வெள்ளி, செப்டம்பர் 18, 2015

சென்னையில் 'ஆரோக்கியம்' மருத்துவ கண்காட்சி!.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் அப்பலோ மருத்துவமனை இணைந்து வழங்கும் 'ஆரோக்கியம்' மருத்துவ கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் நாளை தொடங்குகிறது. சனி மற்றும் ஞாயிறு நடைபெறுகிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் வருடம் தோறும் பல்வேறு கண்காட்சிகளை இந்தியா முழுவதும் நடத்திவருகிறது.

கடந்த ஆண்டை தொடர்ந்து இந்த ஆண்டும் அப்பலோ குழுமத்துடன் இணைந்து இரண்டு நாள் மருத்துவ கண்காட்சியை நடத்துகிறது. சென்னை வர்த்தக மையத்தில் (CTC) நடைபெறும் இக்கண்காட்சியில் முன்னணி மருத்துவ நிறுவனங்கள் கலந்துக் கொள்கின்றன.

இக் கண்காட்சியில் சர்க்கரை நோய், கண் பரிசோதனை, செவித்திறன் பரிசோதனை, உடல் எடை மற்றும் BMI பரிசோதனை, அக்குபஞ்சர் பரிசோதனை, பாரம்பரிய மருத்துவ பரிசோதனைகள், BMD பரிசோதனை, இரப்பை மற்றும் கல்லீரல் நோய் ஆலோசனைகள், சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறை ஆலோசனைகள் போன்ற பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.

இரண்டு நாள் கண்காட்சியில் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் சிறப்புரைகள் வழங்குகின்றனர்.

19.9.2015 சனிக் கிழமை மாலை 4.30 மணிக்கு - 'உடல் பருமன்' - Dr. ராஜ்குமார் பழனியப்பன், Bariatric Surgeon, Apollo Hospitals Chennai.

19.9.2015 சனிக் கிழமை மாலை 5 மணிக்கு - 'உணவும் வாழ்வும்' சிந்தனை சித்தர் எம்.ஜி.எல். வேலாயுதம், C&MD, Alma Groups.

19.9.2015 சனிக் கிழமை மாலை 5.30 மணிக்கு - நலம் தரும் நாட்டு மருத்துவம்' சன் டிவி புகழ் டாக்டர் சக்தி சுப்ரமணி.

'ZUMBA FITNESS SESSION'

உடலை ட்ரிம்மாக வைத்துக் கொள்ள சர்வதேச புகழ்பெற்ற 'சும்பா நடனம்' 19.9.15 அன்று மாலை 6 மணிக்கும், 20.9.15 அன்று மாலை 5.30க்கும் நடத்தப்படுகிறது.

ஆரோக்கியம் காண அனைவரும் வாங்க!.
For Free Health Check-Up Call 9282438117/9962901299 தொடர்புகொள்ளவும்!.

சனி, செப்டம்பர் 12, 2015

புரட்சியின் நிறம் - சே குவேரா!


எதார்த்தம் பேசும் நுழைவு வாயில்!
         ழக்கமாக ஓவிக் கண்காட்சி என்றால் பளபள பளிங்கு தரையும், ஓவியத்தின் மீது மட்டும் ஒளி உமிழும் விளக்குகள் போர்த்தப்பட்ட அரங்குகளில்தான் நடைபெறும். காலடி சத்தம் கூட காதில் விழாத ஒரு அந்தகாரத்தின் அமைதியில் அந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். மொளன நகர்வுகளில் பார்வையாளனுக்கும் ஓவியத்திற்குமான புரிதல் காலடியின் இடைவெளியில் கரைந்து போகும்.

ஆனால் புரட்சியாளன் சே குவேராவின் ஓவியக் கண்காட்சி அப்படி அல்லவே....?!.

ஒரு மேல் நிலைப்பள்ளியின் வகுப்பறையில்,  மாணவர்களின் கூக்குரலிக்கிடையே இவ் ஓவியக்காட்சி நடத்தப்படுவதே புரட்சிக்கான பிரத்யேக அழகுதான். 

இந்த நூற்றாண்டின் சின்னம் என்று போற்றப்பட்ட சே குவேராவை விதவிதமாக வரைந்து காட்சிப்படுத்தியிருக்கிறார் ஓவியர் புகழேந்தி!. 'சே குவேரா புரட்சியின் நிறம் ஓவியக் காட்சி' என்ற தலைப்பில் ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

.இனம் மொழி கடந்து உலக விடுதலைக்காக போராடிய அந்த மனிதனை இன்றைய இளைஞர்கள் தங்களது தலைவனாக வரித்துள்ளனர்.

காங்கோ காடுகளில் ஜீப்பின் பாணட்டில் துப்பாக்கியுடன் அமர்ந்து செல்லும் சே குவேரா..... போர் முனையில் வீர நடை போடும் சே குவேரா, துப்பாக்கியை கையில் பிடித்தபடி கடைவாயில் கனன்றுக் கொண்டு இருக்கும் சுருட்டுடன் சே குவேரா என்று ஓவியங்களின் பின்னணியில் ஒரு நீர் கோடாய் விரவி இருக்கிறார் சே. அதுவே நம்மை அவரது படையில் சேர்க்க வைத்து வெற்றி கூச்சலிடவைக்கிறது. இத்தகைய புரிதல்கள் ஒரு கலைஞனின் வெற்றியாகவும் அமைந்துவிடுவது சிறப்பு!.

முன்னதாக இவ் ஓவியக் காண்காட்சிப் பற்றி தனது முக நூலில் பதிவிட்டிருந்தார் நண்பர் வேடியப்பன். அதனாலயே அங்கு செல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது, அவருக்கு நன்றி!..

சென்னை வெங்கட் நாராயணா சாலையில், திருப்பதி தேவஸ்தானம் எதிரில் இருக்கும் சி.தெ. நாயகம் மேல் நிலைப் பள்ளியில் .இவ் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது. வரும் ஞாயிறு (13ம் தேதி) வரை இக் கண்காட்சி நடைபெறுகிறது. 

அவசியம் பார்க்கவும்!.

திங்கள், ஆகஸ்ட் 24, 2015

புத்துயிர் பெறுமா கபடி...?


  சடுகுடு ஆடி வந்த முந்தைய தலைமுறை குடுகுடு கிழங்களாக                     
மாற...மாற.. சடுகுடுவும் கிடுகிடுவென ஆடிப்போய் கிடக்கிறது.                       
 

          
 (கடந்த சனிக்கிழமையன்று தினமணியில் வந்த எனது கட்டுரை )
          றுதிக் கட்டத்தை எட்டிவிட்டது புரோ கபடி லீக் போட்டி. கடந்த மாதம் தொடங்கிய புரோ கபடி லீக், கபடி விளையாட்டில் புதிய மின்னலைப் பாய்ச்சியிருக்கிறது. கிரிக்கெட்டை தொடர்ந்து கபடி விளையாட்டிலும் லீக் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புரோ கபடி லீக் போட்டிகள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இது கபடி ஆர்வலர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திருக்கிறது.

 இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 8 அணிகள் இப் போட்டிகளில் மோதுகின்றன. ஆனால், கபடியின் தாயகமான தமிழ்நாட்டிலிருந்து எந்த ஓர் அணியும் கலந்துக் கொள்ளவில்லை என்பதுதான் வேதனையான ஒன்று.

 சடுகுடு ஆடி வந்த முந்தைய தலைமுறை குடுகுடு கிழங்களாக மாற...மாற.. சடுகுடுவும் கிடுகிடுவென ஆடிப்போய் கிடக்கிறது. தொன்மை இனமான தமிழினத்தின் வீர விளையாட்டான சடுகுடு என்ற கபடி இன்று கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் அழிந்துக் கொண்டு வருகிறது.

 காசு செலவு இல்லாத விளையாட்டு இது. உடல் வலு, மூச்சுப் பயிற்சி என்று கூடுதல் பலனும் நமக்கு கிட்டும். 

 உத்தி பிரித்து கபடி...கபடி... என்று தொடையைத் தட்டிக் கொண்டு அடங்கா ஆவேசத்துடன் எதிர் அணிக்குள் புகுந்து களமாடினால் சுற்றி வேடிக்கை பார்க்கும் கூட்டம் ஹோவேன்று ஆர்ப்பரிக்கும். அப்படி ஓர் உணர்ச்சிமிக்க விளையாட்டு கபடி.

 அன்றைய நாள்களில் தமிழகத்தில் திரும்பிய இடமெல்லாம் கபடி போட்டிகள் நடைபெறும். தெருவுக்குத் தெரு ஒரு கபடி அணி இருக்கும். பகல், இரவு ஆட்டமாக போட்டியை இரண்டு நாள் நடத்தும்போது, ஊரே திருவிழாக் கோலம் பூண்டு இருக்கும். 

 ஆனால் இன்றோ, தமிழர்களின் வீர விளையாட்டான கபடியின் நிலை... நினைத்தாலே நெஞ்சம் வெடித்துவிடும் போல் இருக்கிறது. மனிதனின் நேரத்தை விழுங்கும் கிரிக்கெட்டின் வருகைக்குப் பின்னர்தான் கபடி களையிழந்து போய்விட்டது.

 தமிழகத்தில்தான் கபடி விளையாடுவது குறைவாக உள்ளதே தவிர, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், பஞ்சாப், பிகார், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் போற்றப்படக் கூடியதாக கபடி வாழ்கிறது. வங்கதேசத்தில் கபடி தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

 இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், ஈரான், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தேர்ச்சி பெற்ற கபடி அணிகள் இருக்கின்றன. 13 உலக நாடுகளில் கபடி விளையாடப்படுகிறது என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
 இந்தியாவுக்குத் தொடர்ந்து தங்கப் பதக்கம் பெற்றுத் தரும் விளையாட்டுகளில் கபடியும் ஒன்று. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் கபடி அணி தொடர்ந்து ஏழு முறை தங்கப் பதக்கம் வென்று வருகிறது. 

 1985-இல் டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி முதல் முறையாக உலக அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 1990-இல் நடைபெற்ற 11}ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் கபடி களம் இறக்கப்பட்டது.

 ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய உள்விளையாட்டு அரங்கப் போட்டி, ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி என்று மூன்று பிரதான விளையாட்டுப் போட்டிகளில் கபடி சேர்க்கப்பட்டது. இம் மூன்றிலும் சேர்க்கப்பட்ட ஒரே விளையாட்டு கபடி மட்டுமே. இதுவரை கபடிக்காக நடைபெற்ற அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலும் கோப்பையை இந்தியாவே வென்றிருக்கிறது. 

 இந்த ஆண்டு புரோ கபடி லீக் போட்டியில் பல்வேறு தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இது கபடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
 தற்போது நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டியில் பல்வேறு அணிகளுக்காக புகழ்பெற்ற தமிழக வீரர்கள் விளையாடி வருகின்றனர். கடந்த முறை புரோ கபடி போட்டியில் பட்டம் வென்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் பயிற்சியாளர் தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பது குறிப்பிடத்தக்கது. நட்சத்திர வீரர்கள் இல்லாத ஜெய்ப்பூர் அணியை அவர் புரோ கபடி லீக் போட்டியின் முதல் சாம்பியனாக மாற்றினார்.

 இந்தியாவின் சிறந்த தடுப்பாட்டக்காரரான சேரலாதன் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகின்றார். தற்போதைய போட்டியில் முன்னணியில் இருக்கும் யூ மும்பா அணியில், தேர்ச்சி பெற்ற தமிழக வீரர்கள் விளையாடுகின்றனர். தமிழக வீரர்களின் ஆட்ட பாணி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துவிடுகிறது.

 வளமையான கபடி பாரம்பரியம் கொண்ட தமிழகத்திலிருந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் புரோ லீக் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்திலிருந்து ஓர் அணியும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பது நெருடலான ஒன்று. ஐபிஎல் போன்றே இதிலும் அணிகள் ஏலம் விடப்பட்டிருக்கின்றன.

 அப்படி இருக்க தமிழகத்திலிருந்து ஒருவர் கூடவா தமிழகத்தின் பெயரில் அணியை வாங்க முடியவில்லை? ஏலத் தொகை அப்படி ஒன்றும் கோடிகளில் இருக்கவில்லை. லட்சங்களில்தான் இருக்கின்றன. தமிழக நலன் சார்ந்த எந்த ஒரு நிறுவனத்துக்கும் இந்த நிகழ்வு கவனத்தில் வராதது மிகவும் கொடுமை.

அமெச்சூர் கபடி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (ஏ.கே.எஃப்.ஐ.) இணையதளங்களிலும், கபடிக்கான விக்கிபீடியாவிலும் கபடி இந்தியாவின் பழைமையான விளையாட்டு என்றே குறிப்பிடப்படுகிறது. இந்திய அளவிலோ அல்லது உலக அளவிலோ கபடி தமிழர்களின் விளையாட்டு என்பதைப் பதிவு செய்ய நாம் தவறிவிட்டோம்.

 கைப் பிடி, கைப் பிடி என்று சொல்லே கபடியாக மாறியது என்று இங்கு எத்தனை பேருக்குத் தெரியும். காலத்தே பதிவு செய்யாத நமது பிறவிக் குணத்தால் நமது பாரம்பரியமான கபடி விளையாட்டை தாரைவார்த்து இருக்கிறோம். 

 நமது வரலாற்றை நாம் மறந்தால் வரலாறு நம்மை மறந்துவிடும். எதிர்வரும் ஆண்டுகளிலாவது புரோ கபடி லீக் போட்டியில் தமிழகத்திலிருந்து கபடி அணிகள் இடம்பெற வேண்டும் என்பதே சாமானிய தமிழர்களின் எதிர்ப்பார்ப்பு.

திங்கள், ஆகஸ்ட் 17, 2015

சரித்திரம் படைத்த சாமானிய மனிதன் லியோ முத்து!.




              இந்தியாவின் தென் கிழக்கு மூலையில் உள்ள, அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டியில் எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர், பின்னாளில் பிரசித்திப்பெற்ற கல்வி நிலையங்களை தொடங்குவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 

கனவுகளின் கதவுகளை நோக்கி தீரமுடன் நடக்கத் தொடங்கிய அந்த எளிய மனிதர், தனக்கான பெரும் சாம்ராஜியத்தை நிறுவிவிட்டு சென்றிருக்கிறார்.
நமக்கெல்லாம் அரசாங்க வேலைக் கிடைத்தால் என்ன செய்திருப்போம்....?. ஓய்வு பெரும் நாள் வரையில் ஓய்வாக வேலை செய்துவிட்டு, ஓய்வு பெற்றதும் வீட்டில் அமர்ந்து ஓய்வாக பென்ஷனை வாங்கி காலத்தை கடந்திருப்போம். ஆனால் பொதுப்பணித்துறையில் வேலை செய்த ஒருவர் தனக்கு கிடைத்த சொற்ப நேரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி, அதன் நெளிவு சுளிவுகளை கற்று நல்லதொரு நிறுவனத்தை தொடங்கினார். அதுவே அவரை சிங்கமென இத் தொழில் உலகில் கர்ஜிக்கவைத்து அவருக்கான நெல்லதொரு பெயரை பெற்றுத் தந்தது. 

அவர் லியோ முத்து!. 
 ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் தலைவர். 

கடந்த சில மாதமாக உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த மாதம் ஜூலை 10ம் தேதி, தனது 63வது வயதில் இயற்கை எய்தினார். இவரது இயர்பெயர் எம்.ஜோதிபிரகாசம். 

அப்துல் கலாம் மீது மிகுந்த மரியாதை கொண்ட லியோ முத்து, தனது கல்வி நிறுவனங்களை ஒரு முன் மாதிரி கல்வி நிலையமாக மாற்றி இருக்கிறார், கடந்த சில வருடங்களாக அண்ணா பல்கலைக்கழத்தின் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டு வருகிறது ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி. 

அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் எந்த ஒரு பின்புலமும் இல்லாத ஒரு கல்லூரி, தொடர்ந்து தரவரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் வருவது என்பது பாராட்டப் படவேண்டிய ஒன்று!. 

மாணவர்கள் விரும்பும் பொறியியல் கல்லூரி, பெற்றோர்கள் விரும்பும் பொறியியல் கல்லூரி என்று இரண்டு விதமான பொறியியல் கல்லூரிகளை நாம் பார்க்க முடியும். இன்றைய கால கட்டத்தில் படித்து முடிக்கும் முன்பே பிளேஸ்மெண்ட் மூலம் வேலை வாய்ப்பினை பெருவதையே மாணவர் சமுதாயமும் பெற்றோர்களும் விரும்புகின்றனர். தரமான கல்வி, கட்டுப்பாடு, ஒழுக்கம் இவற்றில் அவர்கள் எந்தவித சமரசமும் செய்துக்கொள்வதில்லை. இரு தரப்பும் விரும்பும் ஒரு கல்லூரியாக தன்னை தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொள்வது என்பது மிகவும் சவாலான ஒன்று!. அந்த சவாலை மிக அனாயசமாக செய்து முடிக்கிறது ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமங்கள்.

அதனாலயே தமிழகத்தில் இருக்கும் 552 பொறியியல் கல்லூரிகளில் தொடர்ந்து முதல் 10 இடங்களைப் பிடித்துவிடுகிறது. 

லியோ ஹவுஸிங்கை தொடங்கி நடத்திவந்த லியோ முத்து, 1989 வாக்கில் சென்னை மடிப்பாக்கத்தில் சாய் மெட்ரிக்குலேஷன் பள்ளியை 137 மாணவர்களைக் கொண்டு தொடங்கினார். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக 100 சதவீத தேர்ச்சியை தக்கவைத்து வருகிறது இப் பள்ளி!. ஒரு கல்விச்சாலையை தொடங்கி இக் சமூதாயத்திற்கு உருப்படியாக எதாவது செய்ய வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. அதுவே பின்னாளில் அவர் சாய்ராம் பொறியியல் கல்லூரி தொடங்க வழிவகுத்தது. தொழிநுட்பக் கல்லூரிகள் மட்டுமல்லாமல் சித்தா, ஆயூர்வேதா, யூனானி, ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளையும், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளையும், பாலிடெக்னிக்குகளையும் நடத்திவருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் கல்லூரிகளை நடத்திவருகிறது சாய்ராம் கல்வி குழுமம்.

லியோ முத்து அவர்கள் விட்டுச் சென்ற பெரும் பணியை, அவரது புதல்வர் சாய் பிரகாஷ் ஏற்று செயல்பட தொடங்கிவிட்டார். கல்வி நிறுவனங்களை நடத்துவது என்பது பெரும் சவாலன ஒன்று. சவாலான அந்த பணியை மிக துணிவுடனும் வெற்றிகரமாகவும் செய்துவருகிறார் சாய்பிரகாஷ். 

()()()() 

இரண்டு வருடங்களுக்கு முன்னர், அவரது நிறுவனத்தைப் பற்றிய செய்தி ஒன்றை அவரது ஒப்புதல் இல்லாமல் எழுதிவிட்டோம். அது எங்களுக்கும் அவருக்கும் மனக் கசப்பை ஏற்படுத்திவிட்டது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் காரம்சாரமாய் ஓடிய அந்த பிரச்சனையை எப்படியோ சமாளித்து முடிவுக்கு கொண்டுவந்தோம். பத்திரிகையாளர்கள் மீது பெரும் அன்பு கொண்டவர். திடீரெண்டு அவரிடத்திலிருந்து போன் வரும் "சார்...... சேர்மன் சார் பேசுறாங்க" என்று அவரது உதவியாளர்கள் யாராவது பேசி போனைத் தருவார்கள். அவர் தொடங்கப் போகும் கல்வி நிலையங்களைப் பற்றி கூறுவார். அவருக்கான கனவுகள் என்பது மிகவும் பெரியதாகவே இருந்திருக்கிறது. என்னை சில நேரங்களில் மாயவரத்துக்காரரே என்றுதான் அழைப்பார். அவரோடு ஒரு நாள் அவரது இல்லத்தில் உணவறுந்தும் பாக்கியமும் கிடைத்தது. 

தாம்பரத்தில் சர்வ வல்லமைப் படைத்த அரசியல் பிரமுகர் ஒருவர் அவரோடு மோதி வந்தார். சாலையில் செல்லும் கல்லூரி பேருந்துகள் மீது இடையூறு ஏற்படுத்திவருவது, மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது, என்று பல வழிகளில் தொந்திரவு கொடுத்து வந்தார். இவர் பல முறை எச்சரித்தும் அந்த அரசியல்வாதி இவரை விடுவதாக இல்லை. முடிவில் இவர் செய்த ஒரு விஷயம் அந்த அரசியல்வாதியை தலையெடுக்க முடியாமல் செய்துவிட்டது.
சாய்ராம் கல்லூரிக்கு அந்த அரசியல்வாதி, என்னென்ன வழிகளில் இடையூறு செய்கிறார். அவரது அரசியல் ரீதியான தில்லுமுல்லுகள், சட்டத்திற்கு புறம்பான அவரது நடவடிக்கைகள், மக்கள் விரோத செயல்கள் என்று பெரும் பட்டியலை தயார் செய்து, அதை ஒரு மாலை பத்திரிகை ஒன்றில் ஒரு பக்கம் விளம்பரமாக கொடுத்துவிட்டார். முதலில் அந்த விளம்பரத்தை வெளியீட மறுத்த நிர்வாகம், இவர் வழங்கிய ஆதாரத்தை அடிப்படையாகவைத்து அந்த விளம்பரத்தை வெளியீட்டது. விளம்பரத்தை வெளியிட்டதோடு மட்டும் நில்லாமல், 50 ஆயிரம் பிரதிகளை காசு கொடுத்து வாங்கி தாம்பரத்தில் வீடு தோறும் விநியோகம் செய்துவிட்டார். அந்த விளம்பரத்தை அந்த அரசியல் பிரமுகர் எதிர்பார்க்கவில்லை. அந்த அரசியல்வாதியின் பொய் முகம் கிழிக்கப்பட்டு அவரது அரசியல் அஸ்திவாரத்தையே தகர்த்தெரிந்துவிட்டார். அத்தகைய போர்குணம்  கொண்டவர் லியோ முத்து. 

இத்தகைய போர் குணம் கொண்டவர்களே தங்களுக்கன வெற்றிகளை அடைகின்றனர். தங்களுக்கான கனவுகளை அடைய... அவர்கள் அயராது உழைக்கின்றனர். அது இச் சமூகம் மேம்படவும், மாணவர் சமுதாயம் நல்லதொரு உலகை படைக்க வழிகாட்டியாகவும் அமைந்துவிடுகிறது.  அத்தகைய மனிதர்களையே நாளைய விருச்சத்தின் விதையாக பார்க்கிறது இவ் உலகம்!. 

 அண்மையில் ( 9.8.2015) லியோ முத்து அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் திராவிடர்க்கழக் தலைவர் வீரமணி கலந்துக் கொண்டு படத்தை திறந்துவைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் தி.ஆர்.பாலு கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார், கம்யூனிஸ்ட் கட்சி நல்லக்கண்ணு, சன் டிவி  வீர பாண்டியன், ஜெயா கல்விக் குழுமத்தின் தலைவர் கனகராஜ், ஆரம்கே மற்றும் ஆரம்டி கல்விக் குழுமத்தின் தலைவர் முனிரத்தினம் போன்றோர் கலந்துக்கொண்டனர்.

விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு லியோ முத்துவின் மருமகனும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டி .ஆர்.பி ராஜா நன்றி கூறினர்.

.
-தோழன் மபா 

வெள்ளி, ஜூலை 31, 2015

போதும் சாவு செய்தி?



டந்த சில நாட்களாகவே இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சாவு செய்தி தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர்தான் இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன் காலமானர். தமிழக சினிமா ரசிகர்களின் ஒட்டு மொத்த இதயத்தையும் கொள்ளைக் கொண்ட அவரை சில நாட்களுக்கு முன்னர்தான் பெஸண்ட் நகர் மயானத்தில் எரித்துவிட்டு வந்தோம்.

அது முடிந்த அடுத்த கையோடு...இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காலமானார். நாட்டையே உலுக்கிய அந்த திடீர் மரணம், இந்தியாவை துக்க வீடாக மாற்றியது. பிரதமர் முதல் சாமானியன் வரை, குடிசை வீடு முதல் மாளிகை வரை தெருவுக்கு தெரு துக்கம் அனுஷ்டித்தனர். மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், முப்படை தளபதிகள் என்று இந்தியாவின் அதிகார வர்க்கமே இராமேஸ்வரத்தில் சங்கமித்தது.    அவரை அடக்கம் செய்வதற்கு, முந்தைய இரவு, ஒரு உயிர் நாக்பூர் சிறையில் ஊசலாடிக் கொண்டு இருந்தது.

மும்பை குண்டு வெடிப்பிற்காக சரணடைந்த யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் வியாழன் விடியற்காலை தூக்கில் போடப்பட்டார்.    'விடிய விடிய விசாரணை விடிந்தப்பின் பிரேத பரிசோதனை' என்ற உயர்ந்தபட்ச கொள்கையின் அடிப்படையில் மிக மிக துரிதமாக செயல்பட்டு தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருக்கிறது மஹாராஷ்டிரா பாஜக அரசு. அரசு இயந்திரத்தை நினைத்தால் அதிர்ச்சியும் வேதனையுமே எழுகிறது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த செய்தி: . மதுக்கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் திடீரென இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதையடுத்து மதுவுக்கு எதிரான பேராட்டக்குழுவை அமைத்தனர். அவர்களுக்கு ஆதரவாக 200 அடி செல் போன் கோபரத்தில் ஏறி 4 மணி நேரமாக போராட்டம் நடத்திய சசி பெருமாள் திடிரென்று ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துவிட்டார். சசி பெருமால் உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் டாஸ்மாக் எதிரான போராட்டம் மேலும் வலுவடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

பிறந்தவர்கள் இறக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி என்றாலும், இப்படி தொடர் சாவு என்பது மனிதனை அழக் கூட முடியாதவனாக்கிவிடுகிறது. அன்பும் கருனையும் கொண்ட உலகத்தில்தான் யாம் ஜீவிக்கவே விரும்புகிறோம். போதும்.... "இத்தகைய நிகழ்வுகளை நிறுத்து" என்று யாரிடம் விண்ணப்பம் வைப்பது....
இறைவா....!.
 

புதன், ஜூலை 29, 2015

'அணையா விளக்கு - அப்துல் கலாம்'




நதி போகும் கூழாங்கள்
பயணம் தடையமில்லை
வலிதாங்கும் சுமைதாங்கி
மண்ணில் பாரமில்லை
ஒவ்வொரு அலையின் பின்
இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே.....

மனதை வருடும் வீடியோ பதிவு.....

காலத்தை வென்ற கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி!. 

 





புதன், ஜூலை 22, 2015

சன் டிவியை கை மாற்றத் துடிக்கும் பாஜக அரசு?

               ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பார்கள், ஊடக குரல்வளையை நெரிப்பது  என்றால் ஆளும் கட்சிகளுக்கு எப்போதும் அல்வா சாப்பிடுவது போல்தான். அதுவும் தனக்கு எதிரான ஊடகம் என்றால் கேட்கவே வேண்டாம், அதை ஒழித்துக் கட்டிவிட்டுதான் மறு வேலை பார்ப்பார்கள். இதில் காங்கிரஸும் ஒன்றுதான் பாரதிய ஜனதாவும் ஒன்றுதான். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பில் ஏறியதுமே சன் டிவி மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  நமது எதிர்பார்ப்பின்படியே சன் குழுமத்தின் மீது தனது கோர பார்வையை திருப்பியுள்ளது பாஜக அரசு.

சன் டிவியின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஊடகங்கள் மீதான ஆளும் பாஜக அரசின் மறுபக்கத்தை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. சன் தொலைகாட்சிக்கு செக்யூரிட்டி கிளியரன்ஸ் கொடுக்கும் விஷயத்தில் மத்திய உள் துறையும், தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறையும் மறுத்துள்ளது. இது ஊடகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன் டிவி வருகைக்கு முன்னர், சன் டிவி வருகைக்கு பின்னர்  (சமு சபி) என்று தமிழக தொலைகாட்சி வரலாற்றை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். சன் டிவியின் வருகைக்கும் முன்னர், அரசு தொலைகாட்சியான தூர்தர்ஷன் வைத்ததுதான் சட்டம். மத்திய அரசின் விருப்பத்திற்கு இனங்க செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் தயாரித்து வந்தனர். ஆளும் கட்சியின் குரலாகவே தூர்தர்ஷன் செயல்படும். ஒளியும் ஒலியும் வயலும் வாழ்வும் என்று நிகழ்ச்சி தயாரித்து மக்களை பதம் பார்த்துவந்த தூர்தர்ஷனின் சக்தி (?) எப்படிப்பட்டது என்று இன்றைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஞாயிறுகளின் மதியத்தில் ராஜேஷ் கண்ணாவும் டிம்பிள் கபாடியாவும் 'கியா பியா' என்று ஹிந்தியில் ஆடி பாடி நடித்ததை நம் மக்கள் ஒன்றும் புரியாமல் கை தட்டி ரசித்துக் கொண்டு இருந்தனர். சினிமா பாடல்கள் பார்க்க வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை 'சித்திரகார்' வரை காத்திருக்க வேண்டும்.

அதுவும் நாடகம் என்று ஒன்று போடுவார்கள், பார்க்கவேண்டுமே....?!. காத்தாடி ராமமூர்த்தி வகையறா டிராமாவை மொத்த குத்தகை எடுத்ததுபோல், சென்னை தூர்தர்ஷனில் வீட்டு தயாரிப்பு டிராமாக்களே ஆக்கிரமித்து இருக்கும். செட்டுக்குள்ளேயே மொத்த  நாடகத்தையும்  நடத்தி காட்டிவிடுவார்கள். வந்த விமர்சனத்தை படிப்பதற்கென்று ஒரு நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியை திட்டி கழுவி கழுவி ஊத்தியதை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு, பாராட்டி எழுதிய கடிதத்தை மட்டுமே இரெண்டு பேர் மெனக்கெட்டு படிப்பார்கள். இந்தக் கன்றாவியெல்லாம் இந்த தலைமுறை பார்க்காமல் போனது அவர்களது அதிஷ்டம். நமது துரதிஷ்டம்.

சன் டிவியின் வருகைக்கு பின்னர்தான் இந்திய தொலைகாட்சி வரலாற்றில் ஒரு மாற்றம் ஏற்பட்டது எனலாம். கலாநிதி மாறன் தொடக்கத்தில் தனது நண்பர்களுடன் 'தமிழ் மாலை' என்ற வீடியோ பத்திரிகையை நடத்திவந்தார். வாரம் தோறும் புதிய புதிய நிகழ்ச்சிகளை தயாரித்து அதை கேஸட்டில் பதிவு செய்து ஒரு வீடியோ மேகஸினாக நடத்திவந்தார். ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சிகள்  மாற்றப்பட்டு வெளிவரும். இந்த வீடியோ கேசட்டுகளே வார இதழ்கள் போல் விற்கப்படும். முந்தின வார காஸட்டை பெற்றுக் கொண்டு புதிய காஸட்டை தருவார்கள். அப்போதெல்லாம் தூர்தர்ஷன் டிவி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருந்தது. அதனாலயே கலாநிதி மாறனின்  வீடியோ மேகஸினுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வாரம் தோறும் புதிய புதிய நிகழ்ச்சிகளையும் உலக நிகழ்ச்சிகளையும் தயாரித்து வெளியீட்டு வந்தார். அதுவே பின்னர் தனியாக தொலைக் காட்சி தொடங்கும் எண்ணத்தை தோற்றுவித்தது எனலாம்.

எப்படி செட்டுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை பாரதிராஜா அவுட்டோருக்கு கொண்டுவந்தாரோ.....அப்படி ஸ்டூடியோவிற்குள் முடங்கிக் கிடந்த டிவி நாடகங்களை வெளியுலத்திற்கு கொண்டுவந்தது சன் டிவிதான். இதன் மூலம் 'சின்னத்திரை' என்ற உலகமே தோன்றியது. இதனால் நிறைய நடிகர் நடிகைகள் வாழ்வு பெற்றனர். பொருளாதார ரீதியாக சின்னத்திரை நடிகர்களை உயத்தியது சன் டிவி. மக்களின் பொழுது போக்கு ரசனையிலும் மாற்றம் ஏற்பட்டது.

()()()

பொதுவாக இந்திய அளவில் ஒரு நிறுவனம் பிரபலமாக இருக்க வேண்டும் என்றால் அது வட இந்தியாவை சேர்ந்த நிறுவனமாகத்தான் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி.  டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ், பஜாஜ் என்று வட நாட்டு கம்பெனிகளின் பெயரை சொல்லித்தான் நாம் வளர்க்கப்பட்டு இருக்கிறோம். இதில் தமிழகத்திலிருந்து ஒரு நிறுவனம் இந்திய அளவில் பெயர் எடுப்பதிலோ....அல்லது தென் இந்தியாவை  தனது ஊடக கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையோ வட நாட்டு அரசியல்வாதிகளும் தொழில் அதிபர்களும் விடுவார்களா என்ன....?. அந்த நெருக்கடிதான் இப்போது மத்திய அரசு மூலம் சன் குழுமத்திற்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

ஏதோ.... அரசியல் பின் புலம் இருந்ததால் சன் டிவி இத்தனை நாள் தப்பித்து வந்திருக்கிறது. அரசியல் பின்புலம் மட்டும் இல்லையென்றால் இன்னேரம் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.

சன் டிவி அதிபர்கள் மீது வழக்குகள் இருக்கிறது என்பதற்காக அந்த குழுமத்தின் டிவி சேனல்களுக்கு வழங்கப்பட்ட செக்கியூரிட்டி கிளியரன்சை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்ய முயற்சிப்பது அபத்தமான செயலாகும். தனிப்பட்டவர் மீது இருக்கும் வழக்குகளை அவர் சார்ந்த நிறுவனத்தின் மீது திணிப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை?. சன் டிவியை கை மாற்ற வேண்டும் என்பதற்காகவே அரசு தரப்பில் பல் வேறு நெருக்கடிகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. பாஜக அரசுக்கு சகலவிதத்திலும் படியளக்கும் இந்தியாவின் ஆகச்சிறந்த மிகப் பெரிய நிறுவனம் சன் டிவியை விலை பேசுவதாக தகவல் கசிகிறது. .

அரசின் மற்றுமொரு நெருக்கடியாக சன் கூட்டுக் குழுமத்தின் 45 RED FM வானொலிகளுக்கு பாதுகாப்பு அனுமதி புதுப்பிப்பதற்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தற்போது எப்எம் ரேடியோ ஏலத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட விவகாரமும் சேர்ந்துள்ளது. மத்திய உள்துறையின் இந்த நடவடிக்கைக்கு அட்டர்னி ஜெனரல் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும் சன் குழுமத்திற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி மற்றும் எப்எம் இரண்டும் சன் குழுமத்தின் அங்கம் என்றாலும் அனுமதி மறுப்பு விஷயத்தை பொறுத்தவரை மத்திய உள்துறை தனித்தனியாகவே மேற்கொண்டுள்ளது.  இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள்  வேலை பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

சன் தொலைகாட்சி மற்றும் எப்எம் ரேடியோக்களால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டு மத்திய அரசு பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்கிறது.

()()()

தமிழகத்தில் எத்தனையோ தொலைக்காட்சிகள் இருந்தாலும் சன் டிவி மட்டுமே முதன்மையான தொலைக்காட்சியாக இன்றும் திகழ்கிறது.  கிராமத்தில் கேபிள் டிவி கனெக்சன் கொடுப்பதை கூட,  மக்கள் சன் டிவி கனெக்சன் குடுங்கள் என்றுதான் கூறுவார்கள். அந்த அளவிற்கு சன் டிவியின் தாக்கம் கடை கோடி கிராமம் வரை பரவியிருக்கிறது. கிராமத்து வெள்ளாந்தி மக்களுக்கு டிவின்னா அது சன் டிவிதான்!. கிராமம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சன் டிவி ஒளிபரப்பாகிவருகிறது.

சன் டிவியை புறக்கணித்துவிட்டு எந்த ஒரு பொருளும் தமிழகத்தில் சந்தைப்படுத்த முடியாது என்பது விளம்பர உலகம் கண்ட  உண்மை. ஒரு விளம்பர பட்ஜெட்டில் முக்கால்வாசி பட்ஜெட்டையும் சன் டிவி இழுத்துக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. ஆனால் அதன் உலகம் தழுவிய வெற்றியே அபரிமிதமான கோடிகளை கரன்ஸியாக கொட்டச் செய்கிறது. இதுவே பிரச்சனைகளையும் இழுத்து வருகிறது. சன் டிவியின் ஆதிக்கத்தாலேயே வட இந்திய தொலைக்காட்சி ஜாம்பவான்களால் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திற்குள் நுழைய முடிவதில்லை.  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று நான்கு  திராவிட மொழிகளில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகிறது சன் குழுமம். 25 வருடங்களுக்கு மேலாக தென் இந்தியாவில் 33 சேனல்களுடன் கோலோச்சி வரும் சன் டிவி, இந்தியாவின் முதல் தனியார் தொலைக்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

சன் டிவியை தமிழகத்தில் இருட்டடிப்பு செய்யும்பட்சத்தில் வரும் தேர்தலில் அதிமுகவுக்கு அது சாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது.   இதனால் ஜெயலலிதா மீது பாஜக காட்டி வரும் நெருக்கம், உள்துறை மீது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவோடு கூட்டணி அமைத்தால் தமிழகத்தில் பாஜகவை கால் ஊன்றச் செய்யலாம் என்று பாஜக தலைமை கணக்கு போடுகிறது. அதன் விளைவே சன் டிவியை கை மாற்றத் துடிக்கிறது பாஜக அரசு.  சன் டிவி நிறுவனர்கள் மீது வழக்கு இருக்கிறது என்பதற்காக அவர்கள் நடத்தும் சேனல்களால்  நாட்டுக்கு எந்த வகையில் ஆபத்து இருக்கிறது என்பதை ஆளும் பாஜக அரசு விளக்கத் தவறிவிட்டது.
 
அரசியல் பின்புலத்திலிருந்து சன் டிவி தோன்றினாலும், அரசியல் மாட்சரியங்களை கடந்து தமிழகத்தின் பொதுவான டிவி என்ற பெயரை அது என்றோ பெற்றுவிட்டது. மக்கள் மன்றத்தில் சன் டிவிதான் தமிழகத்தின் டிவி என்பதையும் அது நிலை நிறுத்தியுள்ளது. வீட்டிற்கு வந்ததும்  இரவு ஏழரை மணிக்கு சன் டிவியில் தவறாமல் செய்தி பார்க்கும் குடும்பத் தலைவர்களே அதிகம் என்பது நிதர்சனமான ஒன்று. உண்மை இப்படி இருக்க... சன் குழுமத்தை முடக்குவது என்ற முடிவு பாஜக அரசுக்கு பெரும் பின்னடவைத்தான் ஏற்படுத்தும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் பேராதரவை பெற்றிருக்கும் சன் டிவி மீதான அடக்குமுறையை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை ஆளூம் பாஜக அரசு உணர்ந்துக் கொள்ளவேண்டும். இத்தகைய அதிகாரதுஷ்பிரயோகங்கள் ஆளும் கட்சிக்கு என்றும் ஆபத்தைத்தான் ஏற்படுத்தி இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனி!.
தோழன் மபா.
சென்னை.

வியாழன், ஜூலை 16, 2015

தினமணியின் 'ஈகை பெருநாள் சிறப்பு மலர்'.



இந்த வருடம் ரமலானை முன்னிட்டு "ஈகை பெருநாள் மலரை வெளியீட்டு அசத்தி இருக்கிறது தினமணி நாளிதழ்.

பொதுவாக தீபாவளி பொங்கலுக்குதான் சிறப்பு மலர் வெளிவரும். ரமலான் மற்றும் கிருஸ்துமஸ் சிறப்பு மலர் எப்போதாவது அத்தி பூத்தாற்போல்தான் வெளிவரும். பத்திரிகைகளும் அதில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் விட்டுவிடும்.

அதுவும் ஈகை பெருநாள் மலரென்றால் மார்க்கம் சார்ந்த கட்டுரைகளே அதிகம் இடம் பெற்று இருக்கும். மாற்று மதத்தினரும் விரும்பி படிக்கும் அளவிற்கு ஜனரஞ்சகமாக இல்லாமல் போய்விடுவது இத்தகைய மலர்களின் பொதுத்தன்மை. ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனித்துவமிக்க ஒரு ஈகை பெருநாள் சிறப்பு மலரை வெளியீட்டு பெருமை தேடிக் கொண்டுள்ளது தினமணி நாளிதழ்.

இத்தகைய பெருநாள் மலர்களை கலாச்சாரத்தின் காலத்தே பதிவாகத்தான் நாம் பார்க்கவேண்டும். பத்திரிகைகளே இப் பணியை செய்ய முடியும். அதை செய்திருக்கிறது தினமணி!. இம் மலருக்கென்று தனி வழிகாட்டுதல் குழு அமைத்து இம் மலரை தயாரித்துள்ளனர். மதம் சார்ந்த சென்ஸிட்டிவ் விஷயங்களை கையாலும் போது தனி கவனம் எடுத்துக் கொள்ளுவது எப்போதுமே நன்மைத்தரும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரையே முதன்மை கட்டுரையாக இம் மலரில் இடம்பெற்றிருக்கிறது. அதோடு உலக வரலாற்றில் முதலிடத்தில் முஹம்மது நபி, தமிழகத்தில் இஸ்லாமியர்கள், நபிவழியில் வெற்றி நிச்சயம், பேரா முனைவர் எம்.எச்,ஜவாஹிருல்லா எழுதிய விடுதலை போரின் முன்னோடிகள் முஸ்லீம் மார்க்க அறிஞர்கள், டாக்டர் கே.வி.,எஸ்,ஹபீப் முஹம்மத் எழுதிய சமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள், நோன்பு ஒரு கேடயம், பள்ளிவாசலும் தொழுகையின் அற்புதமும், கவனம் தரும் லைலத்துல் கத்ர் இரவு, யார் பயங்கரவாதிகள்?, பழ.கருப்பையா எழுதிய அழகியவற்றுளெல்லாம் அழகியது, முனைவர்  ஆர்.ராதிகா தேவி எழுதிய 'பெண்களுக்கான மார்க்கம் இஸ்லாம்', முனைவர் சொ.சேதுபதி எழுதிய பாரதியார் பேசிய இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை, பக்கீர்கள் என்னும் இஸ்லாமியப் பாணர்கள் போன்ற கட்டுரைகளோடு இன்னும் பல கட்டுரைகள் இம் மலரில் இடம்பெற்றுள்ளன.

தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய 'ஆழம் தெரியாக் கடல்', ஜே.எம் சாலி எழுதிய 'சம்மதம்', சிராஜூல் ஹசன் எழுதிய 'முத்தலாக்', எஸ்.பர்வீன் பானு எழுதிய 'முதல் பாடம்', மு.அ அபுல் அமீன் எழுதிய 'ஈமானில் சீமான்' போன்ற முத்தான சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 'முனைவர் ஜெ.ஹாஜாகனி 'புரட்டிப் பாருங்கள் உங்களை புரட்டிவிடும்' என்ற மூன்று பக்க கவிதையை எழுதியிருக்கிறார்.

தமிழகத்தில் பிரபலமான 8 தர்காக்கள் பற்றிய கட்டுரைகள் இம் மலரில் இடம்பெற்றுள்ளன. தர்காக்கள் பற்றிய விமர்சனங்களை இக் கட்டுரைகள் தவிடுபொடியாக்கியிருக்கின்றன.

மலரெங்கும் மார்க்க துணுக்குகள் விரவிக் கிடக்கின்றன. வழுவழுத் தாளில் மாற்று மதத்தினரும் விரும்பி படிக்கும் வகையில் இம் மலரை தயாரித்துள்ளனர். இச் சிறப்பு மலர் பாரதியாரின் கவிதையை அட்டையில் தாங்கி வெளிவந்திருப்பது சிறப்பு!.

பக்கம் 160
விலை ரூ.50/-

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...