு விஷயம் உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது. . 

முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலையே அவரது உடல் நிலைக் குறித்த உண்மை நிலையை மக்களுக்கு விளக்கி இருந்தால், முதல்வர் உடல் நிலை என்பது விவாதத்திற்குரிய பொருளாக இல்லாமல், நலம்பெற வேண்டுதலுக்குரிய பொருளாக மாறியிருக்கும்.  ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு அடுத்த நாளே  முதலமைச்சர் முழுமையாக குணமடைந்து வழக்கமான உணவுகளை எடுக்கத் தொடங்கிவிட்டார் என்று கூறிய மருத்துவமனை கம் தமிழக அரசுதான், அடுத்த சில நாட்களில் முதலமைச்சருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது. இன்னும் நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாக மூலம் தெரிவித்தது. இத்தகைய முன்னுக்குப்பின் முரணான தகவல்தான், முதல்வர் உடல் நிலை குறித்து அரசு நிர்வாகம் தரும் தகவல் மீது நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தி, வதந்திகள் பரவ வாய்ப்பை உருவாக்கின என்பதை எவரும் மறுக்க முடியாது. 

நிலமை இப்படி இருக்க.... முதல்வர் உடல் நிலைக்குறித்து வதந்தி பரப்பினார்கள் என்று, அப்பாவிகளை கைது செய்வது நியாயமான செயல் அல்ல. இத்தகைய கைது நடவடிக்கையால், அந்த அப்பாவிகளின் வாழ்க்கை முற்றிலும் முடங்க வாய்ப்பிருக்கிறது.  இந்த கைது நடவடிக்கையால் அவர்களின் வேலை பறிபோகும், குடும்பத்திற்கு அவப்பெயர் உண்டாகும், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடும்.   கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப எதிர்கால நலன் கருதி அவர்களை உடனே விடிவிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பு. 

செய்யுமா தமிழக அரசு?.

-தோழன் மபா. 






 . 




ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்- கவிதை நூல் வெளியீடு




                   ரண்டு நாளுக்கு முன்னர் வரை 'பாலைவன லாந்தர்' என்றால் யார் என்றே தெரியாது. அதுவும் நண்பர் வேல் கண்ணன் அவரது முக நூல் பக்கத்தில் கவிதை வெளியீடு பற்றி தெரிவித்திருந்தார். பாலைவன லாந்தர் என்பது ஒரு பதிப்பகத்தின் பெயர் என்றே நினைத்திருந்தேன். கவிதை புத்தக வெளியீட்டிற்கு சென்ற பிறகுதான் தெரிந்தது. பாலைவன லாந்தர் என்ற பெயருக்குப் பின் ஒரு பெண் கவி இருக்கிறார் என்று!. 'லீடிங் லைட்ஸ்' போல காத்திரமான ஒரு மெட்டாலிக் பெயரை சூடிக் கொள்ளவே ஒரு துணிச்சல் வேணும். அந்தத் துணிச்சல் கவிஞர் பாலைவன லாந்தருக்கு இருக்கிறது! .


சென்னை மைலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் குளிரூட்டபபட்ட அரங்கில் நேற்று மாலை பாலைவன லாந்தர் எழுதிய 'உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்' கவிதை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் புத்தகத்தை வெளியிட, ஓவியர் மணிவண்ணன் பெற்றுக் கொண்டார். கவிதை நூல் குறித்து இந்திரன், எஸ். சண்முகம், அமிர்தம் சூர்யா, வேல் கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். உரை யூ டியூப்பில் காணக் கிடைக்கிறது.
புறம் மற்றும் அகச் சூழலில் காணும் எதுவும் கவிதை ஆகுமென்பதை இக் கவிதை தொகுப்பிலும் காண முடிகிறது. மிக சிரத்தையான வார்த்தை கோர்ப்புகளில் கவிதையெங்கும் இழையோடும் உக்கிரம், வெகுஜனத்தின் ஒரு குரலென நாம் மதிக்க வேண்டும். கொடி பிடிப்பவனுக்குள் இருக்கும் பாசாங்கற்ற முழக்கத்தினை பெண்ணிய குரலாக தனது கவிதைகளில் காட்சிப்படுத்துகிறார் கவிஞர். பெண்ணியத்தின் பொதுமை குற்றச்சாட்டுப் போல இங்கேயும் 'ஆண் குறி' ஒரு ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது.

அவர்களிடம் மூன்று ஆயுதங்கள் இருந்தன
கத்தி 
மரக்கட்டை 
அவர்களது ஆண் குறி

இக் கவிதைவரிகள் ஏதோ ஒரு சம்பவத்தின் குறியீடு என்றாலும், 'அது' தொங்குவதாலையே ஆண் மிக எளிதாக எதையும் கடந்து விடுகிறான்.. அல்லது எதையும் செய்ய துணிகிறான் என்பதையே சம கால சூழல் நமக்குச் சுட்டுகிறது. போகட்டும்.... அதே நேரத்தில் தனது தந்தைக்கும் ஒரு கவிதை (என் அப்பனுக்கு ஒரு கனவு இருந்தது) எழுதி அதை சமன் செய்துவிடுகிறார் பா.லா., இப்படியான சமன்பாடுகளில்தான் உலகம் இன்றளவும், ஆண் பெண்ணுக்கான புரிதலில் அன்பு கொண்டு இயங்குகிறது என்றே நினைக்கிறேன். வேறொன்றிலிருந்து இன்னொன்றாக அல்லது பிரிதொன்றிலிருந்து வேறொன்றாக வெளி வந்திருக்கிறது 'உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்' தொகுப்பு. பாலைவன லாந்தரின் முதல் கவிதைத் தொகுப்பு இது என்று; யாராவது சொன்னால்தான் தெரிகிறது!.

விழாவினை எழுத்தாளர் விஜய் மகேந்திரன் தொகுத்து வழங்கினார். இக் கவிதை தொகுப்பினை சால்ட் பதிப்பகம் வெளியீட்டு இருக்கிறது. நேர்த்தியான வடிவமைப்பில் கவிஞர் நரனின் மெனக்கெடல் தெரிகிறது. வாழ்த்துக்கள்!.
பக்கம் 112 
நூலின் விலை ரூ 100/-

-தோழன் மபா.

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...