வியாழன், ஜூலை 16, 2015

தினமணியின் 'ஈகை பெருநாள் சிறப்பு மலர்'.



இந்த வருடம் ரமலானை முன்னிட்டு "ஈகை பெருநாள் மலரை வெளியீட்டு அசத்தி இருக்கிறது தினமணி நாளிதழ்.

பொதுவாக தீபாவளி பொங்கலுக்குதான் சிறப்பு மலர் வெளிவரும். ரமலான் மற்றும் கிருஸ்துமஸ் சிறப்பு மலர் எப்போதாவது அத்தி பூத்தாற்போல்தான் வெளிவரும். பத்திரிகைகளும் அதில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் விட்டுவிடும்.

அதுவும் ஈகை பெருநாள் மலரென்றால் மார்க்கம் சார்ந்த கட்டுரைகளே அதிகம் இடம் பெற்று இருக்கும். மாற்று மதத்தினரும் விரும்பி படிக்கும் அளவிற்கு ஜனரஞ்சகமாக இல்லாமல் போய்விடுவது இத்தகைய மலர்களின் பொதுத்தன்மை. ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனித்துவமிக்க ஒரு ஈகை பெருநாள் சிறப்பு மலரை வெளியீட்டு பெருமை தேடிக் கொண்டுள்ளது தினமணி நாளிதழ்.

இத்தகைய பெருநாள் மலர்களை கலாச்சாரத்தின் காலத்தே பதிவாகத்தான் நாம் பார்க்கவேண்டும். பத்திரிகைகளே இப் பணியை செய்ய முடியும். அதை செய்திருக்கிறது தினமணி!. இம் மலருக்கென்று தனி வழிகாட்டுதல் குழு அமைத்து இம் மலரை தயாரித்துள்ளனர். மதம் சார்ந்த சென்ஸிட்டிவ் விஷயங்களை கையாலும் போது தனி கவனம் எடுத்துக் கொள்ளுவது எப்போதுமே நன்மைத்தரும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரையே முதன்மை கட்டுரையாக இம் மலரில் இடம்பெற்றிருக்கிறது. அதோடு உலக வரலாற்றில் முதலிடத்தில் முஹம்மது நபி, தமிழகத்தில் இஸ்லாமியர்கள், நபிவழியில் வெற்றி நிச்சயம், பேரா முனைவர் எம்.எச்,ஜவாஹிருல்லா எழுதிய விடுதலை போரின் முன்னோடிகள் முஸ்லீம் மார்க்க அறிஞர்கள், டாக்டர் கே.வி.,எஸ்,ஹபீப் முஹம்மத் எழுதிய சமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள், நோன்பு ஒரு கேடயம், பள்ளிவாசலும் தொழுகையின் அற்புதமும், கவனம் தரும் லைலத்துல் கத்ர் இரவு, யார் பயங்கரவாதிகள்?, பழ.கருப்பையா எழுதிய அழகியவற்றுளெல்லாம் அழகியது, முனைவர்  ஆர்.ராதிகா தேவி எழுதிய 'பெண்களுக்கான மார்க்கம் இஸ்லாம்', முனைவர் சொ.சேதுபதி எழுதிய பாரதியார் பேசிய இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை, பக்கீர்கள் என்னும் இஸ்லாமியப் பாணர்கள் போன்ற கட்டுரைகளோடு இன்னும் பல கட்டுரைகள் இம் மலரில் இடம்பெற்றுள்ளன.

தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய 'ஆழம் தெரியாக் கடல்', ஜே.எம் சாலி எழுதிய 'சம்மதம்', சிராஜூல் ஹசன் எழுதிய 'முத்தலாக்', எஸ்.பர்வீன் பானு எழுதிய 'முதல் பாடம்', மு.அ அபுல் அமீன் எழுதிய 'ஈமானில் சீமான்' போன்ற முத்தான சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 'முனைவர் ஜெ.ஹாஜாகனி 'புரட்டிப் பாருங்கள் உங்களை புரட்டிவிடும்' என்ற மூன்று பக்க கவிதையை எழுதியிருக்கிறார்.

தமிழகத்தில் பிரபலமான 8 தர்காக்கள் பற்றிய கட்டுரைகள் இம் மலரில் இடம்பெற்றுள்ளன. தர்காக்கள் பற்றிய விமர்சனங்களை இக் கட்டுரைகள் தவிடுபொடியாக்கியிருக்கின்றன.

மலரெங்கும் மார்க்க துணுக்குகள் விரவிக் கிடக்கின்றன. வழுவழுத் தாளில் மாற்று மதத்தினரும் விரும்பி படிக்கும் வகையில் இம் மலரை தயாரித்துள்ளனர். இச் சிறப்பு மலர் பாரதியாரின் கவிதையை அட்டையில் தாங்கி வெளிவந்திருப்பது சிறப்பு!.

பக்கம் 160
விலை ரூ.50/-

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறந்த நிகழ்வு... வாழ்த்துகள்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

தகவலுக்கு நன்றி!
நண்பரிடம் சொல்லி வாங்கி விடுகிறேன்...

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...