வெள்ளி, ஏப்ரல் 26, 2013

இந்தா படி 'சாபம்'


 


நூலின் பெயர்      : சாபம்.
எழுத்தாளர்            : சல்மா.
பக்கம்                       : 142
வெளியீடு               : காலச்சுவடு 
                                      669 கே.பி.சாலை, 
                                      நாகர்கோவில், 629001.

விலை          : ரூ.110/-


நவீன இலக்கிய உலகில் நாம் விலகிச் செல்ல முடியாத எழுத்து  கவிஞர் சல்மாவுடையது.  காலச்சுவடு மற்றும் தலித்  இதழ்களில்  சல்மா எழுதிய  11 சிறுகதைகள் 'சாபம்' என்ற தலைப்பில் தனி சிறுகதை தொகுப்பாக காலச்சுவடு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. 

எழுத்திற்கு ஆண் பெண் பேதமில்லை என்ற போதிலும் சல்மாவின் கதைகளில் வரும்    கதாப்பாத்திரங்கள் நிறைய மவுனங்களை சுமந்து கொஞ்சமே கொஞ்சமாக வார்த்தைகளை பிரசுவிக்கிறார்கள்.  மெதுவாக நகரும் கதைக் களங்களில் மெல்லிய பிளாக் அண்ட் ஒயிட் படம் பேன்றே கதை பாத்திரங்கள் நமது மனப் பிம்பங்களில் நகருகின்றன.

 பெண்கள் பல துறைகளில் கால் ஊன்றி ஆண்களுக்கு நிகராக பரிணமித்தாலும், நடைமுறை வாழ்வியலில் பெண் மிகுந்த வலியும் வேதனையும் சுமப்பவளாகவே இருக்கிறாள். மிக அழுத்தமான கதைகளில் அவளது மவுனமும், யாருமற்ற அண்ட வெளியில் அவள் தனிமைப்பட்டு நிற்கும் போது நம்மையும் அருகில் நிற்கவைத்து அந்த வலியை உணரச் செய்கையில் தெரிகிறது   சால்மாவின் எழுத்தின் ஆளுமை.

   இதில் முத்தாய்ப்பாக 'வலி' என்ற சிறுகதையில்  அவளும் அவனுமே கதைகளை நகர்த்துகின்றனர்.  அவர்கள் யார்? பெயர் என்ன? என்ற கேள்விகளுக்குள் நம்மை போக விடாமல் அந்த வலியை மட்டுமே உணரச் செய்கிறார். இதை ஒரு யுத்தி என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம்.

கதைகள் வெவ்வேறான காலகட்டத்தில் எழுதப்பட்டாளும் அதை ஒரு சேர படிக்கும் போது ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருப்பது போன்ற சாயலை ஏற்படுத்துகிறது. 

 இத் தொகுப்பில் பெரும்பாலான கதைகளின் மைய்யமாக பெண்ணே இருக்கிறாள்.  அவளே ஆதியும் அந்தமுமாய் நின்று கதை நகர்த்தலில் முக்கிய பங்கு வகிக்கிறாள். மனத்தின் மிக நுட்ப போராட்டங்களையும், சிக்கலாகிவிட்ட ஆண் பெண் உறவின் சுமுகமற்ற  புரிதலையும் மிக அனாயசமாக கடந்து செல்கிறது இச் சிறுகதை தொகுப்பு. 

இச்  சிறுகதை தொகுப்பை படிக்காதவர்களுக்கு இந்த ப(பி)டி 'சாபம்' என்று கையில் கொடுக்கலாம்.


வியாழன், ஏப்ரல் 25, 2013

இப்ப... ஏமாந்தது யாரு...?



                                   அந்த இனிப்பான (?) நிறுவனத்திலிருந்து ஒரு கடிதம் வாங்க வேண்டி இருந்தது. ஒரு வாரமாக அந் நிறுவனத்தின் அட்மின் மேனேஜரினி 'அந்தா இந்தா' என்று இழுத்தடித்துக் கொண்டு இருந்தார். தொலை பேசியில் தொடர்பு கொண்டாலும் எடுப்பதில்லை. நேற்று நேராகவே சென்று விட்டேன். ரிசப்ஷனில் விசாரித்த போது, மேடம் இரண்டு நாளா leave என்றார்கள்.

சரி... என்று அவுங்க ஆபீஸ்லேருந்தே அவரை கை பேசியில் தொடர்புக் கொண்டேன். "சார், கடந்த இரண்டு நாளா வாமிட், டிசன்ரி. அதான் உங்க மொபைல கூட பிக்கப் பண்ண முடியவில்லை. இப்பக் கூட நான் ஆபிஸ்லதான் (?) சார் இருக்கேன். எம்டி இரண்டு நாளா ஆபீஸ் பக்கம் வரல என்றார்".

எனக்கு திடுக்கென்றது. எப்படி இந்த அம்மனி கூசாமல் பொய் சொல்கிறார் என்று. 'நான் உங்க ஆபிஸ்ல தான் இருக்கேன் மேடம்' என்று சொல்ல வாய் வரை வார்த்தை வந்துவிட்டது. ஆனால், அதை சொல்லி ஏன் அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டும் என்று வெறுமனெ 'ம்' கொட்டினேன்.

எனக்கு யுவன் சந்திரசேகர் எழுதிய 'ஏமாறும் கலை' என்ற கதைதான் ஞாபகத்தில் வந்தது. அதில் இப்படித்தான் வங்கியில் பணம் கட்ட (அவ்வப்போது) வரும் பெண்மனி தனது கணவருக்கு இரண்டு காலும் முடியாது. அவரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வந்திருக்கிறேன் என்று சொல்ல. அந்த வங்கியின் கேஷியர் அவருக்கு சிறப்பு சலுகைத் தருகிறார். "மேடம்.... நீங்க இனி கீயுவில் நிற்க வேண்டாம். நேரே வந்து எனது கவுண்டரில் கட்டிவிடுங்கள்" என்கிறார்.

அப்படி இருக்க ஒரு திருமண விருந்தில் அந்த பெண்மனியை கேஷியர் பார்க்க நேரிடுகிறது. கூடவே அவரது ஆஜானுபாகுவான கணவருடன். அவர் முழு காலுடன் நல்ல அரோக்கியத்துடன் இருக்கிறார். இதைப் பார்த்ததும் கேஷியர் கடுப்பாகிறார். " சை...இந்த பொம்மனாட்டி நம்மள இப்படி ஏமாத்திட்டாளே " என்று மனதிற்குள் குமுறுகிறார். " நாளைக்கு வரட்டும் நாக்க பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேக்கிறேன்" என்று நினைத்துக் கொள்கிறார்.

இதை அவரது ரயில் சினேகிதரிடம் பகிர்ந்துக் கொள்ள, அவரோ ....அந்த பெண்மனியிடம் எதுவும் கேட்காதிர்கள் என்கிறார். அவர்கள் வந்தாலும் ஒன்னும் தெரியாத மாதிரியே சர்வீஸ் பன்னுங்க. விஷயம் தெரியாதது மாதிரியே காட்டிக்குங்க. உங்களுக்கு விஷயம் தெரியும்ன்னு அவங்களுக்கு தெரியாதே? இப்ப ஏமாந்தது யாரு....?

கிட்டத்தட்ட என் மன நிலையும் இப்படிதான் இருந்தது. 'ஏமாறும் கலை' சிறு கதையில் யுவன் சந்திரசேகர் மைனுட்டான அந்த விஷயத்தை மிக அழகாக கையாண்டிருப்பார்.

எனக்கும் அது சரியென்றுதான் பட்டது.

திங்கள், ஏப்ரல் 22, 2013

ஏப்ரல் 23 உலக புத்தக தினம்.



'புத்தகமே 
உலகை உளி கொண்டு செதுக்கும் சிற்பி
அன்பை வெளிப்படுத்தும் கருவி!'



     உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்புடனே பிறக்கிறது. அது நினைவூட்டல் போன்றோ அல்லது முந்தைய அனுபவத்தின் மீள் தொடர்ச்சியாகவோ அன்றைய தினம் நினைவில் கொள்ளப்படுகின்றது. இது ஒரு வகையில் நாம் இயங்குவதற்கான சூழலை எளிதாக்குகிறது.  இன்றைய தினமும் அப்படியே.   இன்று உலகம் முழுவதும் "உலக  புத்தக தினம்" கொண்டாடப்படுகிறது.


ஒரு சமூகத்தை நல்லதொரு சமூகமாக மாற்றும் திறன் கொண்டது புத்தகங்கள்.  புத்தகங்கள் இல்லையென்றால் நாம் எப்படிபட்ட ஒரு மனித சமூகமாக இருந்திருப்போம் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.  புத்தகங்களே இவ் உலகை உளி கொண்டு செதுக்கும் சிற்பியாக இருந்திருக்கிறது. இருந்தும் வருகிறது.

இவ் உலகை இயக்க அந்த புத்தகங்களிலிருந்துதான் மனிதர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களே மகா மனிதர்களாக இப்பூ உலகை  மான்புற செய்திருக்கின்றனர்.  ஒப்பற்ற தலைவர்களையும், ஞானிகளையும், தொழிற் நுட்ப வியாளர்களையும்,  மருத்துவர்களையும்,விஞ்ஞானிகளையும் மேதைகளையும், மக்கள் தலைவர்களையும் இந்த புத்தகங்கள்தான் பிரசவித்திருக்கின்றன.

பத்து கட்டளைகள்.

உலகம் முழுவதும் ஏற்றத் தாழ்வுகளை அகற்றி சம நிலை ஏற்பட அறிவுசார் தகவல்களை பரவலாக்கும் முயற்சியில் 1972ம் ஆண்டு உலக புத்தக ஆண்டாக அறிவிக்கப்பட்டது.  அதற்கு முன்னர்  உலக எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் இவர்களின் முயற்சியால் 1971 அக்டோபர் 22ம் தேதி மாநாடு ஒன்று நடைபெற்றது.  அதில் படிப்பாற்றலை பரவலாக்க 10 கட்டளைகள் நிறைவேற்றப்பட்டன.



  • அனைவருக்கும் வாசிக்கும் உரிமை.
  • புத்தகங்களின் இருத்தல் அவசியம்.
  • படைப்பாளியை உருவாக்கும் சமூகச் சூழல்.
  • பதிப்பகத் தொழில் வளர்ச்சி.
  • நூலகங்களின் வசதிகள்.
  • நூலகங்கள் நாட்டின் கருவூலம்.
  • பதிப்பாளர்- வாசகர் இணைப்பு.
  • புத்தகங்களை பராமரித்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்.
  • அனைத்து நாடுகளின் / மொழிகள் புத்தகங்கள் பரிமாற்றம்.
  • வாசிப்பு மூலம் உலக உறவு

இந்த பத்து கட்டளைகளின் தொடர் விவாதம் விளைவாக 1996ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தகத் தினம் அறிவிக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்தே அனைத்து நாடுகளும்  ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தகத்தினமாக கொண்டாடப்பட்டது.

இந்த உலக புத்தகத் தினத்தை மேற்கத்திய நாடுகள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன.  குறிப்பாக குழந்தைகள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த பல்வேறு  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.   அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து நாட்டு பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் பல்வேறு விற்பனை திட்டங்களை அறிமுகப்படுத்தினர்.  சிறப்பு தள்ளுபடி, பரிசுப் பொருட்கள், பிரபல எழுத்தாளரின் கையொப்பம் என்று புத்தக விற்பனையில் நவீன உத்திகள் புகுத்தப்பட்டது.

இதனால் வருடம்  தோறும்  'உலக புத்தக தினம்' ஏப்ரல் 23ம் தேதி அன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.  உலக புத்தக தினத்தன்று சிறுவர் சிறுமியர்களுக்கு   புத்தகங்களை பரிசாக அளிப்போம்.  நாளைய நவீன உலகை  கட்டமைக்கப் போகும் சிற்பி அவர்கள்தானே....?!


 தகவல் உதவி:   தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 'உலக புத்தகத் தின' அழைப்பு மடல்.  

வியாழன், ஏப்ரல் 04, 2013

"ராஜூ முருகன் நல்லா எழுதுறாண்டா!"


'வட்டியும் முதலும்'

               திரும்பிப் பார்க்கவைத்த ஒரு தொடர். சில நேரம் படிப்பதுண்டு. சில நேரம் படிப்பதில்லை. நம்மால் இப்படி எழுத முடியவில்லையே என்ற ஏக்கத்தில் சில வாரங்கள் 'வட்டியும் முதலும்' படிக்காமல் கூட  விட்டுவிடுவேன். படித்த வாரத்தை விட படிக்காமல் விட்ட வாரம் உறுத்திக் கொண்டே இருக்கும்.    
ராஜூ முருகன்


மிக இயல்பாக, மிக மிக எளிமையாக சாமனியனின் தோள் தொட்டு செல்லும் ஆற்றல் ராஜூ முருகனின் 'வட்டியும் முதலும்மில் இருந்தது.  வ.முவின் கதைக் களம் பெரும்பாலும் நமக்கு தெரிந்த ஏரியா என்பதால் கொஞ்சம் ச(அ)க்கரை தூக்கலாகவே இருக்கும்.  கோடம்பாக்கம் புலியூர் அபார்ட்மெண்ட் (8 வருடம் எனக்கு அங்கேதான் ஜாகை), கொரடாச்சேரி என்று எனக்கு தெரிந்த ஏரியாக்கலில் பயணம் செய்ததால் படிப்பது இன்னும் எளிதாக இருந்தது.

ஆனந்த விகடனில் தொடர் வெளிவந் போதே, இலக்கிய வாடை அடித்தது. "யாராது....ராஜூ முருகன்?. படவா.. நல்லா எழுதுறாண்டா.  ஒவ்வொரு வாரமும் கலக்குறாண்டா" என்று ஸ்காட்ச் மயக்கத்தில் நண்பன் புருனேவிலிருந்து விசாரித்தான். ஆனந்த விகடனில் ஒன்றரை வருடங்களாக வெளிவந்த வட்டியும் முதலும் தற்போது நிறைவுப் பெற்றது.

ராஜூ முருகனின் 'வட்டியும் முதலும்' தாக்கத்தில் நானும் ஒரு கட்டுரை எழுதினேன்.  எனது தமிழன்வீதியில் மேய்ச்சல் நிலம்    (உடல் நோக சுமந்துவிட்டு, உதறி எறியலாமா...? என்ற பகுதியில் அந்த கட்டுரையை எழுதினேன்.  அது ஒரு முயற்சி. காசா பணமா...?  சும்மா டிரைப் பன்னி பார்க்கலாமே என்ற என்னத்தில் எழுதினேன். நமது வலைத்தளம்,  நாம்தான் ஆசிரியர்.  அதனால் 'வெளியிட முடியாமைக்கு வருந்துகிறோம்' என்ற பேச்சுக்கே இடமில்லை.

பொதுவா தொடர் கட்டுரை என்றால், வயது முதிந்தவர்கள் அல்லது ஐம்பது பிளஸ் ஆசாமிகள்தான் எழுதுவார்கள். இல்லை என்றால் நமக்கு தெரிந்த அல்லது பிரபலமான மனிதர்களையே எழுதச் செய்வார்கள். ஆனந்த விகடன் அப்படி இல்லை. துணிந்து புது முகங்களை இறக்குவார்கள். கரிசல்காட்டு கடிதாசி-ராஜ நாரயணன், கம்பிக்குள் வெளிச்சம் -தியாகு, கூட்டாஞ்சோறு - வேல ராமமூர்த்தி, தேனீ ஈஸ்வரின் ஜமீன்களை பற்றிய தொடர் கட்டுரை (பெயர் மறந்து விட்டது) என்று ஆனந்த விகடன் குழுமம் அறிமுகப்படுத்திய கட்டுரையாளர்கள் சோடை போனதில்லை.  சிம்மாசனத்தில்தான் ஏறி அமர்ந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ராஜூ முருகனும் நம்மை கட்டுரை எழுத வைத்துவிட்டார்.

வட்டியும் முதலும் இளஞர்களின் குரல் என்றே சொல்லலாம். அந்த எழுத்து நம்மை வசீகரித்தது. அதன் ஆளுமை மிக எளிதாக படிப்பவனின் மனதில் புகுந்து வெளியேற மறுத்தது. "இந்த வயதிற்குள் அப்படி என்ன அனுபவம் கிடைத்துவிடப்போகிறது..?"  என்ற கேள்விக்கு  "யாருப்பா...அந்த ராஜூ முருகன்...?" என்று பிறர் கேட்பதன் மூலமே  பதில் கிடைத்தது. அந்த அளவிற்கு வட்டியும் முதலும் அவரை  உயர்த்திவிட்டது.

 வட்டியும் முதலும் தந்த ராஜூ முருகன் இனி 'குக்கூ' என்று வெள்ளித் திறையில் கூவப் போகிறார். சினிமாதான் அடுத்தப் படியா என்று தெரியவில்லை....?   ஷங்கரின் தயாரிப்பில் ஒரு படம் பன்ன ரேடியாகிவிட்டார் ராஜூ முருகன்.   இந்த நல்லதொரு எழுத்தாளனை சினிமா நீர்த்துப் போகாமல் வைத்திருக்க வேண்டும் என்பதே நமது ஆசை!

குட்லக் ராஜூ முருகன்.

புதன், மார்ச் 20, 2013

'திரி'யில்லாம விளக்கு எரியுமா....?

                  சென்ற பதிவில் நானும் வசந்த் அன் கோ அண்ணாச்சி வசந்த குமாரும் சமயோசிதம் பற்றி பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது எனது வாழ்க்கையில் நடந்ததையும் சொன்னேன். 

அதுதான் இந்தப் பதிவு. 


தேவ் ஆனாந்த்

                                       அது  எக்ஸ்பிரஸ் நிறுவனம் நடத்திய 'சினிமா எக்ஸ்பிரஸ்'  விருது வழங்கும் விழாவில்  நடந்தது. எந்த வருடம் என்று சரியாக நினைவில்லை. அனேகமாக 2004ம் வருடமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்ட செட் போடப்பாட்டு 'ஹீரோ ஹோண்டா' மெயின் ஸ்பான்சராக இருக்க, அந்த வருடத்திய சினிமா எக்ஸ்பிரஸ் அவார்ட் பங்ஷன் நடைபெற ஏற்பாடானது.  அப்போது 'சினிமா எக்ஸ்பிரஸ்' ஆசிரியராக ராமமூர்த்தி இருந்தார். சினிமா விபரங்களையும் ஆட்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்.
    
சினிமா எக்ஸ்பிரஸ் மாதம் இரு முறை வெளிவரும் தமிழ் சினிமா பத்திரிகையானாலும், விருது வழங்குவதில் குறுகி  இருப்பதில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளில் தயாராகும் படங்களுக்கும் சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கப்படும்.  அதனால் இந்திய அளவில் நட்ச்சத்திரங்கள் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொள்வர்.  விஜய் அவார்ட்ஸ், சன் டிவி 
சினிமா விருதுகள் என்று பல சினிமா விருதுகளுக்கு  சினிமா எக்ஸ்பிரஸ் விருதே முன்னோடி. 





விழாவிற்கு முந்தைய ஒரு வாரமும் ஒரே விழாக் கோலம்தான். எங்களது மார்க்கெட்டிங் டீம்முக்குதான் நிறைய வேலை இருக்கும். ஒவ்வொரு நட்சத்திரங்க்ளையும் ரீசிவ் பண்ண ஒரு ஆளை ஒதுக்கிவிடுவார்கள். கூடவே காரும் உண்டு.  தொடர்பு கொள்ள  ஒரு வாக்கி டாக்கியும் உண்டு.  வெளி மாநில திரை நட்சத்திரங்கள் சென்னையில் ஷாப்பிங் செய்யப் பிரியப்படுவார்கள்.   அவர்களோடு ஊர் சுற்றுவது,  போட்டோ, விருந்து என்று ஒரு வாரம் சுகமாகக் கழியும்.


யாரார் எந்த நடிகர் நடிகைகளை பிக்கப் செய்வது என்று தனி தள்ளு முள்ளே நடைபெறும்.  பெரும்பாலும் சென்னையை சேர்ந்த நடிகர் நடிகைகள் தாங்களே வந்துவிடுவார்கள். வேறு மொழி நடிகர்களைத்தான் நாம் பிக்கப் செய்யவேண்டும்.
 விஷ்ணுவர்தன்


 கன்னட உச்ச நட்சத்திரம் விஷ்ணுவர்த்தனை அழைக்கக் கூடிய வேலையை எனக்கு தந்தார்கள்.  அவரை விமான நிலையத்தில் இரவு 8 மணிக்கு அழைக்கச் சென்றேன். காரின் பின் சீட்டில் என்னை உட்காரவைத்துட்டு முன் சீட்டில் அவர் உட்கார்ந்துக் கொண்டார்.  தமிழ் சரளமாக வந்தது.  அவர் சிகரட் பிடிக்க லைட்டர் கேட்டார்.   இல்லை என்றதும், வண்டியை ஓரமாக நிறுத்தச் சொல்லி ஒரு ஆட்டோ டிரைவரிடம் சகஜமாக பேசி தீப்பெட்டி வாங்கி சிகரெட் பற்றவைத்துக் கொண்டார்.


வீடு வரும் வரையில் சென்னையின் வளர்ச்சியை பாராட்டிக்கொண்டே வந்தார்.  "நான் ரஜினிக்கு முன்பே சென்னை வந்துட்டேன்பா. ஆனால் நம்மளாலதான் இங்க சூப்பர் ஸ்டாராக முடியல". ஆனா ரஜினி வந்துட்டார்" என்றார். வருத்தம் வாய்ஸில் தெரிந்தது.

பேசிக்கொண்டே வந்ததில் எல்டாம்ஸ் ரோடு தொட்டு, டிடிகே சாலை திரும்பி செட்டியார் ஹாலுக்கு பின்புறம் உள்ள சாலையில் இருந்த அவரது வீட்டுக்கு வந்துசேர்ந்தோம். ஒரு கன்னட சூப்பர் ஸ்டாருக்கு சென்னையில் வீடு இருந்தது வியப்பாக  இருந்தது.


பின்னர் மாலையில் நடந்த விழாவிற்கு நானே வந்துவிடுகிறேன். கார் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

'சரி...இதில் எங்கே வந்தது உனது சமயோசிதம் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.  பின்ன இவ்வளவு நேரம் மொக்க போட்டால்?'.

சரி விஷயத்திற்கு வருகிறேன்.

அன்றைய விருது வழங்கும் விழாவில் எனக்கு பேக் ஸ்டேஜ் ஒர்க் கொடுத்துவிட்டார்கள். விருதுகளை பெயர் பார்த்து, அடிக்கி வைத்து அவர்கள் அறிவிக்கும்போது நாம் அங்கு நிற்கும் அந்த அழகு பதுமைகளிடம் கொடுக்கவேண்டும். அதை அவர்கள் மேடையில் கொடுப்பார்கள்.  தமிழ் திரை உலகம் என்றால் நமக்குத் தெரியும். இது கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய திரை உலகினரின் சங்கமம்.  பிற மொழி நடிகர் என்றாலும் கண்டுபிடித்துவிடலாம். தொழிற்நுட்பம், தயாரிப்பாளர்கள் டான்ஸ் மற்றும் ஸ்டெண்ட் மாஸ்டரெல்லாம் எப்படி கண்டுபிடிப்பது, கொஞ்சம் சிரமமானப் பணிதான் இருந்தாலும் தங்கு தடையில்லாமல் செய்துமுடித்தோம் .

இன்னும் விஷயத்துக்கு வரலேயே....?

அன்றைய விழாவிற்கு பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த்தான் சிறப்பு விருந்தினர்.  விழா தொடங்க நேரம் நெறுங்கிவிட்டது.

நடிகர் தேவ் ஆனந்தை எங்கள் நிறுவனத் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மேடை நோக்கி அழைத்து வர...  குத்துவிளக்கு ஏற்ற இருந்த அந்த ஆளுயர குத்து விளக்கில் திரியைக் காணும். எண்ணை  இருக்கிறது திரி மட்டும் மிஸ்ஸிங்.

மேடையே பரப்பராப்பாகிறது.  ஆளாலுக்கு தேடுகிறார்கள். திரியைக் காணும். மேடையில் செலிபிரிட்டிகள் ஒருவருக்கொருவர்  முகமன் கூறிக்கொள்ள... மேடையில் இருந்த எங்களுக்கோ....  ஒரே டென்ஷன்....டென்ஷன்..... டென்ஷன்.

ஒருவர் சணலை கொண்டு வந்து ஏற்ற முயற்சித்தார்.  சணல் அவ்வளவு சீக்கிரம் எரியக் கூடியதா?. 

டென்ஷன் உச்ச நிலையை அடைந்தது.


சற்றென்று எனக்குள் ஒரு மின்னல் அடித்தது. கை தண்டு அளவிற்கு இருந்த இரு மெழுகு வர்த்திகளில் ஒன்றை உருவி படக்கென்று முறித்தேன். உள்ளிருந்து  முழம் நீளத்திற்கு திரி தொங்கிக்கொண்டு இருந்தது.  சட்டென்று திரியை உருவி அதை இரண்டாக  மடித்து  எண்ணையில் முழுகி விளக்கில் வைத்தேன். மின்னல் வேகத்தில் நான் செய்ததற்கும்  பிரமுகர்கள் அருகில் வருவதற்கும் சரியாக இருந்தது.   பிறகென்ன தேவ்ஆனந்த் குத்துவிளக்கு ஏற்ற... விழா மிக சிறப்பாகத் தொடங்கியது.

அந்த சம்பவம் அப்போதைக்கு  பாரட்டப்பட்டாலும் பிற்பாடு அந்த களோபரத்தில் கரைந்துவிட்டது.  நானும் மறந்துவிட்டேன்.

இந்த நிகழ்ச்சியைதான் நான் வசந்த் அண்னாச்சியிடம் பகிர்ந்துக்கொண்டேன். அவரும் மனமுவந்து பாராட்டினார்.

இப்போ உங்களிடமும்.....

சனி, மார்ச் 02, 2013

இது சேவலை கோழியாக்கிய கதை!!!



அண்ணாச்சி சொன்ன  கொக்கரக்கோ கதை !
                        
வசந்த் அன் கோ நிறுவனர் வசந்தகுமார், மற்ற  தொழில் அதிபர்களில் வித்தியாசமானவர். மிக எளிதாக சந்திக்கக் கூடிய மிக எளிமையான மனிதர்.  அவரது அறையில் அவர் இருந்தால் எப்போதும் சிரிப்பு சத்தம்தான் கேட்டுக் கொண்டு இருக்கும்.  அந்த அளவிற்கு தனக்கென்று ஒரு சுவரை ஏற்படுத்திக் கொள்ளாத மனிதர். டிவி, மாத பத்திரிகை, தொழில் அதிபர், அரசியல் வாதி என்று பன்முகத் திறன் படைத்தவர்.         



அன்னாச்சியோடு எனக்கு 15 வருடங்களுக்கு மேல் பழக்கம். என்னை  "என்ன  தாடி?" என்றுதான் கூப்பிடுவார்.  சென்ற வியாழன் அன்று அவரை சந்திந்தப்போது  டேபிளில் இருந்த ஒரு கண்ணாடியிலான சேவல்  பொம்மையைக் காட்டி ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்.

****

               னது அரசவையில் இருந்த பீர்பாலை எல்லோரும் அறிவாளி என்று சொல்வதை மன்னர் அக்பர் விரும்பவில்லை.   பீர்பாலை எப்படியாவது மட்டம்தட்ட  நினைத்தார் அக்பர்.   மன்னரை  சூழ்ந்த இருந்த மந்திரிகளும் அதற்கு  தூபம் போட்டனர். 

எல்லோரும் சேர்ந்து பீர்பலை  முட்டாளாக்க ஒரு திட்டம் தீட்டினர்.    தனது அமைச்சரவையில் இருந்த முக்கியமான மந்திரிமார்களை  அழைத்த அக்பர்  எல்லோர் கையிலும் ஒரு முட்டையை தந்து "இதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.  நாளை நாம்  எல்லொரும் தோட்டத்தில் கிணற்றடியில் கூடுவோம்.  அப்படியே பீர்பாலையும் அங்கே அழைத்து வாருங்கள்" என்றார்.

அடுத்த நாள்  காலை எல்லோரும் தோட்டத்தில் உள்ள கிணற்றடியில் ஆஜரானார்கள்.  பீர்பாலும் வந்த சேர்ந்தார். மன்னர் முட்டையை ஒளித்து  வைத்திருந்த மந்திரிகளை அழைத்து, "கிணற்றில் குதித்து முட்டை எடுத்து வாருங்கள் " என்றார்.  அவர்களும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் குதித்து முட்டையோடு மேலே வந்தனர்.  

பீர்பாலுக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லோரும் வெறும் கையேடு குதித்து முட்டையை எடுத்து வருகிறார்களே என்று  குழம்பி போனார். கடைசியாக பீர்பாலின் முறையும் வந்தது.  பீர்பாலை அழைத்த மன்னர்,  "நீங்களும் கிணற்றில் குதித்து முட்டை எடுத்து வாருங்கள்" என்று கட்டளை இட்டார்.

"கிணற்றில் குதித்த பீர்பால் மேலே வந்து என்ன சொல்லி தப்பித்து இருப்பார்...?"  என்றார் வசந்த் அண்ணாச்சி.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.....

அண்ணாச்சி  "கொக்கரக்கோ..."  என்றார்.

நான் விழிக்க.... சேவல் பொம்மையை உருட்டியபடியே என் பதிலுக்காக காத்திருந்தார்.

சற்றென்று பொறி தட்ட  "அண்ணாச்சி....  'நான் சேவல் கோழி  அதனால் முட்டை போட முடியாது' என்று கூறி இருப்பார் " என்றேன்.

"கரைட்யா.... பீர்பால் கொக்கரக்கோ கொக்கரக்கோன்னு கூவிகிட்டே கிணற்றில் இருந்து மேலே ஏறினார்" என்றார். 

"மன்னா.... நான் சேவல்.  அவுங்க எல்லாம் பொட்டை கோழிங்க. அதனாலதான் முட்டை போட்டாங்க என்னால முட்டை போடா முடியல! என்று மந்திரிகளை சுற்றி கொக்கரக்கோ கொக்கரக்கோ என்று கூவிகொண்டே ஓடினார் பீர்பால்.

ஆண்கள் என்ற சேவலை கோழியாக்கிய கதை தானே இது. 

பீர்பாலின் சமயோசித அறிவைக் கண்டு மீண்டும்  மிரண்டு போன மன்னர் அக்பர், அவருக்கு பரிசுகளை அளித்து கொளரவித்தார். பீர்பாலின் சமயோசித அறிவு அத்தகையது என்றார்.  


"எனது வாழ்விலும் அத்தகைய  சமயோசித நிகழ்ச்சி ஒன்று நடந்தது அண்ணாச்சி..."  என்றேன்.

அது....?!

அடுத்தப் பதிவில்.


திங்கள், பிப்ரவரி 25, 2013

இனிஷியலை தமிழில் எழுதுங்கள்...



கடந்த ஜனவரி தினமணி 'கருத்துக்களத்தில்'  வந்த எனது கட்டுரை.

"நான் ரொம்ப ஸ்லோங்க... பாருங்க இவ்வளவு நாள் கழித்து இப்பதான் பதிவிடுறேன்."


எளிதாக படிக்க கட்டுரையின் மீது கிளிக் செய்யவும்.

ஞாயிறு, ஜனவரி 13, 2013

உலகப்புகழ் பெற்ற 'பட்டாம்பூச்சி' நாவல் தமிழில் .

              
                 ஹென்றி ஷாரியர் எழுதிய 'பட்டாம்பூச்சி' பிரஞ்சு நாவல் குமுதத்தில்தொடராக வெளிவந்த போது எனக்கு என்ன வயது என்று தெரியவில்லை. ஆனால் அக்கதையை யாருக்கும் தெரியாமல் பாய்க்கு அடியில் மறைத்து வைத்து படித்தது உண்டு.                                                                  
  
கதை நாயகன் செய்யாத குற்றத்திற்காக சிறையில்   இருப்பான். சிறையில் இருந்து தப்பிக்க பல வழிகளில் முயலுவான். ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு சிகரெட்டை கடத்த கரப்பான் பூச்சியை பயிற்றுவித்திருப்பான் என்று கதை படிக்க படிக்க விறுவிறுப்பாக மயிர்கூச்செறியும் வகையில் நகரும். இது மட்டும்தான் எனக்கு ஞாபகம் இருக்கு.

இப்போது 'பட்டம்பூச்சியை' மீண்டும் நர்மதா பதிப்பகத்தில் பிடித்துள்ளேன். ரா.கி. ரங்கராஜனின் மொழி பெயர்ப்பு ஆளுமையில் உச்சம் தொட்ட நாவல் இது. இக் கதையை மீண்டும் படிப்பது எனது பால்ய காலத்தில் நுழைவது போல் இருக்கிறது.

இக் கதை குமுதத்தில் எந்த வருடம் வெளிவந்தது என்று தெரியவில்லை. தெரிந்தால் எந்த வயதில் இக் கதையை படித்தேன் என்று தெரிந்துவிடும்.

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...