வியாழன், ஏப்ரல் 04, 2013

"ராஜூ முருகன் நல்லா எழுதுறாண்டா!"


'வட்டியும் முதலும்'

               திரும்பிப் பார்க்கவைத்த ஒரு தொடர். சில நேரம் படிப்பதுண்டு. சில நேரம் படிப்பதில்லை. நம்மால் இப்படி எழுத முடியவில்லையே என்ற ஏக்கத்தில் சில வாரங்கள் 'வட்டியும் முதலும்' படிக்காமல் கூட  விட்டுவிடுவேன். படித்த வாரத்தை விட படிக்காமல் விட்ட வாரம் உறுத்திக் கொண்டே இருக்கும்.    
ராஜூ முருகன்


மிக இயல்பாக, மிக மிக எளிமையாக சாமனியனின் தோள் தொட்டு செல்லும் ஆற்றல் ராஜூ முருகனின் 'வட்டியும் முதலும்மில் இருந்தது.  வ.முவின் கதைக் களம் பெரும்பாலும் நமக்கு தெரிந்த ஏரியா என்பதால் கொஞ்சம் ச(அ)க்கரை தூக்கலாகவே இருக்கும்.  கோடம்பாக்கம் புலியூர் அபார்ட்மெண்ட் (8 வருடம் எனக்கு அங்கேதான் ஜாகை), கொரடாச்சேரி என்று எனக்கு தெரிந்த ஏரியாக்கலில் பயணம் செய்ததால் படிப்பது இன்னும் எளிதாக இருந்தது.

ஆனந்த விகடனில் தொடர் வெளிவந் போதே, இலக்கிய வாடை அடித்தது. "யாராது....ராஜூ முருகன்?. படவா.. நல்லா எழுதுறாண்டா.  ஒவ்வொரு வாரமும் கலக்குறாண்டா" என்று ஸ்காட்ச் மயக்கத்தில் நண்பன் புருனேவிலிருந்து விசாரித்தான். ஆனந்த விகடனில் ஒன்றரை வருடங்களாக வெளிவந்த வட்டியும் முதலும் தற்போது நிறைவுப் பெற்றது.

ராஜூ முருகனின் 'வட்டியும் முதலும்' தாக்கத்தில் நானும் ஒரு கட்டுரை எழுதினேன்.  எனது தமிழன்வீதியில் மேய்ச்சல் நிலம்    (உடல் நோக சுமந்துவிட்டு, உதறி எறியலாமா...? என்ற பகுதியில் அந்த கட்டுரையை எழுதினேன்.  அது ஒரு முயற்சி. காசா பணமா...?  சும்மா டிரைப் பன்னி பார்க்கலாமே என்ற என்னத்தில் எழுதினேன். நமது வலைத்தளம்,  நாம்தான் ஆசிரியர்.  அதனால் 'வெளியிட முடியாமைக்கு வருந்துகிறோம்' என்ற பேச்சுக்கே இடமில்லை.

பொதுவா தொடர் கட்டுரை என்றால், வயது முதிந்தவர்கள் அல்லது ஐம்பது பிளஸ் ஆசாமிகள்தான் எழுதுவார்கள். இல்லை என்றால் நமக்கு தெரிந்த அல்லது பிரபலமான மனிதர்களையே எழுதச் செய்வார்கள். ஆனந்த விகடன் அப்படி இல்லை. துணிந்து புது முகங்களை இறக்குவார்கள். கரிசல்காட்டு கடிதாசி-ராஜ நாரயணன், கம்பிக்குள் வெளிச்சம் -தியாகு, கூட்டாஞ்சோறு - வேல ராமமூர்த்தி, தேனீ ஈஸ்வரின் ஜமீன்களை பற்றிய தொடர் கட்டுரை (பெயர் மறந்து விட்டது) என்று ஆனந்த விகடன் குழுமம் அறிமுகப்படுத்திய கட்டுரையாளர்கள் சோடை போனதில்லை.  சிம்மாசனத்தில்தான் ஏறி அமர்ந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ராஜூ முருகனும் நம்மை கட்டுரை எழுத வைத்துவிட்டார்.

வட்டியும் முதலும் இளஞர்களின் குரல் என்றே சொல்லலாம். அந்த எழுத்து நம்மை வசீகரித்தது. அதன் ஆளுமை மிக எளிதாக படிப்பவனின் மனதில் புகுந்து வெளியேற மறுத்தது. "இந்த வயதிற்குள் அப்படி என்ன அனுபவம் கிடைத்துவிடப்போகிறது..?"  என்ற கேள்விக்கு  "யாருப்பா...அந்த ராஜூ முருகன்...?" என்று பிறர் கேட்பதன் மூலமே  பதில் கிடைத்தது. அந்த அளவிற்கு வட்டியும் முதலும் அவரை  உயர்த்திவிட்டது.

 வட்டியும் முதலும் தந்த ராஜூ முருகன் இனி 'குக்கூ' என்று வெள்ளித் திறையில் கூவப் போகிறார். சினிமாதான் அடுத்தப் படியா என்று தெரியவில்லை....?   ஷங்கரின் தயாரிப்பில் ஒரு படம் பன்ன ரேடியாகிவிட்டார் ராஜூ முருகன்.   இந்த நல்லதொரு எழுத்தாளனை சினிமா நீர்த்துப் போகாமல் வைத்திருக்க வேண்டும் என்பதே நமது ஆசை!

குட்லக் ராஜூ முருகன்.

2 கருத்துகள்:

இராய செல்லப்பா சொன்னது…

ராஜு முருகனின் ‘வட்டியும் முதலும்’ படித்தது, ஓர் இனிய அனுபவம். சினிமாவுக்குப் போனாலும் இலக்கியத்தை அவர் மறக்கவேண்டியதில்லை. சினிமாக்காரர் என்ற முத்திரை விழுந்துவிட்டால், விகடனில் இன்னும் விழுந்து விழுந்து உபசரிப்பார்களே! –கவிஞர் இராய. செல்லப்பா.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

கருத்திற்கு நன்றி சார்!.
சினிமா என்ற வெளிச்சத்தை நோக்கிதான் எல்லா விட்டிலும் பறக்கின்றன.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...