சனி, அக்டோபர் 08, 2022

இளையத் தலைமுறைக்கு தமிழர் பெருமை போதிக்கும் பொன்னியின் செல்வன்.


திரும்பிய இடமெல்லாம் பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. மக்கள் சாரி சாரியாக பொன்னியின் செல்வனைப் பார்க்க போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வனை சினிமாவாகப் பார்ப்பது எளிதானது. ஆனால் அதையே புத்தகமாகப் படிப்பது என்பது எளிதானது அல்ல.
மொத்தம் 5 தொகுதிகள். ஒவ்வொரு தொகுதியும் குறைந்தது 450 பக்கங்களுக்கு மேல் இருக்கிறது. இதில் 5 ஆவது தொகுதி மட்டுமே ஏறக்குறைய 900 பக்கங்களுக்கு மேல் வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் அதை ஏக் தம்மில் படிப்பது எல்லாம் முடியாத காரியம். எடுத்தோம் படித்தோம் என்ற பாட்சாவெல்லாம் பொன்னியின் செல்வனிடம் பலிக்காது.
அவ்வளவு நீ.......ளமானது !
நானெல்லாம் பொ. செ. கதையை இரண்டு தொகுதிகளுக்கு மேல் தாண்டவில்லை.
கல்லூரியில் படிக்கும் காலத்தில், எங்கள் பாட்டி பைண்ட் செய்து வைத்திருந்த புத்தகம்தான் கிடைத்தது. அதையும் ஏக கண்டிஷனில் கொடுத்தார்கள். கொஞ்சம் அழுத்திப்பிடித்தால் போதும், அப்படியே அப்பளம் போல் நொறுங்கிவிடும்.
சிறுவயதில் குமுதத்தில் சாண்டில்யனின் கடல்புறா, யவன ராணி, மஞ்சள் ஆறு, மன்னன் மகள் என்று படித்து வளர்ந்தவன் நான். பக்கம் பக்கமாக நீளும் சாண்டில்யனின் அந்த வர்ணனைகள், வார்த்தை பிரயோகம் இருக்கிறதே... அது கற்பனையின் உச்சம் எனலாம் !
சாண்டில்யனின் எழுத்துக்களோடு ஒப்பிடும் போது, கல்கியின் எழுத்து நடை சாதாரணமாகத்தான் தெரிகிறது. அன்றைய நாட்களில் கல்கியின் எழுத்து நடையை விமர்சித்தவர்களும் இருக்கிறார்கள். பெரிய கவித்துமான மரபார்ந்த தமிழ் கொஞ்சி விளையாடும் எழுத்தெல்லாம் கல்கியிடம் இல்லை. கல்கியின் எழுத்து நடை எளிமையானது, எளியவர்களுக்கும் புரியும் படி இருக்கிறது. ஒரு வகையில் அதுதான் அதன் வெற்றியோ.... என்னவோ ?!
"தூய தமிழ்ச் சொற்களைத் துருவித் தேடுவதுமில்லை. வடமொழிச் சொற்களென்று தூர விலகியோடுவதுமில்லை. மிகத் தெளிவான நடை, உணர்ச்சி ததும்பும் நடை. வாசகர்களை உடன் கொண்டு செல்லும் நடை. சந்தர்ப்பத்திற்கும் பாத்திரங்களுக்கும் தக்க நடை. இக்காலத்துள்ள வசனகர்த்தர்களுள் முன்னணியில் நிற்பவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி என்கிறார் பேராசிரியர் வையாபுரி பிள்ளை அவர்கள்.
ஆனந்த விகடனில் பணிபுரிந்த கல்கி பிற்பாடு அதிலிருந்து வெளியேறி, கல்கி என்ற இதழைத் தொடங்கினார். கல்கி இதழை மக்கள் மத்தியில் பிரபலமாக்கவே அவர் 'பொன்னியின் செல்வன்' என்ற வரலாற்று நெடுந்தொடரை எழுதினார் என்பார்கள். அவர் கணித்தது பொய்யாக்கவில்லை !
1950 லிருந்து 1954 வரை கல்கியில் வெளிவந்த பொன்னியின் செல்வன் மக்களிடையே மகத்தான வரவேற்பை பெற்றது.
****************************************
ன்றளவும் என்னை பிரமிக்க செய்வது 'பொன்னியின் செல்வன்' என்ற அந்தக் காரணப் பெயர்தான். பொதுவாக வரலாற்று கதைகளுக்கு வீரம் செறிந்த பெயர்களையே வைப்பார்கள். தமிழகத்தில் ஓடும் மற்ற எந்த நதிகளைவிடவும், தமிழகத்தின் 'ஜீவ நதி' என்றால் அது காவிரியைத்தான் குறிக்கும். அப்படிபட்ட தமிழகத்தின் ஜீன் (மரபு) நதியான காவிரியின் இன்னொரு பெயர்தான் பொன்னி நதி.
"வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசைத் திரிந்து தெற்கேகினும்
தற்பாடிய களி உணவின் புள்தேம்பப் பயன்மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத்தலைஇய கடற்காவிரி "
என்று பட்டினப்பாலை காவிரியின் தொன்மையைப் போற்றிப் புகழ்ந்ததும்...
'கோள் நிலைத் திரிந்து கோடை நீடினும்
தான் நிலைத் திரியா தண்டமிழ்ப் பாவை'
என்று பிற்பாடு மணிமேகலை காவிரியின் மேன்மையை மேற்கண்டவாறு பதிவு செய்ததையும்...
இற்றைய நூற்றாண்டில்....
"தென்னகமாம் இன்பத்திரு நாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனி வயிற்றில்
கருவாகி தலைக்காவிரி என்னும் தாதியிடம்
உருவாகி வண்ணம் பாடி ஒரு வளர்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணை கடந்து நலம் பாடி
ஏர் வீழ்ச்சி காணாமல் இருக்க
சிவசமுத்திர நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்...
வீடு தாண்டாக் கற்பு விளங்கும் தமிழ்மகள் போல்
ஆடு தாண்டும் காவிரியாய் அடங்கி நடந்து
அகண்ட காவிரியாய்ப் பின் தவழ்ந்து
கரிகாலன் பேர் வாழும் கல்லணையில்.. கொள்ளிடத்தில்..
காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து
தஞ்சை வள நாட்டைத் தாயாகி காப்பவளாம் தனிக் கருணைக் காவிரி போல்..."
என்று செம்மாந்து புலவர் புலமைப்பித்தன் இருமாந்து பாடி மெய்சிலிர்த்தை நாம் எப்படி மறக்க முடியும் ?!
காவிரியின் வளம் கொழிக்கும் வண்டல் போல... தமிழகத்தின் பெருமைமிகு 'சோழ சாம்ராஜ்யம்' தோன்றி வளர்ந்ததும், தமிழ் பெருநிலத்தின் பேரரசன், ராஜராஜ சோழன்
உலகை வென்றதும் இந்த காவிரியின் கரையில்தான். இதனாலேயே.... வரலாற்று தொன்மையாலும், வளத்தாலும் பீடு நடை போடும் பொன்னியின் பெயரையே, தனது புதினத்திற்கு வைத்திருக்கிறார் கல்கி.
***************
ஆடித் திருநாள் என்ற முதல் அத்தியாயம் தொடங்கி, இக் கதையின் கடைசி அத்தியாயமான மாயமோகினி வரை மொத்தம் 57 அத்தியாயங்கள் வருகிறது.
கிட்டத்தட்ட 70 வருடங்களுக்குப் பிறகு இப் புதினம் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது. பொ செ திரைப்படம் தயாரிப்பில் இருக்கும் போது எந்த பரப்பரப்பும் தெரியவில்லை. ஆனால் படம் வெளி வந்தப்பிறகு தீ பற்றிக்கொண்டு விட்டது.
படத்தைப் பார்த்துவிட்டு சோழர்களின் சுவடுகளைப் பார்க்க ஆவலாக சுற்றுகின்றனர். பழையரை என்ற ஊர் எங்கு இருக்கிறது என்று இணையத்தில் தேடிதுலாவுகின்றனர்.
என்ஜோட்டு வயதில் பொன்னியின் செல்வன் வாசிக்கும் போது, பழையாறை எங்கிருக்கிறது என்று தீவிரமாக தேடியிருக்கிறேன். சீர்காழிக்கு அருகில் இருக்கும் பழையாரா ? இல்லை இன்றைய முசுரியா? என்றெல்லாம் தேடியிருக்கிறேன். கும்பகோணத்திற்கு தெற்கு மேற்கில் இருக்கும் புறநகர் பகுதிகளான , பட்டீஸ்வரம், தாராசுரம் போன்ற ஊர்களின் தொகுப்புதான் பழையாறை என்கிறது விக்கிப்பீடியா.
இன்றைய இளம் தலைமுறை தமிழர்கள் தங்களின் இனப்பெருமை இன்னதென்று அறிந்து கொள்வது அவர்களின் வாழ்வியல் கடமையாகும். அதை அறியத்தருவதில், தமிழரின் காதலையும் வீரத்தையும், வாழ்தலையும் வாழ்வித்தலையும் சுவைப்படக் கூறுவதில் பொன்னியின் செல்வன் புதினம் தனித்துவமான இடம் பிடித்திருக்கிறது. திரைப்படம் அதை இன்னும் உயரே கொண்டு போய் இருக்கிறது.
-மபா
08.10.2022

கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !

    கவிஞர் ரவி சுப்ரமணியன்                 ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும்  என்று நி...